சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Oppose police sabotage of SEP workers’ inquiry in Sri Lanka

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் தொழிலாளர் விசாரணை மீதான பொலீஸ் தொந்தரவை எதிர்த்திடுக

By the Socialist Equality Party (Sri Lanka)
30 June 2014

Use this version to printSend feedback

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) ஜூன் 29 அன்று வெலிவேரியவில் விலா கயா விருந்து மண்டபத்தில் நடக்கவிருந்த கட்சியின் பொதுக் கூட்டத்தை போலீஸ் இரகசியமாக சூழ்ச்சி செய்து குழப்பியதை கண்டனம் செய்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சியின் முன்பதிவை இரத்து செய்யுமாறு மண்டப உரிமையாளருக்கு ஒரு சட்டவிரோத உத்தரவை பிறப்பித்த பொலிஸ், கூட்டத்தை நடத்த முடியாமல் செய்தது. எமது கட்சியின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதலை எதிர்க்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி வெலிவேரிய நீர் மாசடைவு தொடர்பான அதன் சுயாதீன தொழிலாளர் விசாரணைக் குழுவின் அறிக்கைகள் மற்றும் முடிவுகளை முன்வைக்கவே இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. வினோக்ரஸ் டிப்ட் புரடக்ட்ஸ் நிறுவனத்தினால் வெலிவேரிய பகுதியில் நிலத்தடி நீர் விநியோகம் மாசுபடுத்தப்படுவது பற்றி விசாரணை செய்யவே கடந்த நவம்பரில் சோசக இந்த விசரணைக் குழுவை ஸ்தாபித்தது. எங்களது விசாரணையானது தண்ணீர் மாசடைதல் பற்றியும், அதே போல் தொழிற்சாலையில் தொழில் நிலைமைகள், கடந்த ஆகஸ்ட்டில் கிராம மக்களின் எதிர்ப்பு மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல் மற்றும் நிறுவனத்தை பாதுகாப்பதில் அரசாங்கத்தின் பங்கு பற்றியும் முக்கிய தகவல்களை கண்டறிந்துள்ளது.

சோசக கூட்டத்திற்கு மண்டபத்தை முன்பதிவு செய்திருந்ததோடு அதற்குரிய கட்டணத்தையும் செலுத்தியிருந்தது. சோசக மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (ஐவைஎஸ்எஸ்இ), கூட்டத்தை கட்டியெழுப்ப பிரதேசத்தில் பிரச்சாரம் செய்திருந்ததுடன், நிகழ்வை விளம்பரப்படுத்தி சுவரொட்டிகளும் ஒட்டியிருந்தன. உலக சோசலிச வலைத் தளத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தன.

கடந்த வெள்ளியன்று காலை, சோசகயின் கூட்ட அமைப்பாளர் ஆனந்த வக்கும்புறவை தொடர்புகொண்ட மண்டப முகாமையாளர், கம்பஹா மாவட்டத்தின் உதவி பொலீஸ் அத்தியட்சகர் சோசக கூட்டத்திற்கு மண்டபத்தை வழங்க வேண்டாம் என தனக்கு உத்தரவிட்டதாக அறிவித்தார். அந்த சூழ்நிலையில், முன்பதிவுவை ரத்துச்செய்யத் தள்ளப்பட்டுள்ளதாக முகாமையாளர் கூறினார். வக்கும்புற கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது, இத்தகைய ஒரு உத்தரவு பற்றி தமக்குத் தெரியாது  என்று அதிகாரிகள் மறுத்தனர்.

சனிக்கிழமை காலை வக்கும்புற மண்டபத்திற்கு சென்றபோது அவரிடம் சம்பவத்தை விளக்கிய உரிமையாளர், வெள்ளிக்கிழமை காலை வெலிவேரிய போலீஸ் நிலையத்தில் இருந்து வந்த ஒரு அதிகாரி, சோசக கூட்டம் பற்றி கம்பஹா பொலிசுக்கு தன்னிடம் பேச வேண்டியிருப்பதாக தெரிவித்ததாக கூறினார். அந்த அதிகாரி தனது மொபைல் போனில் ஒரு அழைப்பை எடுத்து உரிமையாளரிடம் கொடுத்தார். மறுமுனையில் பேசியவர், சோசக கூட்டத்துக்கு மண்டபத்தை வழங்க வேண்டாம் என உரிமையாளருக்கு உத்தரவிட்டார். கூட்டம் நடத்தப்பட்டால், அதில் பங்கேற்கும் அனைவரும் மற்றும் உரிமையாளரும் கைது செய்யப்படுவர், என அவர் எச்சரித்தார்.

