World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

LTTE makes further threats against SEP members in Sri Lanka

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு எதிராக மேலும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்

By Nanda Wickramasinghe
10 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளூர் அலுவலர்கள், கடந்த வாரம் வட இலங்கையின் ஊர்காவற்துறை தீவில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அங்கத்தவர்களுக்கு எதிரான தமது தொந்தரவு மற்றும் அச்சறுத்தல் பிரச்சாரத்தை உக்கிரப்படுத்தியுள்ளனர். இந்த புதிய அச்சுறுத்தல்கள், ஜனவரி 3 அன்று விடுதலைப் புலிகள் போலியாக உரிமை கோரும் அம்பிகைநகர் மீனவர் சங்கத்தின் கூட்டத்தில் விடுக்கப்பட்டன.

கடந்த செப்டம்பர் மாதத்தில், சோ.ச.க. முன்னின்று அமைத்த சங்கமானது அப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் அலுவலகம் ஒன்றை அமைக்க நிதி வழங்க மறுத்ததையடுத்து, விடுதலைப் புலிகளின் பிரதேச தலைவரான செம்மணன் சோ.ச.க. வுக்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுத்தார். அக்டோபர் 8, விடுதலைப் புலி உறுப்பினரான கார்த்திகேசு அமிர்தலிங்கம், எந்தவொரு காரணமும் இன்றி சோ.ச.க. அங்கத்தவரான நாகராசா கோடீஸ்வரனை தாக்கி அவரது தலை, கழுத்து தோள்களில் கடுங்காயங்களை விளைவித்தார்.

சோ.ச.க. வை அச்சுறுத்துவதில் தோல்விகண்ட விடுதலைப் புலிகள், ஜனநாயக விரோத வழிமுறைகளை கையாண்டு மீனவர் சங்கத்தை கொள்ளையிடப் பார்க்கிறது. ஜனவரி 3 கூட்டமானது முற்றாக விடுதலைப் புலி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களாலுமே கூட்டப்பட்டது. கூட்டுறவு ஆணையாளர் பிரச்சினையை தீர்க்கும் வரை நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என பொலிசார் அறிவுறுத்தியிருந்த போதிலும் விடுதலைப் புலிகள் இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

உத்தியோகபூர்வ கூட்டம் என அடையாளப்படுத்தும் முயற்சியாக விடுதலைப் புலிகள் இரண்டு அரசாங்க அலுவலர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர் --பிரதேச மீன்பிடி பரிசோதகர் மற்றும் கிராம சேவையாளர். ஊர்காவற்துறை தீவில் விடுதலைப் புலிகளின் மூன்றாவது அலுவலராக கணிக்கப்படும் தேவன் மேடையில் முதன்மையானவராக இருந்தார்.

மேடையில் இருந்தவர்கள் சங்கத்தின் பழைய தலைவர்களில் என்ன பிழை என விசாரித்தனர். விடுதலைப் புலி உறுப்பினரான சின்னையா சிகண்ட சுந்தரலிங்கம் (சுந்தரன்) சோ.ச.க. வை வார்த்தைகளால் தாக்க ஆரம்பித்தார். சோ.ச.க. உறுப்பினரான திருச்செல்வம் சந்திரசேகரன், ஒரு "தீய சக்தி" என்றும் சங்கத்தை குழப்புவதற்காக சோ.ச.க. உறுப்பினர்களான நான்கு சங்கத் தலைவர்களுக்கும் "பின்னணியில் இயங்குபவர்" என பழி சுமத்தினார்.

மேலுமொரு ஆத்திரமூட்டல் அறிக்கையில், சங்கத்தின் முன்னாள் தலைவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளருமான முத்தையா வேல்முருகன், சோ.ச.க. அங்கத்தவர்களான சந்திரசேகரனும், ராசேந்திரன் சுதர்சனும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறி தன்னை அச்சுறுத்தியதாக பொய்க் குற்றம் சுமத்தினார். "எனக்கேதும் நடந்தால் அதற்கு இந்த இருவருமே பொறுப்பாளிகள் என்பதை நான் இந்த கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்" என அவர் கூறினார்.

