சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP condemns defence ministry ban on Jaffna meeting

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி யாழ்ப்பாண கூட்டத்தை பாதுகாப்பு அமைச்சு தடை செய்ததை கண்டனம் செய்கின்றது

Socialist Equality Party (Sri Lanka)
25 January 2013

use this version to print | Send feedback


சோசலிச சமத்துவக் கட்சியின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுத்த  பாதுகாப்பு அமைச்சு, கடந்த ஞாயிறன்று சோசலிச சமத்துவக் கட்சி நடத்தவிருந்த பொது கூட்டத்துக்கான மண்டப பதிவை இரத்துச் செய்யுமாறு, வடக்கில் யாழ்ப்பாண நகரில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தின் நிர்வாகத்திற்கு சட்டவிரோதமாக உத்தரவிட்டிருந்தது. ஆயினும் சோசலிச சமத்துவக் கட்சி மண்டபத்துக்கு வெளியே கூட்டத்தை நடத்தியது. (பார்க்க: சோசலிச சமத்துவக் கட்சி இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் கூட்டத்தை நடத்தியது)

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (.எஸ்.எஸ்..) அமைப்பும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் முன்னோக்கு ஆவணமான, சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள், என்ற நூலை அறிமுகப்படுத்துவதற்கே இந்தப் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. யாழ்ப்பாண கூட்டமானது இந்த ஆவணம் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி நடத்தும் தொடர் விரிவுரைகளில் ஒன்றாகும்.

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அமைச்சு சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்தை தடை செய்தது இது இரண்டாவது தடவையாகும். கடந்த ஜனவரியில், அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்று விடுதலை செய்யக் கோரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்த பொது கூட்டத்துக்கு மண்டபத்தை வழங்கக்கூடாது என வீரசிங்கம் மண்டப நிர்வாகத்திற்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி, ஞாயிற்றுக் கிழமை கூட்டத்துக்கு கடந்த டிசம்பர் கடைசியில் மண்டபத்தை முன் பதிவு செய்திருந்தது. சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் விரிவுரைக்காக பரவலாக பிரச்சாரம் செய்திருந்ததோடு நூற்றுக்கணக்கான சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததுடன் உலக சோசலிச வலை தளத்தின் தமிழ் தளத்தில் ஒரு விளம்பரச் செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது. கடைசி சந்தர்ப்பம் வரை எந்த பகுதியில் இருந்தும் எந்தவொரு உத்தியோகபூர்வ ஆட்சேபனையும் வரவில்லை.

கடந்த சனிக்கிழமை காலையில், வீரசிங்கம் மண்டபத்தின் ஒரு ஊழியர், 513வது படையணியில் இருந்து மேஜர். ஜெயசூரிய என்ற இராணுவ அதிகாரி, கூட்டத்துக்கான மண்டப முன்பதிவை இரத்துச் செய்யுமாறு நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக சோசலிச சமத்துவக் கட்சிக்கு. தகவல் தெரிவித்தார். சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ், குறிப்பிட்ட படை முகாமை தொடர்பு கொண்டபோது, அங்கு இருந்த பொறுப்பதிகாரி அத்தகைய ஒரு அதிகாரி அங்கில்லை என்றும் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டதற்கும் படை முகாமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.

பின்னர், வீரசிங்கம் மண்டபத்துக்குப் பொறுப்பான கூட்டுறவு சமாசத்தின் தலைவர் ஆர். இராஜாராம், தனக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சோசலிச சமத்துவக் கட்சிக்கு அறிவித்தார். இரண்டு சிப்பாய்கள் தனது அலுவலகத்திற்கு வந்ததாக அவர் கூறினார். "அவர்கள் எனக்கு சி.டி.எம்.ஏ. [மொபைல்] தொலைபேசி ஒன்றை கொடுத்து, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியுடன் என்னை பேச சொன்னார்கள். நான் அழைப்பை எடுத்தபோது, அவர்கள் இந்த கூட்டத்துக்கு மண்டபத்தை வழங்க வேண்டாம் என எனக்கு கூறினர்," என்று அவர் தெரிவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆரம்பத்தில் ராஜாராம் கட்சிக்கு ஒரு எழுத்து மூல விளக்கத்தை அளிக்க ஒப்புக் கொண்டார். எனினும் அவர், சோசலிச சமத்துவக் கட்சி சட்ட நடவடிக்கை எடுத்தால், பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டதை நிரூபிக்க எந்த ஆதாரமும் தன்னிடம் இல்லை என்று, திங்களன்று மறுப்புத் தெரிவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனநாயக உரிமைகள் மீதான சமீபத்திய தாக்குதல், வட மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில், பாதுகாப்பு படையினரால் அரசியல் அடக்குமுறை புதுப்பிக்கப்பட்டுள்ள நிலைமையிலும், மற்றும் 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் மறு எழுச்சி பற்றிய இனவாத பீதியை கிளறிவிட அரசாங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் மத்தியிலுமே இடம்பெற்றுள்ளது.

