World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Weapons of mass destruction in Iraq: Bush's "big lie" and the crisis of American imperialism

ஈராக்கில் பேரழிவிற்குரிய ஆயுதங்கள்: புஷ்ஷின் ''பெரிய பொய்யும்'' அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும்

By the editorial board
21 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்கா பாக்தாத்தை பிடித்து இரண்டு மாதங்களுக்கு பின்னரும், அமெரிக்காவின் படையெடுப்பு ஆரம்பித்த மூன்று மாதங்களுக்கு பின்னரும் புஷ் நிர்வாகத்தால் ஈராக்கில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதற்கான சான்று எதையும் தரமுடியவில்லை. தற்போது ஒரு சம்பவம் நாளுக்கு நாள் தெளிவாகிக் கொண்டுவருகின்றது. வெள்ளை மாளிகையும், அமெரிக்க ஊடகங்களும் பொய்யின் முழு அடித்தளத்திலேயே போரை ''விற்பனை'' செய்திருக்கிறார்கள் என்பது அதிகரித்தளவில் வெளிப்படையாகின்றது.

ஈராக் போருக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த மாதங்களில் திரும்பத் திரும்ப ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்து ''சதாம் ஹூசேனை நிராயுதபாணியாக்காவிட்டால்'' அமெரிக்க மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பயங்கர, இரசாயன, உயிரியல், அணு ஆயுதங்களை அவர் பயங்கரவாதிகளுக்கு வழங்கிவிடலாம் என ஜனாதிபதி புஷ் எச்சரிக்கை கூறிக்கொண்டேயிருந்தார். பத்தாண்டுகளுக்கு மேலாக, பொருளாதார முற்றுகைகளாலும், தடைகளாலும், பாதிக்கப்பட்டு ஏழ்மைநிலைக்கு தள்ளப்பட்ட அரைப் பட்டினியோடு வாடிக்கொண்டிருந்த ஒரு நாட்டின் மீது சர்வதேச சட்டத்தை மீறி படையெடுப்பு நடத்துவதற்கு அமெரிக்காவின் படைகளை ஏவிவிடுவதற்கு அவர் கூறிவந்த இது போன்ற குற்றச்சாட்டுக்கள்தான் காரணமாக அமைந்தன.

இத்தகைய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டிருப்பது வியப்பிற்குரியதல்ல. ஈராக் வெற்றிகொள்ளப்படுவதற்கு முன்னரே அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கள் உலகம் முழுவதிலும் பரவலாக மறுக்கப்பட்டிருக்கின்றன. ஐரோப்பாவிலோ அல்லது மத்திய கிழக்கிலோ, ஈராக் ஒரு முக்கிய இராணுவ அச்சுறுத்தல் என்று எந்த அரசும் கருதவில்லை. பல மாதங்கள் மிகத்தீவிரமாக ஆராய்ந்த பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை ஆயுத ஆய்வாளர்களால் ஈராக்கில் எந்தவிதமான பயங்கர ஆயுதத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஈராக் வசமுள்ள பாரிய அழிவிற்குரிய ஆயுதங்களுக்கு பலியானவர்கள் என்று அமெரிக்கா கூறிவந்த கோடிக்கணக்கான மக்கள் உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் தெருக்களில் அணிவகுத்து வந்து கண்டப்பேரணி நடத்தி, எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் ஆக்கிரமிப்பு போரை நடத்துவதற்கு அமெரிக்கா முடிவு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமெரிக்கப் போர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஈராக் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்'' விரிவாக்கம்தான் என்று சித்தரித்தனர். உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே, சதாம் ஹூசேனது ஆட்சியை கவிழ்ப்பதற்கு இராணுவ வலிமையை பயன்படுத்த வேண்டும் என்று புஷ் நிர்வாகம் திட்டம் தீட்டிவிட்டது என்பது மிகத்தெளிவாகத் தெரிந்த ஓர் உண்மையாகும். அமெரிக்க இராணுவ தலையீட்டை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வதற்கு ஒரு சாக்கு போக்காக செப்டம்பர் 11 இன் தாக்குதலை புஷ் நிர்வாகம் பிடித்துக் கொண்டது.

ஈராக்கிடம் பேரழிவிற்குரிய ஆயுதங்கள் உள்ளன என்பது அமெரிக்காவால் ''அதிகாரத்துவ காரணங்களுக்காக'' தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை துணைச்செயலாளர் போல் வொல்போவிட்ச் (Paul Wolfowitz) ஆல் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதாவது இதுதான் அவர்களது உண்மையான நோக்கமான பாரிய எண்ணெய் வளத்தை கைப்பற்றி மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது என்பதை மூடிமறைப்பதற்காக ஒரு பிரயோசனமான மூடுதிரையை வழங்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை, பென்டகன் மற்றும் CIA ஆகியவற்றால் ஒன்றுமையாக கருதக்கூடிய காரணமாக இருந்தது.

எவ்வாறிருந்தபோதிலும், போர் ஆரம்பித்ததிலிருந்து பேரழிவிற்குரிய ஆயுதங்கள் தொடர்பான புஷ் நிர்வாகத்தின் பிரச்சாரத்தின் ஒவ்வொரு காரணங்களும் பிழையானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

* மேற்கு ஆபிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில் இருந்து ஈராக் யூரேனியத்தை பெறுவதற்கு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு, ஜனாதிபதி புஷ் 2003 நாட்டிற்கு வழங்கிய உரையில் இந்த குற்றசாட்டை சேர்ப்பதற்கு ஓராண்டிற்கு முன்னரே போலியான ஆவணங்களின் அடிப்படையில் கூறப்பட்டவை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

* ஈராக் இறக்குமதி செய்துள்ள ஆயிரக்கணக்கான அலுமினிய குழாய்கள் யூரேனியத்தை தயாரிப்பதற்கான குழாய்களாக பயன்படுத்த முடியும் என்ற கூற்றை சர்வதேச அணுசக்தி கழகமும், மற்றும் அமெரிக்க அணு விஞ்ஞானிகளும் மறுத்துள்ளனர்.

* ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள பொருளாதார தடைகளின் கீழ் தடுக்கப்பட்டுள்ள 20 தொலைதூர இலக்கு ஸ்கட் ராக்கெட்டுக்கள் ஈராக் வசம் உள்ளது என குற்றச்சாட்டு கூறப்பட்டது. அத்தகைய ராக்கெட்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததுடன் ஈராக் போரின் போது அத்தகைய ராக்கெட்டுக்கள் எதுவும் ஏவப்படவில்லை.

* ஈராக்கிடம் ஏராளமான இரசாயன ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்கள், நரம்பை பாதிக்கின்ற விஷவாயு ஆந்ராக்ஸ் மற்றும் botulinum விஷ பொருட்கள் உள்ளன என்று கூறப்பட்டது. போருக்கு முன்னர் அமெரிக்க புலனாய்வு அறிக்கைகள் இவை உள்ள இலக்குகள் என சுட்டிக்காட்டிய நூற்றுக்கணக்கான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்ட பின்னரும் எந்தவிதமான உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

* சதாம் ஹூசேன் தனது முன்னணி துருப்புக்களிடம் இரசாயன ஆயுதங்களைத் வழங்கியிருப்பதாகவும் ஈராக்கிற்குள் அமெரிக்கத்துருப்புக்கள் நுழையும்போது அவர்கள் மீது அத்தகைய இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் போரின் போது அத்தகைய ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அது மட்டுமல்ல அமெரிக்க ஆயுத வலிமை முன்னர் தாக்குபிடிக்க முடியாமல் ஈராக் இராணுவம் நிலைகுலைந்த போது அத்தகைய இரசாயன ஆயுதங்கள் எதுவும் ஈராக்கில் கண்டு பிடிக்கப்படவில்லை.

பெப்ரவரி மாதம் 5ம் திகதி ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவலால் முக்கியமாக முன்வைக்கப்பட்ட ஈராக் நடமாடும் உயிரியல் ஆயுத ஆய்வுக்கூடங்களை வைத்திருக்கின்றது என்ற குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக மோசூல் பகுதிக்கு அருகில் இரண்டு டிராக்டர் வண்டிகளை கண்டு பிடித்ததை மட்டுமே புஷ் நிர்வாகம் கடைசியாக காட்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. ஆனால் அந்த வண்டிகளில் உயிரியல் ஆயுதப் பொருட்களுக்கான அடையாளங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததுடன், இத்தகைய நூலிழை போன்ற மிக அற்பமான கூற்றிலிருந்து கூட வெள்ளை மாளிகை தனது கருத்தை திரும்பப்பெற வேண்டிய கட்டாயத்திற்கு இலக்காகியதுடன், அந்த வண்டிகளில் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் ஆயுதங்கள் தயாரிப்பதற்கான திட்டம் இருந்ததற்கு அது ஒரு சாட்சியாகும் என அமெரிக்கா கூறியது.

ஆக்கிரமிப்புக்கான போலிச்சாட்டு

புஷ் நிர்வாகமும் அதன் ஊடக ஆதரவாளர்களும் வரலாற்றைத் திருத்தி எழுத முயற்சிகளை மேற்கொண்டிருக்கிற நேரத்தில் ஓர் உண்மையை மீண்டும் வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது. ஈராக்கிடம் பாரிய அழிவிற்குரிய ஆயுதங்கள் உள்ளன என்பதுதான் அமெரிக்காவின் ஈராக் மீதான போருக்கான முக்கிய காரணமாக காட்டப்பட்டது. சென்ற அக்டோபரில் புஷ் போரை ஆரம்பிப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் தனது தீர்மானத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அனுமதி வழங்கியது. அத்துடன் ஐ.நா பாதுகாப்புச் சபை 1441-வது தீர்மானமும் பிரிட்டனின் நாடாளுமன்றம் பிரதமர் டோனி பிளேயரின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய போர் ஆதரவுத் தீர்மானமும் ஆகிய அனைத்து தீர்மானங்களுமே ஈராக் வசம் இருப்பதாகக் கூறப்பட்ட உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களை அடிப்படையாக கொண்டவை அதுமட்டும் அல்லாமல் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு ஈராக் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்ற அடிப்படையிலும் அத்தகைய போர் ஆயத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் போருக்கு முன்னர் திரும்பத்திரும்பக் கூறப்பட்டன. அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையாகவே அந்த குற்றச்சாட்டுக்களை கூறிவந்தனர். ஐ.நா.சபை தீர்மானங்களுக்கும் புறம்பாக ஈராக்கிடம் மிகப்பெரும் அளவிற்கு உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது. அத்துடன் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் எந்தந்த இடங்களில் அத்தகைய ஆயுதங்கள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று துல்லியமாகச் சுட்டிக்காட்டினர். அவற்றை உற்பத்தி செய்வதில் சம்பந்தப்படிருக்கின்றவர்களின் அடையாளங்களையும் எடுத்துரைத்தனர். போர் ஆரம்பித்தால் அவற்றை பயன்படுத்துவதற்கு சதாம் ஹூசேன் இராணுவ கட்டளைகளை பிறப்பித்ததையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இப்படி டஜன் கணக்கில் அத்தகைய அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தாலும் அவற்றில் ஒருசிலவற்றை சுட்டிக்காட்டுவதே போதுமானதாகும்.

