சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

In the service of imperialism: Right-wing “intellectuals” gather in Kiev

ஏகாதிபத்தியத்திற்கான சேவையில் வலது-சாரிபுத்திஜீவிகள் கியேவில் கூடுகிறார்கள்

By David North
16 May 2014

Use this version to printSend feedback

வலது-சாரி கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், போர் ஆதரவு மனித-உரிமை ஆர்வலர்கள், மற்றும் பிரசங்க வல்லுநர்களின் ஒரு குழு இந்த வார இறுதியில் (மே 16-மே 19) கியேவில் கூடவிருக்கிறது. யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிமோத்தி ஸ்னைடர் மற்றும் New Republic இன் நவ-கன்சர்வேடிவ் இலக்கிய ஆசிரியரான லியோன் வீசெல்டியர் ஆகியோர் தலைமையில் நடைபெறுகின்ற இந்த சந்திப்பின் நோக்கம் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் நிதியாதாரம் அளிக்கப்பட்டு மற்றும் இயக்கப்பட்டு பிப்ரவரியில் உண்டாக்கப்பட்ட ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் மூலமாக பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் உக்ரேனிய ஆட்சிக்கு அரசியல் மற்றும் அறரீதியான மரியாதையை ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்கிறது.

புத்திஜீவிகளின் ஒரு சர்வதேசியக் குழுவாக தங்களை ஊக்குவித்துக் கொள்கின்ற இந்த ஏற்பாட்டாளர்கள் ஒரு விளம்பர துண்டறிக்கையை, மன்னிக்கவும், ஒரு கொள்கை அறிக்கையை  விநியோகம் செய்திருக்கின்றனர். அதில் இந்த சந்திப்பு சுதந்திரத்தின் மீது அக்கறை கொண்டவர்களுக்கும் சுதந்திரம் பெரும் விலை கொடுத்து பெறப்பட்டிருக்கும் ஒரு நாட்டிற்கும் இடையிலான சந்திப்பு என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூற்றில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது, ஏனென்றால் யானுகோவிச்சின் அரசாங்கத்தைத் தூக்கிவீச அமெரிக்கா பெரும் பணத்தை செலவிட்டுள்ளது அல்லவா.

இந்தக் கூட்டம் ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் ஒரு நடவடிக்கை ஆகும். இதன் அனுசரணையாளர்களில் கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, போலந்து மற்றும் அமெரிக்கத் தூதரங்களும் இடம்பெற்றிருக்கின்றன. உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம், ஐரோப்பிய ஜனநாயக ஆஸ்தியளிப்பு (European Endowment for Democracy) மற்றும் Eurozine ஆகியவை பிற அனுசரணையாளர்களில் அடங்குவன. கியேவ் சந்திப்பை வலுவாக விளம்பரம் செய்கின்ற Eurozine வலைத் தளத்தில், உக்ரேன் ஆட்சிக்கவிழ்ப்பின் புவிமூலோபாய தாக்கங்கள் தொடர்பாக எண்ணற்ற பதிவுகள் காணக்கிடைக்கின்றன. இரண்டாம் பனிப் போரை எப்படி வெல்வது? போன்றவை அதில் முக்கியமானவை. இப்பதிவின் ஆசிரியரான விளாடிஸ்லேவ் இனோசெம்ட்ஸெவ் இப்போது வாஷிங்டன் டி.சி.யில் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்திற்கான அதிதி ஆய்வு அறிஞராக (visiting fellow) இருக்கிறார்.

1960களில் பார்த்தோமென்றால், பனிப்போர் காலத்து கலாச்சார சுதந்திரத்திற்கான கம்யூனிச விரோத காங்கிரசில் (Cold War’s anti-communist Congress for Cultural Freedom) பங்குபெற்ற புத்திஜீவிகள் அந்த அமைப்பின் நடவடிக்கைகள் சிஐஏ இன் சூதுவேலைகளுடன் வெளிப்படையாகப் பிணைக்கப்பட்டபோது சற்றே நெளிந்தார்கள். அந்தநாளில், சிஐஏ உடனும் மற்ற அரசு உளவுத்துறை முகமைகளுடனும் சேர்ந்து வேலைசெய்வதென்பது ஒருவரின் புத்திஜீவித்தன மற்றும் அறநிலை மரியாதைக்கு இழுக்காகக் கருதப்பட்டது. அதெல்லாம் அந்தக் காலம்! கியேவ் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் எல்லாம் யானுகோவிச்சின் அரசாங்கத்தை தூக்கிவீசுவதில் பெருமளவில் பங்குபெற்ற அரசாங்கங்களினால் வழிமொழியப்பட்ட மற்றும்  அத்துடன் அரங்கேற்றப்பட்ட ஒரு நிகழ்வின் பாகமாக இருக்கிறோம் என்ற வெளிப்படையான உண்மையைக் கண்டு எந்த வித வெட்கமும் அடையவில்லை.

ஒட்டுமொத்த சந்திப்புக்கூட்டமுமே ஒரு மோசடி மற்றும் ஏமாற்று நடவடிக்கையாக இருக்கிறது. ஜனநாயகப் பிரசங்கத்தின் வாய்வீச்சுகள் எல்லாம் ஒரு அப்பட்டமான பிற்போக்குத்தனமான அரசியல் திட்டநிரலை விரித்துச் செல்வதற்கான ஒரு மறைப்பை வழங்குகிறது. ஒவ்வொரு வசனத்தையும் மறைவிலக்கி (decrypt) காண வேண்டும்.

