World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Marxism, the International Committee, and the science of perspective: an historical analysis of the crisis of American imperialism

மார்க்சிசம், அனைத்துலகக்குழு மற்றும் விஞ்ஞானபூர்வமான முன்னோக்கு: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடி பற்றிய ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

By David North
12 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய உறுப்பினர்கள் குழு, மிச்சிகனிலுள்ள அன் ஆர்பரில் கடந்த 8-9 ஜனவரி வார இறுதியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும், உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவருமான டேவிட் நோர்த் இதன் ஆரம்ப உரையை வழங்கினார். இந்த அறிக்கை மூன்று பகுதிகளாக வெளியிடப்படும். தமிழில் முதல் பகுதி ஜனவரி 15 அன்று பிரசுரிக்கப்பட்டது. இரண்டாம் பகுதியை கீழே காணலாம்.

சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே வாரத்தில், ஜனவரி 1985ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பல பகுதிகளின் பிரதிநிதிகளும், அனைத்துலகக் குழுவின் பத்தாம் அகல்பேரவையில் கலந்து கொள்ளுவதற்காக இங்கிலாந்திற்குப் பயணித்திருந்தனர். அது ஜெர்ரி ஹீலி, கிளீவ் சுலோட்டர் மற்றும் மைக்கல் பண்டா ஆகியோரின் தலைமையில் இயங்கிவந்த பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) நடத்திய கடைசி சர்வதேச பேரவையாக போயிற்று.

அக்காலக்கட்டத்தில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, சர்வதேச இயக்கத்திற்குள்ளேயே ஓர் அரசியல் நெருக்கடி உருவாகிக்கொண்டிருந்தது. அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் அனைத்துலக குழுவின் அரசியல் நிலைப்பாட்டில் தீவிரமான பிழைகள் பற்றியும் தவறான தத்துவ வகைக் கருத்தாய்வுகள் பற்றியும், விவாதிக்கவும், ஆராயவும் மேற்கொள்ளப்பட்டிருந்த முயற்சிகள் WRP தலைமையினால் அடக்கப்பட்டிருந்தன. ஜனவரி 1985ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கூடிய நேரத்தில், உலக இயக்கம் முழுவதும் மிக ஆபத்தான முறையில் நோக்குநிலைதவறி இருந்தது; தொழிலாளர் புரட்சிக் கட்சி எல்லாவற்றையும் விட மோசமான நிலையில் இருந்தது. சுலோட்டரினால் தயாரிக்கப்பட்டிருந்த முன்னோக்குகள் தீர்மானம் பற்றிய வரைவு, இந்தச் சிதைவை மறைக்கும் வகையில் வெற்றுத்தனமான பகுப்பாய்வையும், அலங்காரச் சொற்களின் தொகுப்பாகவும்தான் இருந்தது.

தக்க சான்றாக இருந்த ஒரு பகுதி பிரகடனப்படுத்தியதாவது: "முதலாளித்துவச் சரிவின் புறநிலை விதிகள் இப்பொழுது தடையின்றிச் செயல்படுகின்றன. அவை முறிந்து விட்ட நிலையில்தான் உள்ளன." இது உண்மை என்று கொண்டால், முதலாளித்துவ வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத வகையில் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று மட்டுமல்லாமல், மார்க்சினால் கூட தத்துவார்த்த ரீதியிலும், நடைமுறையிலும் ஒருகாலும் சாத்தியமற்றது என்று கருதக்கூடிய நிலை வந்துள்ளது என்று பொருளாகும்.

முதலாளித்துவச் சரிவின் விதிகள் "தடையேதும் இன்றி" செயல்படுகின்றன என்றால், 1) இந்தச்சரிவிற்கு எதிராக அகநிலையான முதலாளித்துவம் தனது பங்கிற்கு மேற்கொண்ட தடுப்பு முடிந்துவிட்டது: என்றும் 2) முதலாளித்துவ நிகழ்ச்சிப்போக்குகளுக்குள்ளேயே சரிசம வலுவுடன் எதிர்ச்செயலாற்றும் போக்குகள் இயல்பாகத் தோன்றி அத்தகைய சரிவை, முற்றிலும் பின்வாங்கச்செய்ய முடியாதிருப்பினும், அது முற்றிலும் செயலிழப்பது ஏற்பட்டுள்ளது என்று பொருளாகும். வேறுவிதமாகக் கூறினால், உலக வரலாற்று முறை என்ற விதத்தில் முதலாளித்துவத்தின் சமுதாயப், பொருளாதார இயங்கியல் வெறுமே இயங்காது நின்று விட்டது என்று கொள்ளப்பட வேண்டும்.