ஆகஸ்ட் 20, 2002: துணை ஜனாதிபதி டிக் செனி வெளிநாட்டு போர்களில் கலந்து கொண்ட முன்னாள் போர் வீரர்களிடையே ''தற்போது சதாம் ஹூசேனிடம் பாரிய அழிவிற்குரிய ஆயுதங்கள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. அவர் நமது நண்பர்களுக்கு நமது நட்பு நாடுகளுக்கு மற்றும் நமக்கு எதிராகவே அவற்றை பயன்படுத்தப் போகிறார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை'' எனக் கூறினார்.

செம்டம்பர் 18, 2002: அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் அமெரிக்க காங்கிரஸ் ஆயுதப்படைச் சேவைகள் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போது ''ஈராக் ஆட்சியாளர்களிடம் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் உள்ளன. என்பதை நாம் அறிவோம். சதாம் ஹூசேன் ஆட்சி ஏராளமான இரசாயன ஆயுதங்களை மறைமுகமாக குவித்து வைத்திருக்கிறது. அவற்றில் VX, ஷாரின் சைக்ளோஷாரின் மற்றும் கடுகு வாயு ஆகியவை அடங்கும்.

அக்டோபர் 7, 2002: சின்சினாட்டியில் அமெரிக்க ஜனாதிபதி நாட்டிற்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் ''ஈராக்கிடம் உயிரியல் மற்றம் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகவும் அவற்றை அந்நாடு தயாரித்து வருவதாகவும் மேலும் அணு ஆயுதங்களை பெறுவதற்கு முயன்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஜனவரி 7, 2003: ரம்ஸ்பீல்ட் பென்டகனில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கிய பேட்டியில் ''ஈராக்கிடம் தற்போது இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் உள்ளன என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமுமில்லை. ஏனெனில் இவை நடப்பு புலனாய்வுத் தகவல்கள் அடிப்படையில் அமைந்தவை. 1980களில் ஈராக் இரசாயன ஆயுதங்களை ஈரானுக்கு எதிரான போரில் பயன்படுத்தியது'' என்று குறிப்பிட்டார்.

ஜனவரி 9, 2003: வெள்ளை மாளிகை பிரதிநிதியான ஆரி பிளைஷர் ''அங்கு ஆயுதங்கள் இருப்பது உண்மை என்பது எங்களுக்குத் தெரியும்''

பெப்ரவரி 8, 2003: ஜனாதிபதி புஷ் தனது வாராந்தர வானொலி உரையில் ''எந்த ஆயுதங்கள் தன்னிடம் இல்லை என்று சர்வாதிகாரியான சதாம் ஹூசேன் சொல்லி வருகிறாரோ அதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு ஈராக் போர்க்கள தளபதிகளுக்கு அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்'' என கூறினார்.

மார்ச் 16, 2003: NBC பத்திரிகைச் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி செனி, சதாம் ஹூசேன் அணு ஆயுதங்கள் தயாரிப்புத்திட்டத்தை சீரமைப்பு செய்திருக்கிறார் என்று உண்மையிலேயே நம்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

மார்ச் 17, 2003: இறுதியாக போருக்கு முந்திய தனது இறுதி எச்சரிக்கையில் புஷ் குறிப்பிட்டதாவது ''இந்த அரசும் இதர அரசுகளும் திரட்டியுள்ள புலனாய்வு தகவல்களின்படி ஈராக்கிடம் தொடர்ந்து பயங்கர ஆயுதங்கள் கைவசம் இருந்து வருவதாக இதுவரை உலகில் எவருமே உருவாக்கியிராத பல பயங்கர ஆயுதங்களை ஈராக் ஆட்சி மறைத்து வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது என்பதில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமுமில்லை''.

மார்ச் 30, 2003: ABC இன் ''இந்த வாரம்'' நிகழ்ச்சியில் ரம்ஸ்பீல்ட் கலந்து கொண்டார். அன்றைய தினம் ஈராக் போர் 10வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்றைக்குக்கூட ஈராக்கிடம் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக ரம்ஸ்பீல்ட் வலியுறுத்திக் கூறினார். ''அவை எங்கு மறைந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியும்'' என்றும் அவர் கூறினார்.

பொய் அரசியல்

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடக விமர்சகர்கள் ஆகியோர் புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மித மிஞ்சிய கற்பனை என்றும் பிரச்சார உத்தி என்றும் அல்லது அரசியல் முலாம் பூசுகிற வேலை என்றும் அல்லது இவை CIA மற்றும் இதர புலனாய்வு அமைப்புக்கள் ஈராக்கிற்கு எதிராக சரியான அடிப்படையில் ''ஒரு காரணத்தை'' உருவாக்கித்தர வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக இருக்கலாம் என்று விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள். அத்தகைய விளக்கங்கள் அத்தனையும் உண்மையான பிரச்சனையைத் தவிர்க்கின்ற சாக்குப்போக்குகள்தான். அமெரிக்க மக்களுக்கும் மற்றும் உலகிற்கும் திட்டமிட்டு புஷ் நிர்வாகம் பொய் சொல்லியிருக்கிறது. இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு படையெடுப்பு நடத்துவதை நியாயப்படுத்துவதற்காக போர் புரிவதற்கான காரணங்களை இட்டுக்கட்டி கற்பனையாக புஷ் நிர்வாகம் அறிக்கை விடுத்தது. ஹிட்லரும், நாஜிக்களும் தங்களது அதிரடிப் படைவீரர்களுக்கு போலந்து போர் வீரர்களைப்போல் உடுப்புக்களை அணிவித்து 1939ம் ஆண்டு ஜேர்மனியின் இலக்குகளைத் தாக்குகின்ற நாடகத்தை நடத்தினா். அதற்குப் பின்னர் இதுவரை இல்லாத அளவிற்கு போருக்கான ஓர் அடிப்படையை உருவாக்குவதற்காக இவ்வளவு வெட்கம்கெட்ட மற்றும் பொய்குற்றச்சாட்டை அமெரிக்காவைப்போல் வேறு எவரும் கடைப்பிடிக்கவில்லை.

