ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

යාපනය විශ්ව විද්‍යාලයේ ශිෂ්‍ය නායකයන් අත් අඩංගුවට ගැනීමට සහ විශ්ව විද්‍යාල තුල හමුදා සෝදිසි මෙහෙයුම් වලට එරෙහිවෙනු!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் கைதையும் பல்கலைக்கழகங்களில் இராணுவ சோதனை நடவடிக்கைகளையும் எதிர்த்திடு!

By the International Youth and Students for Social Equality (Sri Lanka) 
8 May 2019

மே 3 அன்று, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ்-இராணுவ நடவடிக்கையின் போது கலைப் பீட மாணவர் ஒன்றியத் தலைவர் என். திவாகரன் மற்றும் செயலாளர் எஸ். கபில்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பு கடுமையாக கண்டனம் செய்கின்றது.

இந்த சோதனை நடவடிக்கையில் சுமார் 300 இராணுவ கடற்படை மற்றும் விசேட அதிரடிப் படை உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் இருந்ததாக குற்றச் சாட்டியே மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 4 அன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆஜார்படுத்தப்பட்ட திவாகரனையும் கபில்ராஜையும் மே 16 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் அதன் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பான ஐ.வை.எஸ்.எஸ்.இ. இந்த மாணவர் ஒன்றியம் பின்பற்றும் தமிழ் தேசியவாத பிற்போக்கு அரசியலை முழுமையாக எதிர்க்கும் அதேவேளை, தான் விரும்பிய அரசியலில் ஈடுபட அதற்குள்ள ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கின்றது.

ஏப்ரல் 21 அன்று நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதலை உடனடியாக சுரண்டிக்கொண்டு, அரசாங்கம் பொலிஸ்-இராணுவ அரசை நோக்கி அடியெடுத்து வைப்பதன் ஒரு பாகமாகவே இந்த இராணுவத் தலையீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 அன்று திணிக்கப்பட்ட அவசரகால நிலைமையின் கீழ், எந்தவொரு நபரையும் சோதனை செய்வதற்கும் கைது செய்வதற்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்குமான அதிகாரம் உட்பட மிகப் பரந்தளவிலான அதிகாரங்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

முதலாளித்துவ ஸ்தாபாகத்தின் அனைத்து பிரிவுகளினதும் ஆதரவின் கீழ், இந்த நச்சுத்தனமான சட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான சாக்குப் போக்காக "அதிதீவிரவாதிகளை கட்டுப்படுத்துதல்" என்ற சூத்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதன் உண்மையான நோக்கம், அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக பெருகி வரும் வர்க்கப் போராட்டங்களை நசுக்குவதே ஆகும்.

அரச எந்திரங்களை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட சகல ஜனநாயக-விரோத நடவடிக்கைகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழு ஒத்துழைப்பு கிடைத்துள்ள சூழ்நிலையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இந்த இராணுவத் தலையீடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, ஏனைய கட்சிகளதும் ஒத்துழைப்பைப் பெறுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டிய அனைத்துக் கட்சி மாநாடு எனப்படுவதற்கும் ஊர்ந்து சென்ற தமிழ் கூட்டமைப்பு, அதற்கு அனுமதியளித்து, வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு சம்பந்தமாக காட்டி வந்த பெயரளவிலான எதிர்ப்பையும் கூட கைவிட்டது.

மே தினத்தன்று கிளிநொச்சியில் நடத்திய கூட்டத்தில், தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, "எங்களை அறியாமலேயே இராணுவத்திடம் நாங்கள் பாதுகாப்புக் கோரத் தள்ளப்பட்டுள்ளோம்” என்று கூறினார். தமிழ் கூட்டமைப்பின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வடக்கில் இருந்து "மேலதிக துருப்புக்கள்" அகற்றப்பட வேண்டுமென்றே கோரினோம், "கடைசி சிப்பாய்" வரை அகற்றுமாறு ஒரு நாளும் நாங்கள் கோரவில்லை என்று கூறினார்.

அவர்களின் இந்த கொடூரமான கருத்துக்களால், வடக்கில் இராணுவத் தலையீடு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவம் அதன் கரங்களைப் பலப்படுத்திக்கொண்டது.

கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் ஏனைய பகுதிகளில் போலவே வடக்கிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி கோரி, போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்குமாறும் மற்றும் இராணுவத்தால் பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் கோரி பல்வேறு இடங்களில் வெகுஜன எதிர்ப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கு சமாந்தரமாக, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களின் போது போலவே ஏனைய தொழிலாளர் போராட்டங்களிலும் இனப் பிளவுகளை கடந்து வடக்கில் உள்ள தொழிலாளர்கள் தெற்கில் தங்கள் சக தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டங்களில் குதித்தனர்.

இந்த போராட்டங்கள் வளர்ச்சியடைந்து, முழு முதலாளித்துவ வர்க்கத்திற்கும் சாவாலாகி விடும் என்ற அச்சத்தால் கொழும்பின் முதலாளித்துவ ஆட்சியாளர்களைப் போலவே தமிழ் முதலாளித்துவ தலைவர்களும் திகைத்துப் போயுள்ளனர். பொலிஸ்-இராணுவ அரசை நோக்கிய விரைவான நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் இருப்பது இந்த பீதியே ஆகும்.

கல்வி மீதான தாக்குதல்களை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு போராட்டத்திற்கு வரும் மாணவர்கள், அந்த தாக்குதல்களின் தோற்றுவாயான நெருக்கடியில் மூழ்கிப் போயுள்ள முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தின் பக்கம் திரும்புவதை தடுத்து, அதை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அரசியலுக்குள் அடக்கி வைத்து, அந்த தாக்குதலை தொடர்வதற்காக முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமே ஆகும்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் அதற்கு அரசியல் தலைமை கொடுக்கும் போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியும், முதலாளித்துவ அரசாங்கத்துடனும் முதலாளித்துவ அமைப்பு முறையுடனும் எந்தளவுக்கு பிணைந்துள்ளது என்றால், பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட இராணுவச் சோதனைகளில் அதன் பிரதிநிதிகளை செயலூக்கத்துடன் ஈடுபடுத்தும் அளவுக்கு அது முன் சென்றுள்ளது.

மே 4 அன்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் மஹீல் பண்டார தெஹிதெனிய, பேராதனை பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடந்த இராணுவ சோதனை நடவடிக்கைகளில் அதன் பிரதிநிதிகளும் பங்கு பெற்றதாக தெரிவித்தார்.

இதனால் கைகளைப் பலப்படுத்திக் கொண்ட இராணுவம், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சேனக பிபில விடுதிக்குள் பாய்ந்து, "அங்கே கண்டெடுத்த" சில இராணுவச் சீருடைகள் மற்றும் “வோக்கிடோக்கி” கருவிகள் இரண்டையும் தொலைக் காட்சியில் காண்பித்து, மாணவர்கள் “பயங்கரவாத செயற்பாடுகளில்” ஈடுபடுவதாக மக்களுக்கு சுட்டிக் காட்டி, அந்த பாய்ச்சலை நியாயப்படுத்தியது.  “இராணுவ சீருடை வடிவிலான டீ சேர்ட்டுகளை” அணிவது மாணவர்கள் மத்தியில் நாகரீகமாக காணப்படுவதாகவும் பொழுது போக்கிற்காக மலை ஏறும் மாணவர்கள் “வோக்கிடோக்கி” பரந்தளவில் பாவிப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேராதனைக்கு மேலதிகமாக ருஹுனு பல்கலைக்கழகத்தில் செய்த தேடுதல் நடவடிக்கைகளில், மாணவர் ஒன்றிய அலுவலகங்களுக்குள் பலாத்காரமாக நுழைந்த இராணுவம், மாணவர் பிரதிநிதிகளின் தகவல்கள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறிக்கைகளையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு சென்றுள்ளது. இந்த இராணுவ நடவடிக்கைகளில் தனது பிரதிநிதிகளை ஈடுபடுத்த தவறியமை குறித்து மேலே கூறப்பட்ட ஊடக மாநாட்டில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் கவலை தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை கைது செய்தமை தொடர்பில் உப்புச்சப்பற்ற விமர்சனத்தை முன்வைத்த தெஹிதெனிய, புலிகள் சம்பந்தமாக கொழும்பு ஆளும் வர்க்கத்தின் கூற்றுக்களை அடியொற்றி, அது ஒரு "பயங்கரவாத" அமைப்பு என்று கூறினார்.

இத்தகைய கதையளப்புகள் ஊடாக, கொழும்பு முதலாளித்துவ வர்க்கம் ஆரம்பத்திலிருந்து முன்னெடுத்து வந்த தமிழ்-விரோத பாரபட்சங்களே புலிகளின் தோற்றத்துக்கும் யுத்தத்திற்குமான காரணம் என்ற உண்மையை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மூடி மறைக்கின்றது. அதேபோல் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு "பயங்கரவாத" முத்திரை குத்தி தண்டனை கொடுப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

முன்னதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு தலைமை கொடுத்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), விடுதலைப் புலிகளை "பயங்கரவாத" அமைப்பாக அறிவித்து, அதற்கு எதிராக கொழும்பு அரசாங்கம் முன்னெடுத்த யுத்தத்திற்கு முன்நின்று உழைத்தது. ஜே.வி.பி.யைப் பின்பற்றிய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மாணவர்களுக்கிடையில் தமிழர்-விரோத பிரச்சாரத்தை முன்னெடுத்தது. முன்னிலை சோசலிசக் கட்சி, ஜே.வி.பி.யில் இருந்து அமைப்பு ரீதியில் பிளவுபட்டிருந்தாலும், அதன் அரசியலில் இருந்து பிரிந்துவிடவில்லை என்ற உண்மையை அதனால் இயக்கப்படும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்வைத்துள்ள மேற் குறிப்பிட்ட கருத்துக்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறன.

"நிச்சயமாக அதிதீவிரவாதத்தை தோற்கடிக்க வேண்டும்” எனக் கூறிய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர், அரசாங்கம் அதன் "குறித்த நோக்கத்திற்கு" மாறாக, "மாணவர் அமைப்புக்களை நசுக்குவதற்காக" செயற்படுகின்றது என்று கூறினார். உண்மையில், அரசாங்கத்தின் "குறித்த நோக்கம்", "அதிதீவிரவாதத்தை தோற்கடிப்பது" அல்ல. மாறாக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களை நசுக்குவதே என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

அரசாங்கத்தின் அந்த குறிக்கோளை வெற்றிகொள்வதற்காக முன்னெடுக்கப்படும் பொலிஸ்-இராணுவ "தேடுதல் நடவடிக்கைகள்" மற்றும் கைதுகளையும் அவற்றுக்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் "முழு ஆதரவு" கொடுப்பதையும் மாணவர்கள் வன்மையாக எதிர்க்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் தேடுதல் நடவடிக்கைகளும் கைதுகளும், "பயங்கரவாதத்தை ஒடுக்குதல்" என்ற பெயரில் அரசாங்கம் கட்டியெழுப்பும் பொலிஸ்-இராணுவ அரசும், அடுத்து வரவுள்ள வர்க்கப் போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கப் போகின்ற விதம் பற்றிய ஒரு சமிக்ஞயே ஆகும்.

அரசாங்கத்தின் அடக்குமுறையைத் தோற்கடிப்பதற்கு, அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் மாணவர்கள் திரும்ப வேண்டும். அந்த உரிமைகளைப் பாதுகாக்கும் சுயாதீன பாத்திரத்தை மாணவர்களால் இட்டு நிரப்ப முடியும் என்ற அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கூற்றுக்கள் முற்றிலும் மோசடியானவை.

வீழ்ச்சி கண்டுவரும் உலக முதலாளித்துவத்தால், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை முற்றிலும் துடைத்துக் கட்டுகின்ற சமூக எதிர்ப் புரட்சி மற்றும் உலகப் போர்களை மட்டுமே கொடுக்க முடியும். அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் அரச ஒடுக்குமுறையையும் சிக்கன நடவடிக்கைகளையும் தோற்கடிக்க முடியாது என்பதே உலக தொழிலாள வர்க்கத்தின் அனுபவமாகும். உலக முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேச சோசலிசத்திற்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

அதற்காக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பி, ஒடுக்கப்பட்ட விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அதைச் சூழ அணிதிரட்டுவது அவசியமாகும். இந்த நோக்கத்திற்காக சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பு மட்டுமே போராடுகின்றது.