சுந்தரன், ஏனைய விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் சேர்ந்து, சோ.ச.க. அங்கத்தவர்கள் நால்வரும் சங்கத்தின் கணக்குப் புத்தகங்களை தர மறுப்பின் அவர்களின் வீடுகளை தரைமட்டமாக்கவும் அவர்களது மீன்பிடி வள்ளங்களை கடலுக்குள் தள்ளிவிடவும் கூட்டத்துக்கு சமூகமளித்திருந்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

டிசம்பர் 23, சோ.ச.க. அங்கத்தவரான நடராசா விமலேஸ்வரனது மீன்பிடி வலை களவாடப்பட்டிருந்தது. ஜனவரி 1, இன்னுமொரு சோ.ச.க. அங்கத்தவரான முத்துலிங்கம் முருகானந்தனின் சில மீன்பிடிவலைகள் களவாடப்பட்டிருந்ததோடு எஞ்சியவை கண்டபடி வெட்டப்பட்டிருந்தன. இழப்புத் தொகை ஆயிரக்கணக்கான ரூபாய்களாகும். கூட்டம் நிகழ்ந்த அதே தினம் அவரது வள்ளம் காணாமல் போயிருந்தது. அது முதல் நாள் இரவு கட்டவிழ்க்கப்பட்டு மிதக்கவிடப்பட்டிருந்ததுடன் கடும்முயற்சியால் மாத்திரமே தேடிக் கண்டுபிடிக்க முடிந்தது.

செப்டம்பரில் இருந்து, சோ.ச.க. வும் உலக சோசலிச வலைத் தளமும் விடுதலைப் புலி தலமை சோ.ச.க. மீது விடுத்துள்ள மரண அச்சுறுத்தல்களை மறுத்து அப்பிரதேசத்தில் சட்ட ரீதியான அரசியல் வேலைகளை தொடர்வதற்கான கட்சியின் உரிமையை உறுதிசெய்யக் கோரும் அனைத்துலகப் பிரச்சாரமொன்றைத் தொடுத்துள்ளது.

இதன் பெறுபேறாக பொலிசார் சோ.ச.க. அங்கத்தவர் கோடீஸ்வரனை தாக்கியமைக்காக விடுதலைப் புலி உறுப்பினரான அமிர்தலிங்கம் மீது நடவடிக்கை எடுக்கத் தள்ளப்பட்டனர். அடுத்த விசாரணை ஊர்காவற்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜனவரி 14ம் திகதி நடக்கவுள்ளது. நீதிபதி, கோடீஸ்வரனின் வழக்கறிஞரின் வேண்டுகோளுக்கு இணங்க தாக்குதலின் தீவிரத்தை உறுதிப்படுத்தும் சட்டவைத்திய அதிகாரியின் முழுமையான மருத்துவ அறிக்கையை பெறுமாறு பொலிசாருக்கு உத்திரவிட்டார்.

பொலிசார், சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு எதிரான கொலை அச்சுறுத்தல்கள் சம்பந்தமாக விடுதலைப் புலிகளின் பிரதேச தலைவர் செம்மணனுக்கு எதிரான வழக்கை தாக்கல் செய்தது, சோ.ச.க. வின் உத்தியோகபூர்வ முறைப்பாட்டை பதிவு செய்து சுமார் நான்கு மாதங்களின் பின்னரேயாகும். விடயம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட ஜனவரி 3, செம்மணன் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை. நீதவான் வழக்கை பெப்பிரவரி 7ம் திகதிக்கு ஒத்திவைத்ததோடு செம்மணனை எச்சரிக்குமாறு உத்தரவிட்டார்.

விடுதலைப் புலிகளது புதிய அச்சுறுத்தல்கள், உ.சோ.வ.த. பிரச்சாரத்தால் வளர்ச்சி கண்டுவரும் தாக்கத்தின் பிரதிபலிப்பாகவே காணப்படுகிறது. ஜனவரி 3ம் திகதிய விடுதலைப் புலிகளின் பெயரளவிலான மீனவர் சங்கக் கூட்டமானது, செம்மணனுக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு போட்டியாகவே இடம்பெற்றது. பணயம் வைக்கப்பட்டது வெறுமனே அம்பிகை நகர் மீனவர் சங்கத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, மாறாக சோ.ச.க. வினதும், பொதுவில் முழு தொழிலாள வர்க்கத்தினதும் பரந்த ஜனநாயக உரிமைகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதேயாகும்.

