ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The vindictive campaign against Chelsea Manning, America’s political prisoner

அமெரிக்காவின் அரசியல் கைதி செல்சியா மானிங்கிற்கு எதிரான பழிவாங்கும் பிரச்சாரம்

Niles Niemuth
18 July 2019

இரகசிய செய்தி வெளியீட்டாளரும் அரசியல் கைதியுமான செல்சியா மானிங், வேர்ஜீனியா, அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள மத்திய தடுப்புக்காவல் மையத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக தற்போது வரை அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், அவரது நிதி நிலைமையை சீர்குலைக்கும் வகையிலான தண்டனைக்குரிய அபராதங்களையும் அவர் எதிர்கொள்கிறார்.


செல்சியா மானிங்

மானிங் எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கபடவில்லை, அவர் மீது எந்தவொரு குற்றமும் சுமத்தப்படவுமில்லை. மாறாக, ஊடகவியலாளரும், விக்கிலீக்ஸ் ஸ்தாபகருமான ஜூலியன் அசான்ஜை அமெரிக்க சிறையிலிடுவதற்கு, அல்லது இன்னும் மோசமான நிலைமைக்குள் அவரைத் தள்ளுவதற்கு வழிவகுப்பதான ஒரு பெரும் நடுவர் மன்றத்தின் முன்னிலையில் அவருக்கு எதிராக – கொள்கை ரீதியாகவும் தைரியமாகவும்- சாட்சியமளிக்க மறுத்ததற்கு மானிங் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சாட்சியமளிக்க மறுத்ததற்காக மானிங் மீது கூட்டாட்சி மாவட்ட நீதிபதி அந்தோனி ட்ரெங்கா விதித்திருந்த தினசரி அபராதமான 500 டாலரில் இருந்து 1,000 டாலராக அது இருமடங்காக்கப்பட்டது, தற்போது அவர் மொத்தம் செலுத்த வேண்டிய அபராதம் 18,000 டாலராக சேர்ந்துள்ளது. மானிங்கிற்கு எதிரான முன்னெப்போதுமில்லாத நிதி அபராதங்கள் அவர் தனிப்பட்ட திவால் நிலைமை எதிர்கொள்வதற்கு அச்சுறுத்துகிறது என்பதுடன், இதன் விளைவாக ஏற்கனவே ஜூன் மாதத்தில் தனது குடியிருப்பை அவர் இழந்துள்ளார்.

மாபெரும் நீதிமான்கள் குழு அதன் பதவிக் காலம் அக்டோபர் 2020 இல் முடிவடைவதற்கு முன்னதாக இவ் வழக்கை விசாரிக்க அமருமானால், 440,000 டாலருக்கு அதிகமான அபராதம் அவர் மீது சுமத்தப்படும் என்று மானிங்கின் வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர், அவர்கள் கூறவிருக்கும் இந்த அதிகப்படியான அபராத தொகை, அமெரிக்க அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத் தடையை (US Constitution’s Eighth Amendment prohibition) மீறும்.

2010 இல் மானிங் கசியவிட்டதான போர் பற்றிய பதிவுகள், இராஜதந்திர செய்திகள் மற்றும் “கூட்டுக் கொலை” காணொளி ஆகியவற்றை அம்பலப்படுத்துவதில் அசான்ஜின் பங்கு குறித்து ட்ரம்ப் நிர்வாகம் அவரை பின்தொடர்ந்து வருகிறது. அதிகபட்சமாக 175 ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு சாத்தியமுள்ள குற்றச்சாட்டின் பேரில் அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதற்கு காத்திருக்கிறார் என்றாலும், ஒரு போலியான பிணை மீறல் குற்றச்சாட்டிற்காக இங்கிலாந்து, இலண்டனில் அதிகபட்ச பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் தற்போது அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

உண்மையில், மானிங் இன்னமும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது, கூடுமாயின் மரண தண்டனை விதிப்பது உட்பட, மேலதிக குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்துவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருவதையே குறிக்கிறது. ஒருமுறை ட்ரம்ப் நிர்வாகத்தின் பிடிக்குள் அசான்ஜ் பாதுகாப்பாக சிக்கிவிட்ட பின்னரே, அவர்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவர்.

