World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Permanent Revolution and the National Question Today

நிரந்தரப் புரட்சியும் இன்றைய தேசிய கேள்விகளும்

By David North

Use this version to print

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகத்தின் ஆரம்பம் தொடக்கம் அதன் பொதுச்செயலாளராக விளங்கிய தோழர். கீர்த்தி பாலசூரிய 1987 டிசம்பர் 18ம் திகதி காலமானார். அவரின் மறைவின் ஐந்தாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் முகமாக அனைத்துலகக் குழுவின் கிளைகள் உலகம் பூராவும் நடாத்திய கூட்டங்களின் ஒரு அம்சமாக கனடிய ட்ரொட்ஸ்கிச அனைத்துலகத் தொழிலாளர் கட்சி (IWP) 1993 பெப்ரவரி 6ம் திகதி மொன்றியலில் பொதுக்கூட்டமொன்றை நடாத்தியது. அக்கூட்டத்தில் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச கட்சியான வேர்க்கஸ் லீக்கின் தேசியச் செயலாளர் டேவிட்நோர்த் நிகழத்திய உரை இங்கு பிரசுரமாகின்றது.

கீர்த்தி பாலசூரிய நினைவுப் பேருரை

 

கீர்த்திபாலசூரிய

நிரந்தரப்புரட்சியும் சோசலிச அனைத்துலகவாதத்துக்கான போராட்டமும்

தோழர் கீர்த்தி பாலசூரிய மரணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதை நம்புவது கடினம். எல்லாவற்றுக்கும் மேலாக நாம் ஒரு தோழரின் வாழ்க்கையை நினைவு கூர்கின்றோம். அவர் இன்று உயிர் வாழ்ந்திருந்தால் அவரின் 44வது பிறந்தநாளின் பின்னர் ஒரு சிலமாதங்கள் கழிந்திருக்கும். அவர் மிகவும் இளவயதில் காலமானார். அவருக்கு அப்போதுதான் 39 வயது. அவரின் மரணம் முற்றிலும் எதிர்பாராதது. கீர்த்தி அவரின் வயதைக்காட்டிலும் இளமையாய் இருந்தார். அவரின் அளப்பரிய அறிவாற்றல், அரசியல் அனுபவத்திற்கிடையேயும் அவரின் ஆர்வமும், நகைச்சுவையும் ஒரு குழந்தைப் பண்பைக் கொண்டிருந்தது. இருப்பினும் முதிர்ச்சியின்மையையோ அல்லது கவலையீனத்தினையோ அவரிடம் கண்டதில்லை. அவர் ஒரு கூரிய புத்திஜீவி தீவிரம்கொண்ட மனிதனாக விளங்கினார். அவரின் அரசியல் முடிவுகள் பல்லாண்டுகால நெறிமுறையான ஆய்வுகள் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டு பலமூட்டப்பட்டவை.

நான் கீர்த்தியை முதலில் தொழிலாளர் புரட்சிக்கட்சியின் (W.R.P) முன்னோடியான சோசலிச லேபர்லீக்கினால் 1972 கோடைகாலத்தில் இங்கிலாந்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பாடசாலையில் சந்தித்தேன். அவர் நான்காம் அகிலத்தின் வரலாறுபற்றிய ஒரு விரிவுரைத் தொடரில் பங்குகொண்டிருந்தார். அவர் சிதைவுற்ற 1923 ஜேர்மன் புரட்சிமீது ஒரு நீண்ட பங்களிப்புச் செய்தது எனக்கு இன்னமும் ஞாபகம். கீர்த்தி இப்பாடசாலையில் சிங்களத்தில் உரை நிகழ்த்தினார். ஆனால் முழுச் சபையினரும் அவரின் உணர்ச்சிமிக்க பேச்சினால் வசீகரிக்கப்பட்டனர். வார்த்தைகள் அக்கினிக் குழம்பாக அவரிடமிருந்து வெளிப்பட்டன. அவரின் மொழிபெயர்ப்பாளர்- தோழர். விஜே டயஸ் என்று நினைக்கின்றேன்- பெரும் முயற்சிக்கு மத்தியிலும் தொடர முடியவில்லை. தமது மொழிபெயர்ப்பாளர் ஒன்றில் பல வசனங்களை விட்டுவிட்டார் அல்லது ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தினை உரிய நுட்பத்துடன் எடுத்துக்கூறத் தவறிவிட்டார் என இடைக்கிடையே கீர்த்தி உணர்ந்ததும், அவர் தனது கருத்தினை தம்மால் முடிந்தமட்டும் எடுத்துக்கூற திடீரென ஆங்கிலத்துக்குத் திரும்புவதுண்டு.

அச்சமயத்தில் கீர்த்தி ஒரு சில மாதங்களுக்கு முன்னர்தான் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் மீது (பின்னர் அது பங்களாதேஷ் ஆக இருந்தது) இடம்பெற்ற இந்திய ஆக்கிரமிப்பு தொடர்பாக சோசலிச லேபர்லீக் கடைப்பிடித்த அரசியல் நிலைப்பாட்டை உக்கிரமாக எதிர்த்திருந்தார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. இந்திய ஆக்கிரமிப்பினை சோசலிச லேபர்லீக் அங்கீகரித்ததை எதிர்த்து கீர்த்தி 1971 டிசம்பரிலும் 1972 ஜனவரியிலும் எழுதிய கடிதங்களை அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகள் இன்னுமோர் 14 ஆண்டுகளுக்கு- தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுவரை- கண்டதில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னரே நான் கீர்த்தியுடன் விரிவாகப் பேச வாய்ப்புக் கிடைத்தது. நாம் இருவரும் 1975 மே மாதத்தில் லண்டனில் நடைபெற்ற அனைத்துலகக் குழுவின் ஆறாவது காங்கிரசில் கலந்துகொண்டோம். அந்தக் காங்கிரஸ், ரிம் வூல்போர்த் வேர்க்கஸ் லீக்கில் இருந்து ஓட்டமெடுத்ததன் பின்னர் நடைபெற்றது. கீர்த்திக்கு வூல் போர்த்தை தெரிந்திருந்ததால் அவர் வேர்க்கஸ் லீக்கினுள் வெடித்த நெருக்கடியின் அடிப்படையாக விளங்கிய அரசியல் விவகாரங்களை அறிவதில் பெரிதும் அக்கறை காட்டினார். உண்மையில் கீர்த்தி ஓராண்டுக்கு முன்னர் நடைபெற்ற ஐந்தாவது காங்கிரசில் வூல்போர்த்தை இறுதியாகக் கண்டிருந்தார். அக்காங்கிரசில் வூல் போர்த்தின் அறிக்கை, பெருந்தொகையான முன்னணி உறுப்பினர்களின் இராஜினாமா உட்பட பெரும் இழப்புக்களுக்கு வேர்க்கஸ் லீக் உள்ளாகியுள்ளதை சுட்டிக்காட்டியது. இத் தகவல் கீர்த்தியை சங்கடத்துக்கு உள்ளாக்கியதோடு அவர் வேர்க்கஸ் லீக்கினுள் ஏற்பட்டுள்ள பாரதூரமான நெருக்கடிக்கான திட்டவட்டமான அரசியல் விளக்கத்தினை வூல் போர்த்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முயன்றார். எவ்வாறெனினும் வூல் போர்த்தை கேள்விக்குள்ளாக்கும் கீர்த்தியின் முயற்சிகள் ஹீலி, பண்டா குறுக்கீட்டால் தடுக்கப்பட்டது. அவர்கள் இளைஞர்களிடையே ''பேரளவு ஆட்திரட்டும்'' வூல் போர்த்தின் கணக்குவழக்குகள் பற்றி அக்கறை காட்டினரேயன்றி மதிப்பும், அனுபவமும் நிறைந்த அங்கத்தவர்கள் இழக்கப்பட்டதையிட்டு சிரத்தை காட்டவில்லை.

அடுத்த 10 ஆண்டு காலத்தில் நான் ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே கீர்த்தியைக் கண்டுள்ளதோடு பொதுவில் அந்நிலைமைகள் அரசியல் கருத்துக்களைத் திறந்த மனதுடன் பரிமாறிக்கொள்வதை முடியாமல் செய்தது. இறுதியில் 1985 அக்டோபருக்குப் பின்னரே நாம் நெருக்கமாகவும், ஒழுங்குமுறையாகவும் இணைந்து தொழிற்பட வாய்ப்புக் கிடைத்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் நெருக்கடி வெடித்தது; அக்டோபர் மூன்றாம் வாரத்தின் இறுதியில் கீர்த்தி லண்டன் வந்தடைந்தார். நான் தொ.பு.க நான்காம் அகிலத்தினுள்ளேயான நிலைமைகளை வேர்க்கஸ் லீக்குக்கு மீள அறிவிக்கும் பொருட்டு அமெரிக்கா திரும்பினேன். அக்டோபர் 20 காலை எல்லோரிடையேயும்- மைக் பண்டாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது எனக்கு நல்ல ஞாபகம். கீர்த்தி லண்டன் வந்துவிட்டதாக- உண்மையில் தொழிலாளர் புரட்சிக்கட்சியின் கட்டிடத்தில் அவர் என்னிடம் கூறினார். பண்டாவுடன் தொலைபேசி பேச்சு முடிந்த மறுகணமே நான் மற்றோர் தொடுவையில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமை காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு கீர்த்தியைப் பேசும்படி வேண்டினேன். அவரின் முதல் வார்த்தை; ''தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் போக்கு பற்றிய தங்களின் விமர்சனங்களை வாசித்தேன், நான் அவற்றோடு உடன்பாடு கொண்டுள்ளேன்''. இந்த அணுகுமுறை தோழர். கீர்த்தியின் தனிச்சிறப்பியல்பாக விளங்கியது. அவர் எப்போதுமே அரசியல் விவகாரங்களுடனேயே ஆரம்பிப்பார். அவர் லண்டனை வந்தடைந்த பின்னர் கடந்துபோன நாட்களில் பண்டா கீர்த்திக்கு ஹீலியின் 'பாலுறவு ஊழல்' பற்றிய காம உணர்வு விபரங்கள் மூலம் விருந்தளித்திருந்தார். பண்டா இறுதியில் நிறுத்திப் பெருமூச்சு விட்ட வேளையில் ''ஜெரி ஹீலியுடனான உங்களின் அரசியல் கருத்து வேறுபாடுகள் என்ன?'' என கீர்த்தி சாதாரண தொனியில் கேட்டார். இக் கேள்வி பண்டாவை அதிர்ச்சியடையச் செய்ததோடு அவர் கூறுவதற்கு எதுவும் இருக்கவில்லை. ஒரு கணிசமான அளவு அரசியல் தள்ளாட்டத்தின் பின்னர் இந்த தர்ம சங்கடமான நிலையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு மார்க்கமாகப் பண்டா நான் 1982க்கும் 1984க்கும் இடையே எழுதிய அரசியல் பத்திரத்தின் பிரதியைக் கீர்த்தியிடம் கையளித்தார்.
ஆனால் இப் பத்திரங்கள் பண்டாவுக்கு அவற்றின் உடனடியான பயன்பாட்டு, கோஷ்டி மதிப்பீட்டுக்கு அப்பால் எதுவித முக்கியத்துவமும் இல்லாதவை. கீர்த்திக்கோ சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகம் அனைத்துலகக் குழுவின் உள்ளே உண்மையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது SSL/ WRP யுள் அபிவிருத்தி கண்டுவரும் சந்தர்ப்பவாதம் பற்றிய அதன் 1972.ன் விமர்சனங்களை எவரும் அறிந்திருக்கவில்லை. அது ஹீலி, பண்டா, சுலோற்றரின் ஒரு தொகை விசுவாசமற்றதும், நாசகாரமானதுமான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்கு இலக்காகி வந்தது. அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகளின் கண்களில் அதன் தலைமையை அவமானம் செய்யும் நோக்கமாக தொழிலாளர் புரட்சிக்கட்சி புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகத்தின் பணிகளையிட்டு புனைந்த பொய் அறிக்கைகளை தயாரித்தது. இத்தாக்குதல்களின் நோக்கம் கீர்த்தியும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமையைச் சேர்ந்த அவரின் தோழர்களும் உணர்ச்சி பூர்வமான முறையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள நான்காம் அகிலத்தினால் வரலாற்று ரீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட கொள்கைகளுக்கும் வேலைத்திட்டங்களுக்குமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் போராட்டத்துக்குக் குழிபறிப்பதாக விளங்கியது. கீர்த்தி, நான்காம் அகிலத்தின் முழு வரலாற்றிலும் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு கட்சியின் தலைவராகவும் அதன் மாபெரும் பாரம்பரியங்களின் பெருமைமிக்க பிரதிநிதியாகவும் விளங்கினார்.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கும்- தனிப்பட்ட முறையில் கீர்த்திக்கும் தொழிலாளர் புரட்சிக்கட்சி உருவாக்கிய சகல பயங்கரமான சங்கடங்களுக்கு மத்தியிலும் 1985ல் வெடித்த அரசியல் நெருக்கடியில் கீர்த்தியின் பிரதிபலிப்புக்களில் அகநிலைவாதத்தினையோ அல்லது பகைமையுணர்வையோ காணமுடியவில்லை, மாறாக அவர் இந்த நெருக்கடியில் அனைத்துலகக் குழுவினை ஒரு ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தினால் மீளாயுதபாணியாக்கவும், பல வருடங்களாக நான்காம் அகிலத்தைப் பலவீனமடையச் செய்த சந்தர்ப்பவாதத்துக்கு எதிராக உலகளாவிய ரீதியில் ஒரு எதிர்த் தாக்குதலை நடாத்துவதற்கும் ஒரு வாய்ப்பினைக் கண்டார்.
கீர்த்தியின் வாழ்க்கையில் 1985 அக்டோபருக்கும் 1987 டிசம்பருக்கும் இடைப்பட்ட காலப்பகுதி, அரசியல் ரீதியில் மிகவும் பயன்மிக்கதும் மகிழ்ச்சிமிக்கதுமென நான் அஞ்சாமல் கூறுவேன். அவர் அனைத்துலகக் குழுவின் கோட்பாட்டு அரசியல் மறுமலர்ச்சியில் ஈடுசெய்ய முடியாததும் தீர்க்கமானதுமான பாத்திரத்தினை வகித்தார்.

