சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Kerry’s Asian trip and the build-up to war with China

கெர்ரியின் ஆசியப் பயணமும், சீனா உடனான யுத்தத்திற்கு ஆயத்த வேலைகளும்

Peter Symonds
17 February 2014

Use this version to printSend feedback

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரியின் பெய்ஜிங் விஜயம் ஒபாமா நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" நடத்தப்பட்ட சமீபத்திய நகர்வாக இருந்தது. சீனாவின் செல்வாக்கிற்கு குழி பறிப்பதும், யுத்தத்திற்கான தயாரிப்பில் அமெரிக்க இராணுவ படைகளை மற்றும் கூட்டணிகளைக் கட்டியமைப்பதுமே அதன் நோக்கமாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஆசியாவில் திட்டமிட்டு அபாயகரமான வெடிப்பு புள்ளிகளை உருவாக்கி விட்டுவிட்டு, விளைவுகளைக் குறித்து கவலையில்லாமல் அமெரிக்கா அதன் ஆதாயங்களுக்காக அழுத்தம் அளிக்க முயன்று வருகிறது.

பெய்ஜிங்கில், கெர்ரி பல உணர்வுபூர்வமான பிரச்சினைகள் மீது சீனத் தலைமைக்கு சட்டதிட்டங்களை வரையறுக்க முயன்றார். கொந்தளிப்பான கொரிய தீபகற்பம் விடயத்தில், அணுஆயுத ஒழிப்பு மீதான அமெரிக்க கோரிக்கைகளுக்கு வட கொரியாவை வளைந்து கொடுக்க செய்ய சீனா அதன் கூட்டாளிக்கு அழுத்தம் அளிப்பதில், கடுமையான பொருளாதார தடைகள் உட்பட "அதன் வசமிருக்கும் ஒவ்வொரு கருவியையும்" பயன்படுத்த வேண்டுமென கெர்ரி வலியுறுத்தினார். கிழக்கு சீன மற்றும் தெற்கு சீன கடல்களில் நிலவும் கவலைக்கிடமான சூழ்நிலை தொடர்பாக கூறுகையில், "ஒரு பொறுமையான, பெரிதும் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில், குறைந்த மோதல்தன்மை கொண்ட நடவடிக்கைகளை" மேற்கொள்ளுமாறு அவர் பெய்ஜிங்கிற்கு அழைப்புவிடுத்தார். இது, அமெரிக்காவால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட பதட்டங்களுக்கு சீனாவை மறைமுகமாக குற்றஞ்சாட்டுவதாகும்.

அதுமட்டுமின்றி, சிரியாவில் அமெரிக்க தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஆதரிக்க மற்றும் ஐ.நா. சபையில் ஈரானை அமெரிக்க வழியில் இறுக்கி பிடிக்க ஒத்துழைக்கவும் கெர்ரி சீன தலைவர்களுக்கு அழுத்தம் அளித்தார். மேலும் சீனாவில் குறிப்பாக திபெத்திய மற்றும் உகூர் பகுதிகளில் "மனித உரிமைகள் மீறல்" குறித்த கவலைகளை அவர் வெளிப்படுத்தினார். இந்த கடைசி குறிப்பானது, மெய்பிக்கத்தக்க விதத்தில் சீனாவை முறிக்க அந்நாட்டின் பகுதிகளில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களை அமெரிக்கா பயன்படுத்த முனையும் என்ற சீனாவின் அச்சங்களைக் கையாள்வதாக இருந்தது.