''பாரிய அழிவிற்குரிய ஆயுதங்கள்'' பற்றிய பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த நேரத்தில் உலகம் முழுவதிலும் அமெரிக்காவின் அணுகுமுறைகளுக்கு எதிராக பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ஒப்புக்கொண்டதைப்போல் உலகில் இரண்டு ''பாரிய வல்லரசுகள் உள்ளன. ஒன்று அமெரிக்க அரசாங்கம், மற்றொன்று உலக மக்களது பொதுக் கருத்து'' இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானவை என்று அப்போது நியூயோர்க் டைம்ஸ் எழுதியிருந்தது.

புஷ் நிர்வாகம் ஐ.நா பாதுகாப்பு சபையில் வரலாறு காணாத எதிர்ப்பை சந்தித்தது. பிரான்ஸ், ரஷ்யா, மற்றும் சீனா முதலிய நாடுகள் ஐ.நா பாதுகாப்பு சபையில் ரத்து (வீட்டோ) அதிகாரத்தை பயன்படுத்தப்போவதாக அச்சுறுத்தலை விடுத்தன. ஐ.ந- ஆயுத ஆய்வாளர்கள் பாதுகாப்பு சபைக்கு ஒரு தொடர் அறிக்கைகளை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கைகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் அல்லது அவற்றை தயாரிப்பதற்கான வசதிகள் ஈராக்கில் தயாரிக்கப்பட்டதற்கான அல்லது இருப்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

உலகம் முழுவதிலும் உருவாகிய எதிர்ப்பு அமெரிக்க மக்களது பொதுக்கருத்தின் மீது அதன் தாக்கத்தை ஏற்படுத்தாது தடுப்பதற்காக பாரிய அழிவிற்குரிய ஆயுதங்கள் பற்றிய பொய் பிரச்சாரத்தை அமெரிக்கா நடத்தியது. அமெரிக்க ஊடகங்களும் மற்றும் ஜனநாயக கட்சி அரசியல் வாதிகளும் இந்த பிரச்சார இயக்கத்தில் உடந்தையாக இருந்து ஊக்குவித்து வந்தன. நிர்வாக அதிகாரிகள் பொய் சொல்லுகிறார்கள் என்பதை அறிந்திருந்தும் அவற்றை பகிரங்கமாக ஒப்புகொள்ள அவர்கள் மறுத்துவிட்டனர்.

புஷ் நிர்வாகத்தின் திட்டவட்டமான ஒரு நடைமுறையை பின்பற்றி வருகிறது. அவர்கள் சொல்வதுதான் உண்மை, நடக்கின்ற சம்பவங்களின் புறநிலையான விளைவுகளை எதுவும் அவர்களுக்கு இல்லை. சம்பவங்கள் குறித்து அவர்களுடைய விளக்கங்களை புகுத்துவதற்கு மத்திய அரசினதும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களினதும் வழங்களை தங்களுக்கு சாதகமான வகையில் பயன்படுத்திக்கொள்கின்ற வாய்ப்புள்ள காலம்வரை பொதுமக்களுக்கு சம்பவங்கள் தொடர்பாக தங்களது சொந்த வடிவங்களையே பிரச்சார மூலம் பரப்புவதுடன், எவ்விதமான மாற்றுவிளக்கங்களையும் மூடிமறைந்துவிடுகின்றது. வாஷிங்டனில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற வலதுசாரி குழுக்கள் தங்களது அதிகாரத்துவ ஏமாற்று முறைகளால் தப்பித்துவிட முடியும் என்று நம்புகிறார்கள்.

புஷ் நிர்வாகம் கடைப்பிடித்து வருகின்ற இந்த நடைமுறை, அமெரிக்க மக்களை அவமதிப்பதுடன், அரசாங்க கொள்கையை கட்டுப்படுத்துகின்ற ஜனநாயக உரிமைகளை மிகவும் கொச்சைப்படுத்துகின்ற வகையில் அமைந்திருக்கின்றது. இப்படியான நடைமுறைகளின் ஆரம்பம் இன்றைய புஷ் நிர்வாகத்தின் ஆரம்பக்கட்டத்திலிருந்தே இருக்கின்றது. தீவிர வலதுசாரி கொள்கைகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்களிப்பார்கள் என்று அவர்கள் கூறிவருகிறார்கள். "கருணையுள்ள பழமைவாதியாக" புஷ் தன்னை காட்டிக் கொள்ளும் சுலோகத்தோடு தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து மிதவாதி என்ற போர்வையில் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். வெள்ளை மாளிகைக்குள் செல்வதற்காக பொதுமக்கள் வாக்களித்ததில் அவர் தோல்வியடைந்தாலும், அமெரிக்க உச்சநீதி மன்றத்தின் வலதுசாரி பெரும்பான்மை தலையீட்டின் காரணமாக அதிகாரத்திற்கு வந்தார்.

அவர் தனது உள்நாட்டு கொள்கைகளில் மிகப்பெருமளவிற்கு பொய் கூறியுள்ளார். செல்வந்தருக்கான வரிக்குறைப்பு வேலைவாய்ப்பு தருகின்ற திட்டம் எனவும், மருத்துவ சேவைகள் (Medicare) மற்றும் மருத்துவ உதவித்திட்டங்களில் (Medicaid) கொண்டுவரப்பட்ட வெட்டுக்களை சீர்திருத்தங்கள் எனவும், பொதுக்கல்விக்கான செலவினங்களை குறைத்துவிட்டு அதற்கு ''எந்தக் குழந்தையும் கல்வி இல்லாத நிலைக்கு ஆட்பட முடியாத திட்டம்'' என்று பெயர் சூட்டியதுடன், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டபூர்வ போலீஸ் அமைப்பை பயங்கரவாதத்திலிருந்து ''சுதந்திரத்தை'' காக்கும் அமைப்பு என வர்ணித்தார்.