1987 டிசம்பர் 23ல் நடைபெற்ற தோழர் கீர்த்தியின் மரணச்சடங்கில் நான் புரட்சிகரத் தொழிலாளரதும் இளைஞரதும் அடுத்த தலைமுறை தமது உத்வேகத்தினை மா ஓ சேதுங்கிடமிருந்தோ அல்லது ஹோசிங்கிடமிருந்தோ அல்லது பிடேல் காஸ்ட்ரோவிடமிருந்தோ அல்லது மார்க்சிஸ்டுக்களாக இருந்து வேஷம்போடும் முதலாளித்துவ தேசியவாதத்தினதும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்தினதும் எந்தவொரு பிரதிநிதியிடம் இருந்தோ பெறப்போவதில்லை எனக் கூறினேன். மாறாக எதிர்காலப் புரட்சிகரப் போராளிகள் கீர்த்தி பாலசூரியாவின் அரசியல் முன்மாதிரியில் இருந்தே கற்றுக்கொள்ளப் போகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளின் நிகழ்வுகளும் அரசியல் மோசடியையும், கோட்பாட்டுப் போலிகளையும் அடிப்படையாகக் கொண்ட ஸ்டாலினிச தேவதைகளின் மாபெரும் மனிதர்கள் எனப்பட்டவர்களின் புகழுக்கு ஈவிரக்கமற்ற அடி கொடுத்துள்ளது. ஆனால் இந்நிகழ்வுகள் மார்க்சிசத்தின் வரலாற்று முன்னோக்கினதும் அது அடிப்படையாகக் கொண்டுள்ள விஞ்ஞான விதிமுறையினதும் சக்தியை நிரூபிக்கின்றது.

கீர்த்தியின் அரசியல் வாழ்க்கை 20 வருடங்களுக்கும் மேலாகப் பரந்துபட்டிருந்தது. இந்த வருடங்கள் புரட்சிகர மார்க்சிசத்தின் நிச பாரம்பரியங்களைப் பேணுவதற்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. எவ்வாறெனினும் இந்த மார்க்சிசம் காக்கும் போராட்டத்தினை, அனைத்துலகத் தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் வாழ்க்கை அரசியல் சந்தர்ப்பவாதத்தின் மிகவும் கேவலமான வடிவங்களின் ஆளுமைக்குள்ளான நிலைமையில் நடாத்த வேண்டியது அவரது தலைவிதியாக இருந்தது. இச்சந்தர்ப்பவாதம் தன்வசம் பிரமாண்டமான சடவளங்களைக் கொண்டிருந்தது. ஆனால் இந்த வளங்களால் இதனைச் சர்வகாலமும் அதன் சொந்த அரசியல், தத்துவார்த்த, ஒழுக்கநெறி வங்குரோத்தினுள் இரக்கமற்ற பெறுபேறுகளில் இருந்து காக்க முடியாது போயிற்று. கடந்த காலத்தின் பாசாங்கு புனைகதைகள் எல்லாம் அம்பலமாக்கப்பட்டு வருகின்றன. மாவோக்கள், ஹொக்காஸ்கள், டிட்டோக்கள், காஸ்ட்ரோக்களும் மற்றும் இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னைய சகாப்தத்தின் புரட்சிகர புகழ் பூத்தவர்கள் சகலரும் அரசியல் போலி வேசக்காரர்களாகவும் கோட்பாட்டுப் போலிகளாகவும் நினைவு கூறப்படுவர். அவர்களின் சாதனைகள் எனக்கூறப்படுபவை அனைத்தும் நாற்றம்கண்ட அத்திவாரத்தின் மேல் நிறுவப்பட்டவை. அவர்களால் சிருஷ்டிக்கப்பட்ட அரசியல் கொலைக்களங்கள் ஒன்றில் சிதறுண்டு போய்விட்டன அல்லது அவமானம்மிக்க முறையில் சிதறிக்கொண்டுள்ளன.

அநேக விடயங்களில் மரணம் அவர்களின் காட்டிக்கொடுப்புக்களின் நாசகரமான விளைவுகளில் இருந்து தப்பக் கைகொடுத்துள்ளது. தொழிலாளி வர்க்கமே இதற்கான விலையைச் செலுத்தும் வண்ணம் தள்ளப்பட்டுள்ளது. ஸ்டாலினிசத்துடனான அவரது கேவலமான பேரம் பேசல்களின் பெறுபேறுகளைத் தரிசிக்க காஸ்ட்ரோ மட்டுமே நீண்டகாலம் ஜீவித்துள்ளதாகத் தெரிகிறது. அவர்களின் தனிப்பட்ட தலைவிதிகளுக்கிடையேயும் இச்சகல போலி மாவீரர்களும்- இதில் இன்னும் பலரைச் சேர்க்கலாம்- இதைப் பொதுவில் கொண்டுள்ளனர்; இவர்களில் ஒருவர் தன்னிலும் அனைத்துலகத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கு எந்தவொரு நிலையான அரசியல் பெறுமானத்தையும் பங்களிப்புச் செய்ததில்லை. மாறாக அவர்கள் அதனைச் சுரண்டினர்.; தவறாக வழிகாட்டினர்; காட்டிக்கொடுத்தனர்.

நிரந்தரப்புரட்சிக்கோட்பாட்டின் மூலம்

மறுபுறத்தில் கீர்த்தி, லெனின், ட்ரொட்ஸ்கி, லக்சம்பேர்க்கினால் போதிக்கப்பட்டபடி புரட்சிகர மார்க்சிசத்தின் மாபெரும் சிந்தனாபீடத்தின் தலைசிறந்த பிரதிநிதிகளில் ஒருவராக நினைவுகூரப்படுவார். அவர் தீர்வுகாணப் போரிட்ட பிரச்சினைகள் ஏகாதிபத்திய சகாப்தத்தில் புரட்சிகர மூலோபாயத்தின் மிகவும் அத்தியாவசியமான பிரச்சினைகளுடன் பிணைக்கப்பட்டவையாகும்.
கீர்த்தியின் வாழ்க்கையின் சிறப்பு முக்கியத்துவத்தையும் இன்றைய காலப்பகுதியில் அவர் போராடிய கொள்கைகளதும் முன்னோக்கினதும் முக்கியத்துவத்தையும் மதிப்பீடு செய்ய அவரின் சொந்த அரசியல் அபிவிருத்தி வேரூன்றியுள்ள இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அரசியல் போராட்டங்களை மீளாய்வு செய்தல் அவசியம் ஆதலால் நாம் கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று- ரூஷ்யன் மார்க்சிஸ்டுக்கள் தாம் தயாராகி வந்த புரட்சியின் பல்வேறு கருத்துப்பாடுகளையும் விவாதித்துக்கொண்ட இந்நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களுக்குச் செல்லவேண்டும்.

ரூஷ்யா இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் அன்றைய பெரும் முதலாளித்துவ வல்லரசுகளுள் மிகக்குறைந்த அபிவிருத்தியைக் கொண்டிருந்தது. ஒரு பிற்போக்கு பிரசித்தியற்ற மன்னரின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அதன் அரசியல் அமைப்பு ஒரு அரைநிலமானித்துவப் பண்பினைக் கொண்டிருந்தது. சனத்தொகையில் பெருப்பான்மையினர் விவசாயிகள். அவர்கள் ஆழ்ந்த வறுமையிலும், படிப்பறிவின்மையிலும் மூழ்கியிருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசித் தசாப்தத்திலேயே புதியதும் துரித கைத்தொழில் வளர்ச்சியின் அடிப்படையிலும் ஒரு கணிசமான அளவு தொழிலாளி வர்க்கம் அங்கு தோன்றியது. ஆனால் ரூஷ்ய சனத்தொகையுடன் ஒப்பிடுமிடத்து அதன் எண்ணிக்கை மிகவும் சிறியதாயும் ஒரு சில நகர மையங்களில் குவிந்தும் காணப்பட்டது.

இந்நூற்றாண்டின் திருப்பத்தில் எதிர்வரும் புரட்சியின் முக்கிய பணி, ஒரு ஜனநாயகப் பண்பைக் கொண்டிருக்கும் என்பதில் ரூஷ்ய மார்க்சிஸ்டுக்கள் உடன்பாடு கண்டனர்; அதாவது இது அரைநிலமானித்துவ அரச அமைப்பை அடித்துச் செல்வதோடு நாட்டுப்புறத்தில் நிலமானித்துவ உறவுகளின் சகல மிச்சசொச்சங்களையும் ஒழித்துவிடும். ரூஷ்ய பிரபுக்களின் பெரும் நிலவுடைமைச் சொத்துக்கள் உடைக்கப்பட்டு நிலம் விவசாயிகளிடையே பங்கிடப்படும்.
அதன் வரலாற்றுப் பணியின் நோக்கில் இருந்து ஆய்வு செய்யப்பட்டவிடத்து ரூஷ்ய மார்க்சிஸ்டுக்களால் எதிர்பார்க்கப்பட்ட புரட்சி, முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சியாக வரைவிலக்கணம் செய்யப்பட்டது. எவ்வாறெனினும் ஜனநாயகப்புரட்சியை அடைவதில் முதலாளி வர்க்கத்துக்கும், தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள அரசியல் உறவு எந்த அரசியல், அரச வடிவங்களூடாக ஜனநாயகப்புரட்சி அடையப்படும் என்பன மீது கருத்துவேறுபாடுகள் தலைதூக்கின.

ரூஷ்ய மார்க்சிசத்தின் தந்தையான ஜோர்ஜ் வீ.பிளாக்கானோவ், ரூஷ்யப்புரட்சி 18ம் 19ம் நூற்றாண்டுகளின் மாபெரும் ஜனநாயகப்புரட்சிகளின் அடிப்படையில் மேற்கு ஐரோப்பாவிலும், வட-அமெரிக்காவிலும் சிருஷ்டிக்கப்பட்ட பாணியில் ஒரு ஜனநாயகக் குடியரசினைச் சிருஷ்டிக்கத் தள்ளப்படும் என வாதிட்டார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் ரூஷ்யப்புரட்சி முக்கியமாக 1789-94ம் ஆண்டின் பிரான்சுப்புரட்சியை ஒத்த பெறுபேறுகளைச் சிருஷ்டிக்கும் என ஊகித்தார். சர்வாதிகாரத்தை தூக்கி வீசுவது அரசியல் அதிகாரத்தினை முதலாளி வர்க்கத்தின் கைகளில் வழங்கும். அங்கு ஏறக்குறைய முதலாளித்துவ ஆட்சியின் நீண்டதொரு காலப்பகுதி தோன்றும். அக்காலப்பகுதியினுள் ஒரு லிபரல் ஜனநாயகக் கட்டுமானத்தினுள் தொழிலாளி வர்க்கம் அரசியல் போராட்டத்தினுள் பயிற்சிபெற்று, சோசலிசத்தினை எதிர்காலத்தில் யதார்த்தமாக்கத் தயார் செய்யப்படும். அரசியல் மூலோபாயத்தின் பதங்களில் பார்க்குமிடத்து பிளாக்கானோவின் போக்கு எதிர்வரும் புரட்சியில் தொளிலாளி வர்க்கத்தின் கட்சி புரட்சியின் தலைமையை எதிர்பார்க்க முடியாது என்பதாய் விளங்கியது. மாறாக அது முன்னணிப் பாத்திரத்தினை முதலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சிகளிடம் கையளித்துவிட்டு, ஆட்சிக்கான அவர்களின் உரிமை பாராட்டலை ஒப்புக்கொள்ள வேண்டும். ரூஷ்ய சமூக ஜனநாயகம் முதலாளிவர்க்கக் கட்சிகளின் விசுவாசமான கூட்டாளியாகச் செயற்படவேண்டியிருந்தது.

ஒரு காலத்தில் பிளாக்கானோவின் விசுவாசமான மாணவனாக விளங்கிய லெனின் தமது குருவிடமிருந்து பிரிந்தது இங்குதான். லெனின், ரூஷ்யப்புரட்சி முதலாளித்துவப்புரட்சி என்ற வரைவிலக்கணத்தை அங்கீகரித்தார். ஆனால் அவர் அதன் வர்க்க சக்தியைப்பற்றி முற்றிலும் வேறுபட்ட ஒரு கருத்துப்பாட்டினை முன்வைத்தார். பிளாக்கானோவ் முதலாளி வர்க்கத்தின் அரசியல் மேலாதிக்கத்தினை அங்கீகரித்த அதேவேளையில் லெனின் இந்தவர்க்கம் பெரிதும் பழமை பேணும் தன்மை கொண்டதென்றும் சமரசத்துக்குச் சார்பானதென்றும் ரூஷ்யாவை நிலமானித்துவத்தின் சகல அரசியல், சமூக மிச்சசொச்சங்களில் இருந்து துடைத்துக்கட்ட அவசியப்படும் போராட்டத்தில் வெகுஜனங்கள் இறங்குவதையிட்டு அஞ்சுகின்றதெனவும் வாதிட்டார். பிளாக்கானோவினால் பிரேரிக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்துக்கும் தாராண்மை முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயான கூட்டுக்கு எதிரான லெனின் இவ்விரு வர்க்கங்களினதும் தலைமையிலான ஒரு 'ஜனநாயக சர்வாதிகாரத்தினை' அடைவதை இலக்காகக் கொண்ட தொழிலாளர் வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையேயான ஒரு கூட்டுக்குப் பரிந்து பேசினார்.

லெனினின் சூத்திரம் உண்மையில் பிளாக்கானோவினதைக் காட்டிலும் பெரிதும் தீவிரத் தன்மைகொண்டதாகவும் அதன் உபாயப்போக்கு முற்றிலும் வேறுபட்டதாயும் விளங்கியது. பிளாக்கானோவ் ஜனநாயகப்புரட்சியில் முதலாளிவர்க்கத்தின் அரசியல் தலைமையை வலியுறுத்தியும் தாராண்மை முதலாளிவர்க்கத்துடனான ஒரு அரசியல் கூட்டின் நலனின் பேரில் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தினை பிற்போக்கு முகாமினுள் தள்ளிவிடும் எந்தவொரு பெரிதும் தீவிரமான நடவடிக்கைகளையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் வந்த அதேவேளையில் லெனின், தொழிலாளிவர்க்கம் முதலாளி வர்க்க கட்சிகளினதும் அவற்றின் தவிர்க்கமுடியாத ஈடாட்டங்களில் இருந்தும் முற்றிலும் சுயாதீனமான முறையில் தனது போராட்டத்தினை நடாத்தவேண்டும் என வலியுறுத்தினார். விவசாய கவிழ்ப்பினை இறுதிவரை தள்ளியும் பழம் ஸார் இயந்திரத்துடனான கணக்குவழக்குகளை ஈவிரக்கமின்றி முடித்துக்கட்டியும் விவசாயிகளின் பெரிதும் தீவிரமான பகுதியினருடன் தொழிலாளர்வர்க்கம் கூட்டுக்குச் செல்வதன் மூலம் மட்டுமே ஜனநாயகப்புரட்சியின் வெற்றியை உத்தரவாதம் செய்யமுடியும்.

எவ்வாறெனினும் லெனினின் அரசியல் முன்னோக்கில் ஒரு பொருத்தமின்மை காணப்பட்டது. தொழிலாளி வர்க்கத்துக்கு எவ்விதமான சுயாதீன பாத்திரமும் வழங்குவதை மறுத்த பிளாக்கானோவின் சமரசப்போக்கில் இருந்து இது தெளிவாகப் பிளவுபட்டு நின்றபோதிலும் புரட்சி முதலாளித்துவச் சொத்தினுள் ஊடுருவுவதை லெனினின் முன்னோக்கு முன்னறிவிக்கவில்லை மேலும் இந்த இரண்டு வர்க்கங்களின் 'ஜனநாயக சர்வாதிகாரம்' என்ற கருத்துப்பாடு இயற்கையிலேயே தெளிவற்றதாய் விளங்கியது.

