World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

As Green Berets deploy in war zone
Colombian president seeks massive US intervention

கொரில்லா எதிர்ப்பு படை யுத்த பிரதேசத்தில் நிறுத்தப்படுகிற வேளையில்

அமெரிக்கா பெருமளவில் இராணுவ நடவடிக்கை எடுக்க கொலம்பியா ஜனாதிபதி கோரிக்கை
By Bill Vann
1 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

கொலம்பியாவின் ஜனாதிபதி அல்வாரோ உறிபி வெலெஸ் (Alvaro Uribe Velez), சென்ற மாதம் சர்வதேச அளவில், பத்திரிகைகளுக்கு அளித்த குறிப்பிடத்தக்க பேட்டியில், அமெரிக்க இராணுவம் ஈராக் அளவிற்கு தன் நாட்டில் தலையிடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

"ஈராக் போரைவிட, உடனடியாகவும் நீண்ட கால அடிப்படையிலும், இந்தக் கண்டத்தின் ஜனநாயக ஸ்திரத்தன்மைக்கு மிகவும் ஆபத்தாக விளங்குகின்ற, கொலம்பியாவின் போதைப் பொருள் கடத்தல் பயங்கரவாத மோதல்கள், உருவாகி கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன். ஈராக்கிற்கு எதிராக படைகளை அனுப்புகின்ற அமெரிக்கா, எடுத்துக்காட்டாக, கொலம்பியாவிற்கும், கலிபோர்னியாவிற்கும் இடையில் கோக்கேன் என்கிற போதைப் பொருளை கடத்துவதை ஒழித்துக் கட்டுவதற்கு ஈராக் அளவிற்கு படைகளை அனுப்ப ஏன் அவர்கள் பரிசீலிக்கக்கூடாது?" - என உறிபி (Uribe) குறிப்பிட்டார்.

உறிபி வலதுசாரி வாஷிங்டன் ஆதரவு அரசியல்வாதி ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர் பதவியேற்றார். இக்குவாடாரின் புதிய ஜனாதிபதியாக லூசியா, டியூடரஸ், குட்டோவில் ஜனவரி 14-ந்தேதி பதவியேற்றுக்கொண்டபோது, அந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட உறிபி மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். இதே கருத்தை பல பேட்டிகளில் அவர் வலியுறுத்தினார். பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த இதர லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதிகளிடமும் இதே கருத்தை வலியுறுத்திக் கூறினார். வாஷிங்டனில் நடைபெறும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும், சர்வதேச அரங்குகளிலும் இதே திட்டத்தை வலியுறுத்தப்போவதாகவும், உறிபி குறிப்பட்டார். போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த கடற்படை மற்றும் விமானப்படை உதவிகளை வழங்குமாறு ஐரோப்பிய, மற்றும் லத்தீன் அமெரிக்க இராணுவ படைகளை கேட்டுக்கொள்ள போவதாகவும் அவர் கோடிட்டு காட்டினார்.