மற்றொரு அப்பட்டமான மோசடியும் நடைபெற்றிருக்கின்றது. செப்டம்பர்11 அன்று பயங்கரவாதிகளின் தாக்குதல் நடத்தியது குறித்தோ அல்லது விமானங்கள் கடத்தப்படுவதற்கு முன்னர் அதை தடுப்பதற்கோ, அரசாங்கம் மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு எந்த விதமான தகவல்களும் கிடைக்கவில்லை என்று புஷ் நிர்வாகம் கூறியிருந்தது.

நடைபெற இருந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகள் செய்யப்பட்டும், பலர் கண்காணிப்பின் கீழ் இருந்துள்ளமைக்கு மிகப்பெரும் அளவில் சான்றுகள் இருக்கின்றபோதிலும் செப்டம்பர் 11 நிகழ்வு குறித்து பொறுப்பான விசாரணை எதுவும் நடக்காமல் நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. ஏறத்தாழ 3,000 பேர் கொலை செய்யப்பட்டதை தடுப்பதற்கு மிக அடிப்படையான சாதாரண நடவடிக்கைகளை கூட புஷ் நிர்வாகம் எடுக்கவில்லை.

அதே நேரத்தில் அந்த துயர சம்பவத்தை சாக்கு போக்காக எடுத்துக்கொண்டு முன்கூட்டியே தயாரிக்கப்பட்டுவிட்ட செயல்திட்டத்தை அரசியல் அடக்குமுறை மற்றும் போருக்கான தீவிர வலதுசாரி செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த புஷ் நிர்வாகம் பயன்படுத்தியது.

புஷ் நிர்வாகம் விரும்பி தேர்ந்தெடுத்துள்ள நடைமுறை என்னவென்றால் தகவல்களை தணிக்கை செய்வது மற்றும் அடக்கி ஒடுக்குவது; அதே நேரத்தில் நிர்வாகத்தின் கொள்கைகளை கண்டிப்பவர்களை துரோகிகள் என்றும், பயங்கரவாதத்திற்கு உடந்தையாக செயல்படுபவர்கள் என்றும் சேற்றைவாரி வீசிவதுமாகும். இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விடுகையில் பழைய பொய்களுக்கு மேலாக புதிய பொய்களை அடுக்கிக்கொண்டே போனார்கள். ஈராக்கில் பயங்கர ஆயுதங்கள் உள்ளன என்ற கற்பனை அம்பலத்திற்கு வந்ததும் அதேபோன்று ஆனால் அதைவிட பயங்கரமான கட்டுக்கதைகளை குற்றச்சாட்டுக்களாக ஈரானுக்கு எதிராக புஷ் நிர்வாகம் கிளப்பியது.

புஷ் நிர்வாகம் குடியரசுக் கட்சி மற்றும் அதன் ஊடக கூட்டாளிகள் திரிபுபடுத்தியதைப்போல் அமெரிக்க வரலாற்றிலேயே முன் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. வியட்நாம் போர் யுகத்தில் இருந்த ''நம்பகத்தன்மை தொடர்பான இடைவெளியை'' தற்போதைய அரசாங்கத்தின் பொய்மூட்டைகளுடன் ஒப்பிடமுடியாது.

இந்த அளவிற்கு பொய் சொல்வது அமெரிக்க அரசியலில் திட்டவட்டமான தாக்கத்தை உருவாக்கியது. இது மிகப்பெரும்பான்மையான பரந்துபட்ட தொழிலாள வர்க்கத்திற்கும் அமெரிக்க ஆளும் குழுவிற்கும் இடையே எந்த விதமான அரசியல் தொடர்புகளையும் அழித்து ஒழித்துவிட வழியமைக்கின்றது. பொதுமக்கள் அரசாங்கத்தில் இருந்து அந்நியப்பட்டபோது, தனது காலடிக்கு கீழே வளர்ந்துவரும் சமூக முரண்பாடுகளை உணர்ந்துகொள்ளும் தகமையை அரசாங்கம் இழந்துவருகின்றது. முரண்பாடுகள் ஒன்றின் மீது ஒன்று அதிகரித்து வருவதுடன், சமூக மற்றும் அரசியல் எழுச்சிக்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது.

வெள்ளை மாளிகையில் ஏமாற்றுகளுக்கு அப்பால், சம்பவங்களுக்கு பின்விளைவுகள் உள்ளன. ஈராக்கை வெற்றிகொண்டு ஆக்கிரமித்து ஒரு சில வாரங்களுக்குள் அது ஒரு இரத்தம் சிந்துகின்ற காலனித்துவ நடவடிக்கைதான் என்பது வெளிப்பட்டது. இங்கேயும் நிர்வாகம் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டது. ஈராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக பொதுமக்களிடையே உருவாகிவருகின்ற எதிர்ப்பை, ஈராக்கில் ''அங்குமிங்குமாக'' காணப்படுகின்ற தனிமைப்பட்ட எதிர்ப்பு அல்லது ''சதாம் ஹூசேன் விசுவாசிகளின்'' வேலை தான் என புஷ் நிர்வாகம் பொய் தகவல்களை பரப்பிவருகின்றது.