மானிங்கிற்கு எதிராக அரசாங்கம் பழிவாங்கும் பிரச்சாரத்தை நடத்துகின்ற போதிலும், அசான்ஜூக்கு எதிராகவோ அல்லது எந்தவொரு பிற பெரும் நீதிமான்கள் குழுவின் முன்பாகவோ சாட்சியமளிப்பதற்கு கொள்கை ரீதியாக மறுப்பதில் அவர் மிகுந்த உறுதியுடன் இருக்கிறார். நீதிபதி ட்ரெங்கா, ஒரு வார கால அவகாசத்திற்குப் பின்னர் மே மாதத்தில் இரண்டாவது முறையாக மானிங்கை சிறையிலடைத்தபோது நீதிபதியிடம், “இது தொடர்பாக எனது கருத்தை மாற்றிக் கொள்வதை விட இறப்பதற்காக பட்டினியாக” கிடப்பேன் என்று அவர் கூறியதுடன், “மேலும் அதை நான் கூறியபோது, முற்றிலும் உண்மையாகவே கூறினேன்” என்றும் சேர்த்துக் கூறினார்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை கசியவிட்டதற்காக விதிக்கப்பட்ட 35 ஆண்டு கால சிறைத்தண்டனையில் ஏழு ஆண்டுகளை அவர் ஒரு இராணுவச் சிறையில் கழித்துவிட்டிருந்தார் என்றாலும், ஐ.நா. முகமை கூறுவது போல, அந்த காலகட்டத்தில் அவர் சித்திரவதையான நிலைமைகளுக்கு ஆளானார் என்பதுடன், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தாலோ அல்லது பெருநிறுவன ஊடகங்களில் இருக்கும் அதன் சந்தர்ப்பவாதிகளாலோ மானிங் ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டார்.

மானிங் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் அதே வேளை, ஈராக்கில் போர்க்குற்றங்களைச் செய்த எடி கல்லாகெர் (Eddie Gallagher) மற்றும் 2014 இல் எரிக் கார்னரை மூச்சுத் திணறடித்து கொன்றவரான டானியல் பான்ராலியோ (Daniel Pantaleo) போன்ற கொலைகார காவலர்கள் சுதந்திரமாக திரிகின்றனர் என்பதுடன், அரசின் மிக உயர்ந்த மட்டங்களிலிருந்து ஆதரவையும் அவர்கள் பெற்று வருகின்றனர். தண்டனைகள் எதுவுமில்லாமல், அவர்களது குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்ட பெற்றோர்களாகவும், மற்றும் ஆண்களும் பெண்களும் சித்திரவதை முகாம்களுக்குள் நெரிசலான நிலைமைகளுக்குள்ளாகவும் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கூட்டாட்சி குடிவரவுப் படைகளில் உள்ள பாசிச கூறுகள் மிருகத்தனமான குற்றங்களைச் செய்கின்றன.

மானிங்கும் அசான்ஜூம் அம்பலப்படுத்திய போர்க்குற்றங்களின் சிற்பிகள், அவர்களது கைகளில் மில்லியன் கணக்கானவர்களின் இரத்தம் சொட்டும் நிலையிலும், அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்ற அச்சம் எதுவுமின்றி தங்களது வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.

மானிங் மீதான மூர்க்கத்தனமான துன்புறுத்தல் பற்றி அநேகமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக தனி ஆளாக எதிர்த்து நிற்க அவர் விடப்பட்டுள்ளார். இது, பிரதான அரசியல் பிரமுகர்களிடமிருந்து எந்தவொரு அறிக்கையும் வெளிவருவதற்கு தூண்டவில்லை. மேலும் இது, ஊடக வர்ணனையாளர்கள் மற்றும் கட்டுரையாளர்களின் கருத்துக்கு உட்படவுமில்லை, ஆயினும், ரஷ்யாவில் அல்லது சீனாவில் அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் குறிவைக்கப்பட்ட பிற நாடுகளில் ஒரு இரகசிய செய்தி வெளியீட்டாளர் மீது இதேபோன்ற நிபந்தனைகள் திணிக்கப்பட்டிருந்தால், ஜனநாயக உரிமைகள் மீறல் மற்றும் உரிய செயல்முறையைப் பற்றி உபதேசிப்பதற்கு இவர்கள் தங்கள் பேனா மையை செலவழிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

மானிங் துன்புறுத்தப்படுவதை பிரதான ஊடகங்களும், ஜனநாயகக் கட்சியும் ஆதரிக்கின்றன. ஜனநாயகக் கட்சியினரால் “ரஷ்ய முகவர்” என்று அவதூறாகப் பேசப்பட்ட அசான்ஜ் பக்கம் திரும்புவதற்கு, வோல் ஸ்ட்ரீட்டிற்கு ஹிலாரி கிளிண்டனின் ஊழல் அடிபணிதல் பற்றிய உண்மையான தகவல்களை வெளியிட்டு டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உதவியவரான "ரஷ்ய முகவர்" என்று ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டிய அசாஞ்சை காட்டிக்கொடுக்க மானிங் மறுக்கிறார் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளைப் போல, ஜனநாயகக் கட்சியை நோக்கிய போலி இடது குழுக்களின் தரப்பில் மானிங் குறித்து நிலவும் மவுனம், குறிப்பாக கண்டனத்திற்குரியது. இது அவர்களது “மனிதாபிமான” மற்றும் “சோசலிச” பாசாங்கு மோசடியை அம்பலப்படுத்துகிறது. மானிங்கை அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்வதற்கான அவர்களது மறைமுக ஆதரவு அவர்களை தொழிலாள வர்க்கத்தின் எதிரிகளாக அடையாளப்படுத்துகிறது.

அமெரிக்காவிலும், மற்றும் உலகெங்கிலுமாக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்ட அனைவரின் நிபந்தனையற்ற ஆதரவுக்கு தகுதியான ஒரு வீரப் பெண்மணியாக மானிங் உள்ளார். அவரது சுதந்திரத்திற்கான கோரிக்கை அசான்ஜின் சுதந்திரத்திற்கான போராட்டத்துடன் இணைந்து எழுப்பப்பட வேண்டும்: ஏனென்றால், இரண்டும் பிரிக்கமுடியாத வகையில் இணைந்தவை.

வழி காட்டியுள்ளது. அசான்ஜ் அமெரிக்காவிற்கு கையளிக்கப்படுவதை எதிர்ப்பது அதன் உத்தியோகபூர்வ கோரிக்கைகளில் ஒன்றாகும். சர்வதேச சட்டத்தையும் மீறி, புகலிடம் வழங்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர் ஏழு ஆண்டுகளாக வசித்து வந்த இலண்டனின் ஈக்வடோரிய தூதரகத்தின் கதவுகளை மொரேனோ திறந்து ஏப்ரலில் ஒரு பிரிட்டிஷ் பெருநகர பொலிஸ் கைப்பற்றுதல் குழு அசான்ஜை இழுத்துச் செல்வதற்கு அனுமதித்தார்.

மானிங் மற்றும் அசான்ஜின் விடுதலைக்கான போராட்டம் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். இது செயலூக்கமானதாக இருக்க வேண்டுமானால், இந்தப் போராட்டம், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்துடனும் போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடனும் இணைக்கப்பட வேண்டும்.

அசான்ஜ் அமெரிக்காவிற்கு கையளிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், மேலும் அவரதும் மானிங்கினதும் நிபந்தனையற்ற சுதந்திரத்தை வென்றெடுக்கவும் உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் சர்வதேசத்தின் சர்வதேச குழுவுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஒரு உலகளாவிய பாதுகாப்புக் குழுவை (Global Defense Committee) அமைக்க அழைப்பு விடுத்துள்ளன.

மானிங்கையும் அசான்ஜையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இணைவதற்கு இப்போதே பதிவு செய்யுங்கள்!