கொலம்பியா நாட்டில் பொருளாதார மற்றும் சமுதாய சீர்குலைவுகள் மிக ஆழமாக சென்று கொண்டுள்ளன. இவற்றை சமாளிப்பதை உறிபியும், அவரது கொலம்பிய ஆழும் குழுவினரும், மிக நெருக்கடியான கட்டத்தில் உள்ளனர். எனவேதான், அவர் கொலம்பிய பிராந்தியத்தில் இராணுவம் முழு அளவிற்கு ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவிற்கு வேண்டுகோள்விடுத்து வருகிறார். இதற்கிடையில் கொலம்பியாவில் அமெரிக்காவின் இராணுவம் அதிகரிக்கப்பட்டிருந்தாலும், வாஷிங்டனின் அதிகாரபூர்வமான கவனம் முழுவதும் பாரசீக வளைகுடாப் பகுதியிலேயே நிலைகுத்தி நிற்பதாகவும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருகி வரும் நெருக்கடியில் அமெரிக்க கவனம் செலுத்தவில்லை என்றும், நாட்டின் ஆளும் குழுவினரிடம் ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, கொலம்பியா அமெரிக்காவின் இராணுவ உதவி பெறுவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கொலம்பியாவின் இராணுவ திட்டத்திற்காக 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை கிளிண்டன் நிர்வாகம் தொடக்கி வைத்தது. நாட்டின் கொக்கைன் போதை பொருள் உற்பத்தியை தடுப்பதற்கு கிளிண்டன் நிர்வாகம், இராணுவ உதவித் திட்டத்தைக் கொண்டு வந்தது. 2001-செப்டம்பர் 11-முதல் புஷ் நிர்வாகம், "பயங்காரவாதத்தின் மீதான யுத்தம்" என்னும் பெயரில் உலக அளவில் நடத்தி வரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, கொலம்பியாவில், அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கு அனுமதித்தது. கொலம்பியாவில் நடைபெற்றுவரும், இரண்டு கொரில்லா இயக்கங்களுக்கு எதிரான எதிர்ப்புரட்சியில் இராணுவ உதவியை கொலம்பியா பயன்படுத்திக்கொள்வதற்கு வெளிப்படையாக புஷ் நிர்வாகம் அனுமதி வழங்கியது. கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை (Revolutionary Armed Forces of Colombia -FARC) மற்றும், தேசிய விடுதலைப் படை (National Liberation Army -ELN) ஆகிய இரண்டு கொரில்லா இயக்கங்கள் கொலம்பியாவில் இயங்கி வருகின்றன.

சென்ற மாதம், கொலம்பியாவில், இயங்கும், அமெரிக்க இராணுவத்தின் தரத்தை, பென்டகன் உணர்த்தியது. கொலம்பியாவிலேயே, அதிக அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துகொண்டுள்ள, அரெளகா, மாகாணத்திற்கு 70 சிறப்புப் படைப் பிரிவுகளை அமெரிக்கா அனுப்பியது. இவர்கள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொலம்பியா இராணுவ படைப் பிரிவிற்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த புதிய இராணுவப் பிரிவின் பணி, FARC மற்றும் ELN கொரில்லாக்களை எதிர்த்துப் போர் புரிவதும், கேனோ - லிமன் எண்ணெய்க் குழாய்களைப் பாதுகாப்பதும் தான். கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒக்ஸிடன்டல் (Occidental) பெட்ரோலியம் நிறுவனம், எண்ணெய் கிணறுகளிலிருந்து, எடுக்கும், எண்ணெயை, இந்தக் குழாய்களின் வழியாகத்தான் அமெரிக்காவிற்கு கொண்டு செல்கிறது. கொரில்லாக்களை எதிர்த்துப் போரிடுவதில் கொலம்பியா, படைகளுக்கு பயிற்சி தருவதற்காக, தற்போதுதான், முதல் தடவையாக, அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன. கொக்கைன் போதைப் பொருள் ஒழிப்பில், இராணுவ உதவி தரப்படுகிறது என்ற அதிகாரபூர்வ சாக்கில் அமெரிக்கப் படைகள் இதற்கு முன்னர் செயல்பட்டு வந்தன. போதை மருந்துச் செடிகளை அழிக்கும் போருக்கு, FARC மற்றும் ELN கொரில்லாக்கள் இடையூறு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கொரில்லாக்களுடன், மோதும் நிலை ஏற்படுவதாகவே, முன்னர் கூறப்பட்டது.

கிரீன் பெரட்ஸ் என்றழைக்கப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படையினர், கொலம்பியா துருப்புக்களுக்கு 490-மைல் நீள, எண்ணைய்க் குழாய்களை தாக்குதல்களிலிருந்து காப்பற்ற மட்டும் பயிற்சி அளிக்கவில்லை அத்தோடு கொரில்லாக்களை "மோப்பம்" பிடித்து ஒழித்துக்கட்டவும் பயிற்சி தருகின்றனர் என ஒரு அமெரிக்க அதிகாரி சென்ற மாதம் தெரிவித்ததார். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், வியட்நாமிலும், எல்சல்வடோரிலும் இதர பகுதிகளிலும், புரட்சிக்காரர்களை "தேடுதல் மற்றும் அழித்தல்" வேட்டை நடத்தி எதிர்ப்புரட்சி செய்ய பயிற்சியளித்த அதே நடவடிக்கைகளை அமெரிக்க படைகள் மேற்கொள்கின்றன, அது பொது மக்களை எந்த அளவு அழிவு நிலைக்கு கொண்டு சென்றது என்பது அனைவருக்கும் தெரியும்.

