சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian security forces gun down coal mine worker

இந்திய பாதுகாப்பு படையினால் நிலக்கரி சுரங்க தொழிலாளி சுட்டுக் கொலை

By Arun Kumar and Kranti Kumara
20 March 2014

Use this version to printSend feedback

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமான NLCஇல் (நெய்வேலி லிக்னைட் நிறுவனம்) செவ்வாயன்று சுமார் 25,000 தொழிலாளர்கள், துணை இராணுவமான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையால் (CISF) இரக்கமற்ற முறையில் ஓர் இளம் சுரங்க தொழிலாளி, அதற்கு முந்தைய நாள், கொல்லப்பட்டதன் மீது தங்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்த, அவர்களின் வேலைகளிலிருந்து வெளிநடப்பு செய்தனர். திங்களன்று அந்த கொலை நடந்த பின்னர், உடனடியாக தன்னியல்பான போராட்டங்களில் இறங்கிய NLC தொழிலாளர்களிடையே நிலவிய கோபத்தை தணிக்க தொழிற்சங்கங்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தன.

அதில் உயிரிழந்த 31 வயது நிரம்பிய ராஜ்குமார், அந்த நெய்வேலி சுரங்க மற்றும் மின் உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஓர் ஒப்பந்த தொழிலாளர் ஆவார். 1ஆம் எண் சுரங்கத்தில் வேலை செய்து வந்த ராஜ்குமாரும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் 2ஆம் எண் சுரங்கத்தின் பாதுகாப்பு சிப்பாயிடம் அவர்கள் அந்த சுரங்கத்தின் ஒரு சக தொழிலாளரைச் சந்திக்க வேண்டுமென கேட்ட போது, அந்த சம்பவம் உள்ளூர் நேரம் சுமார் மதியம் 1 மணி அளவில் நடந்தது.

அவர்களிடம் உள்ளே செல்வதற்கான எழுத்துப்பூர்வ அனுமதி இல்லை என்ற அடித்தளத்தில் பாதுகாப்பு காவலர்கள் பிடிவாதமாக மறுத்ததும், அங்கே காரசாரமான வாக்குவாதம் தொடங்கியது. CISF காவலர் ராம் சிங் திடீரென அவரது கைத்துப்பாக்கியை எடுத்து, ராஜ்குமாரின் தலையை நோக்கி குறி வைத்து, விசையை அழுத்தி, ராஜ்குமாரை அந்த இடத்திலேயே கொன்றார். இந்த படுபயங்கரமான தாக்குதலால் அதிர்ந்து போன கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடி, சக தொழிலாளர்களுக்கும், அருகாமையிலிருந்த கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

குண்டு சத்தம் கேட்டதும் மற்றும் செய்தி பரவியதும், தொழிலாளர்களும், அண்மை பகுதியிலிருந்த மக்களும் பெரும் எண்ணிக்கையில் ஒன்று திரண்டனர், அது ஒரு பதட்டமான மோதலுக்கு இட்டு சென்றது. போராட்டக்காரர்கள் 2ஆம் எண் சுரங்கத்தை முற்றுகையிட முயன்ற போது CISF பொலிஸ், தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களைக் கைத்தடிகளைக் கொண்டு தாக்கத் தொடங்கினர்.

ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் CISF அலுவலகத்தை சூறையாடியதோடு, உயிரிழந்தவரின் உடலை பொலிஸ் அகற்றுவதை தடுத்து, CISF கொலைகாரரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென கோரிய நிலையில், பின்னர் அங்கே அதிரடி படை உட்பட நூற்றுக்கணக்கான கூடுதல் பொலிஸ், 2ஆம் எண் சுரங்க நுழைவாயில் அருகில் நிறுத்தப்பட்டனர்.

தொழிலாளர்கள் பொலிஸ் படையை நோக்கி கற்களை விட்டெறிந்து, தடியடி நடவடிக்கைக்கு விடையிறுப்பு காட்டினர். அப்பகுதி விரைவிலேயே ஒரு இரத்தம் சிந்திய போர்களமாக மாறியது. பொலிஸ் பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தொழிலாளர்களை ஒரு கிலோமீட்டர் வரையில் விரட்டி சென்றது.