மற்றொரு பகுதி "தீர்க்கமான புரட்சிகர போராட்டங்கள் ஏற்கனவே நடந்துள்ளன என்பதுதான் உண்மையாகும்." என்று கூறியுள்ளது. கிளிவ் சுலோட்டரின் பேனா முனையில் இருந்து இச்சொற்கள் பெருகி வந்தபோதே, உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் பின் வாங்கி வருகின்றனர் என்பதற்கான தெளிவான அடையாளங்கள் தென்பட்டிருந்தன. "தீர்க்கமான புரட்சிகரப் போராட்டங்கள்" நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பது உண்மையானால், அவை இழக்கப்பட்டுவிட்டன என்பதை ஒப்புக்கொள்ளுவதற்கு எவரும் கட்டாயத்திற்கு ஆளாவர்.

இதே தன்மையில்தான், தன்னுடைய வண்ணச் சொற்பூச்சுக்களினால் போதையடைந்திருந்த சுலோட்டர், "எவ்விதத்திலும் தோல்வியைக் கண்டிராத அமெரிக்காவின் தொழிலாள வர்க்கம், உலகில் உள்ள மற்ற தொழிலாளர்களோடு ஒரே நேரத்தில் புரட்சிகரத்தன்மை பொருந்திய போராட்டங்களில் நுழைகிறது" என்று அறிவித்தார். உண்மையில், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெள்ளை மாளிகையில் றேகன் நுழைந்ததில் இருந்து அமெரிக்க தொழிலாள வர்க்கம் தொடர்ச்சியாகப் பெரும் தோல்விகளை சந்தித்து வந்திருந்தது. காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், ஊக்கத் தளர்வையும் கொண்டு வேலைநிறுத்த நடவடிக்கைகள் சமீபத்திய தசாப்தங்களிலேயே மிகக் குறைந்த வகையில்தான் நிகழ்ந்திருந்தன.

புரட்சிகர முன்னோக்குகளை வளர்த்து எடுக்கும் முக்கிய பங்களிப்பில் WRP தலைவர்களின் தத்துவார்த்த குழப்பத்தினதும், அரசியல் திவாலினதும் எடுத்துக்காட்டினது சான்றுகளாக இத்தகைய பந்திகள் பலவற்றைக் கூறமுடியும்.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைவர்களுடைய மிக அசாதாரணமான அரசியல் வரலாற்றைக் காணும்போது, அதிலும் குறிப்பாக ஜெர்ரி ஹீலி போன்றவர்களுடையதை காணும்போது, அன்று அவர்கள் அடைந்திருந்த நிலை மிகப்பெரும் சோகத்தைத்தான் கொண்டிருந்தது. ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்தில் தனிப்பட்ட பங்கை ஹீலி கொண்டிருந்தமை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டிருந்தது. 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தோற்றுவிக்கப்படுவதற்கு, பப்லோவாத திரித்தல்வாதத்திற்கு எதிரான சர்வதேசப் போராட்டத்தில் ஜேம்ஸ் பி. கனனுக்கு ஆதரவாக இவர் முக்கிய பங்கினைக் கொண்டிருந்தார். இதற்குப் பிந்தைய தசாப்தத்தில் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் பின்சரிவை அவர் எதிர்த்ததுடன், கோட்பாடற்றவகையில் பப்லோவாத இயக்கத்துடன் மறுஐக்கியம் செய்வதற்கான அதன் திட்டங்களையும் எதிர்த்தார். ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாடுகளை அயராத முறையில் ஹீலி காத்து நின்றதனால்தான் மிகவும் சாதகமற்ற அரசியல் சூழ்நிலையில் அனைத்துலகக் குழு தப்பிப்பிழைத்தது. அவர் தலைமை தாங்கி போராட்டத்தை நடத்தாமல் இருந்திருந்தால், (சோசலிசச் சமத்துவ கட்சியின் முன்னோடியான) தொழிலாளர் கழகம் (Workers League) என்பது இருந்திருக்காது.