ஐரோப்பா, ரஷ்யா மற்றும் உலகத்தின் வருங்காலத்திற்காக உக்ரேனிய பன்மைவாதத்தின் பொருள் குறித்து ஒரு விரிவான பொது விவாதத்தை இக்கூட்டம் நடத்தும் என அந்த அறிக்கை உறுதிபடக் கூறுகிறது. இதை மறைவிலக்கி பார்க்கையில் இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், ஐரோப்பா மற்றும் யூரோ-ஆசியாவில் ரஷ்யாவின் செல்வாக்கை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் நடக்கவிருக்கும் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஒரு மாதிரியாக உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதை இக்கூட்டம் ஆராயும் என்பதே ஆகும்.

இச்சந்திப்பில் விவாதிக்கப்பட இருக்கும் பிற பிரச்சினைகளாவன:

1. மனித உரிமைகள் எவ்வாறு வேரூன்ற முடியும் அத்துடன் மனித உரிமைகள் என்ற சிந்தனை எவ்வாறு எங்களுக்கு உந்துதலளிக்கின்றது? [உண்மை அர்த்தம்: எதிரான ஆட்சிகளை அரசியல்ரீதியாக ஸ்திரமற்றதாக்குவதற்கும் தூக்கிவீசுவதற்குமான ஒரு போலிச்சாக்கை மனித உரிமைகள் பிரசங்கம்எவ்வாறு வழங்க முடியும்?]

2. மொழி எப்படி, எப்போது உலகத்தை அணுக அனுமதிக்கின்றது, மற்றும் எப்போது எப்படி அது அரசியல் வித்தியாசத்தை வரையறை செய்கிறது? [உண்மை அர்த்தம்: சமூக மோதலுக்கு அடிப்படையாக உள்ள  சடப்பொருள் நலன்களை மறைப்பதற்கு ஜனநாயக வார்த்தைஜாலங்களை எவ்வாறு உபயோகப்படுத்த முடியும்?]

3. சர்வதேச அராஜகம், உள்நாட்டு ஊழல் மற்றும் தனிநபர்களின் பொதுவான தவறிழைப்புத் தன்மை இவற்றுக்கிடையே அரசியல் நாகரிகம் என்பது எவ்வாறு சாத்தியமானதாக இருக்கிறது. [உண்மை அர்த்தம்: சமகால புவிஅரசியலின் யதார்த்தங்கள் ஏன் எல்லைகளைக் கடப்பதைஅதாவது சித்திரவதை, குறிவைத்துக் கொல்லுதல், எதேச்சாதிகாரவாதம், போர் மற்றும் இன்னபிறவற்றின் பயன்பாட்டை நியாயப்படுத்துகிறது.]

இதில் பங்கேற்பவர்கள் குறைந்த அளவில் புத்திஜீவித சக்தியைச் செலவிட்டு வெற்றுக்ககருத்துக்களை அதிகமாகக் கக்குவதற்கு இந்தப் பிரச்சினைகள் மீதான விவாதம் அனுமதிக்கும். நூற்றுகணக்கில் இல்லையென்றால் ஏராளமான உயிரிழப்புகளில் விளைந்திருக்கக் கூடிய தெற்கு மற்றும் கிழக்கு உக்ரேனில் மக்களுக்கு எதிரான கியேவ் ஆட்சியின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் இருந்து எழுகின்ற பிரச்சினைகள், எழுப்பப்படவிருக்கும் விவாதப்பொருள்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. அதேபோல ஸ்வோபோடா மற்றும் Right Sector போன்ற நவ-பாசிச சக்திகள் பிப்ரவரியின் ஆட்சிக்கவிழ்ப்பிலும் நடப்பு அரசாங்கத்தை ஒழுங்கமைப்பதிலும் ஆற்றிய பிரதான பாத்திரம் குறித்தும் ஆராய்வதற்கோ விளக்குவதற்கோ இந்த ஏற்பாட்டாளர்களிடம் எவ்வித திட்டமுமில்லை.

இந்த பங்கேற்பாளர்களில் மிகப் பிரதானமானவர்கள் என்று பார்த்தால் வழக்கமான சந்தேகத்திற்குரியவர்கள், அதாவது மனித உரிமைகள் என்ற போலியான போர்வையின் கீழ் ஏகாதிபத்தியத் தலையீடுகளை ஊக்குவிப்பதில் நன்கு நிறுவப்பட்ட வரலாறைக் கொண்ட மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அடிப்படையாக குற்றவியல்தனமான இயல்பு கொண்ட அரசுக் கொள்கைகளுக்கு அறரீதியான ஆதரவு கோரி விளம்பரம் செய்வதில் கெட்டிக்காரர்கள். மனித உரிமைகளை தூக்கிப்பிடிப்பதே ஏதோ ஒரு வடிவத்தில் ஏகாதிபத்தியத்தை அங்கீகரிப்பதற்கான ஒரு வழிவகையாகவே சேவை செய்து வந்திருக்கிறது. 1880களில் காங்கோவில் மில்லியன் கணக்கான மக்களை படுகொலை செய்த பெல்ஜியத்தின் அரசரான லியோபோல்ட் கூட, அவரது நிராதரவான பலிகளின் அறரீதியான மற்றும் பொருள்ரீதியான புனர்ஜனனத்திற்காகவே அவர் செயல்பட்டதாக கூறிக் கொண்டார். ஏகாதிபத்தியம் குறித்த முதல் பெரும் அறிஞர்களில் ஒருவரான ஜோன் ஹாப்சன், ஒரு நூற்றாண்டுக்கும் முன்பாக, ஏகாபத்திய கொள்கையின் கீழமைந்த உண்மையான நோக்கங்களை மறைக்கும் பொருட்டு அறநெறி சாக்குப் போக்குகளைப் பயன்படுத்தி இரட்டைவேடம் போடுவதன் மூலம் ஆற்றப்படுகின்ற படுபயங்கர பாத்திரத்திற்கு கவனத்தை ஈர்த்தார். அவர் எழுதினார்:

நோக்கங்களின் உண்மையான முக்கியத்துவத்தை இவ்வாறு பொய்மைப்படுத்துவதில் தான் மிகச்சரியாக ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரும் தீங்கும் அதன் மிக அடையாளமான ஆபத்தும் தங்கியிருக்கிறது. பலவிதமான கலவையான நோக்கங்களில் இருந்து, மிகவும் பலவீனமானது (அதாவது மனித உரிமைகள் மற்றும்/அல்லது ஜனநாயகம் போன்றவை) தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியில் காட்டுவதற்கு உகந்ததாக இருப்பதாக முன்வைக்கப்படுகையில், அக்கொள்கை உருவாக்கியவர்களுக்கே முன்தோன்றியிராத கொள்கைப் பிரச்சினைகள் முக்கிய காரணங்களாக அணுகப்பட்டு, ஒரு தேசத்தின் அறநிலை மதிப்பு தரம்குறைக்கப்படுகின்றது. ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்தக் கொள்கையுமே இந்த ஏமாற்றினைக் கொண்டே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. [ஏகாதிபத்தியம்: ஒரு ஆய்வு (கேம்பிரிட்ஜ், 2010), பக் 209-10] 

பங்கேற்பவர்களில் லியோன் வீசெல்டியர் இடம்பெற்றுள்ளார். இவர் ஈராக் விடுதலைக்கான குழுவின் ஒரு முன்னணி உறுப்பினராக பணிபுரிந்தவர் என்பதோடு புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான திட்டம் என்பதுடன் நெருக்கமாய் அடையாளம் காணப்படுபவர். தாராளவாத அரசியல் சித்தாந்தவாதியான போல் பேர்மன் சேர்பியா மீதான அமெரிக்க குண்டுவீச்சிற்கு (கொசோவா பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக) ஆலோசனையளித்தவர் என்பதோடு, 9/11க்குப் பின்னர், மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் நடத்தப்பட்ட அமெரிக்கப் போர்களை இஸ்லாமிய பாசிசத்திற்கு எதிரானதொரு போராட்டமாகக் கூறி நியாயப்படுத்த முனைந்தவர். அலெக்சிஸ் டி டோக்வில்லியும் ஜனநாயகம் என்னும் சிந்தனையும் (Alexis de Tocqueville and the Idea of Democracy) என்ற தலைப்பில் ஞாயிறன்று மாலை பேர்மேன் அளிக்கவிருக்கும் உரை ஓலே தியானிபோக்கிற்கும் ஸ்வோபோடா கட்சியில் இருக்கும் அவரது சீடர்களுக்கும் கண் திறப்பதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

பேர்னார்ட் குஷ்னரும் இதில் கட்டாயமாக இருப்பார். பல தசாப்தங்களுக்கு முன்பாக எல்லைகள் கடந்த மருத்துவர்கள் (Médecins Sans Frontières) என்ற அமைப்புடன் தொடர்புபட்டிருந்த குஷ்னர் தந்திரோபாய பிரச்சினைகளில் இந்த அமைப்புடன் தொடர்பினை முறித்துக் கொண்டு மனிதாபிமான தலையீடு விடயத்தில் கூடுதல் மும்முரமான ஒரு வேலைத்திட்டத்தை ஆலோசனையளிக்க உலக மருத்துவர்கள் (Médecins du Monde) என்ற அமைப்பை உருவாக்கினார். ஹாப்சன் முன்னெதிர்பார்த்தது போல, இந்தக் களமானது ஏதேனும் ஒரு நாட்டில் இராணுவத் தலையீட்டுக்கான எண்ணிலடங்கா போலி காரணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. பால்கன்களிலான தலையீட்டை குஷ்னர் ஊக்குவித்தார். இறுதியில் பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசியின் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராகவும் அவர் ஆனார். 2011 இல் மந்திரிகள் சபையை விட்டு விலகிய பின்னரும் அவர் லிபியா மீதான சார்க்கோசியின் தாக்குதலையும், அத்துடன் ஐவரி கோஸ்டில் பிரெஞ்சு ஊடுருவலையும் ஆதரித்தார். இவ்வாறு அரசியல் பிற்போக்குவாதியும் பிரெஞ்சு முதலாளித்துவ அரசின் பாதுகாவலருமான இவர் ஐரோப்பாவுக்கு ஒரு உக்ரேனிய புரட்சி அவசியமாகிறதா? என்ற பிரச்சினையில் ஒரு குழு விவாதத்தில் பங்கேற்கிறார்.