மிகவும் தீவிரமானதும் உள்ளார்ந்த ரீதியில் பெரிதும் உறுதியானதுமான மூன்றாவது கருத்துப்பாடு ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்டது. உலக வரலாற்றுக் கருத்துப்பாட்டின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கி ரூஷ்ய முதலாளி வர்க்கத்தின் நிலைப்பாடு (காலாவதியான முதலாளித்துவ அபிவிருத்தியைக் கொண்ட அனைத்து நாடுகளையும் போலவே) 1789ம் ஆண்டின் பிரான்சிய முதலாளி வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து அடிப்படையில் வேறுபட்டது என வாதிட்டார். இது இனியும் தனது சொந்த 'முதலாளித்துவ' புரட்சியைச் செய்யும் நிலையில் இருக்கவில்லை. 1848ன் நிகழ்வுகள், ஜனநாயகப்புரட்சியின் பணி தொடர்பான முதலாளிவர்க்கத்தின் மனோபாவம், எல்லாவற்றிற்கும் மேலாக அது வாழ்ந்த சமுதாயத்தின் வர்க்க சக்தியால் நிர்ணயம் செய்யப்பட்டது என்பதை எடுத்துக்காட்டின. தொழிலாளி வர்க்கத்தின் பெருக்கம் முதலாளி வர்க்கத்துக்கு ஸார் எதேச்சாதிகாரத்தினைக் காட்டிலும் பெரும் ஆபத்தை தோற்றுவித்தது. மேலும் விவசாயிகள் சுயாதீனமான அரசியல் பாத்திரத்தினை வகிக்க இலாயக்கற்றவர்களாக விளங்கினர். அதன் அரசியல் பாத்திரம் எவ்வளவுதான் செல்வாக்கு மிகுந்ததாக இருந்தபோதிலும் அதனால் இன்னொரு வர்க்கத்தின் முன்னோக்கின் மீது மட்டுமே செயல்பட முடியும். ஆதலால் ஜனநாயகப்புரட்சியில் தீர்க்கமான பாத்திரத்தினை தொழிலாளி வர்க்கமே வகிக்கவேண்டியதாக இருந்தது. அத்தோடு அதனைத் தொழிலாளிவர்க்க சர்வாதிகாரத்தின் வடிவில் மட்டுமே சாதிக்கவும் முடியும். மேலும் தொழிலாளி வர்க்கம் தன்னை வெறும் ஜனநாயகப் பணியுடன் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது போயிற்று. அது முதலாளித்துவச் சொத்தினுள் ஊடுருவ கட்டாயப்படுத்தப்படுமாதலால் ஜனநாயகப்புரட்சி மேலும் மேலும் அப்பட்டமான சோசலிசத் தன்மையைப் பெற்றுக்கொள்ளும்.

ரூஷ்யாவில் தொழிலாளிவர்க்கப்புரட்சி, உலகம் பூராவும் வெடிப்புமிகுந்த அதிர்வினை உருவாக்கும்; ரூஷ்யாவில் தொழிலாளி வர்க்க ஆட்சியின் உயிர் நீடிப்பும், ஒரு பின்தங்கிய சமுதாயத்தில் சோசலிச நிர்மாணத்தின் சாத்தியமும் புரட்சியை அதன் எல்லைகளுக்கு அப்பால் விஸ்தரிப்பதிலேயே தங்கியுள்ளதாக ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.

உலக சோசலிசப் புரட்சியுடனான ரூஷ்யப்புரட்சியின் உறவானது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப்புரட்சிக் கோட்பாட்டின் இன்றியமையாத அத்திவாரத்தினை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. அவரின் சமகாலத்தவர்கள் எவருக்கும்- லெனின் இதற்கு அப்பாற்பட்டவர் அல்ல- ஈடிணையற்ற விதத்தில் உறுதியோடும் தீர்க்க தரிசனத்தோடும் இறுதி ஆய்வுகளில் ரூஷ்யப்புரட்சியின் பண்பு தேசிய நிலைமைகளால் அன்றி அனைத்துலக நிலைமைகளால் நிர்ணயம் செய்யப்படும் என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். சோசலிசப் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் இறங்குவதற்கு ரூஷ்யா பொருளாதார ரீதியில் பெரிதும் பின்தங்கியது எனத் தொடர்ந்து வாதிட்ட மென்ஷிவிக் மேதாவிகளுக்குப் பதிலளித்த ட்ரொட்ஸ்கி, ரூஷ்ய பொருளாதார சக்தியை அதன் அபிவிருத்தியின் தேசிய மட்டத்தில் இருந்தும் அது கொண்டுள்ள தேசிய வளங்களில் இருந்து மட்டும் ஒழுங்குமுறையாக மதிப்பீடு செய்துவிட முடியாது என்றார். ரூஷ்ய அபிவிருத்தியின் நிஜ சக்தியை அது உண்மையில் நிலைகொண்டிருந்த உலகப் பொருளாதாரத்தினதும் அனைத்துலக அரசியல் உறவுகளினதும் அடிப்படையில் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது.

உலக நிலைமைகளால் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற அபிவிருத்தியடைந்த ஏகாதிபத்திய பொருளாதாரங்களின் மீது சார்ந்த ஒரு அரைக்காலனித்துவ நிலைமைக்குத் தள்ளப்பட்ட ரூஷ்ய முதலாளி வர்க்கம் கடந்த காலத்தில் ஜனநாயகப்புரட்சிகளுடன் தொடர்புபட்டிருந்த எந்தவொரு வரலாற்றுப்பணியினையும் தீர்த்துவைக்க இலாயக்கற்றது என்பதே ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடாக விளங்கியது.
ஜனநாயகப்புரட்சிக்கு தலைமை தாங்கவும், பூரணப்படுத்தவும் ரூஷ்ய முதலாளி வர்க்கத்தினால் முடியாது போனமை, ட்ரொட்ஸ்கி விளக்கியது போன்று ஒரு உலக வரலாற்றுத் தோற்றப்பாட்டின் வெளிப்பாடாகும். ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய அடிப்படையில் மனித இனத்தின் எந்தவொரு அடிப்படைப் பிரச்சினையையும் தீர்த்துவைக்க இயலாது போனமை, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உற்பத்திச் சக்திகளின் உலகளாவிய அபிவிருத்தியின் அடிப்படையில் தேசிய அரசுக்கே சாவுமணி அடித்தது. உலகப் பொருளாதார சக்திகள், முதலாளித்துவம் வேரூன்றியிருந்த தேசிய அரச அமைப்பின் அரசியல் கட்டுமானத்தையும் தாண்டி வளர்ச்சி கண்டன.

ஒரு பின்தங்கிய நாட்டின் தொழிலாளி வர்க்கத்துக்கு நிலமானித்துவத்தின் அதிகாரத்துவத்தினை துடைத்துக்கட்டும் அரசியல் போராட்டத்தின் தாக்கமானது இடைவிடாது ஆட்சியைக் கைப்பற்றுவதையும் தொழிலாளிவர்க்க சர்வாதிகாரத்தினையும் நோக்கி இட்டுச் சென்றது. எவ்வாறெனினும் அது தனது சர்வாதிகாரத்தினை ஸ்தாபிதம் செய்ததும் ரூஷ்ய தொழிலாளி வர்க்கமோ அல்லது எந்தவொரு பின்தங்கிய நாட்டின் தொழிலாளி வர்க்கமோ ஒரு புறத்தில் தேசியப் பொருளாதாரத்தின் நிலையான வரையரைகளுக்கும் மறுபுறத்தில் அனைத்துலக முதலாளி வர்க்கத்தின் மிலேச்ச எதிர்ப்புக்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.

ரூஷ்ய ஆட்சி நீடிப்பு

ஆதலால் தொழிலாளி வர்க்க ஆட்சியின் உயிர் நீடிப்பும் இறுதியில் சோசலிசத்தினை நோக்கிய முன்னேற்றமும் முன்னேறிய நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தின் அனுதாபத்தில் மட்டுமன்றி, இறுதி ஆய்வுகளில் அவற்றின் சொந்தத்தேசிய முதலாளி வர்க்கத்தினை வெற்றி கொள்வதிலும் தங்கியுள்ளது. 1907க்கு முன்னரே ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதுபோல்; ''ஐரோப்பியத் தொழிலாளிவர்க்கத்தின் நேரடி அரச ஆதரவு இல்லாமல் ரூஷ்ய தொழிலாளி வர்க்கம் ஆட்சியில் நீடிக்க முடியாதது மட்டுமன்றி அதன் தற்காலிக சர்வாதிகாரத்தினை ஒரு சோசலிச சர்வாதிகாரமாக மாற்றவும் முடியாது.''
முதலாம் உலகயுத்தத்தின் வெடிப்பு தேசியக் காரணிகளுக்கு மேலாக அனைத்துலக நிலைமையின் முக்கியத்துவத்தினை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியதை நிரூபித்தது. ஏகாதிபத்திய யுத்தம்- சாராம்சத்தில் காலவதியான தேசிய அரசுடன் உலக முதலாளித்துவ உற்பத்திச் சக்திகளை சமாதான ரீதியில் இணக்கமுறச் செய்ய முடியாமையைச் சுட்டிக்காட்டியது. முன்னேறிய, பின்தங்கிய நாடுகள் இரண்டிலும் தொழிலாளர்வர்க்கம் ஒரு பொது முட்டுக்கட்டை நிலைக்கு முகம்கொடுத்தது. மனித சமுதாயத்தின் சகல அடிப்படைப் பிரச்சனைகளுக்குமான தீர்வினை உலகப் பொருளாதார அபிவிருத்தி மட்டத்திலும் அனைத்துலகப் புரட்சிகரப் போராட்டங்கள் ஊடாக மட்டுமே காணமுடியும்.

இந்த விஞ்ஞானக்கருத்துப்பாடு சகல அரசியல் பிரச்சனைகளதும் ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டின் அடிப்படையாக உள்ளது. லெனினைப் போன்று ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அவர் அங்கீகரித்த அதேவேளையில், இந்த ஜனநாயக வேலைத்திட்டத்தின் இம் மூலகத்துக்கான ட்ரொட்ஸ்கியின் ஆதரவு ஆழமான விமர்சனப்பண்பினை கொண்டிருந்தது. ஒரு பெரிய அரசுடன் சிறிய தேசியங்களைப் பலாத்காரமாக ஒன்றிணைப்பதை அவர் வன்மையாக எதிர்த்த போதிலும் ட்ரொட்ஸ்கி- 1915ல் எழுதியது போன்று- சமூகஜனநாயகம் ''வரலாற்றுக்கு மேலாக நின்று தேசியக் கொள்கையை ஏதோ ஒரு வகையான முழுமுதல் கருத்தாக மாற்றிவிடாது'' என வலியுறுத்தினார்.
''தேசியமும் பொருளாதாரமும் அரசுடனும் ஒன்றுடன் மற்றொன்றும் முரண்பட்டுக் கொண்டுள்ளன. அரசு, பொருளாதாரத்துக்கு மிகவும் குறுகியதாகிவிட்டது. இதை விரிவுபடுத்த முயல்வது தேசியத்தினை நசுக்குகின்றது. ''நிலத்தின் மேற்பரப்பில் பொருளாதாரம் அதன் சக்திகளின் இயற்கையான இயக்கத்தினையும் வளங்களையும் தேசிய இனக்குழுக்களின் பங்கீட்டுக்கு கீழ்ப்படுத்த மறுக்கின்றது.''

நிரந்தரப்புரட்சியும் கம்யூனிஸ்ட் அகிலமும்

அக்டோபர் புரட்சியைப்போல் உலக மக்களின் நனவில் பிரமாண்டமான அதிர்ச்சி மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்திய வேறு சம்பவம் வரலாற்றில் கிடையாது. உலகின் நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கினையும் இருபதுக்கு மேற்பட்ட இனக்குழுக்களையும் தேசிய இனங்களையும் கொண்ட ஒரு பரந்த நிலப்பரப்பில் தொழிலாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றியமையானது ஒன்றில் நேரடியாக அல்லது ஏதோ ஒரு வகையான திரைமறைவில் ஏகாதிபத்தியச் சக்திகளால் ஆளப்பட்ட உலகின் பரந்த நிலப்பரப்பில் வாழ்ந்த பொதுஜன இயக்கத்துக்கு ஒரு பிரமாண்டமான உத்வேகத்தை வழங்கியது.

அக்டோபர் புரட்சி அறநெறி ஊக்கத்தினை மட்டுமன்றி- ஆபிரிக்கா, மத்தியகிழக்கு சிறப்பாக ஆசியா- அங்கு ஏகாதிபத்திய ஆளுமைக்கு எதிரான ஒரு இராட்சத வடிவம் எடுக்கத் தொடங்கியிருந்தது போன்ற- பின்தங்கிய நாடுகளின் வெகுஜனங்களுக்கு ஆளமான விரகி படிப்பினையையும் வழங்கியது. என்ன விதிமுறைகள் ஊடாக, என்ன வேலைத்திட்டத்தின் அடிப்படையில் காலனித்துவ நாடுகளின் மக்கள் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறுவர் என்ற தீர்க்கமான கேள்விகளுக்கு அக்டோபர்புரட்சி நடைமுறைப் பதில்களை வழங்கியிருந்தது. ரூஷ்யாவைப்போன்று ஆசியாவின் பின்தங்கிய நாடுகளில் மிகவும் முக்கியமானவை பற்றி பேசுமிடத்து சீன- இந்திய வெகுஜனங்கள் எதிர்கொண்ட பணிகள் முக்கியமாக ஒரு ஜனநாயகப் பண்பை கொண்டிருந்தன;

காலனித்துவ அடக்குமுறையில் இருந்து விடுதலை, தேசிய இணைப்பு, விவசாயிகளின் மீதான நிலமானித்துவ உறவுகளின் அடிமைத் தளையை அகற்றுதல். ஒரு வழக்காறான அரசியல் வரைவிலக்கணத்தின் நிலைப்பாட்டின்படி சீனாவும், இந்தியாவும் எதிர்நோக்கும் பணிகள் முக்கியமாக மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் கடந்த நூற்றாண்டுகளில் மாபெரும் முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சிகளினால் ''தீர்க்கப்பட்ட''வையாக விளங்கின. ஆனால் மென்ஷிவிசத்தின் அரசியல் தர்க்கத்தின்படி இந்தியாவிலும் சீனாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் தலைமை தேசிய முதலாளி வர்க்கத்துக்கு உரியதோடு அதன் இலக்குகள் ஒரு சுதந்திர முதலாளித்துவக் குடியரசு வடிவிலேயே அடையப்பட முடியும்.