"கிரீன் பெரட்ஸ்" பயிற்சி தரும் பணியில் மட்டுமே உள்ளனர்; போரில் கலந்துகொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள், வற்புறுத்தி கூறி வந்தாலும், கொலம்பியா நாட்டுப் பத்திரிகைகள், அதிக அளவில் ஆயுதந்தாங்கிய அமெரிக்க துருப்புகள், கொலம்பிய படைகளுடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை ஏற்கனவே, புகைப்படங்களாக, வெளியிட்டிருக்கின்றன.

ஈராக்குடன் அமெரிக்கா போர் புரிய திட்டமிட்டிருப்பதற்கும், கொலம்பியாவில் அமெரிக்க தலையீடு அதிகரித்து வருவதற்கும் உறிபி மட்டுமே காரணம் அல்ல. அமெரிக்கச் சந்தைக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் 7வது பெரிய ஏற்றுமதி நாடு கொலம்பியா. உலகில் இன்னும் தோண்டி எடுக்கப்படாத மிகப்பெரும் எண்ணெய் வளத்தை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஈராக்குடன் போர் ஆபத்தின் விளைவாக, வளைகுடாப் பகுதி எண்ணெய் வரத்து சீர்குலைந்து, வெனிசூலா நாட்டில், தொழிலதிபர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் நீடிப்பதால் ஏற்படும் விளைவுகளையும், கருத்தில் கொண்டு, கொலம்பிய எண்ணெய், தடையின்றி கிடைத்தால்தான், எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியும்.

அரெளகா பகுதியில், அமெரிக்க இராணுவம், அதிகரித்துக் கொண்டிருப்பதால், எண்ணெய் வளம் அதிகம் உள்ள வடகிழக்கு மாகாணத்தில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. சென்ற செப்டம்பரில் அந்த மாகாணத்தை "மறு வாழ்விப்பு மற்றும் சீரமைப்பு மண்டலம்" என்று உறிபி அறிவித்தார். இராணுவத்திற்கு, அசாதாரண அதிகாரங்கள் வழங்கப்பட்டன. குற்றச்சாட்டுகள் எதுவுமில்லாமல் பொதுமக்களை கைது செய்யவும், காவலில் வைத்திருக்கவும், வீடுகளில் சோதனைகள் நடத்தவும், உள்ளூர் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கவும் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த வாரத்தில் அந்த மாகாணத்தில் கொலம்பிய இராணுவத்தை பலப்படுத்தவும் புதிய கவர்னரை நியமிக்கவும், உத்தேசித்திருப்பதாகவும் உறிபி அறிவித்தார். கடைசியாக அந்தப் பகுதியில் பணியாற்றிய கவர்னரான ஓய்வுபெற்ற இராணுவ கேர்னல் நிலவரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாக கூறி ராஜிநாமா செய்தார்.

கொலம்பியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்த்தா லூசியா ரமிரைஸ் கொலம்பியாவின் ஆயுதப்படைகளை பெருமளவில் பெருக்குவதற்கான திட்டத்தை அறிவித்திருக்கிறார். புதிய 11-வாகனப்படை பிரிவுகள், சேர்க்கப்படும் அத்துடன் இராணுவ புலனாய்வு அமைப்புக்கள் வலுப்படுத்தப்படும், தேசிய போலிசில் கூடுதலாக 10,000- பேர் சேர்க்கப்படுவர் மேலும், 35,000 கூடுதல் சிப்பாய்கள் சேர்க்கப்படுவர் என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில் உறிபி ஆட்சி பரவலாக தகவல் தரும் நபர்களை (ஆள்காட்டிகள்) நியமிக்க திட்டமிட்டிருக்கிறது. இதில் 15 லட்சம் கொலம்பிய மக்கள் இடம்பெறுவார்கள். இந்த திட்டத்தை சண்டை நடைபெறும் மண்டலங்களில் கொண்டு வருவதற்கு பள்ளிப் பிள்ளைகளுக்குகூட இராணுவம் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தங்களது பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. அப்படி தகவல் தரமறுப்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள். கிராமப் பகுதிகளில் குறைந்தபட்சம், 15,000 "விவசாய போர் வீரர்கள்" நியமிக்கப்பட இருக்கிறார்கள். கிராமப் பகுதிகளில் இவர்கள் கண்காணிப்பு படையாக விளங்கும்.

