சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

25 years since Keerthi Balasuriya’s death

 

South Asia’s foremost Marxist of the second half of the 20th century

கீர்த்தி பாலசூரிய மறைந்து 25 ஆண்டுகள்
20 ஆம் நூற்றாண்டின் பின் பாதியில் தெற்காசியாவின் முதன்மையான மார்க்சிசவாதி


முதலாம் பாகம்

By Wije Dias
27 December 2012

use this version to print | Send feedback

பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்துக்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய முன்னெடுத்த அரசியல் போராட்டம் பற்றிய இரு பகுதி கட்டுரையின் முதலாவது பகுதி இங்கு பிரசுரமாகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பகுதியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) ஸ்தாபக பொதுச் செயலாளரான கீர்த்தி பாலசூரிய, 18 டிசம்பர் 1987 அன்று தனது 39வது வயதில் திடீர் மாரடைப்பால் இறந்தார். அவரது அகால மரணம், இலங்கையிலும் இப்பிராந்தியம் முழுவதிலும், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தின் புரட்சிகர மூலோபாயத்துக்கு புத்துயிரூட்ட போராடுவதற்காக, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நனவுப்பூர்வமாக அர்ப்பணிக்கப்பட்டிருந்த வாழ்க்கையை இடையில் துண்டித்து விட்டது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், சோசலிச சமத்துவ கட்சியின் (சோ.ச.க.) முன்னோடியாகும்.


கீர்த்தி பாலசூரிய

தோழர் கீர்த்தி மறைந்த அன்று, அவர் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) ஓடுகாலிகளிடம் இருந்து 1985-86ல் பிளவடைந்த பின்னர் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் எதிர்கொண்டுள்ள அரசியல் பணிகளை தெளிவுபடுத்தி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு ஒரு ஆவணத்தை வரைந்து கொண்டிருந்தார். அவர், குறிப்பாக 1987 ஜூலையில் இருந்து, இலங்கையில் இந்தியாவின் இராணுவ-அரசியல் தலையீட்டுடன், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கும் மற்றும் தெற்காசியா முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திக்கொண்டிருந்தார்.

வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலாளர் டேவிட் நோர்த் அப்போது எழுதிய ஒரு இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது: "தோழர் கீர்த்தி, இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எதிர்கொள்ளும் அனைத்து எண்ணிலடங்கா அரசியல் அழுத்தங்களின் மத்தியிலும், தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு தலைவர் என்ற வகையில், தனது சர்வதேச பொறுப்புகளில் இருந்து பின்வாங்கவில்லை. பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்துக்கான காரணங்களே அவரது எழுத்துக்கள் அனைத்துக்கும் தூண்டுதலாக இருந்தன. தோழர் கீர்த்தியைப் பொறுத்தளவில், பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமானது சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் அதன் உச்ச வெளிப்பாட்டைக் கண்டது."

கீர்த்தியின் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன் உரையாற்றிய நோர்த், அவரது பாத்திரத்தின் மகத்தான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்: "அடுத்துவரும் நாட்களில் ஆசியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தோழர் கீர்த்தியின் எழுத்துக்களை படித்து கற்றுக்கொள்வர்."

2008ல் தோன்றிய உலக முதலாளித்துவத்தின் வீழ்ச்சியினால் தூண்டப்பட்டுள்ள இன்றைய வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி, கீர்த்தி பாலசூரிய செய்த ஆழமான தத்துவார்த்த மற்றும் அரசியல் பங்களிப்பை கற்க வேண்டிய அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வட ஆபிரிக்கா அல்லது மத்திய கிழக்கிலும், உலகின் முன்னேறிய நாடுகளில் மற்றும் வரலாற்று ரீதியில் பின்தங்கிய நாடுகளிலும், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்க்க வேண்டியது அவசரத் தேவையாகும்.

கீர்த்தி, 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) செய்த வரலாற்றுக் காட்டிக்கொடுப்பினால் உருவாக்கப்பட்ட அரசியல் பிரச்சினைகள் மற்றும் குழப்பத்தில் இருந்து மீள்வதற்கு முயற்சித்துக்கொண்டிருந்த, ஒரு தீவிரமயமான இளைஞர் குழுவில் 1966 ஆரம்பத்தில் சேர்ந்தார். ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என தம்மை அழைத்துக்கொண்டு முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்துகொண்ட முதலாவது கட்சி, லங்கா சமசமாஜக் கட்சியே ஆகும். அது சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (ஸ்ரீ.ல.சு.க.) ஒரு கூட்டணியில் சேர்ந்துகொண்டது.

