தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் Neo-fascist National Front leads first round of French regional elections நவ-பாசிசவாத தேசிய முன்னணி பிரெஞ்சு பிராந்திய தேர்தல்களின் முதல் சுற்றில் முன்னணியில் உள்ளது
By Kumaran Ira
Use this version to print| Send feedback நவ-பாசிச தேசிய முன்னணி (FN) ஞாயிறன்று நடந்த பிரான்சின் 13 பிராந்தியங்களுக்கான முதல் சுற்றில் குறைந்தபட்சம் ஆறில் குறிப்பிடத்தக்களவில் தேர்தல் வெற்றிகளைப் பெற்றுள்ளது. இத்தேர்தல்கள் நவம்பர் 13 பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் அறிவித்த அவசரகால நெருக்கடி நிலைக்கு இடையே, பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் விஷமத்தனமான முஸ்லீம்-எதிர்ப்பு பிரச்சாரம் நிறைந்த ஒரு நச்சுத்தனமான சூழலில் நடந்துள்ளது. அரசாங்கம் வாக்கு மையங்களில் பாதுகாப்பை அதிகரித்திருந்தது, அத்துடன் பாரிஸிலும் மற்றும் ஏனைய பிரதான நகரங்களிலும் பொலிஸூம் சிப்பாய்களும் ரோந்து சுற்றிய வண்ணம் இருந்தனர். 50 சதவீதத்தினர் வாக்கெடுப்பைப் புறக்கணித்திருந்த நிலையில், நவ-பாசிச தேசிய முன்னணி (FN) 30 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது, வலதுசாரி குடியரசு கட்சியினர் (LR, 27 சதவீதம்) மற்றும் 23 சதவீத வாக்குகளுடன் அழிவார்ந்த பின்னடைவைச் சந்தித்த ஆளும் சோசலிஸ்ட் கட்சிக்கு முன்னிலையில் தேசிய முன்னணியைக் கொண்டு வந்தது. தேசிய முன்னணி பின்வரும் ஆறு பிராந்தியங்களில் முன்னணியில் உள்ளது: Nord-Pas-de-Calais-Picardie, Provence-Alpes-Côte d’Azur, Languedoc-Roussillon-Midi-Pyrénées, Normandy, Centre-Loire, Bourgogne-Franche-Comté மற்றும் Alsace-Lorraine-Champagne-Ardenne. குடியரசு கட்சியினர் தலைமையிலான கூட்டணி நான்கு பிராந்தியங்களிலும், சோசலிஸ்ட் கட்சி இரண்டு பிராந்தியங்களிலும் முன்னணியில் உள்ளன. தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென், வடக்கு பிராந்தியமான Nord-Pas-de-Calais-Picardie இல் 43 சதவீத வாக்குகள் பெற்றார்—இது சோசலிஸ்ட் கட்சியும் மற்றும் அதன் கூட்டாளியுமான ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் (PCF) பல தசாப்தங்களாக செல்வாக்கு செலுத்திய பிராந்தியமாகும். அவற்றால் 18 சதவீதம் மட்டுமே பெற முடிந்தது. தொழில்சாலை மூடல்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் மூடல்களால் பாதிக்கப்பட்ட அப்பிராந்தியம் 12.5 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதத்துடன், பிரான்சின் அதிகபட்ச வறுமை விகிதங்களைக் கொண்ட பிராந்தியங்களில் ஒன்றாக உள்ளது. அங்கே வசிக்கும் 6 மில்லியன் மக்களில் ஒரு மில்லியன் பேர் வறுமையில் வாழ்கின்றனர். இத்தேர்தல்கள், சோசலிஸ்ட் கட்சி, பிராந்தியங்களின் எண்ணிக்கையை 22 இல் இருந்து 13 ஆக குறைத்து, அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள ஒரு சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்திய பின்னர் நடத்தப்படும் முதல் பிராந்திய தேர்தல்களாகும். முதல் சுற்றில் எந்த பிராந்தியத்திலும் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மை பெறவில்லை என்றாலும், குறைந்தபட்சம் 10 சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு இடையே இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். ஆறு பிராந்தியங்களில் முன்னணி வகிக்கும் தேசிய முன்னணி, கோர்சிகா பிராந்தியத்தை தவிர ஏனைய எல்லா பிராந்தியங்களிலும் இரண்டாம் சுற்று செல்ல முதல் சுற்றில் தகுதி பெற்றுள்ளதால், இது சோசலிஸ்ட் கட்சி மற்றும் LR நிர்வாகிகளை தேசிய முன்னணி குறித்து அடுத்த வாரம் என்ன மூலோபாயத்தை ஏற்பதென முடிவெடுக்க நிர்பந்தித்துள்ளது. சோசலிஸ்ட் கட்சி தலைமை செயலாளர் ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ் ஞாயிறன்று இரவு, Nord-Pas-de-Calais-Picardie மற்றும் Provence-Alpes-Côte d’Azur