அண்மையில் அரசாங்கம் வலதுசாரி அரைகுறை இராணுவ பிரிவோடு பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியிருக்கிறது. கொலம்பியாவின் ஐக்கிய தற்காப்பு படைகள் (United Self-Defense Forces of Colombia -AUC) ஓரளவிற்கு இராணுவ பயிற்சி பெற்ற அமைப்பு இந்த அமைப்பையும், சட்டப்பூர்வமான அரசாங்க கண்காணிப்பு குழுவாக, அங்கீகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

AUC, ஒடுக்குமுறைக்கு துணைப்படையாக இராணுவத்தின் நெருக்கமான ஒத்துழைப்போடு செயல்பட்டு வருகிறது. இதற்காக அவர்களுக்கு போதைப் பொருள் கடத்துபவர்களும், கொலம்பியாவின் ஆளும் தட்டினரும், போதுமான அளவிற்கு நிதி அளித்து வருகின்றனர். கொலம்பியாவில் இடைவிடாது நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட சிவிலியன்களில் 80-சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்களின் சாவிற்கு காரணமாக இருந்தது AUC துணைப்படைதான் என்று, மனித உரிமைக் குழுக்கள் மதிப்பீடு செய்திருக்கின்றது.

இந்த துணைப் படையின் துப்பாக்கி ஏந்திய குழுவினர்கள் கொரில்லா ஆதரவாளர்களை மட்டுமல்ல, தொழிற்சங்க இயக்கத்தினர், மனித உரிமை சங்கத்தினர், விவசாயிகள் மற்றும் சமூக நலன்புரி குழுவை சார்ந்தவர்கள் ஆகியோரையும் குறிவைத்து சுட்டுக் கொன்று வருகிறார்கள். கொலம்பியாவில் மட்டும் கடந்த வருடத்தில் இந்தவகைப்பட்ட 8000 கொலைகள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

AUC தலைமை, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக "நடவடிக்கை நிறுத்தத்தை" அறிவித்திருக்கிறது என்றாலும், தொடர்ந்து கொலைகளை நடத்திக்கொண்டு தான் உள்ளது. அண்மையில் ஆன்டியோகுவா மாகாணத்தைச் சேர்ந்த 11- விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதும், இதே அமைப்பினால்தான்.

அமெரிக்க வெளியுறவுத்துறை AUC "வெளிநாட்டு பயங்கரவாத" அமைப்பு என்று அறிவித்திருக்கிறது. அந்த அமைப்பின் இரண்டு பிரதான தலைவர்களை கைது செய்து அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. உண்மையில் வாஷிங்டன் இராணுவமும், இந்த கொலை வெறிகும்பலும் நடத்துகின்ற வெறியாட்டங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு, கண்டு கொள்வதே இல்லை. இதுபோன்ற குழுக்களுடன், தொடர்புகளை துண்டித்தால்தான் கொலம்பியாவிற்கு இராணுவ உதவி கிடைக்கும் என்ற அமெரிக்க சட்ட விதிகளுக்கு முரணாகவும், அமெரிக்காவே செயல்பட்டு வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் கொலம்பியாவின் இராணுவ புலனாய்வு அமைப்பு அமெரிக்காவின் மேற்பார்வையில் சீரமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் இராணுவத்திற்கும் AUC அமைப்பிற்கும் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் CIA மற்றும் பென்டகன் பெரும்பங்கு வகுத்திருக்கிறது என்பதற்கு கணிசமான அளவில் சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

AUC க்கும், உறிபி ஆட்சிக்கும் இடையே "பேச்சுவார்த்தை" நடத்துவதற்கு கத்தோலிக்க தேவாலய ஆதிக்க சக்திகள் ஏற்பாடு செய்திருக்கின்றனர். கொலை வெறி குழுக்களை சட்டபூர்வமாக அங்கீகரிக்கவும், அவர்களுக்கு நேரடியாக அரசு நிதி உதவி செய்யவும், ஏற்ற சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

