தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை எச்.என்.டி.ஏ. மாணவர்களுக்கு எதிரான தாக்குதலின் அரசியல் படிப்பினைகள்By Kapila
Fernando Use this version to print| Send feedback அக்டோபர் 29 அன்று எச்.என்.டி.ஏ. மாணவர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன-பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட குருதி தோய்ந்த தாக்குதலானது மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் ஆழமான எச்சரிக்கையை விடுக்கின்றது. அதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின் அடிப்படையில் புதிய லிபரல்-வர்த்தக பொருளாதார கொள்கைகளை புதிய மட்டத்திற்கு உயர்தத் தயாராகும் அரசாங்கம் அதற்கு விரோதமாக வரும் எந்தவொரு எதிர்ப்பையும் கொடூரமான நசுக்கும் என்பதாகும். மாணவர்கள் தாக்கப்பட்டதில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என அந்த நடவடிக்கைக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் மூடி மறைத்தார். சம்பவத்தையிட்டு கவலை வெளியிட்ட பிரதமர், பொலிஸ் மா அதிபரிடம் இருந்து உடனடியாக அறிக்கை ஒன்றைப் பெற்று, விசாரணை நடத்துவதற்கு ஒரு கமிட்டியையும் அமைத்தார். மேலும் அத்தகைய கவலை மற்றும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் சம்பவங்கள் ஊடகங்கள் ஊடாக பரவின. இவை அனைத்தும் உண்மையை மூடி மறைக்கும் பொய்களும் நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கைகளும் ஆகும். மாணவர்களின் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க தலைமை வகித்த அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய (அ.ப.மா.ஒ.) தலைவர்கள் பொலிசாரின் தாக்குதலைக் கண்டனம் செய்து, அவற்றுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்தையும் ஏற்பாடு செய்த அதே சமயம், “சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தை விட வேறுபட்டதல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என வெளிப்படையான உண்மையை மீண்டும் மீண்டும் கூறித் திரிகின்றனர். எச்.என்.டி.ஏ. மாணவர்களின் டிப்ளோமா பாட நெறிக்கு பட்டதாரி அந்தஸ்த்து வழங்கும் தீர்மானம் ஒன்றை அமைச்சரவை எடுத்துள்ளது என்ற செய்தி வெளியான உடன், தமது போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது என அறிவித்த அ.ப.மா.ஒ. தலைவர்கள், “போராட்டங்களிலேயே” உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனக் கூறி, மாணவர்களின் கோரிக்கைகளுக்காக மேலும் மேலும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கோரிக்கைகளை வெல்வதற்கு தமது போராளிக்குணம் மிக்க அர்ப்பணிப்பை மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டங்களில் பங்குபற்றி வெளிப்படுத்தியுள்ளனர். ஆயினும், போராளிக்குணம் மாத்திரம் போதாது. அ.ப.மா.ஒ. தலைவர்கள் மாணவர்கள் முன்னிலையில் உள்ள ஆபத்துக்களை மூடி மறைத்து, தமது உரிமைகளை வெற்றிகொள்வதற்கு அவர்களுக்கு அவசியமான சோசலிச வேலைத் திட்டத்தை தடுப்பதற்கு செயற்படுவதாக சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பு சுட்டிக் காட்டுகின்றது. எச்.என்.டி.ஏ. மாணவர்களின் டிப்ளோமாவுக்கு பட்டதாரி அந்தஸ்த்தை பெற்றுக்கொடுப்பது அல்லது வேறு சலுகை கொடுப்பது போன்ற தற்காலிக தந்திரோபாயங்கள் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் அதே சமயம், தயார் செய்யப்பட்டுள்ள தாக்குதலில் எந்தவொரு மாற்றமும் கிடையாது. அரச கல்வியை வெட்டித்தள்ளும் கொள்கையை முன்னெடுத்த 1980களின் ஆரம்பத்தில் இருந்தே எல்லா அரசாங்கத்தின் கீழுமான அனுபவமும் இதுவே. வைத்தியசாலை போன்ற சேவை வெட்டுக்கள், நலன்புரி வேலைத்திட்டங்களை துடைத்துக் கட்டுவது, இலாப உழைப்பு கொள்ளையடிப்பு நிலைமைகளை ஏற்படுத்தல், தனியார்மயப்படுத்தலை நடைமுறைப்படுத்தல் மற்றும் சந்தைப் பொருளாதார கொள்கையை விரிவாக்குவதும் அதே விதத்தில் இடம்பெற்று வருகின்றது. 