ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Stalinist CPM and CPI suffer meltdown in India’s national election

இந்தியாவின் தேசியத் தேர்தலில் ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் பேரழிவுக்குள்ளாகியுள்ளன

By Deepal Jayasekera 
27 May 2019

இந்தியாவின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கம், மற்றும் மூன்று தசாப்தங்களாக நீடித்துவரும் “சந்தை-சார்பு” சீர்திருத்தத்தின் அழிவுகர விளைவு ஆகியவை குறித்து தொழிலாள வர்க்க எதிர்ப்பு பெருகிவரும் நிலைமைகளின் கீழ், இந்தியாவின் பிரதான ஸ்ராலினிசக் கட்சிகள் — இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும், சிறிய, பழைய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)— முன்னொருபோதும் கண்டிராத வகையிலான தேர்தல் படுதோல்வியை எதிர்கொண்டுள்ளன.

சிபிஎம் மற்றும் சிபிஐ இரண்டு கட்சிகளும் இணைந்து, இந்தியாவின் இரு சபைகள் கொண்ட பாராளுமன்றத்தின் கீழ் சபையும் மற்றும் மிகுந்த சக்திவாய்ந்த சபையுமான லோக் சபாவின் 545 பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் வெறும் ஐந்தை மட்டுமே —சிபிஎம் 3 மற்றும் சிபிஐ 2 என்ற எண்ணிக்கையில்— தக்கவைத்துக் கொண்டுள்ளன. அதிலும், சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி தேர்தல் கூட்டணியில் உள்ள அவர்களது தோழமை கட்சிகள் எதுவும் ஒரு இடத்தைக் கூட பெறவில்லை.

லோக் சபாவில் இதுவரையிலும் நிகழ்ந்திராத வகையிலான மிகச் சிறிய “இடது” பிரசன்னமாக இருப்பதால், “தேசிய கட்சிகள்” என்ற சிபிஎம் மற்றும் சிபிஐ இன் உத்தியோகபூர்வ நிலையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் தேர்தலில், ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி 364 இடங்களை கைப்பற்றியிருந்த நிலையில், சிபிஐ 16 இடங்களை வென்று, லோக் சபாவின் இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருந்தது. மிக சமீபத்திய 14 வது லோக் சபா தேர்தலில் (2004-09), சிபிஎம் 43 பாராளுமன்ற உறுப்பினர்களையும், இடது முன்னணி சுமார் அறுபது உறுப்பினர்களையும் கொண்டு லோக் சபாவின் மூன்றாவது மிகப்பெரிய கூட்டணியாக இணைந்திருந்தன.

அதற்குப் பின்னர், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழை மக்கள் மத்தியில் ஸ்ராலினிஸ்டுகளுக்கு இருந்த அடிப்படை ஆதரவு முற்றிலும் வடிந்து போனது. ஒவ்வொரு அடுத்தடுத்த தேசியத் தேர்தலிலும் ஸ்ராலினிஸ்டுகளின் லோக் சபா பிரதிநிதித்துவம் கடுமையாக பாதியாகக் குறைந்து கொண்டே வந்துள்ளன. 2004 தேர்தல்களில் சிபிஎம் இன் தேசிய வாக்குகளின் பங்கு 7.7 சதவிகிதத்திற்கு வீழ்ச்சி கண்டது, அப்போது அதற்கு 30 மில்லியனுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருந்தன, தொடர்ந்து 2009 தேர்தல்களில் அதற்கான வாக்குகள் 5.3 சதவிகிதமாகவும், 2014 இல் 3.25 சதவிகிதமாகவும், தற்போது 2019 தேர்தல்களில் படுமோசமாக 2 சதவிகிதத்திற்கு குறைந்த அளவாகவும் அதற்கான வாக்குகள் (இறுதி புள்ளிவிபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை) வீழ்ச்சி கண்டு வந்துள்ளன.

தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக மூச்சு திணறடிப்பதிலும், ஆளும் வரக்கத்தின் 1991 க்குப் பிந்தைய பூகோள மூலதனத்திற்கு ஒரு மலிவு உழைப்பு மூலதனமாக இந்தியாவை மாற்றுவதற்கான உந்துதலிலும் சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் கொண்டிருந்த பங்கின் விளைவுகளை தற்போது அறுவடை செய்து கொண்டுள்ளன. இது, “சந்தை-சார்பு” சீர்திருத்தத்தை அமல்படுத்திய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் எப்போதும் மிக நெருக்கமான உறவுகளை கொண்டிருந்த ஒரு தொடர்ச்சியான வலதுசாரி அரசாங்கங்களை தாங்கிப் பிடித்ததையும் உள்ளடக்கியது, அந்த அரசாங்கங்களில் பெரும்பாலானவை காங்கிரஸ் தலைமையிலானவை. மேலும், ஸ்ராலினிஸ்டுகளே அரசு அமைத்த மாநிலங்களில், காலஞ்சென்ற மேற்கு வங்க முதலமைச்சரும் சிபிஎம் அரசியல் குழு உறுப்பினருமான ஜோதி பசுவின் இழிபுகழ் பெற்ற சொற்களை பயன்படுத்துவதானால் சோசலிசம் ஒரு “வெகு தொலை தூர கூக்குரல்” என்று அதை நிராகரித்துவிட்டு, தாமே “சந்தை-சார்பு” கொள்கைகளை அமல்படுத்தினர்.

பல தசாப்தங்களுக்கு முன்னர் “நிலபிரபுத்துவ” “ஏகாதிபத்திய-சார்பு” பிரிவிற்கு எதிராக, தேசிய முதலாளித்துவத்தின் “முற்போக்கான” கன்னைக்கு ஆதரவளிக்கும் பெயரில், பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளுடன் தொழிலாள வர்க்கத்தை பிணைத்து வைப்பதை ஸ்ராலினிஸ்டுகள் நியாயப்படுத்தினர், அதே சமயம் கடந்த மூன்று தசாப்தங்களாக, இந்து மேலாதிக்கவாத பிஜேபி அதிகாரத்திற்கு வராமல் தடுப்பதற்கான ஒரே வழி என்பதாக, இந்தியாவின் தொழிலாளர்களும் உழைப்பாளர்களும் –மிக சமீப காலம் வரை இந்திய உயரடுக்கு விரும்பி தேர்வு செய்யும் அரசாங்கக் கட்சியான– காங்கிரஸ் மற்றும் பிராந்திய பேரினவாத மற்றும் சாதி அடிப்படையிலான கட்சிகளையும் ஆதரிக்க வேண்டுமென அவர்கள் விவாதித்து வருகின்றனர்.

பெருகிவரும் சமூக நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் தனது சொந்த சோசலிச தீர்வை முன்னெடுப்பதில் இருந்து சிபிஎம், சிபிஐ மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் அதனைத் தடுத்து வருகின்ற நிலையில், நீண்டகால வறுமை, பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் பரவலான சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் மீதான மக்களின் ஏமாற்றத்தையும் கவலையையும் இந்து வலதால் எளிதாக சுரண்டிக்கொள்ள முடிந்துள்ளது. தொழிலாளர்கள் தங்களின் முதலாளித்துவ வர்க்க எதிரிகளின் கட்சிகள் உடனான பாராளுமன்றக் கூட்டுக்கள் மற்றும் தேர்தல் கூட்டணிகள் மூலமாக “ஜனநாயகத்தை பாதுகாக்க” வேண்டுமெனக் கூறி மூன்று தசாப்தங்களாக தொழிலாள வர்க்க போராட்டங்களை ஸ்ராலினிஸ்டுகள் நசுக்கி வந்த சமயத்தில், பிஜேபியும் இந்து வலதும் முன்னெப்போதையும் விட வலுப்பெற்று விட்டன.

தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும், “ஜனநாயக, மதச்சார்பற்ற மாற்று” அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவரும் பெயரில், காங்கிரஸூக்கும், அதன் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், மற்றும் பெருமளவில் செல்வாக்கிழந்த முதலாளித்துவக் கட்சிகளைக் கொண்ட ஏனைய வலதுசாரி கட்சிகளுக்கும் —அதாவது வலதுசாரி, பெரு வணிக அரசாங்கத்தை உருவாக்க— மீண்டும் ஆதரவை திரட்டுவதற்கு ஸ்ராலினிஸ்டுகள் முயன்றனர். இந்த அனைத்து கட்சிகளும் தமது சொந்த பிற்போக்கு வகுப்புவாத மற்றும் சாதிவாத விண்ணப்பங்களை உருவாக்குவதுடன், அவையனைத்தும் —இது ஸ்ராலினிஸ்டுகளுக்கும் பொருந்தும்— மோடியின் ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கையாக பாகிஸ்தான் உள்ளே நடத்தப்பட்ட பிப்ரவரி 26 விமானத் தாக்குதலைப் பாராட்டின, இது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த போருக்கு நெருக்கமான விளைவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், பூகோள மூலதனத்திற்கான மலிவு உழைப்பு மையமாகவும், ஒரு சீன விரோத இந்திய-அமெரிக்க “பூகோள மூலோபாய கூட்டாண்மை”யில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு இளைய பங்காளியாகவும் இந்தியா செயல்படுவதற்கு அனைத்து கட்சிகளுமே பிஜேபி ஐ போன்றே தம்மை அர்ப்பணித்துள்ளன.

முதலாளித்துவ ஸ்தாபகத்தின் ஒரு அங்கமாக பல தசாப்தங்களாக அவை செயல்பட்டு வந்ததற்குப் பின்னர், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்கள் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக சிபிஎம் உம் சிபிஐ யும் இருந்து வந்துள்ளன, அதே வேளையில் சோசலிசத்தை ஒருபுறமாக தள்ளிவிட்டு ஒரு “மக்கள்-சார்பு” மாற்றீட்டை பிரதிநிதித்துவம் செய்வதாக அக்கட்சிகள் கூறி வருவது உழைக்கும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

ஸ்ராலினிஸ்டுகளின் பாரம்பரிய தேர்தல் கோட்டைகளாக கருதப்பட்டு வந்த மூன்று மாநிலங்களில் —மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளா— அவர்கள் பலமுறை மாநில அரசாங்கங்களை ஸ்தாபித்துள்ளனர் என்றாலும் கூட, சிபிஎம் உம் சிபிஐ யும் வெறும் ஒரு இடத்தையே அங்கே தக்கவைத்துக் கொண்டுள்ளன. அவர்களது ஏனைய லோக் சபா வெற்றியாளர்கள் தென் இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அங்கு அவை வலதுசாரி தமிழ் பிராந்தியவாத திமுக தலைமையிலான மற்றும் ராகுல் காந்தி மற்றும் அவரது காங்கிரஸ் கட்சி ஆதரவிலான ஒரு வலதுசாரி தேர்தல் கூட்டணிக்குள் இணைந்திருந்தன.

மேற்கு வங்கத்தில், சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி தொடர்ச்சியாக 34 ஆண்டுகளாக மாநில அரசாங்கத்தை ஸ்தாபித்திருந்தமை 2011 இல் முடிவுக்கு வந்திருந்த நிலையில், ஸ்ராலினிஸ்டுகள் ஒரு முழுமையான தோல்வியை அங்கு சந்தித்தனர். அவர்கள் தங்களது எஞ்சிய இரண்டு இடங்களை மட்டும் இழக்கவில்லை, மாறாக 42 அரசியல் தொகுதிகளில் போட்டியிட்ட 41 வேட்பாளர்கள் அவர்களது வைப்பு நிதியையே இழந்தனர்.

கடந்த 2014 லோக் சபா தேர்தல்களில் சிபிஎம் அதன் வாக்குகளின் பங்கு, 22.7 சதவிகிதத்தில் இருந்து வெறும் 6.3 சதவிகிதமாக வீழ்ச்சியடைவதைக் கண்டது, மேலும் ஒட்டுமொத்த இடது முன்னணியும் 29.9 சதவிகிதத்தில் இருந்து 7.5 சதவிகித அளவிற்கு வாக்கு சரிவை சந்தித்தது.

