சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil :

Report to the Second National Congress of the Socialist Equality Party

சோசலிச சமத்துவக் கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிரசுக்கு வழங்கிய அறிக்கை

By David North
27 November 2012
use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) இரண்டாவது தேசிய காங்கிரசுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவர் டேவிட் நோர்த் ஜூலை 8, 2012 அன்று அளித்த அறிக்கையை இங்கே வெளியிடுகிறோம். இது PDF வடிவிலும் கிடைக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் இரண்டாவது தேசியக் காங்கிரசை நாம் தொடங்குகிறோம். 1930களுக்கு பிந்தைய அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் மிகப் பெரிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியில் இந்த காங்கிரஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த சர்வதேச பொருளாதார அமைப்புமுறையே எந்தளவுக்கு எளிதில் நொருங்கத்தக்கதாய் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒருவர் மார்க்சிசவாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதலாளித்துவ ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்ற கருத்துக்களைக் கொண்டு பார்த்தால், “பேரழிவுத் தத்துவம் ஏராளமான ஆதரவாளர்களை ஈர்த்திருப்பதாகத் தோன்றுகிறது. 2008 செப்டம்பரில் லெஹ்மன் பிரதர்ஸ் பொறிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னரும் உலகப் பொருளாதார நெருக்கடி தணிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை

வேலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பில் தேக்கமும் அமெரிக்காவிற்குள்ளான உற்பத்தித்துறை உற்பத்தியின் கூரிய வீழ்ச்சியும் மீட்சி நடந்து கொண்டிருப்பதாக ஒபாமா நிர்வாகம் கூறும்  கூற்றுகளைக் கேலிக்கூத்தாக்குகின்றன. அமெரிக்கப் பொருளாதாரத்தின் கணிசமான மற்றும் நீடித்த மறுமலர்ச்சிக்கான சாத்தியம் எதுவும் ஐரோப்பா மற்றும் ஆசியாவிலான மோசமடைகின்ற சரிவின் காரணத்தால் கணிசமாய் குறைந்து போய் விட்டன. சீனாவின் மத்திய வங்கியும் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியும் ஒரேசமயத்தில் வியாழன்று வட்டி விகிதங்களைக் குறைத்ததும், இங்கிலாந்து வங்கி (Bank of England) தனது ஊக்குவிப்புத் திட்டத்தை முடுக்கி விடுவதற்கு முடிவெடுத்ததும், உலகப் பொருளாதாரத்தின் நிலை துரிதமாகச் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்று ஆளும் உயரடுக்குகளுக்குள்ளாக நிலவுகின்ற பரவலான நம்பிக்கைக்கு சாட்சியம் கூறுகின்றன.

இந்த நெருக்கடி அமைப்புரீதியான தன்மையைப் பெற்றிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் மையமாகத் திகழ்ந்த ஸ்தாபனங்கள் எல்லாம் உடைந்து கொண்டிருக்கின்றன. யூரோவின் தீர்க்கப்படமுடியாத நெருக்கடி ஐரோப்பிய ஐக்கிய திட்டம் தோற்றுவிட்டதன் அறிகுறியாக நிற்கிறது. ஒரு கணிசமான மட்டத்திற்கு ஆளும் உயரடுக்கின் சொந்த பொறுப்பற்ற தன்மையினாலேயே தூண்டப்பட்டிருக்கின்ற இந்த நெருக்கடிக்கு அந்த உயரடுக்கிடம் இருந்து நம்பிக்கையான பதிலிறுப்பு எதுவும் இல்லை. ஒரு வர்க்கமாக அவர்கள் அரசியல்ரீதியாகவும் சரி தார்மீகரீதியாகவும் சரி திவாலாகி இருக்கிறார்கள். நிதியமயமாக்க நிகழ்வு - ஒரு சமகால பொருளாதார அறிஞரின் வார்த்தைகளில் கூறுவதானால், “இலாபமீட்டல் என்பது வர்த்தகம் மற்றும் பண்ட உற்பத்தியைக் காட்டிலும் நிதியவழிகளின் மூலம் அதிகமாய் செய்யப்படுகின்ற ஒரு மூலதனத் திரட்சி வகை - பொருளாதார ஒட்டுண்ணித்தனத்தின் வெற்றியையும், அத்துடன் குற்றவியல் தன்மையின் அடி ஆழங்களுள்ளாக முதலாளித்துவ சமூகம் சரிந்திருப்பதையும் குறிக்கிறது

இலண்டனில் இருக்கும் பார்கிளஸ் வங்கி இலண்டன் வங்கிகளுக்கு இடையிலான வழங்கும் வட்டிவிகிதத்தில் (Libor) கைப்புரட்டு செய்ததை ஒப்புக் கொண்டிருப்பதை அடுத்து சமீபத்திய ஊழல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட பல ஸ்தாபனங்களில் இது ஒன்று மட்டுமே என்பதில் சந்தேகமில்லை. Libor நிர்ணயிப்பதில் சம்பந்தப்பட்டவை மற்றும் Libor இன் தாக்கம் ஆகியவை அளவிடமுடியாதவை. Libor திருத்தங்களை செய்வது என்பது விளையாட்டுத்துறையில் உலக வரிசையை (World Series) திருத்தங்களை செய்வற்கு ஒப்பானதாகும். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் உலகெங்கும் மேற்கொள்ளப்படுகின்ற எண்ணிறந்த வர்த்தக பரிவர்த்தனைகளுக்கான வங்கிக் கடன்களுக்கு வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்வதற்கான அளவுகோல் இந்த Libor தான்.

சுமார் 92 வருடங்களுக்கு முன்னதாக நிதியமயமாக்கத்தின் இப்போதிருப்பதை விட மிகக் குறைந்த அபிவிருத்தி கொண்ட ஒரு வடிவத்தை விவரிக்கையில் ட்ரொட்ஸ்கி கூறினார்: ”ஊக வணிகம் மூலமாகவும், சர்வதேசக் கொள்ளையின் மூலமாகவும் ஓரிரு நாட்களிலேயே தமது மூலதனத்தை இரட்டையாக்கவும், பத்துமடங்காக்கவும் பழகி விட்ட திருவாளர் முதலாளிக்கு உற்பத்தி நிகழ்முறையின் மூலமாக இலாபப் பொருளாதாரத்தின் அடித்தளமான உபரிமதிப்பை முறையாகப் பிழிந்தெடுப்பதென்பது மிகவும் அலுப்பூட்டுவதாக மாறிவிட்டது போலும்.”[2] பொருளாதாரத்துறையின் செல்லுபடியாகும் தன்மையின் நிலைமுறிவானது அரசியற்துறையில் அதன் உருக்குலைவில் பிரதிபலிக்கப்படுகின்றது.

முதலாளித்துவ சமூகத்தில் நீக்கமற நிலவியிருக்கின்ற ஒட்டுண்ணித்தனமானது அமெரிக்க அரசியல்சட்ட அமைப்பின் அப்பட்டமான அத்துமீறலின் கீழே அமைந்திருக்கிறது. 2000 டிசம்பரில், கோர் Vs புஷ் உச்சநீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த நிலையில், நான் கூறியது என்னவென்றால், இந்த வழக்கின் முடிவு ஆளும் வர்க்கத்திற்குள்ளாக ஜனநாயகக் கோட்பாடுகளுக்கான இடம் இன்னும் எந்த மட்டத்திற்கு எஞ்சியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதாக இருக்கும் என்று கூறினேன். தேர்தல் திருட்டினை உச்சநீதிமன்றம் ஏற்றது; ஆளும்பிரிவின் எந்த குறிப்பிடத்தக்க பிரிவிடம் இருந்தும் எந்த எதிர்ப்பும் இல்லை. அதனைத் தொடர்ந்து வந்திருக்கக் கூடிய தசாப்தத்தில், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது ஒரு ஈவிரக்கமற்ற தாக்குதல் நடந்திருக்கிறது. அப்பட்டமான பொய்களின் அடிப்படையில் போர்களைத் தொடுக்கின்ற, சித்திரவதையை கடைப்பிடிக்கின்ற, அத்துடன் எந்த சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமலேயே அமெரிக்க குடிமக்கள் உள்ளிட்ட உலகின் எந்த மூலையிலும் மனிதர்களைக் கொல்வதற்கான உரிமையைக் கோரக் கூடியதொரு அரசாங்கம் இருக்கின்ற நாட்டில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒபாமா படுகொலைகளுக்கு உத்தரவிடுகின்ற முதல் ஜனாதிபதி அல்ல என்பதை நாம் ஊகித்துக்கொள்ளலாம். ஆனால் அது குறித்து பெருமை பேசுகின்ற, அத்துடன் நீதிமுறைமைகளுக்கு உட்படாத கொலைகளின் ஒரு திட்டத்திற்கான இலக்குகளை கண்காணிப்பதற்கும் தேர்வு செய்வதற்கும் தனது நேரத்தில் கணிசமான பகுதியை ஒதுக்குவதை உலகறியச் செய்கின்ற முதல் ஜனாதிபதி அவர் தான்.

நீதிமுறைக்கு அப்பாற்பட்ட மற்றும் சட்டவிரோதமான கொலைகளின் வேலைத்திட்டத்தில் ஒபாமாவின் மையமான பாத்திரத்தை விவரித்து நியூயோர்க் டைம்ஸில் ஒரு கட்டுரை வந்ததன் பின்னர், முன்னாள் ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் ஒரு பகிரங்க எதிர்ப்பை வெளியிட்டார். கார்ட்டர் அரசியல் அப்பாவி கிடையாது. ஆனால் முதலாளித்துவ ஆட்சியின் அரசியலமைப்புச் சட்ட அடித்தளங்களை அரசாங்கம் கைவிடுவதன் பின்விளைவுகளைக் கண்டு அவர் பயப்படுகிறார். அரசியலமைப்புச் சட்டம்தான் அமெரிக்க அரசாங்கத்திற்கான அங்கீகாரத்தின் அத்தியாவசியமான மூலம் என்பது முன்னாள் ஜனாதிபதிக்கு நன்கு தெரியும். ஜனாதிபதிதளர்ந்துவிடாது, பரிபாலித்து,  பாதுகாப்பதற்கு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருக்கின்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரம் இல்லையென்றால், அரசுக்கு அங்கீகாரம் கிடையாது. ஆளும் வர்க்கம் எந்த மட்டத்திற்கு அரசியலமைப்புச் சட்ட வாதத்தினைக் கைவிடுகிறதோ, அந்த மட்டத்திற்கு முன்னெப்போதையும் விட பகிரங்கமாய் பலவந்தத்திலும் வன்முறையிலும் இறங்கியாக வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகளை கைவிட்டமையானது வெறுமனே நிர்வாகத்தின் ஒரு கொள்கை மாற்றத்தைக் குறிக்கவில்லை. மாறாக, இது சமூகத்தின் பிரதான வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகளிலான மாற்றங்களின் அரசியல் வெளிப்பாடாகும். வர்க்க ஆட்சியின் வடிவங்களிலான இந்த மாற்றங்கள் அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தின் தீர்க்க முடியாத முரண்பாடுகளின் விளைவு ஆகும். முதலாம் உலகப் போர் வெடிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னால், ஜேர்மன் சமூக ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியை ஆராயும் கட்டுரை ஒன்றில் லெனின் எச்சரித்தார், அரசியல் விதிமுறைகள் மேலாதிக்கம் செலுத்தியஒரு அரைநூற்றாண்டுக் கட்டம் மற்றுமொரு கட்டத்திற்கு வழிவிட்டுக் கொண்டிருந்தது என்று. புற நிலைமைகள்முதலாளித்துவ விதிமுறைகள் அனைத்தையும் அழிப்பதற்கு இட்டுச் சென்று கொண்டிருந்தன என்பதையும்முதலாளித்துவ வர்க்கத்தின் சொந்த வேலையின் காரணத்தாலேயே அதற்கு சகிக்கவியலாததாக ஆகி விட்டிருக்கின்ற அதன் விதிமுறைகளை இல்லாதொழிப்பதன் பாகமாகச் செய்யப்படுகின்ற பதட்டமான முயற்சிகள் அதன் முதல் அறிகுறிகளாக இருந்தன என்பதையும் லெனின் முன்கண்டார்.

வரலாறு லெனினின் ஆய்வு சரியெனக் காட்டியது. முதலாம் உலகப் போரின் வெடிப்பு சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் அபிவிருத்தியின் ஒரு நீண்டகட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது. விதிமுறைகளின் மெதுமெதுவான ஒரு சகாப்தம் போர்கள் மற்றும் புரட்சிகளின் சகாப்தத்திற்கு வழிவிட்டது. நாம் இப்போது, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான குரோதங்கள் கட்டுப்படுத்தப்பட்டும் தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பு ஒடுக்கப்பட்டும் இருந்த வரலாற்று அபிவிருத்தியின் இன்னொரு நெடிய கட்டத்தின் முடிவினை கண்ணுற்றுக் கொண்டிருக்கிறோம். உண்மையில், வரலாற்று அபிவிருத்தியின் ஒரு புதிய கட்டத்திற்குள், உலக வரலாற்றின் மாபெரும் சமூகப் பிரளயங்களால் குணாதிசயப்படுத்தப்பட்ட ஒரு கட்டத்திற்குள், நாம் ஏற்கனவே நுழைந்துள்ளோம் எனக் கூறுவதே மிகச் சரியானதாக இருக்கும். சொல்லப் போனால், இதுதான், 2008 இன் நெருக்கடியானது, 1914க்கும் 1929 மற்றும் 1939க்கும் குறைவில்லாத, உலக வரலாற்றில் ஒரு திருப்பத்தைக் குறித்தது என்பதே இந்த பிரதான அரசியல் தீர்மானத்தின் திட்டவட்டமான பொருளாகும்.

