சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP begins election campaign

சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது

By our correspondence
18 February 2014

Use this version to printSend feedback

மார்ச் 29 நடக்கவுள்ள மேல் மாகாண சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பினதும் உறுப்பினர்கள், கட்சியின் கொள்கைகளை தெளிவுபடுத்தும் பிரச்சாரம் ஒன்றை கடந்த வாரக் கடைசியில் கொம்பனி வீதி மற்றும் வனாதமுல்ல குடியிருப்பு பகுதிகளில் மேற்கொண்டனர்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் தலைமையிலான நிதி மூலதனத்தால் கட்டளையிடப்படும் பொருளாதார சிக்கன வேலைத் திட்டங்களை அமுல்படுத்தி வரும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், கொழும்பில் வசிக்கும் 70,000 குடிசைவாசிகள் மற்றும் வறிய குடும்பங்களை அவர்களது தற்போதைய வீடுகளில் இருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அந்த இரு பிரதேசங்களிலும் இதுவரை பல நூறு குடும்பங்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளன. வனாதமுல்லவில் 5,000 குடும்பங்களை வெளியேற்ற நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்தல் விடுத்துள்ளது.

சோசக மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்றதுஎன்ற சோசக தேர்தல் அறிவித்தலின் நூற்றுக்கணக்கான பிரதிகளை விநியோகித்து வீடு வீடாகச் சென்ற சோசக அங்கத்தவர்கள் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பப் பெண்களோடு கலந்துரையாடினர். அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளால் சீனாவுக்கு எதிராக ஆசியாவுக்குள் தயாரிக்கப்படும் யுத்தம் சகல நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையாகும், என சோசக உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் போலவே, எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜேவிபீ), தேர்தலில் போட்டியிடும் நவசமசமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற போலி இடது கட்சிகளும் இந்த ஏகாதிபத்திய யுத்த ஆபத்தை தொழிலாளர்களுக்கு மூடி மறைத்து தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களை அதற்குப் பலிகொடுக்க செயற்பட்டுக்கொண்டிருக்கும் விதத்தை பற்றி ஒரு பரந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு இங்கு அவகாசம் கிடைத்தது.

உலகம் பூராவும் போலவே, இலங்கையிலும் தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் இளைஞர்களும் தமது உரிமைகளை வெட்டித்தள்ளும் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சிக்கு முகங்கொடுக்கின்றனர். இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழும் இதே வேலைத் திட்டமே நடமுறைப்படுத்தப்படுகின்றது. யூ.என்.பீக்கோ அல்லது ஜே.வி.பீக்கோ, அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோத, முதலீட்டாளர் சார்பு பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்துடன் அடிப்படை முரண்பாடுகள் கிடையாது என்பதை சோ..க உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினர். கொழும்பு நகரத்தை தெற்காசியாவின் வர்த்தக மையமாக மாற்றும் திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்திய யூஎன்பீ, அதன் ஆட்சிக் காலத்தில் கொழும்பில் குடிசைவாசிகளை வெளியேற்றும் கொடூர நடவடிக்கையில் ஈடுபட்டதை நினைவுபடுத்திக்கொண்டு நடத்திய கலந்துரையாடலை பிரதேசவாசிகள் கவனமாக செவிமடுத்தனர்.

கொம்பனி வீதியில் வசிக்கும் ஒரு ஆசிரியை தெரிவித்ததாவது: “உண்மையில் எனக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும் உங்களின் கருத்துக்களை இன்றுதான் கேட்கக் கிடைத்தது. நீங்கள் எங்களது அறிவுக்கே பேசுகின்றீர்கள். வீடுகள் உடைக்கப்படுவதைப் பற்றி கூறுவதெனில், அதை நான் முழுமையாக எதிர்ப்பதாகவே கூற வேண்டும். எல்லாக் கட்சிகளதும் கருத்துக்களை அவதானிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.”

எனினும், தொழிலாள வர்க்கத்துக்கு தனது பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்கு சோசலிச வேலைத் திட்டம் ஒன்றை சோசக மட்டுமே முன்வைக்கின்றது என்றும், ஏனைய சகல கட்சிகளும் எதாவதொரு வழியில் தற்போதைய காலங்கடந்து போன முதலாளித்துவ முறைமைக்கு மக்களைக் கட்டிப்போடவே செயற்படுகின்றன என்றும் விளக்கிய போது, “அதைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். எங்கள் வீட்டில் இருந்து ஒருவரை உங்கள் கூட்டத்திற்கு அனுப்பி வைக்கின்றேன்என அவர் தெரிவித்தார்.

