ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“The union is certainly not on our side”
Indian autoworker speaks about life in the “Detroit of South Asia”

“தொழிற்சங்கம் நிச்சயமாக எமது பக்கத்தில் இல்லை”

“தெற்காசிய டெட்ரோயிட்” நகரத்தில் தங்களது வாழ்க்கை நிலைமை பற்றி இந்திய வாகனத் தொழிலாளர் பேசுகிறார்

By Ram Ramiah and Parwini Zora 
17 February 2018

தென் இந்தியாவில், சென்னையின் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய வாகன விநியோக நிறுவனம் (நிறுவனம் மற்றும் தொழிற்சங்கத்தால் தண்டனையளிக்கும் சாத்தியம் இருப்பதால் பெயர் குறிப்பிடப்படவில்லை) ஒன்றில் பணிபுரியும் 32 வயது வாகனத் தொழிலாளரான செல்வம், சமீபத்தில் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசுகையில், உள்ளூர் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் தொழில்துறை மையமான மறைமலை நகரில் நிலவும் அவரது தினசரி வாழ்க்கை மற்றும் தொழில் நிலைமைகள் பற்றி தெரிவித்தார்.

கடந்த இரண்டு தசாப்தகால பொருளாதார கட்டுப்பாட்டின்மை காரணமாக, அதாவது, “முதலீட்டாளர் சார்பு” கொள்கையின் பேரில் உலகளவில் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் வாகன தயாரிப்பு ஆகிய துறைகளுக்கு முதலீட்டாளர்களையும், வேலை தேடுபவர்களையும் சென்னை நகரம் ஈர்ப்பதனால், தமிழ்நாடு மாநிலத் தலைநகரமான அந்நகரின் சுற்றுவட்டார பகுதிகள் முழுமையாக அதிகரித்தளவில் தொழிலாளர் செறிவுமிக்கதாக மாறியுள்ளது. அதனால் தான், 60 கிமீ தொலைவு வரை நகரை சுற்றிவளைத்திருக்கும் தொழில்துறை எல்லையை, இந்திய உயரடுக்கு அதன் வாகன பாதையாகவோ அல்லது டெட்ரோயிட் இன் மறுபதிப்பு போன்று அதன் செழுமைகாலத்திற்கு ஏற்ற ஸ்தலமாகவோ தேர்ந்தெடுத்துள்ளது.

நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சக (ministry of micro, small and medium enterprises – MSME) கூற்றின்படி, 2015-16 ஆம் ஆண்டுக்கான முன்கணிப்புகளின் அடிப்படையில், சென்னை நகரம் மட்டும் தனியாக வருடத்திற்கு 1,280,000 வாகனங்களையும், மற்றும் கிட்டத்தட்ட 350,000 வணிக வாகனங்களையும் தயாரிக்கும் திறனுடன் நாட்டின் வாகன உதிரி பாகங்கள் மற்றும் வாகனங்கள் தயாரிப்பில் 40 சதவிகிதத்திற்கும் அதிகளவை தயாரிக்கிறது.

உற்பத்தி நிலைகளிலும், நிறுவனங்களுக்கான இலாப வரம்புகளிலும் ஒரு ஸ்திரமான அதிகரிப்பு இருக்கின்ற போதிலும், சென்னையிலுள்ள தொழில்துறை தொழிலாளர்களோ அதிர்ச்சியூட்டும் வகையில் அடிமைத்தனமாக வேலை செய்து தான் தங்களது வாழ்க்கையை கழிக்கிறார்கள்.