ஆனால் ரூஷ்யாவில் மென்ஷிவிசம் தவறானதென நிரூபித்த அதே வரலாற்று முரண்பாடுகள் இந்தியாவிலும் சீனாவிலும் நிலவின. தேசிய இயக்கத்தின் முதலாளித்துவத் தலைமைகள் துரிதமாக வளர்ச்சி கண்டுவரும் ஒரு தொழிலாளர் இயக்கத்தினை எதிர்நோக்கியது. அதன் சமூகப்போராட்டங்கள் முதலாளித்துவ தலைமையின் முக்கிய பொருளாதார நலன்களை அச்சுறுத்தியது. மேலும் முதலாளி வர்க்கத்தின் தலைமையில் (முதலாளிவர்க்கம் ஒரு புரட்சிகரத் தலைமையை வழங்க இலாயக்கானது என்பதை ஏற்றுக்கொள்ள ஒருவர் தயாராக இருப்பினும்) ஒரு தேசியப்புரட்சியின் அடிப்படையில் இந்த ஒடுக்கப்படும் நாடுகள் ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரப் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வது முடியாத காரியமாக இருந்தது. ஆதலால் நிரந்தரப்புரட்சிக் கோட்பாடு ரூஷ்யத் தொழிலாள வர்க்கத்துக்கு விளங்கியதைக் காட்டிலும் எழுச்சி கண்டுவரும் ஆசியத் தொழிலாளி வர்க்கத்துக்குப் பெரிதும் பொருத்தமானதாக விளங்கியது.

1919-1922க்கும் இடையிலான கம்யூனிஸ்ட் அகிலத்தின் பத்திரங்கள் காலனித்துவப் பிரச்சினை பற்றியதாய் விளங்கின. குறிப்பாக இரண்டாம், நான்காம் காங்கிரசுகள் நிரந்தரப்புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே விவரிக்கப்பட்டன. பின்தங்கிய நாடுகளின் வேறுபட்ட பொருளாதார, கைத்தொழில் அபிவிருத்தியின் அளவுகளையும், தொழிலாளி வர்க்கத்தின் தொடர்ந்து வரும் பலத்தினையும் கணக்கில் எடுத்த அதே வேளையில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் இந்தப் பிரேரணை தொழிலாளர் இயக்கம் கருவடிவில் இருந்தாலும் கூட தேசிய முதலாளி வர்க்கத்தின் கட்சிகள், அமைப்புக்களில் இருந்து அரசியல் சுயாதீனமாக இருப்பதை வலியுறுத்தியது.

லெனினின் பின்னர் மூன்றாம் அகிலம்

லெனினின் மரணத்தின் பின்னர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் தகவமைவு தீவிரமாக மாற்றம் கண்டது. 1926ல் ஸ்டாலின், புகாரின் ''தனியொருநாட்டில் சோசலிசம்'' என்ற கோட்பாடு திரையரங்குக்கு வந்தமை சோசலிசப்புரட்சி வேலைத்திட்டத்தினை கைவிடவும் ஸ்டாலினிச அதிகாரத்துவம் தனது சொந்தச் சட நலன்களுக்கு அனைத்துலகத் தொழிலாளர் இயக்கத்தினைக் கீழ்ப்படுத்தவும் சித்தாந்த அடிப்படையை வழங்கியது.

மார்க்சிசத்தின் இந்த அடிப்படைத் திரிபுக்கு எதிராக ட்ரொட்ஸ்கியும் இடதுசாரி எதிர்க்கட்சியும் நடாத்திய அரசியல் போராட்டத்தினையும் அல்லது இக் கோட்பாடு சோவியத் யூனியனுக்கும் உண்மையில் அனைத்துலகத் தொழிலாளி வர்க்கத்துக்கும் ஏற்படுத்திய துக்ககரமான விளைவுகளை விரிவாக ஆராய்வது இந்த விரிவுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. ஆனால் நாம் தோழர் கீர்த்தியின் அரசியல் பயிற்சிக்கு அவற்றின் துன்பகரமான படிப்பினைகள் ஒரு அடிப்படையான பாத்திரத்தினை வகித்துள்ளதால் சுருக்கமாகவேனும் சீனச் சம்பவங்களை ஆராய்வோம்.

நடைமுறை அர்த்தத்தில் ஸ்டாலின் சியாங்கை சேக்குடனும் முதலாளித்துவ குவாமின்டானுடனும் கொண்டிருந்த உறவுகள்- இதற்குச் சீனத் தொழிலாளி வர்க்கம் ஒரு பயங்கரமான விலைகொடுக்க நேரிட்டது- சந்தர்ப்பவாத ஈடுபாட்டில் இருந்தே பெருக்கெடுத்தன. இவை ''தனிநொருநாட்டில் சோசலிசம்'' என்ற கோட்பாட்டை விபரிக்கத் தூண்டின.
இந்தக் கோட்பாட்டின்படி சோவியத்யூனியனில் சோசலிச நிர்மாணம், முன்னேறிய நாடுகளின் தொழிலாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதில் தங்கியிருக்கவில்லை. மாறாக, சோவியத்யூனியனில் சோசலிசத்தினை அதன் சொந்த உள்ளார்ந்த வளங்களின் அடிப்படையில் யதார்த்தமாக்கிவிட முடியும். எவ்வாறெனினும் ஸடாலின் சோவியத்யூனியனில் சோசலிசத்தினை யதார்த்தமாக்குவதில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் முக்கியத்துவத்தினையும் அனைத்துலகத் தொழிலாளர்வர்க்கத்தில் அதன் செல்வாக்கினையும் ஒரேயடியாகத் தட்டிக்கழித்து விடவில்லை. ஏகாதிபத்தியம் ஒரு இராணுவத் தாக்குதலில் ஈடுபடாதிருந்தால் சோவியத் யூனியனில் சோசலிசத்தினை நிர்மாணித்துவிட முடியும் என்பதே கிரேம்லின் நிலைப்பாடாக விளங்கியது.

இந்த விதத்தில் கம்யூனிஸ்ட் அகிலம் ஒன்றில் முதலாளித்துவ ஆட்சியாளருடன் கூட்டுக்களை விருத்தி செய்வதன் மூலம் அல்லது தேசியத் தொழிலாளர் இயக்கங்களின் ஊடாக நெருக்குவாரம் கொடுப்பதன்மூலம் சோவியத்யூனியன் தொடர்பாக முதலாளித்துவ அரசாங்கங்களை ஒரு சாதகமான மனோபாவத்தினை கடைப்பிடிக்கச் செய்வதன் மூலம் இந்த ஆபத்தினைத் தவிர்ப்பதில் பயனுள்ளதாக விளங்கமுடியும்.

இங்கிலாந்தில் அத்தகைய ஒரு கொள்கை 1925-26ல் ஆங்கிலோ- ரஷ்யன் கமிட்டியின் ஸ்தாபிதத்தின் ஊடாக அமுல் செய்யப்பட்டது. இக்கமிட்டி பிரித்தானியப் பொது வேலைநிறுத்தத்தினை காட்டிக் கொடுத்தது.
சீனாவில் ஸ்டாலினிச அதிகாரத்துவம் குவாமின்டாங்குடனும் அதன் தலைவர் சியாங்கை சேக்குடனும் உறவினை வளர்த்துக்கொள்ள முயன்றது. ஸ்டாலின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை குவாமின்டாங்கின் அரசியல் நெறிமுறைக்கு அடிபணியுப்படி உத்தரவிட்டார். இது ''நான்கு வர்க்கங்களின் கூட்டு'' எனப்பட்டது. அவையாவன; தொழிலாளர்கள், விவசாயிகள், குட்டி முதலாளித்துவம், தேசிய முதலாளி வர்க்கம் என்பனவாகும்.

1926 மேயில் குவாமின்டாங் ஒரு அனுதாபக் கட்சியாக கம்யூனிஸ்ட் அகிலத்தினுள் அனுமதிக்கப்பட்டதோடு சியாங்கைசேக் அதன் தலைமைப்பீடத்தின் ''கெளரவ அங்கத்தவர் ஆக்கப்பட்டார்.
தொழிலாளர் வர்க்கத்தினதும் விவசாயிகளதும் புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு அலைவீச்சின் பின்னணியிலேயே குவாமின்டானும் சியாங்கை சேக்கும் மேன்மைப்படுத்தப்பட்டனர். வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சி சீன முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயான மோதுதலை உக்கிரமாக்கியதோடு முதலாளி வர்க்கத்தினை ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் அப்பட்டமாகத் தள்ளியது. ஆனால் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஸ்டாலினிசத் தலைமை சீனாவின் தேசிய ஒடுக்குமுறை சகல வர்க்கங்களையும் அடிமைப்படுத்தி, அவற்றினைப் புரட்சிகரப் போராட்டத்தினுள் தள்ளியுள்ளது என்ற அடிப்படையில் வர்க்க சக்திகளின் வேறுபாட்டினை நிராகரித்தது. இந்தப் போலிக் கருத்துப்பாட்டிற்கு எதிராக ட்ரொட்ஸ்கி வாதிட்டதாவது;

வெளியிலிருந்து ஏகாதிபத்தியம் பொறிமுறையில் சகல வர்க்கங்களையும் ஒன்றாக ஒட்டுப் போடுகின்றது என நினைப்பது முற்றிலும் தவறானது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சிகரப் போராட்டம் வர்க்கங்களின் அரசியல் வேறுபாடுகளைப் பலவீனப்படுத்துவதற்கு மாறாக பலப்படுத்துகின்றது. ஏகாதிபத்தியம் சீனாவின் உள்ளார்ந்த உறவுகளில் ஒரு பெரிதும் பலம் வாய்ந்த சக்தி இந்தச் சக்தியின் முக்கிய மூலம் யாங்சியாங் நதியின் நீரில் நிற்கும் யுத்தக் கப்பல்கள் அன்றி -அவை இரண்டாம்பட்சமானவை மட்டுமே- வெளிநாட்டு மூலதனத்துக்கும், தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயான பொருளாதார, அரசியல் பிணைப்புக்களே. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் அதன் பொருளாதார, இராணுவ பலம் காரணமாக சீன மக்களின் வெகு ஆழத்தில் இருந்த சக்திகளின் ஒரு பலம்வாய்ந்த உழைப்பை வேண்டி நிற்கின்றது. ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட உழைப்பாளி மக்களை அவர்களின் காலடிக்கு கொணரும் அனைத்தும் தேசிய முதலாளி வர்க்கத்தினைத் தவிர்க்கமுடியாத விதத்தில் ஏகாதிபத்தியத்துடன் அப்பட்டமான கூட்டுக்குத் தள்ளுகின்றது. முதலாளி வர்க்கத்துக்கும், தொழிலாளர், விவசாயிகளுக்கும் இடையேயான வர்க்கப் போராட்டம் பலவீனப்பட்டுவிடவில்லை. ஆனால் மாறாக ஒவ்வொரு கடும் மோதுதல்களிலும்- இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தம்வரை இது ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் ஆழமாக்கப்பட்டுள்ளது.(3)

இடதுசாரி எதிர்க்கட்சியின் எச்சரிக்கைகள் 1927 ஏப்ரல் 12ம் திகதி சியாங்கை சேக்கின் படைகளால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான அங்கத்தவர்கள் ஷங்காயில் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் துன்பகரமான முறையில் நிரூபிக்கப்பட்டது. சீயாங்கின் சதி, தேசிய முதலாளி வர்க்கத்தின் ''வலதுசாரியினரைக்'' கொண்ட குவாமின்டாங்கின் ஒரு சிறிய பிரிவினரின் காட்டிக்கொடுப்பு மட்டுமே எனக்கூறி கம்யூனிஸ்ட் அகிலம் இந்தப் பேரழிவுமிக்க தோல்விக்கான பொறுப்பினை மறுக்க முயன்றது. ஸ்டாலினிஸ்டுக்கள் சியாங்குக்கு எதிராக குவாமின்டாங்கின் ''இடது கன்னையை'' நிறுத்தினர். அது ''நான்குவர்க்கக் கூட்டின்'' 90 வீதத்தினை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் வுகானில் உள்ள 'இடது' குவாமினுடாங் அரசாங்கத்தினை மையமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் 1927 ஜுலை யில் வூகான் அரசாங்கம் தொழிலாளர்வர்க்கத்துக்கு எதிராக மிலேச்சமானதாகத் திரும்பியது. கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களையும் போராளி தொழிலாளர்களையும் படுகொலை செய்தது.

தனது கொள்கைகள் அடியோடு சரிந்து கொட்டியதை எதிர்கொண்ட ஸ்டாலின், பேரழிவில் போய் முடிந்த கன்டன் கொம்யூன் எனப் பேர்பெற்ற கையாலாகாத்தனமான சாகஜத்துக்கு அங்கீகாரம் வழங்கினார். 1928ன் ஆரம்பத்தில்- ஓராண்டுக்கு முன்னர்தான் பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களைக் கொண்டிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அடியோடு இல்லாமல் போயிற்று.
இந்தத் தோல்வியின் வரலாற்று விளைவுகளை உண்மையில் புறக்கணித்துவிட முடியாது இதன் உடனடிப் பெறுபேறாக இடதுசாரி எதிர்க்கட்சி தனிமைப்படுத்தப்பட்டு அரசியல் தோல்விக்குச் சென்றதற்கு அப்பால் சீனப்புரட்சியின் தோல்வி 'வெறுமனே' 20 ஆண்டுகளால் தாமதப்படுத்தப்படவில்லை. 1949ல் ஆட்சிக்கு வந்த மா ஓ சேதுங்கின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் உடற்கூறும் சமூகச் சேர்க்கையும் 1927 தோல்வியின் விளைவு காரணமாக- மிகவும் ஆழமான விதத்தில் பரிணாமம் செய்யப்பட்டது. மார்க்சிச அர்த்தத்தில் அது முற்றிலும் ஒரு தொழிலாளர் கட்சியே அல்ல.

''தனிநாட்டில் சோசலிசத்தின்'' பரந்த முக்கியத்துவம்

''தனி ஒரு நாட்டில் சோசலிசம்'' கோட்பாடானது மிகவும் நனவான முறையிலும் நேரடியாகவும் சோவியத்யூனியன் மீது ஏகாதிபத்திய நெருக்குவாரத்தினைத் திணிக்கும் நோக்குடன் பாதுகாப்புக் கூட்டுக்களை உண்டுபண்ணுவதை நோக்கி கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூலோபாயத்தினை சந்தர்ப்பவாத ரீதியில் மறு அணிதிரளச் செய்ய இட்டுச் சென்றது தெளிவாகியது. ஸ்டாலினின் அறியாமைமிக்க கணிப்புக்களுக்கு அப்பால் சியாங்கை மகோன்னதமாகக் காட்டியமை, தேசிய சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையாக விளங்கிய கோட்பாட்டுக் கருத்துப்பாட்டில் இருந்து பெருக்கெடுத்து வந்தது.

