சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

German army intervenes in Iraq

ஈராக்கில் ஜேர்மன் இராணுவம் தலையீடு செய்கிறது

By Ulrich Rippert
18 August 2014

Use this version to printSend feedback

வெள்ளியன்று அதிகாலை ஜேர்மன் இராணுவத்தின் (Bundeswehr) நான்கு டிரான்ஸால் போக்குவரத்து விமானங்கள் வடக்கு ஈராக்கில் உள்ள சுயாட்சி குர்திஷ் பிராந்திய தலைநகரான எர்பிலுக்கு மருந்துகள், உணவு மற்றும் போர்வைகள் அடங்கிய நிவாரண உதவிப்பொருட்களைக் கொண்டு சென்றன.

அந்த உதவிப்பொருட்கள் சின்ஜார் மலைகளில் தீவிரவாத ISIS இஸ்லாமிய பிரிவுகளிடமிருந்து தப்பியோடிய மக்களுக்கு வினியோகிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை அமைப்புகளால் வழங்கப்பட்டவை ஆகும்.

அங்கே சூழ்நிலை சகஜ நிலைமைக்குத் திரும்பி விட்டதாகவும், சின்ஜார் மலைகளில் சுமார் ஓராயிரம் மக்கள் மட்டுமே சிக்க இருந்ததாகவும் ஈராக்கில் உள்ள ஐநா குழுவின் ஒரு செய்திதொடர்பாளர் அறிவித்திருந்த போதினும், ஜேர்மன் அரசாங்கம் கூடுதலாக நிவாரண பொருட்களை வழங்க அது முழுவீச்சில் வேலை செய்து வருவதாக அறிவித்தது.

"நிச்சயமாக, இது தொடக்கம் மட்டுமேயாகும்," பாதுகாப்புத்துறை மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன், CDU) தெரிவித்தார். தலைக்கவசங்கள், தற்காப்பு மேலங்கிகள் போன்ற உபகரணங்கள் மற்றும் நான்கு-சக்கர உந்து டிரக்குகளின் வினியோகங்களும் "வரவிருக்கின்ற நாட்களில் வழங்கப்படலாம்".

"முதலில் நிவாரண உதவிகள், பின்னர் ஆயுதங்களா?" என்ற தலைப்பில் n-tv செய்தி சேனல் நேற்று குறிப்பிடுகையில், “இந்த மனிதாபிமான உதவிகள் ஈராக்கில் ஜேர்மன் இன்னும் அதிகமாக ஈடுபடுவதற்கான ஒரு தொடக்கத்தைக் குறிக்கிறதா என்பது ஒரு வெளிப்படையான கேள்வியாகவே இருக்கிறது என்றது. சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகளுக்கு ஆயுதங்கள் விற்பதற்கான சாத்தியக்கூறு குறித்து அவ்விவாதத்தில் மிக எச்சரிக்கையோடு கருத்துரைத்தார். அதுபோன்றவொரு முடிவை இப்போது வரையில் அவர் ஆதரிப்பதாகவும், ஆனால் நடவடிக்கைகளின் மாற்று போக்குகளைப் புறக்கணித்துவிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்."

Hannover Allgemeine Zeitung உடனான ஒரு நேர்காணலில் வியாழனன்று மேர்க்கெல் கூறுகையில், “ஆயுதங்கள் ஏற்றுமதி என்று வரும் போது, அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் அங்கே எப்போதுமே அரசியல் மற்றும் சட்டம் புகாத ஒரு பாகை வழிகளும் இருக்கின்றன, அவற்றை நாம் பயன்படுத்த வேண்டி இருக்கலாம்," என்றார். இவ்விதத்தில், ஜேர்மனி அதன் கூட்டாளிகளோடு, “குறிப்பாக அமெரிக்காவோடு" அதன் கொள்கைகளை ஒருங்கிணைத்து செல்லும் என்பதை அவர் தெரிவித்தார்.

"இஸ்லாமிய அரசு (ISIS) பயங்கரவாத இயக்கத்தின் கரங்களில் வடக்கு ஈராக்கிய மக்கள்—யாஜிதிகள், கிறிஸ்துவர்கள் மற்றும் ஏனையவர்கள்—என்ன விதத்தில் துன்பப்பட்டு வருகிறார்களோ அது "அதிர்ச்சியூட்டி" இருப்பதாக மேர்க்கெல் தெரிவித்தார். இந்த தீவிரவாதிகள் முன்னேறுவதைத் தடுக்கவும், ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுவதும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தின் கடமையாகும் என்று அவர் வாதிட்டார்.