இந்த நிலைமைகள் குறித்து வளர்ந்துவரும் எதிர்ப்பின் ஒரு பிரதிபலிப்பாகவே, மானேசரில் மாருதி சுசூகி வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையில் வெடித்த தொழிலாளர் போராட்டம் இருந்தது, அத்தொழிலாளர்கள் நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள தொழிற்சங்கத்திற்கு எதிராக ஒரு சுயாதீனமான தொழிற்சங்கத்தை ஸ்தாபிப்பதற்கு முயற்சித்தே போராடினர். அதற்கு பதிலடியாக ஜூலை 2012 இல் நிறுவனம் அரங்கேற்றிய ஆத்திரமூட்டல் நடவடிக்கை கொலைக் குற்றச்சாட்டின் பேரில் 148 தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கிற்கு இட்டுச்சென்றது. தொழிலாளர்கள் மீதான இந்த தாக்குதலில், மாநில மற்றும் நிறுவன உயர் மட்டத்தினரும், மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளும் ஈடுபட்டனர். இந்நிலையில், ஸ்ராலினிச ஆதிக்கத்திலான அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (All India Trade Union Congress-AITUC) உள்ளிட்ட உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் அவற்றின் பங்கிற்கு, மலிவுகூலி உழைப்பு நிலைமைகளை எதிர்க்கும் இந்திய தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கத்தை முன்கூட்டியே தடுப்பதற்காக மாருதி சுசூகி தொழிலாளர்களை தனிமைப்படுத்தவே முனைந்தனர்.

மாருதி சுசூகி தொழிலாளர்கள் சார்பிலான சாட்சியங்களை விசாரிப்பதற்கு நீதிபதி தடை விதித்து, நிறுவனத்தால் திரிக்கப்பட்ட சம்பவங்களின் பதிப்பை மட்டுமே அவர் நம்பினார் என்பது போன்ற நீதிமன்ற நடவடிக்கைகள் தனக்குத்தானே பரிகாசத்திற்கு உரியவையாக இருந்தன. அதன் விளைவாக, கடந்த ஆண்டு, மாருதி சுசூகி தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் உயர் அதிகாரிகள் உட்பட, 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த மிருகத்தனமான ஜோடிப்பு வழக்கிற்கு பதிலிறுக்கும் விதமாகவே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (International Committee of the Fourth International - ICFI), உலக சோசலிச வலைத் தளமும் (World Socialistic Web Site-WSWS) இணைந்து, அத்தொழிலாளர்களை விடுவிக்க ஒரு மனுவில் கையெழுத்திட கோருவது உட்பட, அந்த துணிச்சலான தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக ஒரு உலகளாவிய பிரச்சாரத்தையும் தொடங்கின.

WSWS: சென்னையில் எவ்வளவு காலமாக நீங்கள் வேலை பார்த்தும், வசித்தும் வருகிறீர்கள்?

செல்வம்: அடிப்படையில் நான் நாகப்பட்டினம் மாவட்ட கிராமப்புறத்தைச் சார்ந்தவன், மேலும் எனது குடும்பமும் எப்பொழுதும் விவசாய குடும்பமாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், எனது பெற்றோர் சென்னையில் புதிய நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதைக் கேள்விப்பட்டு, எனது சொந்த ஊரில் தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் (Industrial Training Institute - ITI) என்னை பயிற்சி பெறுமாறு ஆலோசனையளித்தனர். அதனால், 2008 இல் எனது ITI பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்ற பின்னர், நான் சென்னைக்கு வந்து வேலை தேட ஆரம்பித்தேன். அதே ஆண்டில், தொழிற்சாலை ஒன்றில் ஒரு தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளராக எனது வேலையை தொடங்கினேன், ஆனால் 2016 இல் தான் ஒரு நிரந்தர தொழிலாளியாக நான் மாறினேன்.

WSWS: தற்காலிக அல்லது சாதாரண வேலைகள் தான் ஒட்டுமொத்த இந்திய தொழிலாளர் சக்தியின் 40 சதவிகிதமாக இருந்ததுடன், அதுதான், 2012 க்கு முந்தைய நாட்களின் குறைந்த எண்ணிக்கையாகவும் இருந்தது. ஆனால் சில தனிப்பட்ட ஆய்வுகள், 70-90 சதவிகிதத்திற்கு இடைப்பட்ட ஒப்பந்த மற்றும் சாதாரண தொழிலாளர் பிரிவினரோ எழுத்துவழி ஒப்பந்தத்தையும் கொண்டிருக்கவில்லை எனக் கூறுகின்றன. உங்களுடைய நிறுவனங்களிலுள்ள இதுபோன்ற நிலைமைகள் பற்றி நீங்கள் விளக்க முடியுமா?

