wsws : Tamil : History
Download the Font

 

அத்தியாயம் 3

குழுக்களும் உட்பிரிவுகளின் உருவாக்கமும்

Use this version to print | Send feedback

கட்சியில் இருக்கும் குழுக்கள், உட்பிரிவுகள் பற்றிய பிரச்சினை விவாதத்தில் முக்கிய பங்கை கொண்டுள்ளன. இயல்பாக இது கொண்டுள்ள முக்கியத்துவத்தினாலும், மிகவும் தீவிரமான தன்மையாலும், மிகத் தெளிவான முறையில் இதை அணுக வேண்டியுள்ளது. ஆயினும் கூட இப்பிரச்சினை மிக தவறான முறையில் எழுப்பப்பட்டுள்ளது. நாட்டிலேயே நம் கட்சி ஒன்றுதான் உள்ளது, சர்வாதிகாரகாலத்தில் வேறுவிதமாகவும் இருக்கமுடியாது. தொழிலாள வர்க்கம், விவசாயிகள், அரசாங்க அமைப்பு, அதன் உறுப்பினர் ஆகியவற்றின் பலவித தேவைகள் நம் கட்சியின் மீது வினைபுரிகின்றன. இதன் ஊடகத்தின் மூலம் அவை அரசியல் வெளிப்பாட்டைக்காண முற்படுகின்றன. நம்முடைய சகாப்தத்தில் இயல்பாக உள்ள இடர்பாடுகளும் முரண்பாடுகளும், பாட்டாளிவர்க்கத்தின் பல்வேறு அடுக்குகளில் காணப்படும் தற்காலிக முரண்பட்டதன்மை, அல்லது முழுப்பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் கொண்டுள்ள முரண்பாடுகள் ஆகியவை தொழிலாளர், விவசாயிகள் குழுக்கள், அரசாங்க அமைப்புகள் மற்றும் மாணவ இளைஞர் ஊடகம் மூலம் கட்சிக்குள் அழுத்தத்தை கொடுக்கின்றன. கருத்துக்களில் சிறு வேறுபாடுகள், பார்வையில் மாறுபட்ட தன்மை என்ற தற்காலிக வேறுபாடுகள் கூட ஒரு மாறுபட்ட சமூக நலன்களுக்காக தொலைவிலிருந்து அழுத்தத்தை வெளிப்படுத்தக்கூடும்; குறிப்பிட்ட நிலைமைகளில் இவை உறுதியான குழுக்களாக மாற்றம் பெறக் கூடும்; பிந்தையவை உடனடியாகவோ பிந்தியோ ஒழுங்கமைக்கப்பட்ட உட்பிரிவுகளின் வடிவமைப்பைப் பெற்று தங்களைக் கட்சியின் எஞ்சிய பிரிவுக்கு தமது எதிர்ப்புத்தன்மையைக் காட்டிக் கொண்டு, அதன் விளைவாக கூடுதலான வெளிஅழுத்தத்திற்கு உள்ளாகலாம். இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வாழ்வின் திசையை ஒருமுனைப்படுத்த கடமைப்பட்டுள்ள சகாப்தத்தில் உட்கட்சி குழுக்களின் இயங்கியலாகும்.

இதில் இருந்து தொடர்வது என்ன? உட்பிரிவுகள் (கன்னைகள்) தேவையற்றவை என்றால், நிரந்தரமான குழுக்கள் ஏதும் இருக்கக் கூடாது; நிரந்தரக்குழுக்கள் வேண்டாம் என்றால், தற்காலிகக் குழுக்களும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்; இறுதியாக தற்காலிகக் குழுக்களும் வேண்டாம் என்றால் கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடாது; ஏனென்றால் எங்கெல்லாம் இருவிதக் கருத்துக்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் மக்கள் தவிர்க்க முடியாமல் குழுக்களாக கூடுகின்றனர். ஆனால் அரை மில்லியன் மக்களை கொண்டுள்ள கட்சியில், மிகச் சிக்கல் வாய்ந்த, வேதனை நிறைந்த சூழ்நிலையில் நாட்டை முன்னடத்திக் கொண்டிருக்கும் கட்சியில், எவ்வாறு கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியும்?

இதுதான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அடித்தளமாக கொண்டுள்ள நிலைமையின் கட்சியில் உள்ள அடிப்படை முரண்பாடாகும். இந்த முரண்பாடு முற்றிலும் வழமையான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே தவிர்க்கப்படமுடியாததாகும். கடந்த காலத்தில் இருந்தது போலவே இருக்கும் என்ற உத்தரவாதத்தில் மத்தியக் குழுவின் தீர்மானத்திற்கு வாக்களித்த "பழைய பாதையின்" ஆதரவாளர்கள் பின்வருமாறு காரணம் காட்ட முயலுகின்றனர்: 'பாருங்கள், அமைப்பின் மூடி சிறிதளவுகூட திறக்கப்படக்கூடவில்லை, ஏற்கனவே பலவிதக் குழுக்களை கொண்ட அனைத்துவிதப் போக்குகளும் கட்சியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளுகின்றன, இந்த மூடி, நன்கு மூடப்பட்டு பாத்திரம் நன்கு மூடி முத்திரையிடப்பட வேண்டும்' என்கின்றனர். "உட்பிரிவுவாதத்திற்கு (கன்னைவாதத்திற்கு) எதிராக" என்ற முறையில் டஜன் கணக்கான உரைகளும், கட்டுரைகளும் வெளிவருவது இந்த குறுகிய கண்ணோட்டத்தினால்தான். இதயத்தின் மையத்தானத்துள், அமைப்பினர் மத்தியக்குழுவின் தீர்மானம் ஒரு அரசியல் தவறு, ஒன்றில் அதை அவர்கள் தீங்கில்லாதவகையில் திருத்திக்கொள்ளவேண்டும், அல்லது இது அமைப்பினரின் ஏமாற்றுத்திட்டம் பயன்படுத்தப்பட்டாக வேண்டும் என்று நம்புகின்றனர். என்னுடைய கருத்தில் இவர்கள் பெரும் தவறாக எண்ணியுள்ளனர். கட்சிக்குள் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் ஒரு தந்திரோபாயம் இருந்தால், அது புதியபார்வையை மதிப்புடன் ஏற்பதாகப் போலியாகக் கூறிக் கொண்டு, பழைய பார்வையை தொடரவேண்டும் என்தை பின்பற்றப்படுவதுதான்.

