சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

South Korea’s threats heighten danger of military conflict

தென் கொரியாவின் அச்சுறுத்தல்கள் இராணுவ மோதலின் ஆபத்தை உயர்த்துகின்றன

By Peter Symonds
2 April 2013

use this version to print | Send feedback

தென் கொரியாவின் ஜனாதிபதி பார்க் கியூன-ஹை (Park Geun-hye) தன் நாட்டின் இராணுவத்திற்கு வட கொரியாவில் இருந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள எது முறையென்றுபடுகிறதோ அந்நடவடிக்கையை எடுக்குமாறு பச்சை விளக்குக் காட்டியுள்ளார். அவருடைய கருத்துக்கள் தென் கொரிய, அமெரிக்க கூட்டுப் போர் பயிற்சிகளுக்கு இடையேயும், வட கொரியாவின் போர் எச்சரிக்கைகளுக்கு நடுவேயும் கொரிய தீபகற்பத்தில் மோதல் ஆபத்தை அதிகரித்துள்ளன.

முன்னாள் இராணுவ சர்வாதிகாரி பார்க் சுங்-ஹீ உடைய பெண்ணான பார்க் ஒரு பாதுகாப்பு அமைச்சரக கொள்கை விளக்கக் கூட்டத்தில், தான் வட கொரிய அச்சுறுத்தல்களை “மிக கடுமையானதாக” கருதுவதாகக் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: “வடக்கு, எமது மக்களுக்கும் நாட்டிற்கும் எதிராக ஆத்திரமூட்டும் முயற்சியை மேற்கொண்டால், அரசியல் பரிசீலனைகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களுடன் முதல் சந்திப்பிலேயே நீங்கள் வலுவாக விடையிறுக்க வேண்டும்.”

வாஷிங்டனும் சியோலும் தங்கள் நிலைப்பாட்டை முற்றிலும் பாதுகாப்புத்தன்மை உடையது என்று சித்தரித்தாலும்கூட, யோன்ஹாப் செய்தி நிறுவனம், தென் கொரிய இராணுவம் ஒரு புதிய அவசரகால திட்டமான “தீவிர தடுப்பு” என்பதை நேற்றைய கூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளது என்று கூறுகிறது. இத்திட்டம், அணு அல்லது ஏவுகணைத் தாக்குதலை தென் கொரியா மீது நடத்தும் என்பதற்கான அடையாளத்தை வட கொரியா காட்டினால் முன்கூட்டித் தாக்க இராணுவத்தை அனுமதிக்கும் என்று யோன்ஹாப் விளக்கியுள்ளது.

பார்க் “வலுவான தயாரிப்பு” தேவை என்று ஒரு சிறப்பு வீடியோ உரையில் தென் கொரிய கடற்படை இரண்டாம் பிரிவின் தளபதிக்கு வலியுறுத்தியுள்ளார் என ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் யோன்ஹாப் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இப்பிரிவு மஞ்சள் கடலில் உள்ளது; அங்கு கடல் எல்லைப் பகுதிகள் குறித்த பூசல்கள் கடந்த காலத்தில் மோதல்களுக்கு வழிவகுத்திருந்தன.

அமெரிக்கா இந்த வட கொரியாவிற்கு எதிரான இராணுவத் தயாரிப்புக்களில் நெருக்கமாக தொடர்புகொண்டுள்ளது. அமைச்சரகம் நடத்திய கூட்டத்தில் தென் கொரிய பாதுகாப்பு மந்திரி, "வடிவமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்து நிறுத்தும் மூலோபாயம்" அமெரிக்காவுடன் ஒரு கூட்டு சேர்ந்து செய்யப்படுவது நடந்துவருகிறது, அக்டோபருக்குள் இறுதி வடிவம் பெறும் என்றார்.

தென் கொரியாவில் டிசம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், வட கொரியாவுடன் பேச்சுக்கள் நடத்துவதாக உறுதியளித்து பார்க் வெற்றிபெற்றார். ஆனால் அழுத்தங்களை குறைப்பதற்குப் பதிலாக அவர் ஆத்திரமூட்டல் கொடுப்பதற்கான அரங்கத்தை தென் கொரிய இராணுவத்திற்கு அமைத்துக் கொடுத்துள்ளார், இதைத் தொடர்ந்து விரைவில் மோதல் விரிவடையக்கூடும். பார்க்கின் செனூரிக் கட்சி, முன்பு Grand National Party என்ற பெயரைக் கொண்டது, அமெரிக்க ஆதரவுடைய இராணுவ சர்வாதிகாரத்தின் அரசியல் பிரிவு ஆகும், இது 1980 களின் கடைசிப் பகுதியில்தான் அதிகாரத்தைக் கைவிட்டது.

