World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா

Australian government deploys military forces to the Persian Gulf

பாரசீக வளைகுடாவிற்கு அவுஸ்திரேலியா அரசு படைகளை நிலைப்படுத்துகின்றது

By Terry Cook
22 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

பாரசீக வளைகுடாவில் மிகப்பெரும் அளவில் அணிதிரட்டப்பட்டு வரும் இராணுவ பிரிவுகளுடன் சேர்ந்துகொள்வதற்காக, அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவர்ட் தனது இராணுவப் படைகளையும் தளவாடங்களையும் அங்கு அனுப்புகின்றார். நிலைமை இப்படி இருக்கையில் அவுஸ்திரேலியாவில் போருக்கான எதிர்ப்புக்கள் வலுத்துக்கொண்டு வருகின்றன. இராணுவ அடிப்படையில் கணக்கிட்டால் அவுஸ்திரேலியாவின் பங்கு மிகச் சிறியதுதான், ஆனால் அதன் பிரதான நோக்கம் அரசியலை அடிப்படையாகக் கொண்டது. புஷ் நிர்வாகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தொடர்ந்து கிடைக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும், ''சர்வதேச அளவில் ஈராக் மீது போர் புரியும் கூட்டணி'' உருவாகிவிட்டது என்ற வாஷிங்டனின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காகவும் அவுஸ்திரேலியா தனது படைகளை அனுப்புகிறது.

சென்ற வாரக் கடைசியில் இரண்டு P-3C கடல் கண்காணிப்பு விமானங்களும், 92 வது பிரிவின் 30 விமானப்படை வீரர்களும், 50 அலுவலர்களும், வளைகுடாவிற்கு புறப்பட்டுச் சென்றனர். அப்போது பாதுகாப்பு அமைச்சர் றொபர்ட் ஹில் மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகள் தென் அவுஸ்திரேயாவிலிருக்கும் அடிலைட்டிலிருந்து அவர்களை வழியனுப்பி வைத்தனர். ''சிக்கலான'' இந்தப் பணி 12 மாதங்கள்வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு படையின் தலைமை அதிகாரி பீட்டர் காங்கிரோ வழியனுப்பு விழாவில் குறிப்பிட்டார்.

நாளை எச்.எம்.ஏ.எஸ் கன்னிபிலா (HMAS Kanimbla) சிட்னியிலிருந்து புறப்பட்டுச் செல்கின்றது. இதர படைகள் விரைவில் இதனைப் பின்தொடர்ந்து செல்லும். அதில் கடற்படை ஆழ்கடல் 150 SAS அதிரடிப்படை வீரர்களும், 14 FA-18 ரக போர் விமானங்களும், 3 கடற்படை கப்பல்களும், வளைகுடாப் பகுதிக்கு புறப்பட்டுச் செல்லுகின்றன. தற்போது ஐ.நா. ஈராக்கிற்கு எதிராக விதித்துள்ள பொருளாதார தடை நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் வளைகுடாப் பகுதியில் இரண்டு அவுஸ்திரேலிய நாசகாரி கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. அவை, வளைகுடாப் போருக்கு திருப்பிவிடப்படும். அதில் மிகப்பெரிய கப்பல் தலைமை தாங்கி செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், மொத்தமாக 1650 அவுஸ்திரேலிய இராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

உடனடி தாக்குதலுக்கு தயார் நிலையில் படைகளை அனுப்புவதற்கு உறுதியளித்துள்ள ஒரு சில அரசுகளில் அவுஸ்திரேலியாவின் ஹோவர்ட் அரசும், பிரிட்டனின் பிளேயர் அரசும் குறிப்பிடத்தக்கவை. செப்டம்பர் 11 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து புஷ் நிர்வாகத்தின் அன்பையும், ஆதரவையும் பெறுவதற்காக அவுஸ்திரேலியப் பிரதமர் தன்னால் முடிந்த அனைத்துக் காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்படும் எந்த மாற்றமாகயிருந்தாலும் அதற்கு ஏற்ப அவுஸ்திரேலிய அரசு கொத்தடிமைபோல் வளைந்து கொடுத்து, செல்படக் கொண்டு வருகிறது. ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' என்ற முடிவற்ற போரை ஆதரித்துக்கொண்டு ஆப்கானிஸ்தானுக்கு அவுஸ்திரேலிய இராணுவத்தினர் அனுப்பட்டிருக்கின்றனர். வெள்ளை மாளிகையின் ஒவ்வொரு கோரிக்கையையும், ஒவ்வொரு புதிய மிரட்டலையும் கிளிப்பிளைப்போல் அவுஸ்திரேலியா ஆதரித்து வருகிறது.