செல்வம்: தொழிற்சாலை அதன் தற்காலிக வேலைத்திட்டத்திற்கு 5 நிலைகளைக் கொண்டுள்ளது, 7வது ஆண்டில் நீங்கள் ஒரு நிரந்தர தொழிலாளியாக மாறுவதற்கு முன்பாக குறைந்தபட்சம் 6 வருடப் பயிற்சியை முடித்திருக்க வேண்டுமென அவர்கள் கருதுகிறார்கள். நீங்கள், முதலில் ஒரு தொழில்பயில்பவராக ஆரம்பித்து, ஆரம்பகட்ட, இடைநிலை மற்றும் சிறப்பு பயிற்சியாளராக பயிற்சிபெற்று, இறுதியில் ஒரு இயந்திர தொழிலாளியாக உருவாகும் வரை பல நிலைகளைக் கடக்க வேண்டும்.

WSWS: அரசாங்க புள்ளி விபரங்களின்படி, கிட்டத்தட்ட 70 சதவிகித தொழிலாளர் சக்தி சமூக பாதுகாப்பு நலன்களை பெறமுடிவதில்லை. வாகனத் தொழிற்சாலையில் ஒரு ஒப்பந்த தொழிலாளராக நீங்கள் பணியாற்றிய காலத்தைப் பற்றி உங்களால் விளக்கமுடியுமா?

இந்திய வாகனத் தொழிலாளி ஒருவரது வீட்டின் உள்பகுதி

செல்வம்: எனது முதல் இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 24,000 (US$274) ஐ மட்டுமே வருடாந்திர நிகர சம்பளமாக நான் பெற்றுவந்தேன், தொடர்ந்து, ஏழாவது வருடத்தில் தான் 66,000 (US$1,029) ரூபாயாக இது அதிகரித்தது. 2015 இல், ஒரு இயந்திர தொழிலாளியாகி, முதல் வருடத்தில் வருடாந்திர சம்பளமாக ரூபாய் 2.10 இலட்சம் (US$3,273) பெறக்கூடிய நிரந்தர தொழிலாளியாக நான் இருந்திருக்க வேண்டும். ஆனால், நிறுவனமோ ஆரம்பத்தில் எங்களுக்கு நிரந்தர நிலைகளை கொடுக்க மறுத்துவிட்டது, எனக்கு மட்டுமல்ல, அதே நேரத்தில் நிறுவனத்தில் சேர்ந்த என்னைப் போன்ற 40 ஏனைய தொழிலாளர்களுக்கும் சேர்த்துத்தான் மறுத்தது.

WSWS: மேலும், மலிவுகூலி உழைப்பு நிலைமைகள், குறைவூதியங்கள் மற்றும் பரந்தளவில் பயன்பாட்டில் இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஆகியவற்றை எதிர்த்து தொழிலாளர்கள் சவால் விடுக்க தொடங்கிய போது, ஹரியானா மாநிலத்தில் மானேசரில் ஆகஸ்ட் 2012 இல் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது நிர்வாகம் மற்றும் மாநில அரசால் ஜோடிப்பு வழக்கு தொடரப்பட்டு நடைபெற்றுவருவது, மேலும் அந்த சமயத்தில் செயல்படுத்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர் பணிநீக்கம் ஆகியவற்றின் பின்னணியாகவே இது இருந்தது.

செல்வம்: 2015 இல், தொழிற்சாலை நெறிமுறைகளின்படி, ஒரு நிரந்தர பணியிடத்தைப் பெற தகுதியுள்ளவனாக நான் மாறியிருந்தேன். ஆனால் நிறுவனமோ, முந்தைய நிதி ஆண்டுகளின் நிறுவன நஷ்டங்களை சுட்டிக்காட்டி, நிரந்தர அடிப்படையில் எங்களது வேலைகளை உறுதிசெய்ய மறுத்துவிட்டது. பின்னர், செப்டம்பர் 2016 இல் தொழிற்சங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தான் எங்களுக்கு நிரந்தர பணியிடங்களை உறுதிசெய்ய அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

WSWS: அந்த செயல்பாட்டில் தொழிற்சங்கத்தின் பங்கு என்னவாக இருந்தது?

