சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The LSSP’s Great Betrayal: Part 2

LSSP rejects the ICFI’s defence of Trotskyism

லங்கா சம சமாஜக் கட்சியின் மாபெரும் காட்டிக்கொடுப்பு: பகுதி 2

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாப்பதை லங்கா சம சமாஜக் கட்சி நிராகரித்தது

By Saman Gunadasa
10 October 2014

Use this version to printSend feedback

லங்கா சம சமாஜக் கட்சியானது (Lanka Sama Samaja Party -LSSP) 1964 ஆண்டு ஜூனில் சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (Sri Lanka Freedom Party -SLFP) அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதன் மூலம் செய்த மாபெரும் காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள் பற்றிய நான்கு தொடர் கட்டுரைகளில் இது இரண்டாவதாகும். ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறிக்கொண்ட ஒரு கட்சி, முதல் முறையாக முதலாளித்துவ அரசாங்கத்தினுள் நுழைந்துகொண்டு சர்வதேச சோசலிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை பகிரங்கமாக மறுதலித்தது.

லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பானது சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்கு ஒரு ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது, மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான அரசியல் போக்கின் சந்தர்ப்பவாத பண்பை உறுதிப்படுத்தியது. இந்தப் போக்கிலிருந்து உடைத்துக்கொண்ட உண்மையான ட்ரொட்ஸ்கிஸ்டுகளே 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI) அமைத்தனர். ஒவ்வொரு கட்டத்திலும், லங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல் சரிவுக்கு மன்னிப்பளித்து வசதியளித்த பப்லோவாதிகள், பண்டாரநாயக்க அரசாங்கத்திற்குள் அதனுடைய நுழைவிற்கு வழியமைத்துக் கொடுத்தனர்.

இரண்டாவது கட்டுரை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உருவாக்கத்துக்கு சம சமாஜ கட்சியின் கொள்கையற்ற எதிர்ப்பு, மற்றும் நான்காம் அகிலத்தின் பப்லோவாத சர்வதேச செயலகத்தின் பகுதியாக அதன் அடுத்தடுத்த அரசியல் சீரழிவு பற்றி ஆராய்கின்றது. முதல் கட்டுரையை இங்கே வாசிக்க முடியும்.

***


1953
நவம்பரில், அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவர் ஜேம்ஸ் பி. கனன் வெளியிட்ட பகிரங்கக் கடிதத்தை சம சமாஜக் கட்சி நிராகரித்தமை, அதன் அரசியல் சீரழிவில் ஒரு கூர்மையான திருப்புமுனையை குறித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI) ஸ்தாபிப்பதற்கு வழி வகுத்த அந்த பகிரங்கக் கடிதம், நான்காம் அகிலத்தின் தலைமையில் மிஷேல் பப்லோ மற்றும் அவரது குழுவினரதும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான ஒரு சளைக்காத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த, மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தின் அங்கீகாரமிக்க குரலை பிரதிநித்துவம் செய்தது.


பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேலின் திருத்தல்வாதமானது ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகளின் விளைவாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அனுசரணையின் கீழ், போருக்குப் பின்னர் உலக முதலாளித்துவம் மறு ஸ்திரப்படுத்தப்பட்டமையால் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீது திணிக்கப்பட்ட அரசியல் அழுத்தங்களை வெளிப்படுத்தியது. ஸ்ராலினிசமானது தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு எதிர்-புரட்சிகர சக்தி, என்ற ட்ரொட்ஸ்கியின் பண்புமயப்படுத்தலை குப்பைக்குள் போடுவதற்காக, கிழக்கு ஐரோப்பாவில் இடைத்தடை அரசுகள் என்றழைக்கப்படும் ஸ்ராலினிச ஆட்சிகள் நிறுவப்பட்டமையை பப்லோவும் மண்டேலும் பற்றிக்கொண்டனர்.

 
ஒரு வலிநிறைந்த தத்துவார்த்த கலந்துரையாடலின் பின்னர், நான்காம் அகிலமானது கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளை "உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள்" என குணாம்சப்படுத்தியது. இந்த வகைப்படுத்தல் முதலாளித்துவ சொத்துக்கள் தேசியமயமாக்கப்படதை கணக்கில் எடுத்த போதிலும், இந்த அரசுகளின் உருக்குலைந்த பண்பை கோடிட்டுக் காட்டியிருந்தது. சோவியத் ஒன்றியம் போன்று, அவை ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சியில் இருந்து தோன்றவில்லை. மாறாக அவை தொழிலாள வர்க்கத்தை நசுக்கிய ஒரு ஸ்ராலினிச அதிகாரத்துவத்திலேயே தங்கியிருந்தன. இந்த வரையறை, அந்த ஆட்சிகளின் தற்காலிக மற்றும் இடைக்கால இயல்பை சுட்டிக் காட்டியதோடு, நான்காம் அகிலத்தின் பணிகளையும், அதாவது, ஸ்ராலினிசக் கருவிகளுக்கு எதிரான ஒரு அரசியல் புரட்சியில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் பேரில் ட்ரொட்ஸ்கிச கட்சிகளை கட்டியெழுப்பவேண்டி இருப்பதையும் சுட்டிக் காட்டியது.

 
எனினும், பப்லோ மற்றும் மண்டேல், ஸ்ராலினிசம் பற்றிய நான்காம் அகிலத்தின் பகுப்பாய்வை ஒட்டு மொத்தமாக திரிப்பதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக இந்த பண்புமயப்படுத்தலை எடுத்துக்கொண்டனர். இந்த "உருக்குலைந்த தொழிலாளர் அரசுகளுக்கு" வரலாற்றுரீதியாக ஒரு முற்போக்கான பாத்திரத்தை கொடுத்தனர். அவரது பகிரங்கக் கடிதத்தில், கனன் விளக்கியதாவது: "ஒரு புதிய காட்டுமிராண்டித்தனத்தின் அபாயத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக, அவர் [பப்லோ] சோசலிசத்தை நோக்கிய உந்துதலைமறுபக்கம் திருப்பிவிட முடியாதஒன்றாக பார்க்கின்றார்; எனினும் அவர், சோசலிசத்தை எங்கள் தலைமுறைக்குள் அல்லது வரவுள்ள சில தலைமுறைகளுக்குள் வரக்கூடியதாக காணவில்லை. அதற்கு பதிலாக அவர், வேறெதுவும் அன்றி 'நூற்றாண்டுகளாகத்' தொடரவுள்ள, ‘உருக்குலைந்த’, அதாவது ஸ்ராலின்-வகை தொழிலாளர் அரசுகளை மட்டுமே பெற்றெடுக்கும் ஒரு 'சூழ்ந்துவரும்' புரட்சிகளின் அலை பற்றிய ஒரு கோட்பாட்டை வளர்த்தெடுத்தார்."


பகிரங்கக் கடிதமானது,ஸ்ராலினிச அதிகாரத்துவம் அல்லது அதன் ஒரு தீர்க்கமான பகுதி, வெகுஜன அழுத்தங்களின் கீழ் ட்ரொட்ஸ்கிசத்தின் ‘யோசனைகள்' மற்றும் 'வேலைத் திட்டத்தை' ஏற்றுக்கொள்ள தன்னையே மாற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கும் பப்லோவாதத்தின் கலைப்புவாத தன்மையை விளக்கியது. பப்லோவாத பார்வை, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரித்ததோடு, அதனால் ஒவ்வொரு நாட்டிலும் கிளைகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் தொழிலாளர் இயக்கத்தில் தலைமைத்துவ நெருக்கடியை தீர்ப்பதில் நான்காம் அகிலத்தின் இன்றியமையாத பணியையும் நிராகரித்தது. ட்ரொட்ஸ்கிச இயக்கம், எதிர்ப்புரட்சி ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆலோசகர் என்ற பாத்திரத்தை ஆற்றுமளவு கீழிறக்கப்பட்டது.

 
"இறுதியாக: பப்லோவின் திருத்தல்வாதத்துக்கும் மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையிலான பிளவானது அரசியல் ரீதியிலோ அல்லது அமைப்பு ரீதியிலோ சமரசத்திற்கு சாத்தியமே இல்லாதளவு மிகவும் ஆழமானது", என்று கனன் எழுதினார். பப்லோ ஸ்ராலினிசத்துக்கு அடிபணிந்தமை, அவரது சந்தர்ப்பவாதத்தின் ஒரு அங்கமாக இருந்தது. இது, நான்காம் அகிலத்தை நடப்பில் உள்ள வெகுஜன இயக்கங்களுடன் ஒருங்கிணைப்பது என்ற பெயரில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை நடப்பில் உள்ள ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகவாத துரோக தலைமைத்துவங்களுக்கும், இலங்கை போன்ற நாடுகளில் முதலாளித்துவ தேசியவாதிகளுக்கும் அரசியல் ரீதியில் அடிபணியச் செய்வதாக இருந்தது.

 
சம சமாஜக் கட்சி, தனது சொந்த உறுப்பினர்கள் மத்தியில் இருந்த ஸ்ராலினிச-சார்பு போக்கினரை அப்போதுதான் வெளியேற்றியிருந்த போதிலும் கூட, கனனின் பகிரங்க கடிதத்தை நிராகரித்தது. பப்லோவின் நோக்குநிலை தொடர்பாக விமர்சனம் கொண்டிருந்த போதிலும், சம சமாஜக் கட்சியின் தலைமைத்துவமானது பகிரங்கக் கடிதத்தில் எழுப்பப்பட்ட அடிப்படை அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுத்துவிட்டதுடன், சோசலிச தொழிலாளர் கட்சியின் நடவடிக்கை "நமது முழு இயக்கத்திற்கும் பேரழிவானதாக இருக்கும்" என்று கூறி, நான்காம் அகிலத்தின் ஐக்கியத்தை ஆபத்திற்குள்ளாக்குவதாக கனன் மீது குற்றம் சுமத்தியது.

 
1954 பெப்ரவரியில் சம சமாஜக் கட்சிக்கு எழுதிய ஒரு கடிதத்தில், "முரண்பாட்டில் உள்ள அரசியல் பிரச்சினைகள் சம்பந்தமாக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்னரே, எமது பகிரங்கக் கடிதத்தை பிரசுரிப்பதை கண்டித்து தீர்மானம் ஒன்றை நிறைவேறியதன் மூலம், சமசமாஜக் கட்சி ஒரு ஆபத்தான பாதையில் நுழைந்துள்ளது என்று நான் வெளிப்படையாக உங்களிடம் சொல்ல வேண்டும்." என்று கனன் எச்சரித்தார். அதன் சொந்த உறுப்பினர்கள் மத்தியில் இருந்து ஸ்ராலினிசத்துக்கு சார்பானவர்களை சம சமாஜக் கட்சி வெளியேற்றியதை சுட்டிக்காட்டிய பின்னர், அந்த இடத்திலேயே நிறுத்திக்கொள்வது போதாது என்று அவர் வலியுறுத்தினார். "சர்வதேசியவாதிகள் என்ற வகையில், ஏனைய கட்சிகளிலும் பொதுவாக சர்வதேச இயக்கத்திலும் ஸ்ராலினிச சமரசவாதத்தின் பகிரங்கமான அல்லது மூடிமறைக்கப்பட்ட வெளிப்பாடுகள் தொடர்பாக நாம் அதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது. இது, உண்மையில், தற்போதைய நெருக்கடியில் சர்வதேசியத்தின் உரைகல் ஆகும்," என கனன் எழுதினார்.


கனன் மேலும் கூர்மையான எச்சரிக்கையை விடுத்தார்: "ஏனைய கட்சிகளை விட சம சமாஜக் கட்சிக்கு ஒரு சர்வதேச தலைமை தேவைப்படுகிறது என நான் துணிவுடன் கூறுவேன். அது அதன் ட்ரொட்ஸ்கிச மரபுக்கு வலிமையும் ஆதரவும் கொடுக்கும் களஞ்சியமாக இருக்கும். கலைப்புவாத ஊடுருவலுக்கும் மற்றும் இடையூறுகளுக்குமான ஒரு ஏற்பாட்டு மையமாக இருப்பதை விட, அதன் உயிர்வாழ்வுக்கும் இறுதியான வெற்றிக்குமான ஒரே நிபந்தனையாக இருப்பதும் அதுவே ஆகும்."


சம சமாஜக் கட்சி இந்த எச்சரிக்கைக்கு செவிமடுக்காததோடு, பப்லோவின் முன்னோக்கு தொடர்பாக விமர்சனம் கொண்டிருந்தாலும், நான்காம் அகிலத்தின் பப்லோவாத சர்வதேச செயலகத்தின் (IS) உள்ளேயே இருந்தது. சம சமாஜக் கட்சி தலைவர்கள், அனைத்துலகக் குழுவின் பகுதி என்ற வகையில், இலங்கையில் தமது சொந்த சந்தர்ப்பவாத நடைமுறைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு எதிர்க்கப்படும் என்பதை அவர்கள் நன்கு அறிவர். இருப்பினும், பப்லோவாதிகள் சமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாதத்துக்கு மன்னிப்பளித்து ஊக்கமும் கொடுத்தது மட்டுமன்றி, அதற்கு ட்ரொட்ஸ்கிச நற்சான்றுகளையும் வழங்கினர். பதிலுக்கு, ஆசியாவில் ஒரு வெகுஜன ட்ரொட்ஸ்கிசக் கட்சிக்கு பப்லோவும் மண்டேலும் உரிமை கோர முடியும்.

 
சம சமாஜக் கட்சி ஏற்கனவே அதன் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தொழிற்சங்க உறுப்பினர்களின் தொகையில் அதன் வெற்றியை அளவிடத் தொடங்கியிருந்தது. பகிரங்கக் கடிதம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன், 1953 ஆகஸ்ட்டில் வெடித்த அரசியல் நெருக்கடியில் அதன் நாடாளுமன்றவாத கண்ணோட்டம் தெளிவாக இருந்தது. ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிரிந்து சென்ற வலதுசாரி புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சியுடனும் சேர்ந்து, சம சமாஜக் கட்சி கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கைவிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பி) அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஒரு நாள் ஹர்த்தாலுக்கு -பொது வேலைநிறுத்தம் மற்றும் கடை அடைப்புக்கு- அழைப்பு விடுத்தது. போர்க்குணமிக்க எதிர்ப்பு இயக்கம் ஒரு நாளுக்கும் மேலாக தொடர்ந்ததோடு தீவின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்து அவர்கள் அனைவரையும் முற்றிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அரசாங்கம் வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தோடு பிரதமரும் பதவியை இராஜினாமா செய்தார். போராட்டத்தை நீட்டிக்கவைத்து முன்னேற்ற முற்படுவதற்கு மாறாக, அதை சாத்தியமானவு விரைவில் முடிவுக்கு கொண்டுவர முயற்சித்த சம சமாஜக் கட்சியும் அதன் கூட்டணியும், அரசாங்கத்தை பதவியில் ஒட்டிக் கொள்ள அனுமதித்தன. அதனை அடுத்து, "யூஎன்பீ அரசாங்கத்தை இராஜிநாமா செய்து ஒரு புதிய தேர்தலை நடத்த நெருக்குவதற்கே" இப்போது போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என்று சம சமாஜக் கட்சி தலைமைத்துவம் முடிவுக்கு வந்தது.

 
போர்க்குணமிக்க ஹர்த்தால் இயக்கம் வலுவிழந்த நிலையில், எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க 1951ல் உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் (ஸ்ரீலசுக), குறிப்பாக கிராமப்புற மக்களிடையே நிலவிய சமசமாஜக் கட்சி மீதான அதிருப்தியை சுரண்டிக்கொள்ள முடிந்தது. அது ஏகாதிபத்திய-விரோதம் மற்றும் சோசலிச வாய்ச்சவாடல்களுடன் சிங்கள ஜனரஞ்சகவாதத்தையும் சேர்த்துக்கொண்டது. ஹர்த்தால் வீச்சினால் அதிர்ச்சியடைந்த முதலாளித்துவ பிரிவுகள், பரந்த வெகுஜன அதிருப்தியை தணிப்பதற்கான ஒரு வழிமுறையாக ஸ்ரீலசுக பின்னால் தமது ஆதரவை திருப்பிவிட்டனர். 1956 தேர்தலுக்கு முன்னதாக, ஸ்ரீலசுக, தேசிய சிறுபான்மையினருக்கு, குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான பாரபட்சத்தை முன்னெடுக்கும், சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ தேசிய மொழி என்ற கொள்கையுடன், சிங்கள குட்டி முதலாளித்துவத் தட்டினருக்கு அழைப்பு விடுத்தது
.


பண்டாரநாயக்கவின் அரசியல் போலிவடிவங்ளை அம்பலப்படுத்துவதற்கு மாறாக, சம சமாஜக் கட்சி மேலும் மேலும் அவரது சிங்கள பேரினவாதத்திற்கு அடிபணிந்தது. "சிங்களம்-மட்டும்" கொள்கையை உத்தியோகபூர்வமாக எதிர்த்ததோடு அது இனவாத பிளவுகளை விதைக்கக் கூடிய சாத்தியத்தை பற்றியும் எச்சரித்த அதேவேளை, சமசமாஜக் கட்சி ஸ்ரீலசுக உடனான போட்டி-தவிர்ப்பு தேர்தல் உடன்படிக்கை ஒன்றையும் செய்துகொண்டது. அதன் மூலம் அது யூஎன்பீக்கு எதிரான ஒரு முற்போக்கான மாற்றீடாக ஒரு நம்பகத்தன்மையை ஸ்ரீலசுகக்கு வழங்கியது. ஸ்ரீலசுக 1956 தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற பின்னர், புதிய அரசாங்கம் தொடர்பாக "வெளிப்படை ஒத்துழைப்பு" என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்த சம சமாஜக் கட்சி, ஆண்டிற்கான அரசாங்கத்தின் கொள்கை சுருக்கிக்கூறும் முதல் இரண்டு சிம்மாசன உரைகளுக்கும் ஆதரவாக வாக்களித்தது. பப்லோவாதிகள் ஒவ்வொரு நாட்டிலும் முன்மொழிந்தவாறு, "உண்மையான வெகுஜன இயக்கத்திற்குள்" ஒன்றிணைவதாக இது இருந்ததால், பப்லோவாத சர்வதேச செயலகம், சம சமாஜக் கட்சி இனவாத அரசியலுக்கு அடிபணிந்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