ஈராக் படையெடுப்பு ஆரம்பமாவதற்கு முன்பு வரலாறு காணாத சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கம் பாரிய பின்விளைவுகளை கொண்ட இன்னொரு புறநிலைரீதியான நிகழ்வாகும். புஷ், கண்டன பேரணிகள் குறித்து கேலிபேசி இந்த Focus group இனை அடிப்படையாக கொண்டு தனது கொள்கையை முடிவு செய்யமாட்டேன் என குறிப்பிட்டார். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக அமெரிக்காவிற்குள்ளேயும் சர்வதேச அளவிலும் கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பு மீண்டும் உருவாவதுடன், இக்கோடிக்கணக்கானோர் ஈராக், எல்லா மத்தியகிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புவர்.

ஜனநாயகக் கட்சியின் பங்கு

அண்மையில், ஊடகங்களும் புஷ் நிர்வாகத்தின் அரசியல் ஆதரவாளர்களும் பாரிய அழிவிற்குரிய ஆயுதங்கள் தொடர்பாக பொய் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்ற ஒரு வாதத்தை எடுத்து வைத்திருக்கின்றனர். ஏனெனில் அதற்கு CIA, பென்டகன், வெளியுறவுத்துறை, காங்கிரஸ் மற்றும் முந்தைய கிளிண்டன் நிர்வாகம் உட்பட அமெரிக்க மக்களுக்கு எதிராக மிகப்பரவலான சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர்.

இந்தப் பிரச்சனையில் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் மிகவும் மோசமாக அதனை முன்வைக்கின்றார். தானும், புஷ்சும் திட்டமிட்டு போருக்கான சாக்கு போக்கை கற்பனையை உருவாக்கினோம் என்பதை வரும் நம்பமாட்டார்கள். அப்படி நம்புவது மிகவும் அபத்தமானது என்பதாக டோனி பிளேயர் கருத்து தெரிவித்தார். குடியரசுக் கட்சியைச் சார்ந்த செனட்டர் ஜோன் மெக்கைன் (John McCain) ஒரு கேள்வியை எழுப்பினார். ''உலகில் உள்ள ஒவ்வொரு பிரதான புலனாய்வு சேவைகளும், தலைமுறை தலைமுறையாக வருகின்ற ஐ.நா ஆயுத ஆய்வாளர்களும், மூன்று அமெரிக்க ஜனாதிபதிகளும், மற்றும் ஐந்து பாதுகாப்புத்துறை அமைச்சர்களும், தந்திருக்கும் தகவல்களை போரை கண்டிப்பவர்கள் நம்பவில்லையா? என்று கேட்டார்.

இதுதான் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகத்தின் கீழ் 1990கள் முழுவதும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் சரியான வரைவிலக்கணமாகும். பத்தாண்டுகள் வரை ஈராக்கிற்கு எதிரான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முற்றுகையிடவும், விமானங்கள் பறப்பதற்கான மண்டலங்களை நிர்ணயிப்பதிலும், ஈராக்கின் இறையாண்மையை சீர்குலைப்பதிலும், ஈராக்கிடம் பாரிய அழிவிற்குரிய ஆயுதங்கள் உள்ளன என்ற பேயை சாக்கு போக்காக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

கிளின்டன் நிர்வாகத்தின் காலகட்டத்தில், ஈராக்கை நிர்பந்தம் செய்து பேரழிவிற்குரிய ஆயுதங்கள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என வற்புறுத்தி வந்ததுடன், இந்த சாத்தியமற்ற கடைமையை அடைய முடியாத ஒவ்வொரு தோல்வியும் ஈராக் மக்களை தொடர்ச்சியாக பட்டினி போடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இதனால் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட ஈராக் மக்கள் பலியானார்கள். ஈராக் மக்களுக்கு எதிராக கிளிண்டன் நிர்வாகம் புரிந்த குற்றங்களை புஷ் நிர்வாகம் தற்போது பயன்படுத்தி அதற்கு மேலான குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு முயன்று வருகின்றது.

பொய்களின் அடிப்படையில் அமெரிக்க மக்களை புஷ் நிர்வாகம் யுத்தத்தினுள் இழுத்து செல்கின்றது என குற்றஞ்சாட்ட, ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் தலைவர்களோ அல்லது ஜனாதிபதி வேட்பாளர்களோ துணியவில்லை. சில சம்பவங்களில் காங்கிரஸ் உறுப்பினர்களான ரிச்சர்ட் கெப்பார்ட், செனட்டர் ஜோசப் லீபர்மான், செனட்டர் ஹிலரி கிளிண்டன் (Congressman Richard Gephardt, Senator Joseph Lieberman, Senator Hillary Clinton) போன்றவர்கள் இந்த பொய்களில் நேரடியாக உடந்தையாக இருந்திருக்கின்றனர். மற்றவர்களை பொறுத்த வரையில் இதில் முக்கிய பங்குவகித்த தீவிர வலதுசாரிகளின் (குறிப்பாக செனட்டர் ரொம்- டாஷ்லே-Senator Tom Daschle) தாக்குதலுக்கு முகங்கொடுக்காது அரசியல் கோழைத்தனம் காரணமாக ஒதுங்கிக் கொண்டனர்.

இன்னும் மற்றையவர்கள் (செனட்டர்கள் ரொபேர்ட் கிரஹாம் மற்றும் கார்ல் லெவின்) ஈராக் தொடர்பாக புஷ் நிர்வாகம் கூறிவருகின்ற பொய் அம்பலத்திற்கு வரும்போது ஈரான், வடகொரியா அல்லது வேறு சில இலக்குகள் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் நடத்தும்போது அது அமெரிக்காவிற்கு சங்கடத்தை தந்துவிடும் என்ற கவலையில் வெள்ளை மாளிகையை கண்டிக்கின்றனர். ஆனால், வெள்ளை மாளிகை மீதான அவர்களது விமர்சனம் எதுவாக இருந்தாலும் அது தந்திரோபாயரீதியானது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாதுகாக்கும் அடிப்படை விடயங்களில் இரண்டு பெரிய முதலாளித்துவ கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன.