டிசம்பரில் -அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவெல் பக்கோட்டா (Bogota) விற்கு, குறுகிய சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது அமெரிக்க அரசாங்கம் பயங்கரவாதிகள் என வர்ணித்த ஒரு குழுவுடன் சமரச பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு வாஷிங்டனின் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதே நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை இரண்டு தலைவர்களை கைது செய்து அமெரிக்காவிடம், ஒப்படைக்க கோரியிருந்ததையும் மீண்டும் குறிப்பிட்டார். "இந்தப் பாதையில் ஜனாதிபதி உறிபி செல்லும்போது, அமெரிக்கா அவருக்கு துணையாக நிற்கும்" - என்று கொலின் பவெல் கூறினார்.

கொலம்பிய அரசு தான் பிறப்பித்த கைது உத்தரவுகளை தள்ளி வைக்க தயாராகயிருப்பதாக கோடிட்டு காட்டியது இந்த கைது உத்தரவுகள், வாஷிங்டன் கைது செய்ய விரும்பிய இரண்டு AUC தலைவர்கள் சம்மந்தப்பட்டது.

றேகன் நிர்வாகத்தில் லத்தீன் அமெரிக்காவிற்கு சிறப்பு தூதராக பணியாற்றிய, ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் சம்மர் வாஷிங்டன் டைம்சிற்கு அளித்துள்ள பேட்டியில் மிகத் தெளிவான விளக்கத்தை தந்திருக்கிறார். "நண்பர்களை பகுத்து பார்க்க முடியாத அளவிற்கு போர் மிக நெருக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் அவர்கள் சட்டத்திற்கு பதில் சொல்லட்டும், போதைப் பொருட்களை ஒழித்துக் கட்டட்டும், மனித உரிமைகளை இறுக பிடித்துக்கொள்ளட்டும், முதலில் அவர்களை கூடாரத்திற்குள் கொண்டு வந்து மிகப்பெரிய மிரட்டலாயிருக்கும், கொரில்லாக்களுக்கு எதிராக சண்டையிடச் செய்யவேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.

பிரதான கொரில்லா இயக்கத்துடன், சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்ததை ஓராண்டிற்கு முன்னரே புஷ் நிர்வாகம் நிர்பந்தம் கொடுத்து அதை நிறுத்திவிட்டது. FARC அமைப்பை அமெரிக்காவும் பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தியுள்ளது. ஆனால் AUC வாஷிங்டன் மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவை விதித்துள்ள பொருளாதார கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுகின்ற அமைப்பு, "வர்த்தகத்தில், சுதந்திரத்தையும் தேசிய மற்றும் சர்வதேச தொழிற்துறைகளில் சுதந்திரத்தையும் தாங்கி நிற்கின்றவர்கள் நாங்கள்" என்று அரைகுறை வலதுசாரி இராணுவ குழுக்களின் பிரதான தலைவர் கார்லோஸ் கஸ்டானோ அறிவித்தார். இவரை கைது செய்து அமெரிக்காவிற்கு அனுப்ப அமெரிக்க வெளியுறவுத்துறை கேட்டிருந்தது.

அரசாங்கத்தின் பாதுகாப்போடு இந்தக் குழுக்கள் உறிபியின் சமுதாய, மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு எதிரானவர்களை நிலைகுலையச் செய்யும் வகையில், இடைவிடாது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உலகம் முழுவதிலும், நடைபெறும் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் தொழிற் சங்க வாதிகள் மீதான தாக்குதல்களில் நான்கு கொலைகளில் மூன்று கொலம்பியாவில் நடக்கிறது. சென்ற ஆண்டு 150-க்கு மேற்பட்ட தொழிற்சங்கவாதிகள் கொலை செய்யப்பட்டனர். முப்பது, நாற்பது பேர் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டது என்று, மனித உரிமைக் குழுக்கள் மதிப்பீடு செய்திருக்கின்றது.