வக்கும்புற வெலிவேரிய போலீஸ் நிலையப் பொறுப்பாளரிடம் பேசினார். தன்னுடைய நிலையத்தில் இருந்து எந்தவொரு தலையீடும் செய்யவில்லை என கூறிய அவர், சோசக கூட்டம் நடத்துவதில் போலீசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார். மண்டப உரிமையாளருக்கு எழுத்து மூல அல்லது வாய்மூல உத்தரவாதம் வழங்க வேண்டும் என சோசக கோரியபோது, மண்டபத்துக்குள் நடக்கும் கூட்டத்திற்கு  போலீஸ் அனுமதி தேவையில்லை என்ற சட்ட புள்ளியை மேற்கோள் காட்டி, மறுத்து விட்டார்.

சோசக சார்பாக, வக்கும்புற வெலிவேரிய போலீஸ் நிலையத்தில் எழுத்து மூல புகார் ஒன்றை தாக்கல் செய்தார். அதற்குப் பதிலிறுப்பாக, மண்டப உரிமையாளரிடம் வாக்குமூலம் எடுத்து வர ஒரு அதிகாரி அனுப்பி வைக்கப்பட்டார். உரிமையாளரோ முற்றிலும் மாறுபட்ட கதையையே வாக்குமூலமாக வழங்கியிருந்தார். பெருந்தொகையான மக்களை ஈர்க்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டத்தின் விளைவுகளுக்கு அஞ்சி, தனது சொந்த எண்ணத்திலேயே முன்பதிவை இரத்து செய்ததாக உரிமையாளர் கூறினார். போலீஸ் அதிகாரி எவரும் வரவில்லை என்றும் அவர் மறுத்தார்.

எனினும், உத்தரவுப்படி செயற்பட்ட போலீஸ், அரங்கின் உரிமையாளரை அச்சுறுத்தியே சோசலிச சமத்துவக் கட்சிக் கூட்டத்தை கவிழ்த்தது என்பதை அனைத்து உண்மைகளும் சுட்டிக் காட்டுகின்றன. அதே நேரம், தங்கள் நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை என்று உணர்ந்த போலீசும் அதன் மேலதிகாரிகளும், தமது செயற்பாடுகளை மூடி மறைக்க முயல்கின்றனர். சனிக்கிழமை காலை, வக்கும்புற அதிக நேரம் வெலிவேரிய போலீஸ் நிலையத்தில் காத்திருந்தார் –மாறுபட்ட ஒரு கதையை சொல்ல மண்டப உரிமையாளரை நெருக்குவதற்கு இந்த நேரம் போதுமானது.

போலீசாரின் கவனம் ஏற்கனவே கூட்டத்தின் மீது குவிந்திருந்தது. கடந்த வாரம், இரண்டு போலீஸ் அதிகாரிகள் சோசக கூட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ள மண்டபத்திற்கு வந்திருந்ததாக முகாமையாளர் சோசகக்கு தெரிவித்தார். சோசக பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி என்பதால் அதன் முன்பதிவை ஏற்றுக் கொண்டேன் என்று முகாமையாளர் கூறியதில் திருப்திபட்டதாகக் காட்டிக்கொண்டு அவர்கள் சென்றுவிட்டதாக அவர் கூறினார்.

 இந்த போலீஸ் நடவடிக்கைகள், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு ஸ்தாபனத்தினதும் மேல் மட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தீர்மானத்தின் விளைவாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று, நிலத்தடி நீர் மாசடைவு தொடர்பாக கிராம மக்கள் காட்டிய எதிர்ப்பை அடக்குவதற்கு அரசாங்கம் இராணுவத்தை அனுப்பி, மூன்று இளைஞர்களைக் கொன்றதோடு மேலும் பலர் காயமடைந்தனர். அரசாங்கத்தின் தொடரும் பீதி மற்றும் அச்சுறுத்தும் பிரச்சாரத்தில், எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு போலீசும் நிறுவனத்தின் குண்டர்களும் பயன்படுத்தப்படுகின்றனர். தமது ஆரோக்கியத்தின் செலவில் நிறுவனத்தின் இலாபத்தை அரசாங்கம் பாதுகாப்பதையிட்டு அநேக கிராம மக்கள் சீற்றமடைந்துள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் மற்றும் அந்த பிரதேசத்தில் உள்ள உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான போலீசின் அப்பட்டமான தாக்குதல், தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பாகமாகும். ஜூன் 15 அன்று, அளுத்கமையில் அதிதீவிரவாத பொதுபல சேனாவினால் கிளறிவிடப்பட்ட முஸ்லீம்-விரோத வன்முறைகளைப் பயன்படுத்திக்கொண்ட போலீஸ், "இன அல்லது மத வெறுப்பை உருவாக்கக் கூடிய கூட்டங்களை" தடை செய்தது. பொதுபல சேனா இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்படுவதோடு, இந்தத் தடை தவிர்க்க முடியாமல் நியாயமான எதிரப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும்.
இராஜபக்ஷ அரசாங்கம், ஏற்கனவே பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான தசாப்தகால இனவாத யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட விரிவான பொலிஸ் அரச இயந்திரத்தைக் கொண்டுள்ளது. 2009ல் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து, அரசாங்கம் தனது ஜனநாயக விரோத அதிகாரங்களை அதிகரித்துக்கொண்டுள்ளதுடன் அதன் சிக்கன திட்டம் தொடர்பாக தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பெருகிவரும் எதிர்ப்புக்களின் மீது அவற்றை கட்டவிழ்த்து விடுகின்றது.