அந்த கடுமையான மோதல் களத்தில் குறைந்தபட்சம் 38 தொழிலாளர்கள் காயப்பட்டனர், 14 பேர் மிக தீவிரமாக காயமுற்றனர். இரண்டாவதாக குறிப்பிடப்பட்டவர்கள் 200 கிலோ மீட்டர் தொலைவில் மாநில தலைநகர் சென்னையின் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதேவேளையில் ஏனையவர்கள் அருகிலுள்ள NLC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடலூர் மற்றும் மந்தாரகுப்பம் போன்ற அருகாமையில் உள்ள பகுதிகளில் சிறு வணிகர்கள் அவர்களின் கடைகளை அடைத்ததோடு, பல போக்குவரத்து தொழிலாளர்கள் ராஜ்குமார் மற்றும் ஏனைய சுரங்க தொழிலாளர்களுக்கு அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தி வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

உயிரிழந்தவரின் விரக்தி அடைந்த தாய் WSWSக்கு இவ்வாறு தெரிவித்தார்: எட்டு பேர் கொண்ட இந்த ஒட்டுமொத்த குடும்பத்தையும் ராஜா தான் கவனித்து வந்தார். என்னுடைய மருமகள் இந்த இளம் வயதில் இரண்டு குழந்தைகளோடு கணவர் இல்லாமல் வாழ விடப்பட்டதைக் குறித்து தான் எனக்கு இப்போது கவலையாக உள்ளது. இந்த சிறிய வீட்டிற்காக நாங்கள் NLCக்கு நில வரி மற்றும் மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். அதுவே ரூ. 800 (12.90 அமெரிக்க டாலர்) ஆகிவிடுகிறது. என்னுடைய மருமகளையும், என்னுடைய குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள இனி யாரும் இல்லை, என்றார்.

நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் தன்னியல்பான எழுச்சிக்குப் பின்னர் தான் தொழிற்சங்கங்கள் 24-மணி நேர வேலைநிறுத்தத்தை அறிவித்தன, அது அலட்சியமாக இந்திய ஊடகங்களால் ஒரு "டோக்கன்" வேலைநிறுத்தமாக குறிப்பிடப்பட்டது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று தமிழ்நாட்டை மையமாக கொண்ட பிற்போக்குத்தனமான அரசியல் கட்சிகளையோ அல்லது ஸ்ராலினிச சிபிஐ (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) அல்லது சிபிஎம் (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) கட்சிகளோடோ இணைந்தவை ஆகும். இந்த அனைத்து தொழிற்சங்கங்களும் பாதிக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் நீண்டகாலமாக தொடர்ந்து காட்டிக்கொடுத்தமைக்கான நீண்ட வரலாறைக் கொண்டுள்ளன.

ஆயுத படைகளை தவிர, பல ஆயுதமேந்திய துணை இராணுவ பொலிஸ் படைகளில் ஒன்றும், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான CISF முதன்முதலில் மே 1994இல் அங்கே நிறுத்தப்பட்டதாக தொழிற்சங்க தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார். அப்போதிருந்து தொழிலாளர்களுக்கும், CISF சிப்பாய்களுக்கும் இடையிலான உறவு பதட்டமாகவே இருந்துள்ளதாக அவர் தெரிவித்தார். NLC அதன் ஆண்டு இலாபங்களில் முழுமையாக 20 சதவீதத்தை, ரூ. 5 பில்லியனை (82 மில்லியன் டாலர்) இந்த ஆயுத படைகளைப் பராமரிக்கவே செலவிடுகிறதென்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முரண்பட்ட விதத்தில், NLC அதிகாரிகளோ தொழிலாளர் சக்தியில் முழு பாதியாக உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை, இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஒரு நீதிமன்ற உத்தரவு இருக்கின்ற போதிலும், அவர்களை நிரந்தரமாக்க தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. பல ஆண்டுகளாக தங்களை நிரந்தரமாக்க வேண்டுமென போராடி வரும் இந்த தொழிலாளர்களுக்கு, அவர்களின் சமபலத்தில் உள்ள நிரந்தர தொழிலாளர்களையும் விட மிக குறைந்தளவே ஊதியம் வழங்கப்படுவதோடு, இவர்களுக்கு இலவச மருத்து சிகிச்சைகளோ, விடுப்புகளோ அளிக்கப்படுவதில்லை.

