சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

The European election in Greece

கிரீஸில் ஐரோப்பியத் தேர்தல்

By Christoph Dreier
29 May 2014

Use this version to printSend feedback

கிரீஸில் ஐரோப்பியத் தேர்தலின் முடிவு கிரேக்க அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை மக்கள் திட்டவட்டமாய் எதிர்த்து நிற்பதைப் பிரதிபலிக்கிறது. ஆளும் புதிய ஜனநாயக (ND) கட்சிக்கும் அதன் சமூக ஜனநாயகக் கூட்டாளியான PASOK க்கும் ஆதரவு அனைத்து காலத்திலுமான மிகக் குறைந்த அளவுக்கு சரிவு கண்டிருக்கிறது. முதன்முறையாக ஐக்கிய சோசலிச முன்னணி (SYRIZA EKM) மிக வலிமையான போட்டியாளராக எழுச்சி கண்டுள்ளது. மூன்றாமிடத்தை பாசிச கோல்டன் டோன் (Golden Dawn) அமைப்பு எடுத்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முந்தைய கிரேக்க நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிட்டால், இரண்டு ஆளும் கட்சிகளுமே 10 சதவீதத்திற்கும் அதிகமான புள்ளிகளை இழந்திருக்கின்றன. ND 22.7 சதவீத வாக்குகளை மட்டும் பெற்றது (இரண்டு வருடங்களுக்கு முன்பாக 29.7 சதவீதம் பெற்றது). ஆலிவ் மரக் கூட்டணியுடன் PASOK இணைந்திருந்தது என்றபோதிலும் கூட இந்தக் குழுவாக்கம் வெறும் 8.0 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது (2012 இல் PASOK 12.3 சதவீத வாக்குகளைப் பெற்றது). ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஐரோப்பியத் தேர்தலுடன் ஒப்பிட்டால், ஆளும் கட்சிகள் சுமார் 40 சதவீத புள்ளிகளை இழந்திருக்கின்றன, இது அவர்களது வழக்கமான வாக்காளர்களில் பாதிக்கும் அதிகமான கணிசமான அளவாகும்.

சிரிசாவில் (தீவிர இடதுகளின் கூட்டணி) இருந்து பிரிந்த அமைப்பான, ஜனநாயக இடதும் (DIMAR) -இது சென்ற ஆண்டு வரையிலும் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது- நிலைகுலைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, இது 6.3 சதவீத வாக்குகளை வென்றது. இந்தத் தேர்தலிலோ, இது வெறும் 1.2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது, இது நாடாளுமன்றத்திற்கு அத்தியாவசிய அளவான 3.0 சதவீதத்தை விட நன்கு குறைவான அளவாகும்.

தேர்தல் ரீதியாக சிரிசா தான் இப்போது மிக வலிமையான கட்சியாக ஆகியிருக்கிறது. ஒரு சில இலேசான இழப்புகளைத் தவிர அதனால் சென்ற தேசியத் தேர்தல் முடிவுகளுக்கு இணையாகப் பெற முடிந்திருக்கிறது. (இந்த முறை 26.6 சதவீதம், சென்றமுறை 26.7 சதவீதம்). ஆயினும் அதேசமயத்திலான உள்ளூர் தேர்தல்களில் அதன் வெற்றி மிகவும் வரம்புபட்டதாய் இருந்தது. மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக கிரேக்க மக்கள் வசிக்கும் ஐயோனியன் தீவுகள் மற்றும் ஆட்டிகா பிராந்தியத்தில் சிரிசா வெற்றி பெற்றது. ஆளும் கட்சிகளில் இருந்து போட்டியிட்டவர்கள் ஏழு பிராந்தியங்களில் வெற்றி பெற்றனர், ஆனால் மற்ற நான்கு பிராந்தியங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி கண்டனர்.

கோல்டன் டோன் அமைப்பை சேர்ந்த பாசிஸ்டுகள் தங்களது வாக்கு சதவீதத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய கிரேக்க நாடாளுமன்ற தேர்தலில் 6.9 சதவீதமாக இருந்ததில் இருந்து இப்போதைய ஐரோப்பியத் தேர்தலில் 9.4 சதவீதமாக அதிகரிக்க முடிந்திருந்தது. அவர்கள் தான் இப்போது மூன்றாவது பெரிய வலிமையான கட்சி ஆகும்.

அரசியல் எதிரிகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் ஓர்பால் விரும்பிகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வந்திருக்கும் கோல்டன் டோன் அரச எந்திரத்தால் ஊக்குவிக்கப்பட்டு வந்திருந்தது என்பதோடு ஆளும் ND உடன் அது நெருக்கமாகத் தொடர்புபட்டிருந்தது. போலிஸில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் கோல்டன் டோனுக்கு வாக்களித்திருந்ததை தேர்தல் ஆய்வுகள் எடுத்துக்காட்டின.

