சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Obama sends more US troops to Iraq

ஒபாமா கூடுதல் அமெரிக்க துருப்புகளை ஈராக்கிற்கு அனுப்புகிறார்

By Patrick Martin
1 July 2014

Use this version to printSend feedback

மேலதிகமாக 300 அமெரிக்க துருப்புகள் ஞாயிறன்று பாக்தாத் வந்தடைந்தன. ஈராக்கின் மூன்றாவது மிகப் பெரிய நகரமான மோசூல், சுன்னி இஸ்லாமிய படைகளிடம் வீழ்ந்ததில் இருந்து ஈராக்கிற்கு விரைந்து அனுப்பப்பட்டிருக்கும் படைகளின் எண்ணிக்கை மூன்று வாரங்களில் சுமார் 800க்கு அண்மித்தளவில் உயர்ந்துள்ளன. ஜனாதிபதி ஒபாமா இந்த கூடுதல் துருப்புகள் நகர்த்தப்பட்டதைக் குறித்து ஓர் உத்தியோகபூர்வ கடிதம் மூலமாக திங்களன்று காங்கிரஸிற்கு தெரியப்படுத்தினார்.

அமெரிக்க துருப்புகளின் இந்த சமீபத்திய இராணுவப் பிரிவானது எதிர்த்து போராடுவதற்குரிய ஆயுத தளவாடங்களைக் கொண்டிருக்கும் என்பதோடு, முக்கியமாக பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியின் அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய ஜீவநாடியாக விளங்கும் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தைப் பாதுகாக்க நிலைநிறுத்தப்படும் என்று பெண்டகனின் ஒரு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். சிப்பாய்களோடு சேர்ந்து, துப்பாக்கி தாங்கிய ஹெலிகாப்டர்கள் மற்றும் உளவுபார்க்கும் ஆளில்லா விமானங்களையும் அமெரிக்க இராணுவம் அனுப்பி வருகிறது.

அமெரிக்க துருப்புகளின் முந்தைய இரண்டு அதிகரிப்புகளில், பாக்தாத்தில் உள்ள பிரமாண்ட அமெரிக்க தூதரகத்திற்கு பாதுகாப்பிற்காக 275 துருப்புகள் அனுப்பப்பட்டதும் மற்றும் ஈராக்கிய இராணுவத்தோடு தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒத்துழைப்பதற்கும், மலிக்கி ஆட்சியின் மீது தாக்குதல்களை முன்னெடுத்து வரும் முக்கிய சுன்னி இஸ்லாமிய குழுவான இஸ்லாமிய அரசின் போராளிகள் மீது (முன்னர் ஈராக்-சிரிய இஸ்லாமிய அரசு - ISIS - என்றிருந்தது) எதிர்வரும் காலத்தில் அமெரிக்கா குண்டுவீசுவதற்கும் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்துவதற்கும் ஏற்ப தகவல்களைச் சேகரிக்க 300 சிறப்பு படை சிப்பாய்களை அனுப்பியதும் உள்ளடங்கும். கடந்த சில நாட்களாக தலைநகரின் வடக்கே கடுமையாக சண்டை நடந்துவரும் பகுதிகளுக்குள் மூன்று சிறப்பு படை குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன.

ஜூன் 10இல் அதன் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து இஸ்லாமிய அரசால் கைப்பற்றப்பட்டதும், சுன்னி மக்கள் நிறைந்த நகரங்களில் ஒன்றுமான திக்ரித்தில் ஈராக்கிய இராணுவ படைகளின் முதல் மிகப்பெரிய எதிர்தாக்குதல் திங்களன்றும் தொடர்ந்தது. அந்த இராணுவ நடவடிக்கை சனியன்று இரவே தொடங்கி இருந்த போதினும், பரந்தளவிலான கண்ணிவெடிகளின் பயன்பாடு உட்பட கடுமையான எதிர்நடவடிக்கைகளால் அது வேகம் குறைந்துள்ளது.

ஈராக்கிய மோதல் ஒரு பரந்த பிராந்திய யுத்தத்தைத் தொடக்கூடும் என்பதற்கான பல அறிகுறிகளில், அமெரிக்க தலையீடு அதிகரிக்கப்பட்டிருப்பதும் ஒன்றாகும். கடந்த சில நாட்களில் நடந்தவை:

* ISIS அதன் பெயரை இஸ்லாமிய அரசாக மாற்றுவதாகவும் மற்றும் இப்போது பெரிதும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈராக் மற்றும் சிரியாவிற்கு இடையிலான எல்லையை அகற்றுவதாகவும் அறிவித்தது.

* சிரிய யுத்தவிமானங்கள் ஈராக்கிற்குள் இஸ்லாமிய அரசின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளன.

* இஸ்லாமிய அரசின் படையினர் மற்றும் போட்டி சுன்னி போராளிகள் சிரிய எல்லையோர நகரமான பௌகமாலில் சண்டையிட்டனர்.

* ஈராக்கிய விமானப்படைக்காக ஐந்து ரஷ்ய சுக்ஹாய் போர் விமானங்கள் ஈராக்கிற்கு வந்ததோடு, பயிற்சியளிப்பதற்கும் பராமரிப்புகளுக்கும் இராணுவ ஆலோசகர்கள் வரவிருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இஸ்லாமிய அரசின் தாக்குதலில் ஈராக்கிய இராணுவம் பொறிந்த பின்னர் குர்திஷ்ஷின் பெஷ்மெர்கா படைகள் ஆக்கிரமித்த ஈராக்கிய எண்ணெய் தொழில்துறையின் வடக்கு பகுதியின் மையமான கிர்குக்கிற்கு குர்திஷ் தலைவர் மௌசுத் பர்ஜானி விஜயம் செய்தார். குர்தியர்களால் நீண்டகாலமாக உரிமை கோரி வந்ததும் ஆனால் குர்தியர்கள், அரேபியர்கள் மற்றும் துர்க்மெனிஸ்தானிய மக்களால் பிளவுபட்டிருந்ததுமான அந்த நகரிலிருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லையென அவர் சூளுரைத்தார்.

