World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian supreme court overrules BJP push for early election in Gujarat

குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான பி.ஜே.பி-ன் நெருக்குதலை இந்திய உச்சநீதிமன்றம் ஒதுக்கித்தள்ளியது

By Sarath Kumara
9 September 2002

Use this version to print | Send this link by email | Email the author

குஜராத்தில் முன்கூட்டிய தேர்தலுக்கான பாரதீய ஜனதாக் கட்சியின் (பி.ஜே.பி) அழைப்பை நிராகரித்து தேசிய தேர்தல் கமிஷனது முடிவை ஆதரித்து கடந்த வாரம் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குஜராத்திலும் தேசிய மட்டத்திலும் அதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி ஆனது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் முஸ்லிம் விரோத கலவரத்தால் உருவான பிளவுபடுத்தப்பட்ட வகுப்புவாத சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு ஒரு முன்கூட்டிய தேர்தலுக்காக நெருக்கம் கொடுத்து வந்திருக்கிறது.

உச்சநீதி மன்றத்தின் மற்றும் தேர்தல் கமிஷனின் எதிர்ப்பானது செய்தி ஊடகங்களின் பகுதிகளால் பகிர்ந்து கொள்ளப்பட்டது, பி.ஜே.பி மற்றும் அதன் இந்து தீவிரவாதக் கூட்டாளிகள் வேண்டுமென்றே பற்றவைத்த வகுப்புவாதப் பதட்டங்களின் விளைபயன்கள் பற்றி ஆளும் வட்டங்களில் உள்ள அக்கறைகளை எதிரொலிக்கின்றது. குஜராத்தில் முன்கூட்டிய தேர்தல்களுக்கு எதிராக ஏகமனதாக தீர்மானித்த, தேர்தல் கமிஷன், "கலவரங்களைத் தொடர்ந்துவந்த வகுப்புவாதப் பிளவு இன்னும் சீரடையவில்லை" என்று அதன் 40 பக்க முடிவில் அறிவித்தது. தேர்தல் நவம்பர் அல்லது டிசம்பரில் சாத்தியமாகலாம் என அது அறிவித்தது.

இந்தத் தீர்ப்பானது பி.ஜே.பி- இடமிருந்து சினமூட்டும் பதிலைத் தூண்டிவிட்டது, அது அதனை "அரசியல் சட்ட நெறிபிறழ்வு" என விவரித்தது. கட்சியின் பேச்சாளர் முக்தார் நக்வி, "குஜராத்தில் தேர்தல்களைத் தள்ளிப் போடுவதற்கு ஸ்தூலமான காரணம் இல்லை" என வலியுறுத்தினார். பி.ஜே.பி இந்த முடிவைப் பற்றி இந்திய ஜனாதிபதி மூலமாக உச்சநீதி மன்றத்திற்கு அதனைப் பார்க்கும்படி அனுப்பியது.

முன்கூட்டிய தேர்தலுக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பு பி.ஜே.பி-ஐ நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. குஜராத்தில் உள்ள பி.ஜே.பி தலைவர் நரேந்திர மோடி, தேர்தல் வருகைக்கு கிட்டத்தட்ட 10 மாதங்கள் முன்னதாக, மற்றும் அக்டோபருக்கு திட்டமிட்ட நிலையில், ஜூலை 19 அன்று மாநில சட்டமன்றத்தைக் கலைத்தார். இப்பொழுது தேர்தலும் பிரச்சாரமும் குறைந்த பட்சம் நவம்பர் அல்லது டிசம்பருக்கு தாமதிக்கப்பட இருக்கிறது மற்றும் மோடி இடைக்கால முதலமைச்சராக புறக்கணிப்பில் விடப்பட்டிருக்கிறார்.

முன்னர் பி.ஜே.பி-ன் கோட்டையாகக் கருதப்பட்ட, இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசம் உட்பட, பி.ஜே.பி-ன் தொடரான தேர்தல் இழப்புக்களைத் தொடர்ந்து மோடியின் முன்கூட்டிய தேர்தல் திட்டம் இருந்தது. ஆதரவுக்கான அதன் அடித்தளத்தை முண்டு கொடுத்து நிறுத்தும் ஒரு வழிமுறையாக, அதன் இந்து பேரினவாத நிகழ்ச்சி நிரலை, இந்துத்துவ வை ஆதரித்து மிகவும் உரத்த கடுங்குரலை எழுப்பும் பி.ஜே.பி-ன் தலைமையினது பகுதிகளின் ஆதரவை மோடி பெற்றிருந்தார். குஜராத் தொடக்கப் புள்ளியாக இருந்தது.