புதிய தாராளவாத Potami (the River) குழு முதன்முறையாக 6.6 சதவீத வாக்குகளைப் பெற்றது, இது புரூசேல்ஸுக்கு இரண்டு பிரதிநிதிகளை அனுப்பும். பரம-ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (KKE) 6.1 சதவீத வாக்குகளைப் பெற்றது, இது சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இது பெற்ற 4.5 சதவீதத்தில் இருந்து சற்று மேம்பட்ட முடிவாகும். சுதந்திர கிரேக்கர்கள் (ANEL) அமைப்பை சேர்ந்த வலது-சாரி ஜனரஞ்சகவாதிகளின் வாக்கு 7.5 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக சரிந்திருந்தது.

இத்தேர்தல் முடிவுகள் கூட்டணி அரசாங்கத்தை கடும் அழுத்தத்திற்குள் தள்ளியுள்ளது. ஒரு காலத்தில் சவுகரியமான பெரும்பான்மையுடன் இருந்த இந்தக் கூட்டணி கடந்த இரண்டு ஆண்டுகளில் 27 பிரதிநிதிகளை தொலைத்திருக்கிறது. இப்போது 300 பிரதிநிதிகளில் வெறும் 152 பிரதிநிதிகளை நம்பியே இது இருக்கிறது. ஐரோப்பிய தேர்தல் முடிவுகள் ஒரு தேசிய நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருமாயின், ஆளும் கூட்டணிக் கட்சிகள் 94 இருக்கைகளை இழக்கும்.

ஆளும் கூட்டணிக்கு படுமோசமான முடிவுகள் கிட்டியபோதிலும், முன்கூட்டிய தேர்தல் எதற்குமான வாய்ப்பை பிரதமர் அண்டோனிஸ் சமராஸ் நிராகரித்தார். “ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு கருத்துக்கணிப்பு தேர்தலாக மாற்ற முயன்றவர்கள் தோல்வி கண்டுள்ளனர் என்று சமராஸ் ஒரு சிறு தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். “ஸ்திரமின்மை, நிச்சயமின்மை, மற்றும் அரசியல்ரீதியாக ஆளவியலா நிலை ஆகியவற்றின் நிலைமைகளை உருவாக்க முயன்று அவர்கள் தோல்வி கண்டனர் என்றார் அவர்.

என்ன செய்ய வேண்டும் என்பது தனக்குத் தெரியும் என்றார் பிரதமர். எதையும் குறிப்பிட்டுச் சொல்லாமல், “முடிந்த அளவு விரைவாக நாங்கள் முன்னேறுவோம் என்றார் அவர். சமராஸ் தமது அரசாங்கத்தை தீவிரமான வகையில் மாற்றியமைக்கவிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வருங்காலப் பாதையை விவாதிக்க ஜனாதிபதி கரோலோஸ் பபோஉலியாஸ் உடன் அவர் வியாழனன்று சந்தித்துப் பேசவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து முன்திட்டமிட்டிருந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

சிரிசா தலைவரான அலெக்சிஸ் சிப்ராஸ், திங்களன்று மதியம் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி பதவிக்கு கிரீசில் முழுக்க சம்பிரதாயப் பாத்திரம் மட்டுமே உண்டு. அதன் பின்னர் பேசிய சிப்ராஸ் கூறினார்: “ஜனநாயக இயல்புநிலையை மீட்பதற்கு நாம் எத்தனை முடியுமோ அத்தனை விரைவாக தேசியத் தேர்தலுக்கு ஒழுங்கமைந்த வகையிலும் அமைதியான முறையிலும் நகர்ந்தாக வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை கொடுக்கவும் புதிய சிக்கன நடவடிக்கைகளை திணிக்கவுமான தார்மீகரீதியான அங்கீகாரத்தை சமராஸ் இழந்து விட்டார் என அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் மீது புரூசல்ஸின் சிக்கன நடவடிக்கை உத்தரவுகளை திணித்து வந்திருக்கும் கிரேக்க அரசாங்கத்தின் கொள்கை திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டிருப்பதையே தேர்தல் முடிவுகள் குறித்து நிற்கின்றன. இந்தக் காலகட்டத்தில், ஊதியங்கள் 60 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருந்தன, பொதுவான வரிவிதிப்பு அதிகரித்திருக்கிறது, வேலைவாய்ப்பின்மை 27 சதவீதத்துக்கும் அதிகமான அளவுக்கு அதிகரித்து விட்டிருக்கிறது. சுகாதாரம் மற்றும் கல்வி அமைப்புமுறைகள் உருக்குலைவின் விளிம்பில் நிற்கின்றன. சிகிச்சைகளுக்கு செலவு செய்ய இயலாத காரணத்தால் சுமார் 40 சதவீதம் தொழிலாளர்கள் ஏற்கனவே ஆரோக்கிய பாதுகாப்பு முறையில் இருந்து அகற்றப்பட்டு விட்டனர்.