அமைதி", ஜனநாயகம்" மற்றும் "பாதுகாப்பு" போன்ற மொழியைக் கொண்டு வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் கோரிக்கைகளை கெர்ரி மூடி மறைத்தார். சீனாவிற்கும் அதன் அண்டைநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கடல்வழி பிரச்சினைகளில் அமெரிக்கா "கட்டுப்பாடற்ற கடல்வழி போக்குவரத்து" என்ற முழக்கத்தின் கீழ் தலையீடு செய்து வருகிறது. வாஷிங்டனால் எது வடிவமைக்கப்பட்டதோ, அந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மேலாதிக்கம் செலுத்தப்படும் தற்போதைய விதிமுறைகள் அடிப்படையிலான உலக ஒழுங்குமுறைக்கு பெய்ஜிங் கீழ்படிய வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து முரண்டு பிடிக்கிறது. இவை அனைத்தும் ஒரேயொரு விமர்சன சொல் கூட இல்லாமல் முழுமையாக அடிபணிந்துள்ள ஊடகங்களால் சுற்றோட்டத்திற்கு விடப்படுகின்றன.

ஆனால் அமெரிக்கா எந்தவொரு சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பாடாமல், ஏனையவர்களுக்கு அது உபதேசிக்கும் அதே விதிமுறைகளை அது பொறுப்பில்லாமல் உதாசீனப்படுத்தி கொண்டு உலகெங்கிலும் செயல்பட்டு வருகிறது. ஜனாதிபதி புஷ்ஷைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒபாமாவும் "வலிந்து தாக்கும்" யுத்தங்களைத் தொடுக்கும் உரிமையை அமெரிக்காவிற்காக சுவீகரித்துக் கொண்டுள்ளார், அதாவது வாஷிங்டனின் உலகளாவிய நலன்கள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆக்ரோஷமான யுத்தங்கள் நடத்துவதற்கான உரிமையைக் கைப்பற்றி உள்ளார். 2001இல் அமெரிக்க தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் ஈராக் மற்றும் லிபிய யுத்தங்கள் தொடர்ந்தன. அத்தோடு ஈரான் மற்றும் வட கொரியா உட்பட பல நாடுகளுக்கு எதிராக எண்ணிலடங்கா ஆத்திரமூட்டல்கள், கட்டுப்பாடுகள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன. ஓர் ஆக்ரோஷ யுத்தம் தொடுப்பதே ஓர் அடிப்படை சர்வதேச சட்டமீறல் என்பதோடு இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் நாஜி தலைவர்களின் நூரெம்பெர்க் வழக்குகளின் கீழ் பின்னிப் பிணைந்துள்ள குற்றஞ்சார்ந்த நடவடிக்கையும் ஆகும்.

வெள்ளை மாளிகையில் உள்ள குற்றவாளிகள், சர்வதேச நெறிமுறைகள் மற்றும் சட்டங்களை உதாசீனப்படுத்திவிட்டு, மனித உரிமைகளை" முற்றிலும் ஏளனமாக கையாளுகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற மோசடியின் கீழ், அமெரிக்கா தடையேதுமின்றி டிரோன் தாக்குதல்களைக் கொண்டு படுகொலை மற்றும் தாக்குதல் நடவடிக்கையைப் பின்தொடர்கிறது. இதில் அமெரிக்க பிரஜைகள் மீது நடத்தப்படுபவையும் உள்ளடங்கும். வெளிநாட்டிடம் ஒப்படைத்தல், சித்திரவதை மற்றும் விசாரணையின்றி காலவரையற்ற காலத்திற்கு சிறையில் அடைத்தல் ஆகியவை தொடர்கின்றன. அமெரிக்காவிற்குள், அடிப்படை அரசியலமைப்பு உரிமைகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் மீதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மீதும் தேசிய பாதுகாப்பு முகமையால் நடத்தப்பட்ட பாரிய உளவுவேலை நடவடிக்கைகளையும் மற்றும் பெயரளவிற்கான நண்பர்கள் மற்றும் எதிரிகள் போன்றிருப்பவர்களுக்கு எதிரான அமெரிக்க இணையவழி யுத்தமுறை மற்றும் தகவல் திருட்டு நடவடிக்கைகளையும் எட்வார்ட் ஸ்னொவ்டென் அம்பலப்படுத்தி உள்ளார்.