தொழிலாளர்களின் சீற்றமான கோபத்தை எதிர்கொண்ட NLC தலைவரும், நிர்வாக இயக்குனரும் The Hindu நாளிதழுக்குத் தெரிவிக்கையில், ஒரு தொழிலாளர் ஒரு CISF 'ஜவானால்' (சிப்பாய்) சுட்டுக் கொல்லப்படுவது NLC வரலாறில் இதுவே முதல்முறையாகும் என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், அந்த சிப்பாய் "பொறுமையைக் கடைபிடித்திருக்க" வேண்டும், தொழிலாளர்களை விரட்ட கைத்தடிகளைப் பயன்படுத்தி இருக்கலாம் என்றார். அவர் போலித்தனமான இரக்க உணர்வோடு கூறினார், அவர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டி இருந்திருந்தால், அந்த காவலர் தொழிலாளரின் கால்களில் சுட்டிருக்கலாம்!

இந்திய தொழிலாளர்கள் இவ்வாறாக இரக்கமற்று படுகொலை செய்யப்படுவது  ஏதோ சித்தபிரமையால் ஏற்பட்டதோ அல்லது தற்செயலான விபத்தோ அல்ல. NLC நிர்வாகம் குறிப்பாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எதிரான விரோதத்தைத் தீவிரமாக ஊக்கப்படுத்தியது. அவமானப்படுத்துதல் மற்றும் தொழில்துறை அடிமைத்தனம் நிலவும் ஒரு சூழலில், இந்த குறிப்பிட்ட CISF 'ஜவான்' ராஜ்குமாரைக் கொல்வதை நியாயமாக கருதியதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.

பல தொழிற்சங்க தலைவர்களும், இதழாளர்களும் கூட CISF மற்றும் மாநில பொலிஸ் படையால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். சாலைகளின் இருதரப்பும் நிறுத்தப்பட்டிருந்த தொழிலாளர்களின் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் பைக்குகளையும் கூட பொலிஸ் சேதப்படுத்தி உள்ளனர்.

NLC, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் (முன்னர் மெட்ராஸ் என்றிருந்தது) தென்மேற்கில் சுமார் 200 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைந்துள்ள உயர் இலாபமளிக்கும் அரசுக்கு சொந்தமான மற்றும் அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனமாகும். அது நெய்வேலியில் ஆண்டுக்கு 28.5 மில்லியன் டன் திறன் கொண்ட மூன்று திறந்தவெளி லிக்னைட் சுரங்கங்களோடும், ராஜஸ்தானின் பார்சிங்சரில் ஆண்டுக்கு 2.1 மில்லியன் டன் திறன் கொண்ட ஒரு திறந்தவெளி லிக்னைட்  சுரங்கத்தோடும் செயல்பட்டு வருகிறது.அத்துடன் அது நெய்வேலியில் மூன்று தெர்மல் மின் நிலயங்களையும், ராஜஸ்தானின் பார்சிங்சரில் ஒன்றையும் இயக்குகிறது.