வட கொரியாவை நோக்கிய பார்க்கின் ஆக்கிரோஷ நிலைப்பாடு, அவருடைய முன்னோடியான செனூரிக் கட்சியைச் சேர்ந்த லீ முயுங் பாக், வட கொரியாவிற்கு எதிராக டிசம்பர் 2010 அழுத்த மோதல் காலத்தில் கடுமையான இராணுவ நடவடிக்கை எடுக்காததற்காக செய்தி ஊடகங்கள் குறைகூறியதை அடுத்து வந்துள்ளது. அந்த மோதலில் பீரங்கி தாக்குதல் பரிமாற்றங்கள் தென் கொரிய யியோன்பியோங் தீவைச் சுற்றி நடந்தன.

கொரிய தீபகற்பத்தின் பதட்டமான சூழ்நிலை அமெரிக்கா, சீனாவுடைய ஆதரவுடன் வட கொரியா மீது கடந்த மாதம் அதன் அணுவாயுதச் சோதனைக்காக ஒரு புதிய சுற்று ஐ.நா. பொருளாதாரத் தடைகளை சுமத்தியதில் விரைவாக அதிகரித்துள்ளது. வட கொரியா 1953ல் கொரியப் போரை முடித்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை கைவிட்டுள்ளதுடன், தென் கொரியாவுடனான அவசரகால செய்தித் தொடர்புளையும் துண்டித்து, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை தாக்குவதின் மூலம், அணுவாயுதப் பயன்பாடு உட்பட, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் என அச்சறுத்தியுள்ளது. சனிக்கிழமை அன்று பியோங்யாங் சியோலுடன் “போர் நிலையில்” உள்ளது என அறிவித்தது.

ஆனால் அதே நேரத்தில் வட கொரியா, முரணான ஒரு எச்சரிக்கை இருந்தபோதிலும்கூட, தென் கொரிய நிறுவனங்கள் குறைவூதிய வட கொரியத் தொழிலாளர்களை அணுகும் கீசாங் தொழில்துறை பகுதியைத் திறந்து வைத்திருந்தது. இத்தொழில்துறைப் பகுதி நாட்டின் வெளிநாட்டு நாணயங்களை ஈட்டும் ஒரு சில ஆதாரங்களில் ஒன்றாகும்.

ஒபாமா நிர்வாகம் பியோங்யாங்கின் மிரட்டல் தரும் வனப்புரையைப் பயன்படுத்தி அமெரிக்க நிலைப்பாட்டை ஆசியா பசிபிக்கில் கட்டமைப்பதை அதிகப்படுத்தியுள்ளது, இதில் அதன் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்புத் தடுப்புக்களில் 50% அதிகரிப்பும், அணுத்திறனுடைய B2 குண்டு வீசும் விமானங்களும் அமெரிக்கா, தென் கொரியாவில் இருந்து சோதனை ஒட்டம் நடத்துவதும் அடங்கும். பெயரளவிற்கு வட கொரியாவால் இயக்கப்படும் என்றாலும், அமெரிக்க உந்துதல் முக்கியமாக சீனாவிற்கு எதிராக ஒபாமா கூறும் ஆசியாவில் முன்னணி” என்பதின் பகுதியாக இயக்கப்படும் நோக்கத்தைக் கொண்டுள்ளது—“ஆசியாவில் முன்னணி” என்பது ஒரு விரிவான இராஜதந்திர, பொருளாதார, மற்றும் மூலோபாயத் திட்டம் சீனாவைக் கட்டுப்படுத்தி, பிராந்தியம் முழுவதும் அதன் செல்வாக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது ஆகும்.

பெய்ஜிங்கின மீது அதிகரிக்கும் அமெரிக்க அழுத்தம், சீன ஆளும் வட்டங்களுள் அதன் வட கொரியாவுடனான நட்பு குறித்து அசாதாரணமான பகிரங்க விவாதத்தை தூண்டியுள்ளது. சில முக்கியமான சீன உயர்கல்விக்கூடத்தினர் வட கொரியா ஒரு சுமை என்றும் அதனுடன் பிணைப்புக்களைத் தளர்த்த வேண்டும், ஒருவேளை வெட்டிவிடக்கூடச் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர். ஆனால் இராணுவப் புள்ளிவிவரங்கள் சீனா அதன் நட்பு நாட்டிற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்; ஏனெனில் வடகொரியாவில் உறுதிக் குலைவு அல்லது ஆட்சிச் சரிவு என்பது சீனாவின் மூலோபாய நிலையை வலுவிழக்கச் செய்துவிடும்.

Washington Free Beacon கருத்துப்படி, சீனா அதன் இராணுவ சக்திகளை உயர் எச்சரிக்கை நிலையில் கொரிய தீபகற்பத்திற்கு அருகே இருத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோளிட்டு இந்த வலதுசாரி அமெரிக்க செய்தித்தாள் சீன இராணுவம் அதன் கடற்படைப் பயிற்சிகளை மஞ்சள் கடலில் விரிவாக்கிக் கொண்டுள்ளது என்றும், துருப்புக்களையும் விமானங்களையும் திரட்டி வருகிறது என்றும் தகவல் கொடுத்துள்ளது. இதில் உண்மை இருந்தாலும் இல்லாவிடினும், கட்டுரை அமெரிக்க செய்தி ஊடகம் தொடுக்கும் அச்சம், பீதி நிறைந்த சூழ்நிலையை சுட்டிக்காட்டுகிறது. இது வடகிழக்கு ஆசியாவில் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பை நியாயப்படுத்த அமெரிக்க செய்தி ஊடகத்தின் செயல்பாடு ஆகும்.