நான்காம் அகிலத்தின் வரலாற்று அபிவிருத்தியின் நிலைப்பாட்டில் இருந்து இந்ததிருப்பத்தின் அரசியல் தாக்கங்களை புரிந்து கொள்வதே இந்த காங்கிரசுக்கு முன்னால் இருக்கின்ற பணியாகும். எழுபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தை இந்த வாக்கியத்தைக் கொண்டு ட்ரொட்ஸ்கி ஆரம்பித்தார்: “ஒட்டுமொத்தமாக உலக அரசியல் சூழலானது பிரதானமாக பாட்டாளி வர்க்கத் தலைமையின் ஒரு வரலாற்று நெருக்கடியால் குணாதிசயப்படுத்தப்படுகிறது. ”உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் முன்னேறிய நெருக்கடிக்கான தனது பதிலிறுப்பை தீர்மானிப்பதில் இந்த காங்கிரஸ் பின்வரும் கேள்வியைக் கவனத்தில் எடுக்கவேண்டும்: உலக முதலாளித்துவத்தின் புறநிலை முரண்பாடுகளுக்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் மற்றும் நான்காம் அகிலத்தின் அபிவிருத்திக்கும் இடையிலான இடைத்தொடர்புகள் குறித்த ஒரு ஆய்வின் உள்ளடக்கத்திற்குள், தொழிலாள வர்க்க தலைமை நெருக்கடியை தற்போது எவ்வாறு மதிப்பீடு செய்கிறோம்

இந்தக் கேள்விக்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு குறித்த ஒரு திறனாய்வு அவசியமாக உள்ளது. இது ஒரு புலமைத்துவ பயிற்சியல்ல. நான்காம் அகிலத்தின் வரலாறு மீதான ஆராய்ச்சியானது வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியின் அடித்தளமாகவிருக்கும் அத்தியாவசியமான சமூக-பொருளாதார நிகழ்வுப்போக்குகளுக்குள் ஒரு ஆழமான உட்பார்வையை வழங்குகிறது. வரலாற்று அனுபவத்தின் மீதான ஒரு மீளாய்வு இன்றி நடப்பு சூழலை ஆராய்வதற்கும்ஸ்தூலமான பணிகளைத் தீர்மானிப்பதற்குமான ஒரு முயற்சி என்பது, ஊடகங்களில் இருந்தும், பல்வேறு அரசாங்க மற்றும் கல்வித்துறை அறிக்கைகளில் இருந்தும், மற்றும் தமது சொந்த அவதானிப்புகளில் இருந்தும் ஏறக்குறைய ஒன்றுதிரட்டி தேர்ந்தெடுக்கின்ற வகையில் சிறுகச் சிறுகச் சேர்த்த அனுபவவாதத்தரவின் அடிப்படையில் அமைந்த அரசியல் பதிவுவாதத்திற்கு (political impressionism) சற்று மேலான ஒன்றாகத்தான் இருக்கும். இத்தகையதொரு அணுகுமுறையால், பொருளாதார அபிவிருத்தியின் புறநிலைப் போக்குகளால் செல்வாக்கு செலுத்தப் பெற்று வர்க்கப் போராட்டத்தின் வெவ்வேறு வளர்ச்சிப்படிகள் மற்றும்காலகட்டங்களில் தனித்துவமான வெளிப்பாட்டைக் கண்டிருக்கக் கூடிய சமூக சக்திகளின் வரலாற்று நகர்வின் மீதான ஒரு ஆய்வின் மூலமாகக் கிடைக்க கூடிய ஆழமான புரிதலை அடையமுடியாது.

இந்த வரலாற்று அணுகுமுறை இந்த காங்கிரசிடம் இருந்து ஒரு உயர்ந்த மட்டத்திலான அரசியல் நனவைக் கோருகிறது. இந்த காங்கிரசே கூட வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியில் ஒரு முக்கியமானதருணம் ஆகும். இந்த அறையில் கூடிய பிரதிநிதிகள் எல்லாம் வெறுமனே தனித்தனி மனிதர்களின் தொகுப்பாக இந்தக் காங்கிரசின் ஆழ்ந்த ஆய்வுகளில் பங்கு பெற்றுக் கொண்டிருக்கவில்லை, மாறாக உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கான பல தசாப்தகால போராட்டத்தினால் வரையறை செய்யப்படுகின்ற ஒரு தனித்துவமான அரசியல் போக்கின் பிரதிநிதிகளாகவே பங்குபெற்றுக் கொண்டிருக்கின்றனர். வரலாற்றுத் தரவுகள் விளங்கப்படுத்துவதைப் போல, இந்த இயக்கத்திற்குள்ளான போராட்டங்கள் சர்வதேச அரசியல் சூழல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட வர்க்க சக்திகளிடையேயான உறவுகள் ஆகியவற்றிலான பெரும் நகர்வுகளின் ஒரு நேரடியான விளைவாகவோ, அல்லது அவற்றை எதிர்பார்த்தோ, அபிவிருத்தியுற்றிருக்கின்றன.

வரலாற்று நிகழ்வுப்போக்கினுள் நனவுடன் செயல்படுவதற்கு ஒரு புரட்சிகரவாதிக்கு அவர் நான்காம் அகிலத்தின் அனுபவங்கள் மற்றும் பாரம்பரியத்தில் இருந்து எவ்வளவை எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவையும் எடுத்துக் கொள்வது அவசியமாக உள்ளது. ஒரு மார்க்சிசவாதி புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான போராட்டத்தின் வரலாற்றுக் கோட்டுப்பாதையில் தனது சொந்த நடைமுறை எவ்விடத்தில் நிற்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்பாக, 1982 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள்ளாக தத்துவம், அரசியல் முன்னோக்கு மற்றும் நடைமுறை ஆகியவை குறித்து எழுந்திருந்த கருத்துபேதங்களின் முக்கியத்துவத்தை முதலில் எனது சொந்த மனதிற்குள்ளாக தெளிவுபடுத்திக் கொள்வதற்கு விழைந்த போது, நான் பின்வருமாறு எழுதினேன்:

ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றை தொடர்சியான துண்டுதுண்டான  அத்தியாயங்களின் தொடர்ச்சியாகப் புரிந்து கொள்ள முடியாது. அதன் தத்துவார்த்த அபிவிருத்தி அதன் காரியாளர்களினால் உலக முதலாளித்துவ நெருக்கடி தொடர்ச்சியாக விரிவடைவதிலிருந்தும் மற்றும் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்திலிருந்தும் உள்ளீர்த்துக் கொள்ளப்படுகின்றது ஒரு முழு வரலாற்று சகாப்தம் முழுவதிலும் வர்க்கப் போராட்டத்தின் அனைத்து அடிப்படை அனுபவங்களின் மீதான அரசியல் ஆய்வுகளின் முறிவற்ற தொடர்ச்சியே 1924 இல் லெனின் இறந்ததற்குப் பிந்தைய மார்க்சிசத்தின் ஒரேயொரு அபிவிருத்தியான ட்ரொட்ஸ்கிசத்தின் பிரம்மாண்ட செழுமைக்கு  உருக்கொடுத்திருக்கிறது.

இந்த ஒட்டுமொத்த வரலாற்றையும் கூட்டாக உட்கிரகித்துக் கொள்ள விழையாத ஒரு தலைமை தொழிலாள வர்க்கத்திற்கான அதன் புரட்சிகரப் பொறுப்புகளைத் அதற்கேற்றவாறு பூர்த்திசெய்ய முடியாது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அபிவிருத்தி குறித்த ஒரு உண்மையான அறிவு இல்லாமல் இயங்கியல் சடவாதம் குறித்துக் கூறுவதெல்லாம் வெறுமனே வெற்றுத்தனமானவையே; இத்தகைய உள்ளீடற்ற குறிப்புகள் இயங்கியல் நடைமுறையின் ஒரு உண்மையான சிதைவுக்குப் பாதை திறந்து விடுகிறது. தத்துவத்தின் மூலங்கள் சிந்தனையில் இல்லை மாறாக புற உலகில் தான் இருக்கிறது. இவ்வாறாக வர்க்கப் போராட்டத்தின் புதிய அனுபவங்களை நமது இயக்கத்தின் ஒட்டுமொத்தமான வரலாற்றிலிருந்து உய்த்துணர்ந்த அறிவுடன் தொடர்புபடுத்தி பார்ப்பதன் மூலமே ட்ரொட்ஸ்கிசத்தின் அபிவிருத்தி முன்னேறுகிறது.

இவ்வாறாக அறிகை என்பது உள்ளடக்கத்தில் இருந்து உள்ளடக்கத்திற்கு முன்னேறிச் செல்கிறது. இது ஒட்டுமொத்த பரந்த மக்களையும் அவர்களின் முந்தைய உள்ளடக்கத்தில் இருந்து நிர்ணயத்தின் அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது, அத்துடன், தனது இயங்கியல் முன்னேற்றத்தின் மூலமாக அது எதனையும் இழப்பதில்லை மற்றும் எதனையும் தனக்குப் பின்னால் விட்டுச் செல்வதில்லை, மாறாக தான் பெற்ற அத்தனையையும் தன்னுடன் சுமந்து சென்று, தன்னை மேலும் செறிவுபடுத்திக் கொள்கிறது, வளப்படுத்திக் கொள்கிறது.”

ஹேகலின் தர்க்கவியல் விஞ்ஞானம் என்ற நூலில் இருந்து இந்தப் பத்தியை மேற்கோளிட்டு தனது மெய்யியல் குறிப்புப் புத்தகங்களில் லெனின் எழுதினார்: “இந்த எடுத்துக்காட்டு இயங்கியலை சுருங்கக் கூறும் ஒரு வகையின் அளவுக்கு மோசமானதல்ல.” அல்லது இந்த எடுத்துக்காட்டானது ட்ரொட்ஸ்கிசத் தத்துவத்தின் தொடர்ச்சியான இயங்கியல் அபிவிருத்தியைசுருங்கக் கூறும் ஒரு வகையின் அளவுக்கு மோசமானதல்ல.  

நாம் இப்போது நான்காம் அகிலத்தின் அனுபவங்களின்முந்தைய உள்ளடக்கம் மொத்தத்தையும் இந்தக் காங்கிரஸ் தாங்கியிருக்கும்படி செய்ய வேண்டும். தொழிலாள வர்க்கத் தலைமையின் நெருக்கடி இப்போதிருக்கும் கட்டத்தையும் அதனைத் தீர்க்க என்ன செய்யப்பட வேண்டும் என்பதையும் புரிந்து கொள்வதற்கு இந்த முயற்சி கணிசமாகப் பங்களிப்பு செய்யும்.

இப்போது நாம் வரலாற்று நனவின் மீது - அத்துடன் வரலாற்று அனுபவங்களை மீண்டும் சீர்தூக்கிப் பார்ப்பதின் முக்கியத்துவத்தின் மீதும் - நாம் அளிக்கின்ற முக்கியத்துவத்தை நடுத்தர-வர்க்க போலி-இடதினை சூழவுள்ளவர்களிடையே நிலவுகின்ற அணுகுமுறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் முக்கிய தலைவரான அலென் கிறிவின் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:

LCR போலன்றி NPA சில பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை. அவற்றை வருங்கால மாநாடுகளுக்காக அது திறந்து வைத்திருக்கிறது. உதாரணமாக, அதிகாரத்தைக் கைப்பற்றுவது, இடைமருவு கோரிக்கைகள், இரட்டை அதிகாரம் போன்றவை குறித்த மூலோபாய விவாதங்கள் அத்தனையையும் கூறலாம். தாங்கள் ட்ரொஸ்கிஸ்டுகள் என NPA கூறிக் கொள்வதில்லை, மாறாக புரட்சிகர இயக்கத்திற்கு மற்ற பங்களிப்பாளர்களுடன் சேர்த்து ட்ரொட்ஸ்கிசத்தையும் ஒரு பங்களிப்பாளராகக் கருதுகிறது. ஸ்ராலினிசத்தின் கீழ் நாம் செய்ய நேர்ந்ததைப் போல, பின்னுள்ளவற்றை பார்க்கும் கண்ணாடி (rear view mirror) வழியாக கொள்கையை வடிவமைக்க விருப்பமில்லை என்பதால், சோவியத் ஒன்றியம் என்னவாய் இருந்தது, ஸ்ராலினிசம் என்னவாய் இருந்தது மற்றும் இன்னபிறவற்றில் NPAவுக்கு நிலைப்பாடு எதுவும் கிடையாது. கொள்கையானது ஒரு காலகட்டத்தின் ஆய்வுகளினதும் கடமைகளினதும் மீதான உடன்பாட்டினை அடித்தளமாக கொண்டுள்ளது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இருபதாம் நூற்றாண்டின் அரசியல் அனுபவங்கள் மீது NPA எந்த நிலைப்பாடையும் எடுக்கவில்லை. வரலாற்று தவிர்ப்புவாதத்தை அது பின்பற்றுகிறது. கடந்தகாலத்தைப் பற்றிக் கூறுவதற்கு NPA யிடம் எதுவுமில்லை. ஆனால் உலக வரலாற்றின் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்தின் படிப்பினைகளின் வழியே வேலைசெய்யாமல் எந்தப் பிரச்சினையிலும் புரட்சிகரக் கொள்கையை அது எங்ஙனம் அபிவிருத்தி செய்ய முடியும்? என்று ஒருவர் கண்டிப்பாய் கேட்க வேண்டியது அவசியம். ரஷ்யப் புரட்சி, சோவியத் ஒன்றியத்தின் இருப்பு, சமூக ஜனநாயகத்தின் மற்றும் ஸ்ராலினிசத்தின் காட்டிக் கொடுப்புகள், பாசிசத்தின் எழுச்சி, யூதப் படுகொலை, ஏகாதிபத்திய உலகப் போர்கள், இருபதாம் நூற்றாண்டின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, மற்றும் தொழிற்சங்கங்களின் மற்றும் தாராளவாத சீர்திருத்தவாதத்தின் நிலைகுலைவு ஆகியவற்றை இது கடந்து செல்ல விரும்புகிறது. இவை எல்லாம் எப்படி மறக்கப்பட முடியும்? கிறிவினும் அவரது கருத்தொத்த சகாக்களும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஒட்டுமொத்தமான பதிவுவாத முறையில், அவ்வப்போதைக்கான அடிப்படையில் பதிலிறுப்பு செய்கின்றனர். அவர்களது சமூக நிலையில் தன் வேரைக் கொண்டிருக்கும் இத்தகையதொரு வழிமுறை மிகவும் சந்தர்ப்பவாத, குறுகிய பார்வை கொண்ட மற்றும் பிற்போக்குவாத அரசியலைத் தவிர வேறொன்றையும் உருவாக்க முடியாது.