* பாக்தாத்திடமிருந்து குர்திஷ் பிராந்திய ஆணையம் அதன் சுதந்திரத்தை அறிவித்தால் அத்தகைய ஒரு குர்திஷ் அரசை இஸ்ரேல் அங்கீகரிக்குமென அது அறிவித்தது.

* பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை மந்திரி வில்லியம் ஹேக், குர்திஷ் தலைநகர் இர்பிலில் பர்ஜானியைச் சந்தித்தார், அங்கே பர்ஜானி, கிர்குக் குர்திஷ் பிராந்தியத்தோடு சேர்ப்பதில் அவர் தீர்மானமாக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

* அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரியிடமிருந்து வந்த அழுத்தத்திற்கு விடையிறுத்து சவூதி மன்னர் அப்துல்லாஹ் கூறுகையில், ஷியைட், சுன்னி மற்றும் குர்திஷ் கட்சிகளை உள்ளடக்கிய, ஆனால் தற்போதைய பிரதம மந்திரி மலிக்கி இல்லாமல், ஈராக்கில் ஒரு புதிய கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு அந்த முடியாட்சி ஆதரவு வழங்குமென தெரிவித்தார்.

* ஈரானிய புரட்சிகர படைகளின் சிறப்பு படை பிரிவான குத்ஸ் படை (Quds Force) தலைவர், தெஹ்ரானால் நீண்டகாலமாக ஆதரிக்கப்பட்ட மலிக்கி அரசாங்கத்தோடும் மற்றும் ஈராக்கிய இராணுவ அதிகாரிகளோடும் கலந்தாலோசிக்க ஈராக்கில் பல நாட்கள் செலவிட்டார். ஈரான் மலிக்கிக்கு இராணுவ உதவிகளை அதிகரித்துள்ளதோடு ஈராக்கில் உளவுபார்க்கும் ஆளில்லா டிரோன்களையும் ஒருவேளை செயல்படுத்தி இருக்கலாம்.

ஈராக் இலக்குகள் மீதான குண்டுவீச்சு ஒருமுறை தொடங்கியதும், சிரியாவில் இஸ்லாமிய அரசுக்கு எதிரான அதேபோன்ற நடவடிக்கைகளை ஒபாமா நிர்வாகத்தால் தடுத்து வைக்க முடியாமல் போகலாம் என்பது சவூதி அரேபியாவிற்கான கெர்ரியின் விஜயத்திற்குப் பின்னர் நடைமுறையில் அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து மேலதிக கருத்துக்களைக் கொண்டு வந்தது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிடுகையில்: “திரு. கெர்ரி மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கான அவரது நீண்ட ஒருவாரகால பயணத்தை வெள்ளியன்று சவூதி அரேபியாவோடு முடித்துக் கொண்டார், அந்த விஜயம் ஈராக் மற்றும் சிரிய நெருக்கடியை ஒரே கட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது. அந்த அமெரிக்க தூதர் செங்கடல் நகரான ஜெத்தாவில் சவூதி அரசர் அப்துல்லாஹ் உடனும், சிரியாவின் பிரதான அரசியல் எதிர்ப்பு கூட்டணியின் தலைவர் அஹ்மத் ஜார்பா உடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்,” என்று குறிப்பிட்டது.

ஏப்ரல் 30இல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் ஜூலை 1இல் கூடிய போது ஈராக்கிற்குள் நடந்து வரும் அரசியல் சூழ்ச்சிகள் அதன் உச்சக்கட்டத்தை எட்டின. ஷியைட் அடிப்படையிலான மலிக்கியின் சட்ட கூட்டணி அரசு நாடாளுமன்றத்தின் 350 இடங்களில் 92 இடங்களைக் கொண்டு ஒரு மிகப்பெரிய அணியாக இருந்தாலும் கூட, அரசியலமைப்புரீதியாக 45 நாட்களுக்குள் பெரும்பான்மையைக் காட்டுவதென்பது அதற்கு ஒரு பெரும் போராட்டமாக இருக்குமென கருதப்படுகிறது.

ஒரு சுன்னி உறுப்பினரை சபாநாயகராகவும், பின்னர் பெரிதும் சம்பிரதாயமாக விளங்கும் ஜனாதிபதியையும் இதற்கு ஒரு குர்திஷ் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது பின்னர் உண்மையிலேயே அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பில் ஒரு ஷியைட் பிரதம மந்திரியையும் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் தொடங்க இருக்கிறது. அந்நாட்டின் உயர்மட்ட ஷியைட் மதகுருமார் கிராண்ட் அயாதொல்லாஹ் அலி அல்-சிஸ்தானி உட்பட பல முக்கிய ஷியைட் தலைவர்கள், ஒரு மூன்றாவது பதவி காலத்தைக் கோருவதை விடுத்து பதவியிலிருந்து இறங்க மலிக்கி மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், அந்த மூன்று பதவிகள் மீதும் விரைவாக ஒரு உடன்பாட்டிற்கு வர அழைப்புவிடுத்துள்ளனர்.