World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Zionism's legacy of ethnic cleansing

றிணீக்ஷீt 2மிsக்ஷீணீமீறீவீ மீஜ்ஜீணீஸீsவீஷீஸீ நீக்ஷீமீணீtமீs னீஷீக்ஷீமீ றிணீறீமீstவீஸீவீணீஸீ க்ஷீமீயீuரீமீமீs

இனச்சுத்திகரிப்பில் சியோனிசத்தின் பாரம்பரியம்

பகுதி2- இஸ்ரேலும் நாடுதிரும்புவதற்கான பாலஸ்தீனர்களில் உரிமையும்

By Jean Shaoul
23 January 2001

Use this version to print

மத்தியகிழக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் உடைவின் மத்திய பிரச்சனையாக இருப்பது 1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் நாட்டையும் வீட்டையும் இழந்த பாலஸ்தீனர்களின் நாடு திரும்பும் உரிமையை ஏற்றுக்கொள்ள சியோனிச அரசு நிராகரிப்பதாகும். இக்கட்டுரை இவ்விடயம் தொடர்பான இருபிரிவான கட்டுரையின் இரண்டாம் பகுதியாகும்.

இனச்சுத்திகரிப்பில் சியோனிசத்தின் பாரம்பரியம் - பகுதி 1

பாலஸ்தீனர்களின் நாடு திரும்பும் உரிமையை இஸ்ரேல் தொடர்ச்சியாக மறுக்கையில், இஸ்ரேல் உருவாகும்போது முதலாவதாக நிறைவேற்றிய சட்டமான ''நாடுதிரும்பும் சட்டம்'' உலகம் முழுவதுமுள்ள யூதர்கள் திரும்பிவந்து இஸ்ரேலில் வாழ வழிவகுத்தது.

இரண்டாம் உலக மகாயுத்தத்தை தொடர்ந்து நூறு ஆயிரக்கணக்கான யூதர்கள் ஐரோப்பா முழுவதும் இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களில் மிகமோசமான நிலைமையின் கீழ் வாழ்ந்து வந்ததுடன், ஏனையோரும் மோசமான யூத எதிர்ப்பினையும் மரியாதைக் குறைவையும் எதிர்நோக்கினர். சிலநாடுகள் இவர்களை ஏற்றுக்கொள்ள விரும்பியபோதும் இஸ்ரேல் அவர்களுக்கான ஒரேயொரு தாயகத்திற்கான சாத்தியப்பாட்டை வழங்கியது.

எவ்வாறிருந்தபோதும் இஸ்ரேலின் இச்சட்டவாக்கமானது தண்டனைக்குள்ளான யூதர்களுக்கான அடைக்கலம் கொடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் அடித்தளத்தில் மட்டும் செய்யப்படவில்லை. ஆரம்ப நிலையிலுள்ள நாடு உயிர்வாழவும் அதன் இயக்கத்திற்கான மலிந்த கூலிகளையும் பெற்றுக்கொள்ளவும் இக்குடிவரவினால் வழங்கப்பட்ட மனித சக்தி முக்கியமானதாக இருந்தது. இதனால் சியோனிச அரசு இஸ்ரேலில் யூதர்களின் குடிவரவை முக்கியமாக ஊக்குவித்தது. இதனால் 1948 இற்கும் 1952 இற்கும் இடையில் யூத சனத்தொகை இரண்டு மடங்கானது.

ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பாரிய யூதமக்களின் பாய்ச்சலின் பின்னர் ஸ்ராலின் மோசமான யூத எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துவைத்தார். யூதர்கள் பொய்வழக்குகளை எதிர்நோக்கியதுடன், சோவியத் யூனியனிலிருந்து யூதர்கள் வெளியேறமுடியாது கதவுகள் மூடப்பட்டன. இதனால் இஸ்ரேல் குடியேற்றத்திற்கான புதிய மூலமாக மத்திய கிழக்கையும் வட அமெரிக்காவையும் நோக்கியது. இதனை அடைவதற்காக தன்னிடமுள்ள சகலதையும் பயன்படுத்தியதுடன், அது அதற்கும் மேலாக பொதுவாக ''ஊக்குவிப்பு'' என குறிப்பிடும் அளவிற்கு சென்றது.