பெப்ரவரியில் கோத்ராவில் இந்து தீவிரவாதிகளை ஏற்றி வந்த இரயில் மீதான தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் விரோத இன அழித்தொழிப்பில் அவர்களின் சம்பந்தப்படலுக்காக மோடியும் பி.ஜே.பி-ன் மாநில அரசாங்கமும் பரவலாக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. பி.ஜே.பி -யும் அதன் கூட்டாளிகளான இந்து அடிப்படைவாத குழுக்களும் இரயிலில் 58 பேர்கள் இறப்புக்காக முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டின --அது சர்ச்சைக்குரிய ஒரு கூற்று-- மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக இந்து குண்டர்களைக் கட்டவிழ்த்து விட்டன. வன்முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, சுமார் 2,500 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டதால் குறைந்த பட்சம் 150,000 பேர் வீடற்றவர்களாயினர்.

பல மனித உரிமை அமைப்புக்கள் வன்முறையைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியதாக மோடியைக் குற்றம் சாட்டின. கலவரங்களின் நடுவில் மாநில அமைச்சர்களும் அதிகாரிகளும் இருந்தமை பற்றி அறிக்கைகள் சுட்டிக்காட்டின. பல சம்பவங்களில், குண்டர்கள் தங்களின் தாக்குதல்களை நடத்திய அதேவேளையில் போலீசானது அருகில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. புதுதில்லியில் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயியின் பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கம் வன்முறையைத் தலையிட்டு தடுத்து நிறுத்தத்தவறியமை தொடர்பாக ஒரு தணிக்கை (வெட்டுத்) தீர்மானத்தை எதிர் கொண்ட அளவுக்கு மோடி நிர்வாகத்தின் சம்பந்தம் அந்த அளவு அப்பட்டமாக இருந்தது.

அப்போதிலிருந்து, மோடியின் நோக்கம் தான் மீண்டும் தேர்ந்து எடுக்கப்படுவதற்காக ஆதரவை ஈட்டுவதற்கு வகுப்புவாத பிளவுகளை சுரண்டிக் கொள்வதாக இருந்தது. அவரது கேபினெட் அமைச்சர்களுள் ஒருவர் ஜூலையில் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் அப்பட்டமாகக் கூறினார்: "முன்னதாகவே தேர்தல்களை நடத்துவதற்கு நம்மால் இயலவில்லை என்றால், சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைத்த முழு நோக்கமும் வீணாகிவிடும். கடந்த பல மாதங்களான இந்துத்துவ எழுச்சியை பயன்படுத்திக்கொள்ள நாங்கள் விரும்புகிறோம்."

வகுப்புவாதத்தைத் தட்டி எழுப்புவதன் மூலம், இந்துக்களும் அதேபோல முஸ்லிம்களும் எதிர்கொண்டிருக்கும் சமூக நெருக்கடியை அரசாங்கம் தணிக்கத் தவறியதிலிருந்து திசைதிருப்ப இயலும் என்று மோடி கணக்குப் போடுகிறார். ஜனவரி 2001ல் அழிவுகரமான பூகம்பத்தின் பாதிப்பிலிருந்து குஜராத் இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. மாநில அரசாங்கம் கடன்களாக 900 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றது அதேவேளை இதற்கு மாறாக சிறிதே புனரமைப்புப்பணி நிறைவேற்றப்பட்டிருக்கிறது மற்றும் அங்கு உத்தியோக ரீதியிலான ஊழல் இருப்பதாக குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. பல்வேறு அரசாங்க திட்டப்பணிகளுக்காக ஒப்பந்தக்காரர்களுக்கு 200 மில்லியன் டாலர்கள் செலுத்தப்பட வேண்டியிருக்கிறது.

கடந்த மாதம் புரண்ட் லைன் இதழில் ஒரு தொழிலதிபர் விவரித்ததாவது: "வகுப்புவாத வன்முறையால் பொருளாதாரம் அழிவதற்கு முன்னரே, மாநிலமானது பொருளாதாரப் பின்னடைவிற்குள் வழுக்கிச் சென்று விட்டது. வெளிநாட்டு நேரடி முதலீடு பற்றியும் ரிலையன்ஸ் போன்ற பெரும்பாலான கம்பெனிகள் இங்கு முதலீடு செய்கின்றன என்றும் மோடி பகட்டாகக் கூறுகின்ற அதேவேளை, மாநிலத்தின் சொந்த தொழில்துறையின் அடித்தளம் ஒரு குழப்பத்தில் இருக்கிறது. குஜராத்தின் முன்னேற்றத்திற்காக அடித்தளமிட்ட சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், சுமார் 60 சதவீதமானவை ஒன்றில் நலிவடைந்தோ அல்லது மூடப்பட்டோ, இடையூறில் இருக்கின்றன." சிறு வர்த்தகங்கள் மூடப்பட்டதன் விளைவாக சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை இழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அரசு நிறுவனங்கள் பல மூடப்படும் நிலையில் இருக்கின்றன.