குட்டி முதலாளித்துவஇடது அமைப்புகள் - அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதானால் போலி-இடது அமைப்புகள் - பிரதிநிதித்துவம் செய்கின்ற சமூக நலன்களுக்கும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் முன்னெப்போதையும் விட மிக வெளிப்படையானதாக இருக்கிறது. SEP காங்கிரசின் தீர்மானம் கூறுவதைப் போல, இந்த அமைப்புகள் எல்லாம் முதலாளித்துவ அரசியலுக்குள் அமைந்திருக்கும் போக்குகளாகச் செயல்படுகின்றன. மேலும், போக்குகள் மற்றும் கட்சிகளின் அரசியல் அடையாளத்தைப் பொறுத்தமட்டில் அவற்றின் சர்வதேச நோக்குநிலை மற்றும் அணிதிரளலில் தான் தம் மிக அத்தியாவசியமான வெளிப்பாட்டைக் காண்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ISO, பிரிட்டனில் இருக்கும் SWP மற்றும் பிரான்சில் இருக்கும் NPA போன்றவை மட்டத்திற்கு, ஏகாதிபத்தியத்திற்கான வக்காலத்துவாதிகளாகவும் அதன் சதிக் கூட்டாளிகளாகவும் செயல்படுகின்றன. லிபியாவிலும் சிரியாவிலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மேற்கொள்கின்ற நவ காலனித்துவ நடவடிக்கைகளை ஊக்கமுடன் ஆதரிக்கின்ற இந்த அமைப்புகளின் தத்துவாசிரியர்கள் எல்லாம் இப்போதுஎடுத்ததெற்கெல்லாம் ஏகாதிபத்திய-எதிர்ப்பு காட்டுவதை கண்டிக்கின்ற மட்டத்திற்கு சென்று விட்டனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பெரும் சக்திகளின் இராணுவ நடவடிக்கை நியாயமானதாகவும் தங்களின் ஆதரவுக்கு தகுதியானவையாகவும் இருக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்வதற்கு அவர்கள் விரும்புகின்றனர்.

இந்த போலி-இடது அமைப்புகள் எல்லாம் ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் பகிரங்கமான கருவிகளாக உருமாறியதென்பது வரலாற்றுரீதியாக நெடுங்காலம் நிகழ்ந்த சமூக, அரசியல் மற்றும் தத்துவார்த்த நிகழ்போக்கின் விளைபொருளாகும்.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரஸ் 1938 செப்டம்பரில் நடந்தது. அதன்முந்தைய ஐந்து ஆண்டுகள், ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் காட்டிக் கொடுப்புகளால் தொழிலாள வர்க்கத்துக்கு நேர்ந்த பேரழிவான தோல்விகளின் ஒரு தொடர்ச்சியைக் கண்டிருந்தன. 1933 இல் நாஜிக்களின் வெற்றியானது ஐரோப்பாவின் அரசியல்ரீதியாய் மிக்க அனுபவம் பெற்றதும் மிகப் பெரியதுமான தொழிலாளர் இயக்கத்தினை நசுக்குவதில் விளைந்திருந்தது.  ஜேர்மனியின் தோல்விக்குப் பின்னர், பிரான்சிலும் ஸ்பெயினிலும் உருவாக்கப்பட்டிருந்தமக்கள் முன்னணிகள்” -அதாவது ஸ்ராலினிஸ்டுகளுக்கும் தாராளவாத முதலாளித்துவக் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணிகள்- தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்துடன் கட்டிப்போட்டு, அதன் அரசியல் இயக்கமின்மையை உறுதிசெய்து, தோல்விகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது. சோவியத் ஒன்றியத்தில், ஸ்ராலினிசப் பயங்கரங்கள் ஏறக்குறைய ஒட்டுமொத்த மார்க்சிச காரியாளர்களையும் அத்துடன் அக்டோபர் புரட்சிக்குத் தலைமை கொடுத்து சோவியத் ஒன்றியத்தின் உயிர்வாழ்வையும் பாதுகாத்த சோசலிச புத்திஜீவிகளையும் உடலியல்ரீதியாக அழித்தொழிப்பதில் முடிந்திருந்தது. இந்த நிகழ்வுகள் ஐரோப்பாவிலும் மற்றும் அமெரிக்காவிலும் புத்திஜீவித் தட்டினை நோக்குநிலை விலகச்செய்து, விரக்தியுறச் செய்திருந்தது. தொழிலாள வர்க்கம் சந்தித்த அரசியல் தோல்விகளைக் கண்ணுற்ற நிலையில், இடது புத்திஜீவித் தட்டானது சோசலிசப் புரட்சியை சாத்தியமாக்குவதற்கான ஆதாரவளங்கள் குறித்தும், இன்னும் சாத்தியத்தை பற்றியும் கூட மேலும் மேலும் அதிக சந்தேகமுற்றதானது.

1939 ஆகஸ்ட்-செப்டம்பரில் ஸ்ராலின்-ஹிட்லர் இடையே ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது மற்றும் இரண்டாம் உலகப் போர் வெடித்தது ஆகியவற்றைத் தொடர்ந்து, குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகளின் ஐயுறவுவாதம் நான்காம் அகிலத்தின் அமெரிக்க பிரிவான சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக பிரதிபலித்தது. சோவியத் ஒன்றியத்தை ஒரு ஊனமுற்ற தொழிலாளர் அரசாக கட்சி வரையறை செய்ததை எதிர்க்கின்ற ஒரு சிறுபான்மை கன்னையை SWP இன் மூன்று முன்னணி நபர்களான மக்ஸ் சட்மன், ஜேம்ஸ் பேர்ண்ஹாம் மற்றும் மார்ட்டின் ஆபெர்ன் உருவாக்கினர். இந்த சிறுபான்மைக் குழுவின் கருத்துகள் பெருமளவில் இத்தாலிய ஆசிரியரான புருனோ ரிச்சியின் கருத்துகளால் செல்வாக்கு செலுத்தப்பட்டதாக இருந்தன. “அதிகாரத்துவ கூட்டுவாதத்தின் ஒரு புதிய அமைப்புமுறை - அதாவது அரசின் உடைமைகள் மீது அதிகாரத்துவம் கட்டுப்பாட்டையும் நிர்வாகத்தையும் கொண்டிருப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய வர்க்க சமூகத்தின் வகை - உருவாகியிருப்பதாக அவர் வாதிட்டார். உலகின் அதிகாரத்துவமயமாக்கம் என்ற புத்தகத்தில் ரிச்சி பின்வருமாறு எழுதினார்:

சோவியத் ஒன்றியத்தில், நமது கண்ணோட்டத்தில், அதிகாரத்துவவாதிகள் தான் உரிமையாளர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தான் அதிகாரத்தைக் கையில் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவ வர்க்கத்திடம் இயல்பாக இருந்ததைப் போலவே இவர்கள் தான் பொருளாதாரத்தை நிர்வாகம் செய்கின்றனர். எல்லா சுரண்டும் வர்க்கங்களையும் போலவே இவர்கள் தான் இலாபங்களை எடுத்துக் கொள்கிறார்கள், ஊதியங்கள் மற்றும் விலைகளை நிர்ணயிக்கிறார்கள். திரும்பவும் சொல்கிறேன் - எல்லாமே அதிகாரத்துவவாதிகள் தான் செய்கின்றனர். சமூகத்தை ஆளுவதில் தொழிலாளர்கள் எதிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இது போதாதென்று, உபரி மதிப்பிலும் அவர்களுக்குப் பங்கு கிடையாது. உண்மை என்னவென்றால் கூட்டு உடைமையானது பாட்டாளி வர்க்கத்தின் கரங்களில் இல்லை; மாறாக ஒரு புதிய வர்க்கத்தின் கரங்களில் இருக்கிறது. இந்தப் புதிய வர்க்கம் சோவியத் ஒன்றியத்தில் ஏற்கனவே ஸ்தாபகமான உண்மையாக இருக்கையில், சர்வாதிபத்திய அரசுகளில் இந்த வர்க்கம் இன்னும் உருவாக்க நிகழ்ச்சிப்போக்கில் இருக்கிறது.[6]

SWPக்குள்ளான கன்னைப் போராட்டத்தின் ஆரம்பத்தில், ட்ரொட்ஸ்கி, ’அக்டோபர் புரட்சியும் சோவியத் ஒன்றியத்தின் ஸ்தாபகமும் ஒரு தொழிலாளர் அரசைத் தோற்றுவிக்கவில்லை -அதாவது தோன்றியிருந்த ஒன்று துரிதமாக ஊனமுற்றிருந்தது - மாறாக மார்க்சிஸ்டுகள் எதிர்பார்த்திராத வர்க்க ஆட்சியின் ஒரு புதிய வடிவத்தையே தோற்றுவித்தது என்ற நிலைப்பாட்டில் இருந்து எழுந்த அரசியல் மற்றும் வரலாற்றுப் பிரச்சினைகளை அடையாளம் கண்டார். ட்ரொட்ஸ்கி இந்த வாதத்தினை முன்பே பல தடவை கேட்டிருந்தார். அரசு முதலாளித்துவம் உண்மையில் பொருளாதாரத் தத்துவத்தை தனக்கு அடித்தளமாகக் கொள்வதில்லை. ரஷ்யப் புரட்சிக்கு வெகு காலம் முன்னதாகவே, “அரசு முதலாளித்துவ” (“state capitalist”) கருத்தாக்கங்களின் எதிர்பார்ப்புகள் மார்க்சிச-விரோத குட்டி-முதலாளித்துவ அரசியலின் பல்வேறு வடிவங்களில் காணக்கூடியதாக இருந்தது. இதில்அரசு என்ற பதமோ அல்லதுமுதலாளித்துவம் என்ற பதமோ இரண்டுமே ஒரு மார்க்சிச அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. அராஜகவாதத்தின் (Anarchists) அரசியல் அகராதியில்அரசு முதலாளித்துவம் என்பது பொதுவான ஒரு பண்புப்பெயராக பயன்படுத்தப்படுகிறது. அரசு அதிகாரத்தை பயன்படுத்துவது என்பதே - இதில் பலவந்தம் ஓரளவுக்கு இருக்கும் - “முதலாளித்துவம் என்பதாக கண்டிக்கப்படுகிறது, அரசின் வர்க்க குணம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இந்த பிரயோகத்தில் முதலாளித்துவம் என்பது வெறுமனே ஆதிக்கத்தையும் பலவந்தத்தையும் மட்டுமே குறிப்பதாக இருக்கிறது. 1917 அக்டோபரில் ஸ்தாபிக்கப்பட்ட ஆட்சிஅரசு முதலாளித்துவ ஆட்சி என்பதான கூற்று அராஜகவாதிகளால் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கையிலெடுத்த உடனேயே எழுப்பப்பட்டு விட்டது. அரசின் எந்த வடிவமாக இருந்தாலும் மேலாதிக்கம் இருக்கும், அத்துடன் அந்த அரசின் சமூகப் பொருளாதார குணாம்சத்தைப் பற்றி இவர்கள் கவலை கொள்ளவில்லை, எனவே இத்தகைய பகுப்பாய்வுக்கு நம்பகமான எந்தவொரு வழியிலும் ஆதாரமளிக்காமல் அரசின் குணாம்சத்திற்குமுதலாளித்துவம் என்கிற அடைமொழியை இவர்கள் சேர்த்துக் கொண்டனர்

இவ்வாறாக சோவியத் ஒன்றியம்அரசு முதலாளித்துவ வகையானது அல்லது சுரண்டல் சமூகத்தின் பிறிதொரு வடிவம் என்ற குற்றச்சாட்டு ட்ரொட்ஸ்கிக்கு பரிச்சயமில்லாத விடயமல்ல. சோவியத் பொருளாதாரத்திற்கான ஒரு விளக்கமாக, அதை அத்தனை தீவிரமாக எடுத்துக் கொள்வதற்கு அவர் விரும்பவில்லை. அரசு முதலாளித்துவதத்துவத்தில் மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தின் நிர்ணயவகைகள் கைவிடப்பட்டு விஞ்ஞானபூர்வமற்ற விவரிப்பு வார்த்தைப் பிரயோகத்தைக் கொண்டு இடம்பெயர்க்கப்பட்டன. இத்தத்துவத்தில் பொருளாதார அவசியமென்னும் கூறு இடம்பெயர்க்கப்பட்டு முற்றிலுமாய் அரசியல் அகநிலைவாதத்தின் அதீத வடிவத்தைக் கொண்டு நிரப்பப்பட்டிருந்தது. ஆனால் ரிச்சி மற்றும் பேர்ண்ஹாமின் வாதங்களில் வெளிப்பட்ட மார்க்சிச வரலாற்று முன்னோக்கின் மீதான அடிப்படையான திருத்தலை ட்ரொட்ஸ்கி தீவிரமாய் கருத்திலெடுத்துக் கொண்டார். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தின் மீதான மார்க்சிச மதிப்பீட்டை மறுப்பது தான் ரிச்சி மற்றும் பேர்ண்ஹாம் நிலைப்பாடுகளின் இருதயத்தானத்தில் இருந்தது. ட்ரொட்ஸ்கி எழுதினார்:

போலி-மார்க்சிசத்தின் பிரமை விலகிய மற்றும் மிரட்சியுற்ற பிரதிநிதிகளின் வேறுபட்ட வகைப்பட்ட அனைவருமே, தலைமையின் திவால்நிலை என்பது பாட்டாளி வர்க்கம் அதன் புரட்சிகரப் பயணத்தை பூர்த்தி செய்யும் திறனற்று இருப்பதையேபிரதிபலிக்கிறது என்ற அனுமானத்தில் இருந்தே முன்செல்கின்றனர். நமது எதிரிகள் அனைவருமே இந்த சிந்தனையை தெளிவுற வெளிப்படுத்துவதில்லை, மாறாக அவர்கள் அனைவருமே - அதி இடதுகள், மையவாதிகள், அராஜகவாதிகள், அத்துடன் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக-ஜனநாயகவாதிகள் பற்றிச் சொல்லவும் வேண்டாம்- தோல்விகளுக்கான பொறுப்பினை தம்மிடம் இருந்து பாட்டாளி வர்க்கத்தின் தோள்களுக்குக் கடத்துகிறார்கள். துல்லியமாக எந்த நிலைமைகளின் கீழ் பாட்டாளி வர்க்கத்தால் சோசலிச புரட்சியை சாதிக்க இயலும் என்பதை இவர்களில் எவருமே சுட்டிக்காட்டுவதில்லை

தோல்விகளின் காரணம் பாட்டாளி வர்க்கத்தின் சமூகப் பண்புகளிலேயே தான் வேரூறியிருக்கின்றது என்பதை உண்மை என்று நாம் ஏற்றுக் கொள்கின்ற பட்சத்தில், நவீன சமூகத்தின் நிலை நம்பிக்கையற்றதாக இருக்கும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். [7]

:அக்டோபர் புரட்சியுடனான அத்தனை தொடர்புகளையும் முறித்துக் கொண்ட நிலையில் நடுத்தர-வர்க்கத்தின் பரந்த புத்திஜீவி அடுக்குகளுக்குள்ளாக வலுப்பெற்றுக் கொண்டிருந்த சமூக மனோநிலைகளை ட்ரொட்ஸ்கி அடையாளங்கண்டார். 1939-40 இல் பேர்ண்ஹாமும் சட்மனும் வெளிப்பாடு தந்த அவநம்பிக்கையானது, ’இடது குட்டி-முதலாளித்துவ புத்திஜீவி அடுக்கு மார்க்சிசத்துக்குள்ளான ஒரு குறிப்பிட்ட அரசியல் போக்குடன் (அதாவது ட்ரொட்ஸ்கிசத்துடன்) மட்டுமல்லாது மாறாக சோசலிசப் புரட்சியின் ஒட்டுமொத்த முன்னோக்குடன் மற்றும் இன்னும் சமூக முன்னேற்றத்தின் சாத்தியத்துடனும் கூட முறித்துக் கொள்வது என்ற ஒரு விரிந்து பரந்த சமூக நிகழ்போக்கினை முன்கணித்தது.

குட்டி முதலாளித்துவ விரக்தியின் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பிரகடனங்கள் அனைத்திலும் மிகவும் நன்கறிந்த படைப்பு என்றால் அது சந்தேகத்திற்கிடமில்லாமல் பிராங்பேர்ட் பள்ளியின் தத்துவாசிரியர்களான மாக்ஸ் ஹோர்கெய்மர் மற்றும் தியோடர் அடோர்னோவின் அறிவொளியின் இயங்கியல் என்கின்ற படைப்புத்தான். அறிவொளி, பகுத்தறிவு, மற்றும் தொழில்நுட்பத்தின் தீய பின்விளைவுகளாகக் கூறப்பட்டவை ஆகியவை மீது இந்த ஆசிரியர்கள் தொடுத்த தாக்குதல் இடது புத்திஜீவிகளின் ஒரு ஒட்டுமொத்த தலைமுறையின் மீதும் பெரும் வீச்சுடனான செல்வாக்கை செலுத்த இயலுவதாக இருந்தது. ஆனால் அவர்களது படைப்பின் தாக்கம் என்பது அதன் அசல் தனித்துவத்தில் இருந்து எழுந்ததல்ல. சொல்லப் போனால் அவர்கள் எழுதியதில் கொஞ்சம் தான் குறிப்பான தனித்துவமானதாக இருந்தது. பதிலாக, அறிவொளியின் இயங்கியல் குட்டி-முதலாளித்துவ புத்திஜீவித் தட்டின் பரந்த அடுக்குகளிடையே வியாபகம் பெற்றிருந்த மனோநிலைகளுக்கு வார்த்தைவடிவம் கொடுத்திருந்தது.

அறிவொளியின் இயங்கியல் தோற்றமளித்த ஏறக்குறைய அதேநேரத்தில் தான், SWP இன் முன்னாள் உறுப்பினரும், தொழிலாளர்கள் கட்சிக்குள் சட்மனைப் பின்பற்றி சென்றவருமான டுவைட் மெக்டொனால்ட், “மனிதன் தான் வேர்” (The Root is Man) என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினார். போருக்குப் பிந்தைய புத்திஜீவிகளிடையே மிகவும் பரவலாகி விடக் கூடிய சடவாத-விரோத மற்றும் மார்க்சிச-விரோத கருத்தாக்கங்களை எந்த மட்டத்திற்கு மெக்டொனால்டின் வாதங்கள் முன்னெதிர்பார்த்தன என்பதைக் காண அதிர்ச்சியாக இருக்கிறது

முதலாவதாக, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த குட்டி-முதலாளித்துவ புத்திஜீவியின் அச்சத்தை மெக்டொனால்ட் சற்று பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். விஞ்ஞானத்தின் முற்போக்கான செயல்பாடு மீது நம்பிக்கை வைப்பதும் சமூகத்தின் ஆன்ம நிலைக்கு எதிராக அதன் சடவாத நிலை மீது அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் தான் சோசலிசஸ்டுகள் செய்கின்ற மரணப் பிழை என்று அவர் வாதிட்டார். சோசலிஸ்டுகள் புரிந்து கொண்டிருக்கின்ற வகையில் அதனைஇடது மற்றும் வலது என்று தனித்தனி இரண்டாய் பிளந்து பார்ப்பது எல்லாம் காலாவதியான விடயம் என்று அவர் வலியுறுத்தினார். நவீன நிலைமைகளுக்கும் அதற்கும் தொடர்பு ஏதுமில்லை. மெக்டொனால்ட் அவர்முற்போக்குவாதிகள் என்றும்அதிதீவிரவாதிகள்என்றும் அழைத்தவர்களுக்கு இடையில் இருந்ததே உண்மையான பிளவு என்று எழுதினார்.  

முற்போக்குவாதிகள் யாரென்றால் நிகழ்காலத்தை மேம்பட்ட எதிர்காலத்தை நோக்கிய பாதையிலான ஒரு அத்தியாயமாகக் காண்பவர்கள்; அற விழுமியங்களைக் காட்டிலும் வரலாற்று நிகழ்போக்கின் அடிப்படையில் சிந்தனை செய்பவர்கள்; உலகத்தின் பிரதான பிரச்சினை விஞ்ஞான அறிவு பற்றாக்குறை பாதியும் அவ்வாறு பெற்றிருக்கிற அறிவினை மானுட விவகாரங்களில் பயன்படுத்தத் தவறுவது பாதியுமே என்று நம்புபவர்கள்; எல்லாவற்றுக்கும் மேல், இயற்கை மீதான மனிதனின் நிபுணத்துவம் அதிகரிப்பது உள்ளபடியே நல்ல விடயம், அதை அணுக் குண்டுகள் போன்று மோசமான முடிவுகளுக்குப் பயன்படுத்துவது வக்கிரம் என்று கருதுபவர்கள். கம்யூனிஸ்டுகளில் (”ஸ்ராலினிஸ்டுகள்”) தொடங்கி நமது புதிய ஒப்பந்தக் கட்சியினர்- New Dealers-, பிரிட்டிஷ் தொழிற் கட்சியினர், மற்றும் ஐரோப்பிய சோசலிஸ்டுகள் வழியாக, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் போன்ற சிறு புரட்சிகரக் குழுக்கள் வரையிலும் இன்னும் இடது என்று அழைக்கப்பட்டு வருவதன் பெரும் பகுதியை ஓரளவுக்கு இந்த வரையறை உட்கொணர்ந்து விடுகிறது என்று நினைக்கிறேன்.

"தீவிரமயமானவர்கள் இன்னும் சொற்பமான எண்ணிக்கையில் இருப்பவர்கள் - அநேகமாய் அராஜகவாதிகள், மனச்சாட்சியுடன் ஆட்சேபிப்பவர்கள் மற்றும் என்னைப் போன்ற ஓடுகாலி மார்க்சிஸ்டுகள் - இவர்கள் முற்போக்கு என்ற கருத்தை நிராகரிப்பவர்கள்; விடயங்களை அவற்றின் இப்போதைய அர்த்தம் மற்றும் விளைவினைக் கொண்டு தீர்மானிப்பவர்கள்; மானுட விவகாரங்களில் நம்மை வழிநடத்துவதற்கான விஞ்ஞானத்தின் திறன் மிகைமதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது என்று கருதுபவர்கள்; எனவே அரசியலின் அறநெறி அம்சத்தின் மீது வலியுறுத்துவதன் மூலமாக இந்தச் சமநிலையை சீர்செய்ய விழைபவர்கள். அவர்கள், அல்லது நாங்கள், இயற்கையின் மீதான மனிதனின் நிபுணத்துவத்தின் வளர்ச்சி என்பது மனிதனின் வாழ்வில் இன்று வரை அது ஏற்படுத்தியிருக்கக் கூடிய உண்மையான விளைவுகளின் அடிப்படையில் நல்லது அல்லது கெட்டது என்று தீர்மானிக்கப்படுவதற்கான ஒரு வெளிப்படையான பிரச்சினை என்று கருதுவதோடு, தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மனிதனைச் சரிசெய்து கொள்வதைக் காட்டிலும் தொழில்நுட்பத்தை மனிதனுக்கு ஏற்றவாறு சீர் செய்து கொள்வதை - அதனால் தொழில்நுட்பரீதியான முன்னேற்றத்தில் கொஞ்சம் பின்தங்க நேரினும் கூட - ஆதரிக்கிறார்கள். பலசமயங்களில் குற்றம்சாட்டப்படுவதைப் போல உண்மையில் நாம் விஞ்ஞான வழிமுறையைநிராகரிப்பதில்லை”, மாறாக அது உருப்படியான பலன் தரக் கூடிய எல்லை என்பது இப்போது கற்பனை செய்து கொள்ளப்பட்டிருப்பதை விடவும் குறுகலானது என்று கருதுபவர்கள். முன்னாளில் இடதுகளின் இலக்காக இருந்த மானுட விடுதலைக்காகப் போராடுவதற்கு நிற்கத்தக்க உறுதியான களம் வரலாற்றின் களம் அல்ல மாறாக மார்க்ஸ், சோசலிஸ்டுகள் இடையே நாகரிகமல்ல என்பதாக ஆக்கிவிட்டிருக்கக் கூடிய வரலாறு அல்லாத விழுமியங்களின் (சத்தியம், நீதி, அன்பு, இன்ன பிற)களமே என்று நாங்கள் கருதுகிறோம். [8]

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்தின் தொழிலாள வர்க்க விரோதப் பாதையை முன்கணித்த மெக்டோனால்ட் புத்தகத்தின் இன்னொரு பகுதிபாட்டாளி வர்க்கப் புரட்சியெனும் கானல்நீர் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு மேம்பட்ட சமுதாயத்தைக் கொண்டுவருவதற்கு மார்க்ஸ் திரும்பியது தொழிலாள வர்க்கத்தை நோக்கியே. அவரைப் பின்பற்றுபவர்களும் இன்னமும் அதேதிசையில் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏறக்குறைய எந்தவொரு மார்க்சிச வெளியீடுகளிலும் வருகின்ற தொழிலாளர்கள் பற்றிய செய்திகளை பற்றிய பார்வை எடுத்துக் காட்டும். சமூகத்தின் அதிகமாய் சகிக்கத்தக்க வழிகளிலான எந்தவொரு மறுஉருவாக்கத்திலும் தொழிலாள வர்க்கம் நிச்சயமாக ஒரு அம்சமாக இருக்கும் என்கின்ற போதிலும் கூட, மார்க்ஸ் அது என்ன அம்சம் என்று கருதினாரோ அந்த அம்சமாக அது இப்போது இல்லை, ஒருபோதும் இருந்ததில்லை என்று சொல்வதற்கும் கூட சாத்தியமிருக்கிறது, என்பதை நாம் உணர்ந்து கொள்வதற்கான நேரமிது என்றே நான் நினைக்கிறேன். இதற்கான ஆதாரம் பரிச்சயமானது தான், அநேக மார்க்சிஸ்டுகள் ஏறக்குறைய ஒவ்வொரு விடயத்தையுமே விரிவாக ஒப்புக் கொள்வர். ஆயினும் அதில் இருந்து தேற்றம் செய்யத்தக்க தர்க்கரீதியான ஆனால் மனதிற்கினிமை தராத முடிவுகளை வரைவதில் இருந்து அவர்கள் பின்வாங்கிக் கொள்கின்றனர், அது புரிந்து கொள்ளக் கூடியது தான்

பாட்டாளி வர்க்கப் புரட்சி ஒரு போதும் நடந்திருக்கவில்லை என்பதே அது பற்றிய மிக வெளிப்பட்டதான உண்மை ஆகும். பாட்டாளி வர்க்கப் புரட்சி என்பது 1900 இல் அது இருந்ததைக் காட்டிலும் இன்று வரலாற்றுச் சாத்தியம் இன்னும் குறைந்ததாக இருக்கிறது. இவ்வாறு மக்டொனால்ட் எழுதுகின்றார். [9]

முற்போக்கு என்பதை நிராகரிப்பதும் தொழிலாள வர்க்கம் நவீன முதலாளித்துவ சமுதாயத்திலான மைய புரட்சிகர சக்தியாக இருப்பதை மறுதலிப்பதும் அடுத்து வந்த தசாப்தங்களில் குட்டி முதலாளித்துவ இடது அரசியலின் அடிப்படைக் கோட்பாடு மற்றும் கருப்பொருளாய் ஆனது. மார்க்யூஸ், துனாயேவ்ஸ்கயா மற்றும் எண்ணற்ற சமகால அராஜகவாத, பின் அராஜகவாத, மற்றும் பின் கட்டமைப்பியப் போக்குகளது எழுத்துகளில் இவை அபிவிருத்தி செய்யப்பட்டதையும் திரும்பத் திரும்பக் கூறப்படுவதையும் காண்கிறோம்.