ஆயுத விற்பனை சாத்தியக்கூறுகளைக் கவனத்தில் எடுப்பதில் ஜேர்மன் பாதுகாப்பு நலன்களும் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கின்றன என்பதையும் சான்சிலர் வலியுறுத்தினார். சண்டை நடக்கும் பகுதிகளுக்கு ஆயுத பரிவர்த்தனைகளைத் தடுப்பதன் மீதான உத்தியோகபூர்வ ஜேர்மன் நெறிமுறைகளில் இருந்து ஒரு பத்தியை அவர் மேற்கோளிட்டுக் காட்டினார். ஒரு சூழ்நிலை "ஜேர்மன் பெடரல் குடியரசின் குறிப்பாக வெளியுறவுத்துறை அல்லது பாதுகாப்புத்துறை கொள்கை நலன்களோடு" சம்பந்தப்பட்டு இருந்தால், அதன் கூட்டணிக்கு சிக்கல் உண்டாக்குகிறதென்றால், ஆயுத வினியோகங்கள் அனுமதிக்கக் கூடியதே என்று அந்த நெறிமுறைகள் குறிப்பிடுகின்றன.

பாதுகாப்புத்துறை மந்திரி வொன் டெர் லெயன், வடக்கு ஈராக்கிற்கு ஆயுதங்கள் வினியோகிப்பதன் மீது மிக நேரடியாகவே அவரது ஆதரவை வெளிப்படுத்தினார். அவர் Bild சஞ்சிகைக்கு கூறுகையில், “ஜேர்மன் ஆயுதங்கள் மட்டுமே ஒரு இனப்படுகொலையைத் தடுக்குமென்றால், நாம் கட்டாயம் அதற்கு உதவ வேண்டும்," என்றார். இராணுவம் அதில் பங்கெடுக்க வேண்டுமா என்பது ஒரு ஐநா பணிக்குழு தேவைப்படுமா என்பதைப் பொறுத்து தான் தெரியவரும் என்றவர் தெரிவித்தார். இப்போதைக்கு, “நாம் வேறு என்ன மாதிரியான இராணுவ தளவாடங்களை அனுப்ப முடியுமென" அவர் ஆராய்ந்து வருகிறார்.

ஜேர்மன் அரசாங்கம் தற்போதைய ஈராக்கிய யுத்த புதுப்பிப்பில் பங்கெடுக்க ஆரம்பத்திலிருந்தே தயாரிப்பு செய்து வந்திருக்கிறது. 2003இல் சமூக ஜனநாயக-தலைமையிலான முன்னாள் அரசாங்கத்தில் செய்ததைப்போல, அது இனியும் ஜேர்மன் ஈடுபாட்டை எதிர்ப்பதாக இல்லை.

பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அரசாங்கம் பாரிய பேரழிவுகரமான ஈராக்கிய ஆயுதங்கள் குறித்த பொய்களின் அடிப்படையில் அதன் இராணுவத் தலையீட்டைத் தொடங்கியது. ஈராக்கில் விளைந்துள்ள மனிதப் பேரழிவு, அரசியல் மற்றும் இராணுவ பேரழிவின் முழு வீச்சும் மிகத் தெளிவாக தெரிகின்ற போதினும், ஜேர்மன் ஆளும் வர்க்கமும் அந்த யுத்தத்தில் பகிரங்கமாக பங்கெடுப்பதற்கு ஆதரவாக அதன் முந்தையவர் நிலைப்பாட்டையே இப்போது சுமந்து வருகிறது.

இவ்விதத்தில் தற்போதைய அரசாங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அது அறிவித்திருந்த வெளியுறவு கொள்கை மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜனவரியின் இறுதியில், ஜனாதிபதி கௌக், வெளியுறவுத்துறை மந்திரி ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி வொன் டெர் லெயனும் இராணுவத்திற்கிருந்த தடைக்காலம் முடிந்துவிட்டதென்றும், எதிர்காலத்தில் ஜேர்மனி உலக நெருக்கடி பகுதிகளில் முன்பைவிட சுதந்திரமாகவும், சுய-நம்பிக்கையோடும் மீண்டும் இராணுவ தலையீடுகளை நடத்துமெனவும் அறிவித்திருந்தார்கள்.

அப்போதிருந்து ஜேர்மன் மத்திய அரசாங்கம் ஓர் இரக்கமற்றதும் மோதலுக்குரியதுமான வெளியுறவு கொள்கையைப் பின்பற்றியுள்ளது. பெப்ரவரியில் அது, கியேவில் பாசிசவாத சக்திகளின் ஆதரவோடு ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒழுங்கமைக்க அமெரிக்காவுக்கு ஒத்துழைத்தது, பின்னர் அதைத் தொடர்ந்து ரஷ்யாவுடன் பதட்டங்களைத் தீவிரப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகிறது. இப்போது அது இந்த ஆக்ரோஷமான ஏகாதிபத்திய கொள்கையை மத்திய கிழக்கிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஈராக்கில் கூட்டு இராணுவ நடவடிக்கை குறித்து பேரம்பேச ஸ்ரைன்மையர், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகளின் ஒரு சிறப்புக் கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக வெள்ளியன்று மாலை புருசெல்ஸ் பயணித்தார். "ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய உதவிகளை" அந்தந்த இடத்திலேயே வழங்குவது குறித்தும் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க அவர் இந்த வாரயிறுதியில் ஈராக்கிற்கு செல்லவும் திட்டமிட்டிருந்தார்.