இந்த காட்டிக் கொடுப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் புரட்சிகர போராட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருந்த ஒரு சமயத்திலேயே நடந்தது. அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்கள், தொழிற்சங்க அமைப்புக்களின் கூட்டுக் கமிட்டி (JCTUO) என்ற ஒரு பொதுவான முன்னணியை உருவாக்கியதோடு, தமது 21 கோரிக்கைகளை அரசாங்கம் கொடுக்காவிட்டால் தொழில்துறை நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தல் விடுத்தன. இளைஞர்கள் தீவிரமயமாகினர். பல்கலைக்கழக மாணவர்கள், வியட்நாம் போர் மற்றும் கொங்கோவில் பெற்றிஸ் லுமும்பா கொலைக்கும் எதிராகவும், அதேபோல் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் இலவசக் கல்வி மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

பண்டாரநாயக்க அரசாங்கத்தில் லங்கா சமசமாஜக் கட்சி நுழைந்துகொண்டமை, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரவலான குழப்பத்தை உருவாக்கியது. லங்கா சமசமாஜக் கட்சி 21 கோரிக்கைகள் இயக்கத்துக்கு முடிவுகட்டியது. லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிராகப் போராட விரும்பிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களில் அதிகம் சிந்திக்கக்கூடிய தட்டினர், லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து பிரிந்து அதன் காட்டிக்கொடுப்பை கண்டனம் செய்த லங்கா சமசமாஜக் கட்சி (ஆர்) அல்லது புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சியினால் பிழையாக வழிநடத்தப்பட்டு சோர்வுற்றனர். லங்கா சமசமாஜக் கட்சி (ஆர்), லங்கா சமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாதத்துக்கு அரசியல் மூடுதிரையை வழங்கிய ஏர்னஸ்ட் மண்டேல் தலைமையிலான நான்காம் அகிலத்தின் பப்லோவாத ஐக்கிய செயலகத்திடம் இருந்து பிளவுபட மறுத்தது. லங்கா சமசமாஜக் கட்சியின் சீரழிவின் சர்வதேசரீதியான அரசியல் வேர்களைப் பற்றி விவாதிக்க எடுத்த அனைத்து முயற்சிகளையும் தடுத்த லங்கா சமசமாஜக் கட்சி (ஆர்), அதனைப் பின்பற்றிய அநேகமானவர்களை, குறிப்பாக விரக்தியில் இருந்த, ஆனால் அமைதியாக இருக்காத இளைஞர்களை கைவிட்டது.

இந்த அரசியல் முட்டுக்கட்டையில் இருந்து வெளியேற வழி தேடுவதற்காக, சக்தி குழு உருவாக்கப்பட்டது. ஒரு பாடசாலை மாணவனாக இருந்து கொண்டு, தனது பல்கலைக்கழக நுழைவு பரீட்சைக்குத் தயாராகிக்கொண்டிருந்த கீர்த்தி, இந்த இளம் அரசியல் ஆர்வலர்களின் குழுவில் சேர்ந்தார். பல்வேறு இயல்புகொண்ட மற்றும் மத்தியவாத தன்மை கொண்ட இந்தக் குழு, லங்கா சமசமாஜக் கட்சிக்கு மீண்டும் திரும்பும் நிலைப்பாட்டில் இருந்து லங்கா சமசமாஜக் கட்சி (ஆர்) அமைப்பை விமர்சித்தவர்களையும் அதன் உறுப்பினர்களாக சேர்த்துக்கொண்டிருந்தது. இந்த நோக்குநிலையை குழுவின் உறுப்பினர்கள் எதிர்த்த போதிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலையீட்டின் மூலம் மட்டுமே, அந்த அடிப்படை தத்துவார்த்த சிக்கல்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