ஈராக்கின் யூதர்கள் தொடர்பானது மிகவும் அறியப்பட்டதும், பல புத்தகங்களில் ஆவணப்படுத்தப்பட்டும் உள்ளது. [MosheGat இன் The Jewish Exodus from Iraq 1948-1951, Shlomi Hillel இன் Operation Babylon இலும் பார்க்கலாம்] தற்போதய பாதுகாப்பு படையின் முன்னோடியான Mossad le-Aliya ஆல் ஆதரவளிக்கப்பட்ட சியோனிச இரகசிய படையால் அனுப்பப்பட்ட ஆத்திரமூட்டும் கைக்கூலிகள் யூதர்கள் வீடுகளை விட்டு வெளியேறி இஸ்ரேலுக்கு வரக்கூடிய நிலைமைகளை உருவாக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மொஸாட்டின் நடவடிக்கைகளால் ஒரு சில கிழமைகளுக்குள் ஈராக்கின் கிட்டத்தட்ட மொத்த யூத மக்களான 120,000 பேர் தமது வீடுகளை விட்டு வெளியேறி இஸ்ரேலுக்கு சொந்தமாகினர். சியோனிச-பலஸ்தீன முரண்பாடிற்கும், பிரித்தானியாவின் ஆதரவான மன்னர் பைஸல் இன் கீழும் ஈராக்கின் பிரதமர் நூரி சையதுவின் கீழும் அரசியல் முரண்பாடுகள் கிளர்ந்து எழுவதற்கு முன்னர் பைபிளின் பாலஸ்தீனமான பாபிலோனிய வெளிநாட்டில் 2500 வருடங்களாக யூதர்கள் எந்தவொரு பிரச்சனையும் இல்லாது வாழ்ந்துவந்தனர். இஸ்ரேல் ஈராக்கிய யூதர்களின் விருப்பமான உறைவிடமல்ல. வசதியும் பணமும் தொடர்புகளும் உள்ள சிலர் மேற்கு நோக்கிச் சென்றனர். ஆனால் பெரும்பான்மையானவர்கள் பாலஸ்தீன கிராமங்களின் அழிவுகளில் மேல் ''அபிவிருத்தியடையும்'' நகரங்களில் வீடுகள் கட்டப்படும்வரை உணவும் மருந்துவகைகளும் தட்டுப்பாடான இஸ்ரேலிய முகாம்களில் வாழ்ந்துவந்தனர்.

இதைதொடர்ந்த வருடங்களில் சியோனிசத்தில் எவ்வித அக்கறையற்ற மற்றும் ஐரோப்பாவில்போல் யூத எதிர்ப்பினையோ அல்லது மரியாதைக் குறைவையோ எதிர்நோக்காத மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் வாழ்ந்த முழு யூத சமுதாயமும் இஸ்ரேலை நோக்கிவந்ததுடன், இவர்கள் இஸ்ரேலின் பெரும்பான்மையாகினர். இக்குடியேற்றத்தின் அளவும் வேகமும் சிலவேளை இது ஏதாவது உடன்பாடுசெய்யப்பட்டிருக்கலாமா என ஐயுறவு கொள்ளச் செய்தது. மொரக்கோவின் மன்னரான ஹசான் தனது அரசியல் ரீதியான எதிர்ப்புக் குழுவான பென் பார்க்காவை இல்லாதொழிக்க பாரிஸில் உள்ள மொஸாட்டின் உதவியை அழைக்ககூடியதாக இருந்தது. இது தொடர்பான சூழ்நிலைகள் தெளிவாக்கப்படவில்லை. எகிப்தின் நாஸாரால் ஆதரவளிக்கப்பட்ட குடியரசுவாதிகளுக்கு எதிரான கொலைகாரத்தனமான உள்நாட்டு யுத்தத்தில் ஜேமனின் அரசபடைகள் இஸ்ரேலிய பாதுகாப்புபடைகளில் ஆதரவை பெற்றுக்கொண்டது.

அரபு முதலாளித்துவத்தால் கூறப்பட்ட நோக்கங்களையும் விருப்புகளையும் கவனத்தில் கொள்ளாதும் அவர்களது இஸ்ரேலிய எதிர்ப்பு வாயடிப்புகளுக்கு மத்தியிலும் சியோனிச அரசின் இருப்பானது அவர்களின் நடவடிக்கைகளிலேயே தீர்க்கமாக தங்கியிருந்தது.

