தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் Greek election: SYRIZA leader calls for “new patriotic alliance” கிரேக்க தேர்தல்: சிரிசா தலைவர் "புதிய தேசப்பற்றுமிகு கூட்டணிக்கு" அழைப்புவிடுக்கிறார்
By our reporters Use this version to print| Send feedback ஞாயிறன்று தேர்தலுக்கு முந்தைய அவரது முக்கிய இறுதி பேரணியில், சிரிசா (தீவிர இடதின் கூட்டணி) தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் "ஒரு புதிய தேசப்பற்றுமிகு கூட்டணிக்கு" அழைப்புவிடுக்க ஏதென்ஸில் சுமார் பத்து ஆயிரக் கணக்கானவர்களின் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அவரது கட்சி அதிகாரத்திற்கு வந்தால், அது தற்போதிருக்கும் அரசியல் மற்றும் சமூக ஒழுங்கிற்கு அது உத்தரவாதமளிக்கும் என்று உறுதியளித்தார்.
மத்திய ஏதென்ஸின் ஒமோனியா சதுக்கத்தில் சிப்ராஸ் பிரதான பேச்சாளராக இருந்தார். அந்த பேரணிக்கு முன்னதாக, சிப்ராஸின் உரைக்காக தயாரிக்கப்பட்டிருந்த ஒரேயொரு பேச்சாளருக்குரிய உயர்பீடத்துடன் கூடிய மேடை மீதிருந்த ஒலிப்பெட்டிகளில் பெரும் சத்தத்துடன் பாப் இசை ஒலித்துக் கொண்டிருந்தது. தொழில்முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆடம்பர நிகழ்வில் இருப்பதைப் போல, படப்பதிவு சாதனங்கள் கூட்டத்தைப் பதிவு செய்ய மேலே இருந்து படமெடுத்தன. தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் பல பிரதிநிதிகளுக்கென ஒரு பெரிய மேடை ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்டத்தின் முகப்பில் சிரிசாவின் கொடிகள் மேலோங்கி இருந்தன, அத்துடன் ஒருவர் பிரமாதமாக தேசிய கொடியையும் அசைத்துக் கொண்டிருந்தார். மிதமிஞ்சிய பொய்கள், மழுப்பல்கள் மற்றும் தேசியவாத முறையீடுகளுடன் கூடிய ஒரு 45 நிமிட உரையை, “ஒரு புதிய தேசிய இணக்கத்திற்காக, ஒரு புதிய சமூக மற்றும் தேசப்பற்றுமிகு கூட்டணிக்காக... புதிய சுதந்திரத்தை நடைமுறையில் கொண்டு வருவதற்காக, கிரேக்க ஆண்கள் பெண்கள் எல்லோருக்கும்" அழைப்பு விடுத்து சிப்ராஸ் தொடங்கினார்.
ஞாயிறன்று சிரிசாவிற்கு வாக்களிக்குமாறு அனைத்து கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் அவர் முறையிட்டதுடன், அனைத்து அரசியல் முகாம்களும் ஒத்துழைக்குமாறு அழைப்புவிடுத்தார். “ஞாயிறன்று நாம் வெறுமே ஒரு திருப்புமுனையைப் படைக்கப் போகிறோம் என்பதல்ல, நாம் ஒரு சகாப்தத்தையே மாற்ற போகிறோம், நேற்று எவ்வாறு வாக்களித்தோம் என்பதைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் ஒன்றாக முன்னோக்கி நகர்ந்து வருகிறோம்,” என்றார். சிரிசா தலைமையிலான ஒரு அரசாங்கம், ஊழல், கட்சிபேதம் மற்றும் தனிச்சலுகை அதிகாரம் ஆகியவற்றை முடிவு கட்டும் என்று அறிவித்ததுடன், “திங்கட்கிழமையோடு கட்சி என்பது முடிந்து போகும், நாம் பாரபட்சமின்றி ஒவ்வொருவருக்குமான சட்டபூர்வத்தன்மைக்குத் திரும்புகிறோம்... திங்கட்கிழமையோடு, தேசிய அவமதிப்புகள் முடிந்து போகும்,” என்று குறிப்பிட்டு, சிப்ராஸ் மீண்டும் தேசியவாத