சோசக, வினோக்ரஸ் நிறுவனத்தினதும் அரசாங்கத்தினதும் சூறையாடலுக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமவாசிகளை அணிதிரட்டும் ஒரு வழிமுறையாகவே நீர் மாசடைதல் தொடர்பான ஒரு விசாரணையை தொடங்கியது. நாம் நவ சம சமாஜ கட்சி (நசசக) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (USP) போன்ற போலி இடது கட்சிகளை அரசியல் ரீதியில் எதிர்க்கின்றோம். இந்தக் கட்சிகள், வலதுசாரி எதிர் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பி) மக்களின் நலன்களை பாதுகாக்கும் என்ற மாயையை பரப்புவதன் மூலம், பாராளுமன்ற அரசியலின் கட்டமைப்புக்குள் கிராமத்தவர்களை அடைத்துவைக்க முயன்று வருகின்றன. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை தடுப்பதன் மூலம், நவ சம சமாஜ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் கரத்தை பலப்படுத்திவருகின்றன.

கடந்த சில மாதங்களாக, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐவைஎஸ்எஸ்இ, சுயாதீன விசாரணைக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்ததுடன், நிலத்தடி நீர் மாசடைவதில் நிறுவனத்தின் பொறுப்புடைமை, தொழிற்சாலையில் நிலவும் பயங்கரமான நிலைமை மற்றும் ஆகஸ்ட் 1 அன்று ஆர்ப்பாட்டம் செய்த கிராம மக்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலுக்கான அரசாங்கத்தின் பொறுப்புடைமை பற்றியும் ஆதாரங்களை சேகரித்திருந்தன. இதன் விளைவாக, உள்ளூரில் விசாரணைக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைத்தது.

 கடந்த ஏப்ரல் மாதம், எங்கள் விசாரணை குழு, டிப்ட் புரடக்ட்ஸ் கம்பனிக்கு சொந்தமான, துன்னான பிரதேசத்தில் உள்ள ஹன்வெல்ல ரபர் புரடக்ட்ஸ் ஆலையைச் சூழ நீர் மற்றும் சூழல் மாசடைதல் தொடர்பாக ஆராய அதன் விசாரணையை விரிவாக்க முடிவு செய்தது. சோசக முயற்சிக்கு, பொலிஸ் மற்றும் நிறுவனத்தின் குண்டர்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் துன்னான மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது.

பகுதிகளில் துன்னான மற்றும் வெலிவேரிய மக்களின் கொந்தளிக்கும் கோபம் சுயாதீன விசாரணை மூலம் ஒரு அரசியல் வெளிப்பாட்டை எடுத்து விடும் என்று இராஜபக்ஷ அரசாங்கம் அஞ்சுகிறது. ஆரம்பத்தில் இருந்தே, இந்த விசாரணை எதை எதை அம்பலப்படுத்துமோ என அரசாங்கமும் கம்பனியும் மிகவும் பதட்டமாக இருந்தன. இதனாலேயே போலீஸ் சோசக கூட்டத்தை கவிழ்க்க தலையிட்டது.

சோசக மீதான இந்த தாக்குதலை இலங்கை மற்றும் உலகத் தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்க்க வேண்டும். ஜனநாயக உரிமைகள் மற்றும் பெருநிறுவன மாசுபடுத்தல்களுக்கு எதிரான போராட்டமானது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதன் மூலமே முன்னெடுக்க முடியும். சமுதாயத்தை சில செல்வந்தர்களின் இலாப நோக்கங்களுக்காக அன்றி, சுத்தமான தண்ணீர் மற்றும் கெளரவமான வேலை உட்பட உழைக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மேல் இருந்து கீழ் சோசலிச அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும்.