ஸ்டாலினின் 'கோட்பாட்டின்' நடுமையமாக வரலாற்றுச் சகாப்தம் பற்றிய முற்றிலும் வேறுபட்ட வரைவிலக்கணம் விளங்கியது. நிரந்தரப்புரட்சிக் கோட்பாட்டுக்கு முரண்பட்ட விதத்தில் சகாப்தம் பற்றிய ஸ்டாலினிசக் கருத்துப்பாடானது கணிசமான உள்ளார்ந்த சக்திகொண்ட பொருளாதார அமைப்பின் தேசிய அரச வடிவத்தினைக் குறித்து நின்றது. இதிலிருந்து பின்தங்கிய நாடுகளின் தேசிய முதலாளி வர்க்கம் இன்னமும் ஒரு வரலாற்று ரீதியில் முற்போக்கான பாத்திரத்தினை வகிக்கின்றது என்பது வெளிப்பட்டது மறுபுறத்தில் ட்ரொட்ஸ்கி அத்தகைய ஒரு சாத்தியத்தினை நிராகரித்தார். ஏனெனில் இறுதி ஆய்வுகளின்படி காலனித்துவ முதலாளிவர்க்கம் காலவதியான சொத்து உறவுகளில் தங்கியுள்ளது மட்டுமன்றி அதன் இருப்பும்கூட ஒரு தேசிய அரச வடிவினுள்ளேயே வேரூன்றியுள்ளது அது மனிதனின் உற்பத்திச் சக்திகளின் நியாயமான அபிவிருத்திக்கும் கூட முக்கிய தடையாக உள்ளது.

ட்ரொட்ஸ்கி ஆசியாவில் புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சி பற்றி பெரும் அக்கறை கொண்டிருந்தார். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான காலனித்துவ மக்களின் போராட்டத்தின் முக்கியத்துவத்தையிட்டு அவர் பெரிதும் நனவாக இருந்தார். ஆனால் அவர் முன்னர் போன்று தொடர்ந்தும் ஜனநாயகப்புரட்சியின் தலைமையில் தேசிய முதலாளி வர்க்கம் மேலாதிக்கம் வகிக்கும் என்ற வாதத்தினை நிராகரித்து வந்தார். இது சம்பந்தமாக ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸ் பற்றி ஒரு தென்னாபிரிக்க ஆதரவாளர்கள் குழுவுக்கு 1934ல் எழுதியவற்றை நினைவு கூர்வது பொருத்தமானது;
''அதன் குறுகிய சமரசக் கொள்கை காரணமாக இதன் சொந்தக் கோரிக்கைகளை காங்கிரசினால் அடைய முடியாதிருப்பதை போல்ஷிவிக்- லெனினிஸ்டுக்கள் சுதேச மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்துகின்றனர். காங்கிரசுக்கு முற்றிலும் முரண்பட்ட விதத்தில் போல்ஷிவிக்- லெனினிஸ்டுக்கள் ஒரு புரட்சிகர வர்க்கப் போராட்ட வேலைத்திட்டத்தினை அபிவிருத்தி செய்கிறார்கள்'' (4)

முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் பற்றிய ட்ரொட்ஸ்கியின் ஆய்வின் இன்னுமோர் மிகவும் ஆழமான அம்சம் ஒன்றுண்டு. பின்தங்கிய நாடுகளில் வளர்ச்சி கண்டுவந்த சக்திவாய்ந்த வெகுஜன இயக்கங்களுக்கு அவர் பூரண மரியாதை செலுத்திய அதே சமயம் 'தேசிய விடுதலை' முன்னோக்கு- அடிப்படையில் 'தேசியப்' பணியினை சூல்கொண்டிருக்கும்வரை- சந்தேகத்துக்கு இடமற்ற முறையில் ஒரு விமர்சன நோக்காக விளங்கியது உதாரணமாக ''யுத்தமும் நான்காம் அகிலமும்'' என்ற தமது விஞ்ஞாபனத்தில் ட்ரொட்ஸ்கி கூறியதாவது;
''ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் காலவதியான புரட்சிகள் தேசிய அரசுக்கு ஒரு புதிய மறுமலர்ச்சிச் சகாப்தத்தினை ஆரம்பித்து வைக்க இலாயக்கற்றவை என்பதை முன்கூட்டியே தெளிவாகப் புரிந்து கொண்டாக வேண்டும். அரைக்காலனித்துவ நாடான ரூஷ்யாவில் காலவதியான ஜனநாயகப்புரட்சி சோசலிசப்புரட்சிக்கு ஒரு முன்னுரையாக மட்டும் விளங்கியது போலவே காலனிகளின் விடுதலை உலக சோசலிசப்புரட்சியில் ஒரு இராட்சத நிகழ்வாக மட்டுமே விளங்கும்
தேசியப்பிரச்சினை எங்கும் சமூகப்பிரச்சினையுடன் இணைந்து கொள்கின்றது. உலகத்தொழிலாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமே பூகோளத்தின் சகல தேசியங்களுக்கும் ஒரு நிசமானதும் நிரந்தரமானதுமான அபிவிருத்திச் சுதந்திரத்தினை உத்தரவாதம் செய்யும்.'' (5)

காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு பலம்வாய்ந்த இயக்கத்தின் பிடியில் அகப்பட்டிருந்த இந்தியா மீதான அவற்றின் கருத்துக்கள் முக்கியமாகக் கூர்மை கண்டிருந்தது. 1939 ஜூலையில் ட்ரொட்ஸ்கி இரண்டாம் உலகயுத்தத்தின் வெடிப்பு, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான காலனித்துவ நாடுகளின் புரட்சிகர இயக்கங்களைப் பிரமாண்டமான முறையில் தீவிரமடையச் செய்யும் என எதிர்பார்த்து, இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் ட்ரொட்ஸ்கி காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்களை ஸ்டாலினிஸ்டுக்கள் காட்டிக் கொடுத்ததை கண்டனம் செய்ததோடு இந்தியாவில் நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியை அமைக்கும்படியும் அழைப்பு விடுத்தார்.

அவர் எழுதியதாவது; இந்திய முதலாளிவர்க்கம் ஒரு புரட்சிகரப் போராட்டத்தினை வழிநடாத்த இலாயக்கற்றது. அவர்கள் பிரித்தானிய முதலாளித்துவத்துடன் மிகவும் நெருங்கிப் பிணைக்கப்பட்டுள்ளதோடு அதன் தயவிலும் இருந்து வருகின்றது. அவர்கள் தமது சொந்தச் சொத்துக்காக அஞ்சி நடுங்குகின்றார்கள். அவர்கள் மக்களைக் கண்டு அஞ்சுகின்றனர். என்ன விலை கொடுத்தென்றாலும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் சமரசத்தை நாடுவதோடு மேலிருந்து சீர்திருத்தங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய வெகுஜனங்களை தூங்க வைக்கின்றனர். காந்தி இந்த முதலாளி வர்க்கத்தின் போலித் தலைவரும், மோசடித் தூதுவனும் ஆவார். (6)

ட்ரொட்ஸ்கியின் அழைப்புக்கு இலங்கையில் பலன் கிடைத்தது. 1935ல் இருந்து தீவிரவாத ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பாக அமைக்கப்பட்ட லங்கா சமசமாஜக்கட்சி அங்கு இருந்து வந்தது. இது தொழிலாளர் வர்க்கத்தினுள் ஆதரவைத் திரட்டிக் கொண்டதோடு அவ்வாறே சமசமாஜக்கட்சி சீக்கிரம் இடதுநோக்கி பயணம் செய்தது. 1940 தொடக்கத்தில் சமசமாஜக்கட்சியின் அரசியல் வேலைத்திட்டம் பெரிதும் திட்டவட்டமான மார்க்சிசப் பண்பை பெற்றதோடு, அது ஸ்டாலினிஸ்டுக்களாக இனங்கண்டோரை அங்கத்துவத்திலிருந்தும் நீக்கியது. இந்தப் பரிணாமம் அதன் அனைத்துலகப் பொறுப்புக்கள் பற்றிய விளக்கத்தில் வெளிப்பாடாகியது. அதன் சொந்த ஆரம்பகால வேலைத்திட்டத்தினை விமர்சன ரீதியில் ஆய்வு செய்த சமசமாஜக்கட்சித் தலைமை இலங்கையில் ஒரு 'தேசிய' புரட்சி பற்றிய முன்னைய கருத்துப்பாட்டினையிட்டு அதிருப்தி தெரிவித்ததோடு தீவில் புரட்சிகர சோசலிச இயக்கம் ஒரு அகில இந்தியப் புரட்சிகர இயக்கத்தின் அத்தியாவசியமான அங்கமாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனப் பிரகடனம் செய்தது. இந்த அடிப்படையில் சமசமாஜக்கட்சி இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சியில் சேர்ந்ததோடு கிட்டத்தட்ட அதேசமயத்தில் நான்காம் அகிலத்துடன் சேரவும் விண்ணப்பித்தது.

பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுடன் சேர்ந்து கொண்ட ஸ்டாலினிஸ்டுக்களுக்கு எதிராக சமசமாஜக்கட்சி இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலைமை வழங்கியது.
இவ்வாறு ட்ரொட்ஸ்கிஸ்டுக்களின் உறுதியான போராட்டம் காரணமாக இலங்கையில் தொழிலாளி வர்க்கத்தின் தத்துவார்த்த, அரசியல் சுதந்திரம் நிலைநாட்டப்பட்டது. இது ஸ்டாலினிஸ்டுக்கள் இந்தியாவில் ஒருபோதும் முயற்சிக்காததும் அடைய இலாயக்கற்றவர்களாகவும் இருந்ததுமான ஒரு வெற்றியாகும். அங்கு அவர்கள் காந்தி, நேருவின் முதலாளித்துவ காங்கிரசின் பின்னால் பரிதாபமான முறையில் இழுபட்டனர். எவ்வாறெனினும் இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்க அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வெகுஜன இயக்கத்தின் தலைமையை வெற்றி கொண்டனர். மேலும் இந்த வெற்றி, ஒரு வரலாற்று கோட்பாட்டு நிலைப்பாட்டிலிருந்து பார்க்கையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம்- அதாவது காலனித்துவ மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் கட்டாயமாக ஒரு தேசியப் போராட்டமாகவே இருக்கவேண்டும் என்ற பரந்தளவிலான எண்ணம் யதார்த்தத்தினை திரிப்புப் புள்ளிக்கு எளிதாக்குவதைக் காட்டுவதோடு வெகுஜன ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் சமூக சக்தியை உண்மையில் குழப்பியடிக்கவும் செய்கின்றது.

இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சித் தலையீட்டின் பலம், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தமது போராட்டத்தின் அடிப்படையாகக் கொண்டிருந்தது தேசிய விடுதலையை அன்றி அனைத்துலக முன்னோக்கினையே என்ற உண்மையில் இருந்தே பெருக்கெடுத்தது. லங்காசமசமாஜக்கட்சியின் பிற்காலக் காட்டிக்கொடுப்புக்கிடையிலும் , (1950ல் இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சி சமசமாஜக் கட்சியுடன் இணைந்து கொண்டது.) இந்த வரலாற்றுப் பங்களிப்பு ஒரு பலம் வாய்ந்த அரசியல் பாரம்பரியத்தினைச் சிருஷ்டித்தது. அது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதத்துக்கு ஊக்கமளித்ததோடு கீர்த்தியின் எதிர்கால அரசியல் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்க ஒரு அத்திவாரத்தினையும் வழங்கியது.

யுத்தத்தின் பின்னைய தீர்வும் காலனித்துவ ஒழிப்பும்

ட்ரொட்ஸ்கி தமது படுகொலைக்குச் சில மாதங்களுக்கு முன்னர் பின்தங்கிய நாடுகளின் தொழிலாளி வர்க்கம் முகம்கொடுத்துள்ள வரலாற்றுப் பணிகளை இறுதித் தடவையாக மதிப்பீடு செய்தார். சோசலிசப் புரட்சியூடாக காலனித்துவ மேலாதிக்கம் முடிவுக்கு கொணரப்படாவிட்டால் ஏகாதிபத்திய யுத்தத்தில் இருந்து காலனித்துவ மக்களுக்குச் சாதகமான தீர்வு கிட்டாது என அவர் எச்சரிக்கை செய்தார். அவர் எழுதியதாவது; ஆதலால் காலனித்துவ மக்களின் விடுதலைக்கான நம்பிக்கை முன்னரைவிட மிகவும் தீர்க்கமான முறையில் முழு உலகத் தொழிலாளர்களதும் விடுதலையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. முன்னேறிய நாடுகளின் தொழிலாளிவர்க்கம் முதலாளித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து,பின்தங்கிய மக்களுடன் ஒன்றிணைந்து ஏகபோகங்களின் இலாபங்களுக்கு அன்றி சமூகத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய விதத்தில் உலகப் பொருளாதாரத்தினை ஒரு புதியமட்டத்தில் புணரமைப்புச் செய்யும் போதே காலனிகள் அரசியல், பொருளாதார, கலாச்சார ரீதியில் விடுதலை பெறும். இந்த வழியில் மட்டுமே காலனித்துவ, அரைக்காலனித்துவ நாடுகள் பின்தங்கிய நிலைமையின் வேறுபட்ட கட்டங்களில் இருந்து மீட்சி பெறவும் ஒரு முன்னேறும் உலக சோசலிச பொதுநலவாயத்தின் இணைந்த பகுதிகளாகத் தமது இடத்தினை எடுக்கவும் முடியும்.

இரண்டாம் உலகயுத்தத்தினைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்கள் ட்ரொட்ஸ்கியின் தீர்க்கதரிசனத்தினைத் துன்பகரமான முறையில் ருசுப்படுத்தின. இந்திய அபிவிருத்திகள் எடுத்துக்காட்டியது போல் பெயரளவிலான அரச சுதந்திரம் வழங்கப்பட்டமை இந்திய வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகள் இட்டு நிரப்பப்பட்டதை எந்தவொரு அடிப்படையான விதத்திலும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அப்படி ஏதும் இருப்பின் சுதந்திரத்தின் நிபந்தனைகள் தேசிய முதலாளி வர்க்கத்தின் முற்றிலும் பிற்போக்கான தன்மைக்கு மறுக்கமுடியாத அத்தாட்சியாக விளங்குகின்றன. யுத்தத்தின் பின்னைய காலப்பகுதி பூராவும் அநேக துன்பகரமான வடிவங்களில் மீளச் சிருஷ்டிக்கப்பட இருந்தவற்றுக்கு ஒரு மாதிரியாக விளங்கிய இந்தியப் பிரிவினை, ஏகாதிபத்தியத்தின் நலன்களைக் கட்டிக் காத்தது. தொழிலாளி வர்க்கத்தினை பிளவுபடுத்திப் பலவீனப்படுத்துவதற்கு இனவாத குரோதங்களை ஊக்குவிக்கவும், சாதுரியமாகச் செய்து முடிக்கவும் ஏகாதிபத்தியத்துக்கும் தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் இதனால் வழி திறந்தது.

