சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

May Day 2014 and the breakdown of world capitalism

2014 மே தினமும் உலக முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும்

By Nick Beams
6 May 2014

Use this version to printSend feedback

மே 4 ஞாயிறன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச இணையவழி மே தினக் கூட்டத்துக்கு, ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளர் நிக் பீம்ஸ் வழங்கிய உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.

பூகோள நிதிய நெருக்கடி வெடித்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் ஒரு மறுக்க முடியாத உண்மையை எதிர்கொள்கின்றனர்: அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து ஆபத்துக்களும் -யுத்தமும் அவர்களின் வேலைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களும்- 2008 செப்டம்பரில் தொடங்கிய உலக முதலாளித்துவ முறைமையின் முறிவில் இருந்தே எழுகின்றன.

இந்த நெருக்கடியானது முதலாளித்துவ அமைப்பு முறையின் அடிப்படை அஸ்திவாரங்களில் வேரூன்றியுள்ள முரண்பாடுகளில் இருந்தே எழுகிறது, என்பதை ஆரம்பத்திலிருந்தே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்தி வந்தது. 1914 ஆகஸ்ட்டில் முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்புடன் வெளித் தோன்றி, அதைத் தொடர்ந்து வந்த அனைத்து அவலங்களுக்கும் வழிவகுத்த அந்த முரண்பாடுகள், மீண்டும் மேல் மட்டத்துக்கு வந்துள்ளன.

இந்த நெருக்கடியை ஒரு நிலைமுறிவாக பண்புமயப்படுத்துகையில், முதலாளித்துவ அமைப்புமுறை எளிதாக ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்று எந்த விதத்திலும் நாம் பொருள்படுத்தவில்லை. மாறாக, இந்த நெருக்கடியானது ஆளும் வர்க்கங்களின் தரப்பில் மிகவும் வெறித்தனமான நடவடிக்கைகளுக்கு எழுச்சியூட்டும். இது இரண்டு வடிவங்களை எடுக்கும்: ஒவ்வொரு வல்லரசும் தனது விரோதிகளை விலை கொடுக்கச் செய்து தனது நிலையை விரிவாக்க முனைகையில், புதிய ஏகாதிபத்திய யுத்தங்களை நோக்கி உந்தப்படும், மற்றும் தொழிலாள வர்க்கத்தை 1930கள் மற்றும் அதற்கும் அப்பாலான நிலைமைகளுக்கு தள்ளிச் செல்லும் நோக்கில், ஒவ்வொரு நாட்டிலும் வர்க்க உறவுகளில் வன்முறையான மறுகட்டமைப்பு செய்யப்படும்.

முதலாளித்துவம் மற்றும் கணிப்பீட்டு சக்தியின் பாரிய ஒழுங்கமைப்பின் உதவியோடு இருக்கும் அதன் பத்தாயிரக் கணக்கான பொருளியல்வாதிகள், சிந்தனைக் குழுக்கள், பகுப்பாய்வாளர் குழுக்கள் மற்றும் பல அனுபவசாலிகளுக்கும், ஒரு சமயத்தில் "சாதாரணமாக" செயல்பட்டுக் கொண்டிருந்ததாகக் கருதப்படும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் நிலைமைகளுக்குத் திரும்புவதற்கு கொள்கைகள் எதுவும் இல்லை.

நமது பகுப்பாய்வு எவ்வாறு நிரூபிக்கப்பட்டது? அது முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், பிரதான முதலாளித்துவ பொருளாதாரங்களில் நிலைமையை பண்புமயப்படுத்துவதற்கு “நீடித்து நிலவும் மந்தநிலை” என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இன்னமும் உலகின் தனித்த மிகப் பெரிய தேசியப் பொருளாதாரமாக விளங்கும் அமெரிக்கா, உத்தேசிக்கப்பட்ட மீட்சியின்" ஆறாவது ஆண்டுக்குள் நுழைய உள்ளது. ஆனால் இது போன்ற “மீட்சி” வேறு இருந்ததில்லை. மந்தநிலைமைக்குப் பின்னரான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடந்த மூன்று விரிவாக்கத்தில் இருந்த வேகத்தில் பாதியாக, ஆண்டுக்கு சராசரி 1.8 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

இந்த வாரம், அமெரிக்க வளர்ச்சியானது இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வெறும் 0.1 சதவீதமளவே இருப்பதாக உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. 2008க்குப் பிந்திய பொருளாதாரத்தின் பித்துப்பிடிக்கும் பண்பை கொண்டாடிய வோல் ஸ்ட்ரீட், இந்தச் செய்தியை ஒரு சாதனை உயர்வாக வரவேற்றது.

ஐரோப்பாவிலும் நிலைமை சிறப்பாக இல்லை. சில நாடுகளில் 60 சதவீத இளைஞர் வேலைவாய்ப்பின்மையுடன் சேர்ந்து, தொழிலின்மை கிட்டத்தட்ட 12 சதவீதமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியானது நெருக்கடிக்கு முன்னர் இருந்த போக்கு தொடர்ந்து கொண்டிருக்கும் வகையில், ஏறத்தாழ 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, நிதிய நெருக்கடியின் தொடக்க நாட்களில் இருந்த அளவுகளுக்கு கூட திரும்பவில்லை. முதலீடு ஏறக்குறைய 25 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதோடு தொழில்துறை உற்பத்தியானது நெருக்கடிக்கு முந்தைய போக்கை விட 16 சதவீதம் குறைவாக உள்ளது. யூரோ மண்டலத்தில் உள்ள குறைந்தபட்சம் எட்டு நாடுகள், பணச்சுருக்கத்தை அனுபவித்து வருகின்றன இது மந்தநிலைமையின் நிச்சயமான ஒரு அறிகுறியாகும்.

ஐரோப்பிய ஆளும் மேற்தட்டுகளும், முதலாளித்துவத்துக்கு அதிக மனிதநேய வடிவத்தை வழங்குவதாக காட்டப்படும் சமூக சந்தை மாதிரி என்றழைக்கப்படுவதன் ஆசிரியர்களும் பிரேரிக்கும் கொள்கை என்ன? அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது குவிக்கப்பட்டுவரும் சிக்கன நடவடிக்கைகளுடன் ஆகவும் மூர்க்கமாக முன்செல்கின்றனர்.

2008ன் நெருக்கடிகள் வெடித்த பின்னர், இலாப அமைப்பு முறைக்கு சேவை செய்யும், உச்ச ஊதியம் பெறும் கருத்துரையாளர்கள், கல்விமான் அற்பர்கள் மற்றும் பொருளியல் பன்டிதர்களும், சீனாவை தலைமை நிலையில் கொண்ட “எழுச்சிபெறும் சந்தைகள்” என்றழைக்கப்படுபவை, பூகோள முதலாளித்துவ விரிவாக்கத்திற்கு ஒரு புதிய அடித்தளத்தை வழங்கும் என்று மறுஉத்தரவாதம் வழங்கினர். பிரதான முதலாளித்துவ மையங்களில் பேரழிவு ஏற்பட்டிருந்தாலும், இந்த பொருளாதாரங்களால் "தனித்து நிற்க" முடிவதோடு, ஆகையால், சில கொந்தளிப்புகளுக்குப் பின்னர், பொருளாதார வளர்ச்சி மீண்டும் நிலை நிறுத்தப்படும், என்று அவர்கள் வாதிட்டனர்.

என்னவொரு குரூரமான நகைச்சுவை! சீனா ஒரு நிதியப் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. பிரச்சினை, அங்கு ஒரு நெருக்கடி ஏற்படுமா என்பது அல்ல, மாறாக, எவ்வளவு விரைவில் அது ஏற்படும், அது எவ்வளவு பெரியதாக இருக்கும், மற்றும் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ முறைக்கும் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.