குஷ்னரின் சகதேசத்தவரும் பிரபல மெய்யியலாளருமான பேர்னார்ட்-ஹென்றி லெவி [ இவர் மனிதாபிமான தலையீடுகளின் இன்னொரு ஆதரவாளர்] ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கண்டித்து ஒரு உரையை வழங்கவிருக்கிறார். டாஆர்த்திரோ புட்டினின் [d’Arturo Poutine] தடுக்கக் கூடிய எழுச்சி என்பது அதன் தலைப்பு. பெர்த்தோல்ட் பிரெக்ட் உருவாக்கிய மிகச் சிறப்பான குறியீடு நாடகப் படைப்பின்[The Resistible Rise of Arturo Ui] தலைப்பை இவ்வாறாக அதிமேதாவித்தனமாய் துஷ்பிரயோகம் செய்வதென்பது லெவியின் படைப்புக்கே உரிய இயல்பு. பதிலடி குறித்த பயமின்றி லெவி புட்டினைக் கண்டனம் செய்யலாம் தான். ஒபாமாவின் குற்றங்களைக் கண்டிக்க வேண்டுமென்றால் தான் அதற்கு எப்படிப் பார்த்தாலும் லெவியிடம் இருப்பதை விட அதிகமாக அந்தத் துணிச்சல் இருந்தாக வேண்டும். பிரெக்டின் படைப்பானது ஹிட்லர் அதிகாரத்துக்கு எழுந்ததன் மீதான ஒரு கண்டிக்கும் வசைத்தாக்குதலாக இருந்தது. மிக முக்கியமான விடயம், பிரெக்ட் தனது குறியீட்டுக் களத்தை சிகாகோவில் அமைத்து, ஒரு முதலாளித்துவ சூழலில் குற்றவியல் நிழலுலகத்தில் நடக்கும் செயல்பாடுகளுக்கும் நாஜிக் கட்சியின் செயல்பாடுகளுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமைகளை எடுத்துக்காட்டினார். அதில் அமெரிக்க பார்வையாளர்களின் மனதைத் தொடும் நோக்கத்தோடு மிக அற்புதமான சில வரிகள் இவ்வாறு இருக்கும்: அவருடைய தோல்வியில் களிக்காதீர்கள், மனிதர்களே. ஏனென்றால் உலகம் எழுந்து நின்று அந்த துஷ்டரைத் தடுத்து நிறுத்தி விட்டாலும் கூட, அவரைத் தாங்கி நின்ற கருவறை இன்னமும் சூடாகத்தான் இருக்கிறது. அன்றைய பிரெக்டின் எச்சரிக்கை இக்காலத்திற்கும் பொருத்தமானதாக இருக்கின்றது.

பிரான்சில் ஒரு பகிரங்க-புத்திஜீவியாக லெவியின் மரியாதை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. 2010 இல் அவர் காண்ட் மற்றும் அறிவொளியை தாக்குகின்ற ஒரு கட்டுரையை வெளியிட்டார். ஜோன்-பாப்டிஸ்ட் புட்டுல் [Jean-Baptiste Botul]என்ற ஒரு மெய்யியலாசிரியரின் படைப்பு லெவியின் கவனத்திற்கு வந்து கான்ட் மீதான தனது வசைமழைக்கு அவர் அதனை அடிப்படையாகக் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, புட்டுல் மற்றும் அவரது சிந்தனை முறையான (புட்டுல்வாதம்) இரண்டுமே ஃபிரெடரிக் பாஜெஸ் [Frédéric Pagès] என்ற ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளரின் புனைவுப் பாத்திரங்கள் என்பதை லெவி கவனிக்கவில்லை. இப்போது ஒரு கேலிப் பொருளாக, ஒரு பிரெஞ்சு நகைச்சுவை, அழகான தலையலங்காரம் கொண்ட லெவியின் மெய்யியலை பின்வரும் வாசகத்தைக் கொண்டு சுருங்கக் கூறுகிறது: கடவுள் இறந்து விட்டார், ஆனால் என் முடி முழுநேர்த்தியுடன் இருக்கிறது. [ BHL என்று பரவலாக அறியப்படும் லெவியின் சிந்தனைகள் குறித்து அறிய விரும்புவோருக்கு அவர் குறித்த விக்கிபீடியா கட்டுரை இரத்தினச்சுருக்கமான விவரிப்பை வழங்குகிறது.]

இந்த விடயங்களில் ஒருவகை நகைப்புக்குரிய பக்கத்தை லெவி பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்றால் பேராசிரியர் டிமோத்தி ஸ்னைடரின் வருகையும், அவரது முன்னணிப் பாத்திரமும் ஒரு இருண்ட தன்மையைக் கொண்டதாய் இருக்கின்றன. அவர் துரிதமாகவும் படோடாபத்துடனும் பொதுப் பிரபலத்துக்கு உயர்ந்தமை என்பது முழுக்க முழுக்க, உக்ரேனை தனது செல்வாக்கு வட்டத்திற்குள் கொண்டுவரவும் அத்துடன் ஸ்னைடர் கூற்றின் படி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கடின உழைப்பால் பெறப்பட்ட மனித ஜனநாயக அபிலாஷைகளின் பரமவிரோதியாக ரஷ்யாவை துஷ்டனாக்குவதற்கும் அமெரிக்கா செய்கின்ற முயற்சிகளுக்கு வெளிப்படையாக அறிஞருலக நியாயப்படுத்தலை வழங்குவதற்கு அவர் செய்கின்ற இடைவிடாத முயற்சிகளுடன் பிணைந்ததாக இருக்கிறது.

ஸ்னைடரை எழுத்துப் பிரபலத்தின் வட்டத்திற்கு உயர்த்திய புத்தகத்தின் தலைப்பு இரத்தநிலங்கள் : ஹிட்லருக்கும் ஸ்ராலினுக்கும் இடையில் ஐரோப்பா (Bloodlands: Europe Between Hitler and Stalin). 2010 இல் வெளியான இந்தப் புத்தகம் வெகுஜன ஊடகங்களால் ஒரு மேதையின் படைப்பாக வரவேற்கப்பட்டது. எண்ணற்ற செய்தித்தாள்களில் திறனாய்வுகள் வெளியாயின. துசிடிடிஸின் மறுஅவதாரம் போல அவர் போற்றப்பட்டார். ஸ்னைடர் இந்த வரவேற்பை நன்கு அனுபவித்திருக்கிறார் எனத் தெரிகிறது. 2012 இல் இந்தப் புத்தகத்தின் காகித பதிப்பில், அவரது புகழ்பாடிய திறனாய்வுகளில் இருந்து மேற்கோள் காட்டுவதற்கென மொத்தமாக முதல் 14 பக்கங்கள் அர்ப்பணிக்கப்பட்டிருந்தன.