இன்று இஸ்ரேலின் சனத்தொகையானது சோவியத் யூனியனின் உடைவின் பின்னர் வெளியேறிய 1 மில்லியன் மக்களுடன் இணைந்து அதன் மொத்த சனத்தொகையானது 6 மில்லியனுக்கு அதிகமாகியுள்ளது. இவர்களுள் பலர் யூதர்கள் அல்லாதவர்கள் என பரவலாக நம்பப்படுகின்றதுடன், இவர்கள் ரஷ்யாவின் பொருளாதார உடைவினால் உருவாகிய பரந்த ஏழ்மையிலும் சீரழிவிலிருந்தும் இருந்து தப்புவதற்கு வெளியேறியவர்களாகும். இது மறுபக்கத்தில் தமது அதிகாரத்தை குறைத்துவிடும் என பயமடைந்துள்ள மதவாதிகளை கோபமூட்டியுள்ளது.

இறுதியில் இஸ்ரேலின் சனத்தொகையின் பாரிய அதிகரிப்பானது இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு போதிய இடமில்லை அல்லது பெருப்பிக்கபட்ட பாலஸ்தீன பிரதேசத்தினை ஆதரிக்க வழி எதுவும் இல்லை என்பதை நிராகரிக்கின்றது. சியோனிசத்தின் முக்கிய பிரச்சனை என்னவெனில் பாலஸ்தீனர்களின் செலவில் யூதர்களை பெருக்குவதாகும். இஸ்ரேலினுள் தொடர்ந்து வாழும் பாலஸ்தீனர்கள் இரண்டாம் தரமானவர்களாக நடாத்தப்படுகின்றார்கள். இஸ்ரேலிய பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலிய யூதர்களுக்கு உள்ள உரிமைகள் இல்லை. 93% நிலம் யூதர்களது என கூறப்படுவதுடன், யூதரல்லாதோருக்கு வாடகைக்கு எடுக்க, வாங்க அல்லது விற்க உரிமை இல்லை. நிலத்திற்கான சட்டமானது பாலஸ்தீனர்களை அகதிகளாக்கியது மட்டுமல்லாது அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் இஸ்ரேலினுள்ளேயே பறித்தெடுக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1966 இலிருந்து பாலஸ்தீனிய இஸ்ரேலியர்கள் இராணுவ சட்டத்தால் ஆளப்படுகின்றனர்.

ஆறுநாள் யுத்தமும் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பும்

1967 யூன் ஆறுநாள் யுத்தத்தின் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலம், மேற்குகரை, காஸா, சிரியாவில் கோலான்குன்று பிரதேசங்களை கைப்பற்றிய பின்னர் பல பாலஸ்தீனர்கள் இரண்டாம் தடவையாக அகதிகளாகினர். அவர்கள் தமது வீடுகளைவிட்டு வெளியேறி ஜோர்டானையும் லெபனானையும் நோக்கி தப்பியோடினர். யுத்தத்தின் பின்னரான இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனர்களின் எதிர்ப்பு இஸ்ரேல் இராணுவத்திடமிருந்து பாரிய எதிர்ப்பை எதிர்நோக்கியது. முழுக்கிராமங்களும் தரைமட்டமாக்கப்பட்டதுடன் குடும்பங்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன.

பாலஸ்தீன இஸ்ரேலிய எழுத்தாளரான Nur Masalha வின் புத்தகமான A Land without a People: Israel, Transfer and the Palestinians, 1949-96 இல் ''உறுதியளிக்கப்பட்ட நிலத்தினை'' அதற்குரிய மக்களிடமிருந்து பறிப்பதற்கு சியோனிஸ்டுக்கள் எவ்வாறு திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினர் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். இக்கொள்கையானது 1948-49 யுத்தத்தின் பின்னரும் அரசியல்வாதிகள், இராணுவத்தால் மட்டுமல்ல இஸ்ரேலிய புத்திஜீவிகள் மத்தியிலும் தொடர்ந்ததை அவர் விளங்கப்படுத்துகின்றார். இக்கொள்கையில் நாடுகடத்தல், Kfir Qasim போன்ற படுகொலைகள், வீடுகள் உடைத்தல், வெளியேற்றல் போன்றவை அடங்கும்.