தொழிலாளர்கள் விடயங்களை அவர்களின் சொந்த கரங்களில் எடுக்கக்கூடுமென அஞ்சிய பின்னர் தான் அதிகாரிகள் ராஜ்குமாரைக் கொன்ற அந்த CISF பொலிஸ்காரரை கைது செய்தனர். அந்த பொலிஸ்காரர் ஓர் நீதிமன்ற உத்தரவாணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு மாவட்டத்தின் முதன்மை நிர்வாக மற்றும் வருவாய் அதிகாரியான மாவட்ட கலெக்டர் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார். தொழிற்சங்கங்கள் கொலை குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய அழைப்பு விடுத்திருப்பதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு போதிய நிதி நஷ்டஈடுகளை வழங்கவும், அந்த குடும்பத்தின் ஒரு உறுப்பினருக்கு நிரந்தர வேலை வழங்கவும் கோரிக்கை விடுத்தன.

NLC இல் நிலவும் மிகவும் பதட்டமான சூழ்நிலை, நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துள்ள கொடூரமான நிலைமைகளின் விளைவாகும். ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் வேலையை நிரந்தரமாக்க 2012 உச்ச நீதிமன்ற ஆணையை அமுல்படுத்த கோரி வருகின்றனர். நிர்வாகம் இதை காலந்தாழ்த்தி வருவதோடு, அது பணிமூப்பு அடிப்படையில் ஒரு பட்டியல் தயாரித்துள்ளதாக கூறுகிறது. இந்த "பட்டியல்" தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பின்னர் தான் வெளியிடப்பட்டது.

நீதிமன்ற ஆணையில் கால வரம்பு இல்லையென்று கூறி, தெளிவற்ற வார்த்தை பிரயோகம் கொண்ட நீதிமன்ற ஆணையை, நிர்வாகம் சிடுமூஞ்சித்தனத்துடன் தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது. வேலை காலியிடங்கள் உருவாகும் போது தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று அது குறிப்பிடுகிறது. இதுவரையில் ஒரு ஒப்பந்த தொழிலாளி கூட நிரந்தரமாக்கப்பட வில்லை.

NLCஐ தனியார்மயமாக்கும் அரசு திட்டங்களுக்கு எதிராக கடந்த ஜூலையில் எழுந்த ஒரு "காலவரையற்ற" வேலைநிறுத்தத்தை வெறும் 13 நாட்களுக்குப் பின்னர் தொழிற்சங்கங்கள் விற்று தீர்த்தன. (பார்க்கவும்: இந்தியா: தனியார்மயமாக்க-எதிர்ப்பு வேலைநிறுத்தம் விலைபேசப்பட்டதில் கோபமடைந்திருக்கும் என்.எல்.சி. தொழிலாளர்கள்) தனியார்மயமாக்கும் திட்டம் அனைத்து NLC தொழிலாளர்களையும் அச்சுறுத்துகிறதென்பதை உணர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்களும் அவர்களின் சக நிரந்தர தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். தொழிலாளர்களின் இருதரப்பு குழுக்களும், வேலைநிறுத்தத்தை "சட்ட விரோதமானதாக" அறிவித்த ஒரு நீதிமன்ற உத்தரவையும், கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சுறுத்தல்களையும் பகிரங்கமாக எதிர்த்து நின்றன.

அந்த போராட்டம் விற்கப்பட்டமை மீண்டுமொருமுறை தொழிற்சங்கங்களின் துரோக பாத்திரத்தை அம்பலப்படுத்தியது. அரசியல் கட்சிகளோடு இணைந்துள்ள அவை [தொழிற்சங்கங்கள்] அனைத்துமே, இந்தியாவை உலக மூலதனத்திற்கு மலிவுக்கூலி தளமாக "அபிவிருத்தி செய்யும்" இந்திய மேற்தட்டின் வேலைத்திட்டத்திற்கு தம்மை அர்ப்பணித்துள்ளன.

வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்டமை NLC நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்தியது, அது அப்போதிலிருந்து வேலையில் வேகப்படுத்தலை திணித்ததோடு, தொழிலாளர்களை ஒழுங்கு நடவடிக்கைகளைக் கொண்டு அச்சுறுத்தியது. ராஜ்குமாரின் இந்த கொலையும் இந்த உள்ளடக்கத்திற்குள் தான் வருகிறது.