முதலாளித்துவ திரட்சியானது தவிர்க்க முடியாதவாறு சமூகத்தின் ஒரு துருவத்தில் பெரும் செல்வ வளத்தை குவிப்பதோடு மறுபுறம் வறுமை மற்றும் அவலங்களைக் குவியச் செய்கின்றது என்ற முடிவு, விஞ்ஞானபூர்வ சோசலிசத்தின் ஸ்தாபகரான கார்ல் மார்க்ஸால் அடையப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்றாகும். சமூகத் துருவப்படுதலானது "அறிவொளிமிக்க" அரசியல்வாதிகளால் ஏதோவிதத்தில் மாற்றிக் கொள்ளக்கூடிய கொள்கைகளால் உருவாக்கப்படுவதில்லை, மாறாக, அது இலாப அமைப்பு முறையினது புறநிலை தர்க்கத்திலேயே தங்கி இருக்கின்ற காரணத்தால், முதலாளித்துவ சொத்து உறவுகளைத் தூக்கியெறிவதன் மூலமாக மட்டுமே அதற்கு முடிவுகட்ட முடியும், என்பதை மார்க்ஸின் முடிவு அம்பலப்படுத்தியதால், அது தசாப்த காலங்களுக்கு தாக்குதலுக்கு உள்ளானது.

உண்மைகளும் புள்ளிவிபரங்களும் மார்க்ஸ் சரியென்று நிரூபித்துள்ளன. முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஒவ்வொரு பெரும் நெருக்கடியும் இந்த தாக்கத்தைக் கொண்டுள்ளன: அது அற்ப ஆயுளுடைய, வரலாற்று ரீதியில் மாறுதலடையும் மற்றும் தற்காலிகமான இயல்நிகழ்வை தோலுரித்துக் காட்டுவதோடு, இலாப அமைப்பு முறையை உந்தித்தள்ளும் அடிநிலையிலுள்ள அடிப்படை சக்திகளை வெளிக்கொணர்கின்றது. 2008 நெருக்கடியும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், சமூகத் துருவப்படுதலானது அதீத வேக விகிதத்தோடு உயர்ந்துள்ளதுடன், அதன் விளைவாக உலகம் இப்போது ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்த கனவான்களின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது.

உலகின் 85 மிகப் பெரிய பணக்காரர்கள்வெறும் 85 பேர்- உலக ஜனத்தொகையின் கீழ்மட்டத்திலுள்ள 50 சதவீத்தினரின், அதாவது 3.5 பில்லியன் மக்களின் செல்வ வளத்திற்கு சமமான செல்வ வளத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேல் மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் செல்வம் 110 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். இது அடிமட்டத்திலுள்ள 50 சதவீத உலக மக்களின் மொத்த செல்வ வளத்தை விட 65 மடங்கு அதிகமாகும். அதேவேளையில், சுமார் 3 பில்லியன் மக்கள், நாளொன்றுக்கு 2.50 டாலருக்கும் குறைவான வருமானத்தோடு உயிர்வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய அளப்பரிய செல்வத்திரட்சி வரலாற்றில் இருந்ததேயில்லை.

மார்க்சின் விமர்சகர்கள் என்றிருக்கக் கூடியவர்கள், அவரது முடிவுகள் ஒருவேளை 150 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்டளவில் செல்லுபடியானதாக இருந்திருக்கலாம் என வலியுறுத்தும் அதே சமயம், வரலாறு அவர்களை கடந்து வந்துவிட்டது. உண்மையில், 19ம் நூற்றாண்டையும் விட 21ம் நூற்றாண்டிலேயே, அடிப்படை பொருளாதார மற்றும் சமூக போக்குகளின் மிகவும் தீர்க்க தரிசனமான பகுப்பாய்வுகளாக அவை நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஆளும் வர்க்கத்திடமும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களிடமும், அவர்களின் சொந்த அமைப்புமுறையின் நெருக்கடிக்கு எந்த விளக்கமும் கிடையாது. அவர்களில் சிலர், அது போதிய நெறிமுறை மற்றும் நிதியியல் கண்காணிப்பு இல்லாததால் ஏற்பட்டதாக கூறுகின்றனர். ஏனையவர்கள் தவறான கொள்கைகளின் விளைவு என்று கூறுகின்றனர். அதிகம் "இடதுசாரி" சாயத்தைப் பூசிக்கொண்டுள்ள சிலர், நீண்டகால கண்ணோட்டத்தை எடுத்து, யுத்தத்திற்குப் பிந்திய கேன்சியன் கொள்கைகள் உதறிதள்ளப்பட்டதுடன் ரீகன் மற்றும் தாட்சரால் தொடங்கப்பட்ட சுதந்திர சந்தை நிகழ்ச்சி நிரல் பதிலீடு செய்யப்பட்டதாலேயே இந்த நெருக்கடி எழுந்துள்ளதாக வாதிடுகின்றனர். இது ஒரு இரண்டாந்தர திரைப்பட நடிகர் மற்றும் அந்தஸ்தில் மிதக்கும் பெருவியாபாரியின் மகளும் உலக-வரலாற்றுப் புள்ளிகளாக இருப்பது போன்றதாகும்.