பிராந்தியங்களில் இரண்டாம் சுற்றுக்கான சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அவர் தெரிவிக்கையில், “தேசிய முன்னணி ஓர் அச்சுறுத்தலை முன்னிறுத்தும் மற்றும் இடது வலதை வழிகாட்டி இட்டுச் செல்ல முடியாத பிராந்தியங்களில், குறிப்பாக Nord-Pas de Calais-Picardie மற்றும் Provence-Alpes-Côte d’Azur இல், சோசலிஸ்ட் கட்சி ஜனநாயக சக்திகளை தடுக்கும் … ஐந்தாண்டுகளுக்கு, சோசலிஸ்ட் கட்சி அந்த பிராந்தியங்களில் பதவியேற்காது,” என்றார். தேசிய முன்னணி முன்னுதாரணமற்ற விதத்தில் இரண்டு அல்லது மூன்று பிராந்தியங்களைக் கூட வெல்லலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன, அவையாவன: மார்சைய்யை சுற்றியுள்ள தென்கிழக்கு Provence Alpes Côte d’Azur பிராந்தியம், லீல் ஐ சுற்றியுள்ள Nord Pas-de-Calais Picardie மற்றும் Burgundy-Franche-Comté ஆகியவை. தேசிய முன்னணியின் மேலெழுச்சி, சோசலிஸ்ட் கட்சி வகித்த பிற்போக்குத்தனமான பாத்திரம் மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியை நிரூபிக்கிறது. சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இன் ஆழ்ந்த மக்கள்விரோத சிக்கனத் திட்டங்கள் மற்றும் போருக்கான கொள்கைகள் அவரது கட்சியையே மதிப்பிழக்க செய்துள்ளது. சோசலிஸ்ட் கட்சிக்கு இடதிலிருந்து ஒழுங்கமைந்த எதிர்ப்பு இல்லாததாலும், அத்துடன் சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் கூட்டாளிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்கி வருவதாலும், பாரிஸ் தாக்குதல்களுக்கு சோசலிஸ்ட் கட்சி எதைக் கொண்டு எதிர்வினை ஆற்றியதோ அந்த பொலிஸ்-அரசு நடைமுறைகளிலிருந்து ஆதாயமடையும் முக்கிய நபராக தேசிய முன்னணியை எழுச்சி பெற செய்துள்ளது. சோசலிஸ்ட் கட்சி அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிரந்தரமாக நீக்குவதற்கான அதன் விருப்பத்தை அறிவித்துள்ளது. அது போராட்டங்களுக்கு தடைவிதிக்கவும் மற்றும் ஒடுக்கவும், பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக பொலிஸ் குறிப்பிடும் எவரொருவரையும் விசாரணையின்றி வீட்டுக்காவலில் வைக்கவும் அனுமதிக்கும் வகையில், சோசலிஸ்ட் கட்சி மூன்று மாதகாலத்திற்கு அவசரகால நெருக்கடி நிலையை அறிவித்தது. அவசரகால நெருக்கடி நிலை அதிகாரங்களை காலவரையின்றி பயன்படுத்தும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்க, அதாவது நடைமுறையில் பிரான்ஸை ஒரு பொலிஸ் அரசாக மாற்றும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வர சோலிஸ்ட் கட்சி நோக்கம் கொண்டுள்ளது. ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் அடிப்படையிலேயே முறித்துக் கொள்வதற்கான சோசலிஸ்ட் கட்சி இன் நகர்வானது, தேசிய முன்னணியின் —நாஜி ஒத்துழைப்பு விச்சி ஆட்சிக்கான அதன் ஆதரவு, இனப்படுகொலையை அது மறுப்பது, மற்றும் அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சிக்கான அதன் ஆதரவு போன்ற— ஜனநாயக விரோத பாரம்பரியத்தை வாக்காளர்கள் எதிர்க்க வேண்டுமென்ற வாதங்களைப் பலவீனப்படுத்தியுள்ளது. அதற்கு மாறாக, சோசலிஸ்ட் கட்சியின் கொள்கைகள், தேசிய முன்னணியை பிரதான முதலாளித்துவ அரசியலுக்குள் ஒருங்கிணைத்துள்ளது.. பாரிஸ் தாக்குதல்கள் மற்றும் சிரியா, ஆபிரிக்காவின் ஏகாதிபத்திய போர்களிலிருந்து தப்பிவந்த மில்லியன் கணக்கானவர்களின் ஐரோப்பிய புலம்பெயர்வு நெருக்கடியை பற்றிக்கொண்டு, தேசிய முன்னணி கடுமையான சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் புலம்பெயர்வு விரோத கொள்கைகளைக் கொண்டு பிரச்சாரம் செய்தது. கடந்த ஆண்டு உள்ளாட்சி மற்றும் ஐரோப்பிய தேர்தல்களில் வாக்காளர்களின் ஆதரவு வாக்குகளை வென்றுள்ள நிலையில், தேசிய முன்னணி ஞாயிறன்று நடக்கவுள்ள இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் வெற்றிகளைக் குவித்து, 2017 ஜனாதிபதி தேர்தல்களில் மரீன் லு பென் இன் வாய்ப்புகளைப் பலப்படுத்த நோக்கம் கொண்டுள்ளது. தேசிய முன்னணி