ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ජනතා කම්කරු සංගමයේ නායකයා “විප්ලවවාදී වෘත්තීය සමිති” තැනීමේ මිථ්‍යාවක් යෝජනා කරයි

இலங்கை: மக்கள் தொழிலாளர் சங்க தலைவர் "புரட்சிகர தொழிற்சங்கம்" அமைத்தல் என்ற மாயை முன்மொழிகின்றார்

Navin Devage
28 March 2019

ஜனவரி 28 அன்று, இலங்கை பெருந்தோட்ட கம்பனிகளுடன் இரகசியமாக கையொப்பமிடப்பட்ட, அடுத்த இரண்டு வருடங்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக, ஆயிரம் ரூபாய் அடிப்படை நாள் சம்பளம் கோரி தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த நீண்ட போராட்டம், தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு என்ற கண்துடைப்புடன் தொழிலாளர்களை வேலை அதிகரிப்புக்கு அடிபணியச் செய்யும் திட்டதிற்கு தொழிற்சங்கங்கள் முழுமையான ஒத்துழைப்பை கம்பனிகளுக்கு வழங்கியுள்ளன.

அரசாங்கத்தின் அனுமதியுடன் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையில் ஏற்றப்படுத்திக்கொள்ளபட்ட ஒப்பந்தத்திற்கு தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு அபிவிருத்தியடைந்து வருகின்றது. தொழிலாளர்கள் கடந்த அக்டோபர் மாதம் தொடக்கம் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளும் டிசம்பர் மாதத்தில் நடந்த ஒன்பது நாள் வேலை நிறுத்த போராட்டமும் முழுமையாக தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியாக அபிவிருத்தியடைந்து. கட்டிக்கொடுப்பு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட பின்னர், தொழிலாளர்கள் தோட்டங்கள் தோறும் வேலை நிறுத்தத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காகப் போராட தொழிற் சங்கங்களிலிருந்து வெளியேறி தங்களுடைய சுயாதீன நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொள்ள வேண்டுமென தெளிவுபடுத்தி கூர்மையான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டது. கம்பெனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் அழுத்தம் கொடுக்கும் போராட்டங்கள் ஊடாக கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது என விளக்கிய சோ.ச.க., சோசலிச வேலைத் திட்டத்திற்காகப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

இந்த தலையீட்டுக்கு சாதகமாக பிரதிபலித்த எபோட்சிலி தோட்ட தொழிலாளர்கள் சிலர், சோ.ச.க. இன் வழிகாட்டலில் நடவடிக்கைக் குழுவினை அமைக்க முன்வந்தனர். இந்த நடவடிக்கை, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்திலிருந்து சுயாதீனமான அரசியல் சக்தியாக பரிணமிக்க மேற்கொள்ளும் நனவான முயற்சியை சுட்டிக்காட்டுகிறது.

எபோட்சிலி தொழிலாளர்கள் எடுத்த முடிவானது, மொத்தத்தில் தொழிலாள வர்கத்தின் மத்தியில் தொழிற் சங்கங்களின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக பரந்தளவில் அபிவிருத்தியடைந்து வரும் எதிர்ப்பின் வெளிப்பாடாகும். தொழிலாளர்கள் இவ்வாறு சங்கங்களில் இருந்து வெளியேற முயற்சிப்பதையிட்டு அரசாங்கமும் கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் மற்றும் போலி இடது குழுக்களும் குழப்பமடைந்துள்ளன.

தொழிற்சங்க அதிகாரத்துவமும் இந்த போலி இடது குழுக்களும் தொழிலாளர்களை திசை திருப்பவும் தொழிற்சங்கங்களுக்குள்ளேயே அவர்களை சிறை வைப்பதற்கும் பல்வேறு விதமான குறுக்கீடுகளை உருவாக்க உச்சளவில் ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு வெளிப்பாடுதான் முன்னிலை சோசலிச கட்சி "ஆயிரம் ரூபாய் இயக்கம்" என்ற பெயரில் முன்னெடுத்த சந்தர்ப்பவாத ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் ஆகும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை "வென்றெடுக்க' தொழிற்றசங்களுக்கு அழைப்புவிடுப்பதையும்  புதிய  தொழிற் சங்கங்களை உருவாக்குவதையும் அக்கட்சி முன்மொழிந்தது.