இலங்கையில் இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள், நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், இலங்கை முதலாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையேயான உடன்படிக்கை ஏகாதிபத்தியத்திடமிருந்து தேசிய ஐக்கியத்தினையோ அல்லது சுதந்திரத்தினையோ அடையவில்லையென்ற ரீதியில் ஒரு அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுதந்திரத்துக்கு எதிராக வாக்களித்தனர். உண்மையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கொள்கை ரீதியான நிலைப்பாடு உடனடியாகவே நிரூபிக்கப்பட்டது. இலங்கை முதலாளி வர்க்கம் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் தீர்க்கமான ஒரு பாத்திரத்தினை வகித்த பகுதியினருக்கு- தமிழ் தோட்டத் தொழிலாளருக்கு- எதிராக அவர்களின் குடியுரிமையை ஒழித்துக்கட்ட ஒரு குடியுரிமைச் சட்டத்தை இயற்றியது குடியுரிமையானது பிறப்பு, வதிவிடம் அல்லது வேலையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படவிருந்தது. இம் மசோதா, முதலாளி வர்க்கம் தனது சொந்த நடவடிக்கையின் மூலம் தேசிய ஐக்கியத்துக்கான முக்கிய தடையாக உள்ளதை எடுத்துக் காட்டியது.
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக கொல்வின் ஆர். டி. சில்வாவினால் ஒரு தீர்க்கதரிசனமான உரை நிகழ்த்தப்பட்டது; '' இந்த மசோதாவுக்கு அடிப்படையாக ஏதேனும் அரசியல் தத்துவம் இருப்பின்- அதைப்பற்றி கூறவேண்டியது இதுதான்: இந்த மசோதாவுக்கு அடிப்படையாக ஏதேனும் ஊகத்தின் ஊடாக முன்செல்லுமானால், இந்த அரசாங்கம் நனவற்ற ரீதியில் நடைமுறைப்படுத்தும் அடிப்படைத் தத்துவார்த்த அல்லது அரசியல் அல்லது சமூகவியல் அடிப்படைக் கொள்கையானது அரசு இனத்துக்கும் இனம் சாதிக்கும் சமமாக விளங்க வேண்டும் என்பது தெளிவு. குடியுரிமைக்கான அடிப்படைக் கொள்கையாக பரம்பரையைக் கொள்வதில் இருந்து ஊற்றெடுக்கக்கூடிய வேறு அர்த்தமோ அல்லது வேறு தத்துவமோ இருக்க முடியாது. இது ஒரு காலவதியானதும் வெடித்துச் சிதறியதுமான ஒரு தத்துவமாகும். சரியாக முதலாளித்துவ அமைப்பு வீழ்ச்சி காணும் இன்றைய காலப்பகுதியில் பிற்போக்குச் சேவகம் செய்யும் பொருட்டு இந்தப் பழையதும் காலவதியானதுமான கோட்பாட்டுக்குப் புத்துயிரழிக்கப்பட்டுள்ளது. தேசிய இனத்தினை சாதியுடன் சமப்படுத்த முயல்வதும் அரசின் சேர்க்கையில் சாதியை ஆளும் காரணியாக்குவதும் சரியாக பாசிசத்தின் கீழேயே. ஆதலால் இலங்கைக் குடியுரிமை அந்தஸ்த்து ஒரு சாதி அந்தஸ்தின் நிலைக்குக் கீழிறக்கப்படும் ஆபத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதுவும் எதிர்த்துப் போராடவேண்டிய ஒரு அடிப்படைக் கொள்கையாகும்.''

இந்த மேற்கண்ட பந்தி கீர்த்தி 1987 இலையுதிர் காலத்தில் எனக்கு எழுதிய ஒரு கடிதத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. அவர் இந்தியன் போல்ஷிவிக்- லெனினிஸட் கட்சியின் ஆரம்பகாலப் போராட்டங்களை அடிக்கடி குறிப்பிட்டு வந்தார். ஏனெனில் அவர் தன் வளம்பொருந்திய வரலாற்றுப் பாரம்பரியங்களில் இருந்து புத்திஜீவி, அரசியல் உந்துசக்தியைப் பெற்று வந்தார். ஒரு காலத்தில் இந்திய, இலங்கைத் தொழிலாளி வர்க்கத்தின் தலைசிறந்த தலைவர்களாக விளங்கியவர்களால் அப்பாரம்பரியங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதற்கு எதிரான போராட்டத்தின் விளைபயனாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தோன்றிய போதிலும் கீர்த்தி கொல்வின் ஆர். டி. சில்வா போன்றவர்களின் பங்களிப்பின் நிலையான பெறுமானத்துக்கு என்றுமே புறமுதுகு காட்டியதில்லை. 1948ல் இ. போ. லெ. க. யின் நிலைப்பாடு கீர்த்திக்கு அவ்வளவு பெரும் முக்கியத்துவமாக இருக்கக் காரணம், பின்தங்கிய நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் மூலோபாயத்தினை விவரிப்பதில் யுத்தத்தின் பின்னைய தீர்வின் பிரச்சினை அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதியதே.

கீர்த்தி அடிக்கடி வலியுறுத்தி வந்ததுபோல் வரலாற்று முன்னேற்றத்தின் நலனுக்கு எந்தவிதமான பங்களிப்பும் செய்யமுடியாத தேசிய முதலாளி வர்க்கத்தின் உயிரின இயலாமையானது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னைய கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் நனவான வடிவம் எடுத்தது. ஒரு மோசடியான ''அரச சுதந்திரம்'' ஆக விளங்கிய இது முன்னைய காலனிகளின் வெகுஜனங்களின் மேலாக ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தினைத் தொடர ஒரு மூடுதிரையை வழங்கியது. அரச சுதந்திரம் ஏதோ ஒரு விதத்தில் அரைகுறை வெற்றியைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அதற்கு தேசிய முதலாளி வர்க்கம் குறைந்தபட்சம் ஏதோவொரு பெருமைக்கு உரியதெனவும் காட்டும் பப்லோ- மண்டேல் சந்தர்ப்பவாதிகளின் சீர்திருத்தவாத பரிந்துரையாளர்களின் வாதங்களை கீர்த்தி அடியோடு நிராகரித்தார். தமது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் காஸ்ட்ரோ, பென்பெல்லா மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தின் பிரதிநிதிகளுக்கு பப்லோவாதத்தின் அடிபணிவுக்கு எதிராக அனைத்துலகக்குழு நடாத்திய கசப்பான போராட்டங்களின் அடிப்படைப் படிப்பினைகளைக் கீர்த்தி உள்ளீர்த்துக் கொண்டார்.

பங்களாதேஷில் இந்திய ஆக்கிரமிப்பு

கடந்த காலத்தினை நினைவுபடுத்திப் பார்க்கையில் 1971க்கு முன்னரே கீர்த்தி சோசலிச லேபர் லீக்கின் தலைமையுடன் மோதிக்கொண்டது அதிர்ச்சி தராது போகலாம். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அடிப்படையாகக் கொண்டிருந்த அரசியல் அத்திவாரத்தின் அடிப்படையில் 1960களின் கடைப்பகுதியில் இருந்து சோசலிஸ்ட் லேபர் லீக்கினுள் பெரிதும் தலைதூக்கிய சந்தர்ப்பவாதப் போக்குகளுக்கு அவரால் தீவிரமாக உணர்ச்சிவசப்படாது இருக்க முடியவில்லை. குறிப்பாக தீர்க்கமான பிரச்சினைகள் அனைத்திலும் மைக் பண்டா சோசலிச லேபர் லீக்குக்கு தலைமை தாங்கிய அரசியல் மூவர் கூட்டின் பாகமாக ஹீலி சுலோட்டருடன் சேர்ந்து ஒரு தனித்துவமான சந்தர்ப்பவாத பண்பு கொண்ட நிலைப்பாடுகளை அபிவிருத்தி செய்தார். முதலில் 1960களின் கடைப்பகுதியில் பண்டா, மா ஓ சேதுங், ஹோசிமின் கொள்கைகள் ஸ்டாலினிசத்துக்கு ஒரு பதிலீடாகும் எனவும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப்புரட்சிக் கோட்பாட்டினுள் நல்லனவற்றைப் பொறுக்கி எடுத்து பிரயோகிப்பதுமாகும் எனவும் கூறி மா ஓ சேதுங், ஹோசிமினுக்கு உணர்ச்சிமயமான புகழாரம் சூட்டத் தொடங்கினார். இருப்பினும் ஹீலி, பண்டாவுடனான அரசியல் மோதுதலைத் தவிர்க்கும் பொருட்டு அவரின் பெரிதும் ஊதாரித்தனமான பிரகடனத்தை ஒரு தனிப்பட்ட விசித்திரமின்றி வேறொன்றுமல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தார். முன்னர் அவர்களின் எதிர்ப்புக்கு இலக்கான பப்லோவாதிகளைப் போலவே சோசலிச லேபர் லீக்கும் அன்று மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த குட்டி முதலாளித்துவத் தீவிரவாதத்துக்கு அடிபணிந்து கொண்டிருந்தது என்பதே அரசியல் யதார்த்தமாகும்.

சோசலிச லேபர்லீக்கினுள்ளே சவால் செய்யப்படாத இடது முதலாளித்துவ தேசியவாதத்தின் மா ஓ வாதமும் தேசிய விடுதலை முன்னணி (NLF) யின் அரசியலும் இதன் பல்வேறு வடிவங்களாகும். இச்சக்தி பண்டாவினால் மகத்தானதாக்கப்பட்டமை யுத்தத்தின் பின்னைய தீர்வினதும் முதலாளித்துவ தேசிய இயக்கங்களதும் வரலாற்று முக்கியத்துவத்தினைப் பல்வேறு விதத்திலும் மீள மதிப்பீடு செய்வதாக அபிவிருத்தி கண்டது. முன்னைய காலனிகளில் நிறுவப்பட்ட முதலாளித்துவ அரசுகள் தேசிய சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தில் நிஜ முன்னேற்றங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் தொழிலாளிவர்க்கம் இந்த அரசுகளுக்கு அரசியல் ஆதரவு வழங்கக் கடமைப்பட்டுள்ளது என்ற கருத்துப்பாட்டினை பண்டா படிப்படியாக அபிவிருத்தி செய்தார்.

1971-72ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கும் சோசலிச லேபர்லீக்குக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் சாரம் இங்கேதான் உள்ளது. நாம் இதன் பின்னணியாச் சுருக்கமாக ஆராய்வோம். 1971 கோடையில் சேக் அப்துல் ரஹ்மானின் தலைமையிலான முதலாளித்துவ தேசிய அவாமி லீக் கிழக்கு பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றது. இப்பிராந்தியத்தில் வங்காளி மக்கள் வாழ்ந்து வந்ததோடு பாகிஸ்தானின் ஏனைய பாகத்தில் இருந்து ஆயிரம் மைல்களால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. அவாமி லீக்கின் வெற்றியின் பிரதிபலிப்பாக யெஹியாகான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் இராணுவ ஜூன்டா கிழக்குப் பாகிஸ்தானை ஆக்கிரமித்து கானின் இராணுவம் வங்காளி மக்களுக்கு எதிரான இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறையை நடாத்தியது. எவ்வாறெனினும் கோடை, இலையுதிர் காலங்களில் முக்திபாஹினி என்ற ஒரு கெரில்லா இயக்கம் வெற்றிகரமான எதிர்த்தாக்குதலை ஒழுங்கு செய்தது. பாகிஸ்தான் இராணுவத்தின் நெருக்கடி உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து கிழக்கு வங்காளத்தில் ஒரு தீவிரவாத ஆட்சி நிலைபெறும் என அஞ்சிய இந்திய அரசாங்கம் இராணுவ ரீதியில் தலையிட்டது. இது திடீரென இடம்பெறவில்லை. இதே சமயத்தில் இந்திய அரசாங்கம் மேற்கு வங்காளத்தில் தீவிரவாத நக்சலைட் இயக்கத்தை மூர்க்கமாக ஒடுக்கித் தள்ளுவதில் ஈடுபட்டிருந்தது.

பண்டா பெருமகிழ்ச்சியில் திழைத்தார். 1971 டிசம்பர் 6ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் எழுதியதாவது; ''பங்களாதேசுக்கு இராணுவ, பொருளாதார உதவி வழங்கும் இந்திய முதலாளித்துவ அரசாங்கத்தின் தீர்மானத்தினை நாம் விமர்சனத்துடன் ஆதரிக்கின்றோம்.''

1971 டிசம்பர் 8ம் திகதி புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகத்தினால் சுயாதீனமாகக் கடைப்பிடிக்கப்பட்ட நிலைப்பாடு சோசலிச லேபர் லீக்குக்கு நேரெதிரானதாக விளங்கியது;
''கிழக்கு வங்காளத்தின் விடுதலையாளர்கள் தாமே எனக்கூறும் இந்திய முதலாளி வர்க்கத்தின் கோரிக்கையை இந்தியத் தொழிலாளி வர்க்கம் நிராகரிக்க வேண்டும் என நாம் வேண்டுகின்றோம். கிழக்கு வங்காளத்திலான இந்திய இராணுவத் தலையீட்டின் இலக்கு ஒன்றேயொன்றுதான் என ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பிரகடனம் செய்கின்றனர். பங்களாதேஷ் போராட்டம் ஒரு புரட்சிகர அடிப்படையில் முழு வங்காளத்தையும் இணைக்கும் போராட்டமாக அபிவிருத்தியடைவதைத் தடுக்கவே இது இடம்பெற்றது. இந்திய இராணுவத் தலையீடு, புரட்சிகர வங்காளி விடுதலைப் போராட்டத்தினை சிதறடிக்கவும், வங்காளத்தில் வெகுஜனங்களின் எழுச்சியை நசுக்கவும், முதலாளி வர்க்கத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் நலனின் பேரில் வெகுஜன இயக்கத்தினை சிறைப்பிடித்து வைக்கும் பொருட்டு மோசடியான முறையில் பங்களாதேஷ் அரசாங்கத்தின் பெயரைப் பலாத்காரமாகத் தட்டிப் பறித்துக்கொண்டுள்ள ஒரு கைப்பொம்மை ஆட்சியை நிறுவவுமே தீட்டப்பட்டது. ஆதலால் நாம் இந்தியத் தொழிலாளி வர்க்கம் முக்திபாகினியின் போராட்டத்துக்கு சகல விதத்திலும் ஆதரவளிக்கும் அதேவேளையில் இந்திய முதலாளிவர்க்கத்தின் எதிர்ப்புரட்சி யுத்தம் தொடர்பாக ஒரு புரட்சிகரத் தோற்கடிப்பு நிலைப்பாட்டினை வகிக்க வேண்டும் என வேண்டுகின்றோம்.
''இந்தியத் துணைக்கண்டத்தின் தொழிலாளவர்க்கத்துக்குரிய ஒரே புரட்சிகர வேலைத்திட்டம் இதுவே.

யுத்தத்தின் பின்னைய துணைக்கண்டத்தின் முழு வரலாற்றினையும் மார்க்சிச ரீதியில் ஆய்வு செய்வதில் இருந்து தர்க்கரீதியிலும் ஈவிரக்கமற்ற முறையிலும் இது பெருக்கெடுக்கின்றது.
''பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் அதன் விசுவாசமான ஊழியர்களுக்கு இந்நாடுகளின் தேசிய முதலாளி வர்க்கத்துக்கு மோசடி ''சுதந்திரம்'' வழங்கப்பட்டதன் பின்னரான 25 வருடங்களில் இந்திய முதலாளி வர்க்கத்தினால் எந்தவொரு அடிப்படைப் பொருளாதார தேசிய அல்லது சமூகப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட முடியாது என்பது அம்பலமாக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுப் பணிகளின் எதிரில் அவர்களின் முற்றுமுழுதான வங்குரோத்து, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப்புரட்சிக் கோட்பாட்டின் மைய ஆய்வினை நிரூபித்துள்ளது.