மேலும், 1963ல் SWP இல் பிளவு ஏற்பட்டதற்குப் பின்னர் குறிப்பாக, ஹீலியின் முயற்சிகளால்தான் அனைத்துலக்குழு உலக முதலாளித்துவத்திற்குள்ளே பெரும் பொருளாதார நெருக்கடி பெருகுவதற்கான அடையாளங்கள் பற்றி விழிப்புடனான கவனத்தைச் செலுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதலாளித்துவத்தின் உறுதித் தன்மையில் ஆழ்ந்த நம்பிக்கை வைப்பதில் தங்களுடைய சந்தர்ப்பவாத அரசியலின் பிரதிபலிப்பை கொண்ட பப்லோவாதிகளுக்கு முற்றிலும் எதிரான வகையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI), இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக முதலாளித்துவத்தின் நிதி, பொருளாதார அடித்தளங்களின் பெருகிவரும் அடையாளங்களை உணர்ந்து, அவை பெரும் நெருக்கடிக்கு உட்பட்டு விடும் என்பதை உய்த்து அறிந்தது. எனவேதான் 1971ம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிலவிய "பொற்காலத்தை" திடீரென முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் எடுக்கப்பட்ட நிக்சனின் முடிவுகளைப் பற்றிய பாரதூர பொருளாதார, அரசியல் விளைவுகள், உட்குறிப்புக்களை நன்கு அறிய முடிந்திருந்தது.

ஆகஸ்ட் 15, 1971 ஞாயிறன்று, ஜனாதிபதி ரிச்சார்ட் எம். நிக்சன் தேசிய தொலைக் காட்சியில் தோன்றி அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகம், கடன்கள் திருப்பிக் கொடுத்தல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தீவிர சரிவை கருத்திற்கொண்டும், உயர்ந்து வரும் பணவீக்க அடையாளங்களை கருத்திற்கொண்டும், சில தொடர்ச்சியான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். ஜூலை 1944 பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச நிதிய முறையின் விதிகளின்படி, தன்னுடைய சர்வதேச வர்த்தகப் பங்குகளை எப்பொழுதும் தங்கமாக மாற்றிக் கொள்ளலாம் என்று நிறுவப்பட்டிருந்த விதிகள் இனி அமெரிக்காவால் மதிப்பளிக்க முடியாதவை என்று அவர் அறிவித்தார். இந்த வளர்ச்சிப்போக்கு பப்லோவாதிகளால் அதிகமாக கருத்திற் கொள்ளப்படவில்லை. அனைத்துலகக் குழுவோ, இரண்டாம் உலகப்போரின் முடிவிற்குப் பின்னர் மிக முக்கியமான பொருளாதார நிலைமையை இது பிரதிபலித்து நிற்பதாகக் கருதி, இதனால் சர்வதேச வர்க்கமோதல் தீவிரமடையும் என்றும் உலகப் பொருளாதார நெருக்கடியில் ஆழ்ந்த வேறுபாட்டிற்கு அரங்கு அமைக்கப்பட்டுவிட்டது என்றும் கருதியது. இந்த நெருக்கடியின் இதயத்தானத்தில்தான் அமெரிக்க முதாலாளித்துவத்தின் உலக நிலையில் ஏற்பட்ட வீழ்ச்சி இருந்தது.

இந்த வளர்ச்சி பற்றி தன்னுடைய பகுப்பாய்வில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில், 1944ம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் சர்வதேச பொருளாதார முறையின் அடித்தளங்கள் அமைக்கப்பட்டதின் முக்கியத்துவத்தை மீள்ஆய்வு செய்தது. அமெரிக்காவிற்கு வெளியே ஐரோப்பாவின் பழைய முதலாளித்துவ வல்லரசுகள் அழிவின் விளிம்பில் இருந்தன. பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் அரசியலளவில் செல்வாக்கிழந்திருந்ததோடு அதன் நிதி அமைப்பும் சிதைந்திருந்தது. ஹிட்லருடைய ஆட்சி ஜேர்மன் முதலாளித்துவத்தை பெரும் பள்ளத்தில் வீழ்த்தி, நாடு முழுவதும் பற்றி எறிந்த தன்மையில்தான் இருந்தது. முதல் உலகப்போருக்குப் பின் இருபதே ஆண்டுகளில் தொடர்ந்திருந்த இரண்டாம் உலகப்போரின் செலவினங்கள் பிரிட்டனை திவாலாக்கியிருந்தது. ஐரோப்பா முழுவதும் தொழிலாளர் வர்க்கம் பாசிசத்திற்கும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கும் எதிராக தாக்குதலை நடத்தியிருந்தது. முதலாளித்துவத்துடன் புரட்சிகரமாக தீர்வுகாண வேண்டும் என்ற மக்கள் உணர்வு கூடுதலாகவே இருந்தது. இதேபோன்ற செயல்திட்டம்தான் ஜப்பானிலும் இருந்தது; அங்கு போர் விரைவில் மிகக் கொடூரமான பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய பகுதிகள் அனைத்திலும், ஏகாதிபத்திய-எதிர்ப்பு, காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்கள் எழுச்சியுற்றிருந்தன.