கருத்துக்கள் பற்றிய முரண்பாடுகளிலும் வேறுபாடுகளிலும்தான் கட்சியின் பொதுக்கருத்து உருவாக்கப்படுதல் தவிர்க்கமுடியாமல் நடைபெறுகிறது. இந்த வழிவகையை அமைப்பினுள் குறுக்கி பின் அதன் உழைப்பின் பலன்களுக்கு கோஷங்கள், உத்தரவுகள் போன்றவற்றைக் கொடுத்தல் என்பவற்றினால் பாதுகாத்துக்கொள்வது கட்சிக்கு தத்துவார்த்தரீதியிலும், அரசியல்ரீதியிலும் மலட்டுத்தன்மையைக் கொடுத்துவிடும். கட்சி முழுவதுமே தீர்மானங்களை இயற்றுதல், ஏற்றதில் பங்குபெறச் செய்தல் என்பது தற்காலிக தத்துவார்த்த தனிக்குழுக்களை வளர்ப்பதற்கு ஒப்பாகிவிடும்; இது அவற்றை நீடித்திருக்கக் கூடிய குழுக்கள், உட்பிரிவுகள் ஆக மாற்றிவிடும் ஆபத்துகூட உள்ளது. அவ்வாறானால் என்ன செய்வது? இதில் இருந்து தப்பிப்பதற்கு வழியே இல்லையா? "அமைதிக்கும்", உட்பிரிவுகளாக உடைவதற்கும் இடையே இடைப்பட்ட வழிவகை ஏதும் இல்லையா. ஒன்று உள்ளது; தலைமையின் முழுப்பணியே, ஒவ்வொரு முறையும் தேவையான போதும் அதிலும் முக்கிய திருப்புமுனைக் காலங்களில், இந்த வழிவகையை அக்கணத்தின் உண்மையான நிலைமைக்கு பொருந்தும்வகையிலான வழிவகையை கண்டறிதலே ஆகும்.

அதிகாரத்துவம் பிளவுகளுக்கான மூலாதாரங்களில் ஒன்று என்பதை மத்தியக் குழுவின் தீர்மானம் தெளிவாகக் கூறியுள்ளது. அந்த உண்மை இப்பொழுது நிரூபிக்கப்படவேண்டும் என்ற தேவையே இல்லை. பழைய பாதை "முழுமையாக இயங்கும்" ஜனநாயகத்திலிருந்து உண்மையில் வெகு தொலைவில்தான் இருந்தது; ஆயினும்கூட கட்சியை சட்டவிரோதப் பிளவுகளில் இருந்து அது காப்பாற்ற முடியவில்லை; இந்த உண்மையைக் காண மறுத்தல் நகைப்பிற்குரியதுதான்!; இப்பிளவுகள் தற்காலிக அல்லது நீடித்த இயல்புடைய குழுக்களுக்கு வழிவகுத்துவிடும். இதைத் தவிர்ப்பதற்கு, கட்சியின் தலைமை அங்கங்கள் கட்சியின் பரந்த மக்கட்தொகுப்பின் குரலைக் கேட்க வேண்டும்; ஒவ்வொரு விமர்சனத்தையும் பிரிவு(கன்னை) உணர்வின் வெளிப்பாடு என்று கருதக்கூடாது; அப்படி நினைத்தால் உள்ள உறுதியுடன், கட்டுப்பாட்டுடன் இருக்கும் கம்யூனிஸ்டுகள்கூட முறையான மௌனத்தை காக்க அல்லது தம்மையே பிரிவுகளாகவே அமைத்துக்கொள்ள இட்டுச்செல்லும்.

ஆனால் இவ்வகையில் பிரச்சினையைக் காண்பது Myaznikov  [1] மற்றும் அவரைப் பின் பற்றுபவர்களை நியாயப்படுத்துவது போல் ஆகிவிடாதா? இப்படி உயர்மட்ட அதிகார அறிவு ஒலிக்கிறது. ஏன்? முதலில் நாம் இப்பொழுது எடுத்துக்காட்டிய சொற்றொடர் மத்தியக்குழுவின் தீர்மானத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பந¢¤யாகும¢. மேலும் விளக்கம் கொடுப்பது என்பது எப்படி நியாயப்படுத்துவதற்குச் சமமாகும்? இரத்த ஓட்ட பற்றாக்குறையின் விளைவுதான் ஒரு சீழ்க்கட்டி, போதிய பிராணவாயுப் போக்கு இல்லாததால் ஏற்படுகிறது என்று கூறுவது கட்டியை "நியாயப்படுத்துவது" ஆகாது; அதை மனித உடலமைப்பில் ஒரு இயல்பான பகுதி என்று கூறுவதும் ஆகாது. ஒரே முடிவு கட்டி துளைக்கப்பட்டு, தொற்றுத்தன்மை அகற்றப்பட்டு, எல்லாவற்றிற்கும் மேலாக, இரத்தத்திற்குத் தேவையான பிராணவாயு செல்வதற்கு ஒரு சன்னல் அமைக்கப்பட வேண்டும். ஆனால் "பழைய பாதையின்" மிகப் போர்க்குணமிக்க பிரிவு மத்தியக்குழுவின் தீர்மானம் தவறு என்ற முடிவிற்கு வந்துள்ளது; அதிலும் குறிப்பாக அதிகாரத்துவம் தான் பிரிவுவாதத்திற்கு(கன்னைவாதத்திற்கு) காரணம் என குற¤¢¤டுவது தவறு என்று நம்புகிறது. அது இதை வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், முறையாகத் தெரிவிக்க வேண்டாம் என்ற கருத்தினால்தான், முறை என்பது அதிகாரத்துவத்தின் இன்றியமையாத தன்மை என்பதில் முழுகியுள்ள மனப்பான்மையினால்தான் பேசாமல் உள்ளது. இப்பொழுதுள்ள சூழ்நிலையில் பிரிவுகள்(கன்னைகள்) பெரும் தீமை என்பதை மறுப்பதற்கியலாதது; தற்காலிகமாயினும், குழுவாதல் பிரிவுகள் ஆகிவிடும். அனுபவம் காட்டுகிறவாறு, குழுவாதல்களும் பிரிவுகளும்(கன்னைகளும்) தீமை பயப்பவை, அவை தோன்றுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறுவது போதுமானதல்ல. இப்பொழுதைய தேவை என்னவென்றால் இதைப் பற்றிய உறுதியான கொள்கை தேவை, சரியான போக்கு உண்மை நிலைக்கேற்ப எடுக்கப்பட வேண்டும்.

எமது கட்சியின் வரலாற்றை, புரட்சிக்காலகட்ட வரலாறு மட்டும் என்றாலும் கூடப் படிப¢பது போதுமானது, அதாவது பிளவுகளின் உருவாக்கம் ஆபத்தை நிறைந்த தன்மையைக் கொண்ட காலகட்டத்தை படித்தால் போதும். இதற்கு எதிரான போராட்டத்தை பொதுவான கண்டனங்கள் மற்றும் குழுக்களை தடுப்பதுடன் மட்டும் கட்டுப்படுத்திக்கொண்டால் போதாது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

1917 இலையுதிர் காலத்தில் கட்சியில் மிக சக்திவாய்ந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது; மிக முக்கியமான அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்ற வினா எழுந்தபோது அது தோன்றியது. நிகழ்வுகள் சீற்றமான வேகத்துடன் நடக்கையில், போராட்டத்தின் தீவிரம் கருத்து வேறுபாடுகள் உடனடியான தீவிரப் பிளவுகளை உருவாக்கும் வடிவத்தை எடுத்தது. வன்முறைமிக்க எழுச்சியின் எதிர்ப்பாளர்கள் அதை செய்யவிருப்பமில்லாமலேயே கட்சிக்கு தொடர்பற்ற கூறுபாடுகளுடன் ஒரு முகாம் அமைத்து தங்களுடைய அறிக்கைகளை கட்சிக்குவெளியிலான பதிப்புக்களில் வெளியிடுதல் போன்றவற்றைச் செய்தனர். அந்த நேரத்தில் கட்சியின் ஒற்றுமை ஒரு மயிரிழையில் நின்றது. பிளவு எவ்வாறு தவிர்க்கப்பட்டது? நிகழ்வுகள் மிகவேகமாக நடந்ததாலும் சாதகமான விளைவுகளைக் கொடுத்ததாலும்தான். நிகழ்வுகள் சில மாதங்கள் நீடித்திருந்தால் பிளவு தவிர்க்கமுடியாமல் ஏற்பட்டிருக்கும்; இன்னும் கூடுதலான வகையில், எழுச்சி தோல்வியடைந்திருந்தாலும் ஏற்பட்டிருக்கும். மத்தியக் குழுவின் பெரும்பாலோரின் உறுதியான தலைமையினால், கட்சி ஆக்கிரோஷமான தாக்குலை மேற்கொண்டு, எதிர்ப்பைக் கடந்தது அதிகாரம் வெற்றியடையப்பட்டது; எண்ணிக்கையில் அதிகம் இல்லாவிட்டாலும், பண்பில் வலுவாக இருந்த எதிர்ப்பாளர்கள் அக்டோபர் அரங்கை ஏற்றனர். பிரிவும், ஆபத்துப் பிளவும் அந்நேரத்தில் கட்சிச் சட்டங்கள் என்ற பொதுவான அடிப்படையில் தீர்க்கப்படவில்லை; புரட்சிகர நடவடிக்கையினால் கடக்கப்பட்டன.

இரண்டாம் பெரிய கருத்து வேறுபாடு ப¤ரெஸ்ட் லிடோவ்ஸ்க் (Brest Litovsk) சமாதானக் காலத்தில் எழுந்தது. புரட்சிகரப் போருக்கான ஆதரவாளர்கள் அப்பொழுது உண்மையான பிரிவாக அதன் மத்தியக்குழு போன்றவற்றைப் பெற்றிருந்தனர். ஒரு காலக்கட்டத்தில் லெனினுடைய அரசாங்கத்தைக் கைது செய்வதாக புகாரின் பற்றிய சமீபத்திய தகவலில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது பற்றி என்னால் கணிக்க முடியவில்லை. பொதுவாகக் கூறுகறையில், இது Mayne Reid [2] கதை அல்லது ஒரு கம்யூனிஸ்ட் Pinkerton [3] கதை போல்தான் தெரிகிறது. கட்சியின் வரலாறு இதைக் கருத்திற்கொளும் என்று எதிர்பார்க்கலாம். அது எப்படி இருந்தாலும், ஒரு இடது கம்யூனிஸ்ட் பிரிவு இருந்தது என்பது கட்சி ஒற்றுமைக்கு மிகத் தீவிர ஆபத்தைப் பிரதிபலித்தது. அந்நேரத்தில் பிளவைக் கொண்டுவருவது கடினமாக இருந்திராது; பெரும் தலைமை அதற்குத் தேவைப்பட்டிருக்காது ... பெரும் அறிவார்ந்த முயற்சியும் தேவையாக இருந்திராது. இடது கம்யூனிஸ்ட் பிரிவிற்கு எதிராக ஒரு ஆணை கொடுக்கப்பட்டிருந்தால் போதும். இருந்தபோதிலும்கூட, கட்சி சிக்கலான வழிவகைகளை மேற்கொண்டது: இதைப்பற்றி விவாதம் செய்தல், விளக்குதல், அனுபவத்தின்மூலம் நிரூபித்தல் மற்றும் தன் மத்தியில் ஒரு அமைப்புரீதியான உட்குழு இருந்து தற்காலிகமான அசாதாரண போக்கு பிரதிநிதித்துவப்படுத்துவதால் தான் தற்காலிமாக பதவிவிலகிவிடுவது ஆகியவற்றைக் கடைப்பிடித்தது.

இதேபோல் இராணுவ அமைப்புமுறைப் பிரச்சினையும் சற்று வலுவான, பிடிவாதத் தன்மையுடைய குழுவைத் தோற்றுவித்தது; முறையான இராணுவம், அதையொட்டி உருவாகும் மத்திய இராணுவ அமைப்பு, வல்லுனர்கள், ஏனையவை போன்றவற்றை எதிர்த்த நிலையில் அது இருந்தது. சில நேரங்களில் போராட்டங்கள் மிகத்தீவிர தன்மையைக் கொண்டிருந்தன. ஆனால் அக்டோபரில் இருந்தது போல் இங்கும் பிரச்சினை அனுபவத்தாலும், போரின்மூலமே முடிவிற்கு வந்தது. முறையான இராணுவக் கொள்கையில் சில பெரும் தவறுகள், மிகைப்படுத்தப்பட்ட செயல்கள் ஆகியவை சரி செய்யப்பட்டன; எதிர்ப்பாளர்களின் அழுத்தம் இல்லாமல் இது நடைபெற்றது; அதுவும் சேதத்திற்கு இடம் இல்லாமல் செய்யப்பட்டது; ஆனால் முறையான இராணுவத்தின் மத்திய அமைப்பிற்கு இதன் மூலம் நலன்கள் கிட்டின. எதிர்ப்பைப் பொறுத்தவரையில், சிறிது சிறிதாக அது சிதறிப்போயிற்று. அதன் முக்கிய பிரதிநிதிகளின் ஏராளமானவர்கள் இராணுவ முறையில் பங்கு பெற்றனர்; அவர்களில் பலர் முக்கியப் பதவிகளையும் கொண்டிருந்தனர்.

தெளிவாக வரையறுக்கப்பட்ட குழுக்கள் தொழிற்சங்கங்கள் பற்றிய குறிப்பிடத்தக்க விவாதங்களின்போது அமைக்கப்பட்டன. பின்னர் ஏற்பட்ட அனுபவத்தை ஒட்டி இக்காலக் கட்டத்தை முழுமையாகப் பரிசீலினை செய்து அதில் இருந்து கிடைக்கும் ஒளியைக் காட்ட முடிவதால், விவாதங்கள் முற்றிலும் தொழிற்சங்கங்களைச் சுற்றி இருந்தது என்றோ தொழிலாளர்களின் ஜனநாயகம் பற்றி இருந்தது என்றோ கூறமுடியாது: இப்பூசல்களில் வெளிவந்த கருத்துக்கள் கட்சியில் ஆழ்ந்த கவலையைக் கொடுத்தன; இதற்குக் காரணம் போர்க் கம்யூனிச பொருளாதார ஆட்சி நீடித்ததுதான். நாட்டின் முழுப் பொருளாதார அமைப்பும் ஒரு பிடியில் சிக்கியிருந்தது. எனவே தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் ஜனநாயகம் பற்றிய பங்கின் விவாதம் புதிய பொருளாதாரப் பாதைக்கான தேடுதலை சற்று மூடிமறைத்தது. இதற்கு விடை காணும் வகையில் உணவுப் பொருட்கள் பெறுதலில் இருந்த தடைகள் அகற்றப்படுதல், தானிய ஏகபோக உரிமை, மற்றும் மைய பொருளாதார நிர்வாகக் கொடுங்கோன்மையில் இருந்து சிறிது சிறிதாக அரசாங்கத் தொழிற்துறையை விடுவித்தல் என்பவை நிகழ்ந்தன. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டு தொழிற்சங்கங்கள் பற்றிய விவாதத்தை மூடிமறைத்தன; இன்னும் கூடுதலான வகையில் புதிய பொருளாதார கொள்கை ஏற்படுத்தப்பட்டவுடன் (New Economic Policy-NEP), தொழிற்சங்கங்களின் பங்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தோன்றின; சில மாதங்களுக்குப் பிறகு, தொழிற்சங்கங்கள் பற்றிய தீர்மானம் தீவிரமாக மாற்றப்பட்டு விட்டது.

மிகவும் நீடித்திருந்த குழு, சில கோணங்களில் இருந்து மிக ஆபத்தாக இருந்தது, அது "தொழிலாளர்களின் எதிர்ப்பு(Workers' Opposition)"[4] என்பதாகும். சிதைந்த முறையில் இருந்தாலும், போர் கம்யூனிசத்தில் இருந்த முரண்பாடுகள், கட்சியில் இருந்த சில தவறுகள் மற்றும் சோசலிச அமைப்பின் சில அடிப்படை இலக்குகளில் இருந்த இடர்பாடுகள் ஆகியவற்றை இது பிரதிபலித்தது. ஆனால் இதிலும்கூட நாம் வெறும் பொதுவான தடுப்பு என்பதைப் போடவில்லை. ஜனநாயகப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில், முறையான முடிவுகள் எடுக்கப்பட்டன; கட்சியில் இருந்து தேவையற்றவர்களை அகற்றுவதில் திறமையான, மிக முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; "தொழிலாளர்களின் எதிர்ப்பு" என்பதில் இருந்த குறைகூறல்கள், கோரிக்கைகளில் நியாயமான, உகந்த கருத்துக்கள் திருப்திக்குள்ளாயின. இதில் முக்கியமான விஷயம் பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றில் கட்சி எடுத்த முடிவுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள், குழுக்கள் ஆகியவை மறையவேண்டும் என்பதற்காக எடுத்த நடவடிக்கைகளினால், பத்தாம் காங்கிரஸ் முறையான வகையில் இனி பிரிவுகள் அமைத்தல் கூடாது எனத் தடுக்க முடிந்தது; அதன் முடிவுகள் செயலற்றுப் போகா என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால் அனுபவமும், நல்ல அரசியல் உணர்வும் காட்டுவதுபோல், இத்தகைய தடுப்பு புதிய கருத்தியல்ரீதியான அமைப்புரீதியான குழுக்கள் இனி தோன்றாது என்பதற்கான தீவிர உறுதிப்பாட்டை வழங்காது என்று கூறவதற்கில்லை என்பதை கூறத்தேவையில்லை. இவ்விஷயத்தில் அடிப்படை உத்தரவாதம் ஒரு சரியான தலைமை, கட்சியில் பிரதிபலிக்கும் அவசியமான கருத்துக்களை சரியான நேரத்தில் அவதானித்தல், கட்சியின் முன்னெடுப்புகளை முடக்காது ஒழுங்கமைக்கும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மை இருத்தல், விமர்சனங்களை கண்டு அச்சம் அடையாது, கட்சியை பிளவுகள் என்பவற்றால் அச்சமடையத்தேவையும் இல்லை; பயத்தின் விளைவில்தான் பெரும்பாலும் மிரட்டல்தன்மை ஏற்படுகிறது. பத்தாம் காங்கிரஸ் பிளவுகளுக்கு தடைவிதித்தல் என்ற முடிவு ஒரு துணைக் கூறுபாட்டையும் கொண்டிருந்தது; அது தானே அனைத்து உள்விவகார கஷ்டங்களுக்கும் தீர்வு கொடுக்கும் திறவுகோலாக இல்லை என்பதாகும். ஒரு கட்சியில் வளர்ச்சி, தலைமையிடத்தின் தவறுகள், அமைப்பின் பழமைவாத போக்கு, வெளிச் செல்வாக்கு போன்றவற்றில் எல்லாம் இருந்து ஒரு கட்சித்தீர்மானம் மட்டும் எம்மை குழுக்கள் மற்றும் பிளவுகள் அதிர்ச்சிகளில் இருந்து காப்பாற்றிவிடும் என்ற முடிவு படுமோசமான"அமைப்பை வழிபடும் தன்மையாக ஆகிவிடும்." அத்தகைய அணுகுமுறையே ஆழ்ந்த அதிகாரத்துவம்தான்.

இதற்கு வியத்தகு உதாரணம் நமக்கு பெட்ரோகிராட் அமைப்பின் வரலாற்றினால் கொடுக்கப்படுகிறது. இனி குழுக்களும், பிளவுகளும் கூடாது என்று தடையிட்ட பத்தாம் காங்கிரசிற்குப் பிறகு பெட்ரோகிராடில் துடிப்பான அமைப்புரீதியான போராட்டம் ஏற்பட்டு இரண்டு எதிரெதிரானபோக்குகள் உடைய குழுக்கள் ஏற்பட்டன. எடுத்த உடன் எளிமையாகச் செய்யக்கூடியது இரண்டில் ஒன்றை (குறைந்தது ஒன்றை), தீய, குற்றம் சார்ந்த, பிளவுத் தன்மையுடைய பிரிவு என்று அறிவிப்பதுதான். ஆனால், பெட்ரோகிராடால் அவ்வாறு கோரப்பட்ட இந்த வழிவகையைப் பயன்படுத்த மத்தியக் குழு உறுதியாக மறுத்துவிட்டது. இரண்டு குழுக்களுக்கும் இடைய மத்தியஸ்தர் பங்கைத் தான் ஏற்று அதில் வெற்றியும் பெற்றது; உடனடியாக இல்லை என்பது உண்மைதான்; ஆனால் அவர்களுடைய கூட்டுழைப்புக்கு மட்டுமில்லாது அமைப்பினுள் அவற்றின் வருங்கால முழுமையான கரைத்தலுக்கும் உறுதியளித்தது. இங்கு ஒரு முக்கியமான உதாரணத்தைக் காண்கிறீர்கள்; இது மனத்தில் கொள்ளப்படவேண்டும்; சில அதிகாரத்துவ மண்டை ஓடுகளில் வெளிச்சம் பரவுவதற்கு இது உதவும்.

கட்சியில் நீடித்திருந்த முக்கிய குழு ஒவ்வொன்றும், முறையாக இருந்த பிரிவுகள் உட்பட, ஏதேனும் சமூக நலன்களின் சார்பாகப் பேசும் போக்கைக் கொண்டிருந்தன என்பதை மேலே குறிப்பிட்டோம். தவறான ஒருபுறமாய்விலகல் ஒவ்வொன்றும் இத்தகைய வளர்ச்சியின் போக்கில், வர்க்கப் பகைமையின் நலன்களின் வெளிப்பாடாக ஆனது அல்லது பாட்டாளி வர்க்கத்திற்கு அரை விரோதமான வெளிப்பாடாக ஆனது. இது முதலில் அதிகாரத்துவத்திற்கு பொருந்தும். அதைக் கருத்திற் கொண்டு தேவையானதைப்பற்றிக் கூறவேண்டும். அதிகாரத்துவம் ஒரு தவறான ஒருபுறமாய்விலகல் ஆகும், ஒரு ஆரோக்கியமற் ஒருபுறமாய் விலகல் என்பது சவாலுக்குட்படாத கருத்து என்று நம்புவோமாக. அப்படி இருக்கும்போது, அது கட்சியைச் சரியான பாதையில் இருந்து, வர்க்கப் பாதையில் இருந்து வேறுவிதமாக வழிநடத்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அங்குதான் அதனது ஆபத்து துல்லியமாக உள்ளது. மிக உயர்ந்த அளவில் படிப்பினையைக் கொடுக்கும், அதே நேரத்தில் பெரும் எச்சரிக்கையையும் கொடுக்கும் உண்மை ஒன்று இங்கு உள்ளது: தற்காலிகமேயாயினும் ஒவ்வொரு கருத்து வேறுபாடும், கருத்து வேறுபாட்டின் காரணமாக விளையும் ஒவ்வொரு குழுவும் என்னதான் இருந்தாலும் பாட்டாளிவர்க்கத்திற்கு எதிரான வர்க்கங்களின் நலன்களின் வெளிப்பாடு, என்று பெரும் வலியுறுத்தலுடனும், சில சமயம் மூர்க்கத்தனமாகவும் உறுதிகூறும் தோழர்கள் இந்த அளவுகோலை அதிகாரத்துவத்திற்குப் பயன்படுத்துவதை அனுமதிப்பதில்லை.