முரசு கொட்டினார். பின்னர் அவரது உரையில் சிப்ராஸ், “சட்டபூர்வத்தன்மை" என்ற அவரது வரையறையில் அரசு எந்திரத்தைத் தக்க வைப்பது மட்டுமல்ல, மாறாக அதை பலப்படுத்துவதும் உள்ளடங்கி இருக்கும் என்பதை தெளிவுபடுத்தினார். அவரது கொள்கைகளுக்கு வரவிருக்கும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதற்கு இத்தகைய சக்திகள் எதிர்காலத்தில் அவசியப்படுமென்பதை சிரிசா தலைவர் துல்லியமாக அறிந்துள்ளார். அரசு சக்திகளுக்கான ஒரு சிறப்பு முறையீட்டில், அவர் அறிவித்தார், “சீருடையில் இருப்பவர்கள் கண்ணியமான வரையறைகளுடன் பிரஜைகளுடன் இணக்கமாக அவர்களது வேலைகளைச் செய்யவும், குற்றத்தன்மையிலிருந்து பிரஜைகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்குத் தேவையான ஆற்றலை நாங்கள் வழங்குவோம், மேலும் பொலிஸ்காரர்களுக்கும், தங்களின் குடும்பங்களைப் பிரிந்து நாட்டுக்காக இராணுவத்தில் உள்ளவர்களுக்கும் உதவுவோம் மற்றும் அவசியப்படும் போது அவர்கள் தரப்பில் நிற்போம்,” என்றார். சிப்ராஸ் பாசாங்குத்தனமாக "புரிந்துணர்வு உடன்பாடுகள்" என்றறியப்படும் பல தொடர்ச்சியான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றின் வங்கியாளர்களின் பிரதிநிதிகளையும் மற்றும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலையும் குற்றஞ்சாட்டினார். “திருமதி மேர்க்கெலின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் எவரையும் பிரதான பதவிகளில் நாங்கள் கொண்டிருக்க மாட்டோம் என்பதை முற்றிலுமாக நாங்கள் தெளிவுபடுத்தி விடுகிறோம்,” என்று அவர் அறிவித்தார். “புரிந்துணர்வு உடன்பாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து-ஆட்சி செய்யும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை,” என்றார். உண்மையில் சிரிசாவின் தலைமையில், சமூக ஜனநாயக PASOK கட்சியின் முன்னாள் முன்னணி அங்கத்தவர்கள் உள்ளடங்கி உள்ளனர், இவர்களும்தான் வெறும் ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கையில் அந்த அரசாங்கத்தில் இருந்தனர். ஒமோனியா பேரணிக்கு வெறும் ஒரு நாள் முன்னதாக, Odysseas Voudouris ஏதென்ஸ் மாவட்டத்தின் மரௌஸ்சியின் ஒரு கட்சி கூட்டத்தில் உரையாற்றினார். அவர் சிரிசாவுக்கு வாக்களிக்குமாறு புதிய ஜனநாயக கட்சி ஆதரவாளர்களுக்குப் பகிரங்கமாக முறையிட்டார். PASOKஇன் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Voudouris, ஜோர்ஜ் பாப்பன்திரேயோ அரசாங்கத்தின் பாகமாக இருந்து 2010இல் சிக்கன நடவடிக்கைக்கு வாக்களித்தார். டிசம்பர் 2011இல் Voudourisஇன் குழு அவரது மெஸ்சினியா சட்டமன்ற தொகுதியில் உள்ள காலாமாட்டாவிற்கு விஜயம் செய்தபோது, போராட்டக்காரர்களை எதிர்கொண்டது, அவர்கள் "ஒத்துழைப்பாளர்களே எங்கள் நகரை விட்டு வெளியேறுங்கள்" என்று கூச்சலிட்டனர். வெள்ளியன்று நடந்த பேரணி, "First We Take Manhattan" என்ற லியோனார்ட் கோஹனின் பாடல் வரிகளுக்கு கூட்டத்திடமிருந்து வந்த பெரும் ஆரவார கரகோஷத்துடன் இறுதியில் முடிவுற்றது.