தொழிலாளர்கள் இந்தக் கொள்கையை ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றனர். 2010 இல் இருந்து ஏதென்ஸில் மட்டுமே சுமார் 6,300 ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நாளைக்கு 14 போராட்டங்கள். இதில் 36 பொது வேலைநிறுத்தங்களும் அடங்கும், இதில் சிலசமயங்களில் நூறாயிரக்கணக்கிலான தொழிலாளர்கள் பங்குபெற்றிருக்கிறார்கள். மே 20 செவ்வாயன்று, வேலைகளை வெட்டுகின்ற மற்றும் இன்னும் அதிகமான பள்ளிகளை ஒன்றிணைக்கின்ற அல்லது மூடுகின்ற அரசின் திட்டங்களுக்கு எதிராக கல்வி அமைச்சகத்தின் வெளியே ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வெகுஜன எதிர்ப்பு, ஆளும் கட்சிகளுக்கான --சமீப வாரங்களில் இவற்றுக்கு ஜேர்மன் அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் பகிரங்க ஆதரவு கிடைத்திருந்தது-- தேர்தல் முடிவுகளில் வெளிப்பாட்டை கண்டிருக்கிறது. சுமார் 60 சதவீத வாக்குப்பதிவு நடந்திருக்கும் நிலையில், ஐந்தில் ஒரு வாக்காளர் மட்டுமே உண்மையில் ஆளும் கட்சிகளில் ஒன்றிற்கு வாக்களித்திருக்கிறார்.

அரசாங்கத்தின் கொள்கையை மாற்றமின்றித் தொடர்வதற்கு சமராஸ் நோக்கம் கொண்டிருப்பதானது தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு தெளிவான எச்சரிக்கை ஆகும். கடந்த தேர்தலில், ஜனநாயகவிரோதமான தேர்தல் அமைப்புமுறையின் மூலமாக மட்டுமே கூட்டணியானது தனது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டது. அப்போது முதலாக, கூட்டணியானது தொழிலாளர்களது ஜனநாயக உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்திருக்கிறது. வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் இராணுவச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டனர், ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமாக்கப்பட்டன, பாசிச கும்பல்கள் ஊக்குவிக்கப்பட்டன. கிரீஸில் தொடக்கமளிக்கப்பட்ட சமூகத் தாக்குதல்களை ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகத் திணிக்க இயலாது.

ஆயினும், தொழிலாளர்களது எதிர்ப்பு எதுவும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் சிரிசாவின் வேலைத்திட்டத்தில் எந்த வெளிப்பாட்டையும் காண இயலவில்லை. சிக்கன நடவடிக்கைக் கொள்கைக்கான எதிரியாக தன்னைக் காட்டிக் கொள்ள தனது தேர்தல் பிரச்சாரங்களை அது பயன்படுத்துகிறது என்றபோதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் மிருகத்தனமான சமூகப் பிற்போக்குத்தன வேலைத்திட்டத்தையும் செயலூக்கத்துடன் அது ஆதரிக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பாகத் தான், ஒரு சிரிசா அரசாங்கம் கொள்கை அடிப்படையில் கிரீஸின் கடன்களை அங்கீகரிக்கும் என்றும், புதிய கடனுதவி உடன்பாடுகளுக்கான ஷரத்துகளைப் பேச ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் உடன் அது கலந்து பேசும் என்றும், ஜேர்மன் இடது கட்சியின் காங்கிரஸ் ஒன்றில் சிப்ராஸ் அறிவித்தார்.

சென்ற ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின், சர்வதேச நாணய நிதியத்தின் மற்றும் பல்வேறு அரசாங்கங்களின் பிரதிநிதிகளுடன் சந்தித்துப் பேசுவதற்காக சிப்ராஸ் அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு பலமுறை பயணம் செய்தார். ஒவ்வொரு தடவையிலுமே, சிரிசா அரசாங்கத்தைப் பார்த்து பயப்பட அவசியமில்லை என்பதே தனக்கு விருந்து அளிப்பவர்களுக்கு அவர் அளித்த உறுதி மொழியாக இருந்தது. மாறாக, தனது தலைமையின் கீழான ஒரு அரசாங்கம் நாட்டிற்கு கூடுதல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்பதாய் சிப்ராஸ் கூறினார்.

ஒரு சிரிசா அரசாங்கமானது முழுமையாக ஒரு வலது-சாரி ஆட்சியாகவே இருக்கும். இது சமராஸ் அரசாங்கத்தின் பாதையைத் தொடருவதோடு புரூசேல்ஸின் கட்டளைகளையும் பின்பற்றும். பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் கீழ் பிரான்ஸில் நடந்து கொண்டிருப்பதைப் போலவே, கிரீஸிலும் இடதுசாரியாக வெளித்தோற்றம் காட்டுகின்ற ஒரு அரசாங்கத்தின் வலது-சாரிக் கொள்கைகள் பாசிஸ்டுகளை வலுப்படுத்தும். ANEL வலது-சாரி ஜனரஞ்சகவாதிகளுடன் ஏற்கனவே ஏராளமான சந்தர்ப்பங்களில் சிரிசா இணைந்து வேலை செய்திருக்கிறது.