போட்டியிட்ட Nord-Pas-de-Calais-Picardie பிராந்தியத்தின் Henin-Beaumont நகரில் வாக்களித்த பின்னர், மரீன் லு பென் கூறுகையில், “இதுவொரு முக்கிய தருணமாகும், நமது பிராந்தியங்களின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாகும், நமது நாட்டு எதிர்காலத்திற்கும் முக்கியமாகும், பிரான்ஸைப் பாதித்துள்ள பேரழிவுகரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களைப் பொறுத்த வரையிலும் கூட முக்கியமானதாகும்,” என்றார். சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசு கட்சியினரால் அவநம்பிக்கை அடைந்த வாக்காளர்களுக்கு முறையிடும் வகையில், அவர், “நமது நாட்டின் தேவைகளுக்காக தேசிய ஐக்கியத்தை அடைவதே எங்கள் இலட்சியம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். தேர்தலுக்கு முன்னதாக, சோசலிஸ்ட் கட்சியும் முதலாளித்துவ ஊடகங்களும், தேசிய முன்னணி, குடியரசைப் பலவீனமாக்க அச்சுறுத்துகிறது என்று வாதிட்டு, தேசிய முன்னணிக்கு வாக்காளிக்க வேண்டாமென பெரும் பிரயத்தனத்துடனும் மற்றும் ஆத்திரத்துடனும் முறையீடுகள் செய்தன. டிசம்பர் 5 இல், Le Monde, “தேசிய முன்னணி, ஒரு வஞ்சக கட்சி" என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தை தாங்கி வந்தது. வாசகர்கள் “அந்த தீவிர வலது கட்சியை ஆழமாக எடுத்துக்" கொள்ள வேண்டுமென எச்சரித்து அது எழுதுகையில், “அதன் சித்தாந்தம் மற்றும் அதன் முன்மொழிவுகள் குடியரசின் மதிப்புகளுக்கும், தேசிய நலனுக்கும், உலகில் பிரான்சின் அந்தஸ்திற்கும் முரண்பட்டுள்ளன. … தேசிய முன்னணி அரசியலைப்பை மிதித்து மரண தண்டனையை மறுஅறிமுகம் செய்ய விரும்புகிற நிலையில், அதன் தலைவர் நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதல்களை அகதிகளுக்கு தஞ்சம் வழங்கும் நடைமுறைகளை உடனடியாக நீக்குவதற்கும், அனைவருக்குமான உரிமைகள் மற்றும் பிரான்ஸைக் கௌரவப்படுத்தும் பாரம்பரியத்தை நசுக்குவதற்கும் முறையிட ஒரு சாக்காக பயன்படுத்துகையில், சகோதரத்துவம் என்னாவது?” என்று எழுதியது. அதேபோல, கம்படெலிஸ், சோசலிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து தடுக்குமாறு சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் கூட்டாளிகளான புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி போன்ற போலி-இடது கட்சிகள் மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு முறையிட்டார். அவர் அறிவிக்கையில், “இடது தான் பிரெஞ்சு குடியரசின் கடைசி பாதுகாப்பு அரண். இடதின் வெற்றியைப் பாதுகாக்க மற்றும் தேசிய முன்னணியின் மேலுயர்வைத் தடுக்க பிரான்ஸ் எங்கிலுமான இடதுகளின் ஒரு ஐக்கியத்திற்கு சோசலிஸ்ட் கட்சி அழைப்புவிடுக்கிறது,” என்றார். Le Monde மற்றும் கம்படெலிஸ் இன் கருத்துக்கள் எரிச்சலூட்டுவதும், பொய்யும் ஆகும். ஒரு நிரந்தர அவசரகால நெருக்கடி நிலையைக் கொண்டு பிரான்ஸை ஆளும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்க முன்மொழிந்ததன் மூலமாக, சோசலிஸ்ட் கட்சி ஏற்கனவே பிரெஞ்சு குடியரசுடன் வரலாற்றுரீதியில் தொடர்புபட்ட ஜனநாயக கோட்பாடுகளைக் கைத்துறந்துள்ளது. இந்த கோட்பாடுகளை, முதலாளித்துவ சமூகத்தில் ஜனநாயகத்துக்கான தளமாக இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களால் மட்டுமே இப்போது பாதுகாக்க முடியும். சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டாளிகள் தேசிய முன்னணியால் பரிந்துரைக்கப்படும் பொலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களின் மேலுயர்வைத் தடுக்கவில்லை. அவர்களும் மக்கள்விரோத சிக்கனத் திட்டம் மற்றும் போர் கொள்கைகளைத் திணித்து வருகின்றனர், உளவுவேலை எந்திரம் மற்றும் ஒரு பொலிஸ் அரசுக்கான சட்டபூர்வ கட்டமைப்பை கட்டமைத்து வருகின்றனர். ஒரு பாசிச கட்சியின் தலைமை கொண்ட பிரான்சில் ஒரு பொலிஸ் அரசின் மேலுயர்வுக்கான நிலைமைகளை உருவாக்க அவர்கள் சக்திக்குட்பட்டு அவர்கள் அனைத்தையும் செய்து வருகின்றனர். |
|
|