தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Amid US talks with Iran, France debates rapprochement with Syria’s Assad ஈரானுடனான அமெரிக்க பேச்சுவார்த்தைகளுக்கு இடையே, பிரான்ஸ் சிரியாவின் அசாத்துடன் சமரசம் பேசுகிறது
By Antoine Lerougetel Use this version to print| Send feedback ஜெனிவாவில் அமெரிக்க தலைமையிலான பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனுக்கும் மற்றும் சிரியாவின் பிரதான பிராந்திய கூட்டாளியான ஈரானுக்கும் இடையிலான உறவுகளை சாத்தியமான அளவிற்கு இயல்பாக்குவதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், பிரான்ஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓர் உத்தியோகபூர்வமற்ற பிரதிநிதிகள் குழு கடந்த மாதம் டமாஸ்கஸிற்கு பயணித்தது. சோசலிஸ்ட் கட்சி பிரதிநிதி ஜெரார்ட் பாப்ட் மற்றும் பழமைவாத கட்சியை சேர்ந்த பியர் வியல், பிரான்சுவா சோக்கெட்டோ மற்றும் ஜாக் மியாட் ஆகியோர் அந்த பிரதிநிதிகள் குழுவில் இருந்தனர்—இவர்கள் அனைவருமே பாப்ட் தலைமை வகிக்கும் நாடாளுமன்ற பிரான்ஸ்-சிரியா நட்புறவு குழுவின் உறுப்பினர்கள் ஆவர். இந்த பயணம் பிரெஞ்சு ஆளும் மேற்தட்டில் சற்றே குழப்பத்தை உண்டாக்கியது. பாரீஸ், 2012இல் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ஆட்சியுடனான இராஜாங்க உறவுகளை உடைத்துக் கொண்டதுடன், அதற்கு பின்னர் பொறிந்து போயுள்ள சிரிய தேசிய கூட்டணியையே (SNC) சிரிய அரசாங்கமாக அங்கீகரித்தது. சிரியாவுடன் 2013இல் போருக்கு ஆக்ரோஷமாக அழுத்தம் அளித்த அது, ஒபாமா நிர்வாகம் போருக்கு செல்வதில்லை என்று முடிவெடுத்தபோதுதான் பின்வாங்கியது. இருந்த போதினும், ஈரானுடன் அமெரிக்க உறவுகள் மாறி வருவதற்கு இடையே, மற்றும் இஸ்லாமிக் அரசு (IS) போராளிகள் குழுக்களுக்கு எதிராக பினாமிகளின் ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சிக்கப்பட்டு வருவதற்கு இடையே, பாரீஸ் அசாத் உடனாட பூசலை முடித்துக் கொள்ளலாமா என்பதைப் பரிசீலித்து வருகிறது. இதுவரையில் மேலோங்கி உள்ள பிரச்சார போக்கிற்கு இணங்க, அவரது சொந்த மக்களுக்கு எதிரான அந்த "சர்வாதிகாரியை" மற்றும் "படுகொலையாளரை" அந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்திப்பதன் மீது ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டும் பிரதம மந்திரி மானுவெல் வால்ஸூம் எரிச்சலுடன் கண்டனங்களை வெளியிட்டனர். நிச்சயமாக, அதுபோன்ற போலித்தனமான மனிதாபிமான தோரணை, வீதிகளிலேயே பாரியளவில் எகிப்தியர்களைப் படுகொலை செய்துள்ள எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பதாஹ் அல்-சிசிக்கு, கடந்த மாதம் டஜன் கணக்கான ரஃபால் போர் விமானங்களை விற்பதிலிருந்து பாரீஸைத் தடுத்துவிடவில்லை. பாப்ட்டின் எல்லை மீறிய சிரியாவிற்கான இராஜாங்க நடவடிக்கைக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சோசலிஸ்ட் கட்சி முதல் செயலாளர் ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ் பெப்ரவரி 26 இல் அறிவித்தார். ஆனால் அதுபோன்ற விமர்சனங்கள் "மிதமிஞ்சியவை" என்றும், “நியாயமற்றவை" என்றும் அறிவித்து, PS ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் (1981-1995) கீழ் இருந்த ஒரு பாதுகாப்பு மந்திரி போல் கிலே, அந்த