செல்வம்: அந்த இரண்டு ஆண்டுகளும் மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும், கடினமானதாகவும் இருந்தன. நிறுவன தொழிலாளர் சக்தியின் பெரும்பான்மையை அமைக்கக்கூடியவர்களாக நாங்கள் இருந்தாலும், தற்காலிக தொழிலாளர்கள் என்பதால் தொழிற்சங்கத்தின் மூலமாக எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும் எங்களால் பெறமுடிவதில்லை. மொத்தத்தில் சுமார் 1,000 தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கின்றனர் என்றாலும், 200 பேர் மட்டுமே நிரந்தர தொழிலாளர்களாக உள்ளனர். 0 முதல் 7 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிறுவனத்தில் சேர்ந்த கிட்டத்தட்ட 500 தொழிலாளர்கள் இன்னும் தற்காலிக தொழிலாளர்களாகவே உள்ளனர் என்பதுடன், 300 க்கும் அதிகமாக சாதாரண தினசரி கூலி பெறும் தொழிலாளர்களும் இங்கு உள்ளனர். தொழிலாளர் பிரச்சினைகள் பொதுவாகவே நத்தை வேகத்தில் தான் கையாளப்படுகின்றன, மேலும் தொழிற்சாலை தொழிற்சங்கம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த இந்திய தேசிய வர்த்தக தொழிற்சங்க காங்கிரஸ் (Indian National Trade Union Congress - INTUC) உடன் இணைந்துள்ளது.

ஊதிய உயர்வு அல்லது நிரந்தர வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் போன்ற எந்தவொரு கோரிக்கையும் தொழிற்சங்கத்தின் மூலமாகத் தான் கையாளப்படுகின்றது என்பதுடன், அத்தொழிற்சங்கமும் நிச்சயமாக எங்கள் சார்பானதாக இல்லை என்ற நிலையில், அநேகமாக, நிர்வாகத்தின் மீதான கோபத்தை விட தொழிற்சங்கம் மற்றும் அதன் தலைவர்கள் மீதுதான் இங்கு பெரும் கோபம் நிலவுகிறது.

WSWS: பல ஆண்டுகளாக மிக அற்பமான ஊதியத்தைக் கொண்டும், வீட்டிற்கு திரும்புவதற்கு பெற்றோர்கள் ஒருவேளை உதவலாம் என்ற நிலையிலும், சென்னை போன்ற ஒரு விலைவாசியுயர்ந்த நகரத்தில் எப்படி வாழ்க்கையை சமாளிக்கிறீர்கள்?

செல்வம்: அது கஷ்டம் தான். உண்மையில், எனது பெற்றோர்கள் இதுவரையிலும் எனக்கு கணிசமாக பணம் கொடுத்து உதவுகிறார்கள், உதாரணமாக, எனது பகிரப்பட்ட தனியறையில் இருந்து வேலையிடத்திற்கு தினமும் நீண்டதூரம் நடந்து செல்வதை தவிர்ப்பதற்காக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கவேண்டுமென நான் விரும்பிய போது, அதை வாங்க உதவியது என்ற வகையில் அவர்கள் தான் இன்றுவரை என்னை ஆதரிக்கிறார்கள். எனக்கு நானே அதை சமாளிக்க முடியவில்லை. புறநகர் பகுதியில் அமைந்துள்ள சுமார் 1,000 சதுர அடி பரப்பளவே கொண்ட, தேவையான தளவாடச் சாமான் வசதி கூட இல்லாத தனியறை ஒன்றை தொழிற்சாலையில் பணிபுரியும் ஐந்து பிற தொழிலாளர்களுடன் நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். நாங்கள் எல்லோரும் சேர்ந்து ரூ. 5,000 (US$93) ஐ மாத வாடகையாக கொடுக்கிறோம். நாங்கள், 50,000 ரூபாயை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டியிருந்ததால், எங்களால் தளவாடச் சாமான்களை வாங்க முடியவில்லை. நாங்கள் எங்களது படுக்கை அறையின் அல்லது வசிக்கும் அறையின் ஒவ்வொரு மூலையிலுமாக ஒவ்வொருவரும் அவரவர் தூங்கும் விரிப்புக்களுடன் சேர்த்து உடமைகளையும் வைத்துக் கொள்கிறோம்.