வகுப்புவாத குரோதத்தை விசிறிவிடும் அதன் முயற்சியின் ஒரு பகுதியாக, மாநில பி.ஜே.பி, இந்துக்கள் மத்தியில் "தன்முனைப்பின் புதிய மனோநிலையை" கொண்டாடுவதற்கு குஜராத் முழுவதும் இந்து மத ஊர்வலம் அல்லது கெளரவ யாத்திரையை ஆத்திரமூட்டும் விதமாக திட்டமிட்டிருக்கிறது. யாத்திரை ஜூலை 4ல் தொடங்குவதற்கான ஆரம்ப முன்மொழிவு தள்ளிப் போடப்படுவதற்கு கடைசி நிமிடத்தில் வாஜ்பாயி தலையிட்டார்.

முஸ்லீம் விரோத வன்முறை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்து அடிப்படைவாத உலக இந்துசபை (வி.எச்.பி) மற்றும் அதன் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தளம் ஆகியன குஜராத்தில் முஸ்லீம்களுக்கு உடைமையான வீடுகளையும் கடைகளையும் தாக்கி உள்ளனர். முஸ்லிம்கள் அகதிகளாக புகுந்துள்ள பல முகாம்கள் மோடி அரசாங்கம் ரேஷன் அளிப்பின் அளவை வெட்டியதற்குப் பின்னர் மூடும்படி நிர்பந்திக்கப்பட்டன.

கடந்த மாதம் இந்திய இதழான புரண்ட் லைன்- இடம் ஒரு முஸ்லிம் கூறினார்: "எங்களிடம் பேசத்துணிபவர் எவரும் பயங்கரவாத அச்சுறுத்தல் விடப்படுகிறார் அல்லது ரூபாய் 500 ($US10.29) அபராதம் கட்டுமாறு அச்சுறுத்தப்படுகிறார். உணவையும் மளிகைச் சாமான்களையும் வாங்குவதற்கு நாங்கள் 14 கிலோமீட்டர்கள் நடக்க வேண்டி இருக்கிறது. நான் வேறெங்கும் எனது கடையை திரும்பவும் கூடத் திறக்க முடியாது. எனக்கு கடையை வாடகைக்கு விடுவதற்கு ஒருவரும் விருப்பார்வம் கொள்ளமாட்டார்கள்."

பி.ஜே.பி-ல் பிளவுகள்

காங்கிரசால் பின்பற்றப்பட்ட பொருளாதார மறுசீரமைப்புக் கொள்கைகளுக்கு வளர்ந்து வந்த குரோதத்தை சுரண்டிக்கொள்வதன் மூலம் பி.ஜே.பி ஆனது, புதுதில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தில் பிரதான கட்சியாக 1998ல் அதிகராத்துக்கு வந்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், வாஜ்பாயி இந்தியப் பொருளாதாரத்தை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு மேலும் திறந்து விடுவதற்கான பெரு முதலாளிகளின் நிலைப்பாட்டுக்குள் விரைந்தே விழுந்து விட்டார்.

பி.ஜே.பி ஆனது நல்ல ஆட்சிக்கு, ஊழலை ஒழிப்பதற்கு மற்றும் வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவதற்கு வாக்குக் கொடுத்திருந்தது, ஆனால் அதன் கொள்கைகள் சமூக துருவ முனைப்படலை மட்டுமே உயர்வாக்கியது மற்றும் முன்னர் அதனை ஆதரித்த சிறு வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய தட்டினர் மத்தியில் மோதலை உருவாக்கியது. அதிகரித்து வரும் சமூக நெருக்கடிபால் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள திராணி அற்ற பி.ஜே.பி அதன் அரசியல் நல்வாய்ப்புக்களை அழியாது காப்பாற்ற தேசியவாதத்தையும் இந்து பேரினவாதத்தையும் துணையாக நாடியிருக்கிறது.