பிரதிநிதிகள் குழுவை Le Figaro இல் ஆதரித்தார். பழமைவாத மக்கள் இயக்கத்திற்கான யூனியனின் (UMP) நிர்வாகிகளும் அவர்களது முனைவை ஆதரித்தனர். அசாத்துடன் வேலை செய்வதற்கு செவிக்கு புலனாகாமல் முன்னர் செயல்பட்டு வந்த கன்னை, இப்போது பகிரங்கமாக வெளியே வந்துள்ளது. ரஷ்யாவை ஆதரிக்கும் சட்டமன்ற குழு, சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் பிரதம மந்திரி மிஷேல் ரோக்கா ஈரானை-ஆதரிக்கும் ஆதரவாளர்கள், கத்தோலிக்க மரபினர், பிரான்ஸின் எண்ணெய் மற்றும் பாதுகாப்பு பெருநிறுவனங்கள் உட்பட "தீவிர வலதிலிருந்து (தேசிய முன்னணி) தீவிர இடது வரையில் நீண்டதொரு பன்முக கூட்டணியை", ஒரு கொள்கை மாற்றத்தை ஆதரிக்கும் சக்திகளாக Le Monde பெப்ரவரி 27 இல் விவரித்தது. எவ்வாறு முன்னெடுப்பதென்று ஏகாதிபத்திய வட்டாரங்களில் நிலவும் விவாதமானது, இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் சண்டையிடப்பட்ட மற்றும் பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி போன்ற போலி-இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்ட, லிபியா மற்றும் சிரியாவிற்கு எதிரான நேட்டோ பினாமி போர்களால் மத்திய கிழக்கில் கட்டவிழ்த்துவிடப்பட்ட பேரழிவுக்கு சான்று பகிர்கிறது. அசாத் ஆட்சியைக் கொடூரமானதாக சித்தரிப்பதன் மூலமாக நியாயப்படுத்தப்படும் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு படுபயங்கர ஏகாதிபத்திய பினாமி போரால், சிரிய சமூகம் சீரழிக்கப்பட்டுள்ளது. ஐநா புள்ளிவிபரங்களின்படி, சுமார் 200,000 சிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; குறைந்தபட்சம் 3.3 மில்லியன் சிரிய அகதிகள் வெளிநாடுகளுக்கும் மற்றும் 7.2 மில்லியன் சிரியாவிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளதோடு சேர்ந்து, 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அப்பிராந்தியத்தில் தூண்டிவிடப்பட்ட அவர்களது போர் குழப்பங்களிலிருந்து மேலெழுந்த ISஐ முகங்கொடுத்திருக்கும் நிலையில், எண்ணெய் வளம்மிக்க அப்பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்துவதற்காக, ஏகாதிபத்திய சக்திகளின் போர்களானது, பொய்கள் மற்றும் பசாங்குத்தனத்தின் அடித்தளத்தில் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை அசாத்தை நோக்கிய அவற்றின் நகர்வுகள் தெளிவுபடுத்துகின்றன. பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை மந்திரிகள், முறையே லோரன்ட் ஃபாபியுஸ் மற்றும் பிலிப் ஹாம்மாண்ட், பெப்ரவரி 27 இல் Le Monde இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் அதே பழைய வரிகளைப் பேண முயன்றனர். "IS ஆல் தூண்டிவிடப்பட்ட பீதியை ஆதாயமாக்க" முயல்வதன் மூலம், அசாத் "தனக்குத்தானே மறுவாழ்வளிக்க நகர்கிறார்" என்பதை அவர்கள் நிராகரித்தனர். இருப்பினும், அசாத் ஆட்சியின் உட்கூறுகள் சிரியாவில் தொடர்ந்து ஒரு பாத்திரம் வகிப்பதாக ஃபாபுயுஸ் மற்றும் ஹாம்மாண்ட் முன்மொழிந்தனர். “அந்த ஆட்சியின் தற்போதைய கட்டமைப்பில் சிலவற்றையும், சிரியாவிற்கான ஒரு மிதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும் தேசிய கூட்டணி மற்றும் ஏனைய உட்கூறுகளில் சிலவற்றையும் உள்ளடக்கிய" “ஓர் ஐக்கிய அரசாங்கத்திற்கு இட்டுச் செல்லும் வெவ்வேறு