ஏன் இந்த அமளி? ஸ்னைடரின் புத்தகம் 2004-2005 இல் உக்ரேனில் ஆரஞ்சுப் புரட்சியின் (இதில் விக்டர் யானுகோவிச்சின் ஆதரவாளர்கள் வாக்கு மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் விளைந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களை அடுத்து அமெரிக்க ஆதரவு விக்டர் யுஷ்செங்கோ உக்ரேன் ஜனாதிபதியாக முடிந்தது) முடிவுக்குப் பின்னர் வெளிவந்தது. யுஷ்செங்கோ அதிகாரத்தின் மீதான தனது பிடியை இறுக்கிக் கொள்ளும் பொருட்டு, வலது-சாரி உக்ரேனிய பேரினவாதத்திற்கு அழைப்புவிட முனைந்தார். ரஷ்ய விரோத மனோநிலைகளைக் கிளறி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தப் பிரச்சாரத்தின் ஒரு முக்கியமான கூறாக, 1930களில் பேரழிவுகரமான பஞ்சத்திற்கும் சுமார் 3.5 மில்லியன் மக்கள் உயிரிழக்கவும் இட்டுச் சென்ற சோவியத் கூட்டுப்பண்ணை முறை நாஜிக்கள் ஐரோப்பிய யூதர்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்ததற்கு சமமாகச் சித்தரிக்கப்பட்டது. யூதப்படுகொலை (Holocaust) என்பது எப்படி யூதர்கள் கூட்டமாகத் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாக இருந்ததோ அதேபோலவே பட்டினி மரணமும் (Holodomor) உக்ரேனியர்களுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் திட்டமிட்டு நடத்திய ஒரு படுகொலை வடிவமாக இருந்தது என்று அவர் கூறிக் கொண்டார்.

இந்தப் பொருள்விளக்கத்தின் நியாயத்தன்மை (இது உண்மை விபர அடிப்படையிலும் சரி மற்றும் தத்துவார்த்த அடிப்படையிலும் சரி மிகவும் ஐயத்திற்குரியதாக இருக்கிறது என்பதே குறைந்தபட்சமாக சொல்லக் கூடியதாக இருக்கிறது) பற்றிய கேள்விக்கு அப்பால், பட்டினிமரணங்களை (Holodomor) சோவியத் ஒன்றியத்தால் உக்ரேன் பழிவாங்கப்பட்டதன் ஒரு அடையாளத்தின் நிலைக்கு உயர்த்துவதென்பது அரசியல்ரீதியாக தீப்பற்றவைப்பதாகவும், ஆகவே அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் ஆகியது. உக்ரேனிய வலதுகளுக்கு புனைவுக்கதையாக இருப்பதற்கு சாத்தியமான ஒன்றை இது வழங்கியது, அத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை ரஷ்ய விரோத மனோநிலை நெருப்பூட்டி விடுவதற்கு பயன்படுத்தப்படக் கூடிய ஒரு பிரச்சாரக் குழு கிடைத்தது.

2010 இல் யுஷ்செங்கோ அதிகாரத்தில் இருந்து அகன்றார். ஆயினும் அவரது இறுதி நடவடிக்கைகளில் ஒன்றாக படுபயங்கரமான உக்ரேன் தேசியவாதியும் அத்துடன் மூன்றாம் ரைய்க்குடன் ஒத்துழைத்து யூதர்களையும் போலந்து இன மக்களையும் கூட்டுப்படுகொலை செய்வதில் பங்குவகித்த ஸ்டீபன் பண்டேராவை (1909-1959) அவர் உக்ரேன் நாயகர்களில் ஒருவர் என பிரகடனம் செய்து விட்டு சென்றார். இது உக்ரேனின் தலைமை ரபி (யூத மதகுரு) உள்ளிட்டோரிடம் இருந்து பரவலான எதிர்ப்புகளைக் கிளப்பியது. கவனிக்கத்தக்க விடயமாய், எதிர்ப்பை வழங்கியோரில் டிமோத்தி ஸ்னைடரும் ஒருவராக இருந்தார். 2010 பிப்ரவரி 24 அன்று நியூயோர்க் புத்தகத் திறனாய்வு பதிப்பில் வெளியான ஒரு கட்டுரையில் அவர் யுஷ்செங்கோவின் இந்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். பண்டேரா மற்றும் அவர் தலைமையில் இருந்த உக்ரேன் தேசியவாதிகள் அமைப்பின் (OUN-B) குற்றங்கள் குறித்த ஒரு சுருக்கத்தை ஸ்னைடர் வழங்கினார்:

உக்ரேன் தேசியவாதிகள் நம்பியிருந்ததைப் போல ஜேர்மனியர்கள் போலந்தை 1939 இல் அழித்தனர், அத்துடன் 1941 இல் சோவியத் ஒன்றியத்தை அழிக்கவும் அவர்கள் முனைந்தனர். அந்த ஜூன் மாதத்தில் ஜேர்மனியின் ஒருங்கிணைந்த இராணுவப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் நுழைந்தபோது, ஹங்கேரி, ரூமேனியா, இத்தாலி மற்றும் ஸ்லோவேக்கியாவின் இராணுவங்களும், அத்துடன் சேர்ந்து OUN-B உடன் தொடர்புடைய உக்ரேன் தன்னார்வலர்களின் சிறு படையணிகளும் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. யூதர்கள் மீது ஜேர்மனியர்கள் நடத்திய படுகொலைத் திட்டங்களுக்கு இந்த உக்ரேன் தேசியவாதிகள் சிலரும் உதவினர். அவ்வாறு செய்ததன் மூலமாக, அவர்கள் ஒரு ஜேர்மன் கொள்கையை முன்னெடுத்தாலும், அது இனத் தூய்மைப்படுத்தல் என்ற அவர்களது சொந்த வேலைத்திட்டத்துக்கும், யூதர்களை சோவியத் கொடுங்கோன்மையுடன் அவர்கள் அடையாளப்படுத்தியமைக்கும் இணக்கமானதாக இருந்தது.