ஆனால் இக்குறிப்பிட்ட நிகழ்வில், சமூக அளவுகோல் சரியாகவே உள்ளது; ஏனெனில் அதிகாரத்துவம் நன்கு வரையறுக்கப்பட்ட தீமையாகும்; இழிந்த முறையில், சர்ச்சைக்கிடமின்றி தீங்கை விளைவிக்கவல்ல பிழையான ஒருபுறவிலகல் போக்கினை உடையதாகும்; அதிகாரப்பூர்வமாக கண்டனத்திற்குட்படுகிறது என்றாலும், மறைந்துபோகும் போக்கிலும் இல்லை. மேலும், ஒரே அடியில் இதை அகற்றுவதும் மிகக் கடினமாகும். ஆனால் மத்தியக்குழுத் தீர்மானம் கூறுவது போல் அதிகாரத்துவம் மக்களிடமிருந்து கட்சியை பிரிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது, அதன் விளைவாக கட்சியின் வர்க்கத்தன்மையை வலுவிழக்கச் செய்யும் என்றால், அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னதாகவே ஒருவகை பாட்டாளி வர்க்கமல்லாத செல்வாக்குடன் அடையாளம் காணப்படக்கூடாது. மாறாக, கட்சியின் பாட்டாளிவர்க்கத் தன்மையைக் காக்கவேண்டும் என்னும் விருப்பு அதிகாரத்துவத்திற்கு எதிர்ப்பு என்பதைத் தவிர்க்கமுடியாமல் தோற்றுவிக்கும். இந்த தடுப்பின் திரையில் பல தவறான, விரும்பத்தகாத, தீய போக்குகளும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும். அவற்றை அவற்றின் கருத்தியலின் உள்ளடக்கத்தை மார்க்சிய ஆய்வுமுறை இல்லாது அம்பலப்படுத்த முடியாது. ஆனால் அதிகாரத்துவத்திற்கு எதிர்ப்பை, குழுமுறைக்கு ஒப்பாகக் கருதி மாற்றுச் செல்வாக்குகளின்பால் திருப்புவது என்பது அதிகாரத்துவ செல்வாக்கிற்கே ஒருவர் "வழியமைப்பது" போல் ஆகிவிடும்.

ஆயினும்கூட, கட்சி வேறுபாடுகளை விளங்கிக்கொள்வதை, விரோதமான வர்க்கங்களின் செல்வாக்கிற்கான போராட்டம் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறிவிடுவது மிக எளிமையும், கொச்சைத்தனமானதுமான வகையில் உண்மையைப் பிரிந்து கொள்ளுவது போல் ஆகும். இவ்வாறுதான் 1920ம் ஆண்டு போலந்துப் படையெடுப்பு இரண்டு வித கருத்து நீரோட்டங்களை வெளிப்படுத்தியது; ஒன்றில் மிகத் தீவிரமான கொள்கை வேண்டும் என்று கூறப்பட்டது; மற்றொன்று நிதானத்துடன் செல்ல வேண்டும் என்றது. இங்கு மாறுபட்ட வர்க்கப் போக்குகள் உள்ளனவா? அப்படி உறுதியுடன் எவரும் கூறுவர் என்று நான் நம்பவில்லை. இருக்கும் நிலைமை பற்றி, சக்திகளின் தன்மை பற்றி, வழிவகைகள் பற்றி மதிப்பீட்டில் வேறுபாடுகள் இருந்தன என்றுதான் கூறவேண்டும். ஆனால் மதிப்பீட்டின் அடிப்படை அளவுகோல் இரு பிரிவினருக்கும் ஓன்றாகத்தான் இருந்தது.

கட்சி ஒரே பிரச்சினையை வெவ்வேறு வகைகளில் தீர்க்க முடியும் என்பது பலமுறையும் நிகழ்கிறது. அப்பொழுது எந்த வகை மேம்பட்டது, எது கூடுதலான விரைவானது, கூடுதலான சிக்கனத்தன்மை உடையது என்பதில் வேறுபாடுகள் எழக்கூடும். இந்த வேறுபாடுகள் பிரச்சினையைப் பொறுத்து கட்சியின் கணிசமான உறுப்பினர்களிடமும் இருக்கலாம்; அதன் பொருள் இரண்டு வர்க்கப் போக்குகள் உள்ளன என்று ஆகிவிடாது.