நவம்பர் மாதம், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், தீவின் நீடித்த உள்நாட்டு யுத்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவு கூர முயன்றபோது, இராணுவம் பல்கலைக்கழக வளாகத்தில் சோதனை நடத்தி கூட்டத்தை குழப்பியது. அடுத்த நாள், மாணவர்கள் ஒரு எதிர்ப்பு போராட்டத்தை நடத்த முயன்ற நிலையில், இராணுவத்தினர் அவர்களைத் தாக்கினார். பின்னர் பொலிசும் இராணுவமும், "புலி ஆதரவாளர்கள்" எனக் கூறி ஆறு மாணவர்கள் உட்பட சுமார் 45 இளைஞர்களை கைது செய்து, அவர்களை வெலிகந்த இராணுவ முகாமுக்குள் "புனர்வாழ்வுக்காக" அடைத்தன. விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு பரவலான மக்கள் எதிர்ப்பு வெளிப்பட்டதால் இரண்டு மாணவர்கள் இந்த வாரம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

விடுதலை புலிகள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோற்கடிக்கப்பட்ட போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இன்னமும் பெரும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழேயே உள்ளன. வடக்கில், சிவில் ஆட்சி இருப்பதாக அரசாங்கம் கூறிக்கொண்ட போதிலும், இராணுவமே மாகாண நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் இராணுவ முகாம்களும் குடியேற்றங்களும் நிறுவப்படுகின்றன.

உளவு, கடத்தல்கள் மற்றும் குண்டர் தாக்குதல்கள் மற்றும் பிற ஆத்திரமூட்டல்களை செய்ய வடக்கில் பல துணைப்படை குழுக்கள் பாதுகாப்பு படைகளுடன் இணைந்து இயங்குகின்றன. கடந்த ஆண்டு முற்பகுதியில், முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் இரண்டு தமிழ் ஆர்வலர்கள் இராணுவ புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டனர். அடிக்கடி செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் சம்பந்தமான செய்திகள், மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டில் மற்றும் வடக்கின் ஏனைய பகுதிகளில் சடலங்கள் கண்டுபிடிக்கப்படும் செய்திகள் வெளியாகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், போருக்கு எதிராகவும் மற்றும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் நீண்ட மற்றும் கொள்கை ரீதியான போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதனாலேயே சோசலிச சமத்துவக் கட்சி இலக்கு வைக்கப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்பு படைகளை நிபந்தனையின்றி திரும்ப பெற கோரும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

புலிகளின் தமிழ் பிரிவினைவாத அரசியலுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி, தெற்காசியாவில் ஒரு சோசலிச குடியரசு ஒன்றியத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதன் பேரில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீம்களுமாக தொழிலாள வர்க்கத்தினை ஐக்கியப்படுத்தப் போராடி வருகின்றது.

26
வருட கால உள்நாட்டு யுத்தம் முழுவதும், இவ்வாறு விட்டு கொடுப்பற்ற போராட்டத்தை நடத்தியதன் காரணமாகவே, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், சோசலிச சமத்துவக் கட்சியும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றது. 2007 மார்ச்சில், சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் ஊர்காவற்துறையில் ஒரு நண்பருடன் காணாமல் போனார். இன்னமும் அவரைக் காணவில்லை. இந்த குற்றத்தில் அனைத்து சான்றுகளும் கடற்படையின் தொடர்பை சுட்டிக் காட்டுகின்றன.

விடுதலை புலிகளும் கட்சியின் வேலைத் திட்டத்தை எதிர்க்கின்றனர். 1998 இல், அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு எதிராக, புலிகள் வன்னியில் நான்கு சோ.ச.க. உறுப்பினர்களை கைது செய்தனர். ஆயினும், கட்சியும் உலக சோசலிச வலை தளமும் ஒரு பரவலான சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுத்த பின்னர் அவர்களை விடுவிக்கத் தள்ளப்பட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களின் கிராமப்புற ஏழைகளின் எதிர்ப்பு அதிகரித்து வருவதையிட்டு விழிப்புடன் இருப்பதனால், புலிகள் புத்துயிர் பெறுவது பற்றிய தனது போலியான கருத்துக்கள் மூலம் தமிழர் விரோத இனவாதத்தை கிளறி விடுகின்றது. இலங்கையில் ஆளும் தட்டுக்கள், உழைக்கும் மக்களைப் பிரிக்கவும் முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டு கொடுக்கவும் நீண்ட காலமாக இனவாத அரசியலை பயன்படுத்தி வருகின்றன. இப்போது சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட அத்தியாவசிய சேவைகள் மற்றும் வேலைகள் மீது சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு இணங்க புதிய சுற்று தாக்குதல்கள் தயாராகின்றன.

சோசலிச சமத்துவ கட்சி அதன் ஜனநாயக உரிமைகள் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் மோசமான தாக்குதலை கண்டனம் செய்வதோடு, கட்சியை பாதுகாக்க தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. நாம் அனைத்து வடிவிலான தேசியவாதம் மற்றும் இனவாதத்தையும் நிராகரிக்க அழைப்பு விடுக்கின்றோம். சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காகப் போராடுவதற்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்க தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக ஐக்கியப்படுத்தி அணிதிரட்டுவதன் ஊடாக மட்டுமே ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கைத் தரங்களையும் பாதுகாக்க முடியும்.