இத்தகைய வலியுறுத்தல்கள் அனைத்தும், இந்த நெருக்கடியானது ஏதோவொரு விதத்தில் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு வெளியே உள்ள காரணிகளின் விளைவால் ஏற்படுவதுடன், முதலாளித்துவம் வெறுமனே அதற்கு பலியாகி விடுகிறது, என்ற கூற்றிலேயே தங்கியிருக்கின்றன. இந்த அணுகுமுறையானது ஒரு தீர்க்கமான வர்க்க திசையமைவு மற்றும் வரலாற்று முன்னோக்கிலிருந்து தோன்றுகின்றது. அவர்களுக்குள் எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்து முன்னாள் "தாராளவாதிகள்" மற்றும் "இடது" தட்டினரும், முதலாளித்துவம் வரலாற்று ரீதியில் அபிவிருத்தியடைந்த ஒன்று அல்ல, ஆகவே, அது வரலாற்று ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையும் அல்ல, அடிமைமுறை மற்றும் நிலப்பிரபுத்துவத்தோடு வரலாற்றை கடக்க வேண்டிய நியதியை கொண்டதுமல்ல, மாறாக, சமூகப்-பொருளாதார அமைப்பின் நிலைத்திருக்கக் கூடிய வடிவம் மட்டுமே என்ற கருத்தை பேணி வருகின்றனர்.   

மார்க்சிஸ்டுகளோ நெருக்கடிகள் மற்றும் பொருளாதார உடைவு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு வெளியே அபிவிருத்தி அடைவதில்லை, மாறாக அதன் அடிப்படை உள்ளார்ந்த முரண்பாடுகளில் வேரூன்றி உள்ளது என்ற புரிதலின் அடிப்படையில் தங்களை நிறுத்திக் கொண்டு, அடிப்படையில் அவர்களுக்கு எதிரான முன்னோக்கை கொண்டுள்ளனர்.

இலாபத்தின் பாதுகாவலர்களும் அனுதாபிகளும், நிலவும் இந்த அடிப்படை முரண்பாடுகளை மறுக்கின்றனர். ஆனால் மார்க்ஸ் விளக்கியதைப் போல்: “இத்தகைய முரண்பாடுகள் இருப்பதாலேயே நெருக்கடியும் இருக்கின்றது... முரண்பாடுகள் இல்லை என்று ஒருவர் மெய்ப்பித்துக்கொள்ள விரும்புவதானது அதேசமயத்தில் உண்மையிலே இருக்கின்ற முரண்பாடுகளை அவை இருக்கக் கூடாது என்று பக்தியுடன் விரும்புவதன் வெளிப்பாடாகும்.” 

முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் இரண்டு முக்கிய வடிவங்களை எடுக்கின்றன: ஒன்று, உற்பத்தியின் பூகோளமயமாக்கப்பட்ட பண்புக்கும் உலகை பிரிக்கும் தேசிய-அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான முரண்பாடாகும்; மற்றையது, தொழிலாளர்களின் உற்பத்தி திறன் மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்தியின் அபிவிருத்திக்கும், இலாப முறைமையின் மூலமாக செல்வத்தை தனியார் அபகரிப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கும் உற்பத்தி சாதனங்களின் மீதான தனியாரின் உரிமைக்கும் இடையிலான முரண்பாடாகும்.