பாக்கிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் வலுச்சண்டைக்குப் போகும் தன்மைக்கான பிரதான காரணம் உள்நாட்டில் அதன் கொள்கைகளின் விளைபயன்களில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதாகும். புதுதில்லியில் மீது ஆயுதம் தாங்கிய காஷ்மீரி பிரிவினைவாதிகளால் இந்தியப் பாராளுமன்ற கட்டிடத்தின் மீது கடந்த டிசம்பரில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர், வாஜ்பாயியும் அவரது அமைச்சர்களும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் மூலம் இந்தியாவுக்குள் தாக்குதல்களை பாக்கிஸ்தான் ஒழுங்கு செய்வதாக திரும்பத் திரும்ப குற்றம் சாட்டினர். பாக்கிஸ்தானுடனான எல்லை நெடுகிலும் 750,000 துருப்புக்கள் உயர்ந்த பட்ச தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இருப்பினும், வாஜ்பாயி, மோடியையும் வாஜ்பாயியின் சொந்த துணைப் பிரதமரும் கட்சியின் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலுக்குத் திரும்புமாறு வலியுறுத்திக் கொண்டு வருகிறவருமான, எல்.கே. அத்வானி உள்பட பி.ஜே.பி-ன் ஏனைய பகுதியினரையும் ஆதரிப்பது பற்றி எச்சரிக்கையாக இருக்கிறார். ஜூலை பின்பகுதியில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், உலகத்திற்கும் இந்தியாவிற்கும் முன்னர் என்றைக்கும் காட்டிலும் அதிகமான "ஒன்றுசேரல்" மற்றும் "சகிப்புத் தன்மை" தேவைப்படுவதாக அறிவித்தார். குஜராத் வன்முறையை மறைமுகமாகக் குறிப்பிட்டு, "காட்டுமிராண்டித்தனம் அதன் மரண நாட்டியத்தை இருந்தாற்போல் விட்டுவிட்டு ஆடுவது ஏன்?" என கூக்குரல் எழுப்பினார்.

குஜராத் தேர்தலை தாமதப்படுத்தும் தேர்தல் கமிஷனின் கடந்த மாதத்து முடிவுக்கு தேர்தல் கமிஷனர் ஒரு கிறித்தவர், பக்கம் சார்ந்திருந்தார் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டதன் மூலம் மோடி எதிர்ச்செயலாற்றினார். உடனே வாஜ்பாயி அமைதியாக இருக்குமாறு அழைப்பு விடுத்தார். "குஜராத்தில் சட்டமன்ற தேர்தல்கள் தொடர்பான தேர்தல் கமிஷனின் முடிவு அல்லது உடனிருந்து கவனித்த அவதானிப்புக்கள் தொடர்பாக ஒருவருக்கு வேறுபாடுகள் இருக்கலாம்" என்றார் அவர், "ஆனால் தங்களின் கருத்துக்களை வெளியிடுவதில் ஒருவரும் தாகாத வார்த்தைகளை பயன்படுத்துவதோ அல்லது முறைகேடாக மறைமுகமாய் குறிப்பதோ கூடாது... இந்த ஒவ்வாத சர்ச்சைக்கு உடனடியாக முடிவு கட்டுமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இந்து பேரினவாத ராஷ்ட்ரிய சுய சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) வாழ்நாள் உறுப்பினரான வாஜ்பாயிக்கு, மோடியுடனும் அத்வானியுடனும் அடிப்படையில் உடன்பாடின்மை எதுவும் இல்லை. அவரது உடனடிக் கவலை 20க்கும் மேற்பட்ட பிராந்திய கட்சிகளைக் கொண்ட, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தப்பிப் பிழைப்பது பற்றியதாகும். பி.ஜே.பி தனது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைப்பதற்கு உடன்பட்ட பிறகு மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்த, அவரது கூட்டாளிகள், வகுப்புவாதத்தை எந்த வகையிலும் நாடுவது முஸ்லிம்களின் வாக்குகளைப் பலியாக்கிவிடும் என அஞ்சினர்.