மெக்டொனால்ட், ஒரு புத்திஜீவியாக அல்லது தத்துவாசிரியராக, முக்கியமான சிந்தனையாளர் அல்ல. உண்மையில் ட்ரொட்ஸ்கி ஒரு முறை, மெக்டோனால்டுக்கு முட்டாள்தனத்தைப் பராமரிக்கும் உரிமை இருக்கிறது, ஆனால் அவர் அம்முன்னுரிமையை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டார். ஆயினும் மெக்டோனால்ட் புத்திஜீவியா என்பது இங்கு பிரச்சினை அல்ல. ஆனால் எந்த அளவுக்கு அவர் முன்னெடுத்த நிலைப்பாடுகள் இன்னும் மிகத் தேர்ந்த புத்திஜீவிகளது எழுத்துகளில் எதிரொலிக்கிறது என்பது தான். ஹோகெய்மர் மற்றும் அடோர்னோவின் கட்டுரைகள் இன்னும் மிகக் கூடுதலாய் சிந்தனையை தூண்டுபவையாய் இருக்கின்றன, அவர்களின் மெய்யியல் கல்வி மிக ஆழம் வாய்ந்ததாக இருந்தது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனாலும் அவர்களது அறிவொளியின் இயங்கியலில் முன்னெடுக்கப்பட்ட சிந்தனைகள் மெக்டோனால்டின் சிந்தனைகளுடன் ஒத்து ஒலிக்கின்றன. இதே காலகட்டத்தில் துனாயேவ்ஸ்கயா, சி.எல்.ஆர்.ஜேம்ஸ் மற்றும் கார்னிலியஸ் கஸ்டோரியாடிஸ் போன்றஅரசு முதலாளித்துவ தத்துவாசிரியர்களிடம் இருந்து வந்த எழுத்துக்கள் தொடர்பாகவும் இதையே கூற முடியும். கார்னிலியஸ் ஸ்தாபகராய் இருந்த Socialisme ou Barbarie என்ற பிரெஞ்சு இதழ் பின் நவீனத்துவ சிந்தனையின் அபிவிருத்தியில் கணிசமான செல்வாக்கினைச் செலுத்துவதாக இருந்தது.

பின்வந்த அரசியல் அபிவிருத்திகளின் வெளிச்சத்தில் அவர்களது எழுத்துகளை வாசிக்கும்போது எத்தனை குறுகிய பார்வை கொண்டதாகவும் மூடத்தனமாகவும் அவை இருந்தன என்பதைக் காண ஒருவருக்கு அதிர்ச்சியாகத் தோன்றும். சோவியத் ஒன்றியத்தைப் பற்றிய அவர்களது ஆய்வுகளில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை விடவும் மிகவும் சக்திவாய்ந்ததாக அவர்களுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. அரசியல் புரட்சிக்கான ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கினை நகைப்பிற்குரியதாகக் கூறி அவர்கள் நிராகரித்தனர். அவர்களுக்கு சோவியத் அதிகாரத்துவமானது மார்க்சிசம் எதிர்பார்த்திராத ஒரு புதிய சக்திவாய்ந்த சமூக சக்தியைக் குறித்தது. கஸ்டோரியாடிஸ் இதைப்பற்றி பின்வருமாறு எழுதினார்:

:அதிகாரத்துவம் போரில் இருந்து பலவீனப்பட்டதாய் அல்லாமல் மாறாக கணிசமாய் வலுப்பெற்று வெளிவந்தது என்கிற, அது கிழக்கு ஐரோப்பா அனைத்திலும் தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது என்கிற, அத்துடன் அனைத்து அம்சங்களிலும் ரஷ்ய ஆட்சியை ஒத்திருந்த ஆட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரவணைப்பின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருந்தன என்ற உண்மையானது, ஒருவரை, அதிகாரத்துவத்தைஒரு ஒட்டுண்ணி தட்டாகக் காணாமல் மாறாக மேலாதிக்கமிக்க மற்றும் சுரண்டல்மிகுந்த வர்க்கமாக - தவிரவும் இதன் நிரூபணம் பொருளாதார மற்றும் சமூகவியல் மட்டத்தில் ரஷ்ய ஆட்சி குறித்த ஒரு புதிய பகுப்பாய்வினால் அனுமதிக்கப்பட்டது - காண்பதற்கே தவிர்க்கவியலாமல் இட்டுச் சென்றது.[10]  

தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக ஏற்காமல் நிராகரித்ததற்குத் துணையாக அதிகாரத்துவத்திற்கு ஒரு தனித்துவமான வரலாற்றுப் பாத்திரத்தை கொடுப்பதும் நடந்தது. தனது முத்திரைகளான ஆணவம் மற்றும் சிடுமூஞ்சித்தனத்துடன் கஸ்டோரியாடிஸ் எழுதினார்:

சத்தியத்திற்கான சான்று திருவெளிப்பாடு என வேதத்தில் கூறப்படுகின்றது; திருவெளிப்பாடு நிகழ்ந்திருக்கிறது என்பதற்கான சான்று வேதம் அவ்வாறு சொல்கிறது என்பது தான். இது தன்னைத் தானே உறுதி செய்து கொள்கின்ற ஒரு அமைப்புமுறை. உண்மையில் மார்க்சின் படைப்புகள் அதன் நோக்கத்திலும் சரி உணர்விலும் சரி பின்வரும் உறுதிப்பாட்டில் தான் நிற்கிறது: உலகை மாற்றும் புள்ளியில் இருக்கின்ற புரட்சிகர வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் இருக்கிறது, மற்றும் வெளிப்படுத்திக் கொள்கிறது. அவ்வாறு அது இருக்காதபோது, அது உண்மையில் அவ்வாறே இல்லாதுள்ளது,  மார்க்சின் எழுத்துக்கள் என்பது அவர்களின் புரட்சிகர உருமாற்றத்தின் முன்னோக்கில் இருந்து சமூகத்தையும் வரலாற்றையும் சிந்திக்க முனைகின்ற ஒரு (சிக்கலான, கடினமான மற்றும் பெரும் குழப்பமான) முயற்சியாக மறுபடியும் ஆகிறது. எல்லாவற்றையும் நாம் நமது சொந்த சூழ்நிலையில் இருந்து முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும், இதில் மார்க்ஸ் மற்றும் பாட்டாளி வர்க்க வரலாறும் நிச்சயமாக மூலபாகங்களாக இருப்பார்கள். [11]

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு குட்டி முதலாளித்துவ புத்திஜீவித் தட்டின் பல்தரப்பட்ட அடுக்குகளுக்குள்ளாக பெருமளவில் சுய-நனவுடனான சடவாத-விரோத, மார்க்சிச விரோத, ட்ரொட்ஸ்கிச விரோத, சோசலிச-விரோத மற்றும் தொழிலாள வர்க்க விரோதக் கண்ணோட்டம் அபிவிருத்தியடைவதைக் காண்கிறோம். குறிப்பாக அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் முதலாளித்துவ ஆட்சி மறுஸ்திரம் செய்யப்பட்டதாலும், அத்துடன் சோவியத் அதிகாரத்துவம் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டு விட்ட நிலையிலும், குட்டி முதலாளித்துவத் தட்டானது போருக்குப் பிந்தைய ஒழுங்கில் தனது சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்கு மிக உகந்த வகையில் தத்துவார்த்தக் கருத்துகளை அபிவிருத்தி செய்வதற்கும் அரசியல் வேலைத்திட்டத்தை விரிவாக்குவதற்கும் முனைந்தது. இந்த சமூக, அரசியல் மற்றும் புத்திஜீவித்தன நிகழ்முறை நான்காம் அகிலத்திற்குள்ளாகக் கண்ட வெளிப்பாடு தான் 1949க்கும் 1953க்கும் இடையில் பப்லோவாதம் கண்ட எழுச்சியாகும்.

மினர்வா ஆந்தை அந்தியில் பறக்கிறது என்றார் ஹேகல். வரலாற்று அபிவிருத்தியின் ஒரு முன்னேறிய கட்டத்தில் தான் நான்காம் அகிலத்திற்குள்ளாக திருத்தல்வாதத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்த சமூக சக்திகளை 1950கள் மற்றும் 1960களில் சாத்தியமானதைக் காட்டிலும் மிக மிகத் துல்லியமாக ஒருவரால் அடையாளம் காண முடிகிறது. அது ஏதோ சில குழம்பிய மனிதர்கள் துரதிர்ஷ்டவசமாக எடுத்த அரசியல் பிழைகள் அல்ல. மாறாக, மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தின், அதாவது புரட்சிகர மார்க்சிசத்தின் அரசியல் வெளிப்பாட்டின், மிக முக்கியமான எதிர்ப்பாளர்களில் மிக முக்கியமானவர்களை மட்டும் குறிப்பிடுவதானால் மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேலின் தத்துவார்த்த மற்றும் அரசியல்பிழைகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அபிவிருத்தியுற்ற சமூகப் பொருளாதார நிகழ்முறைகளின் வெளிப்பாடாக எழுந்ததாகும். பப்லோவாதம் என்று அறியப்பட்ட போக்கின் மூலமாக, குட்டி முதலாளித்துவமானது தனது சொந்த நலன்களின் பேரில் நான்காம் அகிலத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றவும் அதன் பெருமையைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் முயற்சி செய்தது. கனன்பகிரங்கக் கடிதம் வெளியிட்டது, பப்லோவாத சர்வதேசச் செயலகத்துடன் முறித்துக் கொண்டது மற்றும் 1953 நவம்பரில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது ஆகியவை உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் கலைக்கப்பட்டு விடாமல் தற்காத்துக் கொள்வதற்கு அத்தியாவசியமான ஒரு நடவடிக்கையாக இருந்தது

1953 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் நான்காம் அகிலத்திற்குள்ளாக ஒரு 32 ஆண்டு கால உள்யுத்தத்தைத் தொடங்கி வைத்தது. இதில் உலக அளவில் செயல்படுகின்ற உண்மையான சமூக சக்திகளின் நலன்கள் சம்பந்தப்பட்டிருந்தன, அத்துடன் இந்தப் போராட்டமானது தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகரப் பாதையில் வழுவாது நின்றவர்களுக்கு சாதகமற்று நிலவிய புற நிலைமைகளின் கீழ் நிகழ்த்தப்பட்டது என்கிற உண்மையில் இருந்து ட்ரொஸ்கிசப் பாதுகாவலர்கள் எதிர்கொண்ட தீவிரமான சிரமங்களைப் புரிந்து கொள்ளலாம். சம்பந்தப்பட்டிருந்த சர்வதேச சக்திகள் எவை என்பதை நினைவில் வையுங்கள்: சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் அதிகாரத்தில் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகள், சீனாவின் மாவோவாத ஆட்சி, “மூன்றாம் உலகத்தின் முதலாளித்துவ தேசிய இயக்கங்கள், மற்றும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், அத்துடன் பல்கலைக்கழகங்களிலும் மற்றும் வேகமாக விரிவடைந்து செல்வதும் ஓரளவுக்கு சலுகைகள் கொண்டதுமாய் இருந்த உயர் ஊதிய உத்தியோகங்களிலும் இருந்த குட்டி முதலாளித்துவ அடுக்கு என்பவையே அவை.

அனைத்துலகக் குழுவிற்குள்ளாக மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கன்னை ஒரு சிறு சிறுபான்மைக் குழுவாகக் குறைந்திருந்தது. நான்காம் அகிலத்தின் அநேகப் பிரிவுகள் பப்லோவாதிகளைப் பின்பற்றிச் சென்றது மட்டுமல்ல அவை தங்களை ஸ்ராலினிசம் மற்றும் இடது குட்டி முதலாளித்துவத் தீவிரவாதத்திற்குள்ளாகக் கரைத்துக் கொள்ளவும் செய்தன. அநேக குரோதமான அரசியல் சக்திகளால் செலுத்தப்பட்ட அழுத்தத்தை எதிர்த்து நின்றபோதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடர்ந்து பெருமளவில் ஸ்திரமற்றே இருந்தது.

