சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president removes country’s chief justice

இலங்கை ஜனாதிபதி நாட்டின் பிரதம நீதியரசரை அகற்றினார்

By W.A. Sunil and S. Jayanth
14 January 2013

use this version to print | Send feedback


இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, நேற்று நாட்டின் உயர் மட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை அலட்சியம் செய்தார். அவரது ஆளும் கூட்டணி, பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க மீது குற்றம் சாட்டுவதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி கண்ட மறுநாளே, அவரை பதவி விலக்குவதற்கான ஆணையை ஜனாதிபதி வெளியிட்டார். ஜனாதிபதியின் நடவடிக்கை ஒரு அரசியலமைப்பு மற்றும் அரசியல் நெருக்கடிக்கு களம் அமைத்துள்ளது.

தீர்ப்பில் கையெழுத்திடும் முன், இராஜபக்ஷ அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், பின்னர் அதே தினம் அனைத்து மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளையும் அழைத்து, முடிவை அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய முயற்சித்தார். பெரும்பாலான நீதிபதிகள் பண்டாரநாயக்க மீதான கண்டனத் தீர்மானத்தை எதிர்த்ததோடு எந்தவொரு மாற்று பிரதம நீதியரசரருடனும் வேலை செய்ய மாட்டோம் என அச்சுறுத்தினர். இந்த நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு.



குற்றச்சாட்டுக்கு எதிராக
வழக்கறிஞர் அணிவகுப்பு


பண்டாரநாயக்கவை ஆதரிக்கும் ஒரு வழக்கறிஞர்கள் குழுவான கூட்டு வழக்கறிஞர்கள், அரசியலமைப்புக்கு முரணாக அகற்றப்பட்டதை ஏற்காமல், அவர் தொடர்ந்தும் பிரதம நீதியரசராக இருப்பார்," என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ்சை தளமாகக் கொண்ட இன்டிபெண்டன்ட் ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்த, பண்டாரநாயக்கவின் வழக்கறிஞர்களில் ஒருவரான சாலிய பீரிஸ், பண்டாரநாயக்கவைப் பொறுத்தவரையில் தான் வெளியேற்றப்பட்டதன் சட்டப்பூர்வ நிலையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என  அறிவித்தார்.

பண்டாரநாயக்கவை விசாரிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஒரு பாதகமான முடிவை எடுக்க எந்த சட்ட அதிகாரமும் கிடையாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த முடிவிற்கு ஏற்ப, மேல்முறையீட்டு நீதிமன்றமானது கடந்த வாரம் பாராளுமன்ற தெரிவுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை இரத்துச் செய்தது.

எனினும், இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணி, இந்த நீதிமன்றங்களின் உத்தரவை மீறியதோடு குழுவின் அறிக்கை மீது கடந்த வியாழன் மற்றும் வெள்ளியும் ஒரு பாராளுமன்ற அமர்வை மேற்கொண்டது. குழுவின் விசாரணைகள் சட்ட செயல்முறைகளை ஏளனம் செய்வதாக இருந்தது. அரசாங்கத்தின் பெரும்பான்மை, பண்டாரநாயக்க சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவோ அல்லது போதுமான அளவிற்கு தனது பக்க வாதங்களை தயார் செய்யவோ அனுமதிக்கவில்லை. அது துரிதமாக மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு அவரை குற்றவாளியாகக் கண்டதுடன், இரண்டு குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்ததுடன் அசல் கண்டனத் தீர்மானத்தில் இருந்த 14 குற்றச்சாட்டுக்களில் எஞ்சியவற்றை புறக்கணித்தது.

குற்றச்சாட்டுக்களே சோடிக்கப்பட்டவையாக இருந்தன. மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள பொருளாதார அதிகாரங்களை திரும்பப் பெறுவதை இலக்காகக் கொண்ட திவிநெகும அபிவிருத்தி மசோதாவானது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று, பண்டாரநாயக்க தலைமையிலான உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு தீர்ப்பளித்ததை அடுத்தே, அவரை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இந்தக் கண்டனத் தீர்மானமானது ஜனாதிபதி இராஜபக்ஷவைச் சூழவுள்ள ஆளும் குழுவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் சவால் செய்யும் எந்தவொரு நடவடிக்கையையும் தடுப்பதற்காக, நாட்டின் நீதிமன்றங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவருவதாகும்.

