தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை SEP to stand in Sri Lankan general election இலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகின்றது
By the Socialist Equality Party Use this version to print| Send feedback இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஆகஸ்ட் 17 இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், 22 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது. தலைநகர் கொழும்பு, வடக்கில் யாழ்ப்பாணம், மத்திய தேயிலைத் தோட்டப் பகுதியான நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அதன் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும், சர்வதேசிய சோசலிச வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்யும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே ஆகும். நாம், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) மற்றும் எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) அத்துடன் அவர்களின் அனைத்து பல்வேறு பிரிவுகளுக்கும் மற்றும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் போலி இடதுகளுக்கும் எதிராக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு தலைமை கொடுக்க தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டப் போராடுகின்றோம். பூகோள-அரசியல் பகைமைகளுக்கும் உலக போர் உந்துதலுக்கும் எரியூட்டுகின்ற, அதே போல் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இரக்கமற்ற மூர்க்கமான தாக்குதலுக்கு வழியமைத்துள்ள, பூகோள முதலாளித்துவத்தின் துரிதமாக ஆழமடைந்துவரும் நெருக்கடிக்கு மத்தியிலேயே இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது. பொருளாதார நெருக்கடியின் ஆழம் கிரேக்கத்தில் மிகவும் தெளிவாக அம்பலத்துக்கு வந்துள்ளது. அங்கு ஐரோப்பிய மற்றும் சர்வதேச நிதிமூலதனத்தின் அமைப்புகள், எப்போதும் ஆழமடைந்து வரும் சிக்கன கோரிக்கைகள் மீதான எந்தவொரு எதிர்ப்பையும் தாம் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என தெளிவுபடுத்தியுள்ளன. சிரிசா அரசாங்கத்தின் காட்டிக்கொடுப்பு, ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் அரை-காலனித்துவ நாடாக கிரேக்கத்தை மாற்றிக்கொண்டிருக்கின்றது. இது தொழிலாள வர்க்கத்துக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்துவதாகும். பூகோள வீழ்ச்சியில் இருந்து விலகி இருப்பதற்கு மாறாக, இலங்கை இந்த சர்வதேச நிகழ்வுப்போக்கின் செறிவுமிக்க வெளிப்பாடாக இருக்கின்றது. கிரேக்கத்தில் போலவே, சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையிலும் அரசாங்க செலவுகளில் வெட்டுக்களையும் பரந்த சந்தைச்-சார்பு திட்டங்களையும் கோருகின்றது. இது மேலும் வறுமையையும் சமூக அவலத்தையுமே உருவாக்கும். யூ.என்.பீ. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டணிகளும் இந்த சிக்கன இலக்குகளுக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளன. மேலும், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்த உந்துதல் உக்கிரமடைவதனாது மிகப் பிரமாண்டமான ஆபத்துக்களை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முன் கொண்டுவரவுள்ளது. அமெரிக்காவும் அதன் பங்காளிகளும், ரஷ்ய எல்லைகள் முழுவதும் மற்றும் சீனாவுக்கு எதிராக ஆசியா முழுவதும் மேற்கொள்ளும் இராணுவக் கட்டியெழுப்பல்கள், ஒரு வெடிகலனை உருவாக்கி வருகின்றன. இங்கு ஒரு சிறு சம்பவம் அல்லது தவறான கணிப்பு கூட வேகமாக அணு ஆயுத சக்திகளுக்கு இடையேயான ஒரு மோதலாக பற்றிக்கொள்ள முடியும். இலங்கையில் சோ.ச.க.