யுத்தம் முடிந்த ஒரு சில கிழமைகளுக்குள் வலதுசாரி சியோனிஸ்டுகளால் அல்லாது அரசாங்கக் கட்சியான தொழிற்கட்சியால் புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் யூதக்குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியரான ZeevSternhell தனது புத்தகமான The FoundingMyths of Israel இல் ''தொழிலாளர் இயக்கத்தை àருவாக்கிய சிலரின் கருத்துக்கு மாறாக உள் அரசியல் போராட்டத்தால் தூண்டப்பட்டு அவ்வியக்கத்தினை உருவாக்கியவர்களும் அதன் பின்வந்தவர்களும் உட்பட அக்கூட்டரசில் இருந்த அனைவரும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் மாற்றமுடியாத கொள்கையை உருவாக்குவது தொடர்பாக ஒன்றிணைந்திருந்தனர். 1940 இன் நடுப்பகுதியில் Mapai [தொழிற்கட்சி] இனுள் இருந்த பிளவுகளுக்கு மத்தியிலும் தொழிற்கட்சி குடும்பத்தினர் ஒரு மேலாதிக்கசக்தி ஒன்றால் வலியுறுத்தப்பட்டால் ஒழிய பகுதிகளை அல்லது பிரதேசங்களை விட்டுக்கொடுக்ககூடாது என்ற கொள்கைக்கு உண்மையாக இருந்தனர்'' என்பதை விளக்குகின்றார்.

Sternhell விளங்கப்படுத்துவதுபோல் இப்படியான ஒரு மாற்றம் தொடர்பாக பிரதம மந்திரியான லெவி எஸ்கோல் இடம் எவ்வித தத்துவார்த்த மாற்றீடு இருக்கவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை காலனித்துவப்படுத்துதை தடுக்க இயலாமல் போனமை அவரின் தனிப்பட்ட பலவீனத்திலிருந்து உருவாகவில்லை, மாறாக அரபு நகரங்களிலும் யவ்வாகைவா [Jaffa, Haifa] வை அண்மித்த பிரதேசங்களில் யூதர்கள் வாழலாம் மற்றும் அப்பகுதிகளை தமது சட்டபூர்வமான இருப்பிடமாகக் கருதலாம் என்றால் பாலஸ்தீன நாபுலுஸ், ஹப்ரோன் பிரதேசங்களிலும் அவர்கள் வாழ்வதை தடுப்பதற்கு எவ்வித காரணமுமில்லை என்ற சியோனிச விவாதங்களுக்கு பதிலளிக்கமுடியாத காரணத்தால் ஆகும்.

Sternhell இன்படி லெவிஎஸ்கோல் இன் பின்னர் பிரதமரான கோல்டா மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் என்னவெனில் அவர் முழுமனத்துடன் சியோனிச தொழிற் கட்சியினரின் தேசியவாத முன்னோக்கை தழுவிக்கொண்டதும் யூதமக்களின் அந்த நாட்டின் மேலுள்ள உரிமையை முற்றுமுழுதாக, உளவியல் ரீதியாக, சட்டபூர்வமான ஆதாரமாக வரலாற்றை காட்டுவதாலாகும். அவரைப் பொறுத்தவரையில் பாலஸ்தீனத்தில் ஒரேயொரு தேசிய இயக்கமே இருக்கமுடியும். அது யூத இயக்கமாகும். இதனால்தான் அவர் இஸ்ரேலிய வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ''பாலஸ்தீன விடுதலை இயக்கம்'', ''பாலஸ்தீன அரசு'' என்ற பதங்களை பாவிப்பதை தடைசெய்திருந்தார்.

நூற்றுக்கணக்கான ''ஆக்கிரமிப்பாளரின் சட்டங்கள்'' அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட போது அவை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனத்தினை மட்டுமல்லாது ஜெனீவா உடன்பாடுகளையும் நேரடியாக மீறியது. அடிப்படையான ஜனநாயக உரிமைகளை இது மீறியதல்லாமல் நிர்வாகத்தில் தடைசெய்தல், பாரிய நிலபறிப்பு, மக்களை பலாத்காரமாக இடம்பெயரச்செய்தல், சித்திரவதை போன்றவற்றையும் நடத்தியது.

