சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Sri Lanka: Military suppression unleashed on hero’s day in the North

மாவீரர் தினத்தில் வடக்கில் இராணுவ ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது

Subash Somachandran
16 December
2013

Use this version to printSend feedback

வடக்கில் மாவீரர் தின கொண்டாட்டங்களை தடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள், அங்கு இராணுவ ஆட்சி நிலவுவதையே மீண்டும் நிரூபிக்கின்றன. இது, வட மாகாணசபை தேர்தலை நடத்தியதன் மூலம், வடக்கில் ஜனநாயத்தை நிலை நாட்டியுள்ளதாக கூறிக்கொள்ளும் அரசாங்கத்தின் போலிப் பிரச்சாரத்தை மேலும் அம்பலமாக்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள், வருடம் தோறும் நவம்பர் 27ம் திகதியை போரில் மரணமான தங்களின் அங்கத்தவர்களை நினைவுகூரும் தினமாக 1989ல் பிரகடனப்படுத்தியிருந்தனர். பல ஆயிரக்கணக்கான புலிகள் மரணமடைந்திருந்த காரணத்தினால் அவர்களின் உறவினர்கள் அந்த நிகழ்வினைக் கொண்டாடி வந்தனர்.

2009 மே மாதத்துடன் இராணுவத் தாக்குதலில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், கடந்த ஆண்டுகளில் நவம்பர் மாத கடைசி வாரம் வடக்கில் பெரும் பதட்ட நிலைமைகள் நிலவும் வாரமாகிவிட்டது. இந்த நிகழ்வினைக் கொண்டாட முனைபவர்கள் யாவரும் புலிகளின் ஆதரவாளர்களே என கருதி, அரசாங்கப் படைகள் அவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்துவந்தன. படையினரால் வடக்கில் புலிகளின் கல்லறைகளும் இடித்தழிக்கப்பட்டன.

இம்முறையும் இந்த நிகழ்வுகளை தடை செய்வதன் பேரில் அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் கைதுகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதன் முதல் நடவடிக்கையாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினை அதன் நிர்வாகமும் அரசாங்கமும் இணைந்து ஜனநாயக விரோதமான முறையில் டிசம்பர் 1ம் திகதி வரை மூடி வைத்தன. கடந்த மாத நடுப்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின் போது, அரசாங்கத்தின் இலவசக் கல்வி வெட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை தடுப்பதன் பேரில், அரசாங்கம் நாட்டின் பல்கலைக்கழகங்களை நவம்பர் 18ம் திகதி வரை மட்டுமே மூடியிருந்தது. இதே வழிமுறையே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு எதுவும் இடம்பெறுவதை தடுப்பதற்காக கையாளப்பட்டுள்ளது.

விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களுக்கு இக் காலப்பகுதிக்குள் வளாகத்துக்குள் நுழைவதும் தடை செய்யப்பட்டிருந்தது. இராணுவத்தினர் பல்கலைக் கழகத்தை சூழ முற்றுகையிட்டிருந்ததுடன் அதைச் சுற்றி ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுடிருந்தனர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இரஜகுமாரன், “மாவீரர் தினம் பற்றிய கருத்துக்களை வெளியிட்டார்என்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாண பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் உருவப் படத்தினைச் சேதப்படுத்தினார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு நான்கு இளைஞர்களும், மன்னார் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் மாவீரர் தினத்தினைக் கொண்டாடுவதற்கு முனைந்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டார்கள். பளை பிரதேசத்தில் வழமை போல் ஆலயத்துக்கு பிரார்த்தனைக்கு வந்த ஆசிரியர், மாவீரர்களுக்கு பிரார்த்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் நாள் பூராவும் அங்கேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

வடக்கில் அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் அல்லது நிகழ்வையும் ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக, குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிராக, அரசாங்கம் கடந்த பல சந்தர்ப்பங்களில் செய்தது போலவே இம்முறையும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் உருவப்படம் தீமூட்டி எரிக்கப்பட்டிருந்ததுடன், மாகாண அமைச்சர் ஐங்கரநேசனின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டில் மலர் வளையம் வைக்கப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோல் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேச சபைத் தலைவர்களின் வீடுகளும் தாக்குதலுக்குள்ளாகின.

வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த இலங்கையின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரிய, பத்திரிகையாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்தார்.புலிகள் இலங்கையிலும், அதேபோல் வேறுபல நாடுகளிலும் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாகும். தடைசெய்யப்பட்ட அமைப்பின் பயங்கரவாதிகளை நினைவுகூர்வதற்கு முயற்சிப்பதும் மற்றும் ஊடக சுதந்திரத்தினைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையில் பிரிவினைவாதத்தினை ஊக்குவிப்பதும் மற்றும் அதற்காக பிரச்சாரம் செய்வதும் சட்டவிரோதமானதாகும்,என அவர் பிரகடனம் செய்தார்.

இராணுவத்தின் கருத்தையே மீண்டும் உச்சரித்த தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தின் பணிப்பாளர் ல்கஸ்மன் ஹுளுகல்ல,ஊடக சுந்திரத்தினைப் பாவித்துக் கொண்டு நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் புலிகளைக் கொண்டாடுவது சட்ட விரோதமானது, சட்டத்தினை மீறுபவர்கள் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்,என்றார்.

கடந்த ஆண்டு, திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல் ஒன்றை முன்னெடுத்த இராணுவத்தினர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் மாவீரர் தினத்துக்காக தீபங்கள் ஏற்றப்பட்டதாக கூறி விடுதிக்குள் நுழைந்து, மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதுடன், மாணவிகளின் விடுகளுக்குள்ளும் நுழைந்து அறைகளை சீரழித்தனர். தாக்குதலுக்கு எதிராக மறுநாள் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது இராணுவமும் பொலிசாரும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தினர். இந்த சம்பவத்தில் பல மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, அரசாங்கத்தின் துணைப் படைக் குழுவாக செயற்பட்டுவரும் சிறி ரெலோ அமைப்பின் அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களாக, நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டனர். இறுதியாக மாணவர் ஓன்றியத் தலைவர் தர்சானந், செயலாளர் ஜனமேஜயந் ஆகியோர், புலி உறுப்பினர்களும், சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு முகாம் என்றழைக்கப்படுவதில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.

நடந்து முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போதும், பொதுநலவாய மாநாட்டின் போதும், இந்தப் பிரதேசங்களில் சிவில் நிர்வாகமும் ஜனநாயகமும் உள்ளதாகக் காட்டிக் கொள்வதற்காக, இராணுவ முகாம்கள் குறைக்கப்பட்டு, சீருடைகளுடன் படையினரின் நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டு சிவில் உடையில் புலனாய்வாளர்கள் அதிகரிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இந்த நிகழ்வுகள் முடிந்த கையோடு மீண்டும் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் மக்களின் வீடுகள், இந்து கோயில்கள், பிரசித்தி பெற்ற நடேஸ்வராக் கல்லூரி போன்றவற்றினை படையினர் இடித்து அழித்து வருகின்றனர். அதனை பார்வையிடச் சென்ற வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனை இராணுவத்தினர் அணுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இங்கு சுமார் 6,500 ஏக்கர் பிரதேசத்தை கைப்பற்றி வைத்துள்ள படையினர், அங்கு இராணுவ முகாம்களையும் தங்குமிடங்களையும் அமைக்கப் போவதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அதிகாரத் தோரணையில் கூறியிருந்தனர்.

கொழும்பு அரசாங்கத்துடன் சமரசத்துக்கான தனது தயார் நிலையினை பல தடவைகள் வெளிக்காட்டியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மூடப்பட்டமை பற்றி வாய்திறக்கவில்லை. ஆனாலும், தமிழ் மக்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மாவீரர் தினக் கொண்டாட்டங்களை ஆங்காங்கு மரக் கன்றுகளை நாட்டிக் கொண்டாடியிருந்தது.

இதில் ஒரு படி மேல் சென்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், பாராளுமன்றத்தில் புலிகளின் தலைவர்பிரபாகரன் ஒரு தேசிய வீரன்என்று புகழ்ந்து உரையாற்றினார். இதனால் ஆளும் கட்சியினதும் எதிர்க் கட்சியினதும் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், சிறிதரனின் கூற்றை நிராகரிக்க நெருக்கப்பட்டார். மறுநாள் டெயிலி மிரர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த அவர், அதுசிறிதரனின் கருத்து, கட்சியின் கருத்து அல்ல, அது அவரின் தனிப்பட்ட கருத்து, எமது நிலைப்பாட்டை மாகாணசபைத் தேர்தல் மூலம் தெளிவுபடுத்தியிருந்தோம். நாங்கள் சிறிதரன் அவ்வாறு பேசுவதற்கு அனுமதிக்க மாட்டோம்என்றார்.  