போரின் பெருங்குழப்பத்திற்கிடையே அமெரிக்கா முதலாளித்துவத்தின் பெரும் கோட்டைபோல் விளங்கி வந்தது. இதன் சர்வதேச முதலாளித்துவ போட்டியாளர்களை போர் சிதைத்திருந்ததால், இதன் காலில் விழுந்து கிடந்த போட்டியாளர்களுக்கு, போரின் சாம்பலில் இருந்து வெளிவர இருக்கும் பொருளாதார அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று இது கட்டளையிட முடிந்தது. ஐரோப்பிய முதலாளித்துவம் தப்பிப்பிழைப்பதில்தான் தன்னுடைய விதியும் தப்பும் என்பதை அமெரிக்க ஆளும் வர்க்கம் நன்கு அறிந்திருந்தது. போருக்குப் பின் புரட்சி அலை ஐரோப்பிய கண்டத்தில் வீசத் தலைப்பட்டு, பழைய முதலாளித்துவத்தின் மையங்களில் தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்தை நிறுவியிருந்தால், தனிமைப்படுத்தப்பட்ட அமெரிக்க முதலாளித்துவத்தின் இறுதி முடிவு மூடிமுத்திரையிடப்பட்டிருக்கும். எனவே தொடர்ந்த சில தொலைநோக்குடைய முடிவுகளின் மூலம் அமெரிக்க ஆளும் வர்க்கம் தன்னுடைய மகத்தான தொழில், மற்றும் நிதிய இருப்புக்களை திரட்டி உலக முதலாளித்துவத்தை சீரமைக்க முன்வந்தது. பெருமந்த நிலை மற்றும் போரினால் ஒரு தசாப்தம் தடை ஏற்பட்ட பின்னர், ஐரோப்பா மற்றும் ஜப்பானை மறுசீரமைப்பதற்கு, இந்தப் பொருளாதார திட்டத்தின் அடித்தளத்திற்கு, உலக வர்த்தகத்தை மறுசீரமைப்பதற்கு ஆதாரங்களை கொடுக்கக் கூடிய, ஒரு புதிய உலக நிதிய (நாணய) முறை தேவைப்பட்டது.

முதல் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட நிதிய பேரழிவுகள், உலக வர்த்தகத்தின் விரிவாக்கம் மற்றும் உலக முதலாளித்துவ முறையை மறுசீரமைத்தல் என்பது பழைய தங்க மாற்றுமுறையினால் தோற்றுவிக்கப்பட்டிருந்த கடன்களை வரம்பிற்குட்படுத்தும் முறையுடன் இயைந்து அல்லது பொருந்தி இருக்க முடியாது என்று அமெரிக்காவை நம்பவைத்தது. ஆனால் கடன் மற்றும் வர்த்தக இயக்கும் முதல் கருவியாக எது தங்கத்திற்குப் பதிலாக இருத்தப்பட முடியும்? இதற்கு மிக எளிதான விடையாக இருந்தது அமெரிக்க காசுத்தான் என்பதுதான்.

1947ல் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் விதிகளின்படி, அமெரிக்க டாலர் உலகின் முக்கிய இருப்பு நாணயமாக உபயோகப்படும் என்று, அதாவது இந்த நாணயத்தின் மூலம் சர்வதேச வர்த்தகத்தின் பெரும் பகுதி நடத்தப்படலாம் என்று ஏற்கப்பட்டது. அனைத்து சர்வதேச நாணயங்களும் தங்கள் மதிப்பை டாலருடன் ஒப்பிட்டு நிலைநிறுத்தும். டாலரை பொறுத்தவரையில் அதன் மதிப்பு தங்கத்தின் மதிப்புடன் ஒப்பிடப்பட்டு நிலையாகும்; அதாவது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு $35 என்று துல்லியமாக இருக்கும்.

இந்த வழிவகையின் அடிப்படையில் இரண்டு முக்கிய காரணிகள் இருந்தன: முதலாவது உலகின் தங்க அளவில் பெரும்பகுதி கென்சுக்கியில் உள்ள நாக்ஸ் கோட்டையின் பாதுகாப்பு நிலவறைகளில் வைக்கப்பட்டிருந்தன. இரண்டாவதும் இன்னும் முக்கியமானதும், இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்கா தொழில் துறையில் பெற்றிருந்த மகத்தான தொழில் துறை ஏற்றம் அதனுடைய வர்த்தக நிலுவைக்கு மிகப் பெரிய வகையில் அதிக உபரிகளை ஈர்ப்பதை உறுதிப்படுத்தியது. முதலீடு செய்யப்பட்ட அல்லது வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டிருந்த டாலர்கள் என்றால் பின்னர் அவை அமெரிக்கப் பொருட்களையும் பணிகளையும் பெறுவதற்குப் பல நாடுகளிலும் பயன்படுத்தப்படமுடியும்.