இஸ்லாமிய போராளிகளால் யாஜிதிகளும், கிறிஸ்துவர்களும் "துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதை" ஐரோப்பா அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்த ஸ்ரைன்மையர், ஜிஹாதிஸ்டுகளுக்கு எதிராக அமெரிக்க வான்வழி தாக்குதல்களை வரவேற்பதும், மற்றும் குர்திஷ் பாதுகாப்பு படைகளின் தைரியமான போராட்டங்களைப் பாராட்டுவதும்" மட்டுமே போதாது என்று புறப்படுவதற்கு முன்னதாக தெரிவித்தார். ஐரோப்பா ஆக்கபூர்வமான உதவிகளை வழங்க வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த அரசாங்கத்தின் யுத்த உந்துதலை எதிர்கட்சிகளான பசுமை கட்சி மற்றும் இடது கட்சிகளும் ஆதரித்திருக்கின்றன. ஒரு தசாப்தத்திற்கும் முன்னர் ஈராக்கிய யுத்தத்தின் தொடக்கத்தில் யுத்த-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்த அதே கட்சிகள் இன்று முன்னணி யுத்தவெறியர்களாக இருக்கின்றன.

பசுமைக்கட்சியின் நாடாளுமன்ற கன்னைக்கான வெளியுறவுக் கொள்கை செய்தி தொடர்பாளர் ஓமிட் நூரிபுவர் Der Spiegelஇன் நேர்காணலுக்கு கூறுகையில், ISIS இடங்கள் மீதான அமெரிக்க விமானப்படை தாக்குதல்களுக்கு ஜேர்மன் இராணுவம் ஜேர்மன் விமானப்படையின் அதிவிரைவு போர்விமானங்களைக் கொண்டு உதவ வேண்டுமென தெரிவித்தார்.

பசுமைக் கட்சியின் முன்னாள் தலைவரும் ஜேர்மன் நாடாளுமன்றத்தின் (Bundestag) தற்போதைய துணை-ஜனாதிபதியுமான கிளவ்டியா ரோத் பெரிதும் உத்தேசமாக இல்லாமல் கருத்துரைத்திருந்தார். வியாழனன்று "Morgenmagazin” தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தற்போது அவர் குர்திஷ் நகரமான எர்பிலுக்கு விஜயம் செய்து வருவதாகவும், அங்கே உள்ளூர் நிலைமைகள் குறித்து நல்ல புரிதல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், ஐரோப்பிய உதவி உடனடியாக தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். குர்திஷ் போராளிகளுக்கு ஜேர்மன் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவதென்று தெரியாது என்பதால் ஜேர்மன் ஆயுதங்களை அனுப்புவதன் மீது அவர் எச்சரிக்கை செய்தார். ஆனால் ISIS பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் உதவ அங்கே நிறைய வழிகள் இருப்பதாக அவர், நூரிபுவரின் பரிந்துரையைக் குறிப்பிட்டாமல், குறிப்பிட்டார்.

இடது கட்சியின் நாடாளுமன்ற தலைவர் கிரிகோர் கீசி கடந்த திங்களன்று taz நாளிதழுக்கு கூறுகையில், ISISஐ நிறுத்த ஜேர்மனியும் நேட்டோவும் தலையிட வேண்டுமென கூறினார். அதனோடு சேர்ந்து, ஈராக்கிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டின் வடக்கில் உள்ள குர்திஷ் படைகளுக்கும் ஆயுதங்களையும் அனுப்ப வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

"உண்மையில், ஜேர்மன் ஆயுத ஏற்றுமதிக்கு எதிராக நான் கடுமையாக இருக்கிறேன்," என்று கூறிய கீசி, ஆனால் ஏனைய நாடுகளால் உடனடியாக ஆயுதங்களை அனுப்ப முடியாவிட்டால், ஜேர்மனி ஒரு பிரதான ஆயுத ஏற்றுமதியாளராக இருப்பதால், இந்த விதிவிலக்கான விடயத்தில் அங்கே ஆயுதங்களை அனுப்ப அனுமதிக்கக்கூடியதாக இருக்கிறது. IS [இஸ்லாமிக் அரசு, ISISஇன் மற்றொரு பெயர்] நிறுத்துவதற்கு எதிர்ப்பு கடிதங்கள் மட்டுமே போதாது," என்றார்.

இவ்விதத்தில், ஜேர்மன் இராணுவத்தின் சர்வதேச நடவடிக்கைகளின் தீவிரப்பாட்டை நியாயப்படுத்துவற்கு, வடக்கு ஈராக்கிய நெருக்கடியை ஒரு போலிக்காரணமாக கொண்டு, ஆக்ரோஷ மற்றும் இராணுவவாத ஜேர்மன் வெளியுறவு கொள்கைக்கு புத்துயிரூட்டுவதில் பசுமைக் கட்சியும், இடது கட்சியும் பங்கெடுத்து வருகின்றன.