அரசாங்கம் 155 க்கு 49 என்ற வாக்கு எண்ணிக்கையில் அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்காக அதன் பாராளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தப்படுத்திக்கொண்டது. அது லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணிக்க அனுமதித்தது. தொழிலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அனைத்து சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்த இந்த மதிப்பிழந்த கட்சிகளுக்கு, தம்மைப் புதுப்பிக்க இந்த கந்தலான முகமூடி உதவப் போவதில்லை. முன்னாள் இடதுசாரி கட்சியான நவசமசமாஜக் கட்சியின் (ந.ச.ச.க.) முன்னாள் தலைவரும் இப்போது ஒரு சிரேஷ்ட அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

எதிர்க் கட்சிகளில், ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) வாக்கெடுப்பை தட்டிக்கழிக்க முயற்சித்து, பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து அறிக்கைக்கு எதிராக வாக்களித்தது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறினார். எவ்வாறெனினும், இந்த மூன்று கட்சிகளும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்றதன் மூலம், அதற்கு போலி நம்பகத்தன்மையை கொடுத்தன.

அரசாங்கத்துக்கும் உயர் நீதிமன்றத்துக்கும் இடையிலான விட்டுக்கொடுப்பற்ற நிலைமை, இலங்கை ஆளும் உயரடுக்கினுள்ளான பிளவு கூர்மையடைவதன் வெளிப்பாடாகும். நாட்டின் உயர் மட்ட நீதிமன்றங்கள் நீண்ட காலமாக அரசியல் நியமனங்களில் பணையம் வைக்கப்பட்டு வந்துள்ளன. பண்டாரநாயக்கவும் கூட இராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டவார். அத்துடன் அவர் சமீப காலம் வரை இராஜபக்ஷவுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். ஆனால் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் வளர்ந்து வரும் சமூக பதட்டங்களின் மத்தியில், இராஜபக்ஷவால் எந்தவொரு எதிர்ப்பையும் பொறுத்துக் கொள்ள முடியாது.

இராஜபக்ஷவின் பொருளாதார உறவுகள் மற்றும் மேற்குக்கு பதிலாக சீனாவின் பக்கம் திசையமைவு கொண்ட அவரது வெளியுறவுக் கொள்கை சம்பந்தமாக முதலாளித்துவத்தின் பிரிவுகள் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளன. மேலும், ஜனாதிபதி அரசியலமைப்பையும் அதேபோல் சட்ட மற்றும் பாராளுமன்ற விதிமுறைகளையும் மீறுவதானது சமூக அமைதியின்மையின் அறிகுறிகள் பெருகிவரும் நிலைமையில் பாராளுமன்ற ஆட்சிக்கு அவப்பேறு ஏற்படுத்தும் என்று ஆளும் வட்டாரங்களில் கவலை நிலவுகிறது.

வர்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளன கூட்டமைப்பு, இந்தக் குற்றப் பிரேரணையானது "ஒரு பெரும் அரசியலமைப்பு நெருக்கடிக்கு வழிவகுக்கும்", அது "நாட்டின் பொருளாதார மற்றும் வணிகச் சூழலலுக்கு சிறந்த நலனைத் தரப்போவதில்லை"
என கடந்த வாரம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குற்றப் பிரேரணை மீதான எதிர்ப்புகள், அரசாங்கத்தின் இடைவிடாத சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் பரந்த இயக்கத்துக்கு கதவைத் திறந்து விடும் என்று கூட்டுத்தாபன உயரடுக்கு பீதிகொண்டுள்ளது. அத்தகைய ஒன்று நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக நவசமசமாஜ மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்ற முன்னாள் இடது அமைப்புக்களின் ஆதரவுடன் எதிர் கட்சிகள் எல்லாவிதத்திலும் செயற்படுகின்றன.

