சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தில் பொலிஸ் அரச திட்டமிடலுக்கு முதலிடம்

By Saman Gunadasa
15 October 2014

Use this version to printSend feedback

கடந்த செப்டெம்பர் 26 அன்று, பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஒதுக்கீடு சட்ட மசோதாவின் படி, மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம் தரை, கடல் மற்றும் விமானப் படைகள், சிவில் பாதுகாப்பு இராணுவம் மற்றும் பொலிசுக்கும் 290 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டை விட நூற்றுக்கு 7 சதவீதம், அதாவது 19 பில்லியன் ரூபா அதிகரிப்பாக இருக்கும் இது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடந்த 2009 ஆண்டின் பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட 90 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அது 2015ல் திட்டமிடப்பட்ட மொத்த செலவில் நூற்றுக்கு 16 வீதமாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இராணுவ ஆக்கிரமிப்பை தொடர்ந்தும் பேணி வருகின்ற அதேவேளை, நாட்டின் 25 மாவட்டங்களிலும் இராணுவத்தை தயார் நிலையில் வைத்து, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டத்துக்கு வரும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குவதற்காக, பொலிஸ்-அரசு ஒன்றை ஸ்தாபிக்கும் திட்டமே பாதுகாப்புத்துறைக்காக இவ்வாறு நிதி உயர்த்தப்படுவதில் சமிக்ஞை செய்யப்படுகிறது.

அண்மையில் வேலை நிறுத்தம் செய்த சுகாதார ஊழியர்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தல், சுத்தமான தண்ணீர் கோரி ஆர்ப்பாட்டம் செய்த ரதுபஸ்வல மக்கள் மீது இராணுவத்தை பயன்படுத்தி தாக்குதல் தொடுத்து மூவர் கொல்லப்பட்டது, சூழல் மாசடைவுக்கு எதிராக போராட்டம் நடத்திய துன்னான பிரதேசவாசிகளுக்கு பொலிஸை அனுப்பி கொடூரமாக தாக்குதல் தொடுத்தது, நகரப் பிரதேசங்களில் நிலங்களை வர்த்தகர்களுக்கு விற்பனை செய்வதற்காக அங்குள்ள குடும்பங்களை இராணுவத்தை பயன்படுத்தி விரட்டுதல் மற்றும் மாணவர்களின் பிரச்சாரங்களுக்கு தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் பொலிஸ் தாக்குதல்கள் மூலம், அரசாங்கத்தின் இந்த பொலிஸ் அரச திட்டம் முன்னணிக்கு வந்துள்ளது.

ஒரு மாதத்துக்கு முன்னரே அக்டோபரில் வரவு-செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்காகவே, இந்த ஒதுக்கீட்டு மசோதா ஏலவே முன்வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தலையும் அத்தோடு இன்னொரு தேர்தலையும் நடத்தி அரசாங்கத்தின் கையை பலப்படுத்திக்கொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ குறிக்கோள் கொண்டிருப்பதே அதற்குக் காரணமாகும். அநேகமாக, கண்கட்டி வித்தை வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்து, வாக்குகளை சுரண்டிக்கொண்டு தேர்தலின் பின்னர், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதும் மற்றும் சமூக நிலைமைகள் மீதும் அடுத்த மோசமான தாக்குதல்களை தொடுப்பதற்கு அரசாங்கம் கணக்குப்போடுவது தெரிகின்றது. அண்மையில் மின்சாரக் கட்டணம், எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகளும் அற்ப அளவில் குறைக்கப்பட்டிருப்பதும் இதன்படியே ஆகும்.