வருங்காலத்தில் ஒன்று என்றில்லாமல் டஜன் கணக்கில் வேறுபாடுகளை நாம் காண்போம் என்பதில் ஐயமில்லை; ஏனெனில் நம்முடைய பாதை கடினமானது, சோசலிச அமைப்பின் அரசியல் பணிகளும் பொருளாதாரப் பிரச்சினைகளும் தவிர்க்கமுடியாமல் கருத்து வேறுபாடுகளையும், தற்காலிக கருத்து வேறுபட்ட குழுக்களையும் ஏற்படுத்தும். அனைத்துவிதக் கருத்து வேறுபாட்டின் நுட்பவேறுபாடுகளையும் மார்க்சிய ஆய்வுமுறையில் அரசியல் சரிபார்த்தல் என்பதுதான் கட்சி எடுக்கக்கூடிய தடுப்பு நடவடிக்கைகளில் எப்பொழுதும் மிகப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த எடுத்துக்காட்டும் வகையிலான மார்க்சியப் ஆய்வு, மேற்கொள்ள வேண்டியதுதான் என்றாலும், அதிகாரத்துவத்தின் தற்காப்பு ஆயுதமான ஒரேவிதச் சொற்றொடர்களைப் பயன்படுத்துதல் என்பதற்கு இடம் அளித்துவிடக்கூடாது. அதிகாரத்துவத்திற்கு எதிராக பலவித அரசியல் சிந்தனைமுறையில் தோன்றும் எழுச்சிகள் அனைத்தும் நல்ல சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் அந்நிய மற்றும் தீமைபயக்கும் கூறுபாடுகள் அகற்றப்பட்டு; அப்பொழுது இன்னும் கவனமான முறையில் "புதிய பாதையில்'' நாம் நுழைய முடியும். ஆனால் கட்சி அமைப்பின் மனப்போக்கு, விருப்பங்கள் ஆகியவற்றில் தீவிர மாற்றம் இல்லாவிட்டால் இது நடக்காது. மாறாக, எந்தப் புதிய தாக்குதலுக்கும் பிந்தையது இப்பொழுது "பழைய பாதையின்" ஒவ்வொரு விமர்சனத்தையும் பொதுவாக நிராகரித்து அதை ஒரு பிரிவு(கன்னை) பாதையின் வெளிப்பாடு என்று கருத்திற்கொண்டு அதை அகற்றாதுள்ள இயல்பைத்தான் பார்க்கிறோம். கன்னைவாதம் ஆபத்தானது என்றால், பழைமை உணர்வு நிரம்பிய அதிகாரத்துவ (பிரிவுவாதம்) கன்னைவாதம் கொடுக்கும் ஆபத்தைப் பற்றி நாம் கவனியாமல், கண்ணை மூடிக்கொண்டோம் என்றால் அது குற்றஞ்சார்ந்த செயலாகும். இந்த ஆபத்திற்கு எதிராகத்தான் மத்தியக்குழுவின் தீர்மானம் முக்கியமாக இயக்கப்பட்டது.

கம்யூனிஸ்டுகளின் மிகப் பெரும்பான்மையினருக்குக் கட்சியின் ஒற்றுமையைக் காப்பது என்பது பெரும் அக்கறையாகும். ஆனால் இது வெளிப்படையாகக் கூறப்படவேண்டும். இன்று கட்சியின் ஒற்றுமைக்குக்கு, குறைந்த பட்சம் கட்சியில் ஒருமித்த கருத்திற்குத் தீவிர ஆபத்து உள்ளது என்றால், அது கட்டுப்பாடற்ற அதிகாரத்துவத்தினால்தான். இந்த முகாமில்தான் ஆத்திரமூட்டல் என குறிப்பிடக்கூடிய குரல்கள் எழுப்பப்படுகின்றன. அங்குதான் அவர்கள் தைரியமாகக் பின்வருமாறு கூறுகின்றனர்:, நாங்கள் ஒன்றும் பிளவிற்கு அஞ்சவில்லை! இப்போக்கின் பிரதிநிதிகள் கடந்த காலத்தை மீண்டும் கிளறி விவாதத்தில் கூடுதலான காழ்ப்புணர்வைக் கொண்டுவர முற்படுகின்றனர், பழைய போராட்டம், பழைய பிளவு ஆகியவற்றின் நினைவுகளுக்கு செயற்கையாக உயிர் கொடுத்து, ஒரு புதிய பிளவுபோல் ஆபத்துடைய அரக்கத்தனமான குற்றம் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்பதை கட்சியின் மனத்திற்கு இயல்பாக ஏற்குமாறு செய்கின்றனர். கட்சியின் ஒற்றுமைக்கு எதிராக ஒருவரையொருவர் எதிர்க்கும் வகையிலும், குறைந்த வகையிலான அதிகாரத்துவ ஆட்சிதான் கட்சிக்குத் தேவை என்பதற்கு எதிராகவும் கூறுகின்றனர்.

இத்தகைய பாதையைத் தேர்ந்தெடுக்க கட்சி தன்னை அனுமதித்துக் கொண்டால், தன்னுடைய ஜனநாயகத்தின் முக்கிய கூறுபாடுகளை தியாகம் செய்துவிட்டால், தன்னுடைய உள்போராட்டத்தை அதிகரிப்பதில்தான் வெற்றியடையும், தன்னுடைய ஒருங்கிணைந்துள்ள தன்மையை ஆபத்திற்குட்படுத்திவிடும். உங்களுக்கே கட்சியில் நம்பிக்கை இல்லை என்றால் அதை இயக்கும் அமைப்பிடம் கட்சி நம்பிக்கை கொள் என்று கோர முடியாது. இதுதான் முழுப் பிரச்சினைக்குரிய வினாவாகும். கட்சியைப் பற்றி முன்கூட்டியே அவநம்பிக்கை கொண்டிருக்கும் அதிகாரத்துவம், கட்சியின் முழு உணர்வு, கட்டுப்பாட்டுணர்வு பற்றி அவநம்பிக்கை கொண்டால், அதுதான் அமைப்பின் ஆதிக்கத்தால் தோற்றுவிக்கப்படும் அனைத்துத் தீமைகளுக்கும் முக்கிய காரணமாகும். கட்சிக்குப் பிளவுகள் தேவையில்லை, அவற்றை அது பொறுத்துக் கொள்ளாது. அது சிதையும் என்றோ எவரேனும் அதன் அமைப்பை சிதைப்பர் என்று நம்புவது அரக்கத்தனமாகும். இந்த அமைப்பு மிகமதிப்புடைய கூறுபாடுகளை உடையது, கடந்த கால அனுபவத்தின் அரிய பகுதியின் உறைவிடமாக உள்ளது என்பது கட்சிக்குத் தெரியும். ஆனால் அது அதைப் புதுப்பிக்க விரும்புகிறது; ஆனால் அது தனது அமைப்பு என்பதை அதற்கு நினைவுறுத்த விரும்புகிறது; தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைப்பு தன்னிடம் இருந்து பிரிந்துநிற்கக் கூடாது எனக் கூறுகிறது.