பாலஸ்தீனர்கள் வீடற்றவர்களாக்கப்பட்டதும் பாரிய நிலப்பரப்பு இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு புதிய இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு வீடுகள் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் வலதுசாரி தீவிரவாதிகள் மட்டுமே மேற்குகரையில் [பைபிளில் பாலஸ்தீனத்தில் ஜீடயா, சமரியா என அழைக்கப்படுகின்றது] காலனித்துவப்படுத்த தீர்மானித்தனர். இவர்கள் புதிய குடியிருப்பாளராகினர். ஆனால் இது வரித்தள்ளுபடிகள் மானியங்கள் போன்ற நிதியுதவிகள் வழங்கியதன் மூலம் ஏழை இஸ்ரேலியர்கள் குடியேறுவதை ஊக்குவிப்பது சாத்தியமானது. இல்லாவிடின் அவர்களால் ஒரளவு வசிக்ககூடிய, இயலக்கூடிய வீடுகளை பெறுவது சாத்தியமில்லை. 1993 இல் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனைக்கு ஒஸ்லோவில் காணப்பட்ட உடன்பாட்டின் பின்னரும் இவை இரத்துச்செய்யப்படவில்லை. எதிர்மாறாக மேற்குகரையினதும் ஜெருசலமினதும் மக்கள் தொகையை மாற்றுமளவிற்கு அதிகரித்தது.

1967ம் ஆண்டு ஆறுநாள் யுத்தத்தின் விளைவாகவும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்ற ஐமிச்சப்பட்டவர்கள் மீதான இஸ்ரேலிய ஒடுக்குமுறையால் கூடுதலான பாலஸ்தீனர்கள் ஜோர்டானை நோக்கிதப்பிச்சென்றனர். மூன்று வருடங்களின் பின்னர் இஸ்ரேலிய உதவியுடன் கறுப்பு செப்டம்பர் என அழைக்கப்படும் அரசர் ஹசைனின் இராணுவ பிரசாரத்தில் பலர் வேட்டையாடப்பட்டு ஜோர்டானை விட்டுவெளியேறி லெபனானை சென்றடைந்தனர்.

1978 இலும் 1982 இலும் லெபனான் மீதான படையெடுப்பு மேலும் இடப்பெயர்வை இருவாக்கியது. இஸ்ரேலிய வான் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக தென்லெபனானில் உள்ள தமது வீடுகளைவிட்டு வெளியேறி பெய்ரூட்டை நோக்கிச் சென்றனர். இதனால் பல பாலஸ்தீனர்கள் பலதடவை அகதிகளாகினர். தென்லெபனானில் இஸ்ரேலின் 18 வருட ஆக்கிரமிப்பும் தொடர்ச்சியான வான் தாக்குதல்களும் எண்ணுக்கணக்கற்ற வீடுகளையும் கிராமங்களையும் அழித்துள்ளனர். 1948 இலும் 1982 இலும் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டபோதும் அவர்கள் புகலடைந்த இடங்களிலும் இஸ்ரேல் இராணுனத்தினதும் இரகசியப் படையினதும் நீண்ட கைகளில் இருந்து தப்பமுடியவில்லை.

பாலஸ்தீனர்களின் வீடுகள் ஜெருசலமில் புனிதமானதாகவில்லை. சியோனிஸ்டுக்களின் படி இது முழுமையானதும் பிரிக்க முடியாததுமான இஸ்ரேலின் தலைநகரமாகும். ஜெருசலம் ''அவர்களின் வாழ்க்கைக்கான மத்திய நிலையம்'' என ரூபிக்கப்பட முடியாவிடின் அவர்கள் சிக்கலாக வரையறுக்கப்பட்டதும் குற்றம் மிகுந்த சட்டங்களின் கீழ் அங்கு வாழ்ந்த பாலஸ்தீனியர்கள் தமது குடியிருக்கும் உரிமையை இழக்கின்றனர். குடியிருக்கும் உரிமையை இழப்பதானது ஜெருசலமை விட்டுவெளியெறி மேற்குகரையிலுள்ள கிராமத்திற்கு நாடுகடத்தப்படுவதுடன் ஜெருசலமிற்கு உள் வரும் உரிமையும் இல்லாதுபோகின்றது.

1993 ஒஸ்லோ உடன்படிக்கை

தொழிற்கட்சி அரசியல் வாதிகளான சிமோன் பெரஸ் 1993 இல் ஒஸ்லோ உடன்பாட்டை அடைவதற்கான முக்கிய பங்குவகித்தார், பின்னர் இவ் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட யிற்ஸாக் ரபீன் பாலஸ்தீன தேசிய உரிமையை சட்டபூர்வமாக்கும் மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தில் இதனை செய்யவில்லை. இவ்வுடன்பாடானது இஸ்ரேலின் சொந்த தேசிய நலன்களின் முன்நோக்கிலேயே இம்முரண்பாட்டிற்கான தீர்வு முன்வைக்கப்பட்டது. இவர்கள் சிக்கலான பிரச்சனைகளான ''அகதிகள் பிரச்சனை'', ஜெருசலம் தொடர்பான கேள்வி போன்றவற்றை பிற்போட்டதுடன், எல்லைகள் தொடர்பாகவும் நில பரிமாற்றம் தொடர்பாகவும் முதலில் உடன்பாடுகாண முயன்றனர்.

