தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Socialist Equality Party fields 43 candidates in Sri Lankan general elections சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை பொதுத் தேர்தலில் 43 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது
By our correspondent Use this version to print| Send feedback இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), ஆகஸ்ட் 17 பொதுத் தேர்தலில் நுவரெலியா, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 43 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதாக திங்களன்று அறிவித்தது. இலங்கை தேர்தல் முறையின் படி, ஒரு வேட்பாளர் ஒரு மாவட்டத்தில் மட்டுமே போட்டியிட முடியும். 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 196 ஆசனங்களுக்கு 60க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 100 க்கும் அதிகமான சுயேட்சைக் குழுக்களின் 6.151 பேர் போட்டியிடுகிறார்கள். மீதமுள்ள 29 ஆசனங்களும், ஒவ்வொரு கட்சியும் தேசிய ரீதியில் வென்ற வாக்குகளின் எண்ணிக்கைகளில் இருந்து விகிதாசார அடிப்படையில் நிரப்பப்படும். சோ.ச.க.யின் தேர்தல் பிரச்சாரமானது, ஏகாதிபத்திய யுத்த அச்சுறுத்தலுக்கும் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தையும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்ட சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது. சோசலிச சர்வதேசியவாதத்துக்கான போராட்டத்தில் நீண்டகால நிலைச்சான்றை கொண்டுள்ள கட்சி உறுப்பினர்கள் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு தலைமை வகிக்கின்றனர். சோ.ச.க. வேட்பாளர் பட்டியலில் பெருந்தோட்ட மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள், மாணவர்கள், தொழில் வல்லுனர்கள், குடும்பப் பெண்கள், மீனவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களும் அடங்குவர். கொழும்பு மாவட்டமானது 5.6 மில்லியன் மக்களைக் கொண்ட தலைநகர் கொழும்பை உள்ளடக்கிய இலங்கையின் மிகப்பெரிய பிரதேசமாகும். இந்த மாவட்டத்தில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுமாக கலந்து வாழ்வதோடு 1.6 மில்லியன் பேர் வாக்காளர்களாக பதிவாகியுள்ளனர். கொழும்பு இலங்கையின் நிதி மையமாகும். நாட்டின் முக்கிய துறைமுகத்தைக் கொண்டுள்ள கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் தொழிலாள வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதியினர் வாழ்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் முன்னாள் அரசாங்கம் கொழும்பை ஆசியாவின் “வணிக மற்றும் சுற்றுலா மையமாக” மாற்றுவதாகக் கூறி ஒரு திட்டத்தை ஆரம்பித்தது. இந்த திட்டத்தின் கீழ் உயர்ந்த வணிக கட்டிடங்கள், ஆடம்பர ஹோட்டல்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஓய்வு பூங்காக்களையும் கட்டுவதற்கு வழி செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான ஏழை குடும்பங்கள் கொடூரமாக வெளியேற்றப்பட்டன. இந்த அப்புறப்படுத்தல்களுக்கு எதிராக கொழும்பில் வறியவர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் மத்தியில் சோ.ச.க. முறையாக பிரச்சாரம் செய்தது. கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) கொழும்பில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களிலும் அதனை சுற்றி உள்ள பல்கலைக்கழகங்களிலும் தொடர்ச்சியாக அரசியல் பிரச்சாரங்களை நடத்தின.
சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ், 67, கொழும்பு தலைமை வேட்பாளராவார். தனது 21 வது வயதில் 1969 ல் சோ.ச.க.யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் (பு.க.க.) இணைந்து கொண்ட அவர், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர தலைமைத்துவத்தை கட்டியெழுப்பும் போராட்டத்திற்கு தனது முழு இளமைக் காலத்தையும் அர்ப்பணித்துக் கொண்டவராவார். பீரிஸ் உலக சோசலிச வலைத் தளத்தின் கொழும்பு ஆசிரியர் குழுவின் உறுப்பினராவார். அவர் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அரசாங்கத்தின் தாக்குதல்கள் பற்றியும் ஏனைய சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொடர்ந்து எழுதுகிறார். அவர் கொழும்பில் குடிசைகளை அகற்றுவதற்கு எதிரான கட்சியின் பிரச்சாரத்துக்கும் சோ.ச.க./பு.க.க. மேற்கொண்ட பல தொழிலாளர் விசாரணைகளுக்கும் தலைமை வகித்தார். இதில், வெலிவேரிய நீர் மாசுபடுதல் பற்றிய சமீபத்திய சுயாதீன தொழிலாளர் விசாரணையும் அடங்கும். முந்தைய இராஜபக்ஷ அரசாங்கம், வெலிவேரியவில் உள்ளூர் நீர் விநியோகத்தை தொழில்துறை மாசுபடுத்தியதற்கு எதிரான மக்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு இராணுவத்தை அணிதிரட்டியது. இராணுவத் தாக்குதலில் இரு மாணவர்களும் ஒரு இளம் தொழிலாளியும் கொல்லப்பட்டதுடன் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். நுவரெலியா, மத்திய மலையகத்தில் பிரதான பெருந்தோட்ட மாவட்டமாகும், இங்கு தமிழ் பேசும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்த மாவட்டத்தில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் உட்பட அரை மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்களர்கள் உள்ளனர். தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் தொழிலாள வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினராவர். தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து தோட்ட கம்பனிகளும் அரசாங்கமும் அவர்களது வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடர்ந்தும் தாக்குதல் தொடுத்துவருகின்றன. தோட்டத் தொழிலாளர்கள் தற்போது 1000 ரூபாய் ($US7.50) அன்றாட ஊதிய அதிகரிப்பு கோரி ஒரு "மெதுவாக பணிசெய்யும்" பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க இடைவிடாது கொள்கை ரீதியாக போராடுவதில் சாதனை செய்துள்ள சோ.ச.க./பு.க.க., தற்போது மஸ்கெலியாவில் கிளனியூஜி தோட்டத்தில் டீசைட் பிரிவில் பழிவாங்கப்பட்ட ஏழு தொழிலாளர்கள் பாதுகாக்க பிரச்சாரம் செய்து வருகின்றது. தினசரி தேயிலை கொழுந்து பறிக்கும் இலக்கை அதிகரித்ததற்கு எதிராக பெப்பிரவரியில் நடந்த வேலைநிறுத்தத்தில் முன்னணியில் நின்றதற்காக இந்த தொழிலாளர்கள் நிர்வாகத்தினால் வேட்டையாடப்பட்டுள்ளனர். கிளனியூஜி தோட்ட நிர்வாகத்துடன் வெளிப்படையாக ஒத்துழைத்து வருகின்ற தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் குண்டர் நடவடிக்கைகளுக்கும் மத்தியில சோ.ச.க. முன்னெடுக்கும் பிரச்சாரத்திற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கனிசமனாளவு ஆதரவை கிடைத்து வருகிறது.
சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம்.தேவராஜா, 62, நுவரெலியாவில் தலைமை வேட்பாளராவார். அவர் 1976ல் 23 வயதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் சேர்ந்தார், மற்றும் 1984ல் கட்சியின் முழுநேர ஊழியராக சேர உள்ளூர் அரசாங்க தொழில்நுட்ப அலுவலர் பதவியில் இருந்து விலகினார். தேவராஜா, வட இலங்கையிலும் பெருந்தோட்டங்களிலும் தமிழ் பேசும் தொழிலாளர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பு.க.க./சோ.ச.க.யின் போராட்டத்திற்கு ஒரு கருவியாக விளங்கினார். அவர், ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களால் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நீண்டகால இனவாத யுத்தத்துக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு சோ.ச.க. ஒழுங்கு செய்த பல சர்வதேச நிகழ்வுகளில் உரையும் ஆற்றினார். வட மாகாணத்தில் பிரதான மாவட்டமான யாழ்ப்பாணம், இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. மாவட்டத்தில் அரை மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் பேசுபவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் மூன்று தசாப்தகால யுத்தத்தினால் இடம்பெய்ர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
வட இலங்கையில் உலக சோசலிச வலைத் தளத்தின் வழக்கமான நிருபரும் ஒரு முன்னணி சோ.ச.க. உறுப்பினருமான பரமு திருஞானசம்பந்தர், 45, யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு தலைமை வகிக்கின்றார். அவர் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இரத்தக்களரி யுத்தத்தின் உச்சத்தில், தனது 22 வயதில், 1992ல் கட்சியில் சேர்ந்தார். சம்பந்தர் கொழும்பின் தமிழர்-விரோத போர் மற்றும் புலிகளின் பிரிவினைவாத கொள்கைகளுக்கும் எதிராக ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிங்களம் மற்றும் தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கான சோ.ச.க.யின் போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரது கொள்கை ரீதியான போராட்டத்தினால் புலிகளால் குறிவைக்கப்பட்ட அவர், 1998ல் கைது செய்யப்பட்டு பிரிவினைவாதிகளால் மேலும் மூன்று சோ.ச.க. உறுப்பினர்களுடன் சேர்த்து, 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்கள் மட்டுமே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் உலக சோசலிச வலைத் தளத்தின் மூலம் முன்னெடுத்த பரந்த சர்வதேச பிரச்சாரத்தின் பின்னரே விடுதலை செய்யப்பட்டனர். |
|
|