 
1960
அளவில், சம சமாஜக் கட்சி, சர்வதேச செயலகத்தின் முழு ஆதரவுடன், அதிகாரத்துக்காக பாராளுமன்ற பாதையை முழுமையாகத் தழுவிக்கொண்டது. மார்ச்சில் நடந்த தேர்தல், யூஎன்பீ மற்றும் ஸ்ரீலசுக இரண்டும் மதிப்பிழந்துள்ளது என பிரகடனம் செய்து, வாக்குப் பெட்டி மூலம் "ஒரு சம சமாஜவாத அரசாங்கத்துக்காக" பிரச்சாரம் செய்தது. அதே சமயம், அதன் தேர்தல் மேடை, "சிங்களம் மட்டும்" கொள்கைக்கான அதன் எதிர்ப்பு மற்றும் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமைக்கான அதன் ஆதரவையும் கணிசமானளவு தளர்த்தியது. சம சமாஜக் கட்சியின் பிரச்சாரத்தை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்ட சர்வதேச செயலகம், அதன் இலங்கைப் பகுதி "அதிகாரத்துக்கான ஒரு தீர்க்கமான போராட்டத்தில்" டுபட்டுவருகின்றது என அறிவித்தது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மாறாக, சம சமாஜக் கட்சி 1956ல் நடந்ததை விட மோசமாக சரிந்தது. இதற்குப் பிரதிபலிப்பாக, அது மேலும் வலது நோக்கி நகர்ந்தது. சம சமாஜக் கட்சித் தலைவர் என்.எம். பெரேரா, ஸ்ரீலசுக தலைமையிலான ஒரு முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைவதற்கு தயாராகுமாறு கட்சிக்கு அழைப்பு விடுத்தார் –இந்த நடவடிக்கை குறுகியளவில் தோற்கடிக்கப்பட்டது. ஜூலையில் நடந்த இரண்டாவது தேர்தலில், ஆட்டங்கண்ட யூஎன்பீ அரசாங்கத்தின் பொறிவைத் தொடர்ந்து, சம சமாஜக் கட்சி மீண்டும் ஸ்ரீலசுக உடன் போட்டியிடாமை உடன்படிக்கைக்கு சென்றதோடு, அது ஆட்சிக்கு வந்த பின்னர் அதன் முதல் வரவு-செலவுத் திட்டம் மற்றும் சிம்மாசன உரைக்கும்
வாக்களித்தது.

 
தனது சொந்த நம்பகத்தன்மை இல்லாதொழிக்கப்படும் என்று கவலையடைந்து, சம சமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாதத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை எழுப்பிய பப்லோவாத சர்வதேச செயலகம், போட்டியிடாமை ஒப்பந்தமானது "பெரும் வெகுஜனங்கள் மத்தியில் ஸ்ரீலசுகயின் தன்மை பற்றி பிரமைகளை" ஊக்குவிக்கக் கூடும் என்று பிரகடனம் செய்தது. அதே நேரம், சர்வதேச செயலகம் தெரிவித்ததாவது: "ஒரு காலனித்துவ அல்லது அரைக் காலனித்துவ நாட்டில், ஒரு தொழிலாள வர்க்கம் அல்லாத அரசாங்கத்துக்கு (அது மத்தியதர வர்க்கமாக இருந்தாலும் சரி அல்லது முதலாளித்துவ வர்க்கமாக இருந்தாலும் சரி), ஒரு புரட்சிகர கட்சி, விமர்சன ரீதியான ஆதரவை கொடுப்பது சாத்தியமானது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்." எனவே, ஸ்ரீலசுக அரசாங்கத்துடன் சூழ்ச்சியில் ஈடுபடுவதற்கு சம சமாஜக் கட்சிக்கு கதவைத் திறந்தே வைத்த பப்லோவாதிகள், இறுதியாக நான்கே ஆண்டுகளுக்குள் அது அமைச்சரவைக்குள் நுழைவதற்கு பாதையை வகுத்தனர்.

 
தொடரும்.....