சோசக உறுப்பினர்களுடன் பேசிய, கொம்பனி வீதியை வதிவிடமாகக் கொண்ட நடுவயதான ஒருவர், வீட்டை இழந்து தான் எதிர்கொள்ளும் சிரமமான நிலைமையை விளக்கினார். “நான் கூலி வேலை செய்தே வாழ்கின்றேன். நான் இப்போது 50 வயதை நெருங்கிவிட்டேன். இரண்டு மகன்மார் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக எனக்கு ஏற்படும் இளைப்பு நோயின் காரணமாக, எந்த வேலையையும் சரியாக செய்துகொள்ள முடியாதுள்ளது. அதனால் மத்திய கிழக்கில் வேலை செய்யும் எனது மூத்த மகன் அனுப்பும் பணத்திலேயே நாங்கள் மூவரும் வாழ்கின்றோம். எனினும் சாப்பாட்டுக்கே சிரமம். எனது மனைவி நீரிழிவு நோயாளி. நாங்கள் இருவரும் அரசாங்க மருந்தகத்திலேயே மருந்து எடுக்கின்றோம். உடல் பலவீனத்தினால் இளைய மகனால் தொழில் எதுவும் செய்ய முடியாது. அதனால் நாங்கள் மேலும் துன்பத்தில் விழுந்துள்ளோம். மூத்த மகன் சிரமத்துடன் பணம் அனுப்பினாலும் அந்த நாட்டிலும் மேலும் நிலைமை மோசமடைந்து வருகின்றது என்று அவர் கூறுகின்றார். இந்த பிரதேசத்தில் அநேகமானவர்களின் நிலைமை இதுதான். நிலைமை இப்படி இருக்கும் போது வீடுகளை உடைப்பது எந்தளவுக்கு அநியாயம் என்பதை நினைத்துப் பாருங்கள். 2016ல் கொம்பனி வீதியில் ஒரு வீடும் மிச்சம் இருக்காதாம்.

தமது வீடு அதிகாரமற்ற கட்டிடம் அல்ல என்றும், பரம்பரை பரம்பரையாக அதில் வாழ்ந்து வந்ததாகவும் அவர் மேலும் கூறினார். “வாழ்க்கைப் பூராவும் இந்த வீட்டிலேயே கடத்தியுள்ளோம். இந்தப் பிரச்சினையினால் இந்தப் பிரதேசத்தில் பல முதியவர்கள் உயிரிழந்தனர். எனக்கு நன்றாகத் தெரிந்த இருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இன்னொருவர் தூக்கிட்டுக்கொண்டார். இதை நிறுத்த யூஎன்பீக்கு முடியாது என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். மாநகர சபையில் ஆட்சியில் இருப்பது யூஎன்பீ தான். ஆனால் அவர்கள் எங்களுக்கு என்ன செய்துள்ளார்கள்? நீங்கள் சொல்வது போல் தொழிலாளர்களுக்கு வறியவர்களுக்கு ஒரு கட்சி அவசியம். எங்கள் அனைவருக்கும் பொருத்தமான இடத்தில் பொருத்தமான வீடுகள் கொடுக்கப்பட வேண்டும். வீடுகளை உடைப்பதற்கு ஒத்துழைப்பவர்களுடன் நான் பேசுவதே இல்லை.”

வனாதமுல்ல குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பப் பெண், தற்போதுள்ள அரசியல் கட்சிகள் பற்றிய தனது அதிருப்தியை வெளியிட்டார்: “மூன்று நான்கு வருடங்களாக நாங்கள் வாக்களிப்பதில்லை. எல்லா அரசாங்கங்களும் ஒன்றுதான். எவரும் விலைவாசியை குறைப்பதில்லை. எனது தம்பிக்கு இரு கால்களும் இல்லை. அவருக்கு சிறுநீர் கழிக்க உரையொன்றும் போடப்பட்டுள்ளது. வீட்டில் ஒரு தங்கையும் மேலும் இரு தம்பிமாரும் உள்ளனர். வாலிபர்களால் ஒன்றாக சுருண்டு படுக்க முடியாதுதானே. அதனால் எங்களுக்கு கொஞ்சமென்றாலும் இட வசதி தேவை. அதனால்தான் நாங்கள் இப்படி வீடுகளைக் கட்டிக்கொண்டுள்ளோம். ஆனால் இப்போது எங்களை டப்பா போன்ற வீடுகளில் அடைக்கப் பார்க்கிறார்கள். அப்படி இடவசதி இல்லாத வீடுகளுக்கு செத்தாலும் போக மாட்டோம்.”