யின் தேர்தல் பிரச்சாரமானது போருக்கு செல்வதை தடுப்பதற்கான ஒரே வழியாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர்-எதிர்ப்பு இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பாகம் ஆகும். சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் சூழ்ச்சி மற்றும் ஆத்திரமூட்டல்கள், ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் அரசியல் பதட்டங்களை உக்கிரமாக்கியுள்ளன. இலங்கையில், அமெரிக்காவானது இந்திய உதவியுடன், சீனாவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வளர்த்துக் கொண்ட மஹிந்த இராஜபக்ஷவை அகற்றி, மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பதற்கு ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலை சுரண்டிக்கொண்டது. இந்த ஆட்சி மாற்ற நடவடிக்கையானது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் யூ.என்.பீ. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உதவியுடன் திட்டமிடப்பட்டதுடன், வாஷிங்டன் பழிதீர்க்கும் ஆபத்து வளர்ந்து வருவதையிட்டு கவலையடைந்த ஆளும் தட்டின் பிரிவுகள் இதை ஆதரித்தன. சிறிசேன, விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்ததுடன் வெளியுறவு கொள்கையை வாஷிங்டனுக்கும் பிராந்தியத்தில் அதன் நட்பு நாடுகளுக்கும் பின்னால் திருப்புவதற்கு நடவடிக்கை எடுத்தார். கடந்த ஆறு மாதங்களில், கொழும்பில் அரசியல் நெருக்கடி ஆழமடைந்தது மட்டுமே நடந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சில சலுகைகளை கொடுத்து பொதுத் தேர்தலில் விரைவான வெற்றியை பெறுவதை நோக்கிய சிறிசேனவினதும் அவரது சக சதிகாரர்களதும் 100 நாட்கள் சுழல்காற்று திட்டமானது, மோசடமைந்து வரும் உலகப் பொருளாதார வீழ்ச்சியாலும் மற்றும் அரசாங்கச் செலவுகளை பிரமாண்டமாக வெட்டிக் குறைக்காவிட்டால் புதிய கடன்களை கொடுக்க சர்வதேச நாணய நிதியம் மறுத்தமையாலும் துரிதமாக கவிழ்ந்து போனது. தேர்தல் வாக்குறுதிகள் மீறப்பட்டமை உழைக்கும் மக்கள் மத்தியில் பரந்த அதிருப்திக்கு எரியூட்டின. அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட சம்பள அதிகரிப்பு, மற்றும் சிறிய நலன்புரி நடவடிக்கைகளும் வாழ்க்கைத் தரத்தின் ஆழமான சரிவுக்கு ஈடாகவில்லை. தனியார் துறை தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கு ஆதரவளிக்க அரசாங்கம் மறுத்தமை, பத்தாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை சம்பள உயர்வு கோரி மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுக்கத் தூண்டியுள்ளது. நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.), ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற அனைத்து போலி-இடது அமைப்புக்களும் ஏதாவதொரு வழியில் ராஜபக்ஷவின் "சர்வாதிகாரத்திற்கு" எதிரான ஒரு ஜனநாயக "மாற்று” என சிறிசேனவின் தேர்வுக்கு ஆதரவளித்தன. அரசாங்கம், சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தை நிலை நிறுத்தியதோடு மாணவர் ஆர்ப்பாட்டங்கள் மீது பாய்வதற்கு போலீசைப் பயன்படுத்தியதுடன் அந்த ஜனநாயக முகமூடி விரைவாக கழன்று விழுந்தது. மிக சமீபத்தில், சிறிசேன தணிக்கை செய்தல் மற்றும் பத்திரிகையாளர்களைத் தண்டிக்கும் அதிகாரங்களை கொண்ட கொடூரமான பத்திரிகை சபையை புதுப்பித்தார். பொலிஸ் ம்ற்றும் தொழிற்சங்கங்களுடன் கூட்டாகச் செயற்படும் கிளனியூஜி தேயிலைத் தோட்ட நிர்வாகம், உற்பத்திச் சுமையை கூட்டுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்த ஏழு தொழிலாளர்களை பழிவாங்குவதற்கும் அரசாங்கம் மௌனமாக ஆதரவளித்தது. யூ.என்.