சீனாவோ அல்லது வேறெந்த நாடோ இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அமெரிக்காவின் விடையிறுப்பு என்னவாக இருந்திருக்கும்? கட்டுப்பாடற்ற கடல்வழி போக்குவரத்து" என்ற போர்வையின் கீழ் வெளிநாட்டு யுத்தக்கப்பல்கள் அமெரிக்கா கடற்கரையோரங்களில் வழக்கமான ரோந்து வேலைகளில் ஈடுபட்டிருந்தால் அல்லது ஒரு போட்டி நாடு, பல இராணுவ முகாம்கள் மற்றும் கூட்டணிகள் என்பது கூட வேண்டாம், ஒரேயொரு இராணுவ தளத்தை இலத்தீன் அமெரிக்காவில் எங்கேனும் உருவாக்கி இருந்தால், அல்லது அமெரிக்காவின் "மனித உரிமைமீறல்களை" விமர்சித்திருந்தால், அல்லது குவாண்டனமோ வளைகுடா மீதான கியூபாவின் உரிமைகோரலை ஆதரித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? கேள்வி கேட்பது அதற்கு பதிலளிப்பதற்காகும். இத்தகைய நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டிருந்தால் யுத்த அச்சுறுத்தல் உட்பட ஆக்ரோஷமான விடையிறுப்பு வெளிப்பட்டிருக்கும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த இந்தோ-பசிபிக் பகுதியையும் ஒரு பெரும் நிலையற்ற வெடிமருந்து பெட்டகமாக மாற்றி உள்ளது.

* குறிப்பாக, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை அவற்றின் உரிமைகோரல்களுக்கு அழுத்தம் அளிக்க ஊக்குவித்ததன் மூலமாக, கிழக்கு சீன மற்றும் தென்சீன கடல்களில் பெரிதும் சிறிய கடல்வழி பிரச்சினைகளாக இருந்தவைகளை அமெரிக்கா பிரதான சர்வதேச வெடிப்பு புள்ளிகளாக மாற்றி உள்ளது. கெர்ரியின் விஜயத்திற்கு சற்று முன்னர், அமெரிக்கா பிராந்திய பிரச்சினைகளில் அதன் "நடுநிலை" நிலைப்பாட்டை மேலதிகமாக கைவிடுவதன் மூலமாகவும், சீனாவை பகிரங்கமாக எதிர்ப்பதன் மூலமாகவும் தென்சீனக் கடலில் பதட்டங்களை ஊதி பெரிதாக்க அதன் விருப்பத்தை சமிக்ஞையாக எடுத்துக்காட்டியது.

* கொரிய தீபகற்ப விவகாரத்தில், பியான்ங்யாங் அமெரிக்காவின் அனைத்து முறையீடுகளையும் பூர்த்தி செய்யும் வரையில், வட கொரியாவின் அணுசக்தி திட்டங்கள் மீதான எந்தவொரு சர்வதேச பேச்சுவார்த்தைகளிலும் பங்கெடுக்க ஒபாமா நிர்வாகம் மறுத்துள்ளது. அமெரிக்கா எந்தவொரு சம்பவத்திற்கும் பல சந்தர்ப்பங்களில் பொறுப்பின்றி பாரிய படைபலத்தைக் காட்டி இடர்பாடுகளை தனக்கு சாதகமாக வசப்படுத்திக் கொண்டுள்ளது. கடந்த மார்ச்/ஏப்ரலில், வட கொரியாவின் வெற்று வார்த்தைஜால போர் விருப்பத்திற்கு விடையிறுப்பாக, பெண்டகன் அணுஆயுதம் ஏந்திச்செல்லும் B-52 மற்றும் B-2 குண்டுவீச்சு விமானங்களை மற்றும் யுத்த கப்பல்களைத் தென்கொரியாவிற்கு அனுப்பியது. வடகிழக்கு ஆசியாவில் அதன் ஏவுகணை-தடுப்பு உபகரணங்களை பாரியளவில் நவீனப்படுத்த இருப்பதாகவும் அறிவித்தது.