விவாதத்தின் போக்கின் பொழுது குறிப்பிடத்தகுந்ந வகையில் தன்னைத் தெளிவாகக் காட்டிக் கொண்ட நிலையில், கட்சியில் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி சிந்தித்தால், வருங்காலம் இரட்டை முன்னோக்குடையதாக இருப்பது முற்றாக தெளிவாகின்றது. முதலாவது, மத்தியக் குழுவின் தீர்மானங்களை ஒட்டி இப்பொழுது கட்சியில் நடக்கும் இயல்பான தத்துவார்த்த- அமைப்புரீதியிலான மறுகுழுவமைவு கட்சியில் இயல்பான வளர்ச்சிப் பாதையில் ஒரு முன்னோக்கிய அடியாக உள்ளது. ஆரம்பிக்கும் இப்புதிய அத்தியாயம், இதன் விளைவு அனைவருக்கும் மிகவும் உகந்ததாக இருப்பதுடன், கட்சிக்குப் பெரும் நலன்களை அளிக்கும். இதனால், கட்சியில் மிகையான விவாதத்தையும் எதிர்ப்புகளையும் சமாளிக்க இலகுவாக்குவதுடன், இழிவான ஜனநாயகப் போக்குகளையும் சமாளிக்கும் தன்மையடைந்துவிடும். இல்லாவிடின், அமைப்பு எதிர்தாக்குதலுக்கு சென்று கூடுதலான முறையில் இதன் மிகப்பழமைவாத கூறுபாடுகளின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி எவர் உயர்ந்தவர் எனப் போரிடும் பிளவு வகையில், கட்சியை பின்னுக்குத் தள்ளி "அமைதியை" மீளமைக்கும். இந்த இரண்டாம் நிகழ்வு மிகப் பெரும் துயரம் நிரம்பியதாகப் போய்விடும்; அது கட்சியின் வளர்ச்சியை தடுக்காது என்பதை கூறத்தேவையில்லை; ஆனால் அந்த வளர்ச்சி கணிசமான முயற்சிகள், எழுச்சிகள் என்பவற்றினூடாகத்தான் நடைபெறும். இந்த வழிவகை இன்னும் கூடுதலான முறையில் கட்சிக்கு ஆபத்து விளைவிக்கும், சிதைக்கும், விரோதப்போக்குத்தன்மையுடைய பிரிவினரை ஊட்டிவளர்ப்பதாகவே இருக்கும். இந்த இருவகையான சாத்தியப்பாடுகளை பற்றித்தான் நாம் கவனத்திலெடுக்கவேண்டும்.

"புதிய பாதை" என்ற தலைப்பில் என்னுடைய கடிதம் உள்ளது; அதன் நோக்கம் கட்சியை முதல் பாதையில் அழைத்துச் செல்வது; அது மிகவும் சிக்கனமானதும், சரியானதும் ஆகும். அது அளிக்கும் நிலைப்பாட்டில் நான் முழுமையாக நிற்பதுடன் எவ்விதமான ஒருதலைப்பட்சமான, ஏமாற்றுத்தமான விளக்கங்களையும் நிராகரிக்கிறேன்.

குறிப்புக்கள்

[1]  Myaznilov, "Workers' Group" உடைய தலைவராக இருந்தார்; இது போல்ஷிவிக் கட்சிக்குள் ஒரு சந்தர்ப்பவாதப் பிரிவாக இருந்தது. இதன் உறுப்பினர்கள் 1922ஆம் ஆண்டு கட்சியின் 11வது காங்கிரசில் வெளியேற்றப்பட்டனர்.

"[2] ரீட், 19ம் நூற்றாண்டு அமெரிக்க நாவலாசிரியர் ஆவார்.

[3] 19ம் நூற்றாண்டில் பிங்கர்டன் துப்பறியும் நிறுவனம் அமைக்கப்பட்டது; இது தனிப் போலீசார் அமைப்பாக இருந்து, முற்போக்கு, தொழிலாளர் அமைப்புக்களில் அந்த அமைப்புக்களை அழிக்க வேண்டும் என்ற வெளிப்படையான நோக்கத்தைக் கொண்டிருந்தது.

[4] The Workers Opposition என்பது போல்ஷிவிக் கட்சிக்குள் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த மிகவும் அறியப்பட்ட எதிர்ப்பிரிவாக விளங்கியது. போல்ஷிவிக் கட்சியில் முக்கிய பெண்ணுரிமைவாதியாக இருந்த Alexandra Kollantai இப்பிரிவில் நன்கு அறியப்பட்டிருந்த தலைவர் ஆவார். தொழிலாளர் எதிர்ப்பு என்பது ஒரு தொழிற்சங்கவாத முன்னோக்கை கொண்டிருந்ததுடன் அதில் அனைத்துப் பொருளாதாரக் கட்டுப்பாடும் தொழிற்சங்கங்களுக்குக் கொடுத்துவிடப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

 

 

The Lessons of October

 


Copyright 1998-2006
World Socialist Web Site
All rights reserved