Print Version|Feedback
Governments and corporations escalate Internet censorship and attacks on free speech
அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் இணைய தணிக்கையைத் தீவிரப்படுத்தி, பேச்சு சுதந்திரத்தைத் தாக்குகின்றன
Andre Damon
6 January 2018
இணையத்தைத் தணிக்கை செய்வதற்கான ஒரு சர்வதேச பிரச்சாரத்துடன் 2018 ஆம் ஆண்டு தொடங்கி உள்ளது. உலகெங்கிலும், தொழில்நுட்ப பெருநிறுவனங்கள், அமெரிக்க உரிமைகள் சாசனத்திலும், ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான தீர்மானத்திலும் மற்றும் எண்ணற்ற சர்வதேச உடன்படிக்கைகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதன் மூலமாக அரசாங்கங்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு விடையிறுத்து வருகின்றன.
நிதிய செய்தி சேவை வழங்கும் ப்ளூம்பேர்க், “தணிக்கை செய்யப்பட்ட சமூக ஊடக ஆண்டாக, 2018 ஐ வரவேற்போம்,” என்று தலைப்பிட்ட வலைப்பதிவு ஒன்றை பிரசுரித்தது. “கற்பனைக்கு எட்டும் ஒவ்வொரு கண்ணோட்டத்திற்குமான தணிக்கை செய்யப்படாத தளமாக சமூக வலையமைப்புகள் இருக்கும் என்ற அவற்றின் முக்கிய சேவையை வழங்குமென இந்த ஆண்டை கருத வேண்டாம். தணிக்கை ஏற்கனவே தொடங்கிவிட்டது, இது இன்னும் பலமாக்கப்படும்.”
கடந்த வார அபிவிருத்திகளில் உள்ளடங்குபவை:
- ஜனவரி 1 அன்று, ஜேர்மன் அரசாங்கம் அதன் "வலையமைப்பு அமலாக்க சட்டத்தை" (Netzwerkdurchsetzungsgesetz - NetzDG) நடைமுறைப்படுத்த தொடங்கியது, இச்சட்டம் ஆட்சேபிக்க தக்க கருத்துக்களாக கருதப்படுவதை உடனடியாக நீக்கவில்லை என்றால், சமூக ஊடக நிறுவனங்களுக்கு 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படுமென அச்சுறுத்துகிறது. ஜேர்மன் வணிக குழுக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இரண்டுமே, இச்சட்டம் தொழில்நுட்ப நிறுவனங்களால் பாதுகாப்புக்கு உட்பட்ட பேச்சை தடுக்கவும் ஊக்கப்படுத்துமென எச்சரித்துள்ளன.
- ஜனவரி 3 அன்று, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தேர்தல் காலத்தில் அவர் எதை "போலி செய்திகள்" என்று குறிப்பிட்டாரோ அவற்றுக்கு தடை விதிக்க சூளுரைத்தார், இது அவசரகால நெருக்கடியின் நிலைமையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு மேலாக பேச்சு சுதந்திரத்தைக் கூடுதலாக ஒடுக்குவதாக இருக்கும். பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் நகர்வுகள் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பொருந்தும் ஒரு தணிக்கை சட்டம் கோரி புதிய புதிய அழைப்புகள் வர இட்டுச் சென்றுள்ளது.
- டிசம்பர் 28 அன்று, செச்சென் குடியரசு தலைவர் ரம்சான் கேடிரொவ் (Ramzan Kadyrov) அமெரிக்க தடையாணைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார் என்ற பெயரில் அவரின் பேஸ்புக் கணக்கை அழித்ததாக நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. அமெரிக்க குடியுரிமை சுதந்திர ஒன்றியம் சுட்டிக் காட்டியதைப் போல, இது ஒருவரை பொருளாதார தடையாணைகள் பட்டியலில் நிறுத்தி, உலகின் எவ்விடத்திலும் கருத்து சுதந்திரத்தை முடக்க இன்றியமையாத விதத்தில் அமெரிக்க அரசாங்கத்திற்கு சுதந்திரமான பிடியை வழங்குவதற்கு ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குகிறது.
- சமத்துவமின்மை மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்க பயன்படுத்தப்பட்டு வந்த இன்ஸ்டாகிராம் உட்பட சமூக ஊடக வலையமைப்புகளை இவ்வாரம் ஈரானிய அதிகாரிகள் முடக்கினர்.
- பாலஸ்தீனியர்களின் பேஸ்புக் பயனர் கணக்குகள் மீது அதன் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பேஸ்புக், இஸ்ரேலிய அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் 100 க்கும் அதிகமான கணக்குகளை நீக்கி உள்ளனர்.
இந்த நகர்வுகள் இணைய நடுநிலைமையைக் கைவிடுவதென ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த முடிவை அடுத்து வந்துள்ளது, இது வலைத் தளங்கள் மற்றும் சேவைகளை அணுகுவதைத் தணிக்கை செய்வதற்கும் முடக்குவதற்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சுதந்திரமான பிடியை வழங்குகிறது.
கூகுள், இடதுசாரி, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கான வலைத் தளங்களை தணித்து செய்து வருவதைக் குறித்து உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஆகஸ்டில் முதன்முதலில் செய்தி வெளியிட்டது. கூகுள் அதன் தேடல் அல்காரிதங்களில் மாற்றங்களை நடைமுறைப்படுத்திய போது, அவர்கள் அரசியல்ரீதியில் நடுநிலைமையோடு இருப்பதாகவும், “அப்பட்டமாக தவறாக வழிநடத்தும், தரங்குறைந்த, அத்துமீறிய அல்லது அடிமட்டத்திற்கு பொய் தகவல்களை" மட்டுமே பின்னுக்குத் தள்ளி, “மிகவும் அங்கீகரிக்கப்பட்ட தரவுகளை" முன்னுக்குக் கொண்டு வருவது மட்டுமே நோக்கம் என்றும் கூகுள் வாதிட்டது.