* ஒபாமா நிர்வாகம் அனைத்து கடற்படை மற்றும் விமானப்படை தளவாடங்களில் 60 சதவீதத்தை 2020 வாக்கில் இந்தோ-பசிபிக் பகுதிக்கு மாற்றும் திட்டங்களோடு, அப்பிராந்தியம் முழுவதிலும் அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டை மேம்படுத்த உள்ளது. குறிப்பாக ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடன் கூட்டணிகளைப் பலப்படுத்தி உள்ள அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுடன் இராணுவ தளங்கள் மீதான ஏற்பாடுகளை மறுகட்டமைத்து செய்து வருகிறது அல்லது புதிதாக ஸ்தாபித்து வருகிறது. மேலும் அது அப்பிராந்தியத்தில் தோற்றப்பாட்டளவில் ஒவ்வொரு நாட்டினோடும் மூலோபாய உறவுகளை அதிகரித்து வருகிறது. இராணுவ ஸ்தாபகத்தோடு நெருக்கமாக இணைந்த அமெரிக்க சிந்தனைகூடங்கள் சீனா உடனான யுத்தத்திற்கான திட்டங்கள், தயாரிப்புகள் மற்றும் மூலோபாயங்களை பகிரங்கமாக விவாதித்து வருகின்றன.

"அமைதி" மற்றும் "பாதுகாப்புக்கான" ஒரு சக்தி என்பதிலிருந்து வெகுதூரம் விலகி, அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று உலக அரசியலில் ஸ்திரப்பாட்டைக் குலைக்கும் முக்கிய காரணியாக உள்ளது. 2008-09 உலகளாவிய நிதியியல் பொறிவிற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கா உள்நாட்டிலும் மற்றும் அதன் அன்னிய போட்டி நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய சுமைகளைச் சுமத்துவதன் மூலமாக, அதன் தொடர்ந்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைக் கடந்து வர முயல்கிறது. சீனாவை அதன் மையத்தில் கொண்டு உலகின் முதன்மை மலிவு-உழைப்பு மையமாக மாறி உள்ள ஆசியாவில், அமெரிக்க மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்க வைக்க ஒபாமா நிர்வாகம் அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்தி வருகிறது. அதன் "விதிமுறைகள் அடிப்படையிலான" உலகளாவிய ஒழுங்குமுறை சீனாவை ஓர் அடிபணிந்த அரை-காலனி அந்தஸ்திற்கு குறைக்க முனைந்துள்ளது.

சீனாவிற்கு எதிரான அமெரிக்க யுத்த உந்துதலுக்கு எதிராக, சீன தலைமைக்கு எந்தவொரு ஆதரவும் அளித்துவிட முடியாது. அது தொழிலாள வர்க்கத்திற்கு ஆழ்ந்த விரோதமாக இருப்பதோடு, அனைத்திற்கும் மேலாக வாஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வர முயன்று வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட சொத்து உறவுகளை சிதைத்தும், கடந்த மூன்று தசாப்தங்களில் சீனாவை ஒரு பரந்த மலிவு உழைப்பு தளமாக மாற்றி அதை உலக முதலாளித்துவத்தோடு ஒருங்கிணைத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்க தாக்குதலை எதிர்ப்பதற்கான எல்லாவித சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்தி உள்ளது. அனைத்திற்கும் மேலாக ஒரு பேரழிவுகரமான யுத்தத்திற்கு மூலகாரணமாக விளங்கும் திவாலாகி போன இலாபகர அமைப்புமுறை மற்றும் அதன் காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழித்து யுத்த ஆபத்தை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஒரே சமூக சக்தியாக விளங்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தோடு சீன தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான ஐக்கியத்திற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளார்ந்த விதத்தில் விரோதமாக உள்ளது.