1977ல் மேற்கொள்ளப்பட்ட முதலாளித்துவ திறந்த சந்தை பொருளாதார கொள்கைகளின் “மூன்றாவது பரம்பரை மறுசீரமைப்பை” தமது அரசாங்கம் முன்னெடுப்பதாக நவம்பர் 4 அன்று முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை அறிக்கையில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அது முழு பொருளாதாரத்தையும் சர்வதேச மூலதனத்துக்காக திறந்து விடுதல் மற்றும் உழைப்புச் சுரண்டலை உக்கிரமாக்குவதுடன் பிணைந்துள்ளது. அரச கல்வி சம்பந்தமான இந்த கொள்கை, நச்சுத்தனமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்காக பாட விதானங்களை விலை கொடுத்து வாங்கக் கூடியவாறு வவுச்சர் முறைமைய அறிமுகப்படுத்தலும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகளுக்கு ஊழியர்களை வழங்கும் நிறுவனங்களாக மாற்றுவதும் இதில் உள்ள இரண்டு நடவடிக்கைகள் மட்டுமே. அமெரிக்காவில் தொடங்கி ஏனைய ஏகாதிபத்திய நாடுகள் ஊடக உலக முதலாளித்துவ முறைமையை பற்றிக்கொண்டுள்ள நிதிய வீழ்ச்சி மற்றும் பொருளாதார பின்னடைவை நோக்கி செல்லும் நிலைமைகளின் கீழ், ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் எந்தவொரு முதலாளித்துவ தட்டுக்கும் அல்லது அரசாங்கத்துக்கும் இந்த நெருக்கடியை தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள் மீது சுமத்துவதைத் தவிர வேறு மாற்றீடுகள் கிடையாது. சமூக எதிர்ப்புரட்சி வேலைத் திட்டத்தையே –அதாவது சமூக உரிமைகளை முழுமையாக துடைத்துக் கட்டும் வேலைத் திட்டத்தையே- நிதி மூலதனம் கோருகின்றது. இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கே பொலிஸ்-அரச வழிமுறைகள் கூர்மைபடுத்தப்படுகின்றன. அ.ப.மா.ஒன்றியமும் அதை கட்டுப்படுத்தும் முன்னிலை சோசலிசக் கட்சியும், கடந்த அரசாங்கத்தின் பின்னர் இப்போது சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து நிதி மூலதனத்தின் வேலைத் திட்டத்தை நிறுத்துவதற்கு முடியும் என மாணவர்களை வெறும் போராட்டங்களுக்குள் மூழ்கடிப்பது அரசியல் மோசடியாக இருப்பதற்கு காரணம் இதுவே ஆகும். மாணவர்கள் போராளிக்குணத்துடன் போராட்டங்களுக்கு வருவதும் அவர்கள் கொடூரமான பொலிஸ் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாவதையும் இந்த அரசியல் மூடிமறைப்பை மேலும் மேலும் உறுதிப்படுத்துவதற்கே அ.ப.மா.ஒ. மற்றும் மு.சோ.க.யும் பயன்படுத்திக்கொள்கின்றன. அ.ப.மா.ஒ. மற்றும் மு.சோ.க. அரசியலின் மிக அடிப்டையான குணாம்சம், சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் கல்வி உரிமையை பாதுகாக்கும் போராட்டமொன்றை தயார் செய்வதற்கான கடும் பகைமையாகும். பெரும் வர்த்தகங்கள், வங்கி உட்பட முதலாளித்துவ சொத்துக்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதும் வெளிநாட்டுக் கடன்களை இரத்துச் செய்வதும் சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் பொருளாதாரத்தை சீர்திருத்துவதன் மூலம் மட்டுமே கல்வி உரிமையை பாதுகாப்பதையும் அபிவிருத்தி செய்வதையும் மேற்கொள்ள முடியும். இந்த வேலைத் திட்டமானது அனைத்துலக சோசலிசத்துக்காக முன்னெடுக்கும் போராட்டத்தின் பாகமாகும். சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதில் தம்மை சிறைப்படுத்தும் அ.ப.மா.ஒ. மற்றும் மு.சோ.க. வேலைத்திட்டத்தை நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கதவுகளைத் திறந்துவிடுவதன் பக்கமே மாணவர்கள் திரும்ப வேண்டும். கடந்த எதிர்ப்பு நடவடிக்களிலும் அரசாங்கத்தினதும் பொலிசினதும் தாக்குதல்களினதும் படிப்பனைகளை மாணவர்கள் கிரகித்துக்கொள்ள வேண்டும் என சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பு கேட்டுக்கொள்கின்றது. ஐ.வை.எஸ்.எஸ்.இ. கிளைகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் கட்டியெழுப்பி இந்தப் போராட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது, இன்று மாணவர்கள் முன் உள்ள தீர்க்கமான பணியாகும். |
|
|