இவ்வாறு இரண்டாம் உலகப் போருக்குப் பின் கொண்டுவரப்பட்ட, டாலரை தங்கத்தோடு இயைந்து நிறுத்திய, பண அமைப்புமுறை, சர்வதேச முதலாளித்துவத்தின் செயற்பாடுகளில் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தின் வெளிப்பாடாகப் போயிற்று. குறிப்பிட்டளவிற்கு அமெரிக்க மேலாதிக்க சகாப்தம் என்று கூறப்படலாம், அது பிரெட்டன் வூட்சை ஒட்டிய டாலர் அடிப்படையை கொண்டிருந்த உலக பண அமைப்புமுறையின் நடவடிக்கையால் வரையறுக்கப்படும் காலகட்டம் ஆகும்.

ஆனால் பிரெட்டன் வூட்ஸ் முறை தன்னுள்ளே ஒரு அழிவைத்தரும் முரண்பாட்டை கொண்டிருந்தது. இம்முறையின் வெற்றிகரமான செயல்பாடு, அமெரிக்கா மிக உயர்ந்த இலாபத்தை தன்னுடைய வர்த்தகத்திலும், பணத்தை திருப்பிக் கொடுக்கும் முறையிலும், ஐரோப்பாவிற்கும் ஜப்பானுக்கும் அவற்றின் தொழில்கள் மறு வளர்ச்சி அடைவதற்குக் கொடுக்கும் மூலதனத்தையும், அவர்களுடைய ஏற்றுமதிக்கு சந்தைகளை கொடுத்தும், எஞ்சிய பெருநிலையில் வைத்திருக்கும் அதன் திறமையின் மீது ஆதாரம் கொண்டிருந்தது. ஐரோப்பிய, ஜப்பானிய தொழில்களின் புதுப்பித்தல் ஒருகாலத்தில் உலக சந்தைகளில் சவால்விடமுடியாதிருந்த அமெரிக்க மேலாதிக்கத்தை சவாலுக்குட்படுத்தி கீழறுத்துவிடமுடியும் என்பது தவிர்க்க முடியாதது; மேலும் அவற்றின் வளர்ச்சி அமெரிக்காவின் வர்த்தக, செலுத்துகை சமநிலை இவற்றில் தாக்கத்தையும் ஏற்படுத்தும். டாலர்களின் குவிப்பு வெளிநாடுகளில் பெருகுவது காலப்போக்கில் அமெரிக்கா வைத்திருக்கும் தங்க இருப்புக்களையும்விட மிக மிக அதிகமாக வளர்ச்சியுறும் என்பதுடன் பிரெட்டன் வூட்ஸ் முறையின் செயற்பாட்டையும் கேள்விக்கு உட்படுத்திடும். ஒரு மேற்கு ஐரோப்பியப் பொருளாதார நிபுணரான றொபேர்ட் டிரிபின் (Robert Triffin) 1950களின் கடைசிப் பகுதிகளில் இந்த முரண்பாட்டை சுட்டிக்காட்டினார். 1960களின் நடுப்பகுதியில், இந்த முறையின் அழுத்தம் இன்னும் கடுமையான முறையில் வளர்ந்து கொண்டுவருகிறது என்பதைக் காட்டியது. வியட்நாம் போரினால் அமெரிக்க ஆண்டு வரவுசெலவுத் திடடத்தில் ஏற்பட்ட கூடுதலான நிதிய அழுத்தத்தை ஒட்டி இந்த நெருக்கடி அதிக அழுத்தத்தை பெற்றது; மற்றும் பரந்த போராட்டத்தை ஒட்டி அமெரிக்க ஆளும் வர்க்கம் புதிய சமூகநலன் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதும் அழுத்தத்தை அதிகப்படுத்தியிருந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு எதிர்பார்த்திருந்தபடியே பிரெட்டன் வூட்ஸ் முறையின் உடைவானது, பொருளாதார, அரசியல், சமுதாய விளைவுகளில் மிகத் தொலைநோக்கு கொண்ட பாதிப்பை கொண்டிருந்தது. 1930களுக்குப் பின்னர் அறியப்பட்டிருக்காத வகையில் சர்வதேசப் பொருளாதார உறவுகள் சீர்குலைந்தன. பழைய முறையில் நிலையாக இருந்த நாணயமாற்று முறை, ஒரு புதிய கணித்துக்கூற முடியாத வகையில் புழங்கும் நாணயமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பும் சந்தையினால் நிர்ணயிக்கப்படலாயிற்று. டாலரை பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட விலையில் தங்கத்தை மாற்றாகப் பெறலாம் என்பது மாறிவிட்டதால், ஒரு நீண்ட காலச் சரிவிற்குள் அது நுழைந்தது. டாலரின் மதிப்புக் குறைவு உடனடியாக உலகெங்கும் விலைகளில் பெருவீக்கத்தை ஏற்படுத்தி, சமபங்கு சந்தைகளில் பங்கு மதிப்புக்களின் சரிவையும் ஏற்படுத்தியது. 1973ஐ ஒட்டி, உலக முதலாளித்துவம், 1930க்கு பின்னர் மிக ஆபத்தான அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் இணைந்த நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டது.