சென்ற மாதம் பந்தோபஸ்து படைகள், காலி (Cali) என்ற இடத்தில் உள்ள CUT (Union federation in Cali) தொழிற்சங்க சம்மேளன, தலைமை அலுவகத்தில் திடீர் சோதனைகளில் ஈடுபட்டன. தங்களது சங்க உறுப்பினர்கள், கொலை குழுக்களால் சாகடிக்கப்பட்டதை கண்டித்து கண்டன கூட்டங்களை ஏற்பாடு செய்த தொழிற்சங்க தலைவர்களை "பயங்கரவாதிகள்" என முத்திரை குத்தி கைது செய்வதற்கு அரசாங்க வழக்கு தொடுனர்கள் முயன்றனர்.

உறிபி அரசாங்கம் வர்க்கப் போராட்டங்களை தீவிரப்படுத்துகின்ற தன்மை கொண்ட கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. அண்மையில் IMF உடன் 2.1 பில்லியன் டாலர் அவசரக் கடன் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டது. தனியார்மயம் மிகத் தீவிரமாகவும், சிக்கன நடவடிக்கைகள் கடுமையாகவும் மேற்க்கொள்ளப்பட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக 40,000- பொது ஊழியர்களை அரசு வேலை நீக்கம் செய்கிறது. சமூக சேவைகளை கடுமையாக குறைத்திருக்கிறது. சில அரசாங்க இலாக்காக்கள் மூடப்படுகின்றன. இதில் நாட்டின் கனிவள தாதுக்களை ஆய்வு செய்து அறிக்கை தருகின்ற கொலம்பியாவின் தேசிய புவியியல் ஆராச்சி சேவையும் மூடப்படுகிறது. இந்தப் பணியை இனி கலிபோர்னியாவின் ஒக்ஸிடென்டல் மற்றும் இதர எண்ணெய் ஏகபோக நிறுவனங்களே மேற்கொள்ளும்.

புஷ் நிர்வாகம் "சுதந்திர சந்தை" கொள்கைகளை கடைபிடிக்குமாறு கட்டளையிட்டது. உறிபி ஆட்சியில் நிறைவேற்றிய வரி சீர்த்திருத்தத்தில் நாட்டின் செல்வந்தர்களுக்கு மிகப்பெரும் அளவில் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. அதே நேரத்தில் சாதாரண மக்களுக்கு விற்பனை வரி, எரிபொருள் வரி உயர்த்தப்பட்டிருப்பதோடு போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளன. நாட்டின் பென்ஷன் திட்டம் சீரமைக்கப்பட்டிருக்கிறது. சலுகைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டிருக்கிறது. "தொழிலாளர் சீர்திருத்தம்" ஒரு நாளைக்கு 16-மணி நேரம் பணியாற்ற வேண்டுவதோடு ஊதியத்தை முடக்கி இதர தொழிலாளர் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.

அரசாங்கத்தினுடைய கொள்கைகள் கடன்களை திரும்ப செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு வருவதால், பட்ஜெட்டில் ஏறத்தாழ 40-சதவிகித தொகை அதற்காக ஒதுக்கப்பட்டுவிடுகிறது. இதனால் எங்கும் நிறைந்திருக்கும் சமுதாய துன்பங்கள் ஆழமாக பரவி வருகின்றன. குறைந்தபட்சம் 20-சதவிகித பணியாற்றும் பக்குவம் உள்ள மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவிக்கின்றனர். 70-சதவிகித மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

உறிபி, பெரும் அளவில் அமெரிக்கப் படைகள் தலையிடவேண்டும் என்று அழைப்பு விடுப்பதன் பின்னணியில் கொலம்பிய ஆளும் தட்டுக்களுக்குள்ளே வளர்ந்து வருகின்ற அச்ச உணர்வு வெளிப்படுகிறது. நாட்டின் மிக மோசமான சமுதாய நிலை, சமுக கொந்தளிப்பை உருவாக்கிவிடுமானால், அத்தகைய கொந்தளிப்பு கொரில்லாக்களுடன் நடைபெறும் சண்டையால் வருவதைவிட அதிகமான மிரட்டலாக தங்களது செல்வத்திற்கும், தனிச்சலுகைகளுக்கும் வேட்டு வைத்துவிடும் என்று அஞ்சுகிறார்கள்.

Top of page