OUN-B இன் தலைமையின் கீழ் செயல்பட்ட உக்ரேன் கிளர்ச்சிப் படை (UPA) இன் நடவடிக்கைகளை ஸ்னைடர் பின்வருமாறு விவரித்திருந்தார்:

அவர்களது தலைமையின் கீழ், UPA 1943 மற்றும் 1944 இல் மேற்கு உக்ரேனில் போலந்து நாட்டவரை இனச்சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டது. UPA கட்சியினர் பத்தாயிரக்கணக்கிலான போலந்து நாட்டினரை படுகொலை செய்தனர், இவர்களில் அநேகம் பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். போலந்து குடும்பங்களில் அடைக்கலம் பெற்றிருந்த சில யூதர்களும் கூட கொல்லப்பட்டனர். போலந்தினத்தவரும் (அத்துடன் தப்பிப் பிழைத்திருந்த சில யூதர்களும்) UPA இன் கட்டுப்பாட்டில் இருந்த கிராமப்பகுதிகளில் இருந்து தப்பி ஜேர்மனியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களுக்கு ஓடினர்.

நாஜி சரணடைவுக்குப் பின்னர், சோவியத் ஒன்றியமும் போலந்தும் (இப்போது ஒரு ஸ்ராலினிசக் கட்சியால் ஆளப்படுகிறது) அமெரிக்காவிடம் இருந்து ஆதரவு பெற்ற OUN இடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்பை முகம்கொடுத்தன. 1950கள் வரை தொடர்ந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் உயிர்விட்டனர். சோவியத் ஒன்றியமும் போலந்தும் OUN ஜேர்மனிய-உக்ரேனிய பாசிஸ்டுகள் என்று குறிப்பிட்டதை ஸ்னைடர் சோவியத் ஒன்றியத்துக்கு உள்ளும் வெளியும் தாக்குப்பிடிக்கக் கூடிய திறம்பட்டதொரு பிரச்சாரமாக சேவை செய்யப் போதுமான துல்லியத்துடனான ஒரு குணாம்சப்படுத்தல் என்று ஒப்புக் கொண்டார். பண்டேராவைப் பொறுத்தவரை ஸ்னைடர் குறிப்பிட்டார்: 1959 இல் KGB ஆல் [சோவியத் ரகசிய போலிஸ்] படுகொலை செய்யப்படுகின்ற வரை அவர் ஒரு பாசிச உக்ரேன் என்ற சிந்தனைக்கு விசுவாசமானவராய் இருந்தார்.

பண்டேரா புகழப்படுவதற்கும் உக்ரேன் அரசியலுக்கும் இடையிலான உறவு குறித்துக் கூறுகையில், ஸ்னைடர் எழுதினார்:

யுஷ்செங்கோ ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் வலுவாகத் தோற்கடிக்கப்பட்டார் என்றால், ஓரளவுக்கு அதன் காரணம் என்னவென்றால், மிக அதிகமான உக்ரேன்வாசிகள் மேற்கு உக்ரேனில் இருந்த தேசியவாதக் கிளர்ச்சியாளர்களை விடவும் அதிகமாய் செம்படையுடனேயே தங்களை அடையாளம் கண்டனர். பண்டேரா ஒரு நாயகர் என கூறப்பட்டபோது அவரது உருவபொம்மை ஒடேசாவில் எரிக்கப்பட்டது; மேற்கு உக்ரேனில் இல்வைவில் இருக்கும் அவரது உருவச் சிலையும் கூட -  2007 இல் நகர அதிகாரிகளால் நிறுவப்பட்டதுதேர்தல் பிரச்சாரத்தின் சமயத்தில் பெரும் காவல் பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டியதானது. [அழுத்தம் சேர்க்கப்பட்டது]

தனது வரலாற்றியல் கட்டுரையின் நிறைவாக ஸ்னைடர் எழுதினார்: பதவியை விட்டுச் செல்லும் சமயத்தில் பண்டேராவை ஏற்றுக் கொண்டதன் மூலமாக, யுஷ்செங்கோ தனது சொந்த அரசியல் பாரம்பரியத்தின் மீது ஒரு நிழலை விட்டுச் சென்றிருக்கிறார்.

2010 இன் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரையை எழுதிய சமயத்தில், ஸ்னைடர் பண்டேராவையும் OUNஐயும் உக்ரேன் வரலாற்றின் முக்கியமான, ஆபத்தான அத்துடன் நிம்மதிகுலைக்கும் கூறாகக் கருதியிருந்தார் என்பது வெளிப்படையாகிறது. ஆயினும் எட்டுமாதங்களுக்குப் பின்னர் 2010 அக்டோபரில் இரத்தநிலங்கள் (Bloodlands) வெளியிடப்படுகின்றபோது, இந்த விடயத்தில் ஸ்னைடரின் அணுகுமுறை ஒரு அசாதாரணமான அத்துடன் தீவிர மாற்றத்திற்கு உள்ளாகியிருந்தது. அவரது 524 பக்க புத்தகத்தில், உக்ரேன் தேசியவாதிகளின் நடவடிக்கைகள் வெறும் பெயரளவுக்குத் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரத்தநிலங்கள் புத்தகத்தின் உள்ளடக்க அட்டவணையில் ஸ்டீபன் பண்டேராவுக்கோ அல்லது OUNக்கோ ஒரேயொரு இடமும் கூட இல்லை! ஒட்டுமொத்தப் புத்தகத்திலுமே, ஒரேயொரு வாக்கியம் தான், 326வது பக்கத்தில், OUN உத்தரவில் UPA இன் படுகொலை நடவடிக்கைகளைக் குறிப்பிடுகிறது.