தேர்தல் கமிஷன் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் முடிவுகளுக்கு செய்தி ஊடகங்கள் ஆதரவில் எதிரொலித்தவாறு, ஆளும் வட்டங்களில் உள்ள எதிர்ப்புக்கு வாஜ்பாயியும் கூட கூருணர்வு கொண்டவராய் இருந்தார். காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு சீர்குலைந்து பிராந்திய மற்றும் சாதி அடிப்படையிலான கட்சிகள் மிகு நிறைவாய் தோன்றிக் கொண்டிருந்த சூழ்நிலைகளில், 1990களில் பெரு முதலாளிகளின் பகுதிகள் பி.ஜே.பி பக்கம் திரும்பின. தனியார்மயமாக்கலை, கட்டுப்பாடுகளைத் தளர்த்தலை மற்றும் சமூக செலவினங்களில், விலைகளைக் கட்டுப்படுத்துவதில் மற்றும் மானியங்களில் வெட்டுக்களை முன்னுக்கு எடுப்பதை வலியுறுத்தும், சாதனமாக பி.ஜே.பி பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்துத்துவ வை முன்னுக்குக் கொணர்தல் அரசியல் மற்றும் சமூக ஸ்திரமின்மையை உண்டு பண்ணும் மற்றும் இலாபங்களுக்கு எதிராகப் பாதிக்கும் என்று அங்கு தெளிவான பதட்டம் இருந்தது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி குஜராத்தில் உள்ள மோடியின் நிகழ்ச்சிநிரலை வாயளவில் எதிர்க்கின்றது. குஜராத் மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பன விவாதத்தில், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மன்மோகன்சிங் அரசாங்கத்தை "பயங்கரத்தைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் நாட்டின் அரசியலை மேலாளுமை செய்வதற்கு நாடுகிறது" என குற்றம் சாட்டினார். ஆயினும், "மதச்சார்பற்று" இருப்பதாகக் கூறும் அதன் அனைத்துக் கூற்றுக்களையும் பொறுத்தவரை, காங்கிரஸ் இந்து பேரினவாத புதைசேற்றில் சிக்கி இருந்தது. குஜராத்தில் கட்சியின் பிரச்சாரம், முன்னாள் பி.ஜே.பி-ன் மாநில தலைவரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான எஸ். வகேலாவினால் வழி நடத்தப்பட்டது. வகேலாவின் பிரதான போட்டியாளர் கேசுபாய் பட்டேல் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர்தான், வகேலா 1995ல் பி.ஜே.பி-ஐ விட்டு விலகினார்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களுக்கான குறிக்கோள் "கலவரங்களைப் பற்றிப் பேசாதே" எனக் காணப்படுவதாய் ஒரு வர்ணனையாளர் அவதானித்தார். காங்கிரஸ் பேச்சாளர்கள் மோடி நிர்வாகத்தை ஊழல் தொடர்பாகவும் மாநில பொருளாதாரத்தை சீர்குலைத்ததாகவும் தாக்கி இருக்கும் அதேவேளை, அதன் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை விமர்சிப்பதிலிருந்து விலகி இருக்கின்றனர். உண்மையில், இந்து வாக்குகளை நயந்து வேண்டும் முயற்சியில், கட்சியானது அதன் தலைவர்கள் இந்துக் கோவில்களுக்கு விஜயம் மேற்கொள்வார்கள் என்று அறிவித்திருக்கிறது.

காங்கிரசை விமர்சிப்பதிலிருந்து விலகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட் (CPI-M) -- அனைத்தையும் இந்து தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற பெயரில்-- குஜராத்திலும் மற்றெங்கிலும் எதிர்க்கட்சியினருடன் ஒரு பேரம் செய்து கொள்வதற்கான அதன் விருப்பத்தை சுட்டிக் காட்டியிருக்கிறது. சி.பி.ஐ (எம்) பொதுச் செயலாளர் ஹரிகிஷன் சுர்ஜித் அறிவித்ததாவது: "இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக ஒற்றைக்கு ஒற்றையாய் நின்று போராடுவதை உறுதிப்படுத்துதற்கு நாம் காங்கிரஸ் அல்லது வேறு எந்த கட்சியையும் ஆதரிப்போம்."

இந்த அனைத்துக் கட்சிகளாலும் இந்து பேரினவாதம் அணைத்துக் கொள்ளலானது, இந்தியாவில் உள்ள பரந்த சாதாரண உழைக்கும் மக்கள் எதிர் கொள்ளும் ஆழமாகி வரும் சமூக நெருக்கடிக்கு எந்தத் தீர்வும் அவர்கள் ஒருவரிடமும் இல்லை என்பதன் கூர்மையான குறிகாட்டல் ஆகும்.

See Also:

இந்தியா காஷ்மீரில் ஜனநாயக விரோத தேர்தலை தயார் செய்கிறது

இந்திய அமைச்சரவை இலாக்காக்கள் மாற்றம்: ஆதரவை மீளப்பெறுவதற்கான ஆற்றொணா முயற்சி

Top of page