சென்ற தசாப்தத்தின் இறுதியில், வலதுசாரி வாய்வீச்சு தலைவரான மம்தா பானர்ஜியும் அவரது திரிணாமுல் காங்கிரஸூம் (TMC) இடது முன்னணி அரசாங்கத்தின் இரக்கமற்ற முதலீட்டாளர் சார்பு கொள்கைகள் திணிப்பு மீதான அதிகரித்துவரும் எதிர்ப்பை சுரண்ட முடிந்தது. 2007 இல் நந்திகிராமில், ஒரு பெருவணிக சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவுவதற்காக தங்களது நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராடிய சிறு விவசாயிகளுக்கு எதிராக இடது முன்னணி அரசாங்கம் கொடூரமான பொலிஸ் மற்றும் குண்டர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது மேலும் தொழில்நுட்ப மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த தொழில் துறைகளில் வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்கியது ஆகியவற்றின் மூலமாக இது நிரூபிக்கப்பட்டது.

TMC எழுச்சியுற்று ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், பிஜேபி ஆல் மேற்கு வங்கத்தில் ஒரு தேர்தல் முன்னேற்றத்தை உருவாக்க முடிந்தது, அங்கே அது பாரம்பரியமாக ஒரு சிறிய கட்சியாக இருந்து வந்தது என்றாலும், ஸ்ராலினிஸ்டுகள் முற்றிலும் திணறிக் கொண்டிருந்த நிலையில், TMC இன் ஆட்சிக்கு எதிராக வளர்ந்து வரும் மக்கள் சீற்றத்தை அது சாதகமாக்கிக் கொண்டது. 2019 தேர்தல்களில், மேற்கு வங்கத்தில் 2014 இல் 17 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்கு எண்ணிக்கையை கொண்டிருந்ததில் இருந்து பிஜேபி முன்னேற்றம் கண்டு தற்போது 40 சதவிகித மக்கள் வாக்குகளை வென்று, 18 இடங்களை கைப்பற்றியுள்ளது, அதே வேளையில் TMC 22 இடங்களை வென்று 43 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ள சிபிஎம் தலைமையிலான இடது முன்னணியின் தேர்தல் சரிவு, அதன் கட்சி அமைப்பிலிருந்து பெரும் கட்சித் தாவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் பிணைந்திருந்தது. ஆரம்பத்தில் இது TMC க்கு தாவுவதாக இருந்தது, ஆனால் மிக சமீபத்தில் உள்ளூர் கட்சித் தலைவர்கள் மற்றும் “அடிமட்ட” தொண்டர்கள் இருவரும் பிஜேபி க்கு தாவுவதை காண முடிந்தது. இதுதான் டசின் கணக்கான உயிர்களை பலி கொண்ட TMC இன் வன்முறைமிக்க இயக்கத்தை எதிர்கொள்ள ஒரே சாத்தியமான வழியாக நியாயப்படுத்தப்பட்டது. இந்த அபிவிருத்திகள் சிபிஎம் இன் மேற்கு வங்க பாரிய எந்திரம் ஊழல் நிரம்பியவையாக இருப்பதையும், மேலும் அரசாங்க வளங்களையும் மற்றும் அரசாங்க-பொலிஸ் பாதுகாப்பையும் அணுகுவதை சார்ந்திருப்பதான அரசியல் ரீதியாக தூய்மை கேடுள்ள வலையமைப்பாக இருப்பதையும் அம்பலப்படுத்துகின்றன.

மேற்கு வங்க சிபிஎம் இன் ஒரு பிரிவு, தீவிர வலதுசாரி மற்றும் சிபிஎம் இன் சபதம் எடுத்த முக்கிய எதிரியாக கருதப்பட்டு வந்த கட்சிக்குள் தாவுவதை நன்கு வெளிக்காட்டுவதாக, சிபிஎம் இன் இரண்டு முன்னாள் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பிஜேபி வேட்பாளர்களாக தேர்தலில் நின்றனர். அவர்களில் ஒருவரான முர்மு காகேன் புதிய லோக் சபாவில் ஒரு பிஜேபி பாராளுமன்ற உறுப்பினராக அமரவிருக்கிறார்.