இப்போதோ, பிரதான தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் சக்தி வாய்ந்த அரசு மற்றும் உளவுத்துறை முகமைகளுடன் நெருக்கமாகவும் செயலூக்கத்துடனும் ஒருங்கிணைந்து, இணைய தணிக்கையின் ஒரு பரந்த மற்றும் திட்டமிட்ட நடவடிக்கையை நடத்தவில்லை என்று யாராலும் கூற முடியாது.
உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டு ஐந்து மாதங்களில், இடதுசாரி, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்கள் மீதான கூகுளின் தணிக்கை வெறுமனே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேரடி நுழைவுகள் மற்றும் பிற வலைத் தளங்களில் இருந்து உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றாலும், தனது தேடல் முடிவுகளில் இருந்து WSWS இன் கட்டுரைகளைத் திட்டமிட்டு நீக்குவதன் மூலம் அதை தனிமைப்படுத்துவது என்ற கூகுளின் முயற்சியானது, அதன் தேடல் பரிவர்த்தனைகளில் இருந்து வரும் பயனர்களைத் தொடர்ந்து குறைத்துள்ளது. கூகுள் மூலமாக வரும் WSWS இக்கான தேடல் எண்ணிக்கை, வேறெந்த இடதுசாரி தளத்தை விட அதிகமாக வீழ்ச்சி அடைந்த நிலையில், ஆகஸ்டில் ஏற்பட்ட 67 சதவீத வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் மொத்தம் 75 சதவீதத்துடன் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது.
கூகுள் தேடல் மூலமாக Alternet.org தளத்திற்கு வரும் பயனர் எண்ணிக்கை ஆகஸ்டில் 63 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இப்போது 71 சதவீதமாக குறைந்துள்ளது. Consortium News தளத்திற்கு வரும் பயனர் எண்ணிக்கை ஆகஸ்டின் 47 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 72 சதவீதமாக குறைந்துள்ளது. Global Research மற்றும் Truthdig உட்பட பிற தளங்களுக்கு வரும் பயனர் எண்ணிக்கையும் தொடர்ந்து கணிசமான அளவுக்குக் குறைந்துள்ளது.
இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் நினைவுகூரும் அதன் அறிக்கையில் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டது, “மார்க்ஸ் பிறந்த இருநூறாவது ஆண்டான இந்த 2018, அனைத்திற்கும் மேலாக, உலகெங்கிலும் வர்க்க போராட்டத்தின் … ஓர் ஆழ்ந்த தீவிரப்பாட்டால் குணாம்சப்பட்டிருக்கும்.” இந்த கணிப்பு ஈரானில் பெருந்திரளான மக்களின் ஆர்ப்பாட்டங்கள், ரோமானியாவில் வாகனத்துறை தொழிலாளர்களின் மறைமுக வேலைநிறுத்தம், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் அதிகரித்து வரும் தொழிலாளர் போர்குணம் ஆகியவற்றின் வடிவத்தில் உறுதிப்படுத்தப்படுகிறது.
உலகெங்கிலுமான ஆளும் உயரடுக்குகள் வர்க்கப் போராட்டத்தின் இந்த மீள்வரவை, “போலி செய்திகள்" மற்றும் "வெளிநாட்டு பிரச்சாரத்திற்கு" எதிராக போராடுகிறோம் என்ற பொய் பாசாங்குத்தனத்தின் கீழ், இணையம் மீது கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கும் நீக்குவதற்குமான ஒரு முயற்சியோடு எதிர்கொண்டு வருகின்றன.
தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பை மூச்சடைக்க வைக்கும் முயற்சி எதிர்க்கப்பட வேண்டும்.
ஜனவரி 16, 2018 இல், உலக சோசலிச வலைத் தளம், பத்திரிகையாளரும் Truthdig இல் பங்களிப்பு செய்பவருமான கிறிஸ் ஹெட்ஜ் மற்றும் WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த்தும் பங்கெடுக்கும், இணைய தணிக்கை மீதான ஒரு நேரடி காணொளி விவாதத்தை ஒளிபரப்பும்.
இந்த விவாதம் இணையத்தை தணிக்கை செய்வதற்கும் மற்றும் இணைய நடுநிலைமையை அழிப்பதற்குமான முயற்சிகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் சூழலை அம்பலப்படுத்தும் என்பதோடு, பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் பொய் காரணங்களை (அதாவது "போலி செய்திகள்") ஆய்வுக்கு உட்படுத்தும், மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசியல் மூலோபாயங்களை விவாதிக்கும். ஹெட்ஜ் மற்றும் நோர்த்தும் இணைய பார்வையாளர்களிடம் இருந்து வரும் கேள்விகளுக்கும் பதிலளிப்பர்.
இந்த அதிமுக்கிய விவாதத்தில் பங்கெடுக்க பதிவு செய்யுமாறும், இதை நண்பர்கள் மற்றும் சக-தொழிலாளர்கள் இடையே பரப்புவதற்கு உதவுமாறும் நமது வாசகர்கள் அனைவரையும் நாம் கேட்டு கொள்கிறோம்.
இந்த இணைய விவாதம் களம் ஜனவரி 16 செவ்வாயன்று, EST நேரப்படி மாலை 7.00 மணிக்கு யூடியூப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் WSWS ஆல் நேரடியாக ஒளிபரப்பப்படும். உங்கள் பகுதியின் நேரத்தைக் காண்பதற்கும் மற்றும் பதிவு செய்வதற்கும் இங்கே சொடுக்கவும்.