ஊடகங்களும் போரும்

புஷ் நிர்வாகம், ஈராக் மீது கூறிய குற்றச்சாட்டுக்களான சதாம் ஹூசேனிடம் ஏராளமான பேரழிவிற்குரிய ஆயுதங்கள் கைவசம் உள்ளன, இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளோடு அவர் நெருக்கமான உறவு கொண்டிருக்கிறார். எனவே செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பதிலடிதான் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை என அமெரிக்க நிர்வாகம் கூறிவந்ததை அமெரிக்க ஊடகங்களும் கிளிப்பிள்ளைகளைப் போல வெளியிட்டன.

ஊடகங்கள் எப்போதுமே பெரு வர்த்தக நிறுவனங்களின் கருவிகளாகவே செயல்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகங்களின் தராதரம் தாழ்ந்து கொண்டே வருகிறது. போரின் இறுதிக் காலகட்டத்திலாவது, வியட்நாம் போரில் கணிசமான அளவிற்கு விமர்சன அடிப்படையில் வெளியிடப்பட்டன. இறுதி வெற்றி நமக்குத்தான் என்று அரசாங்கம் கூறிவந்த கருத்துக்களின் நம்பகத்தன்மை நடைபெற்ற சம்பவங்கள் மூலம் கேள்விக்குறியாயிற்று. அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் பென்டகனின் இரகசிய அறிக்கைகளை வெளியிட்டதுடன், ''வாட்டர் கேட் '' (Watergate) ஊழலை அம்பலப்படுத்தின.

கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பாக ஊடகங்கள் வலதுசாரிகளின் ஆத்திரமூட்டல்களுக்கு முன் மண்டியிடத் தொடங்கின. வைட் வாட்டர் (Whitewater) விசாரணை மற்றும் லெவின்ஸ்க்கி (Lewinsky) விவகாரங்கள் ஆகியவற்றை கிளின்டனின் வெள்ளை மாளிகை சட்டபூர்வமாக செய்த தவறுகள் எனவும், 2000ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையே களவாடியதை நியாயப்படுத்தியதுடன், செப்டம்பர்11 நிகழ்வை ஏதோ ஆகாயத்திலிருந்து விழுந்த ஒன்றாகவும் மற்றும் புஷ் நிர்வாகம் இது போன்ற நிகழ்ச்சிகளை எதிர்பார்த்திருக்க முடியாது என்றும் அமெரிக்க ஊடகங்கள் எடுத்துக்காட்டியதுடன் தற்போது ஈராக்கை அமெரிக்கப் படைகள் பிடித்துக் கொண்டதை நியாயப்படுத்தியும் வருகின்றனர்.

முன்னாள் தாராளவாத பத்திரிகைகள் என்று கருதப்படும் நியூயோர்க் டைம்ஸ் போன்ற நாளிதழ்கள் அற்ப விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தி ஜேசன் பிளேயர் (Jayson Blair) விவகாரத்தை பெரிது படுத்தியவர்கள். அந்த பத்திரிக்கையின் புதிய நிருபர் ஒருவர் கற்பனையாக சில மேற்கோள்களை எழுதினார் என்பதை மிக விரிவாக வெளியிட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இறந்த போருக்குக்கான கட்டுக்கதைகளுக்கு பென்டகன் மற்றும் CIA ஒத்துழைப்பு தந்தபோது அவர்களுக்கு எந்தவிதமான மனச்சாட்சியும் உறுத்தவில்லை.

அண்மையில், மேரிலாந்து பல்கலைக் கழகம் சர்வதேச கொள்கை அணுகுமுறை (International Policy Attitudes) திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிடத்தக்க மக்கள் கருத்துக்கணிப்பு விபரம் ஒன்றை பிரசுரித்திருந்தது. அந்தக் கருத்துக்கணிப்பில் அமெரிக்க மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் பேரழிவிற்குரிய ஆயுதங்கள் இருப்பதை கண்டு பிடித்திருப்பதாக நம்பினார். 22% மக்கள், ஈராக் இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தியதாக நம்பினர். இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 50% பேர் செப்டம்பர் 11 தாக்குதலில் ஈராக் பிரஜைகள் பங்கு கொண்டதாக கருதினர். விமானத்தை கடத்தி குண்டுவீசி தாக்கியவர்களுக்கு சதாம் ஹூசேன் நேரடியாக உதவினார் என்று 40% பேர் நம்பினர்.

இத்தகைய கருத்துக்கணிப்புக்கள் அமெரிக்க ஊடகங்கள் எந்த அளவிற்கு அமெரிக்க மக்களை குழப்புவதிலும் தவறான தகவல்களை தருவதிலும் ஈடுபட்டிருக்கின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றன. அதுமட்டுமல்ல ஈராக்கிற்கு எதிரான போரில் பொதுமக்களது பரவலான ஆதரவு என்பது மணலில் கட்டப்பட்ட வீடு போன்றது என்பதையும் இது போன்ற கருத்துக்கணிப்புக்கள் தெளிவுப்படுத்துகின்றன.

ஊடகங்கள் இது போன்ற கருத்துக்களை திரிபுபடுத்துவதற்கு திட்டவட்டமான எல்லைகள் உண்டு. புஷ் நிர்வாகத்தைப்போல் ஊடகங்களும் பல கோடி மக்களிடம் மதிப்பிழந்து போய்விட்டது. ஏனென்றால் அரசாங்க பேச்சாளர்களும் அவர்களது ஊடக உடந்தையாளர்களும் எந்தவிதமான எல்லையோ, கொள்கையோ இல்லாமல் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் அறிந்துவிட்டார்கள்.