சிரிய கட்சிகளின்" ஒரு கூட்டணியை அவர்கள் முன்கணித்தனர். கீலே, அசாத் ஆட்சிக்கு தொடர்ந்து கொண்டிருக்கும் பலத்தை Le Figaro இல் சுட்டிக் காட்டினார். அது "சிறுபான்மையினரிடையே, குறிப்பாக அலாவைட்டினரிடம் இருந்து மட்டுமல்ல, மாறாக பெரும்பான்மை சுன்னி மக்களிடமிருந்தும், கணிசமான அளவிற்கு இன்னமும் ஆதரவை அனுபவித்துக் கொண்டிருக்கிறது,” என்றார். சிரியாவில் நேட்டோ பினாமி போரின் விளைவைக் குறித்து கீலே, ஒரு பேரழிவுகரமான சித்திரத்தை வரைந்து காட்டினார்: “மேற்கத்திய ஆதரவிலான சிரிய தேசிய கூட்டணி முஸ்லீம் சகோதரர்களின் செல்வாக்கின் கீழ் இருப்பதாக தெரிகிறது. சுதந்திர சிரிய இராணுவம்... தேசிய கூட்டணி உடன் கருத்து வேறுபாடு கொண்டு பிளவுபட்டுள்ளதுடன், இராணுவரீதியில் மிகவும் பலவீனமடைந்துள்ளது.” என்றார். அவர், “அல் நுஸ்ரா முன்னணியை நோக்கிய மற்றும் இஸ்லாமிக் அரசை நோக்கிய பொறுத்துப்போகும் மனோபாவத்திற்காக" சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் துருக்கி போன்ற பெயரளவிற்கான கூட்டாளிகளை அவர் தாக்கினார். “... இன்று, ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட பதவிமாற்றம் இல்லாமல் அசாத்தை வீழ்த்துவது என்பது லிபியா மாதிரியான ஒரு நிலைமைக்கு இட்டுச் செல்லும், அரசின் பொறிவு, குழப்பம், பின்னர் லெபனானின் நிலைகுலைவைப் போல, அத்துடன் சந்தேகத்திற்கிடமின்றி ஜோர்டானைப் போலவும் தான்,” என்றார். சிரியா மற்றும் ஈரானுடன் நல்லுறவுகளுக்கும், ஜெனிவாவில் மேற்கொண்டு பேசுவதற்கும் அழைப்புவிடுத்து கீலே, அமெரிக்க கொள்கை மாற்றத்திற்கு உதவ பிரான்ஸ் தரப்பிலிருந்து ஒரு முனைவை வலியுறுத்தினார்: “ஈரான் கொள்கைகளுடன் தொடர்புபட்ட அவர்களின் தேவைகள் இருப்பதால், சிரிய ஆட்சியை நோக்கி அடியெடுத்து வைக்க அவர்களின் சொந்த கொள்கையை அமெரிக்கா முடிவெடுக்கும் வரையில், காத்திருக்க வேண்டியதில்லை,” என்றார். அதற்கு பதிலாக ISக்கு எதிராக உடனடியாக ஒரு கூட்டு தாக்குதலை அவர் பரிந்துரைத்தார். வாஷிங்டன் மற்றும் பாரீஸ் ஏற்கனவே அசாத்துடன் ஒத்துழைத்து வருகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டுக் காட்டினார். “பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் அவசியமான உளவுத்தகவல்களைப் பெற" 2013இல் பிரெஞ்சு உளவுத்துறை சேவைகள் சிரியாவில் அவற்றின் சமதரப்பினரை சந்தித்தன, அத்துடன் அமெரிக்க விமானங்கள் "அசாத் படைகளுடன் வான்பிரதேசங்களைப் பகிர்ந்து கொண்டு" IS தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. “நம்மிடம் நிரந்தர கூட்டணிகள் கிடையாது, நிரந்தர நலன்கள் மட்டுமே உண்டு,” என்ற ஏகாதிபத்திய பழமொழியின் சாரத்தில், சிரியாவில் அசாத்திற்கு எதிராக மற்றும் அதைக் கடந்தும், ஆட்சி மாற்றத்திற்கான நீண்ட கால நோக்கத்தைப் பிரான்ஸ் கைவிட்டுவிடவில்லை என்பதை மித்திரோனின் பழைய போர் மந்திரி தெளிவுபடுத்தினார். “அசாத்தைப் பதவியில் வைத்து கொண்டே, அதுவும் மேலதிகமாக அவரது குற்றங்களோடு சேர்ந்து, அவருடன் வரையறைகளுக்கு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால் அபாயகரமாக உள்ள நிலைமையின் எதார்த்தம் மற்றும் அவசரத்திற்கு விடையிறுக்கக்கூடிய ஒரு கொள்கையை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார். |
|
|