இந்தியாவில் பெரும்பான்மையினர் வங்காள மொழி பேசும் இன்னொரு மாநிலமான திரிபுராவில், மேற்கு வங்கத்தை விட மோசமான நிலைமையை சிபிஎம் எதிர்கொண்டது. இது கடந்த லோக் சபாவில் மாநிலத்தின் இரண்டு இடங்களை தக்கவைத்துக் கொண்டிருந்தது. என்றாலும், இந்த தேர்தலில் இரண்டு இடங்களுமே பிஜேபி க்கு மாறிவிட்டது, சிபிஎம் பாராளுமன்ற உறுப்பினர் அவரது இரண்டாவது முறை பதவிக்காலத்தை முடித்திருந்தாலும் கூட. 15 ஆண்டுகள் ஆட்சிக்குப் பின்னர், திரிபுராவின் சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி அரசாங்கம் பிஜேபி தலைமையிலான தேர்தல் கூட்டணி மூலம் கடந்த ஆண்டு வெளியேற்றப்பட்டது.

ஸ்ராலினிஸ்டுகள் இன்னமும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கேரளாவில், சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (Left Democratic Front - LDF) அதன் எட்டு இடங்களில் இருந்து வெறும் ஒன்றுக்கு வீழ்ச்சி கண்டது. LDF இன் வாக்குகளின் பங்கு 40 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதம் சரிவு கண்டு தற்போது 32 சதவிகிதமாக உள்ளது, இது முன்னெப்போதையும் விட மிக மோசமான முடிவாகும். காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (United Democratic Front - UDF) மாநிலத்தின் ஏனைய 19 இடங்களை கைப்பற்றியுள்ளது, இது அதன் வாக்குகளின் பங்கை 47 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

LDF அரசாங்கம் தற்போது வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பதற்காக அதன் அனைத்து சக்தியையும் பயன்படுத்துகிறது. மே 17 அன்று, ஐரோப்பிய மூலதனத்தை தீவிரமாக நாடும் ஒரு வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக, கேரள முதலமைச்சரும் அரசியல் குழு உறுப்பினருமான பினராயி விஜயன், லண்டன் பங்குச் சந்தையில் ஒரு வர்த்தக அமர்வை திறப்பதற்கான ஒரு துவக்கத்தை செய்துள்ளார். பாகிஸ்தான் மீதான மோடியின் தற்பெருமை பீற்றப்பட்ட இரண்டு “துல்லிய தாக்குதல்கள்” மூலமாக எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தியதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்து, அக்டோபர் 2016 இல் மாநில சட்டமன்றத்தில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் அதற்கு விஜயன் ஆதரவளித்தார்.

சிபிஎம் அரசியல் குழு, கட்சி “ஒரு கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது” என்பதுடன் “நடந்தது குறித்த மீளாய்வு” க்கு உறுதிபூண்டுள்ளது என்பதை ஒப்புக் கொண்டது என்ற ஒரு சுருக்கமான அறிக்கையை விடுத்து கட்சியின் தேர்தல் பின்னடைவிற்கு பதிலிறுத்தது.

தொழிலாள வர்க்கத்தை இந்திய முதலாளித்துவம், அதன் கட்சிகள், மற்றும் அரசுடன் பிணைப்பதற்கான தமது முயற்சிகளை தீவிரப்படுத்தி ஸ்ராலினிஸ்டுகள் இன்னும் வலதை நோக்கி நகர்வார்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக, மேற்கு வங்க சிபிஎம் அரசியல் குழு உறுப்பினர் முகம்மெட் சலீம் இன் புலம்பல் இருந்தது, மாநிலத்தில் காங்கிரஸூடன் ஒரு தேர்தல் கூட்டணியை வைப்பதற்கு சிபிஎம் தவறிவிட்டது என்று அவர் புலம்பினார்: “கூட்டணி வைத்திருந்தால், முடிவு முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருக்கும்” என்று அவர் வலியுறுத்தினார்.

ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

இந்திய பெருவணிகங்கள் மோடி மற்றும் அவரின் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சியை இரண்டாவது பதவிகாலத்திற்கு முன்நகர்த்துகின்றன

[24 May 2019]

வர்க்கப் போராட்டங்கள் கூர்மையடைகின்ற நிலையில்,

இந்திய ஸ்ராலினிஸ்டுகள், வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கத்தை ஸ்தாபிக்க தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

[1 May 2019]