பீ. தலைமையிலான அரசாங்கம் சம்பந்தமாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பு, ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான தனது தாக்குதல்களால் வெறுக்கப்பட்ட இராஜபக்ஷ, மீண்டும் அரசியலுக்கு வர முயற்சிப்பதற்கு ஊக்குவித்துள்ளது. சீன முதலீடுகளைத் "தடுத்தமைக்காக" சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவை வெளிப்படையாக விமர்சிக்கும் அவர், தமது பொருளாதார இன்னல்களை தீர்ப்பதற்கான வழிமுறையாக சீனாவை நோக்கும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளை பிரதிநிதித்துவம் செய்கின்றார். மிகவும் கடும்போக்கான பதங்களில் இராஜபக்ஷ தமிழர்-விரோத பேரினவாதத்தை கிளறிவிடுவதோடு பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு “எதிரான போரில் வென்ற தாய்நாட்டின் சுதந்திரத்தை” கீழறுப்பதாக அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறார். ஸ்ரீ.ல.சு.க.யின் பிரதமர் வேட்பாளராக வருவதற்கான இராஜபக்ஷவின் பிரச்சாரம், கட்சியை பகுதி பகுதியாக கிழிப்பதற்கு அச்சுறுத்துகிறது. ஜனவரியில் இராஜபக்ஷவுக்கு எதிராக நின்று, யூ.என்.பி. உடன் சேர்ந்து கொண்டாலும் கூட, சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாகவும் ஸ்ரீ.ல.சு.க.யின் தலைவராக உத்தியோகபூர்வமாகவும் அதில் இருக்கின்றார். அரசாங்கத்தின் செல்வாக்கு குன்றி வருகின்ற நிலையில், இராஜபக்ஷ ஆதிக்கத்தைப் பெற்று, ஸ்ரீ.ல.சு.க. வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற சிறிசேனவை நெருக்கக் கூடியவராக இருந்தார். இராஜபக்ஷவின் வேட்பாளர் நிலையை எதேச்சதிகாரமாக அகற்றுவதற்கு தனது ஸ்ரீ.ல.சு.க. தலைவர் பதவியை பயன்படுத்துமாறு விக்கிரமசிங்கவும் குமாரதுங்கவும் சிறிசேனவுடன் கலந்துரையாடினர். இந்த "ஜனநாயகவாதிகளுக்குப்" பின்னால், அமெரிக்கா சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது. அது இராஜபக்ஷ மீண்டும் வருவதைத் தடுக்காமல் நிற்கப் போவதில்லை. வாஷிங்டனுக்கு வாக்குறுதியளிப்பதற்கு சமமான ஒன்றைச் செய்த சிறிசேன, ஜனவரி 8 நடந்த "அமைதிப் புரட்சி" மாற்றப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என அண்மையில் அறிவித்தார். போர், சிக்கன நடவடிக்கை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்துவரும் தாக்குதல்களைத் தவிர வேறு எதையும் கொண்டு வராத, அரசியல் ஸ்தாபனத்தின் இரண்டு பிரிவுகளிடம் இருந்தும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முழுமையாக அரசியல் ரீதியில் பிரிய வேண்டும் என சோ.ச.க. மற்றும் அதன் வேட்பாளர்கள் ஆகஸ்ட் 17 தேர்தலில் பிரச்சாரம் செய்வர். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கும் சோசலிச கொள்கைகளுக்குமான போராட்டத்தில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளைத் தட்டி எழுப்ப தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரண்டால் மட்டுமே அது தனது நலன்களை காக்க முடியும். ஆளும் வர்க்கத்தின் ஏதாவதொரு பகுதியுடன் தொழிலாளர் வர்க்கத்தைக் கட்டிப்போட முற்படும் அனைத்து கட்சிகளையும் குழுக்களையும் நிராகரிப்பது அவசியம். ஜனவரியில் நடந்த தேர்தல்களில், போலி இடது அமைப்புக்களான நவசமசமாஜ கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிச கட்சியும், சமூக நீதி மற்றும் ஜனநாயகத்துக்கான இயக்கம் மற்றும் பிரஜைகள் சக்தி போன்ற பல்வேறு தாராளவாத குழுக்களும், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் குடும்ப செல்வாக்கை நீக்குதல் என்ற பெயரில் இராஜபக்ஷவுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு இயக்கத்தை ஆதரித்தன. இப்பொழுது இதே அமைப்புக்கள், இராஜபக்ஷ மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் நிற்பதை தடுக்க ஜனநாயக விரோத முறையில் ஸ்ரீ.ல.சு.