1966ல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகத்தின் (எஸ்.எல்.எல்.) தலைவரான டோனி பண்டாவின் இலங்கை வருகை மூலம், வில்பிரெட் "ஸ்பைக்" பெரேராவுடன் இளைஞர்களுக்கு தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. தோழர் ஸ்பைக், கிட்டத்தட்ட தனிமனிதராக, பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய போராட்டத்தின் அடிப்படையில் லங்கா சமசமாஜக் கட்சி (ஆர்) அமைப்புக்குள் ஒரு அரசியல் போரில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியாக இருந்தார். சக்தி குழுவின் மத்தியவாத அரசியல் பற்றிய முழுமையான விமர்சனம் அடங்கிய ஸ்பைக்கின் ஆவணங்களும், காஸ்ட்ரோவை ஐக்கிய செயலகம் பாதுகாத்தமைக்கு எதிரான அவரது தைரியமான சவாலும், இந்த இளைஞர்களின் கண்களைத் திறக்கச் செய்தன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை நெருங்கிய இளைஞர்களால் விரோதய குழு அமைக்கப்பட்டது. மைக்கல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையில் நான்காம் அகிலத்தின் உள்ளே உருவாகிய ஒரு சந்தர்ப்பவாத போக்குக்கு எதிரான போராட்டத்தில், 1953ல் அமைக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆவணங்கள் பற்றிய ஒரு தீவிரமான கற்கையும் கலந்துரையாடலும் தொடங்கியது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கான போராட்டத்தைக் கைவிட்ட பப்லோவாதிகள், பல்வேறு நாடுகளில் தொழிலாளர் இயக்கங்களில் ஆதிக்கம் செலுத்திய ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசியவாத அதிகாரத்துவங்களுக்கு அடிபணிந்தனர். 1963ல் பப்லோவாதிகளுடன் மறு ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொண்ட அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் அரசியல் பின்னடைவுகளுக்கு எதிராக ஒரு நீண்ட போராட்டத்தை அப்போதுதான் பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் முன்னெடுத்திருந்தது. விரோதய குழுவுக்குள் தத்துவார்த்த தெளிவுக்கான போராட்டத்தில், கீர்த்தி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியலுக்கான ஒரு முதன்மைப் போராளியாக உருவானார்.

அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், விரோதய குழு, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் எழுத்துக்களில் மற்றும் வேலைகளில், குறிப்பாக பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் வேலைகளில் நெருக்கமாக அவதானம் செலுத்தியதுடன், மைக் பண்டா பிப்ரவரி 1968ல் எழுதிய ஒரு ஆசிரியர் தலையங்கத்தையிட்டு அதிர்ச்சியும் அடைந்தது. அவர், வியட்னாமில் கோசி மின்னால் முன்னெடுக்கப்பட்ட "நீண்ட மக்கள் யுத்தத்தை" புகழ்ந்ததோடு கொரில்லா போரின் "முதன்மை எடுத்துக்காட்டாக" மாவோ சே துங்கை பாராட்டியிருந்தார். கீர்த்தி, மாவோ வாதத்தை புகழ்ந்தமை சம்பந்தமாக கண்டனம் தெரிவித்து சோசலிச தொழிலாளர் கழகத்துக்கு ஒரு கடிதம் எழுதியதுடன், பின்னர் வெளியிடப்பட்ட பதிப்பில், அந்த ஆசிரியர் தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது பண்டாவின் தனிப்பட்ட கருத்து என காட்டும் ஒரு சுருக்கமான குறிப்பு சேர்க்கப்பட்டிருந்தது. பண்டாவின் மாவோவாத-சார்பு நாட்டம் பற்றிய இந்த வாழ் மற்றும் வாழவிடு என்ற அணுகுமுறை, சோசலிச தொழிலாளர் கழகம் அது சோசலிச தொழிலாளர் கட்சிக்கு (SWP) எதிராக முன்னெடுத்த கொள்கை ரீதியான போராட்டத்தில் இருந்து பின்வாங்குவதை சமிக்ஞை செய்வதாக இருந்தது.

அந்த ஆண்டின் பிற்பகுதியில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக ஸ்தாபக மாநாட்டின் போதும், இதே தத்துவார்த்த கண்டனத்தை வெளிப்படுத்திய கீர்த்தி, புதிதாக அமைக்கப்பட்ட கட்சியை, லங்கா சமசமாஜக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி (ஆர்) மற்றும் சக்தி குழு ஊடாக அதன் வரலாற்றை நோக்கி, ஒரு தேசிய புரட்சிகர நிகழ்வின் தொடர்ச்சியாகக் கருதும் போக்கை எதிர்த்தார். பப்லோவாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்த அனைத்துலகப் போராட்டத்திலேயே ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சி தங்கியிருக்கின்றதே அன்றி, தேசிய குழுப்படுத்துதல் மூலம் புரட்சிகர நோக்குநிலையின் தொடர்ச்சியை பராமரிக்க முடியாது என வலியுறுத்தினார். அந்த ஸ்தாபக மாநாடு நிரந்தர புரட்சி கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய துணை கண்டம் முழுவதும் புரட்சிகர அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு முன்னோக்கை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பத்தொன்பதே வயதில், கீர்த்தி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடரும்...