ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP public meeting in Jaffna: Imperialist war, Tamil nationalism and the fight for socialism

யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக் கூட்டம்: ஏகாதிபத்திய போரும் தமிழ் தேசியவாதமும் சோசலிசத்திற்கான போராட்டமும்

By the Socialist Equality Party (Sri Lanka)
2 November 2016

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் ஏகாதிபத்திய போர் உந்துதல், தமிழ் தேசியவாத கட்சிகளின் துரோக பாத்திரம் மற்றும் போர் அபாயத்தை எதிர்த்துப் போராட அவசியமான சோசலிச வேலைத் திட்டத்தை பற்றி கலந்துரையாட நவம்பர் 20 அன்று யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளன.

பிரதான ஏகாதிபத்திய சக்திகள் ஒவ்வொன்றும், குறிப்பாக அமெரிக்கா, 1930 பெருமந்த நிலைக்குப் பின்னரான மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு, தன்னுடைய சொந்த கொள்ளையடிப்பு மூலோபாய நலன்களை முன்னெடுத்தும், மற்றொரு பேரழிவு மிக்க உலக யுத்தத்தை நோக்கி மனித இனத்தை தள்ளிவிட்டும், உள்நாட்டில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக கடும் சிக்கன நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டும் பதிலிறுக்கின்றன.

தனது பூகோள மேலாதிக்கத்திற்காக தீவிரமாக முன்செல்லும் அமெரிக்கா, ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான போருக்குத் தயாராகி வருகிறது. சீனாவிற்கு எதிராக தெற்காசிய நாடுகளினை அரவணைத்துக்கொள்வதற்கான அதன் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவானது இலங்கையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தல் வழியாக ஒரு ஆட்சி மாற்றத்துக்கு அனுசரணையளித்தது. பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கிக் கொண்ட ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அமெரிக்க சார்பு மைத்திரிபால சிறிசேனவால் பதிலீடு செய்யப்பட்டார். அதிலிருந்து, கொழும்பு அரசாங்கம் அதிகளவில் அமெரிக்காவின் ஆசியாவிலான நகர்வுகளுக்கு ஒத்துழைத்து வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், வெளிப்படையாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு கொடுப்பதோடு மத்திய கிழக்கில் அதன் ஆக்கிரமிப்பு போர்களுக்கும் சீனா மற்றும் ரஷ்யா மீதான ஆத்திரமூட்டல்களுக்கும் மௌனமாக இருந்து ஆதரவு கொடுக்கின்றன. அவை இராஜபக்ஷ நீக்கப்படுவதை ஆதரித்ததோடு தற்போதைய அமெரிக்க-சார்பு அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆதரிக்கின்றன. இலங்கைக்கு வருகை தரும் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள், வாடிக்கையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை சந்திப்பதோடு, வாஷிங்டனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்து வருவதுடன், பிரதியுபகாரமாக தமிழ் ஆளும் தட்டுக்கு தனிச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள அமெரிக்காவின் ஆதரவுக்கு கெஞ்சுகின்றது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து, நாங்கள் ஆசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப போராடி வருகின்றோம். இந்த போராட்டத்தின் இன்றியமையாத பாகமாக, சோசலிச சமத்துவக் கட்சி, ஆசியாவில் அமெரிக்க போர் உந்துதலுடன் நாட்டை கட்டிப்போடும் கொழும்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடி வருகின்றது. பல்வேறு தமிழ் தேசிய அமைப்புக்கள் பற்றிய அரசியல் அம்பலப்படுத்தல் இந்தப் போராட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

யாழ்ப்பாணத்தில் எமது கூட்டத்திற்கு வருகை தந்து, இந்த முக்கியமான அரசியல் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

இடம்: உணவக மண்டபம், பொது நூலகம், யாழ்ப்பாணம்

திகதி:   ஞாயிறு, நவம்பர் 20

நேரம்: மாலை 3.30 மணி.