இந்த கட்டத்தில் ஸ்பானிய போலி-இடது Podemos இயக்கத்தின் தலைவர் பப்லோ இக்லிசியாஸ், சிப்ராஸ் உடன் அரங்கில் இணைந்து கொண்டார். அவர்களது பரஸ்பர ஐக்கியத்தை அறிவித்ததுடன், அரங்கில் அரவணைத்து கொண்டனர், இக்லிசியாஸ் மைக்ரோபோனைக் கையிலெடுத்து "முதலில் நாம் மான்ஹட்டனைப் எடுத்துக்கொள்வோம், பின்னர் நாம் பேர்லினை எடுத்துக்கொள்வோம்" என்ற பாடல் வரிகளைப் பாடினார். அவரது உள்ளூர் பார்வையாளர்களிடையே தேசியவாத முரசு கொட்டிய போதினும், சிப்ராஸ் அவரது உரையில் இரண்டாவதொரு பார்வையாளர்களாக இருந்த சர்வதேச நிதியியல் மற்றும் வணிக மேற்தட்டுக்கும் உரை நிகழ்த்தினார். கிரேக்க கடனைக் குறைப்பதற்கான அவரது முன்மொழிவுகளுக்கு "ஐரோப்பிய பத்திரிகை, பொருளியல் வல்லுனர்கள் மற்றும் சர்வதேச பிரபலங்களிடமிருந்து" ஆதரவு கிடைந்திருந்ததாக அவர் ஒரு புள்ளியில் பெருமையடித்துக் கொண்டார். சமீபத்திய வாரங்களில் நிதியியல் மற்றும் வணிக பத்திரிகைகளால் சிரிசா பரபரப்பாக ஊக்குவிக்கப்பட்டதை சிப்ராஸ் குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட விதத்தில் கடன் மீட்சி, ECBஇன் பணப்புழக்க திட்டம், மற்றும் குறிப்பாக, உலகளாவிய முதலீட்டாளர்கள் கிரீஸின் சந்தைகள் மற்றும் ஆதார வளங்களைச் சுதந்திரமாக அணுகுவதற்கு அனுமதிக்கும் வகையில் கிரேக்க பொருளாதாரத்தின் மீது ஒருசில விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் இறுக்கிப்பிடியை உடைப்பது ஆகியவற்றிற்கான சிரிசாவின் முன்மொழிவுகளுக்கு பல வாரங்களாக முன்னணி கட்டுரையாளர்கள் அவர்களது ஆதரவை வெளியிட்டுள்ளனர். வியாழனன்று 18 முன்னணி சர்வதேச பொருளாதார வல்லுனர்களும் பேராசிரியர்களும் கொலாம்பியா பல்கலைக்கழகத்தின் ஜோசப் ஸ்டிஜ்லிட்ஜ் தலைமையில் கடன் மீட்சிக்கான சிரிசாவின் திட்டத்தை ஆதரித்து பைனான்சியல் டைம்ஸில் ஒரு கடிதம் பிரசுரித்திருந்தனர். ECB வழியாக நிதியியல் சந்தைகளுக்கு ஒரு பாரிய ஊக்குவிப்புடன் சேர்ந்து, சிக்கன கொள்கைகளை மிகவும் குறிப்பிட்ட விதத்தில் நடைமுறைப்படுத்துவதை இத்தகைய சக்திகள் ஆதரிக்கின்றன. ஆனால் கிரீஸின் கடன் சுமையை வெட்டும் விடயத்தில் எந்தவொரு இழப்புகளையும் பகிர்ந்து கொள்ள மறுக்கின்ற அதேவேளையில் சிக்கன நடவடிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்ற ஜேர்மன் அரசாங்கத்தால் அந்த கொள்கை நடவடிக்கைகள் எதிர்க்கப்படுகின்றன. இது மேர்க்கெல் மற்றும் பேர்லின் அரசாங்கத்தை நோக்கிய சிப்ராஸ் மற்றும் இக்லிசியாஸ் இருவரது கடுமையான கருத்துக்களையும் விளங்கப்படுத்துகிறது. ஏதென்ஸ் பேரணிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, பைனான்சியல் டைம்ஸில் பிரசுரமான ஒரு கருத்துரையில், சிப்ராஸ் "அரசியல் ஸ்திரப்பாடு மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு" ஒரு சிரிசா