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் (ம.தொ.ச.) செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, முதலாளித்துவ ஊடகங்களின் ஆதரவுடன் அதுபோன்ற ஒரு நச்சுதனமான நடவடிக்கையில் நுழைந்துள்ளார். மாவோவாதத்தையும் அந்த அரசியலின் பகுதியாக அடையாள அரசியலையும் விற்பனை செய்யும் அவரை, தமிழ் முதலாளித்துவ ஊடகங்கள் மார்க்சிசவதியாக வருணிக்கின்றன. ம.தொ.ச. உருவாக்கப்படுவதற்கு முன்னர், அவர் மாவோவாத புதிய ஜனநாயக கட்சியின் (தற்போது புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி) பொதுச் செயலாளராக இருந்தார்.

மாவோவாத இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்து காலம்சென்ற என். சண்முகதாசனின் பிறந்த தினத்தை நினைவுக்கூர, அட்டன் நகரில் கூட்டமொன்றை நடத்திய தம்பையா, காட்டிக் கொடுப்புக்கு எதிராக "தோட்டத் தொழிலாளர்கள் சுயாதீனமாக போராட்டத்துக்கு பிரவேசிக்கின்ற சூழல்" ஏற்பட்டுள்ளதாகவும் "இந்த நிலைமையில் தோட்டத் துறையில் தொழிற்றசங்கம் தேவையா இல்லையா என்ற கலந்துரையாடல் ஏற்றப்பட்டுள்ளது" என்றும் ஏற்றுக்கொண்டார்.

1980 களில் தொழிற்சங்கம் தேவையில்லை என்ற கலந்துரையாடல் நிகழ்ந்தது எனக் கூறிய ம.தொ.ச. செயலாளர், என்.ஜி.ஓ. (அரச சார்பற்ற நிறுவனங்கள்) காரர்கள், அதற்கு தலைமைகொடுத்து "ஏகாதிபத்தியத்தின் சார்பாக தொழிற் சங்கங்களை அழிக்க" முயற்சித்ததாக அவர் கூறினார். "இன்றைய நிலைமையில் முதலாளித்துவ தொழிற் சங்கங்களின் இயலாமையை முன்னிறுத்தி மீண்டும் தொழிற்சங்கங்கள் தேவை இல்லை என்ற எண்ணம் தோன்றி வருகிறது" என தம்பையா குறிப்பிட்டார்.

தம்பையா "ஏகாதிபத்தியத்தின் சார்பாக செயல்படும் என்.ஜி.ஓ. காரர்கள்" யார் என்பதை குறிப்பிடவில்லை. எனினும் தொழிற் சங்கங்களில் இருந்து விலகி நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு கோரி, சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் போராட்டம் பரந்த ஆதரவினை பெறும் என அவரும் ஏனைய போலி இடதுகளும் பீதியடைந்துள்ளனர்.

போலி இடதுகளுக்கு தொழிற்சங்கம் அவசியம்

அன்றும் இன்றும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் இன்றியமையாதது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தம்பையாவின் வாதமாகும். "குழந்தையொன்றுக்கு பெற்றோர் பாதுகாப்பை வழங்குவது போல தொழிலாளர்களுக்கு வழிகாட்டு பாதுகாப்புக்கு தொழிற்சங்கம் அவசியமானது.... இவ்வாறு புடம் போடப்படும் தொழிலாளர்களையே எதிர்காலத்தில் சமூக அமைப்பை மாற்றுவதற்கு ஈடுபடுத்த முடியும்." நேரடியாக அவரின் கூற்றுப் படி, தொழிற் சங்கங்களுக்கு அப்பால் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வேறு உலகமில்லை; "சமூக மாற்றத்துக்காக” தொழிற்சங்கங்களுக்கூடாகவே தொழிலாளர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

அவ்வப்போது மார்க்சிச சொற்களை உச்சாடனம் செய்யும் தம்பையாவின் இந்த கூற்றுக்கும் மார்க்சிசத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சங்கங்களுக்காக உயிரை கொடுக்கும் இத்தகைய அரசியல், தொழிற்சங்கங்களுக்கு அர்ச்சனை செய்யும் தொழிற்சங்க வழிபாடு எனப்படும்.

மார்க்சிச இயக்கமானது தொழிலாளர்கள் ஒழுங்கமைகின்ற ஒரு இடமாக அதன் மீது செல்வாக்கு செலுத்துவதற்கான ஒரு வழிமுறையாக தொழிற்சங்கங்களில் அதன் போராட்டத்தை நடத்தியது. எனினும், புரட்சிகர கட்சியானது தொழிலாளர்களை முற்றிலும் அந்த நிறுவனங்களின் அதிகாரத்திற்கு கீழ்ப்படுத்தி அடிபணியச் செய்வதை கடுமையாக எதிர்க்கிறது.

தம்பையாவுக்கு தொழிற்சங்கங்கள் "பெற்றோர் போன்று" இருந்தாலும், தொழிலாளர்களின் அனுபவம் அதற்கு நேர் மாறானதாகும். முதலாளிகள், அரசாங்கம் மற்றும் அரசுடனும் ஒரே அணியில் நின்று, தொழிற்துறை பொலிஸ்காரனாக செயற்பட்டு, தொழிலாளர்கள் கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட ஏதாவது இருக்குமாயின், அதை அபகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற, கம்பனிகளின் இலாபத்தை பாதுகாப்பதற்கும் ஒடுக்குமுறையை ஊக்குவிப்பதற்கும் முன்நிற்கும் அமைப்பாகவே தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் காண்கின்றனர்.

தொழிற் சங்கங்களின் காட்டிக் கொடுப்பில் இருந்து விடுபட, அவர் "புரட்சிகர தொழிற்சங்கங்களை" அமைப்பதை பதிலீடாக முன்வைக்கின்றார். சண்முகதாசன் இலங்கையின் தோட்டத் துறையிலும் ஏனயை இடங்களிலும் புரட்சிகர தொழிற்சங்கங்களை அமைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் போன்றவற்றுக்கு எதிராக, “செங்கொடி சங்கத்தை” அமைத்தார். செங்கொடி சங்கத்தின் தலையீட்டுடன் தொழிலாளர்கள் தம்மை ஒடுக்குகின்ற நிர்வாகிகளை வெட்டுமளவுக்கு சென்றதாகவும், அந்த சங்கத்துக்கு தோட்ட உரிமையாளர்கள் பயந்ததாகவும் தம்பையா உற்சாகத்துடன் கூறினார். 

அந்த படிப்பினையின் அடிப்படையில் செங்கொடி சங்கம் அல்லது புரட்சிகர சங்கம் அமைக்க வேண்டும் என தம்பையா தொழிலாளர்களுக்கு நப்பாசை ஊட்டுகிறார். மாவோவாதிகள் இந்தியாவில் இவ்வாறான நடவடிக்கைகளில் 1960களிலும் அதற்கு பின்னரும் ஈடுபட்டனர். கேரா ஓ நடவடிக்கை அதில் ஒருவடிவமாக இருந்தது -அதாவது நிர்வாகிகளை சுற்றிவளைத்து அச்சுறுத்தும் நடவடிக்கையை ஏற்பாடு செய்வதாகும். இந்த நடவடிக்கை எந்தளவு குரூரமான வடிவத்தை எடுத்தாலும், நிர்வாகிகளை பயமுறுத்தி, அதாவது வன்முறையின் மூலம் அழுத்தம் கொடுத்து, முதலாளித்துவ அமைப்பு முறைக்கு உள்ளேயே "கோரிக்கைகளை வென்றெடுக்கும்" அரசியலில் தொழிலாளர்களை அடக்கி வைப்பதே அதன் நோக்கமாக இருந்தது.

தம்பையா இதை "புரட்சிகர" சங்கத்தின் நடவடிக்கை என அறிமுகப்படுத்துகின்றார். அவர் முதலாளித்துவ சங்கம் மற்றும் புரட்சிகர சங்கம் என வேறுபடுத்த முனைகின்றார். எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் தொழிற்சங்கத்தின் செயற்பாடு ஒன்றே ஆகும்.

தொழிற்சங்கங்களின் உண்மையான செயற்பாடு

உழைப்புச் சக்தியை வியாபார பண்டமாக மாற்றியுள்ள முதலாளித்துவ சமூக முறையில், தொழிலாளர்கள் ஒழுங்கமைந்திருக்கும் தொழிற்சங்கங்களின் செயற்பாடு தொடர்பாக, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை மிகவும் தனித்துவமானதொரு சமூகப் பொருளாதார பாத்திரத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்றன: அதாவது உழைப்புசக்தி என்ற பண்டத்தின் விற்பனையாளராக. முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் மற்றும் சொத்து வடிவங்களின் அடிப்படையில் எழுகின்ற தொழிற்சங்கங்களானவை, நிலவுகின்ற சந்தை நிலைமைகளின் கீழ் இந்தப் பண்டத்திற்கு மிகச் சிறந்த விலையை பெற்றுக் கொடுக்க முனைகின்றன. (தொழிற்சங்கங்கள் சோசலிசத்திற்கு ஏன் குரோதமாக இருக்கின்றன? ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம்  நூற்றண்டும் - பக்கம் 255. தொழிலாளர் பாதை வெளியீடு)

நடைமுறை ரீதியாக எடுக்கும் வடிவம் தொடர்பாக விளக்கும்போது நோர்த்  பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"உழைப்பு சக்தியின் விலையை நிர்ணயம் செய்வதற்கும் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து உபரிமதிப்பு உறிஞ்சி எடுக்கப்படுகின்றதை சுற்றிய நிலைமைகளை நிர்ணயம் செய்வதற்கும் முதலாளிகளுடன் உடன்பாடுகளை எட்டுவதை நோக்கி தமது முயற்சிகளைச் செலுத்தும் தொழிற்சங்கங்கள், பேச்சுவார்த்தையில் முடிவான ஒப்பந்தங்களின் நிபந்தனைகளின்படி அவற்றின் உறுப்பினர்கள் உழைப்பு சக்தியை விநியோகம் செய்வதை உத்தரவாதம் செய்யக் கடமைப்பட்டுள்ளன". (அதே பக்கம்).

முதலாளித்துவம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தொழிற்சங்கங்களின் இந்த நடவடிக்கை மேலும் மேலும் வளர்ச்சியடையும் போக்கு அனைத்து நாடுகளிலும் வெளிப்பட்டுள்ளது. "புரட்சிகர சங்கம்" என்ற பெயரில் முன் நிற்பதானது தொழிற்சங்கங்கள் தமது காட்டிக் கொடுப்புகள் ஊடாக அபகீர்த்தியடைந்துள்ள சூழ்நிலையில், இடது வேடம் தரித்து தொழிலாளர்களை வளைத்துப் போடுவதற்கான ஒரு பொறியே ஆகும். 1960களில் செங்கொடி சங்கமானது வெற்று வாய்ச்சவடால் விடுத்த தலைவர்களை முன்நிறுத்தியே தோட்டங்களில் செயற்பட்டது. குறுகிய காலத்தில் இது ஏனைய சங்கங்களைவிட மறுபட்டது அல்ல என புரிந்தவுடன், தொழிலாளர்கள் அதிலிருந்து வெளியேறினார்கள். இப்போது அதன் எலும்பு கூடொன்று ஏனைய சங்கங்களுக்கு பின்னால் தொடர்கிறது.

தோட்ட தொழிற்சங்கங்களை உருவாக்குவது தொடர்பாக தம்பையா ஒரு புதுமையான வாதத்தை மேம்படுத்தியுள்ளார்: "முன்னர் தோட்டத்துறைக்கு ஒரு நியமன பாராளுமன்ற உறுப்பிரே இருந்தார். 1977 இற்கு பின்னர் எல்லோரும் தொழிற்சங்கங்களை விடுத்து அரசியலுக்கு சென்றமையால் தொழிற்றசங்க வேலைகள் பின்னடைந்தன."

தம்பையாவின் இந்த விளக்கம், சீனா மற்றும் சோவியத் ஒன்றியம் பற்றிய அவரது கருத்தின் ஊடாக மேலும் தெளிவாகிறது. அவரது விளக்கத்தின் படி, 1960களில் சோவியத் ஒன்றியம் ஏகாதிபத்திய நாடானது. 1949 சீன புரட்சியின் பின்னர், மாவோ சேதுங் புரட்சிவாதியாக இருந்தபோதிலும், 1977 களின் பின்னர், அந்த நாடும் ஏகாதிபத்திய நாடானது.

இது ஒரு வரலாற்று விரோதப் "பகுப்பாய்வு" ஆகும். 1917 இல் சோசலிச புரட்சிக்கூடாக அதிகாரத்தை பெற்ற ரஷ்யா, 1920களின் முதல் பகுதியில் சோவியத் ஒன்றியம் வரை அபிவிருத்தியடைந்தது. எனினும், 1924 இல் அதிகாரத்திற்கு வந்த ஸ்ராலினை முதன்மையாகக் கொண்ட அதிகாரத்துவ ஆட்சியின் கீழ், "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற பிற்போக்கு வேலைத் திட்டத்தை முன்வைத்து, உலக சோசலிசப் புரட்சி வேலைத் திட்டத்தை கைவிட்டதின் விளைவாக சீர்குலைந்தது. 1949 இல் சீனப் புரட்சி வெற்றி பெற்ற போதிலும், மாவோ தலைமை தாங்கிய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி அரவனைத்துக் கொண்டிருந்த தனியொரு நாட்டில் சோசலிசம் சார்ந்த தேசியவாத வேலைத் திட்டதினால், அது தனிமைப்படுத்தப்பட்டு சீர்குலைந்தது. 1980 களில் ஆழமடைந்த உற்பத்தியின் பூகோளமயமாக்கல்களில் நசுங்கி, இவ்விரு நாடுகளினதும் சோசலிச வேலைத்திட்டம் தகர்ந்து போனது.

1979 களிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைமுறைகளினால், சீனாவில் முதலாளித்துவத்தின் புனர்நிர்மாணம் துரிதமாக்கப்பட்டது. முதலாளித்துவ போக்குகளின் அபிவிருத்திக்கு ஊக்கமும் ஒத்தாசையும் வழங்கிய ஸ்ராலினிச அதிகாரத்துவம், 1991 இல் சோவியத் ஒன்றியத்தை கலைத்துவிட்டு முதலாளித்துவ புனர்நிர்மாணத்தை ஆரம்பித்தது. இவ்விரு நாடுகளும் ஏகாதிபத்திய நாடுகளாக ஆகவில்லை. அவை ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் இருக்கின்ற முதலாளித்துவ நாடுகளாக மாற்றமடைந்துள்ளன.

சோவியத் ஒன்றியமும் சீனாவும் முதலாளித்துவ நாடக புனர்நிர்மாணம் பெற வழிமைத்த அதே முதலாளித்துவத்தின் பூகோளமயமாக்கல் சூழலே, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலனுக்காக பேரம்பேசும் நிறுவனம் என்ற நிலையில் இருந்து, தொழிலாளர்களின் உரிமைகளை அபகரித்து இலாப தேவையை பாதுகாத்து கொடுக்கும் ஏஜண்டு நிறுவனங்களாக வெளிப்படையாகவே மாற்றமடைவதற்கு வழிமைத்தது.