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக, இராஜபக்ஷ அரசாங்கம் நடத்திய மாகாண சபை தேர்தலில் வெற்றி காண்பதின் மூலம், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்நகர முடியும் என்ற மாயையை கூட்டமைப்பு பரப்பியிருந்தது. எனினும் தேர்தல் வெற்றியின் பின்னர் இராணுவம் தனது நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதையே காணும் கூட்டமைப்பு, அரசாங்கத்தின் நிபந்தனைகளின் கீழ் செயற்பட வேண்டிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. மாகாண சபையின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் மாகாண சபையின் அதிகாரிகளுக்கும் இடையில் இழுபறி நிலைமை காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஏங்கும் கூட்டமைப்பு, மேலும் மேலும் ஏகாதிபத்திய சக்திகளின் தயவையே நாடுகின்றது. கடந்த பொதுநலவாய மாநாட்டுக்கு வந்திருந்த பிரிட்டிஷ் பிரதமர் கமரோன், இராஜபக்ஷ அரசாங்கத்தை சீனாவிடம் இருந்து தூர விலகச் செய்வதற்காக நெருக்கிவரும் மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் அழுத்தத்தை திணிப்பதன் பேரில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, அவருக்கு தமிழ் மக்களின் துன்பங்களை காட்சிப்படுத்துவதற்காக, காணாமல் போனவர்களின் உறவினர்களையும் காணிகளை இழந்துள்ளவர்களையும் கூட்டமைப்பு அணிதிரட்டியிருந்தது.

இதை அடுத்து கடந்த வாரம் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐ.நா விசேட பிரதிநிதியான சலோகா பெயானியை தனது யாழ்ப்பாண இல்லத்தில் சந்தித்தார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன், வடக்கு-கிழக்கில் இராணுவம் அபகரித்து வைத்துள்ள இடங்கள் தொடர்பாக ஐ.நா பிரதிநிதியிடம் கூறியுள்ளதாகவும், எமக்கு ஏற்படும் பிரச்சனை இராணுவம் வடக்கில் இருப்பதாலேயே ஏற்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.

இராஜபக்ஷவுக்கு அறிவுரை கூறுமாறு ஐ.நா.வுக்கு அவநம்பிக்கையான வேண்டுகோள் விடுத்த விக்னேஸ்வரன், “அதனை உரியவர்களுக்கு ஐ.நா எடுத்துக் கூற வேண்டும் எனவும், இராணுவம் இங்கு நிலைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களிடம் எவ்வளவு காலத்திற்கு இராணுவம் இங்கு நிலைத்திருக்க வேண்டும் எனக் கேட்க வேண்டும் எனவும் கோரியுள்ளோம்என்றார். கட்டிடங்களையும் முகாம்களையும் அமைத்துக்கொண்டு இராணுவம் தம்மை வடக்கில் நிரந்தரமாக ஸ்தாபித்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதை நன்கு அறிந்தும் விக்னேஸ்வரன் இத்தகைய கேள்விகளை அனுப்புவது கேலிக் கூத்தானதாகும்.

தமிழ் முதலாளித்துவத்தின் பிரதிநிதியான தமிழ் கூட்டமைப்புக்கு ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளிலும் ஆயிரக் கணக்கானவர்களை கொன்று குவித்த ஏகாபத்திய சக்திகளுக்கும் அவர்களின் கைப்பொம்மையான ஐ.நா.வுக்கும் முறையிடுவதைவிட வேறு மார்க்கம் கிடையாது. இது அவர்களது முதலாளித்துவ வேலைத்திட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவாகும்

வடக்கில் தமிழ் பேசும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இராணுவ ஒடுக்குமுறையில் இருந்து மீள்வதற்கும் தமது அடிப்படை ஜனநயாக உரிமைகளை பாதுகாப்பதற்கும் உள்ள ஒரே மார்க்கம், யுத்தத்தினதும் இராணுவவாதத்தினதும் தோற்றுவாயான முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கி வீசுவதற்காக, தெற்கிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தமது வர்க்க சகோதரர்களுடன் ஐக்கியப்படுவதே.