அரசாங்கம் உத்தரவாதம் அளிக்குமென நிதியியல் மேற்தட்டுக்கு மறுஉத்தரவாதம் அளித்தார். சிரிசாவின் ஒரு வெற்றி "யூரோ மண்டலத்தைப் பலப்படுத்தி, அக்கண்டம் முழுவதிலும் உள்ள பிரஜைகளுக்கு ஐரோப்பிய வேலைத்திட்டத்தை ஈர்ப்புடையதாக்கும்" என்று அறிவித்தார். சிரிசாவின் ஒரு அரசாங்கம் ஒரு யூரோ மண்டல அங்கத்தவராக கிரீஸின் கடமைப்பாட்டை மதிக்கும், ஒரு சமநிலைப்பட்ட வரவு-செலவு திட்டக்கணக்கை மேற்கொள்ளும், மற்றும் ECBஆல் வரையப்பட்ட வரையறைகளுக்கு தானே பொறுப்பேற்கும் என அக்கட்டுரையில் சிப்ராஸ் வலியுறுத்தினார். “இரத்தத்தை உறைய செய்யும் ஒரு பணப்புழக்க திட்டத்தைத் தொடங்குமாறு" அவர் ECBஐ வலியுறுத்தினார். சிப்ராஸின் பேரணி நடந்த அந்த நாளில், பைனான்சியல் டைம்ஸ் கருத்துரையாளர் வொல்ஃப்காங் முன்சௌவ் ஒரு காணொளியில் அவரது சொந்த ஒப்புதலை வழங்கியிருந்தார், அதில் அவர் அறிவிக்கையில், “கடன் மறுசீரமைப்பு என்ற ஒன்று அவசியமானது தான், அந்த விடயத்தில் சிரிசா சரியாகவே உள்ளது,” என்றார். வியாழனன்று, சிப்ராஸ் எதிர்பார்த்ததைப் போலவே, ECB ஒரு பாரிய பணப்புழக்க திட்டத்தை வெளியிட்டது, ஆனால் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு அத்திட்டத்தின் எந்தவித நிதிகளிலிருந்தும் கிரீஸிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக தெளிவான காப்புரையுடன் இருந்தது. QE திட்டத்தின் வரையறைகளின் கீழ் பிணையெடுப்பு திட்டங்களுக்குள் வரும் நாடுகள் "கடுமையான நிபந்தனைகளை", சான்றாக நிறைய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர் சந்தைகளுக்கு கட்டமைப்பு சீர்திருத்தங்களை அளிப்பது போன்றவற்றை முகங்கொடுக்கும் என்று ECB தலைவர் மரியோ திராஹி குறிப்பிட்டார். இவ்வாறிருந்த போதினும் சிரிசா அதற்கேற்றவாறு உற்சாகத்துடன் அந்த புதிய திட்டத்தை வாழ்த்தியது. ஏதென்ஸ் பேரணிக்கு ஒரு நாள் பின்னர், வெள்ளியன்று சிரிசாவின் ஒரு அறிக்கை அறிவித்தது, “அடுத்துவரும் கிரேக்க அரசாங்கம் நாட்டின் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் அதுவொரு முக்கிய முடிவாகும்” என்றது. கிரீஸில் சிக்கன நடவடிக்கைகளை இல்லாமல் செய்வதிலிருந்து வெகுதூரம் விலகி, வியாழனன்று ஒமோனியா சதுக்கத்தில் நடந்த பேரணியும் அதற்கடுத்து வந்த கட்சியின் அறிக்கைகளும் சிரிசாவின் ஓர் அரசாங்கம் அதுபோன்ற கொள்கைகளைத் தொடரும் என்பதைத் தெளிவுபடுத்தின. இதை செய்வதற்காக, பல ஏனைய முதலாளித்துவ கட்சிகளை தழுவிய ஒரு கூட்டணியை சிப்ராஸ் உருவாக்க வேண்டியதிருக்கலாம். ஆனால் எதிர்ப்புமிகுந்த மக்கள் மீது இத்தகைய நடவடிக்கைகளைத் திணிக்க, பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட முறையீடே, அரசின் முழு பலத்தைப் பிரயோகிக்க அவர் தயாராக உள்ளார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. |
|
|