எவ்வாறெனினும், முன்வைக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு மசோதாவிலும் கூட, தொடுப்பதற்குத் தயாராகும் தாக்குதலின் அளவு பற்றிய முன்னறிவிப்பை வழங்குகிறது. பாதுகாப்புக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள 290 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடும்போது, நாட்டு மக்களின் சுகாதார மற்றும் நாட்டின் மாணவர் சமூகத்தின் கல்விக்காக, அரசாங்கம் முறையே 139 பில்லியன் ரூபாய்கள் மற்றும் 88 பில்லியன் ரூபாய்களையும் மட்டுமே ஒதுக்கியுள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக தற்போது வரவு-செலவுத் திட்டத்தில் புள்ளிவிபரப்படி ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதியை விட குறைந்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கடந்த பல வருடங்களில் அரசாங்கத்தின் புள்ளி விபரங்களிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, 2015ம் ஆண்டுக்காக விவசாய அமைச்சின் ஒதுக்கீடானது 2014ம் ஆண்டை விட 2 பில்லியனால் வெட்டிக் குறைக்கப்பட்டு 42 பில்லியன் ஆக்கப்பட்டுள்ளது. உர மானியங்கள் போன்ற தற்போது கிடைக்கும் விவசாயிகளுக்கான நிவாரணங்களை வெட்டிக் குறைப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதே இதிலிருந்து தெரியவருகிறது.

இந்த ஆண்டு காணப்பட்ட நூற்றுக்கு 7.3 வளர்ச்சி வீதத்தை அடுத்த ஆண்டில் 8.2 வரை அதிகப்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. வளர்ச்சி வீதம் பற்றி அரசாங்கம் எந்தளவு வாய்ச்சவடால் விடுத்தாலும், இந்த வளர்ச்சியானது உற்பத்தியின் மீதன்றி பொதுக் கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காக பெறும் அதிக வட்டியிலான கடன், நகர அலங்கரிப்பு திட்டம் மற்றும் ஏனைய ஆடம்பர செலவுகள் மற்றும் சேவைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவை மக்களின் நலன்களை அன்றி, பெரும் வணிக முதலீடுகள் மற்றும் அதிக செலவிடும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதையே இலக்காகக் கொண்டுள்ளன.

2015ம் ஆண்டுக்காக உத்தேசிக்கப்பட்டுள்ள நிதியில், 1,812 பில்லியன் ரூபாய்கள், இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட நூற்றுக்கு 13 வீதம் அதிகமாகும். வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை தீர்ப்பதற்காக இந்த ஆண்டு 1.1 ட்ரில்லியன் ரூபாய்கள் கடன்பெறுவதற்கு மட்டுமே இந்த ஆண்டு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருந்ததோடு, 2015ம் ஆண்டுக்காக அந்த தொகை 1.34 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொழிற்துறை நாடுகளில் இருந்து பின்தங்கிய நாடுகள் வரை பரவி வருகின்ற, பெருமளவு கடன் அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடி இந்த நாட்டையும் மிகவும் மோசமாக பற்றிக்கொண்டுள்ளது. கடன் தவணைக் கட்டனம் மற்றும் வட்டி செலுத்துவதே நாட்டின் விசாலமான செலவாக இருப்பதோடு, அது தனியான நிதிச் சட்டத்தின் படி இடம்பெறுவதால், ஒதுக்கீட்டு மசோதாவினால் அந்த எண்ணிக்கை அகற்றப்பட்டுள்ளது. நாட்டின் மொத்தக் கடன் தொகை, 7.18 ட்ரில்லியன் ரூபாய்களையும் கடந்துள்ளதோடு அதில் நூற்றுக்கு 44 வீதம் உயர்ந்த வட்டிவீதங்களைக் கொண்ட வெளிநாட்டுக் கடன்களாகும். இவ்வாறு ஒரேயடியாக உயரும் கடன் தொகை பற்றி, சர்வதேச நாணய நிதியமும் அதேபோல் உலகத் தரப்படுத்தல் முகவரமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

நாட்டின் அந்நிய செலாவனி பிரதானமாக கடன் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திலேயே தங்கியிருக்கின்றது. இந்த தொழிலாளர்கள், நெருக்கடி நிறைந்த மத்திய கிழக்குப் பிராந்தியத்திலேயே விசாலமாக குவிந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதிகளில் இருந்து கிடைக்கும் வருமானமே வெளிநாட்டு நாணயம் கிடைக்கும் இதர தோற்றுவாயாக இருக்கின்றது. சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்டவேல்ட் எகோனமிக் அவுட் லுக் என்ற ஆண்டு கற்கை அறிக்கை மூலம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை அடிப்படையாகக் கொண்ட பூகோள பொருளாதார அமைப்பு முறையின் நெருக்கடி மேலும் உக்கிரமடையும் என சமிக்ஞை செய்துள்ளது. இந்த நிலைமை இலங்கையின் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மறுபக்கம், அரசாங்கம் நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு இணங்க, அடுத்த ஆண்டின் வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை நூற்றுக்கு 4.4 வரை குறைப்பதற்கு எதிர்பார்க்கின்றது. இந்த கட்டளைகளின்படி, 2016ல் வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை 3.8 வரை குறைக்க வேண்டும்.

பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்கின்ற அதேவேளை, வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை குறைப்பது என்பது, உழைக்கும் மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளைத் திணிப்பதே ஆகும். எஞ்சியுள்ள சில சலுகைகளையும் வெட்டிக் குறைப்பதும் அரசாங்கத் துறையில் சம்பளத்தை தொடர்ந்தும் அதிகரிக்காமல் வைத்திருப்பதும், அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை மேலும் மேலும் கூட்டி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதும் இதில் அடங்கும்.

அரசாங்கத் துறை மற்றும் தனியார் துறையில் உள்ள ஊழியர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவை குறைப்பதும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் இன்னொரு இலக்காக உள்ளது. அரச ஊழியர்களின் ஓய்வுதீய கடன் கொடுப்பனவை, வங்கியில் பெரும் கடன் தொகையாக ஆக்குவதன் மூலம், அரசாங்க செலவை நிறுத்திக்கொண்டது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அத்தகைய தாக்குதலாகும்.

தனியார் மற்றும் அரசாங்க கூட்டுத்தாபனங்களின் ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியை ஓய்வூதிய நிதியாக மாற்றி மாதக் கொடுப்பனவாக ஆக்குவதன் மூலம், ஒரேயடியாக பெருந்தொகைப் பணம் கிடைப்பதை நிறுத்துவதற்கே இப்போது அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதன் மூலம் இந்த ஊழியர்களின் சேமலாப நிதியை, தமக்கு அவசியமான விதத்தில் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு அரசாங்கத்திற்கு கிடைக்கும்.

கடந்த சண்டே டைம்ஸ் பத்திரிகையின் செய்தியின் படி அரசாங்கம் ஒரு தொகை இறக்குமதி பொருட்களுக்கு நூற்றுக்கு 10 முதல் 25 வீதம் வரை வரியை அதிகரிப்பதற்கு செயற்பட்டு வருகின்றது. இறக்குமதி செய்யப்படும் மது மற்றும் புகையிலை இதில் அடங்கும். மோட்டார் வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரம், சிறப்பங்காடிகள், கடைத் தொகுதிகள், ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகரிக்கப்பட உள்ளது. தேசிய உற்பத்தியாளர்களை பாதுகாத்தல் என்ற பெயரிலான முகமூடியைப் பயன்படுத்தி, இறக்குமதி செய்யப்படும் தோல், பிளாஸ்டிக், செம்பு, உருக்குப் பொருள், தளபாடங்கள், மருந்துப் பொருட்கள், பிஸ்கட், சொக்கலட் மற்றும் இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றுக்கும் வரி அதிகரிக்கப்படவுள்ளது.

உழைக்கும் மக்களுக்கு அன்றாடம் அவசியப்படும் சேவைகள் மற்றும் பொருட்களுக்கு சுற்றிவளைத்து வரிகளைத் திணிப்பதே இராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதான வருமானமாக உள்ளது. விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்ற மோசடியின் மூலம், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலை, ஒரு மாதத்துக்கு முன்னர் அதிகரிக்கப்பட்டது.

உலக முதலாளித்துவ நெருக்கடியினுள், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமே, தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மீது அரசாங்கம் இடைவிடாது தாக்குதல் தொடுக்கின்றது. ஆயினும் தொழிற்சங்கங்கள், அரசாங்கத்திடம் சலுகைகளைக் கோரும் இயக்கத்தினுள் தொழிலாளர்களை சிறைப்படுத்தி, தமது உரிமைகளுக்காக அவர்கள் போராட்டத்துக்கு வருவதை தடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.