எங்களுக்கு இங்கிருந்து வெளியேற விருப்பமில்லை. ஆனால், எங்களுக்கு தேவையானளவு இடவசதி உள்ள வீடு கொடுக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்கிறோம். அப்படி இல்லாவிட்டால் நாங்கள் போகவே மாட்டோம். எதிர் வீட்டில் உள்ள தம்பி வெளிநாடு போய் பணம் தேடி வீடு கட்டியுள்ளார். அவர் அந்த நல்ல வீட்டை விட்டு டப்பா வீட்டுக்கு போவாரா? பலாத்காரமாக வெளியேற்ற முயன்றால் நாம் பார்ப்போம் என்ன நடக்கின்றது என்பதைஎன அவர் கூறினார்.

வனாதமுல்ல, லெஸ்லி ரனகல வீதியில் வசிக்கும் ஒரு இளைஞர், அரசாங்கம் குடியிருப்பாளர்களுக்கு எதிராக பலாத்காரத்தைப் பயன்படுத்த முயற்சிக்கும் விதத்தை தனது அனுபவத்தைக் கொண்டு விளக்கினார்: “45 இலக்க தோட்டத்தில் உள்ள சிலர் வீடுகளை உடைப்பதற்கு எதிராக சங்கம் ஒன்றை அமைத்தனர். அதற்கு அண்மையில் நாமல் இராஜபக்ஷ வந்து பேசினார். வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் வீடுகளை உடைக்க எடுத்த தீர்மானத்தை கைவிடுவதில்லை என்றார். எங்களால் இதைவிட்டு வெளியேற முடியாவிட்டால் ஹம்பந்தொட்டையில் இருந்து குடும்பங்களை கொண்டுவந்து குடியேற்றுவதாக கூறினார். எவருக்கும் கேள்வி கேட்க, உரையாற்ற இடம் கொடுக்கவில்லை. முன்னர் நன்றிக்கடனாக எங்களுக்கு மண்டபம் ஒன்றைக் கட்டிக்கொடுத்த [ஆளும் கட்சியின்] மிலிந்த மொரகொடவுக்கு வாக்களித்தோம். இம்முறை யாருக்கும் கொடுக்க மாட்டோம். வீடுகள் உடைக்கப்படுவது பற்றி நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். நகர அபிவிருத்தி அதிகார சபை எங்களுக்கு கொடுப்பதாக கூறிய வீடுகளுக்கு பெறுமதியை அதிகரித்து போலி ஆவணம் ஒன்றை ஆணைக்குழுவுக்கு வழங்கியிருந்தது.”

மின்சார சபையில் வேலை செய்து ஓய்வு பெற்ற ஒரு ஜோடி மிக அக்கறையுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது: “எல்லா அரசாங்கங்களும் தம்முடைய நலன்களுக்கும் முதலாளித்துவத்தின் நலன்களுக்குமே செயற்படுகின்றன. மக்கள் மஹிந்த இராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து மூன்றில் இரண்டு என்ற விகிதத்தில் அதிகாரத்தை கொடுத்தனர். அதனால் இப்போது எங்களுக்கு இருந்த இடமும் இல்லாமல் போகப்போகின்றது. இப்போது எங்களுக்கு எங்களது வீட்டை பாதுகாக்க போராட வேண்டியுள்ளது,” என அந்த பெண் குறிப்பிட்டார்.

லங்கா சமசமாஜக் கட்சியின் உறுப்பினராக இருந்ததாக கூறிய அவரது கனவன், தான் கட்சிக்காக அர்ப்பணித்த விதத்தையும், 1964ல் சமசமாஜக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததையும் நினைவூட்டி தெரிவித்ததாவது: “நான் முதலில் சமசமாஜ இயக்கத்தில் இருந்தேன். உண்மையின் நான் யடியந்தொட்டையில் நடந்த சமசமாஜக் கட்சி மாநாட்டுக்கு கொழும்பில் இருந்து நடந்தே சென்றிருந்தேன். 1964 காட்டிக் கொடுப்பு பற்றி எனக்கு சரியான தெளிவு இல்லை. அது பிழை என்பது இப்போதுதான் புரிந்தது.”