சோசலிசப்புரட்சியின் பணியின் ஒரு பாகமாக கிராமிய ஏழை வெகுஜனங்களைத் தன்பின்னால் அணிதிரட்டிக் கொள்ளும் தொழிலாளி வர்க்கத்தினால் மட்டுமே இப்பிரச்சினையைத் தீர்க்கமுடியும் என்பதையும் நிரூபித்துள்ளது. இந்து- முஸ்லீம் முதலாளி வர்க்கத்தினதும் அத்தோடு அனைத்துலக ஸ்டாலினிசத்தினதும் ஆதரவுடன் பிரித்தாளும் கொள்கைக்கு இணங்க இந்தியத் துணைக்கண்டத்தினை துண்டாடுவது திட்டமாக விளங்கியது. கோடானுகோடி ஒடுக்கப்படும் வெகுஜனங்களுக்கு முதலாளித்துவத்தினதும், பட்டினியினதும், பஞ்சத்தினதும் துயரங்களதும் மேலாதிக்கத்தினை ஊர்ஜிதம் செய்யும் விதத்தில் இதனுள்ளே பிரமாண்டமான சமூக, தேசிய முரண்பாடுகள் நசுக்கி ஒடுக்கப்பட்டன. இந்த முரண்பாடுகள் முழு அனைத்துலக ஏகாதிபத்திய அமைப்பினது ஒரு பாகமாகவும் அதன் பெறுபேறாகவும் வளர்ச்சியடைவதோடு அவற்றைத் தொடர்ந்தும் அடக்கிவைக்க முடியாது''.

கீர்த்தியினால் 1971 டிசம்பர் 16ம் திகதி கிளிவ் சுலோட்டருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் இதனை அப்பட்டமாகப் பிரகடனம் செய்தது. ''இந்திய - பாகிஸ்தானிய யுத்தத்தை எதிர்க்காமல் வங்காளி மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் சோசலிச அடிப்படையிலான இந்தியாவின் சுயவிருப்பிலான ஒன்றிணைப்புக்கும் ஆதரவளிப்பது சாத்தியம் இல்லை., அத்தகைய ஒரு ஒன்றிணைப்புக்கு முக்கிய தடையாக உள்ள இந்திய பாகிஸ்தானிய ஆளும் வர்க்கங்களைத் தூக்கி வீசும் போராட்டம் இல்லாமல் எப்படி ஒருவர் இந்தியாவை ஒன்றிணைப்பது பற்றித் தன்னும் பேசமுடியும்?

1972 ஜனவரி 11ம் திகதி மற்றொரு கடிதத்தில் கீர்த்தி இந்திய இராணுவ வெற்றியை உற்சாகமாக அங்கீகரிக்கும் பண்டாவை கண்டனம் செய்து எச்சரித்தார்.; இந்திய இராணுவத்தைப் பற்றிய அலட்டலின் பின்னணியில் வங்காளி, பாகிஸ்தானிய, இந்திய தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர இயல்பின் தெளிவான நிராகரிப்பு உள்ளது''.

மைக் பண்டா இறுதியாக 1972 ஜனவரி 27ல் பதிலளித்தார்; யுத்தம் எதனைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது; முதலாவதாக இது பங்களாதேஷ் மக்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூரண ஆதரவுடன் நசுக்கும் பாகிஸ்தானிய முதலாளி வர்க்கத்தின் முயற்சியை பிரதிநிதித்துவம் செய்தது. ஆனால் மிகவும் முக்கியமானதும் அகதிகள் பிரச்சினையை சிருஷ்டித்ததன் மூலமும் கிழக்கு வங்காளத்தினை இராணுவ ரீதியில் ஆக்கிரமித்ததன் மூலமும் இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பில் இந்திய முதலாளி வர்க்கத்தின் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட உள்நாட்டுச் சந்தைக்கு எதிரான ஒரு திட்டவட்டமான அச்சுறுத்தலாக வளர்ச்சி கண்டது.
''ஒரே இரவில் நிலைமையில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டது. இந்தியத் தொழிலாள வர்க்கத்துக்கும், இந்திய முதலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் ஒழிந்து போகவில்லை. ஆனால் இது இந்திய நாட்டுக்கும் பாகிஸதான் பிரதிநிதித்துவம் செய்த ஏகாதிபத்தியத்துக்கும் இடையேயான மோதுதலால் தாண்டிச் செல்லப்பட்டது.''

இது உண்மையில் விசித்திரமானதாய் விளங்கியது; பண்டாவின் கூற்றுப்படி வர்க்கங்களுக்கு இடையேயான மோதுதல் இந்திய, பாகிஸ்தானிய முதலாளித்துவ அரசுகளுக்கு இடையேயான போராட்டத்துக்கு கீழ்ப்படுத்தப்பட்டது. இப்பிரகடனம் மார்க்சிசத்தின் மிக அத்தியாவசியமான அடிப்படைக் கொள்கைகளைக் காட்டிக் கொடுப்பதை பிரதிநிதித்துவம் செய்தது. தமது தேசிய எதிரி ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஜேர்மன் (அல்லது பிரான்சிய, ரூஷ்ய, பிரித்தானியா போன்ற) தேசிய இனத்தின் மோதுதலால் தொழிலாளி வர்க்கத்துக்கும் அதன் முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயான முரண்பாடுகளால் தாண்டிச் செல்லப்பட்டுவிட்டது என 1914ல் வாதிட்ட சமூக- சோவினிஸ்டுகளுக்கும், பண்டாவின் நிலைப்பாட்டிற்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் இருக்கவில்லை

பண்டா மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகப் பலதடவை வீசப்பட்ட வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தியை எச்சரித்தார்; ''உங்களது மனோபாவம் பிடிவாதமும், வளைந்து கொடுக்காததுமாகும். ஆதலால் இது யதார்த்தத்தின் பல கோணங்களையும் முரண்பாடுகளையும் விசுவாசமாகப் பிரதிபலிக்க முடியாது. அதன் காரணமாக வெகுஜனங்களுள் செல்ல ஒரு வழியைக்காண முடியாது..''
இறுதியில் பண்டாவிடம் இருந்து வந்த கடிதம் ஒரு பெரிதும் பரிதாபமான குறிப்புடன் முடிவுற்றது.; ''இவை அனைத்தில் இருந்தும் பங்களாதேசில் இந்தியப்படைகளின் தொடர்ச்சியான பிரசன்னத்தையோ அல்லது கெரில்லாக்களை ரஹ்மான் நிராயுதபாணியாக்குவதையோ நாம் ஆதரிக்கின்றோம் என்ற முடிவுக்கு வரவேண்டாம். நாம் அதை இன்றும் எதிர்க்கின்றோம். அன்றும் எதிர்த்துள்ளோம்.''

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினுள்ளே சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சி

கீர்த்தியின் விமர்சனங்கள் அன்று வெளிச்சத்தைக் காணாததோடு நா.அ.அ.கு அதற்குப் பெரும் நஷ் டஈடு கொடுக்கநேரிட்டது. தொழிலாளர் புரட்சிக்கட்சி வெகுவேகமாக வலதுபக்கம் அடிபட்டுச் சென்றது. றொடீசியா, ஈராக், லிபியா அல்லது லெபனான் எங்கும் சரி முதலாளித்துவ தேசியவாதிகளின் அரசியலைக் காப்பதிலும், நியாயப்படுத்துவதிலும் மேலும் மேலும் வெட்கக்கேடான முறையில் தொ.பு.க. தன்னை அர்ப்பணித்துக் கொண்டது. இதேசமயத்தில் பண்டா தேசிய முதலாளி வர்க்கத்தின் அரச நிர்மாண சாதனைகள் எனப்பட்டதன் தீவிர ஆதரவாளரானார். இது உண்மையில் பயங்கரமான அரசியல் விளைவுகளைக் கொணர்ந்தது.

1979ல் கொலையாளி சுகார்ட்டோ தலைமையிலான இந்தோனேசிய ஜூன்டா கிழக்கு ரீமோர் சுதந்திரப் பிரகடனத்துக்கு படைகளை அனுப்பியும் பல்லாயிரக்கணக்கானோரை படுகொலை செய்தும் பதிலளித்தது. கிழக்கு ரீமோர் சுதேசிகளின் பிரிந்து செல்லும் உரிமையைப் பேணிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அவுஸ்திரேலிய கிளையான சோசலிச லேபர்லீக்குக்கு எதிராக பண்டா, சுகார்ட்டோ இந்தோனேசிய தேசிய இயக்கத்தின் மாபெரும் வெற்றிகளை அதாவது இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களின் ஐக்கியத்தை பேணுகின்றார் என்ற அடிப்படையில் கிழக்கு ரீமோர் ஒடுக்கு முறைகளை நியாயப்படுத்தினார்.

1978-1982க்கும் இடையே ரொழிலாளர் புரட்சிக்கட்சி தொழிலாளர் வர்க்கத்தினை பாலஸ்தீன விடுதலை இயக்கம், முகாபே, என்கோமாவின் தேசபக்த முன்னணி போன்ற முதலாளித்துவ தேசிய இயக்கங்களுக்கும் லிபியா, ஈரான், ஈராக் போன்ற முதலாளித்துவ ஆட்சிகளுக்கும் கீழ்ப்படுத்தியதன் மூலம் ட்ரொட்ஸ்கிச அடிப்படைக் கொள்க்ைகளைப் படிப்படியாகக் காட்டிக்கொடுத்தது.
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிலைப்பாடு, 1982 டிசம்பர் 31ம் திகதி ஜக் பார்ண்சின் ஒரு பேச்சில் மிகவும் தெளிவான விதத்தில் உச்சரிக்கப்பட்ட பப்லோவாதிகளின் நிலைப்பாட்டைப் பிரதிபலித்தது. அவர் கூறியதாவது

''நிரந்தரப்புரட்சி ஒரு சரியான அனுமானமோ அல்லது போதுமான ஒன்றோ அல்ல. பிரச்சினையைத் தீர்ப்பது ஒருபுறம் இருக்க பிரச்சினை எதுவென காட்டி அதை நெருங்குவதாயும் இல்லை. எனது அபிப்பிராயத்தின்படி நிரந்தரப்புரட்சி சரியில்லாததோடு எமது வேலைத்திட்டத்திட்டத்தின் பொது வார்த்தைகளில் பயனற்றதுமாகும் எனச் சுட்டிக்காட்டி அதைக் கைவிடுவதன் மூலம் நாம் மேலும் நன்மை பெறுவோம்.''

பார்ண்சின் பதிலீடு என்ன? ''நாம் எம்மை FSLN உடனும், நியூஜூவல் இயக்கத்துடனும், கியூபன் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் சேர்ந்த ஒரு பொது உலக மார்க்சிச இயக்கத்தின் பாகமாகக் கொள்கின்றோம்.''
பார்ண்சின் பேச்சு எமது மனதில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பயணப்பாதையைப் பற்றி எதுவித சந்தேகத்துக்கும் இடம்வைக்காததோடு 1984 பெப்ரவரி 11ம் திகதி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு நாம் சமர்ப்பித்த அறிக்கையில் எமது ஆய்வின் கணிசமான பகுதியை பார்ண்சின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்ய அர்ப்பணித்தோம். இது எவ்வாறெனினும், பண்டாவை கோபாவேஷம் கொள்ளச் செய்தது. அவர் ஆத்திரத்துடன் கூறியதாவது; ''நீங்கள் பார்ண்சுடன் தொடங்கி தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் முடிக்கிறீர்கள்''

உண்மையில் அது அப்படியே விளங்கியது.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கூட்டத் தொடருக்கு அழைக்கப்படாததோடு இன்னுமோர் 22 மாதங்களுக்கு அவர்கள் எனது விமர்சனத்தை அறிந்துகொண்டும் இருக்கவில்லை. ஆனால் கீர்த்தி அதில் கலந்துகொண்டிருப்பின் அவர் இந்த அறிக்கைக்கு உறுதியான அங்கீகாரத்தை வழங்கியிருப்பார் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உள்ளேயான போராட்டம் ஒரு புறநிலை முக்கியத்துவம் வாய்ந்தது. சந்தர்ப்பவாதிகளால் மகோன்னதமானவையாகக் காட்டப்பட்ட முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் சரிவினை முன்னணிக்குக் கொணர்ந்த உலக நிலமையிலான ஆழமான மாற்றங்களை இது எதிர்பார்த்திருந்தது.

தேசிய விடுதலையுடனான அனுபவங்களின் சாராம்ச சுருக்கம்

யுத்தத்தின் பின்னைய காலப்பகுதி பற்றிய எந்தவொரு புறநிலை ரீதியான ஆய்வும் முதலாளித்துவ தேசியவாதத்தின் தெளிவான தோல்வியையும் அதன் ஆதரவுடன் நிறுவப்பட்ட ''சுதந்திர அரசுகளின்'' போலிப் பண்பையும் பிரத்தியட்சமாக்குகின்றது.
அந்த நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வேடதாரி கம்யூனிஸ்ட் பண்புகொண்ட இயக்கங்களால் நடத்தப்பட்ட போதிலும் இறுதி விளைவு ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிவதாகவே விளங்கியது.

சீனா இன்று முற்றிலும் முதலாளித்துவப் பாதையில் பயணம் செய்கின்றது. முப்பது ஆண்டுகளாக பிரான்சிய, அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த வியட்நாம் உலகிலேயே மலிவான ஊழியம் கிடைக்கும் நாடாகத் தன்னை விளம்பரம் செய்யும் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

அனைத்துலகக் குழுவின் உள்ளேயான பிளவு ''தேசிய விடுதலை'' இயக்கங்களின் முழு வரலாற்று முக்கியத்துவத்தினையும், தொழிலாளி வர்க்கத்துடனான அவற்றின் உறவையும், சோசலிசப் புரட்சி முன்னோக்கினையும் தீவிரமாக மீளாய்வு செய்வதைச் சாத்தியமாக்கியது. சிறப்பாகக் கீர்த்தி கொழும்பு அரசாங்கத்துக்கும் இலங்கையின் வடக்கேயுள்ள விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போராட்டத்தின் அரசியல் அபிவிருத்தியை ஆய்வு செய்கையில் 1985-87 இடையேயான இந்தத் தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய கீர்த்தியின் மதிப்பீடு அதிகரித்த விமர்சனத் தன்மை மிக்கதாகியது என நான் குறிப்பிட்டாக வேண்டும்.