அமெரிக்காவின் அரவனைப்பு தொடர்ந்து கிடைப்பதற்காக, ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் தமது எதிர்கால மூலோபாய நலன்களைப் பாதுகாக்கும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதி தான் பிரதமர் ஹோவார்ட் ஆவார். இந்தப் பிராந்தியத்தில் அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் கொந்தளிப்புக்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் புஷ் நிர்வாகத்தின் மத்திய கிழக்கு அபிலாஷைகளுக்கு அவுஸ்திரேலியா நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்தால்தான் எதிர்காலத்தில் அமெரிக்க இராணுவ ஆதரவைப் பிரதிபலனாகப் பெறமுடியும் என்று அரசு முடிவிற்கு வந்துவிட்டது.

ஆனால் சாதாரண அவுஸ்திரேலிய மக்களிடையே போருக்கு எதிரான உணர்வுகள் வளர்ந்து கொண்டு வருவதாக, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகை கருத்துக்கணிப்பை பிரசுரித்திருந்தது. அதே புள்ளி விபரங்கள் ஏஜ் பத்திரிகையிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஐ.நா. அனுமதி இல்லாமல் போரில் எந்தவிதமான ஈடுபாடும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று, 62 வீதமான மக்களும், எந்தச் சூழ்நிலையிலும் போர் நடைபெறக்கூடாது என்று 30 வீதமான மக்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். 6 வீதம் பேர் மட்டுமே அமெரிக்கா தன்னிச்சையாக நடத்தும் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்ற ஆண்டு இப்படி அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் 37 வீதம் பேராகயிருந்தனர். போர் நடைபெறக்கூடும் என்ற நிலை நெருக்கிக் கொண்டிருப்பதால், மக்களில் மிகப்பெரும்பாலோர் போரை ஏற்றுக்கொள்ளவில்லை.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும், தங்களை ஆபத்தில் சிக்க வைக்கும் சூழ்நிலை அதிகரித்துக்கொண்டு வருவதற்கு பொறுப்பு அவுஸ்திரேலிய பிரதமர் அமெரிக்காவின் உலகலாவிய அபிலாஷைகளை ஆதரிப்பதுதான் என்று, பெரும்பாலான ஆஸ்திரேலிய மக்கள் நம்புவதாக மக்கள் கருத்துக்கணிப்பு விளக்குகிறது. அமெரிக்கா தலைமையில் நடக்கும் ஈராக்கிற்கு எதிரான போரில் அவுஸ்திரேலியா பங்குபெறுமானால் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பாலி தீவில் அவுஸ்திரேலிய மக்கள் குண்டு வெடிப்புத் தாக்குதல்களுக்கு உள்ளாகியதைப் போன்று எதிர்காலத்திலும் அதிக அளவில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகக்கூடும் என்று கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 65 வீத மக்கள் நம்புகின்றனர்.

இது போன்ற பரந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில், உள்நாட்டில் ஹோவர்ட் அரசின் கொள்கைகளுக்கு தொழிற்கட்சி ஆதரவு தந்து வருகின்றது. அகதிகள் மீது நடைபெற்றுவரும் தாக்குதல்கள், பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுகிறோம் என்ற சாக்குபோக்கில் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பது, சமூக நிலைமைகள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்துவது, இப்படி பல்வேறு வகைகளில் ஆதரவு நீடித்துக்கொண்டே போய் கடைசியில் ஈராக்கிற்கு எதிரான போரில் தொழிற்கட்சியும் அரசிற்கு தனது ஆதரவை தெரிவித்துவிட்டது.

சென்ற ஆண்டு தொழிற் கட்சித் தலைவர் சைமன் கிரீன் கருத்து தெரிவிக்கும்போது, ஐ.நா. அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே இராணுவ நடவடிக்கையில் அவுஸ்திரேலியா கலந்துகொள்ளும் நிலையை தனது கட்சி ஆதரிக்கும் என்று குறிப்பிட்டார். சென்ற ஆண்டு இதே நிலையைத்தான் பிரதமரும் எடுத்திருந்தார், ஆனால் புஷ் நிர்வாகம் தற்காலிகமாக நாச வேலைகளைச் செய்து ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் முடிவிற்கு கட்டுப்படுவதாக கூறி அவுஸ்திரேலியாவை தன் பக்கம் ஈர்த்தது. படிப்படியாக வெள்ளை மாளிகை போர் பிரகடனங்களில் விறுவிறுப்பை ஊட்டியதைத் தொடர்ந்து ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தங்களது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டனர்.

ஒரு வாரத்திற்கு முன்னர் ஹோவர்ட் இராணுவ உதவியைப் பற்றிய தனது அறிவிப்பை வெளியிட்டபோது, தொழிற்கட்சித் தலைவர் சைமன் கிரீன் ''எந்தச் சூழ்நிலையிலும்'' அமெரிக்கா தன்னிச்சையாக தாக்குதல் நடத்துவதை தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். ஆனால் சில நாட்களுக்குள் அவர் தனது கருத்தை மாற்றிக்கொண்டார், எப்படி? ஈராக்கில் மக்களை கொன்று குவிக்கும் ஆயுதங்கள் இருக்கின்றன என்று தெளிவான ஆதாரம் கிடைத்தாலும், ''இராணுவ நடவடிக்கைக்கு எதிராக பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடு ஏதாவது ஒன்று தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்துமானால், அந்தச் சூழ்நிலையிலும் அமெரிக்கா தன்னிச்சையாக ஈராக் மீது போர் தொடுப்பதை தொழிற் கட்சி ஆதரிக்கும்'' என்று சைமன் கிரீன் விளக்கம் அளித்தார்.