தனிமனித அடையாளம் மற்றும் வாழ்க்கைமுறையை மையமாகக் கொண்ட 1980கள், 1990கள், மற்றும் 2000களின்போலி-இடது அரசியல் என்று இன்று நாம் சரியாக வரையறை செய்பவை பலவும் 1950கள் மற்றும் 1960களில் பப்லோவாதம் மற்றும் குட்டி முதலாளித்துவ இடதுகளிலுள் இருந்தே எழுந்தன. இந்த சகாப்தமே ஃபிராய்ட் மற்றும் உளவியல், குறிப்பாக மார்க்கூஸ அவற்றுக்குப் பொருள்விளக்கம் அளித்த வகையில், மார்க்ஸ் மற்றும் சடவாதத்திற்கான ஒரு மாற்றாகப் போற்றப்பட்ட ஒரு சகாப்தமாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர திறத்தினை மார்க்கூஸ அவநம்பிக்கையுடன் நிராகரித்ததானது, ஒரு சர்வவல்லமை படைத்த ஒடுக்குதல் சமூகமாக இருக்கின்ற ஒன்றுக்குள்ளாக தனிமனித விடுதலைக்கான அடிப்படையாக வர்க்கப் போராட்டத்திற்கான மாற்றுகளைத் தேடுவதற்கு ஒப்புதலளித்தது, அல்லது கோரியது என்றே சொல்லலாம். குறிப்பாக பல்கலைக்கழகங்களில் உற்சாகமான பல எடுபிடிகள் இவருக்கு கிடைத்தனர். அந்த சமயத்திலான புத்திஜீவித்தன மனோபக்குவத்தின் ஒரு நன்கறிந்த வெளிப்பாடாக 1968 இல் வெளிவந்த தியோடோர் ரோசாக்கின் ஒரு மாற்றுக் கலாச்சார உருவாக்கம் (The Making of a Counter-Culture) புத்தகத்தைக் கூறலாம். மார்க்சுக்கு எதிராக மார்க்கூஸ மற்றும் நோர்மான் பிறவுன் (Love’s Body -காதலின் உடல் எழுதியவர்) முன்னேறிச் சென்றதை ஆரவாரம் பொங்க அவர் எழுதினார்:

மார்க்கூஸவும் பிறவுனும் விடுதலை குறித்து பேசும் தொனி தனித்துவமாய் மார்க்சிச வகையல்லாததாக இருக்கிறது. மார்க்கூஸவைப் பொறுத்தவரை இது ஒருஉள, உணர்வு பகுத்தறிவை சாதிப்பது. பிறவுனைப் பொறுத்தவரை இதுயதார்த்தத்தின் ஒரு மோக உணர்வை”, ஒருடயனோசியன் ஈகோவை” (பகுத்தறிவான சக்திக்கு பதிலாக கற்பனைவாத சக்தியை முன்கொண்டுவரும் நான் என்ற முனைப்பு) உருவாக்குவது. அவர்கள் இந்த இலட்சியங்களை விளக்கிக் காட்ட முனைகின்றபோது, இருவருமே இதிகாசங்கள் மற்றும் கவிதை ஆகியவற்றின் வீரகாவியங்களை அறிமுகம் செய்ய உணர்ச்சிப் பிரவாகமாக தள்ளப்பட்டார்கள். ஆகவே அவர்கள் சமூக சித்தாந்த இலக்கியத்தில் இருந்தும் இன்னும் சமூக அறிவியல்களின் இலக்கியத்தில் இருந்தும் கூட அதிர்ச்சிகரமான ஒதுங்கலின் ஒரு தொனியை ஒலித்தார்கள்:  

இதிகாசங்கள், மதம், கனவுகள், உள்ளறிவு தான் ஃபிராய்ட் மானுட இயல்பு குறித்த தனது கருத்தாக்கத்தை கண்டுபிடிக்க தேடியலைந்த குழம்பிய குட்டையாக இருந்தன. ஆனால் இந்த கண்ணுக்குப் புலப்படாத விடயங்களுக்கு எல்லாம் மார்க்ஸ்க்கு பொறுமை இல்லை. அவர் அதற்குப் பதிலாய், மனிதனுக்கு பொருளாதார குறுஞ்சிந்தனையுள்ள மனிதனாகவும் (homo economicus) வெறும் உழைப்பாளிகளாகவும் (homo faber) தவிர வேறு எந்தப் பாத்திரத்திலும் தோன்றுவதற்கு அதிக இடமிராத பிரித்தானிய நீலப்புத்தகங்களின் தொழிற்துறை புள்ளிவிவரங்களில் உடல்வருத்தி மணிக்கணக்காய் நேரத்தை செலவிட முடிவெடுத்திருந்தார்.

மார்க்ஸ், கோபம் படைத்த அறவாதியாகவும், ஆவேசம் கனன்று சாபமிடும் ரிஷியாகவும், புலமைத்துவத்திற்காக பிரயாசப்படும் மனிதராகவும் இருந்தார். நெருக்கடியின் அழுத்ததிற்கும் வெப்பத்திற்கும் மத்தியில் பொருளாதார சுயநலவாதியாக, சுரண்டப்பட்டவனாக, மகிழ்ச்சியற்றவனாக மனிதனை விபரிப்பதைத்தவிர வேறுவிதமாக சிந்திக்க அவருக்கு வேறு எங்கு நேரம் இருந்தது? [12] 

மானுடத்தின் வருங்காலத்திற்கான தீர்மானகரமான போராட்டங்கள் வர்க்கப் போராட்டக் களத்தில் நடத்தப்பட்டிருக்கவில்லை, மாறாக மனித உடலில் தான் நடத்தப்பட்டன என்பதை ஃபிராய்ட் புரிந்து கொண்டிருந்தார் என்று ரோசாக் ஒரு இடத்தில் எழுதினார்.

1960கள் நடுத்தர வர்க்க இளைஞர்களின் கணிசமான தீவிரமயமாக்கத்தைக் கண்ணுற்றது. இந்த இளைஞர்களின் பெரும் பிரிவுகள் தம்மை சோசலிஸ்டுகள், இன்னும் மார்க்சிஸ்டுகளாகவும் கூட அடையாளம் கண்டனர். ஆனால் அவ்வாறு அவர்கள் குறிப்பிட்டது செவ்வியல் மார்க்சிசத்தில் (classical Marxism) அதற்குரிய உண்மையான அர்த்தத்தில் இருந்து மிக மாறுபட்டதாக இருந்தது. அவர்கள் தங்களை மார்க்சிஸ்டுகளாக நம்பினார்களா என்பது உண்மையில் தனியொரு விடயம். ஆனால் அவர்களுக்குத் தெரிந்திருந்ததோ இல்லையோ, செவ்வியல் மார்க்சிசத்துக்கான அவர்களது தத்துவார்த்த ஆட்சேபங்கள் எல்லாம் - இதனை அவர்கள்கொச்சை மார்க்சிசம் என்பதாகக் கூறப்பட்டதற்கான கண்டனங்களைக் கொண்டு மறைத்திருந்தனர் - வெறுமனே, மார்க்சிசம் ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சியின் வடிவத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த அரசியல் இயக்கமாக ஆன 1890வரை செல்லும் மார்க்சிசத்தின் மீது சுமத்தப்பட்ட அகநிலைக் கருத்துவாத விமர்சனங்களையே திருப்பிக் கூறின.

1968 ஆம் ஆண்டு, தீவிரமயப்பட்ட மாணவர் இயக்கத்திலான புத்திஜீவித்தன மற்றும் அரசியல் பரிணாமத்தில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நின்றது. வியட்நாமில் ஏகாதிபத்தியப் போரை எதிர்த்தும் மற்ற சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் பாரிய எதிர்ப்புப்போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக இது இருந்தது. பிரான்சில் வெடித்த மாணவர் இயக்கம் இந்தப் போராட்டங்களின் ஒரு உயர்ந்த புள்ளியாக இருந்தது. ஒரு மாணவர் வேலைநிறுத்தம் பொலிசார் சோர்போன் பல்கலைக்கழகத்தினுள் (Sorbonne) ஊடுருவ இட்டுச் சென்ற நிகழ்வுடன் 1968 இன் மே-ஜூன் நிகழ்வுகள் தொடங்கின. இந்த இரத்தம்தோய்ந்த தாக்குதல் டு கோல் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கம் பரந்தவொரு தலையீடு செய்வதற்குத் தூண்டியது. ஒரேநாள் இரவில் இந்த மாணவர் போராட்டங்கள் ஒரு பரந்த தொழிலாள வர்க்க இயக்கத்தின் முன்பாக சிறிதாகிப் போனது. தொழிலாள வர்க்கத்தின் அந்தப் பரந்த இயக்கமானது வெறுமனே டு கோலை மட்டுமல்லாது பிரெஞ்சு முதலாளித்துவத்தையே தூக்கியெறியும் சாத்தியத்தை எழுப்பியது.

குட்டி முதலாளித்துவப் போராட்டங்கள் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பீதியால் மூடிமறைக்கப்பட்டன. சிவப்புக் கொடிகள் பிரான்ஸ் முழுவதிலும் தொழிற்சாலைகளின் மீது ஏற்றப்பட்டிருந்தன. நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்துப் போயிருந்தது. ருமேனியாவுக்கு விஜயம் செய்து விட்டுத் திரும்பிய டு கோல் தனது சொந்த ஆட்சி சிதறிக் கொண்டிருப்பதைக் கண்டார். ஜேர்மனியின் பாடன் நகரில் நிறுத்தப்பட்டிருந்த தனது தளபதிகளுடன் விவாதிப்பதற்காக டு கோல் ஒரு அவசரப் பயணம் மேற்கொண்டார், பாரிசுக்கு அவர்களை அணிவகுக்கும்படி செய்ய முடியுமா என்று கேட்பதற்காக. தங்களது கட்டளைகளின் கீழ் இருக்கும் துருப்புகளின் விசுவாசம் குறித்து தாங்கள் உறுதி கூற முடியாது என்று அவரது ஜெனரல்கள் அவரிடம் கூறி விட்டனர். இவ்வாறாக விடயங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான எல்லாமே தொழிற்சங்கக் கூட்டமைப்பை (CGT) தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்த பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ராலினிஸ்டுகளைச் சார்ந்தே இருந்தது. பொது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவர்களது முதல் முயற்சி தோல்வியடைந்தது. CGT இன் தலைவரான சார்ல்ஸ் செகுய் (Charles Séguy) மிகப் பெரும் தொழிற்சாலையான ரெனோல்ட்டில் இருக்கும் தொழிலாளர்களின் முன்னே சென்றதும், அவருக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன. இறுதியில், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் CGT கூட்டாய் காட்டிக் கொடுத்ததன் ஊடாக பொது வேலைநிறுத்தம் காட்டிக் கொடுக்கப்பட்டு, முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. பிரெஞ்சு ஆளும் வர்க்கம் ஒரு புரட்சியில் இருந்து காப்பாற்றப்பட்டது.

தொழிலாள வர்க்கம் போராட்டத்தில் இறங்கியதும், அதன் தலையீடு குட்டி முதலாளித்துவ இயக்கத்தை ஒன்றுமில்லாது செய்ததில், அவ்வியக்கம் முக்கியத்துவமற்றுப் போய்விட்டது. ஒரேநாளில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் திறன் எடுத்துக்காட்டப்பட்டது. ஆயினும் அது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் தான் தொடர்ந்தும் இருந்தது. ஆனால் அந்த அனுபவம் பிரெஞ்சு புத்திஜீவிகளின் பரந்த பிரிவுகளின் மீது ஒரு மீளமுடியாத அதிர்ச்சியின் விளைவைக் கொண்டிருந்தது. அவர்கள் அச்சத்தினால் சுருண்டனர். அவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர், “அடக் கடவுளே, நாம் எதனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம்? இங்கொன்றும் அங்கொன்றுமாய் போராட்டமா, பரவாயில்லை. ஆனால் முதலாளித்துவத்தை தூக்கியெறிவோம் என்பது? பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது? கடவுளே, பார்த்துக்கொள்ளட்டும்!” 1968 மே-ஜூனில் குட்டி முதலாளித்துவ புத்திஜீவித்தட்டிற்கு ஒரு பாதாளம் தென்பட்டு, அது அதிர்ச்சியுற்றிருந்தது. புரட்சியின் சூடான வெப்பத்தை முதுகில் உணர்ந்த இத்தட்டு வலது நோக்கிய ஒரு கூர்மையான நகர்வை மேற்கொண்டது

மிகப் பிரதானமாக ஜோன்-பிரான்சுவா ரெவெல் மற்றும் பேர்னார்ட் ஹென்றி லெவி ஆகியோரால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்ற "புதிய தத்துவாசிரியர்கள் என்பதாய் அழைக்கப்படுபவர்கள்மனித உரிமைகள் என்ற வேடமணிந்த பதாகையின் கீழ் கம்யூனிச விரோதத்தைத் தழுவிக் கொண்டனர். ஆனால் தத்துவாசிரியர்களின் இன்னொரு குழு - இவர்களில் சிலர் ஸ்ராலினிசத்தாலோ அல்லது Socialisme ou Barbarie உடனான தொடர்பினாலோ தத்துவார்த்த பக்குவப்படுத்தப்பட்டிருந்தனர். மார்க்சிசன் மீதான தனது மறுதலிப்பை பின்நவீனத்துவத்தின் புத்திஜீவித்தன நிகிலிய (nihilistic formulations) (நிராகரிப்புவாதம் வாழ்வில் தவிர்க்கமுடியாத விடயம் என்னும் தத்துவம்) சூத்திரமாக்கலால் நியாயப்படுத்தினர்.