விடுதலைப் புலிகள் தற்சமயம் நாட்டின் நீண்ட உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது. எந்தவொரு அதிகாரப் பகிர்வு ஒழுங்குகளும், பதிலுக்கு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் எதிர்ப்பை தூண்டி விடக்கூடிய, உலக வங்கியும் மற்றும் சர்வதேச நாணய நிதியமும் கோரும் கடுமையான நகர்வுகளை அமுல்படுத்துவதில் விடுதலைப் புலிகளையும் ஈடுபடுத்தும். சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், விடுதலைப் புலிகள் இந்த கொள்கைகள் சம்பந்தமான எந்தவொரு எதிர்ப்புக்கும் முகம்கொடுப்பதன் பேரில் பயன்படுத்த திட்டமிட்டுள்ள வழிமுறைகள் சம்பந்தமான தெளிவான எச்சரிக்கைகளேயாகும்.

விடுதலைப் புலிகள் தனது அச்சறுத்தலை மறுதலிக்கும் அதேவேளை, தொந்தரவுகள், அடக்குமுறைகள் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்களில் இருந்து சுதந்திரமாக அரசியல் வேலைகளை முன்னெடுப்பதற்கான சோ.ச.க. வின் உரிமையை உறுதிப்படுத்தக் கோரும் கண்டனக் கடிதங்களை அனுப்புவதனூடாக, உ.சோ.வ.த. வின் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு நாம் சகல வாசகர்களையும் கோருகின்றோம். சோ.ச.க. நீதி மற்றும் ஏனைய பிரச்சார செலவுகளை ஈடுசெய்வதற்கான 50,000 ரூபா ($US500) பாதுகாப்பு நிதிக்கு நன்கொடைகளையும் அவசரமாக கோருகிறது.

அன்மையில் எமக்கு கிடைத்த சில ஆதரவு கடிதங்கள் பின்வருமாறு:

அட்டன் பிரதேசத்தைச் சார்ந்த நான்கு தோட்டப்புற இளைஞர்களான எஸ்.உதயகுமார், பீ.சந்திரன், பி.சரவணகுமார், டி.சவரிமுத்து ஆகியோர் பின்வருமாறு எழுதியுள்ளனர்: "இலங்கையின் வட மாகாணத்தின் ஊர்காவற்துறைத் தீவில் சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்கள் மீதான தாக்குதலை கண்டனம் செய்யுமாறு நாம் விடுதலைப் புலிகளின் தலைமையை கோருகிறோம். அந்தப் பிரதேசங்களில் அரசியல் வேலைகளில் ஈடுபடுவதற்கான சோ.ச.க. வின் உரிமை பேணப்படவேண்டும்".

இந்த நால்வரும், உ.சோ.வ.த. வினதும் சோ.ச.க. வினதும் தொடர்ச்சியான பிரச்சாரத்தை அடுத்து விடுதலையாவதற்கு முன்னர், "விடுதலைப் புலி சந்தேக நபர்கள்" எனும் பேரில் மூன்றரை ஆண்டுகளாக விசாரணைகளின்றி பாதுகாப்பு படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். சட்டமா அதிபர் இறுதியில் அவர்களுக்கு எதிரான ஒரே குற்றச்சாட்டாக விளங்கிய ஒப்புதல் வாக்குமூலங்கள் சித்திரவதை மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டவை என்பதை ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டார்.

"சோ.ச.க. வும் உ.சோ.வ.த. வும் அரசியல் கைதிகளது விடுதலைக்காக மிக நீண்டகாலமாக தொடர்ச்சியாக சர்வதேச ரீதியில் போராடிவந்துள்ளன. நாம் இலங்கையின் களுத்துறை சிறையில் தமிழ் விடுதலை இயக்கங்களின் ஆதரவாளர்களென்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். சோ.ச.க. வின் பிரச்சாரத்தின் பெறுபேறாகவே நாம் விடுதலையானோம். சோ.ச.க. எமக்கு சட்ட உதவி வழங்கியது. சோ.ச.க. வின் மீதான சகல தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டுமென நாம் கோருகிறோம்," என அவர்களது கடிதம் குறிப்பிடுகிறது.