இந்த வளர்ச்சிகள் உலக முதலாளித்துவத்தின் உலகந்தழுவிய நெருக்கடி பற்றிய அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வின் தன்மையை உறுதிப்படுத்தின. 1970கள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியைக் கண்ணுற்ற தசாப்தம் ஆகும். பணவீக்கத்தை எதிர்கொள்ளும் முறையில் தொழிலாள வர்க்கம் தாக்குதல் கொள்கையைக் கொண்டது. பிரிட்டனின் சுரங்கத் தொழிலாளர்கள் 1973-74 குளிர்காலத்தில் நடத்திய வேலைநிறுத்தம் டோரி அரசாங்கத்தை இராஜிநாமா செய்ய வைத்தது. ஏப்ரல் 1974ல் போர்த்துக்கலில் இருந்த பாசிச சர்வாதிகாரம் தகர்ந்து போயிற்று; இதன்பின் ஜூலை மாதம் கிரேக்கத்தில் தளபதி பாப்படோபெளலோசின் இராணுவ சர்வாதிகாரம் தகர்க்கப்பட்டது. ஒரு மாதம் கடந்த பின், ஆகஸ்ட் 1974இல் ரிச்சார்ட் நிக்சன் ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜிநாமா செய்தார். அதற்கும் ஓராண்டிற்குள்ளாக, 1975 ஏப்ரல் மே மாதங்களில் வியட்நாமிலும், கம்போடியாவிலும் நிகழ்ந்த ஏகாதிபத்திய போர்கள் அமெரிக்காவிற்கு பெரும் அவமானத்தை கொடுத்து முடிவுற்றன.

ஆனால் இந்த எழுச்சி, ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்கள் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் கடைப்பிடித்திருந்த எதிர்ப்புரட்சிகர கொள்கைகளினால் முடங்கிப் போயின. 1978ன் கடைசிப் பகுதியில் எண்ணெய்த் தொழிலாளரின் வேலை நிறுத்தங்களினால், ஷா மன்னரின் ஆட்சி (CIA யினால் 1953ல் அதிகாரத்தில் இருத்தப்பட்டிருந்த) மிக முக்கியமான வகையில் முடங்கியிருந்த ஈரானில்கூட, ஸ்ராலினிஸ்டுகளின் கொள்கைகள் சோசலிசப் புரட்சியின் வெற்றியைத் தடுத்துவிட்டன. மாறாக, அதிகாரம் சமய மற்றும் தேசியவாத சக்திகளின் பிடிக்குள் விழுந்தது. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களைக் காட்டிக்கொடுத்தமையானது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தாக்குதலை நடத்துவதற்கு அதன் சொந்த எதிர்ப்புரட்சிகர மூலோபாயத்தை தயாரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தேவையான கால அவகாசத்தைக் கொடுத்தது.