தற்பொழுது அமெரிக்கா, மார்ச் 1ல் தொடங்கிய தென் கொரியாவுடனான பரந்த கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது, இதில் அமெரிக்கப் போர் விமானங்களும், போர்க்கப்பல்களும், துருப்புக்களும் தொடர்புடையவை. பென்டகன் B2 விமானங்களை பகிரங்கமாக உயர்த்திக் காட்டியிருப்பது மட்டுமில்லாமல், அணுவாயுதத் திறனுடைய B52 குண்டு போடும் விமானங்களின் பங்கேற்பையும், இரண்டு அதிநவீன போர் ஜெட்டுக்கள் F-22 Raptors ஐ அவர்களின் ஜப்பானிய தளத்தில் கொண்டு வந்து நிறுத்தவும் செய்துள்ளது. நேற்று அமெரிக்கக் கடற்படை அதன் USS Fitzgerald என்னும் ஏஜிஸ் ஏவுகணை எதிர்ப்பு முறையுடன் கூடிய உயர்தொழில்நுட்ப அழிக்கும் திறனுடைய கப்பலை, கொரிய தீபகற்ப நீர்நிலைக்கு அனுப்பியுள்ளதாக அறிவித்தது.

பென்டகனுடைய செய்தித் தொடர்பாளர் George Little, இப்பயிற்சிகள் வெறுமனே அமெரிக்க நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியாவிற்கு வட கொரியா காட்டும் அச்சுறுத்தலுக்கு எதிராக உத்தரவாதம் அளிக்கத்தான் முற்படுகிறது என வலியுறுத்தினார். வட கொரியா “பாதைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்”, “சமாதானம் உறுதிப்பாடு” ஆகியவற்றை கொரிய தீபகற்பத்தில் நாட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் இதைச் செய்வதற்கு பியோங்யாங் “தன் சர்வதேச கடமைகளை முறையாகச் செய்ய வேண்டும்” என்றார் அவர்.

வடகிழக்கு ஆசியாவின் சமாதானத்தின் குரல் என்று வாஷிங்டன் காட்டிக் கொள்வது முற்றிலும் பாசாங்குத்தனம் நிறைந்த்தாகும். கடந்த இரு தசாப்தங்களில் வட கொரியா பல முறை அதன் அணுவாயுதத் திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாக அல்லது ஆறு நாடுகள் பேச்சுவார்த்தை என சீனா ஆதரவு கொடுத்துள்ள அமைப்பிற்கூடாக கையெழுத்திட்டுள்ளது —ஆனால் முறிந்த உறுதிமொழிகளைத்தான் அது கண்டுள்ளது. ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷைத் தொடர்ந்த ஒபாமா ஆறு நாடுகள் பேச்சுக்களை மறுபடியும் தொடக்க முயற்சி ஏதும் எடுக்கவில்லை மாறாக ராக்கெட் தாக்குதல், அணுச் சோதனைகளை பயன்படுத்தி பியோங்யாங் மீது அழுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

வட கொரியா அதன் “சர்வதேச கடமைகளை செய்ய வேண்டும்” என்று லிட்டில் கூறியபோது, பியோங்கயாங் அதன் அணுச்சக்தி, ஏவுகணைத் திட்டங்களை பேச்சுக்களுக்கு முன் கைவிட வேண்டும் என்ற பொருளில்தான் அதைக் கூறினார்: அந்த பேரத்திற்கான பொருட்கள்தான் அந்த சிறியதும் பொருளாதார ரீதியாக பின்தங்கியதுமான நாட்டில் உள்ளது. வட கொரிய ஆட்சி ஒரு குறைவூதிய தொழிலாளர் அரங்காக வெளிநாட்டு மூலதனத்தினருக்கு மாற்ற தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளது, ஆனால் கொரியப் போர் முடிவில் இருந்து நடைமுறையில் இருக்கும் அமெரிக்க பொருளாதார தடைகள் அத்தகைய முயற்சிகளை தகர்த்துவிட்டன.

ஒபாமாவின் “ஆசியாவில் முன்னிலை” என்பது ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை சீனாவுடனான கடல்பிரிவு பூசல்களில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க ஊக்கம் கொடுத்திருப்பதுபோல், ஆபத்து தரும் வகையில் அது கொரிய தீபகற்பத்திற்கு எரியூட்டி போராபத்தையும் உயர்த்தியுள்ளது.