வரலாற்று அறிக்கையின் பொருட்டும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் போக்கின் பரிணாமத்தை புரிந்து கொள்ளவும் அனைத்துலகக் குழுவினுள்ளே தொழிலாளர் புரட்சிக்கட்சியின் நிஜ துரோகப் பாத்திரத்தையும் இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீதான அதன் தாக்கத்தினையும் திரும்பவும் ஒருதடவை இங்கு வலியுறுத்துவது அவசியம். தமிழ் தேசிய இயக்கம் தொடர்பாக கீர்த்தியும் அவரின் சக தலைவர்களும் ஆழமாக முரண்பட்டுக்கொண்ட ஒரு அரசியல் நிலைப்பாட்டினை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மீது திணிக்க 1972- 1979 இடையே தொழிலாளர் புரட்சிக்கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒழுங்கு விதிகளைப் பயன்படுத்தியது. அதாவது யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில் நிறுவப்பட்ட முதலாளித்துவ அரசுகள் ஒரு முற்போக்கு வரலாற்றுத் தோற்றப்பாட்டினைக் கொண்டவை என்ற பண்டாவின் கருத்தின் அடிப்படையில் தொழிலாளர் புரட்சிக் கட்சி தமிழ் வெகுஜனங்களின் போராட்டத்தினை அடியோடு எதிர்த்தது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நிறுவப்பட்ட முதலாளித்துவ அரசுகளின் நியாயமான தன்மையை முற்றிலும் பிற்போக்கான முறையில் பேணுவதை அடிப்படையாகக் கொண்ட தமிழ் விடுதலை இயக்கம் தொடர்பான அவர்களின் எதிர்ப்பு, ஒரு வலதுசாரிப் பண்பினைக் கொண்டிருந்தது. பின்னர் 1979ல் தொழிலாளர் புரட்சிக்கட்சி தமிழ் பிரச்சினை தொடர்பான அதன் நிலைப்பாட்டைத் திடீரென மாற்றிக் கொண்டது. பீ. எல். ஓ. மற்றும் முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் தொடர்பான அதன் மனப்பாங்கிற்கு அமைய இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆர்வம் மிகுந்த, விமர்சனமற்ற ஆதரவாளராகியது.
பிளவின் பின்னரே யுத்தத்தின் பின்னைய முழுக் காலப்பகுதியினதும் வளம் மிக்க வரலாற்று அனுபவங்களினதும் கட்டுமானத்தினுள் தமிழ் தேசிய இனத்தின் பிரச்சினைகளை மீள பரிசீலனை செய்வதும், நிரந்தரப்புரட்சிக் கோட்பாட்டினைத் தீர்க்கமான முறையில் பிரயோகிப்பதும் சாத்தியமாகியது. பல தடவைகள் கீர்த்தி கூறியது போன்று தொழிலாளர் புரட்சிக் கட்சி சந்தர்ப்பவாதிகள் ''நீரைக் கலக்கி சேறாக்கியதோடு'' இன்று அனைத்துலகக் குழு உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தினைத் தெளிவுபடுத்துவதன் மூலம் மார்க்சிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீள வலியுறுத்த நேரிட்டது.

இலங்கையில் உள்ள சகல சந்தர்ப்பவாதப் போக்குகளுக்கும் எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை சலிக்காது பேணியதோடு வடக்கில் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கான உரிமையைக் காப்பாற்றியது. தமிழருக்கு எதிரான கொழும்பு சிங்கள சோவினிச ஆட்சியாளர்களின் இரத்தம் தோய்ந்த யுத்தத்தினை உறுதியாக எதிர்த்தது. எவ்வாறெனினும் சிங்கள சோவினிஸ்டுக்களுக்கும் அவர்களின் பிற்போக்கு முதலாளித்துவ அரசுக்கும் சிறிதும் பணிந்து போகாத புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் எதிர்ப்புக்கிடையேயும், கீர்த்தி தமது வாழ்க்கையின் இறுதி மாதங்களில் வரலாற்று ரீதியில் ஒடுக்கப்பட்ட நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் மூலோபாயப் பணியினை வெறும் ''தேசிய விடுதலை'', ''சுயநிர்ணயம்'' சுலோகங்களை விமர்சனமின்றிக் கூப்பாடு போடுவதன் அடிப்படையில் உரியமுறையில் வரையறுத்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்துகொண்டிருந்தார்.

1987 ஆகஸ்ட் முற்பகுதியில் கைச்சாத்தான இந்திய- இலங்கை உடன்படிக்கை வேறெதனையும் விட தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் வங்குரோத்தினை அம்பலப்படுத்தியது. கீர்த்தி இந்த அபிவிருத்தியினை ஒரு கடிதத்தில் பொறித்ததோடு அது அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தின் மேலாய அபிவிருத்திக்கான அடிப்படையை வழங்கியது.
1987 செப்டம்பர் 11ம் திகதி அவர் எனக்கு எழுதியதாவது; ''இன்றைய நிலைமை, குறிப்பாக இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் தேசிய விடுதலை இயக்கங்கள் தொடர்பான புரட்சிகரத் தொழிலாளர்வர்க்கத்தின் வரலாற்று அனுபவத்தினை தொகுத்துரைக்கும்படி வேண்டுகின்றது. லெனினின் ஆய்வுகளின் அனுபவங்களில் இருந்து நாம் அநேகவற்றைப் பெறுவது நிச்சயம். ஆனால் லெனின் மூன்றாம் அகிலத்திற்கான தமது ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய வேளையில்தான் காலனித்துவ மக்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமது தேசியப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்கள் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். ஆனால் இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் சிறப்பாக கீழைத்தேசங்களில் ஏற்பட்ட அநேக மாற்றங்களை மங்கலாக்கும் விதத்தில் விமர்சனமற்ற முறையில் இதனைப் பயன்படுத்த முடியாது. கீழைத்தேச நாடுகளிலும் கூட தேசியவாதம் ஒரு சீரழிவுக்கு உள்ளாகியது.

ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அரைக்காலனித்துவ முதலாளி வர்க்கத்தின் தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதன் அவசியத்தினை பிரகடனம் செய்வதன் மூலம் திரிபுவாதம் இச்சீரழிவுக்கு இயைந்து போயிற்று. குறைந்தது 1970களின் ஆரம்பகாலங்களில் இருந்து பண்டா அனைத்துலகக் குழுவின் உள்ளே இப்போக்கின் பேச்சாளராக விளங்கினார். ஸ்டாலினிஸ்டுகளும், திரிபுவாதிகளும் தொழிலாளி வர்க்கத்தினை இத் தேசியவாதத்துக்கு கீழ்ப்படிந்து போகச் செய்தமையானது பல சிறிய தேசியினங்களைச் சேர்ந்த ஒடுக்கப்படும் வெகுஜனங்களையும் தொழிலாளி வர்க்கத்தில் இருந்து பிரித்து வைக்கவும், சுதந்திரத்துக்கான சிறிய தேசிய இனங்களின் தேசிய இயக்கங்களின் அபிவிருத்திக்கும் ஒரு நேரடிப்பாத்திரம் வகித்தது.

முதலாளித்துவ அரசுக்கு எதிராக தேசியவாதத்தின் பதாகையின் கீழ் தொடுக்கப்பட்ட ஜனநாயக சுதந்திரத்துக்கான போராட்டங்கள் ஒரு திட்டவட்டமான முற்போக்கு உள்ளடக்கத்தினைக் கொண்டிருந்த போதிலும் தேசியவாதம் தேசிய விடுதலையை அடைவதற்கோ அல்லது ஒடுக்குமுறையாளர்களை துக்கி வீசுவதற்கு அவசியமான சக்திகளை ஐக்கியப்படுத்துவதற்கோ இலாயக்கற்றது என்பதை நிரூபித்தது. அத்தோடு உண்மையில் தீர்க்கமான கட்டத்தில் ஜனநாயகப்புரட்சியின் சகல சக்திகளுக்கும் தலைமைதாங்க இலாயக்கான ஒரே சக்தியான தொழிலாளி வர்க்கத்தினை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு தடையாகவும் தோன்றியது.

கீர்த்தியின் வாழ்நாளில் அனைத்துலகக் குழுவின் கடைசிக் கூட்டம் 1983 நவம்பரில் நடைபெற்றதோடு அது தமிழ்தேசிய பிரிவினை முதலாளித்துவ வேலைத்திட்டத்துக்கு எதிராக ஒரு தமிழீழம், சீறீலங்கா ஐக்கிய சோசலிச அரசுகள் முன்னோக்கு அறிக்கையை வெளியிட்டது.

அனைத்துலகவாத முன்னோக்கு

கீர்த்தியின் மரணத்தின் ஐந்து ஆண்டுகளின் பின்னர் இன்று யுத்தத்தின் பின்னைய காலப்பகுதிபற்றிய ஒரு ஐந்தொகையை வரையும் வேலையை பூர்த்தி செய்வதும் முதலாளித்துவ தேசியவிடுதலை இயக்கங்களின் முழு அனுபவங்களையும் மதிப்பீடு செய்வதும் அவசியமாகியுள்ளது.
சகல ஒடுக்கப்படும் மக்களதும் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் அதேசமயத்தில் 'தேசிய விடுதலை', 'சுயநிர்ணயம்' பற்றிய சுலோகங்கள் எப்படி நடைமுறையில் முதலாளித்துவத் தேசியவாதிகளால் எதுவிதமான நிஜ ஜனநாயக அல்லது முற்போக்கு சமூக உள்ளடக்கமும் இல்லாத பிரிவினை, இனவாதப் பிற்போக்கு வேலைத்திட்டங்களுக்கான நியாயப்படுத்தல்களுக்காகப் பரிணாமம் செய்யப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்துவது மார்க்சிஸ்டுகளின் கடமையாகும்.

மார்க்சிஸ்டுகள் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஒரு முற்போக்கு உள்ளடக்கம் கற்பிக்க காரணம் என்னவெனில் அவை ஏகாதிபத்திய மேலாதிக்கத்தில் இருந்தும் பின்தங்கிய நிலைமை, கோத்திரம், ஜாதி வேறுபாடுகள் ஆகிய மரபுரிமைகளில் இருந்தும் வெற்றிபெறுவதோடு ஏதோவொரு விதத்தில் இனங்காணப்படுவதே. 'இந்தியா'வும் 'சீனா'வும் இனரீதியிலோ அல்லது மொழிரீதியிலோ ஐக்கியப்படுத்தப்பட்ட தேசியங்கள் அல்ல. ஆனால் அவை நிஜ பொருளாதார, கலாச்சார முன்னேற்றத்துக்கான சாத்தியங்களைத் திறப்பதன் மூலம் ஒரு பரந்த பிராந்தியம் பூராவும் மக்களை முற்போக்கான முறையில் ஒன்றிணைப்பதைக் குறிக்கும் அரசியல் கருத்துப்பாடுகளாகும்.

'தேசியவிடுதலையின்'' வீரர்களாக இன்று உரிமை கொண்டாடும் எந்தவொரு இயக்கத்தினுள்ளும் அந்த உள்ளடக்கத்தினைக் கண்டுகொள்ள முடியாதுள்ளது. எவ்வாறெனினும் வேறுபட்ட இயக்கங்களின் அகநிலை இலக்குகள் என்னவாக இருந்தபோதிலும் இந்த உலகளாவிய பொருளாதார இணைப்புச் சகாப்தத்திலே புதிய தேசிய அரசுகளை ஸ்தாபிதம் செய்வதன் மூலம் மனித இனத்தின் சுதந்திரத்தினை முன்னெடுத்துச் செல்ல முடியாது. வேறுபட்ட தேசிய, மொழி, மத அல்லது இன அடையாளங்களைக் கொண்டுள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் சிறப்புப் பிராந்திய அடைப்புக்களை நிர்மாணிப்பதானது யதார்த்தமாகுமிடத்து அது ஒரு காட்டுமிராண்டித்தனத்தினுள் தள்ளுவதைக் குறிக்கும்.

இந்தப் பிரச்சனை மீது ட்ரொட்ஸ்கி மிகவும் தெளிவாக வாதிட்டார். அவரது ஜீவிய காலத்தில் கூட சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை இன்னமும் ஒரு முற்போக்கு உள்ளடக்கத்தைக் கொண்டிருந்த காலத்தில்- இது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தின் ஐக்கியத்தினை ஸ்தாபிதம் செய்வதற்கு மேலாக நின்றுகொண்டிருக்கவில்லை. சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை அன்றோ அல்லது இன்றோ மார்க்சிசம் தேசியவாதத்துடன் சமரசம் செய்துகொள்வதைக் குறிக்கவில்லை. உதாரணமாக ஸ்கொட்லைன் சுயநிர்ணய பிரச்சினை மீதான ட்ரொட்ஸ்கியின் ஆக்கங்கள் இந்தவிதத்தில் மிகவும் ஆலோசனைப் பண்பு கொண்டவை.
நான் இந்த விரிவுரையின் அளவினைத் தெரிவு செய்வதற்கு தலைவர் அவர்கள் தமது அறிமுக உரையில் குறிப்பிட்டதுபோல், கீர்த்தியின் பணியின் சிறப்பினை அவரின் புத்திஜீவி, அரசியல் பணிகள் அடிப்படையாகக் கொண்டிருந்த புரட்சிகர அனைத்துலகவாதத்தின் கோட்பாட்டுப் பாரம்பரியங்களை ஒரு வரலாற்றுரீதியில் மீளாய்வு செய்வதன் அடிப்படையிலேயே சாத்தியமாகும் என நம்பியதேயாகும் என இந்தப் பெரிதும் நீண்ட குறிப்பினை ஒரு முடிவுக்கு கொணர்ந்து விளக்கி வைக்க என்னை அனுமதியுங்கள்.

குறிப்புகள்:

1) லிமீஷீஸீ ஜிக்ஷீஷீtsளீஹ் ஜிலீமீ ஜீமீக்ஷீனீணீஸீமீஸீt ஸிமீஸ்ஷீறீutவீஷீஸீ

ஸிமீsuறீts ணீஸீபீ றிக்ஷீஷீsஜீமீநீts (லிஷீஸீபீஷீஸீ, ழிமீஷ் சீஷீக்ஷீளீ 1975. பக்கம் 237)

2) லிமீஸீவீஸீ ஷிtக்ஷீuரீரீறீமீ யீஷீக்ஷீ ணீ ஸிமீஸ்ஷீறீutவீஷீஸீணீக்ஷீஹ்

மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ (ழிமீஷ் சீஷீக்ஷீளீ 1984.பக்கம் 370- 71)

3)லிமீஷீஸீ ஜிக்ஷீஷீtsளீஹ் ளிஸீ சிலீவீஸீணீ, 1934-1935.    
(New York 1976.
பக்கம்-161)

4) கீக்ஷீவீtவீஸீரீs ஷீயீ லிமீஷீஸீ ஜிக்ஷீஷீtsளீஹ் (1934-1935)

5) கீக்ஷீவீtவீஸீரீs ஷீயீ லிமீஷீஸீ ஜிக்ஷீஷீtsளீஹ் (1933-1934)

6) கீக்ஷீவீtவீஸீரீs ஷீயீ லிமீஷீஸீ ஜிக்ஷீஷீtsளீஹ் (1939-1340)

7) ஞிஷீநீuனீமீஸீts ஷீயீ tலீமீ திஷீuக்ஷீtலீ மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ (1933-1940)