அரசியல் அலை வேறுவிதமாக வந்தபோது, பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சி, நிலைமையை பற்றி புதிய மதிப்பீட்டைக் கொள்ளவும், தேவையான மாறுதல்களை தன்னுடைய நடைமுறையில் செயல்படுத்தவும் தவறிவிட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளுக்கு பல முறையும் கிளிவ் சுலோட்டர் எச்சரிக்கை கொடுத்திருந்தார்: "உங்களுடைய முன்னோக்குகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் உங்களுடைய முன்னோக்குகளை சரியாகப் பரிசோதனை செய்யுங்கள்" என்று. ஆனால் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) தன்னுடைய ஆலோசனையையே தான் பின்பற்றுவதில் தோல்வியடைந்ததுடன், அரசியல் நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கேற்ப தன்னுடைய வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளவில்லை. சோசலிசப் புரட்சிக்கான வாய்ப்புக்கள், எதிர்பார்ப்புக்கள் மறையத் தலைப்பட்ட நிலையில், தொழிலாளர் புரட்சிக் கட்சி தன்னுடைய இயக்கத்தின் துடிப்பை, பிரிட்டனுடைய தொழிலாளர் அதிகாரத்துவம், மற்றும் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகியவற்றில் இருந்த முதலாளித்துவ தேசிய இயக்கங்களுடனும் ஒரு புதிய, சந்தர்ப்பவாத வகையில் உறவுகொள்ளத் தலைப்பட்டது. திரித்தல்வாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நீண்டகால போராட்டத்தின் படிப்பினையை புறக்கணித்து, தொழிலாளர் புரட்சிக் கட்சி பப்லோவாத முறையை ஒத்திருந்த அரசியல் வழியை அபிவிருத்தி செய்தது. மேலும், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அமைப்பு ரீதியான கட்டாயங்கள் (கடைமைப்பாடு) என்று ஹீலி பிடிவாதத்துடன் கொண்டிருந்த நிலைப்பாட்டில், பிரிட்டிஷ் பகுதி கூடுதலான முறையில் தேசியவாத நோக்குநிலையைக் கொள்ளத் தலைப்பட்டுவிட்டது. ஒரு சர்வதேசக் கட்சி என்ற முறையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பணி கூடுதலான முறையில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஒரு தேசியக் "கட்சி கட்டலின்" நடவடிக்கைகளுக்கு மேலும் மேலும் கீழ்ப்படுத்தப்பட்டன.

தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் 1985 கோடை, மற்றும் இலையுதிர் காலத்தில் வெடித்திருந்த நெருக்கடியானது, ட்ரொட்ஸ்கிச கொள்கைகளில் இருந்து நீண்ட காலமாக அது பின்வாங்கியிருந்ததாலும், அந்தக் காட்டிக் கொடுப்பின் விளைவினால் ஏற்பட்ட அரசியல் திசைவிலகலின் தவிர்க்க முடியாத விளைவும் ஆகும். தொழிலாளர் புரட்சிக் கட்சி கூடுதலான முறையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிற்குள் இருக்கும் சக சிந்தனையாளர்கள், தன் தோழர்கள் இவர்களுடன் கொள்ள வேண்டிய தோழமை உறவுகளைவிடவும் தன்னுடைய பல்வேறு தொழிலாளர் அதிகாரத்துவங்கள், முதலாளித்துவ தேசிய வாதிகள், குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கினர் ஆகியோருடன் கொண்ட கூட்டுக்களுக்கு அதிக மதிப்பை வைத்திருத்தது. 1985 இலையுதிர்காலத்தில் கூட, தங்களுடைய பேரழிவுக் கொள்கையின் விளைவாக வந்திருந்த அழிவிற்கு நடுவே அவர்கள் நின்றிருந்த நிலையிலும், தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய புதிய உறவுகள் பல ட்ரொட்ஸ்கிச-எதிர்ப்பு போக்குகளுடன் இருப்பதைப் பற்றி வெட்கமின்றி இறுமாப்புடன் பேசி அலைந்தனர். லண்டனில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில், சுலோட்டர் எடுத்துக்காட்டும்விதமாக தன்னுடைய நேசக் கரத்தை பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் விரும்பத்தகாத, இழிபுகழ்பெற்ற பிரதிநிதியான மொன்டி ஜோன்ஸ்ரோனுக்கு வெளிப்படையாகவே நீட்டினார்.

இந்த நடவடிக்கைகளின் கீழ் சர்வதேச அரசியல் நிலைமை பற்றிய முற்றிலும் தவறான மதிப்பீடு இருந்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைவர்கள் எவருக்குமே, தாங்கள் நட்புறவு கொள்ள விரும்பும் பல தேசிய சீர்திருத்தவாத மற்றும், சந்தர்ப்பவாத அமைப்புக்களுமே பேரழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன என்று தோன்றவில்லை. சர்வதேச முன்னோக்குகள் பற்றித் தீவிர, முறையான ஆய்வைக் கைவிட்ட பின்னர் தொழிலாளர் புரட்சிக் கட்சி சர்வதேச வர்க்கப் போராட்ட வளர்ச்சியின் உட்குறிப்புக்கள் ஆராயப்படுவது ஒரு புறம் இருக்க, உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் புதிய போக்குகள் பற்றி முற்றிலும் கவனத்தில் எடுக்காதிருந்தது.