தங்களை இடதுகளாக அடையாளம் காட்டிக் கொண்ட போக்குகளும் கூட செவ்வியல் மார்க்சிசத்தை, அதிலும் குறிப்பாக, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் மீதான அதன் வலியுறுத்தலை மறுதலிப்பதில் உறுதியாக நின்றனர். சமகாலபின் கட்டமைப்பிய அராஜகவாதத்தின் தத்துவாசிரியரான சால் நியூமேன் ஒப்புக் கொள்கிறார்: “1968 மேயில் இருந்து எழுந்த இந்தப் புதிய இடதானது ஒரு பின்-மார்க்சிச இடதாக இருந்தது அல்லது குறைந்தபட்சம் மார்க்சிச-லெனினிச தத்துவத்தின் முக்கியமான கோட்பாடுகளில் பலவற்றை, குறிப்பாக கட்சியின் மத்திய முக்கியத்துவம், இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாதத்தின் உண்மை மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் உலகளாவிய மற்றும் அடிப்படையான நிலை ஆகியவற்றை, கேள்விக்குட்படுத்துவதாக இருந்தது.”[13]

ரஷ்யப் புரட்சிக்கு பின்னர் நடந்த தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய நீண்டதொரு இயக்கத்திற்கு மத்தியில் இவ்வாறு தொழிலாள வர்க்கத்தை நிராகரிப்பது அபிவிருத்தியுற்றதென்பது அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா முழுவதிலும் தொழிலாள வர்க்க போர்க்குணம் கோலோச்சியது. 1968க்கும் 1975க்கும் இடையிலான தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த இயக்கமென்பது புரட்சிகரத் தலைமையெனும் முக்கியமான பிரச்சினையை முன்னெப்போதையும் விடவும் மிகக் கூர்மையாக முன்வைத்தது. ஆனால் சரியாக இந்தத் தருணத்தைத் தான், குட்டிமுதலாளித்துவ இடது, மார்க்சிசத் தத்துவமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முன்னோக்கும் தோல்வியுற்றதைப் பிரகடனப்படுத்த சரியான தருணமாகத் தெரிவு செய்து கொண்டது. பிரான்சின் நன்கறிந்த இடது தத்துவாசிரியரான ஆண்ட்ரே கோர்ஸ் (Andre Gorz) தொழிலாள வர்க்கத்திற்கு விடைகொடு!” (Farewell to the Working Class!) என்ற ஆணவமான மற்றும் ஆத்திரமூட்டுகின்றதொரு தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். “பாட்டாளி வர்க்க மார்க்சிச தத்துவத்திற்கான அடிப்படையைத் தேடுவதற்கான எந்த முயற்சியும் நேர வீணடிப்பு தான் என்று அவர் அறிவித்தார்.[14] 

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ஜோன்-பிரான்சுவா லியோதார்ட் பின் நவீனத்துவ சகாப்தத்தின் வருகையை அறிவித்தார். “பாரிய கருத்தியலில்-metanarrative ஆழமான அவநம்பிக்கை என்று அதனை அவர் வரையறுத்தார். வரலாற்றை ஒரு விதியால் ஆளப்படுகின்ற ஒரு நிகழ்ச்சிப்போக்காக ஆய்வு செய்கின்ற அணுகுமுறையையே லியோதார்ட்பாரிய கருத்தியல் என்றார். மார்க்சும் ஏங்கல்சும் வரலாற்றை சடவாத கருத்தாக்கத்தை விவரிப்பதில் அபிவிருத்தி செய்யப்பட்டதே அடிப்படையானபாரிய கருத்தியலாகும். இருபதாம் நூற்றாண்டில், அனைத்துபாரிய கருத்தியல்களிலும் மிக நீடித்திருந்தது ட்ரொட்ஸ்கி அவரது ரஷ்யப் புரட்சியின் வரலாறு என்ற புத்தகத்தில்  எடுத்துக்காட்டியதுபோல், சாரிசம் தூக்கியெறியப்பட்டதானது சர்வதேச முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்து வரலாற்றுரீதியாக அத்தியாவசியமான விளைபொருளாக வெளிவந்ததால் விளங்கப்படுத்தப்படுகின்றது. இந்த ஆய்வை நிராகரிப்பதற்கு வரலாறு தொடர்பான அனைத்து சடவாத கருத்தியலின் அனைத்து முக்கியமான கூறுகளையும் தூக்கிவீச வேண்டும். புத்திஜீவித்தன வரலாற்றில் அறிஞராகத் திகழும் ஒருவர் சமீபத்தில் குறிப்பிட்டார்: “நவீனத்துவத்தின்  பின் நவீனத்துவ விமர்சனங்களின் இலக்காக மிக அநேக சமயங்களில் மிகத்தெளிவான இலக்காக -எப்போதுமே வெளிப்படையாக இருந்ததாக சொல்ல முடியா விட்டாலும்- மார்க்சிசமே இருந்திருப்பதாய் கூறலாம்.” [15]

இந்த புத்திஜீவித வரலாறு குறித்து, அதிலும் குறிப்பாக மார்க்சிசத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்தின் மெய்யியல் அடித்தளங்களை நாளுக்குநாள் வெளிப்பட மறுதலிப்பதன் மீது, செய்கின்ற ஒரு ஆய்வு நான்காம் அகிலம் கடந்து வந்திருக்கக் கூடிய அரசியல் அனுபவங்களைப் புரிந்து கொள்வதற்கு மிக முக்கியமானதாகும்.

சோசலிச தொழிலாளர் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக் கொடுத்ததற்கு எதிரான போராட்டத்தில் தான் தொழிலாளர் கழகம் (தொழிலாளர் கழகம்) அபிவிருத்தியுற்றது. இந்த வரலாற்றை மீளாய்வு செய்கையில், இந்தப் போராட்டத்தின் மையத்தில் இருந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகளை வலியுறுத்தவே நாம் விழைகிறோம். ஆயினும் அது ஒரு சமூக வெற்றிடத்தில் அபிவிருத்தி கண்டதல்ல. இந்தப் போராட்டத்தின் சமூகவியல் பகுதி ஒன்று இருந்தது. கட்சியானது - இதன் முக்கியத்துவத்தை நான் மிகைமதிப்பீடு செய்ய முடியாது - சாத்தியமான ஒவ்வொரு வழியிலும் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு தெளிந்த நோக்குநிலையைப் பராமரிக்க முனைந்தது. ஆனால் கட்சியின் ஆரம்ப வருடங்கள் அரசியல் மற்றும் சமூகப் பேதங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டதாக இருந்தது. 1970 மற்றும் 1973க்கு இடையில் தொழிலாளர் கழகத்தின் கணிசமான வளர்ச்சி என்பது தவிர்க்கவியலாமல் ஒரு கடுமையான அரசியல் நெருக்கடியை உருவாக்கியது. புதிதாக கட்சிக்கு வென்றெடுக்கப்பட்டவர்களில் பலரும் குட்டி முதலாளித்துவ தீவிரமயப்பட்ட போராட்ட இயக்கங்களின் சூழலில் இருந்து வென்றெடுக்கப்பட்டிருந்தனர். தொழிலாளர் கழகத்தின் தேசிய செயலராக இருந்த ரிம் வொல்ஃபோர்த்தே கூட, சட்மனிச இயக்கத்தில் இருந்து வந்திருந்தார்.

வியட்நாம் போருக்குப் பிந்தைய காலத்தில் குட்டி முதலாளித்துவ போர் எதிர்ப்பு இயக்கம் உருக்குலைந்து போய் விட்ட நிலையில், தொழிலாளர் கழகத்திற்குள் இருந்த சமூகப் பிளவுகளின் தாக்கங்கள் மிகவும் திட்டவட்டமானவைகளாக இருந்தன. இது ஒவ்வொரு தனிநபரின் பரிணாமமும் அவரது சமூகப் பின்னணியால் நேரடியாகத் தீர்மானிக்கப்பட்டது என்பதாக எந்த வகையிலும் சொல்வதல்ல. ஆயினும் 1973-74 இல் உறுப்பினர் எண்ணிக்கையில் கடுமையான இழப்பு - வொல்ஃபோர்த் மற்றும் அவரது துணைவியாரான நான்சி ஃபீல்ட்ஸின் சீர்குலைவான நடத்தையால் இது நிச்சயமாக இன்னும் மோசமடைந்தது - ஒரு பரந்த சமூக மற்றும் அரசியல் நிகழ்முறையைப் பிரதிபலித்தது. 1960களில் தீவிரமயப்படுத்தப்பட்டிருந்த நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகள் தமது பழைய பரிச்சயமான சமூகச் சூழலுக்குத் திரும்புவதற்கு விருப்பம் கொண்டு காணப்பட்டனர். இந்தப் பயணமானது அவர்களை தவிர்க்கவியலாமல் மீண்டும் முதலாளித்துவ அரசியலின் வட்டத்திற்குள் கொண்டுவந்து விட்டுவிட்டது.

வேர்கஸ் லீக் மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) இரண்டுமே நடுத்தர வர்க்கத்திற்குள்ளான வலதுசாரி நகர்வினால் ஆழமாக பாதிப்புற்றிருந்தன. ஆனால் அமெரிக்காவில், வொல்ஃபோர்த் ஓடியதால் உருவான நெருக்கடியானது, இந்த முரண்பாட்டின் கீழமைந்திருந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் முரண்பாடுகளை ஒரு முறையான ஆய்வினை செய்து வேலை செய்ததன் அடிப்படையில் வேர்கஸ் லீக்கினால் வெற்றிகொள்ளப்பட்டு விட்டது. மறுமுனையில் பிரிட்டனிலோ, அலன் தோர்னெட் உடனான மோதலில் எழுந்த அரசியல் பிரச்சினைகள் முழுமையாக ஆய்வு செய்து தீர்க்கப்படவில்லை. இவ்வாறாக, தோர்னெட் உடன் துரிதமாக அமைப்புரீதியாக கணக்குத்தீர்ப்பதன் மூலம் சரிசெய்து கொள்ளப்பட்டது என்றபோதிலும், எந்த சமூக மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு அவரது போக்கு ஒரு வெளிப்பாடாக இருந்ததோ அவை தெளிவுபடுத்தப்படவில்லை. குறிப்பாக, WRP தோர்னெட் உடனான மோதலை அதற்கு முன்வந்த பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று உள்ளடக்கத்திற்குள்ளாக பொருத்திக் காட்டத் தவறியது. இவ்வாறாக, கட்சிக்குள்ளாக வலது நோக்கி நகர்ந்து கொண்டிருந்த குட்டி முதலாளித்துவக் கூறுகளின் செல்வாக்கு தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது. இதுதான் 1985 இல் பிரிட்டிஷ் அமைப்புக்குள் வெடிப்புக்கு வழிவகுத்த WRP இன் பெரும் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாட்டில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.  

ஆயினும் 1982க்கும் 1985க்கும் இடையில் வேர்கஸ் லீக்கினால் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் விமர்சனங்கள் அனைத்துலகக் குழுவை இதற்கு தயாரிப்பு செய்திருந்தது. WRP இன் சந்தர்ப்பவாதத்தின் மீதான விமர்சனம் பிரிவுகளின் தீர்மானகரமான பெரும்பான்மையின் ஆதரவை வென்றிருந்தது. 1985 டிசம்பரில், அனைத்துலக் குழு WRP ஐ அங்கத்துவத்தில் இருந்து இடைநீக்கம் செய்தது. இவ்வாறாக, பகிரங்கக் கடித விநியோகத்துடன் நான்காம் அகிலத்திற்குள் தொடங்கியிருந்த 32 ஆண்டு கால உள்நாட்டு யுத்தம் மரபுவழி ட்ரொட்ஸ்கிசவாதிகளுக்கான வெற்றியுடன் நிறைவடைந்தது.