WSWS: தங்குமிட வாடகை தவிர ஏனைய செலவினங்களை எப்படி சமாளிக்கிறீர்கள்? வேலையின்மையும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளதுடன், இந்தியாவில் நான்கு குடும்பங்களுக்கு மூன்று குடும்பகள் மட்டுமே ஒரு நிலையான ஊதிய வருவாயை கொண்டிருப்பதாக கூறப்படுகிறதே, இது பற்றி எதுவும் கூற முடியுமா?

செல்வம்: மின்சாரம், கைபேசி, பைக்கிற்கான பெட்ரோல், தண்ணீர் கேன், கேபிள் டிவி மற்றும் உணவு ஆகியவற்றிற்கான பில்களுடன் சேர்த்து வாடகையும் உட்பட வாழ்க்கைச் செலவினம் கிட்டத்தட்ட 3,000 ரூபாயை (US$45) எட்டிவிடுகிறது. எனது தற்காலிக பணிக்காலத்தின் போது, நான் பெற்ற சம்பளம் மாத இறுதி வரையிலான செலவுகளை சமாளிக்க போதுமானதாக இல்லை. மழைக் காலத்திற்காக ஏதேனும் கொஞ்சம் தொகையை சேமித்து வைக்க நான் முயற்சிக்கும் போதெல்லாம், அதை என் உடல்நலத்திற்காகவே செலவிட நேரிடும். நான் இரவு பணி முடித்து திரும்பிய நாட்களில், அன்றைய மதிய உணவுக்கான தொகையை சேமிப்பதற்காக அந்த நாள் முழுவதும் தூங்கிவிட வேண்டுமென முயற்சிப்பேன். அவ்வாறு செய்த நாட்களில், வேலை செய்யும் போது நான் சக்தியிழந்து இருப்பதோடு, எனது எடையும் குறைய ஆரம்பிக்கும், எனவே அவ்வாறு செய்வதை நிறுத்தினேன், ஏனென்றால் ஏதேனும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயமும் எனக்கு இருந்தது.

என்னுடன் அறையில் தங்கியிருக்கும் சக தொழிலாளர்களிடம் இருந்து கடன் பெற்றே என்னால் சமாளிக்க முடிந்தது. வீட்டிற்கு வெறும் 500 அல்லது 1,000 (US$7 to 15) ரூபாயாவது அனுப்பவேண்டுமென கஷ்டப்பட்டு உழைக்கும் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில், என் வாழ்க்கை சமாளிக்கக்கூடியது தான். நிறுவன ஒப்பந்தத்தின்படி, எங்களது தற்காலிக பணிக் காலத்தின் போது இரண்டாவதாக ஒரு வேலையை எடுத்துச் செய்ய எங்களுக்கு அனுமதி கிடையாது. சில தொழிலாளர்கள் இன்னும் கூட அப்படியொரு ஆபத்தை கையில் எடுத்து, மற்றொரு தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். அவர்கள் நாள் முழுவதுமாக இரவு பகல் பாராமல் வேலை செய்கிறார்கள், அதனால் தான் அவர்களால் தங்களது உடன்பிறந்த இளைய சகோதரர் அல்லது சகோதரியின் கல்விச் செலவினங்களுக்கு உதவுவது அல்லது வருமானமில்லாமல் தனித்திருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உதவுவது என பொறுப்பேற்க முடிகிறது.

WSWS: பல ஆண்டுகளாக, தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளைக் கூட அணுக முடியாத இதே நிலைமைகளின் கீழ் குறைவூதியங்களையே பெற்றுவரும் நிலையில், உங்களுடைய வேலை நாட்கள் எப்படி போகின்றன?