இஸ்ரேலின் வலதுசாரி எதிர்ப்பாளர்கள் நீடித்த இஸ்ரேல்-பாலஸ்தீன பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு கட்டத்தையும் குழப்ப முயன்றனர். இறுதி ஆய்வுகளில் பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் இப்பிரச்சனைக்கு முடிவுகட்ட ஆதரவளித்தபோதும் தொழிற்கட்சியினரும் அதன் தாராளவாதிகளும் மதவாத ஆதரவாளர்களாலும் வலதுசாரி அடிப்படைவாதிகளினை எதிர்க்க முடியவில்லை. மதவாத தொழிற் கட்சியினருக்கும் அமைதிவாத இயக்கத்தினருக்கும் மதவாத தேசிய வாதிகளுக்கும் இடையேயான உறவு மேல்மட்டத்தில் தெரிந்ததைவிட நெருக்கமானது. அனைவரும் பாலஸ்தீனர்களின் வெளியேற்றத்திற்கும், அவர்களுக்கான சமமான உரிமைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பாலஸ்தீனத்தின் மீதான யூத வரலாற்று, மதவாத உரிமையை கோரும் முன்னோக்கை அடித்தளமாக கொண்டிருந்தனர்.

சியோனிச அரசை உருவாக்குவதற்காக பாலஸ்தீனியர்கள் எவ்வாறு பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர் என்பதை தாராளவாத வரலாற்றாசிரியாரான Benny Morris சரியாக எடுத்துக்காட்டுகின்றார். அவரது தேசியவாத நிலைப்பாடு அவரின் ஆய்வின் தவிர்க்கமுடியாத விளைவை பார்க்க முடியாது மறைக்கின்றது. அவர் பிரித்தானிய Guardian பத்திரிகைக்கு ''ஜனாதிபதி கிளின்டனாலும் இஸ்ரேல் பிரதமரான எகூட் பராக்காலும் வழங்கப்பட்ட நியாயமான நிபந்தனைகளை [மேற்குகரையின்95% பிரதேசத்திலிருந்து ஜெருசலமின் அராபிய அரைப்பகுதி பிரதேசத்திலிருந்தும் இஸ்ரேலின் பின்வாங்கலும் பாலஸ்தீனர்களின் அரசுரிமையை ஏற்றுக்கொள்ளல்] ஆச்சரியமான முறையில் பாலஸ்தீனர்கள் நிராகரித்ததும், அகதிகளின் நாடுதிரும்பும் உரிமையை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவதும் 1967 இற்கு முந்திய நகரங்களையும் கிராமங்களையும் கோருவதும், கூடுதலான இஸ்ரேலியர்களில் இருந்து அந்தியப்படுவதும் அவர்களின் ஆதரவை பலவீனப்படுத்துவதும் கடந்த பத்தாண்டுகளாக சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைவதை உருவாக்கியது'' என எழுதியுள்ளார்.

அவர் தனது கட்டுரையை ''1948 இன் நிகழ்வுகள் சரியாகவோ அல்லது பிழையாக இருந்தாலும், பாலஸ்தீன அகதிகள் பிரச்சனையை உருவாக்குவதற்கு யார் குற்றம்சாட்டப்பட வேண்டியிருந்தாலும், இஸ்ரேலை பிரிவுபடுத்துவதை அடிப்படையான எந்தவொரு தீர்வும் யூத அரசின் அழிவுக்கு வழிவகுக்கும் என நான் உள்ளடங்கலான கூடுதலான இஸ்ரேலிய யூதர்கள் நம்புகின்றார்கள்'' என்பதுடன் முடிக்கிறார்.