1985 இலையுதிர் காலத்தில் நிகழ்ந்த உடைவு அரசியல் அர்த்தத்திலும் சரி சமூக அர்த்தத்திலும் சரி தீர்க்கரமான ஒன்றாக இருந்தது. WRPக்குள்ளாக அனைத்துலகக் குழுவிற்கு எதிராய் இருந்தவர்கள் புரட்சிகர சோசலிசத்துடன் அவர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த அத்தனை அரசியல் மற்றும் தனிப்பட்ட உறவுகளையும் தீர்மானகரமாய் முறித்துக் கொள்கின்றதான நிகழ்ச்சிபோக்கில் இருந்தார்கள். WRP இன் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றி நடந்தவர்களும் சோசலிச முன்னோக்கின் பிரச்சினைகளையோ தொழிலாள வர்க்கத்தின் நலன்களையோ விவாதிப்பதில் ஆர்வமின்றி இருந்தார்கள். பண்டா மற்றும் சுலோட்டரை அடியொற்றி நடந்தவர்களிடையே ஒரு வகை வெறித்தனம் நிலவியது. இதனை நாம் காக்கும் மரபியத்தில் விவரிக்க நான் முனைந்தேன்:  

1985 அக்டோபரில், WRPக்குள்ளாக நடுத்தர வர்க்கத்தின் அடக்கி வைக்கப்பட்ட அதிருப்திகள் வெடித்தன. பிரமை விலகி கடுகடுப்புடன், எந்த வெகுமதிகளும் இன்றி பல ஆண்டு காலம் கடுமையாக உழைத்திருந்த அலுப்பு, தமது தனிநபர் சூழல்களால் உண்டான அதிருப்தி, இழந்த காலத்தை ஈடு செய்யும் கவலை, அத்துடன் புரட்சியைப் பற்றி பேசிப் பேசி அலுத்து களைத்தது ஆகியவற்றுடன் இந்த நடுத்தர வர்க்க சக்திகளின் அகநிலை ஆவேசமானது - இது பாதி ஓய்வுபெற்று விட்டிருந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் ஒரு கலவையான குழுவினால் தலைமை தாங்கப் பெற்றது - அரசியல்ரீதியாக கலைப்புவாதமாக மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கான மூலம் WRP தலைமையின் அகநிலை தவறுகளில் இல்லை மாறாக இன்னும் அடிப்படையாய் வர்க்க உறவுகளிலான புறநிலை மாற்றங்களில் தான் இருந்தது என்ற துல்லியமான காரணத்தாலேயே, கட்சியின் பெரும் பிரிவுகளுக்குள் அலையெனப் பாய்ந்த ஐயுறவுவாதம் என்பது தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள்ளான ஒரு சக்திவாய்ந்த சமூகப் போக்கின் வெளிப்பாடாக இருந்தது.[16]

1985 இலையுதிர் காலத்தில், கட்சிக்குள்ளான நிகழ்வுகளை வர்க்க ரீதியாக விளக்குவதற்கு முயற்சிகள் நடந்தபோது கிளிஃப் சுலோட்டர் கோபமுற்றார். ”மனிதர்கள் தாங்கள் எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்று விளக்குவதைக் கேட்கவே அலுப்பும் சலிப்புமாய் இருக்கிறது என்று அவர் ஒரு கட்டத்தில் கூறினார். தான் எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன் என விவாதிக்க சுலோட்டர் கட்டாயமாக விரும்பவில்லை. அதுவும் காரணத்துடன் தான். தனது கோட்பாடற்ற அரசியலுக்கான நியாயமாக அவர் 1985 இல் திறந்து விட்டபுரட்சிகர ஒழுக்கம் என்ற பதாகைதான் ஏகாதிபத்திய ஆதரவுமனித உரிமைகள் அரசியலை நோக்கிய பாலமாக அவருக்கு சேவை செய்தது. ஒரு தசாப்த காலத்திற்கு உள்ளாகவே அவரது அமைப்பின் உறுப்பினர்கள் பால்கனில் நேட்டோவின் தலையீட்டுக்கு ஒத்துழைத்துக் கொண்டிருந்தார்கள்.

1985 இல், அனைத்துலகக் குழுவிற்குள்ளான போராட்டம் அதன் உச்சகட்டத்தை எட்டிக் கொண்டிருந்த சமயத்தில் தான், எர்னெஸ்டோ லக்லாவும் சாண்டல் மவுபேயும் (Ernesto Laclau and Chantal Mouffe) மேலாதிக்கமும் சோசலிச மூலோபாயமும் (Hegemony and Socialist Strategy) என்ற தமது முக்கியமான படைப்பை முடித்திருந்தனர். முக்கியமான பப்லோவாத பதிப்பகமான வெர்ஸோ மூலம் அது பிரசுரிக்கப்பட்டது. பின்-நவீனத்துவ வட்டங்கள் பின்-கட்டமைப்பிய வட்டங்கள் (post-modernist and post-structuralist) இரண்டிலுமே இந்தப் புத்தகம் அபரிமிதமான செல்வாக்கு செலுத்தியது. அந்த சமயத்தில் அவர்களது எழுத்துகளை நாங்கள் அறிந்திருக்கவில்லை (சிலவேளை சுலோட்டருக்கும் அவர்களை தெரியாமல் இருந்திருக்கலாம்) என்றபோதிலும், லக்லா மற்றும் மவுபேயின் கருத்தாக்கங்கள் WRP இன் தத்துவார்த்த மேடையாக சேவை செய்திருக்கக் கூடும். லக்லாவும் மவுபேயும் எழுதினர்:

தத்துவார்த்தரீதியாக தொழிலாள வர்க்கத்தின் முக்கியதன்மையின் மீதும், சமூகம் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு உருமாறுவதற்கு புரட்சியின் (சிறப்பெழுத்தில் பு) பாத்திரத்தின் மீதும், அரசியலின் தருணத்தை அர்த்தமற்றதாக்கக் கூடிய ஒரு சிறப்பான ஐக்கியப்பட்ட மற்றும் ஒரே இயல்புள்ள கூட்டான விருப்பத்தின் கற்பனையான எதிர்பார்ப்பின் மீதும் தங்கியிருக்கின்ற சோசலிசத்தின் மொத்த கருத்தாக்கமுமே இப்போது நெருக்கடியில் இருக்கிறது.

மார்க்சிச தத்துவத்தின் பாசாங்குகளையும் அது செல்லுபடியாகும் பரப்பினதும் தரத்தை குறைப்பதன் மூலமாக, நாம், அந்தத் தத்துவத்தில் ஆழமாகப் பொதிந்திருக்கின்ற ஒன்றை, அதாவது தனது வகையினப்படுத்தும் முறையினால் வரலாற்றின் அடித்தளமான முக்கியத்துவத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் கைப்பற்றுவதற்கான அதன் மோனிச இலட்சியத்தை, உடைத்துக் கொண்டிருக்கிறோமா என்ன? ஆம் என்பதே பதிலாக இருக்க முடியும். ’ஒரு உலகளாவிய வர்க்கத்தின் மெய்ப்பொருளாய்வு ரீதியான முன்னுரிமையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு அறிவாராய்ச்சி சிறப்புரிமையையும் நாம் கைதுறந்தால் மட்டுமே மார்க்சிச வகையினங்களின் செல்தகைமையின் தற்போதைய தரத்தை கவனமாக விவாதிப்பது சாத்தியமாகும். நாம் இப்போது ஒரு பின்-மார்க்சிச பகுதியில் இருக்கிறோம் என்பதை இந்தப் புள்ளியில் நாம் ஒளிவுமறைவின்றி கூறியாக வேண்டும் மார்க்சிசத்தினால் விளக்கப்பட்ட அகநிலை மற்றும் வர்க்கங்களின் கருத்தாக்கத்தையோ, அல்லது முதலாளித்துவ அபிவிருத்தியின் வரலாற்றுப் பாதை பற்றிய அதன் பார்வையையோ, அல்லது முரண்பாடுகள் மறைந்து விடுகின்ற ஒரு வெளிப்படையான சமூகமாக கம்யூனிசம் குறித்த கருத்தாக்கத்தையோ இனியும் பராமரிப்பது சாத்தியமில்லாததாகும்.[17] 

கடந்த கால் நூற்றாண்டு காலம் என்பது அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் சமூகத்தின் அதீதமான துருவமயமாக்கலைக் கண்டிருக்கிறது. மக்களின் செல்வம் படைத்த 1 சதவீதத்தினரிடம் தான் மிதமிஞ்சிய செல்வம் மலைக்க வைக்கும் அளவில் குவிந்து கிடக்கிறது என்பதில் தான் பொருளாதார மற்றும் சமூக அறிஞர்களின் பிரதானக் கவனம் அமைந்து வந்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் SEP இன் முதலாம் தீர்மானம் சுட்டிக் காட்டுவதைப் போல, கடந்த சில தசாப்தங்களில் உயர் நடுத்தர வர்க்கத்தின் கணிசமானதொரு பகுதி கணிசமானதொரு செல்வத்தை பெற்றிருக்கிறது. இந்த வசதியான அடுக்கிடம் இருக்கும் செல்வத்தை செல்வம் குவிந்து கிடக்கும் ஒன்று முதல் ஐந்து சதவீதம் பேரிடம் இருக்கும் செல்வத்துடன் கொஞ்சமும் ஒப்பிட முடியாது தான். என்றாலும், தொழிலாள வர்க்கத்துடன் ஒப்பிட்டால் இந்த வசதியான அடுக்கு மிக நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கானது குட்டி முதலாளித்துவ இடதின் அடித்தளமாகத் திகழ்கின்ற ஓரளவுக்கு வசதியானதொரு சமூக அடுக்கினை காலப்போக்கில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து ஆழமான சடவாத, சித்தாந்தரீதியான மற்றும் அரசியல்ரீதியான அந்நியப்படலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் அரசியல் நிகழ்ச்சி என்பது வெறுமனே தத்துவார்த்த சீரின்மைகளின் விளைபொருள் அல்ல. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் திறனின் மீது குட்டி முதலாளித்துவ இடதுக்கு இருந்த நீண்டகால ஐயுறவுவாதமானது, அதன் கணிசமான பொருளியல் வசதி சேர்க்கையால் மேலும் உந்தப்பட்டு, புதிய மற்றும் தனித்துவமான சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் குணநலன்களைப் பெற்றிருக்கிறது. சமூகத்தின் அதிக செல்வம் படைத்த 10 சதவீதத்தினரது செல்வம் மற்றும் சலுகைகளில் சற்று உகப்பான விநியோகத்தை பெறுவதை நோக்கியே அதன் பொருளாதார நலன்கள் மேலும் மேலும் கவனம் குவிக்கின்ற நிலையிலும், அத்துடன் அது ஆளும் ஸ்தாபகத்தினால் ஒப்புதலளிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்புகளுக்குள் முன்னெப்போதும் இருந்திராத ஒரு அளவுக்கு தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டு விட்ட நிலையிலும், இந்த வசதியான இடதுகள் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு காட்டுகின்ற குரோதத்தினை இனியும் உள்ளீடற்ற போலி-சோசலிச வார்த்தை ஜாலங்களைக் கொண்டு மறைப்பதற்கு முடிவதில்லை. தொழிலாள வர்க்கத்திற்கு, புரட்சிகரப் பாத்திரம் இருக்கட்டும், சுயாதீன பாத்திரம் எதனையும் கூட மறுக்கின்ற ஒருஇடது அரசியல் வரையறைக்காக இதன் சித்தாந்தவாதிகள் பகிரங்கமாக வாதாடத் தள்ளப்பட்டிருக்கின்றனர்

மார்க்சிச தொழிலாள வர்க்கப் போராட்டத்தில் இருந்து மாறுபடுகின்றதொருஇடது அரசியலின் புதியதொரு வடிவத்திற்கு சோல் நியூமன் வெளிப்படையாக அழைப்பு விடுகின்றார்: இனியும் இது பாட்டாளி வர்க்கத்தின் மைய அகநிலையை அடிப்படையாகக் கொண்டதல்ல, எனவே, பாரம்பரியமான தொழிலாள வர்க்க அமைப்புகள் இந்தப் போராட்டங்களில் முக்கியமான வழிகளில் சம்பந்தப்பட்டுள்ளன என்கின்ற போதிலும், இந்த இயக்கம் இனியும் வர்க்கப் போராட்டத்தின் வரையறைக்குள் புரிந்து கொள்ளக் கூடியது அல்ல. [18]

அமெரிக்காவிலும் சரி சர்வதேசரீதியாகவும் சரி SEP மற்றும் அனைத்துலகக் குழுவின் அரசியல் வேலைத்திட்டம் போலி-இடதுகளின் வேலைத்திட்டத்திற்கு சமரசமற்ற வகையில் எதிரானதாகும். எங்களது அரசியல் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் மையத்தன்மையையே அடிப்படையாகக் கொண்டதாகும். முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் வெறுமனே பத்தோடு பதினொன்று அல்ல. நவீன முதலாளித்துவ சமூகத்திற்குள்ளாக அது ஒரு தீர்மானகரமான புரட்சிகர சக்தி ஆகும். தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்வதையும் அதற்குத் தலைமையேற்பதையும் நோக்கியே கட்சியின் அத்தனை முனைப்புகளும் செலுத்தப்பட வேண்டும். புரட்சிகரப் போராட்டம் நிதர்சனமானது, உண்மையில் வர்க்கப் போராட்டத்தின்வரையறைகளுக்குள் அது அபிவிருத்தியுறுகின்ற போதுதான் அதுபுரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம். இந்த அடிப்படையில் தான் வர்க்க மோதல் தீவிரமடைந்து கொண்டிருக்கும் இந்தப் புதிய காலகட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தனது செல்வாக்கைக் கட்டியெழுப்புவதற்கு SEP போராடவேண்டியிருக்கிறது.

Footnotes

1. Greta R. Krippner, Capitalizing on Crisis: The Political Origins of the Rise of Finance (Cambridge: Harvard University Press, 2011), p. 4.

2. The First Five Years of the Communist International, Vol. 1 (London: New Park, 1973), p. 138.

3. “Two Worlds,” in Collected Works, Volume 16 (Moscow: Progress, 1977), p. 311.

4. Leon Trotsky and the Development of Marxism (Detroit: Labor Publications, 1985), pp. 18-19.

5. New Parties of the Left: Experiences from Europe, by Bensaïd, Sousa, et.al (London: Resistance Books, 2011), p. 40

6. New York: The Free Press, p. 69.

7. In Defense of Marxism, (London: 1966), P. 15.

8. Dwight Macdonald, The Root is Man, Brooklyn, NY: Automedia, 1995, pp. 38-39.

9. Ibid, pp. 61-65.

10. The Castoriadis Reader (Oxford, Blackwell, 1997), p. 2.

11. Ibid, p. 28

12. Berkeley: University of California Press, 1995, pp. 98-99.

13. Saul Newman, Unstable Universalities: Poststructuralism and Radical Politics (Manchester: Manchester University Press. 2007), p. 179.

14. London: Pluto Press, 1982, p. 21.

15. David West, Continental Philosophy: An Introduction (Cambridge: Polity, 2010), p. 214.

16. David North (Detroit: Labor Publications, 1988), pp. 13-14.

17. London: Verso, pp. 2-4.

18. Unstable Universalities, p. 176.

Copyright © 1998-2012 World Socialist Web Site - All rights reserved