செல்வம்: நாங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாளொன்றுக்கு 8 மணி நேர வேலையுடன், வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்கிறோம். உற்பத்தி ஒதுக்கீடு அளவு அதிகமாக உள்ளபோது, அடிக்கடி நாங்கள் ஞாயிறன்று வேலை செய்யவும் கேட்கப்படுகிறோம். மற்றொரு வகையில், உற்பத்தி குறைவாக இருக்கும்போது, ஈடுசெய்யும் விடுப்பு எடுக்கும்படியும் நாங்கள் நிர்பந்திக்கப்படுகிறோம். சில நேரங்களில் இடைவெளிகளே இல்லாமல் தொடர்ந்து பல வாரங்கள் வேலை செய்யும் கட்டாயத்திற்கும் நாங்கள் உட்படுத்தப்படுகிறோம். இவற்றையெல்லாம் விட, ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே தாமதமாக பணிக்கு வர நாங்கள் அனுமதிக்கப்படுகிறோம். நான்காவது முறை தாமதமாக வருவது என்பது ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும், அரை நாள் சம்பள வெட்டை அது குறிக்கும், அல்லது கண்காணிப்பாளர் காலை 8 மணிக்கு வேலைக்கு வரும்வரை இரண்டு மணி நேரங்களானாலும் தொழிற்சாலையின் வாயிலில் நின்றுகொண்டே இருக்கவேண்டும்.

தொழிற்சாலைக்கு உள்ளே பாதுகாவலர்கள் தொடர்ந்து எங்களை கண்காணிப்பார்கள். கழிப்பறைக்கு செல்லும் போது கூட நாங்கள் கண்காணிக்கப்படுகிறோம். மதிய உணவிற்காக கை கழுவுவதற்கு சங்கு ஒலிப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு சற்று முன்பாக எவரேனும் இடத்தைவிட்டு நகர்ந்தால், அவர் பாதுகாவலரால் தடுத்து நிறுத்தப்படுவார் அல்லது எச்சரிக்கை கடிதம் ஒன்றை அவர் பெறுவார்.

எவரேனும் ஒருவர் கைபேசி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவருக்கு 500 முதல் 1,000 (US$ 7 – 15) ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும், எங்களைப் பொறுத்து அது கடுமையான அபராதம் ஆகும், அதாவது அத்தொகை எங்களது ஒரு நாள் ஊதியத்தை விட கூடுதலானது. தொழிற்சாலைக்குள் நாங்கள் கண்காணிக்கப்படுவதற்கு மேலாக, தொழிற்சாலையை விட்டு வெளியேறும்போது கூட நாங்கள் முழுமையாக  சோதனைசெய்யப்படுகிறோம். நாள் முழுவதுமான எங்களது உழைப்பை அர்த்தமற்றதாக்குவதாகவே அது உள்ளது. எங்களது சொந்த தொழிற்சாலைக்கு உள்ளேயே, அதிலும் அதே இடத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் வேலை செய்துவந்த பின்னரும் கூட, நாங்கள் அயோக்கியர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும் நடத்தப்படுகிறோம். ஆனால், நிர்வாகத்துடன் நாங்கள் சர்ச்சையில் ஈடுபடும் பட்சத்தில், தொழிற்சங்கத்திடமிருந்து எந்தவித ஆதரவையும் நாங்கள் பெறமுடியாது என்ற நிலையில், நாங்கள் அமைதியாகத் தான் இருக்கிறோம்.

WSWS: இந்தியாவிலும், சர்வதேச அளவிலும், தொழில்துறை மையங்கள் முழுவதுமாக பரவலாக நிலவுகின்ற, ஒரு மிருகத்தனமான வேலை ஆட்சிமுறையையும், மோசமானவேலை நிலைமைகளையும் எவ்வாறு விவரிக்கின்றீர்கள்?

செல்வம்: ஆமாம், அதனால் தான் இந்தியாவில் மாருதி சுசூகி நிறுவன நிகழ்வுகள் பாரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளதாக நான் கருதுகிறேன், மேலும், அதனால் தான், மானேசரிலுள்ள மாருதி சுசூகி தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கை அம்பலப்படுத்தவும், மற்றும் அவர்களை பாதுகாக்கவும் முனையும் ICFI இன் பிரச்சாரமும் மிக முக்கியமானதாக இருக்கவேண்டுமெனவும் நான் உணர்கிறேன்.