முதலாவது, உலக பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்துவதற்கு போட்டி தேசிய-அரசுகளுக்கும் வல்லரசுகளுக்கும் இடையிலான போராட்டம் இறுதியில் யுத்தத்திற்கு வழிவகுப்பதில் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது; இரண்டாவது, அனைத்துக்கும் மேலாக பெரும் செல்வவளத்தின் உற்பத்திக்கு மத்தியில் வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக அவலத்தின் அதிகரிப்பினால் குணாம்சப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியில் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது.

குறிப்பிடத்தக்க காலகட்டத்திற்கு -குறைந்தபட்சம் ஒரு தனிநபரின் வாழ்நாளின் அளவுகோலால் அளவிடப்பட்ட காலகட்டத்திற்கு- இந்த முரண்பாடுகளை ஒடுக்கவோ அல்லது அவற்றிலிருந்து மீளவோ முடியும் என்பதைப் போல் தோன்றும். ஆனால், தற்போதைய உலக பொருளாதார மற்றும் புவிசார்-அரசியல் நெருக்கடி மிக தெளிவாக எடுத்துக்காட்டுவது போல், அவை இப்போது மீண்டுமொருமுறை வெடித்து மேற்பரப்புக்கு வந்துள்ளன.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1914ல், முதலாளித்துவத்தின் முறிவு உலகப் போரின் வடிவத்தை எடுத்தது. இன்று, அதன் தொடக்க வெளிப்பாடு, உலக நிதிய அமைப்பு முறையின் ஒரு நடப்பு நெருக்கடி வடிவத்தை எடுத்துள்ளது.

அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரம் மந்தநிலைமையில் இருக்கும் அதேவேளை, வோல் ஸ்ட்ரீட் சாதனையளவிற்கு உயர்ந்துள்ளது. அதிகரித்துவரும் அழுகல் நிலை மற்றும் சீரழிவை வேறு எது மிகத் தெளிவாக சுட்டிக் காட்ட முடியும்? மற்றும் இந்த வீழ்ச்சியின் விளைவுகள் 1914 வீழ்ச்சியின் விளைவைப் போன்றே இருக்கும் -அதாவது உலக யுத்தம், பொருளாதார பின்னடைவு, பாசிசம் மற்றும் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களாக இருக்கும்.

அதை மார்க்ஸ் மிக சிறப்பாக கூறியது போல்: “சமுதாயத்தின் உற்பத்தி அபிவிருத்திக்கும் இதுவரை நிலவும் அதன் உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் பொருத்தமின்மையானது கசப்பான முரண்பாடுகள், நெருக்கடிகள், சுருக்கங்களில் தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது. மூலதனம், அதற்கு வெளியே உள்ள உறவுகளால் அன்றி, அதற்குள்ளேயே நிலவும் நிலைமையால் வன்முறையாக அழிக்கப்படுவதானது மிகவும் கவனத்தை ஈர்க்கும் வடிவமாகும். இங்கு அதைக் கடந்து சென்று, ஒரு உயர்ந்த மட்டத்திலான சமூக உற்பத்திக்கு இடம்கொடுக்குமாறே அறிவுறுத்தப்படுகிறது.”

எவ்வாறெனினும், முதலாளித்துவம் வரலாற்று அஸ்தமனத்திற்குள் அமைதியாக செல்லப் போவதில்லை. அது அதனோடு அனைத்து மனிதசமுதாயத்தையும் இழுத்துச் செல்ல முயல்வதோடு புதிய வடிவிலான காட்டுமிராண்டித்தனத்தையும் திணிக்கும். ஆளும் வர்க்கங்கள் வெற்றிபெற அனுமதிக்கக் கூடாது. மார்க்ஸ் பேசிய அந்த "அறிவுரை",  உண்மையில் ஒரு பலம்வாய்ந்த படையினால் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதாவது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும் மற்றும் சர்வதேச சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கும் “சமூக உற்பத்தியின் உயர்ந்த மட்டத்தை தாங்கியுள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்

சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த சர்வதேச இணையவழி மே தின கூட்டம், அந்த திசையை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகும்.

சர்வதேச இணையவழி மே தினக் கூட்டத்தில் நிக் பீம்ஸ் ஆற்றிய உரையை கேட்க இங்கே அழுத்துங்கள்.