2010 இன் போது, இரத்தநிலங்கள் புத்தக வெளியீட்டுக்கான இறுதித் தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஸ்னைடர் - அநேகமாக Basic Books இல் தனது ஆசிரியர்களுடன் கலந்தாலோசனை செய்த பின்னர் - உக்ரேனிய தேசியவாதிகளின் குற்றங்கள் மீதான உசாத்துணைகளை புத்தகத்தில் இருந்து அகற்ற முடிவெடுத்துள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 2010 பிப்ரவரியில் நியூயோர்க் புத்தக மதிப்புரை பக்கங்களில் வெளிவந்த ஸ்னைடரின் கட்டுரையில் உக்ரேன் பாசிசம் தொடர்பாக எழுப்பப்பட்ட விபரங்கள் மற்றும் பிரச்சினைகள் எதுவுமே இரத்தநிலங்களில் வெளிப்பாடு காட்ட முடியவில்லை.

ஆகவே இரத்தநிலங்கள் அதன் வெளியிடப்பட்ட வடிவத்தில், வலது-சாரி வரலாற்றுத் திருத்தல்வாத முயற்சியின் மிகவும் வெளிப்படையாய் ஒரு நேர்மையற்ற ஒன்றாகும். அதாவது, பட்டினிமரண விவரிப்பை வழிமொழிவதாக இருக்கிறது, இதில் சோவியத் ஒன்றியமும் நாஜி ஜேர்மனியும் அரசியல் மற்றும் அறநெறி அடிப்படையில் சமானமானவையாக சித்தரிக்கப்படுகின்றன, அதிலும் சோவியத் ஒன்றியம் தான் படுமோசம் என்பதாகத் தோற்றம் கொடுக்கும் வகையில் சித்தரிக்கப்படுகிறது. இந்த இரண்டு ஆட்சிகளின் வரலாற்று மூலங்கள் குறித்தோ, சமூகப்பொருளாதார அடித்தளங்கள் குறித்தோ, மற்றும் அரசியல் இலக்குகள் குறித்தோ எந்த பகுப்பாய்வும் கிடையாது. கூட்டுபண்ணை குறித்த எந்தவொரு கவனத்திற்குரிய ஆய்விலும் பரிசீலிக்கப்பட வேண்டிய சிக்கலான வரலாற்று மற்றும் அரசியல் பிரச்சினைகள் எல்லாம் மிக எளிதாக புறக்கணிக்கப்பட்டு விட்டன. கூட்டுபண்ணையை பொறுப்பற்ற வகையில் அமல்படுத்தியதால் விளைந்த பேரழிவு சோவியத் உக்ரேனில் மில்லியன்கணக்கான மக்களைக் கொல்ல ஸ்ராலின் முடிவெடுத்தார் என்ற கருத்தைக் கொண்டு விளங்கப்படுத்தப்படுகின்றது.

வெகுஜன ஊடகங்களுக்கு நேரெதிராய், கவன ஆய்வு செய்யும் வரலாற்றாசிரியர்கள் பலர் ஸ்னைடரின் புத்தகம் குறித்த கடும் விமர்சனரீதியான திறனாய்வுகளை அளித்துள்ளனர். உக்ரேனிய தேசியவாதிகள் நடத்திய அட்டூழியங்களின் அளவுகளைக் குறைத்துக் காட்டுவதற்கு அவர் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் கவலைகளை எழுப்பியிருக்கின்றன. பிரவுன் பல்கலைக்கழகத்தின் ஓமர் பார்தோவ் எழுதுகிறார்:

அந்த சமயத்தில் [1941 கோடை] கிழக்கு போலந்து முழுவதிலும் யூதர்கள் அவர்களது அண்டைநாட்டு உக்ரேனியர்களால் பரந்த அளவில் படுகொலைகள் செய்யப்பட்டதானது அதிகமாய் கவனத்திற்குக் கொண்டுவரப்படவில்லை என்பதோடு அவை முந்தைய சோவியத் குற்றங்களுடன் வேகமாகத் தொடர்புபடுத்தப்படுகின்றன. உக்ரேனியர்கள் தங்களது யூத அண்டைவாசிகளை ஏன் படுகொலை செய்தார்கள், ஏன் ஜேர்மன் கட்டுப்பாட்டு போலிசில் இணைந்தார்கள், SS இல் பதிவுசெய்து கொண்டார்கள், அல்லது அழித்தொழிப்பு முகாம் மனிதர்களாக சேவை செய்தார்கள் என்பதற்கு விளக்கமளிக்க ஸ்னைடர் செய்கின்ற முயற்சிகள் இந்த மனிதர்கள் இழைத்த வன்முறையைக் கொண்டு பார்த்தால் மிகப் பலவீனமானதாய் தோற்றமளிக்கின்றன.

சோவியத் தரப்பிலிருந்துவந்த எதிர்ப்பின் வன்முறையை நாஜி ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்திய வன்முறையுடன் சமப்படுத்துகின்ற ஸ்னைடரின் முயற்சிகளுக்கு பார்டோவ் ஆட்சேபிக்கிறார்:

கிளர்ச்சியாளர்களை ஆக்கிரமிப்பாளர்களுடனும், சோவியத் ஆக்கிரமிப்பை நாஜி ஆக்கிரமிப்புடனும், ஜேர்மன் கூட்டு இராணுவப் படைகளது குற்றங்களை செம்படையின் குற்றங்களுடனும் சமப்படுத்திவிட்டு இனங்களுக்கு இடையிலான வன்முறை குறித்து நழுவிக் கொள்வதன் மூலமாக, ஸ்னைடர், போரிலிருந்து அதன் அறநிலையான உள்ளடக்கத்தின் பெரும்பகுதியை அகற்றி விடுகிறார் என்பதோடு எல்லோருமே குற்றவாளிகள் தான் அதனால் யாரையும் குற்றம் சொல்ல முடியாதுஎன்பதான சப்பைக்கட்டுவாதிகளின் வாதத்தை விரும்பியோ விரும்பாமலோ தழுவிக் கொண்டு விடுகிறது. [ஸ்லேவிக் திறனாய்வு, கோடை 2011]