''தெளிவான சான்று'' என்பது என்ன? என்பதற்கு வாஷிங்டன் ஏற்கெனவே மறுவிளக்கம் தந்திருக்கிறது. சென்ற வாரம் புஷ் நிர்வாக அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பில், தடை விதிக்கப்பட்ட ஆயுதங்கள் ஈராக் வசம் உள்ளன என்பதற்கு ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் சான்று எதையும் கண்டுபிடிக்கத் தவறினால், அதுவே, இராணுவ நடவடிக்கை துவங்குவதற்கான அடிப்படையாக அமைந்துவிடும். ஏனெனில் சதாம் ஹூசேன், தன்னிடமிருந்த ''தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதாக'' சான்று காட்டினாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று, விளக்கம் அளித்தனர்.

இப்படிப்பட்ட வாஷிங்டனின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டுதான் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஹில் அமெரிக்காவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஈராக், ஆயுத ஆய்வாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தோடு முழுமையாக ஒத்துழைக்க தவறுமானால், அமெரிக்கா தன்னிச்சையாக தாக்குதல் நடத்துவதை அவுஸ்திரேலியா ஆதரிக்கும் என்று அமைச்சர் அறிவித்தார்.

இரண்டு பெரிய கட்சிகளும் ஐ.நா. ஒப்புதல் இல்லாவிட்டாலும் அமெரிக்காவை ஆதரிக்க முன்வந்திருப்பது ஆளும் வட்டாரங்களில் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஜனவரி 20 தேதியிட்ட ''சிட்னி மோனிங் ஹெரால்ட்'' நாளிதழில் தாராளவாதக் கட்சியின் மூத்த தலைவர் கட்சிக்குள் பிளவு ஆழமாவதாக ஒப்புக்கொண்டார்.

முன்னாள் தாராளவாதக் கட்சிப் பிரதமர் சேர் ரூபர்ட் ஹேமர் சர்வதேச ஆதரவு இல்லாமல், படைகளை அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சேர் ஜேம்ஸ் கில்லன் அவுஸ்திரேலியாவின் ஈடுபாடு பெரிய கேள்விக் குறியாகிவிட்டது என்று குறிப்பிட்டார். அவர் தாராளவாதக் கட்சியின் அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, 1972 ம் ஆண்டு வியட்நாம் போரில் பதவியிலிந்து தூக்கியெறியப்பட்டார். எனவே மிக ஆழமான மக்கள் செல்வாக்கில்லாத இராணுவ மோதல்களில் அணி சேருவது எந்த அளவிற்கு அரசியல் மற்றும் சமூக சிக்கல்களை உருவாக்கும் என்பது அவருக்கு நேரடியாகவே தெரியும்.

சென்ற வாரம் அவுஸ்திரேலியன் பைனான்சியல் ரீவியூ என்ற பத்திரிகை ''அவுஸ்திரேலியா போருக்கு அடி எடுத்து வைக்கும் முன் இராஜங்கத் துறை தீர்விற்குரிய எல்லா வழிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டனவா, என்பதை உத்திரவாதம் செய்துகொள்வதில் மிக விழிப்பாக இருக்கவேண்டும்'' என்று எச்சரித்திருக்கிறது. ''சிட்னி மார்னிங் ஹெரால்ட்'' என்ற பத்திரிகையும் தனது கவலைகளை மிகவும், பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறது. அந்தப் பத்திரிகை ஏ.சி.நியல்சனின் கருத்துக்கணிப்பை வெளியிட்ட பின்னர், ''ஈராக்கிற்கு எதிராக சூழ்ந்துகொண்டு வரும் போர் மேகம் மிக அதிக அளவிற்கு மக்களது வெறுப்பை உருவாக்கியுள்ளது'' என்று எழுதிவிட்டு, தொடர்ந்து ஹோவார்ட் அரசிற்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது. ''ஹோவார்ட் அரசு மக்கள் கருத்துக்கணிப்பு என்ன கூறுகிறது என்பதை தற்போது அறிந்திருக்கவேண்டும். அது என்னவென்றால், மக்கள் இந்த அரசின் பின்னால் இல்லை. அமெரிக்காவிற்கு பின்னால் அவுஸ்திரேலியா போரில் ஈடுபடுவதை, படைகளை அனுப்புவதை மக்கள் ஆதரிக்கவில்லை'' என்று தனது தலையங்கத்தில் இப் பத்திரிகை கூறியிருக்கின்றது.

Top of page