கணக்குத் தீர்க்கும் நாள்

அமெரிக்க அரசியலில் பொய்வகிக்கும் முக்கிய பாத்திரம் ஊடகங்களின் அகந்தை போக்கில் மட்டும் வெளிப்படுத்தப்படவில்லை. மாறாக இது அமெரிக்க சமுதாயத்திற்குள் நிலவுகின்ற சமூக முரண்பாடுகளின் அளவை தன்மையை பாரியளவில் பிரதிபலிக்கின்றது. அனைத்து தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் அமெரிக்காவில் தான் மிகத் தீவிரமான ஆழமான வர்க்க பிளவுகள் நிலவுகின்றன. அமெரிக்காவின் சமூக உறவுகள் மிகப்பெரும் அளவு சமூக சமத்துவமின்மையால் ஆளுமை செய்யப்படுகின்றது. இவை அதிகரித்தளவில் எந்தவொரு ஜனநாயக வடிவத்திற்கும் முரணானவையாக அமைந்துள்ளதுடன், மாறாக நிதி ஆதிக்க குழுவினர் ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துகின்றது.

ஆளும் குழுவினர் ஒரு சில சலுகைபெற்றவர்களை செல்வம்மிகுந்தவர்களாக மாற்றி, பரந்துபட்ட மக்கள் திரளினரின் வாழ்க்கைத் தரத்தை கீழ்நோக்கித்தள்ளும் ஒரு அமைப்பு தொடர்பாக நேர்மையான கணக்குவழக்கை காட்டுவது சாத்தியமற்றது. இந்த சமூக கொந்தளிப்புகள் தவிர்க்க முடியாதபடி அரசியல் கொந்தளிப்புகளுக்கு இட்டுச்செல்லும்.

புஷ் நிர்வாகம் பாரிய அழிவிற்குரிய ஆயுதங்கள் தொடர்பாக கூறிவந்த குற்றச்சாட்டுக்கள் பொய் என நிரூபிக்கப்பட்டிருப்பதால், வெளிநாடுகளில் மிகப்பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் பிரிட்டிஷ் மக்களிடமும் நாடாளுமன்றத்திலும் பொய் கூறியுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறார். அமெரிக்காவில் தாராளவாதத்தின் உடைவினாலும், ஜனநாயகக் கட்சியிலிருந்தோ அல்லது ஊடகங்களிலிருந்தோ கண்டனங்கள் எதையும் காண்பது அரிதாக உள்ளதால் அமெரிக்காவில் இதற்கான பிரதிபலிப்பு அதிகளவு காணப்படவில்லை. புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு பொதுமக்கள் பெருமளவில் எதிர்ப்பை காட்டுவதுடன், ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது தொடர்பாக நியாயமான ஆத்திர உணர்வு கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த எதிர்ப்பு போக்குகள் ஊடகங்களிலோ அல்லது உத்தியோகபூர்வ அரசியல் கட்டமைப்பின் எந்த தரப்பிலோ பிரதிபலிக்கவில்லை.

எவ்வாறிருந்தபோதிலும், வெகுவிரைவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள் ஒரு அரசியல் வடிகாலை கண்டுகொள்ளவேண்டும். ஈராக்கில் நிலவரம் சீர்குலையும்போது, சதாம் ஹூசேனுக்கு பதிலாக ஒரு ஜனநாயக ஆட்சியை அமெரிக்கா உருவாக்கும் என்ற அவர்கள் கூறிவருகின்ற மற்றொரு பொய்யும் முற்றுமுழுதாக அம்பலப்பட்டுவிட்டது.

தற்போது ஈராக்கில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அமெரிக்க ஆட்சியாளர்கள் ஈராக்கின் புறநகர் பகுதிகளில் ஆத்திரமூட்டும் சோதனைகளிலும், நிராயுதபாணிகளான ஆர்பாட்டக்காரர்களை சுட்டுத்தள்ளுவதிலும், திட்டமிட்ட தேர்தல்களை நடத்தவிடாதும் செய்துள்ளார்கள். இது ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை போன்றதாகும். ஈராக்கின் எண்ணெய் தொழிற்துறையை மீண்டும் ஆரம்பிக்கவேண்டும் என்பதும் அதனை தனியார்மயமாக்குவதும்தான் அமெரிக்க ஆட்சியாளர்களின் முதல் முன்னுரிமை நடவடிக்கையாக உள்ளது. எண்ணைய் தொழிற்துறையை தனியார்மயமாக்குவதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் அந்நாட்டின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க முடியும்.

''பேரழிவிற்குரிய ஆயுதங்கள்'' மற்றும் ''ஜனநாயகத்திற்கான போர்'' என்ற கூற்றுக்கள் போரினை ஆதரித்த புஷ் நிர்வாகத்தையும் மற்றும் அமெரிக்க அரசியல் கட்டமைப்பினரையும் திரும்பவும் ஆட்டிப்படைக்கும். அதன் அரசியல் தாக்கத்தை ஆக்கிரமிப்பு தொடர்பாக தமது விருப்பமின்மையை வெளிப்படுத்தும் மற்றும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என தெளிவாக விரும்பும் ஈராக் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பினை சந்திக்கும்.

அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தின் கையில் உள்ள அனைத்து நிர்வாக அமைப்புகளுமான வெள்ளைமாளிகை, காங்கிரஸ், நீதித்துறை, இராணுவம், ஊடகங்கள், நிறுவனங்களின் நிர்வாகத்தினர் ஆகிய அனைத்துத்தரப்பினரும் போர்க்குற்றங்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அடித்தளத்திலிருந்து ஒரு முக்கியமான இயக்கம் உருவாகுமானால் அது ஜனாதிபதி அல்லது நிர்வாகத்தை மட்டுமல்லாது முழு சமூக ஒழுங்கமைப்பையுமே ஒரு நெருக்கடிக்குள்ளாக்கும்.

Top of page