வரலாற்றாசிரியர் மார்க் மசோவர் ஸ்னைடரின் படைப்பு குறித்து ஒரு தகர்க்கும் விமர்சனத்தை வழங்குகிறார்: கிழக்கு ஐரோப்பிய யூத-விரோதத்தின் முக்கியத்துவம் குறித்து ஒருவர் நிச்சயமாக மிகைப்படுத்தமுடியும் - அதற்காக ஒரு சில அறிஞர்களை விமர்சிக்க முடியாது. ஆனால் சிலர் அதனை ரொம்பவும் அற்பமானதாக்கவும் கூடும், ஸ்னைடரின் அணுகுமுறை இங்கே இந்த திசையில் தான் பயணிக்கிறது. [சமகால ஐரோப்பிய வரலாறு, மே 2012]

ஸ்னைடரின் அடுத்துவந்த பரிணாமத்தைக் கொண்டு பார்க்கும்போது, உக்ரேனிய தேசியவாதம் குறித்த இரத்தநிலங்களின் மழுப்பல்களை உக்ரேனில் அமெரிக்காவின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பானதும் அத்துடன் அவற்றை அமல்படுத்துவதில் ஸ்னைடர் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டது தொடர்பானதுமான ஒரு அரசியல்ரீதியான நோக்கத்துடனான முடிவு என்றல்லாமல் வேறுவகையில் விளக்குவது கடினம். கடந்த பல மாதங்களில், ஸ்னைடர் கியேவ் ஆட்சியின் மிகப் பிரதான பாதுகாவலர்களில் ஒருவராக எழுச்சி கண்டிருக்கிறார். ரஷ்யாவை நோக்கிய விசம்கக்கும் விரோதமும் அத்துடன் பிப்ரவரி ஆட்சிக்கவிழ்ப்பிலும் கியேவ் ஆட்சியின் அரசியல் அங்கலட்சணத்திலும் எந்த முக்கியமான தீவிரவாத வலது-சாரி பங்களிப்பையும் ஆவேசத்துடன் மறுப்பதுமே அவரது எழுத்துக்கள் மற்றும் பேச்சுகளில் பட்டவர்த்தனமாக வெளிப்படும் இயல்பாக இருக்கின்றன.

கியேவ் ஆட்சியைப் பாதுகாத்து Wieseltier’s New Republic இல் வெளியாகியிருக்கும் அவரது சமீபத்திய கட்டுரையில் ஸ்னைடர் புத்திஜீவித நேர்மையின்மையின் புதிய ஆழங்களுக்குள் அமிழ்கிறார். ரஷ்யாவும் இன்னும் சோவியத் ஒன்றியமும் கூட அரை-பாசிச ஆட்சிகளாய் காட்டப்படுகின்றன. உக்ரேனின் வாழ்க்கையில் ஸ்வோபோடா மற்றும் Right Sector இன் முக்கிய பாத்திரம் உதாசீனம் செய்யப்படுகிறது. புதிய உக்ரேனிய ஆட்சிக்கு ரஷ்யா காட்டும் எதிர்ப்பில் தான் பாசிசத்தின் எழுச்சி காணும் அலை வெளிப்பாடு காண்பதாக ஸ்னைடர் கூறுகிறார்.

மிக விந்தையான ஒரு பத்தியில் ஸ்னைடர் அறிவிக்கிறார்: பாசிசம் என்றால் நிர்வாணமான ஆணின் உடலை புகழ்வதும், ஓர்பால் விருப்பத்தில் மனத்தை நிறுத்துவதும், ஒரேநேரத்தில் குற்றமாக்கப்படுவதுடன் பின்பற்றவும்படுகின்றது....இன்று, இந்த சிந்தனைகள் எல்லாம் ரஷ்யாவில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.... ஸ்வோபோடா ஓர்பால் விருப்பத்திற்கு மிக வன்மையான குரோதம் கொண்டது என்பதோ 2012 இல் ஓர்பால் விரும்பிகளின் ஒரு ஊர்வலத்தை அது இடையூறு செய்ததோடு அதனை வெளிப்படையாக 50 வக்கிரக்காரர்களின் ஒரு வழிபாட்டு தினம் (Sabbath) என்று கண்டனம் செய்ததோ ஸ்னைடருக்குத் தெரியாதிருக்க சாத்தியமில்லை.

ஸ்னைடர் தனது அரசியல் திட்டநிரலுக்குத் தக்கவாறு வரலாற்றை வெட்கமற்று பொய்மைப்படுத்துகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதியதற்கு நேரெதிராக இப்போது அவர் கூறுகிறார்: உக்ரேனிய தேசியவாதிகளின் அரசியல் ஒத்துழைப்பும் மேலெழுச்சியும், மொத்தமாய் பார்த்தால், ஜேர்மன் ஆக்கிரமிப்பு வரலாற்றில் ஒரு சிறு கூறு ஆகும்.

வரலாற்றை எழுதுவதற்கும் அரசிற்கு சேவை செய்யும் விதமான பிரச்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் இடையிலான வேறுபாட்டை மழுங்கடிப்பது என்கிற புத்திஜீவித்தனரீதியாக ஆரோக்கியமற்ற அத்துடன் ஆபத்தானதொரு போக்கினை டிமோத்தி ஸ்னைடரின் எழுத்துக்களில் நாங்கள் முகம்கொடுத்தோம். கியேவில் இந்த வார இறுதியில் ஒன்றுகூடவிருக்கும் புத்திஜீவிகள் அனைவருமே இந்த ஆழமான பிற்போக்குத்தன நிகழ்ச்சிப்போக்கின் உருவடிவங்களாய் இருக்கின்றனர்.