இந்தியாவின் மேற்கு வங்களாத்திலிருந்தும் ஒரு கண்டனக் கடிதம் விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் கர்டா அன்ட் டிட்டகர் சணல் ஆலை தொழிலாளர்களின் சார்பில் டி.பி.எஸ்; என்ற கல்கத்தாவிலுள்ள பிரபல கல்விமானும் அனைத்து பெங்காலிய ஆசிரியர் சங்க அலுவலருமான எஸ். எஸ்; மேற்கு வங்காள பெற்றோர் ஆசிரியர் சங்கத்தவரான திருமதி. ஜீ.எஸ். மற்றும் ஒய்வுபெற்ற அரசாங்க ஊழியரும் 1940 இருந்து இந்திய ட்ரொட்ஸ்கிச போல்ஷிவிச லெனினிச கட்சி (பி.எல்.பி.ஐ) யின் அங்கத்தவராக இருந்து தொழிலாளர் இயக்கத்தில் செயல்திறுனுடன் விளங்கியவருமான ஜி.டி. ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

"மேற்கு வங்காளத்தில் பல்வேறு துறைகளிலுள்ள நாம், விடுதலைப் புலிகளின் ஊர்காவற்துறை பிரதிநிதி செம்மணன் விடுத்த மரண அச்சுறுத்தலையும், அம்பிகை நகர் மீனவர் கூட்டுறவு சங்க கூட்டத்தில் அவர், விடுதலைப் புலிகள் இத்தகைய தொழிலாளர் கட்சியை அனுமதிக்காது என்றும், விடுதலைப் புலிகள் கோரிய தொகையை மீனவர் சங்கம் வழங்க வேண்டும் எனக் கோரியதையும் (அப்படி பேசியுள்ளதை) கண்டனம் செய்கிறோம்... நாம் மீனவர்கள் மற்றும் சோ.ச.க. அங்கத்தவர்கள் மீதான ஜனநாயக விரோத மரண அச்சுறுத்தலை கண்டனம் செய்வதுடன் அடக்குமுறையிலிருந்தும் தொந்தரவுகளில் இருந்தும் சுதந்திரமாக தமது வேலைகளை முன்னெடுப்பதற்கான சோ.ச.க. வின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துமாறும் வேண்டுகிறோம்," எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாட்டா கம்பெனி ஊழியரான தாஸ் எழுதியதாவது: "ஒரு சோசலிச குடியரசுக்கான போராட்டத்தில் தமிழ் சிங்கள தொழிலாளரை ஐக்கியப்படுத்த சோ.ச.க. போராடிவருகின்றது. சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு ஏற்படும் எந்தவொரு உயிராபத்துக்கும் விடுதலைப் புலிகளே பொறுப்பேற்க வேண்டும்." எந்தவொரு இடையூறுமின்றி சோ.ச.க. தனது அரசியல் வேலையை நடத்த அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஊர்காவற்துறை தீவில் சோ.ச.க. அங்கத்தவர்கள் மீதான தாக்குதல்கள், சோ.ச.க. மீதான தாக்குதல் மட்டுமல்ல தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலேயாகும்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடிதங்களையும் அறிக்கைகளையும் தபால் செய்யவேண்டிய அல்லது மின்னஞ்சல் செய்யவேண்டிய முகவரிகள்:

யாழ்ப்பாணம்

Ilamparithi
LTTE Jaffna Office
Potpathy Road, Kokuvil
Jaffna

கொழும்பு

LTTE
c/- Sri Lanka Monitoring Mission
PO Box 1930
Galle Road
Colombo 3
Email: slmm-hq@mfa.no

அவற்றை கீழ்வரும் முகவரிக்கும் தபால் மூலம் அல்லது தொலைமடல் மூலம் அனுப்பி வைக்கலாம்:

லண்டன்

The LTTE
c/- Eelam House
202 Long Lane
London SE1 4QB
United Kingdom
Telephone: 44-171-403-4554
Fax: 44-201-403-1653

தயவு செய்து அனைத்து அறிக்கைகளினது பிரதிகளை உலக சோசலிச வலைத் தளத்துக்கும் அனுப்பி வைக்கவும்

Email: editor@wsws.org
Fax:
United States: 248 967 3023
Britain: 0114 244 0224
Australia: 02 9790 3501

நிதி உதவிகள் அனுப்பப்பட வேண்டிய முகவரி:

Account Number 1472834301 at the Kirullapona Branch of the Commercial Bank of Ceylon
94A Pamankada Road
Kirullapona
Colombo, Sri Lanka

Top of page