மத்திய கிழக்கு ஐக்கிய சோசலிச குடியரசு

பாலஸ்தீன- இஸ்ரேல் பிரச்சனையின் வரலாற்றின் இக்குறுகிய மீள்பார்வையானது பாலஸ்தீனர்களின் நாடுதிரும்பும் உரிமை ஏற்றுக்கொள்வது எவ்வகையில் வரையறுக்கப்பட்டதாக இருந்தாலும் அது சியோனிச அரசின் ஜனநாயகமற்ற தன்மையையும், இக்கட்டுரை எடுத்துக்காட்டியது போல் இஸ்ரேல் மக்களற்ற ஒரு நாட்டில் உருவாக்கப்படவில்லை. மாறாக இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை திட்டமிட்டு வெளியேற்றப்பட்டதால் உருவாக்கப்பட்டதாகும்.

மேலும் இஸ்ரேல் அதன் அனைத்து மக்களுக்குமான சமூக சமத்துவத்தை வழங்குவதற்கான முன்னேற்றகரமான ஒரு சமுதாயமாக கருதமுடியாது. சியோனிச அரசானது மத நம்பிக்கையின் அடித்தளத்தில் அநீதிகளுக்கு மதிப்பளிக்கின்றது. அது மேலிருந்த கீழ்நோக்கி சமூக அரசியல் பிரிவுகளை கொண்ட ஒரு சமுதாயம் மட்டுமல்ல அது மிகவும் வெடிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.

சமத்துவத்தையும் சோசலிச கொள்கைகள் எனப்படுவதை அடிப்படையாக கொண்ட ஒரு நவீன சமூகம் என எடுத்துக்காட்டப்படுவதற்கு மாறாக அதன் உருவாக்கத்திலிருந்தே அது எதிரான அயலவர்களை கொண்ட சமுதாயத்தின் மத்திய ஊண்டுகோலாக இராணுவம் சேவை செய்யும் பாதுகாப்பு படைகளால் சூழப்பட்ட ஒரு அரசாகும்.

யூதமக்களின் ஒடுக்குமுறைக்கான சியோனிச தீர்வின் துயரமான வஞ்சனைப் புகழ்ச்சி சகிப்புத்தன்மைக்கும் சுதந்திரத்திற்குமான பாரம்பரியமானதும் வரலாற்று ரீதியானதுமான போராட்டத்துடன் தொடர்புபட்டிருந்தபோதும் இன்னொரு ஒடுக்கப்பட்டமக்களின் மீதான மூர்க்கமான ஒடுக்குமுறையாகும். இதன் விளைவு சியோனிச அரசால் அறுவடைசெய்யப்பட்ட வலதுசாரிகள் யூதர்களின் முன்னைய தலைமுறையினர் தப்பியோடிய அதிகாரத்துவ, உள்நாட்டு யுத்தத்திற்கு ஒத்த நிலைமைகளை தற்போது இஸ்ரேலினுள் மீண்டும் உருவாக்க பயமுறுத்துகின்றனர்.

தற்போதைய முட்டுச்சந்தி நிலைமைக்கு முடிவுகட்டுவது முதலாளித்துவத்திற்கு எதிராக பொதுவான போராட்டத்தில் சோசலிச சமுதாயத்தை கட்டுவதற்கு அரபு, யூத தொழிலாளர்களையும் புத்திஜீவிகளையும் ஐக்கியப்படுத்தும் அரசியல் இயக்கத்தின் அபிவிருத்தியில் தங்கியுள்ளது. இதுதான் பாலஸ்தீன தொழிலாளிகளும் விவசாயிகளும் அனுபவிக்கும் வரலாற்று அநீதிகளுக்கு உண்மையான தீர்வாகவும், உள்ளூர் ஆளும் வர்க்கத்தாலும் இலாபநோக்குடைய சர்வதேச மூலதனத்தினாலும் எண்ணை வார்க்கப்படும் இரட்டைப் பேய்களான யுத்தத்தையும் ஒடுக்குமுறையையும் முடிவுகட்ட கூடிய வழியாகும். மத்திய கிழக்கு சோசலிச குடியரசின் உருவாக்கமானது அப்பிரதேசத்திலுள்ள மக்களையும் பொருளாதாரத்தையும் பிரிக்கும் தற்போதுள்ள செயற்கையாக உருவாக்கப்பட்ட எல்லைகளை நீக்கி அப்பிரதேசத்திலுள்ள பாரிய இயற்கை வளங்களை பாவிப்பதன் மூலம் அம்மக்களின் சமூக, பொருளாதார, ஜனநாயக விருப்புகளை பூர்த்திசெய்ய பயன்படுத்த வழியமைக்கும்.