பாராளுமன்ற விவாதத்தின்போது, வழக்கறிஞர்கள் குற்றப் பிரேரணைக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள், எதிர் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களுடன் சேர்ந்து, இராஜபக்ஷ குற்றப் பிரேரணை நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கோரி வியாழனன்று ஜனாதிபதி செயலகம் வரை ஊர்வலமாக செல்ல முயன்ற போதிலும், பிரமாண்டமான பொலிஸ் அணிதிரட்டல் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கியுடன் ஆயுதபாணியாக்கப்பட்ட போலீஸ் கமாண்டோக்கள் உட்பட ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு நிலைகொண்டிருந்தனர். அரசாங்கம் உள்ளூர் ஆளும் கட்சி உறுப்பினர் குழுக்களையும் குண்டர்களையும் மற்றும் சிவில் உடையில் இருந்த பாதுகாப்பு படையினரையும் அணிதிரட்டி இருந்ததோடு அவர்கள் பொலிசாரின் முன்நிலையில் எதிர்ப்பாளர்கள் மீது சரீரத் தாக்குதல் நடத்தினர். குண்டர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தின் மீதும் கற்களை வீசினர்.

எதிர் கட்சிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களின் தலைவர்களும் ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக தம்மைக் காட்டிக்கொண்டனர். ஜே.வி.பி. சார்பு தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த பேசுகையில், பாராளுமன்றத்தில் சண்டை முடிந்துவிட்டது இப்போது "தெருவில் மோதல் நடக்கிறது," என்று அறிவித்தார். இராஜபக்ஷ 2005 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற உதவிய ஜே.வி.பி, அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் இழிபெயர் பெற்ற அமைப்பாகும்.

போலி இடது அமைப்புக்களான ஐக்கிய சோசலிசக் கட்சியும் (ஐ.சோ.க.) நவ சமசமாஜக் கட்சியும், நாட்டின் மிக நீண்டகால முதலாளித்துவ கட்சியான வலதுசாரி யூ.என்.பி. தலைமையிலான ஒரு எதிர் கட்சி கூட்டுடன் தொழிலாளர்களைக் கட்டிப்போடும், குறிப்பாக ஒரு தீய பங்கை ஆற்றிவருகின்றன. ஐ.தே.க ஆட்சியில் இருக்கும்போது, தனது பெரு வணிக சார்பு திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பயன்படுத்துவதில் எந்த தயக்கமும் காட்டவில்லை. ஆயினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பேசிய ஐக்கிய சோசலிசக் கட்சி தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, "நாங்கள் ஜனநாயகத்தை வெல்வதற்கு எங்கள் உயிர்களை தியாகம் வேண்டும். இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் அனைவருக்கும், இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் நவசமசமாஜ கட்சியும் ஒரு ஆபத்தான அரசியல் பொறியைத் தயார் செய்கின்றன. பிரதம நீதியரசர் மீதான அரசாங்கத்தின் இரக்கமற்ற செயற்பாடு, பொலிஸ்-அரச வழிமுறைகள் பற்றிய ஒரு எச்சரிக்கை ஆகும். அந்த வழிமுறைகள் தமது வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும். எவ்வாறெனினும், தொழிலாளர்களால் யூ.என்.பீ. மற்றும் பிற முதலாளித்துவ எதிர் கட்சிகளுடன் இணைந்து தங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியாது. அந்த எதிர்க் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், நிதி மூலதனம் கோரும் சிக்கன திட்டத்தை அமுல்படுத்துவதில் கொடூரமாக செயற்படும்.

சோசலிச கொள்கைகளை செயல்படுத்துவதன் பேரில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகப் போராடுவதன் மூலமும், ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுவதன் மூலமும் மட்டுமே ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும். இதுவே சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்காகும். அது தெற்காசியா மற்றும் உலகம் முழுவதும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகிறது.