ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ජනාධිපතිවරනයේ දී නසසපය දක්ෂිනාංශික එජාප අපේක්ෂකයා වැලඳ ගනියි

இலங்கை ஜனாதிபதி தேர்தலில்  நவ சம சமாஜ கட்சி  வலதுசாரி  ஐ.தே.க.  வேட்பாளரை அரவணைத்துக்கொள்கிறது

Wilani Peris
5 Noverber 2019

நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தமது  அங்கத்தவரான நந்திமித்ர பெத்தேகமகேவை  வேட்பாளராக  நிறுத்தியுள்ளது.  கோட்டாபய இராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பக்கம் “வாக்குகளை திருப்பிவிடுவதே" பெத்தேகமவை போட்டியிடவைப்பதன் குறிக்கோள் என ககன இணையத் தளத்திற்க்கு அக்டோபர் 10 அன்று வழங்கிய செவ்வியில் ந.ச.ச.க. தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கூறினார். புதிய ஜனநாயக முன்னணியானது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டதாகும்.

சுமார் கடந்த இரண்டு தசாப்த காலமாக வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தலைவர் தற்போதய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய பங்காளியாக செயற்படும் ந.ச.ச.க. தலைவரின் வெட்கக்கேடான பிரகடனம் புதுமையானது அல்ல. சீரழிந்த அரசியலுக்குள் பயணிக்கும் இந்த போலி இடது அமைப்பு, தொழிலாள வர்க்கத்திடம் இருந்து முதலாளி வர்க்க ஆட்சியை பாதுகாப்பதற்கு திடசங்கற்பம் பூண்டிருக்கும் ஈனச்செயலே இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.பெ.) வேட்பாளர் கோட்டாபய இராஜபக்ஷ, "தீவிர பாசிசவாதியும் இனவாதியும் ஆகையால் நாட்டில் கண்ணீர் வெள்ளத்தினை" ஓடவிட தயாராவதை தடுப்பதற்கு, "அவருக்கு எதிராக பிரபல செயல்திட்டங்களை முன்வைக்கும்" சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக கூறி தமது  தீர்மானத்தை நியாயப்படுத்துகிறார்.

இதற்கு முன்னர் அக்டோபர் 5 அன்று தனது கட்டுரையொன்றில், "சகல ஜனநாயக தலைவர்களும் பாசிசத்திற்கு எதிராக வாக்களிக்குமாறும், பாசிச ஆட்சியாளர் அதிகாரத்துக்கு வருவதை தடுக்குமாறும், சகல சோசலிச மற்றும் ஜனநாயக  சக்திகளுமான வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறோம்" என அவர் அழைப்புவிடுத்துள்ளார். பிரேமதாச "மிகவும் பிரபல்யமான பிரதான ஜனநாயக வேட்பாளரும் நேர்மையான, உறுதியுடன் கூடிய தாராளவாதி” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது "பாசிசத்தை நிறுத்துவதற்கே" என கருணாரத்ன கூறுவது கொடூரமான அரசியல் புரட்டாகும்.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. மற்றும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய இராஜபக்ஷ இராணுவ மற்றும் பாசிச சிங்கள இனவாத குழுக்களை தளமாகக் கொண்டு எதேச்சதிகார ஆட்சி ஒன்றுக்கு தயாராவதை, தனது பிற்போக்கு நிலைப்பாட்டினை நியாயப்படுத்த கருணாரத்ன பயன்படுத்திக்கொள்கிறார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ உட்பட ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவர்கள், கடந்த ஆட்சி காலத்தில் சிங்கள இனவாதத்தை கிளறிவிட்டு தமிழர் விரோத யுத்தத்தை கொடூரமாக முன்னெடுத்து சென்ற அதேவேளை, தொழிலாளர்களையும் வறியவர்களையும் அடக்குவதற்கு அதைப் பயன்படுத்தி கொண்டதும், கோட்டாபய அதன் தளபதியாக இருந்தமை இரகசியமானதல்ல. தற்போது இந்த பிற்போக்கு கும்பல், நடப்பு அரசாங்கம் செல்வாக்கு இழந்துள்ள சூழலை சாதகமாக்கிக் கொண்டு அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள தயாரகின்றது.

கோடாபய இராஜபக்ஷ என்ற போர்வைக்குள் ஒழிந்துகொண்டு, கருணாரட்ன "தாராள ஜனநாயகவாதி" என பிரேமதாசவுக்கு வர்ணம் பூசுவதன் மூலம் அவரது பிற்போக்கு வரலாற்றினை மூடி மறைக்கின்றார். பிரேமதாச பிரதிநித்துவம் செய்யும் அமெரிக்க-சார்பு ஐ.தே.க., தமிழ் மற்றும் முஸ்லிம் விரோத இனவாதத்தை தூண்டிவிட்டு, தொழிலாள வர்கத்தை பிளவுபடுத்தி, ஆட்சி நடத்த ஆரம்பித்ததோடு ஏனைய  முதலாளித்துவ கட்சிகளின் ஒத்துழைப்புடன் தமிழர்-விரோத யுத்தத்தை ஆரம்பித்தது அக் கட்சியின் அரசாங்கமே என்பதை தொழிலாளர்களும் இளைஞர்களும் மறந்துவிடவில்லை. 1977 இல் இருந்து திறந்த பொருளாதார கொள்கைக்கூடாக தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த உரிமைகளை இல்லாதொழிக்க தாக்குதல் தொடுக்கத் தொடங்கியது ஐ.தே.க. அரசாங்கமே ஆகும். அதன் பிற்போக்கு வரலாற்றுப்பதிவு மிக நீண்டதாகும்

சஜித்  பிரேமதாச, தற்போது கோட்டாபயவக்கு சரிக்கு சமனாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருப்பதாக காட்டிக்கொள்ள "தேசிய பாதுகாப்பு" என்ற மந்திரத்தினை உச்சரித்துக்கொண்டு தானும் பொலிஸ்-இராணுவத்தால் பலப்படுத்தப்பட்ட ஆட்சியொன்றினை  அமைப்பதாக உறுதி வழங்குகிறார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது வீழ்ச்சியுற்றுவரும் உலக முதலாளித்துவ நெருக்கடியினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் ஐ.தே.க.வினதும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வினதும் வேட்பாளர்கள் நிறைவேற்றப் போவதாக வழங்கும் வாக்குறுதிகள் முழுமையான பொய்யாகும். எந்த அடிப்படையான வாக்குறுதியையும் இந்த முதலாளித்துவ கட்சிகளுக்கு வழங்க முடியாது. சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு எதிராக, சர்வதேச ரீதியாக வளர்ச்சியடையும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியுடன், இலங்கையின் தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்கு வந்திருப்பது இலங்கையின் ஆளும் வர்க்கத்தை  ஆழமான அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. தொழிலாள வர்க்கப் போராட்டத்துடன்  வறிய விவசாயிகளினதும் மாணவர்களினதும் போராட்டங்களும் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகின்றன.

ஏனைய நாடுகளைப் போலவே, இலங்கை ஆளும் வர்க்கமும் இந்த போராட்டங்களை நசுக்கவும், நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது திணிக்கவும் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு மாறுவதற்குத் தயாராகி வருகிறது. கோடாபய இராஜபக்ஷவும் பிரேமதாசவும் "தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும்" "பலமான மற்றும் ஸ்திரமான நிர்வாகத்தை" உறுதி செய்வதற்கும் தங்கள் செயற்பட்டியலில் முதலிடம் கொடுத்துள்ளோம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த முதலாளித்துவக் கட்சிகளின் வேட்பாளர்களிடையே தொழிலாள வர்க்கத்திற்கும் ஏழைகளுக்கும் தேர்வு செய்துகொள்வதற்கு யாரும் கிடையாது. அவர்களுக்கிடையில் என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், முதலாளித்துவ வர்க்கத்தை பாதுகாப்பதற்கான ஒரு அடக்குமுறை ஆட்சியை ஸ்தாபிப்பதில் அவர்கள் ஒருமனதாகவே உள்ளனர்.

ந.ச.ச.க. வேட்பாளர் பெத்தேகமகே ஒரு தொலைக்காட்சி உரையில், தனது கட்சித் தலைவரின் கருத்துக்களை மீண்டும் கூறினார். ந.ச.ச.க. ஜனநாயகத்தின் ஓட்டத்துடன் இணைந்து செயல்படுவதாக அவர் பெருமிதம் கொண்டார். "2015 ஆம் ஆண்டின் மக்கள் வெற்றியின் எதிர்பார்ப்புகளை முன்னேற்றுவதற்கான போக்குடன்" ந.ச.ச.க. ஜனநாயகத்தை அபிவிருத்தி செய்யும் பாதையில் செயல்படுவதாக அவர் பெருமையாகக் கூறிக்கொண்டார்.

கருணாரட்னவும் அவரது கூட்டாளிகளும் முன்னிலைப்படுத்திய 2015 மக்கள் வெற்றி என்று அழைக்கப்படுவது, இராஜபக்ஷ அரசாங்கத்தை வெளியேற்றி ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேனவை அதிகாரத்தில் அமர்த்திய ஆட்சி மாற்றமே ஆகும். ஐ.தே.க.வை சுற்றியுள்ள ந.ச.ச.க. உட்பட போலி-இடது அமைப்புகள், இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது பெருகிவரும் மக்கள் எதிர்ப்பைத் திசைதிருப்பவும், போலி வாக்குறுதிகளை அளித்த சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவரவும் அர்ப்பணித்துக்கொண்டிருந்தன. உண்மையில், இலங்கையை தனது புவிசார் அரசியல் சூழ்ச்சிகளுடன் இணைக்க வாஷிங்டன் மேற்கொண்ட தந்திரோபாய நடவடிக்கையுடன் அவர்கள் அணிதிரண்டு நின்றனர். வாஷிங்டன், இராஜபக்ஷவின் ஜனநாயக-விரோத ஆட்சியை ஆதரித்த போதிலும், பெய்ஜிங்குடனான இராஜபக்ஷவுடனான உறவை எதிர்த்தது.

"ந.ச.ச.க. வேட்பாளர் பெருமை பிதற்றும்" மக்கள் வெற்றிகள் என்ன? ஆட்சிக்கு வந்து வெகுகாலம் செல்ல முன்னமே, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கடன் வாங்கியதோடு சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தத் தொடங்கியது. சம்பளத்தை 107 சதவீதம் உயர்த்தியுள்ளதாக அரசாங்கம் பெருமை பேசுகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், அதாவது 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், பொதுத்துறையின் உண்மையான ஊதியம் முறையே 7 சதவீதம் மற்றும் 2 சதவீதம் குறைந்துள்ளது. வாழ்க்கை மற்றும் சமூக உரிமைகள் சீரழிக்கப்படுவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அடக்குவதற்கு இப்போது அத்தியாவசிய சேவை உத்தரவுகளை பிறப்பிக்கத் தொடங்கியுள்ள அரசாங்கம், மாணவர் போராட்டங்களை அடக்குவதற்காக பொலிஸை கட்டவிழ்துவிடுகின்றது.

இராஜபக்ஷ அரசாங்கம் தமிழர்களின் மனித உரிமைகளை மீறியமை பற்றி விசாரணை நடத்தி வருவதாகக் கூறிய சிறிசேன மற்றும் விக்ரமசிங்க, உண்மையில் போர்க்குற்றங்களை மூடி மறைத்திருந்தது. வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது. இலங்கை இராணுவம் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் சீனாவுக்கு எதிராக திட்டமிடும் இராணுவத் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சிறிசேனவும் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான வாக்குறுதியை கைவிட்டு, அதற்குப் பதிலாக ஜனாதிபதியின் சில அதிகாரங்களை குறைத்த 19வது திருத்தத்துடன் கைகளை கழுவிக்கொண்டனர்.

இவையே “2015 ஆம் ஆண்டின் மக்கள் சாதனைகள்” ஆகும். கருணாரத்ன ஜனவரி 8 அன்று சிறிசேன தேர்வானதை "பெப்ரவரி புரட்சி" என்று அழைத்தார். அந்த "புரட்சியை" பாதுகாக்கும் பெயரில், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுத்த போராட்டங்களை பிற்போக்கு "சதி" என்று குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டம், வளர்ச்சிக்கு இன்றியமையாத நடவடிக்கை என்று அவர் அறிவித்தார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் கருணாரட்னவும் பங்கேற்றதோடு அவசரகால சட்டத்தை விதித்து நாடு முழுவதும் இராணுவத்தை கட்டவிழ்த்துவிட்டதை முழுமையாக ஆதரித்தார்.

மேலும் வலதுபக்கம் சென்ற ந.ச.ச.க. தலைவர், முதலில் "ஜனநாயகம்" பாதுகாக்கப்பட வேண்டும் என்று அறிவித்து ஒரு சோசலிச வேலைத் திட்டத்திற்கான போராட்டத்திற்கு குழிபறித்தார். ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பது அவரைப் பொறுத்தளவில் ஐ.தே.க. ஆட்சியைப் பாதுகாப்பதாகும் ந.ச.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் தனது தொலைக்காட்சி உரையில், அவர் சோசலிசத்திற்கான போராட்டத்தை இழிந்த முறையில் தாக்கினார். சோசலிச வேலைத் திட்டத்தை முன்வைப்பது "சோசலிசத்தை பற்றிய கதைகளை புலம்பி, மக்களின் வாக்குகளின் ஒரு பகுதியைப் பறித்து, அவற்றை குப்பையில் போட்டு,” இனவெறி பாசிச சக்திகள் பயனடைவதற்கு வழிவகுப்பதற்கே", என்று அவர் கண்டித்தார்.

முதலாளித்துவத்துடன் இணங்கிப் போகும் உயர் மத்தியதர வர்க்கத்துடன் அணிதிரண்டுள்ள இந்த போலி-இடது அமைப்புகள், வளர்ச்சி கண்டுவரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் குறித்த தனது ஆழ்ந்த வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளன.

கோடாபய இராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச இருவரும் தயாரித்துள்ள எதிர் புரட்சிகர தாக்குதலுக்கு தொழிலாள வர்க்கம் தயாராக வேண்டும். ஏதாவதொரு முதலாளித்துவ வேட்பாளரின் பின்னால் ஊர்ந்து செல்வதன் மூலம் தொழிலாள வர்க்கத்தால் இதைச் செய்ய முடியாது. புரட்சிகர வர்க்கமாகிய தொழிலாள வர்க்கத்துக்கு, முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் சுயாதீனமாக ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப்புற ஏழைகள் உட்பட அனைவரையும் தம் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராடுவதன் மூலம் மட்டுமே முன்நோக்கி நகர முடியும்.

சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வேலைத்திட்டத்துக்காகவே ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் எதிராக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. அதன் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன ஆவார்.

ந.ச.ச.க. மற்றும் அதன் தலைவரான விக்ரமபாஹு கருணாரட்ன, நான்காம் அகிலத்தில் இருந்து கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் அதன் ட்ரொட்ஸ்கிச வேலைத் திட்டத்திலிருந்து பிரிந்து போன பப்லோவாத போக்கைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும், அதன் மீதமுள்ள பிரிவுகள், அந்த நாட்டின் முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்களை ஊக்குவித்து வருகின்றன. இந்த பப்லோவாத அரசியலில் இணைந்துகொண்டதன் விளைவாகவே, 1964 இல் லங்கா சம சமாஜக் கட்சியானது முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு கூட்டணியில் நுழைந்து, சர்வதேச சோசலிசக் கொள்கைகளை காட்டிக் கொடுத்து.

ந.ச.ச.க.வை ஸ்தாபிக்க தலைமை தாங்கிய விக்ரமபாஹு கருணாரட்ன, அவ்வப்போது ட்ரொட்ஸ்கிசத்தைப் பற்றிப் பேசினாலும், ​​அவர் லங்கா சம சமாஜக் கட்சியின் பப்லோவாத துரோகத்திலிருந்தே அரசியலைத் தொடங்கினார். அவரும் அடங்கிய ஒரு குழு, 1970 களின் பிற்பகுதியில், ஸ்ரீ.ல.சு.க,-ல.ச.ச.க. மற்றும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி கூட்டாட்சிக்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டம் தீவிரமயமாகிய போது, அதில் இருந்து வெளியேறி ந.ச.ச.க.வை ஸ்தாபித்துக்கொண்டனர்.

போர்க்குணமிக்க வாய்ச்சவடால்களை விடுத்து இடதுசாரி மத்தியவாதிகளாகக் காட்டி கொண்ட இந்தக் கட்சி, தொழிலாளர்கள் குழுவை தவறாக வழிநடத்தி கட்சிக்குள் இணைத்துக்கொண்டது. ஆயினும் கூட, இந்தக் கட்சி எப்போதுமே ஏதவதொரு பிரதான முதலாளித்துவக் கட்சியுடன் இணைந்து, தொழிலாள வர்க்க சுயாதீனத்தை காட்டிக் கொடுத்து வந்துள்ளது. அதன் காட்டிக்கொடுப்புகளின் பட்டியலை எழுத பல நாட்கள் ஆகும். உறுப்பினர்களின் எண்ணிக்கை கைவிரல் எண்ணிக்கைக்கு குறைந்து போயுள்ள இந்த அமைப்பு இப்போது ஐ.தே.க.வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும், ட்ரொட்ஸ்கிசத்தை 1953இல் பப்லோவாதத்திடம் இருந்து மீட்டு சர்வதேச சோசலிச வேலைத்திட்டங்களின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாகும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கான புத்திஜீவிகள் சோ.ச.க.வில் சேர்ந்து அதை பரந்த அளவில் கட்டியெழுப்புவதை தாமதிக்க முடியாது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களின் காலகட்டத்திற்குள் நாம் நுழைகிறோம்.

இந்த அரசியல் போராட்டத்தை முன்னோக்கி செல்லுவதற்கு எம்முடன் சேர்ந்து, ஜனாதிபதித் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவை ஆதரிக்கவும்.