க. தலைவரின் அதிகாரங்களை பயன்படுத்த தவறியதற்காக சிறிசேனவின் "பெரும் காட்டிக்கொடுப்பு" பற்றி புலம்புகின்றன. ஸ்ரீ.ல.சு.க மற்றும் யூ.என்.பீ. மீதான பரந்த வெகுஜன அதிருப்தியின் மத்தியில், இந்த குழுக்கள் "இராஜபக்ஷ சர்வாதிகாரத்தை நிறுத்துதல்" என்ற பெயரில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு புதிய பொறியை தயார் செய்கின்றன. அதேபோல், 2009ல் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த, கடந்த ஆறு மாதங்களாக யூ.என்.பீ. தலைமையிலான அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து அதற்கு ஜனநாயக வண்ணங்கள் பூசிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), இப்போது இரண்டுக்கும் ஒரு மாற்றாக தன்னைக் காட்டிக்கொள்கின்றது. "தூய்மையான ஆட்சிக்கான" அதன் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், சிக்கன திட்டங்களை அமுல்படுத்துவதில் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முதலாளித்துவத்துக்கு புரிய வைப்பதே ஆகும். கிரேக்கத்தில் நடக்கும் சம்பவங்களில் இருந்து, இலங்கை உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கம் மிகக் கூர்மையான அரசியல் படிப்பினைகளைப் பெற வேண்டும். சிரிசா அரசின் நடவடிக்கைகள், போலி இடது அமைப்புக்கள் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யும் என்பதை காட்டுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி பெற்ற இயக்கத்தை எதிர்கொண்ட சிரிசா, தனது சிக்கன எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டதோடு நிதி மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு முழுமையாக சரணடைந்துவிட்டது. அதன் காட்டிக்கொடுப்பானது முதலாளித்துவ அமைப்பு முறையை ஒழிப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சோ.ச.க. வரவிருக்கும் போராட்டங்களுக்கு தேவையான புரட்சிகர தலைமையை கட்டியெழுப்ப தேர்தலில் போட்டியிடுகின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவு என்ற வகையில், சோசலிச சர்வதேசியத்திற்காக போராடுவதில் அது ஒரு நீண்ட, இடையறாத பதிவைக் கொண்டுள்ளது. நாட்டின் நீண்டகால உள்நாட்டு மோதல்களின் போதும், சோ.ச.க. கொழும்பு ஆட்சியின் போரை எதிர்த்ததோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என்று கோரிய அதேவேளை, புலிகளின் தமிழ் பிரிவினைவாதத்தின் பிற்போக்கு பண்பையும் அம்பலப்படுத்தியது. சோ.ச.க. மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்களும், உலகம் பூராவும் தெற்காசியாவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற கோரிக்கையை சூழ சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றன. எங்கள் சோசலிச கொள்கைகள், சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, வெகுஜனங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதன் பேரில், பொருளாதாரத்தை மேலே இருந்து கீழ் மறு ஒழுங்கு செய்வதை நோக்கமாகக் கொண்டவை. இது வங்கிகள், நிதி நிறுவனங்கள், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவது மற்றும் வெளிநாட்டுக் கடன்களை தள்ளுபடி செய்வதுடன் தொடங்க வேண்டும். சோ.ச.க. அதன் வேலைத் திட்டத்தை இன்னும் விரிவாக விவரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும். நாங்கள், எமது முன்நோக்குடன் உடன்பாடு கொண்ட தொழிலாளர்களையும் இளைஞர்களையும், எங்கள் பிரச்சாரத்தில் பங்கேற்குமாறும் எமது பொதுக் கூட்டங்களுக்கு வருகை தருமாறும், எமது 500,000 ரூபா தேர்தல் நிதிக்கு ஆகக் கூடிய நிதி உதவி செய்யுமாறும் அழைப்பு விடுக்கின்றோம். எமது வேலைத் திட்டத்தை வாசித்து சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்புவதற்கு அதில் இணைந்துகொள்ளுங்கள். |
|
|