நடவடிக்கைக் குழுக்களின்  அவசியம்

உற்பத்தியின் பூகோளமயமாக்கல்களுக்குள் இலாபத்தை சுரண்டிக்கொள்வதற்காக முதலீடுகள் நாட்டுக்கு நாடு பெருக்கெடுக்கும் ஒரு சூழ்நிலை நிலவுகிறது. சர்வதேச நாணய நிதியமானது இந்த முதலீடுகளின் பாதுகாவலனாக சமூக உரிமைகளை வெட்டுவதற்கு கட்டளை இடுகின்றது. இந்த தாக்குலை நடைமுறைப்படுத்தும் பாரிய கூட்டுத்தாபனங்களுடனும் அரசாங்கங்களுடனும் தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்துள்ளன. எவ்வளவுதான் பெரிய அழுத்தங்களை கொடுப்பதன் மூலமாகவும் இந்த தாக்குதல்களை நிறுத்த முடியாது.

இந்த நிலைமைகளுக்கு மத்தியிலேயே சர்வதேச ரீதியாக தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் அபிவிருத்தியடைந்துள்ளன. சர்வதேச ரீதியான ஐக்கியத்தை கட்டியெழுப்பி, முதலாளித்துவத்தை தூக்கி வீசி, சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்காகப் போராடுவதே தொழிலாள வர்க்கத்தின் முன் உள்ள ஒரேயொரு மாற்றிடாகும்.

ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, தொழிற்சங்கங்களில் இருந்து விலகி தமது சுயாதீன சக்தியை வெளிப்படுத்த தமது சொந்த நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப வேண்டியது தீர்க்கமான தேவையாகியுள்ளது. இதனாலேயே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சோசலிச சமத்துவக் கட்சிகள், தொழிலாளர்களின் நவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப முன்வந்துள்ளன. தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு இடம் கொடாமல், தமது ஜனநாய ரீதியான வாக்களிப்பின் மூலம் இந்த குழுக்களை தெரிவுசெய்வதோடு ஜனநாயக ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும்.

கடந்த மாதங்களில் எபோட்ஸ்லி தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கை குழுவை கட்டியெழுப்புதலும் அமெரிக்காவில் ஜெனரல் மோட்டர்ஸ் தொழிலாளர்கள் வேலைத் தலங்களில் சாமானிய தொழிலாளர் குழுக்களை கட்டியெழுப்பதலும் சோசலிச சமத்துவ கட்சியின் தலையீட்டுடன் நிகழ்ந்துள்ளது. மார்ச் 17 அன்று ஹட்டன் நகரில் நடந்த தோட்டத் தொழிலாளர் மாநாடும் பெப்ரவரி 9 அன்று அமெரிக்காவில் டெட்ராய்ட் நகரில் நடந்த மோட்டார் வாகன தொழிலாளர்களின் ஊர்வலமும் சர்வதேச ரீதியாக தொழிலாள வர்கத்துக்குள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க அவர்களுக்கு உள்ள தகைமையை உறுதி செய்துள்ளது.

இந்த யுகத்தின் புரட்சிகர வர்க்கமான தொழிலாள வர்க்கம், முதலாளித்துவத்தின் சகல பகுதிகளில் இருந்தும் பிரிந்து, குறிப்பாக தொழிற்சங்கங்களில் இருந்தும் விலகி, வர்க்க சுயாதீனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்தால் மட்டுமே தொழிலாள வர்கத்தால் சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்.

மக்கள் தொழிலாளர் சங்கம் உட்பட தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும், போலி இடதுகள் உருவாக்குகின்ற பொறிகளையும் நிராகரித்து, இந்த போராட்டத்தை தமது கையில் எடுக்குமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.