பெப்ரவரி 1986ல் தொழிலாளர் புரட்சிக் கட்சி உடனான பிளவிற்குப் பின்னர், அனைத்துலகக் குழு இரண்டு நெருக்கடியான, ஒன்றுக் கொன்று தொடர்புடைய தத்துவார்த்தப் பணிகளை எதிர் கொண்டது. முதலாவது தொழிலாளர் புரட்சிக் கட்சி எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக் கொடுத்தது என்பது பற்றிய வேர்களை விரிவாகப் பகுப்பாய்ந்து, நான்காம் அகிலத்தின் வரலாற்றின் மீது அது நடாத்திய தாக்குதலுக்கு விடையிறுப்பது. இரண்டாவது தொழிலாளர் புரட்சிக் கட்சி கைவிட்டிருந்த இன்றியமையாத முன்னோக்கு தொடர்பான பணிகளை தொடர்வது. தொழிலாளர் புரட்சிக் கட்சியைப் பற்றிய திறனாய்வு, மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றிய புதிய மதிப்பீடு அனைத்துலகக் குழுவிற்கு மீண்டும், 1923இல் இடது எதிர்ப்பு ஏற்பட்ட காலத்தில் இருந்து ஆரம்பித்து, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழு வேலைத்திட்ட மரபியத்துடன் தன்னுடைய நனவான வரலாற்றுத் தொடர்பை மீள நிலைநாட்டிக் கொள்ள உதவியது. அதே நேரத்தில், உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் உண்மையான புறநிலைப் போக்குகளுடன் இயைந்த முறையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு தன்னுடைய வேலையை நோக்குநிலைப் படுத்திக்கொள்ள சர்வதேச முன்னோக்குகள் பற்றிய முறையான பணிகளை தொடங்குவது தேவையாக இருந்தது.

1987 ஜூலை மாதம் அனைத்துலகக் குழுவின் நான்காம் அகல்பேரவையில், கீழ்க்கண்ட வினா எழுப்பப்பட்டது: உலகப் பொருளாதாரம், மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்ட வளர்ச்சியில் எந்தப் போக்குகளின் ஒரு முக்கியமான வெளிப்பாடாக நான்காம் அகிலம் உள்ளது? வரலாற்று ரீதியாக கருதப்பட்டால், உலக அளவில் முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும், தொழிலாள வர்க்கம் ஒரு சமூக சக்தியாக வளர்வதன் மீதான அதன் தாக்கத்திற்கும் இடையே, மற்றும் இந்த புறநிலை சமூக பொருளாதார போக்குகள், சர்வதேச மார்க்சிச இயக்கத்தின் வரலாற்று வளர்ச்சியில் தங்களுடைய வெளிப்பாட்டைக் கொண்டுள்ள அரசியல் வடிவங்களுக்கும் இடையில் ஆழமான தொடர்பு உள்ளது.

1860களின் நடுப்பகுதியில் முதலாம் அகிலம் தோற்றுவிக்கப்பட்டது உலகளாவிய முறையில் முதலாளித்துவ தொழில் முறை, வர்த்தகம் விரிவடைந்ததை அடுத்து ஒரு சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் எழுச்சியுறும் என்பதை ஒரு அரசியல் எதிர்பார்ப்பாக கொண்டுதான் நிகழ்ந்தது. அப்பொழுது முதிர்ச்சி அடையாதிருந்த இந்த உண்மையான பொருளாதார மற்றும் சமூக நிகழ்ச்சிப்போக்குகள் முதலாம் அகிலத்தின் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதற்குப் போதுமானதாக இருந்ததில்லை; எனவே அது 1870 களின் நடுப்பகுதியில் நடைமுறையில் எந்தச் செயற்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் இரண்டு தசாப்தங்களுக்குள், மேற்கு ஐரோப்பா, மற்றும் வட அமெரிக்காவில் மிகப் பெரிய, விரைவான முறையில் தொழிற்துறை வளர்ச்சி அடைந்தது ஒரு புதிய தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியை, சுதந்திரமான அரசியல் அமைப்பை நோக்கிய அதன் இயக்கத்தையும் தூண்டிவிட்டது. அதே நேரத்தில், காலனித்துவ முறையின் விரிவாக்கம் உலகெங்கிலும் வெகுஜனங்களை சர்வதேச முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சிக்கு இழுத்துச் சென்றது.

1889ல் இரண்டாம் அகிலம் நிறுவப்பட்டது, முதலாளித்துவ வளர்ச்சியில் இந்தப் புதிய கட்டம், அதன் விளைவாக புதிய தொழில்முறை தொழிலாள வர்க்கத்தின் அளவில் வளர்ச்சி மற்றும், பொருளாதார முக்கியத்துவம் ஆகியவற்றை பிரதிபலித்தது. இதற்கு அடுத்த 25 ஆண்டுகளில், இரண்டாம் அகிலத்தின் வளர்ச்சி முதலாளித்துவ தொழிற்துறையின் விரிவாக்கத்துடன் பிணைந்திருந்தது. இந்த நிகழ்ச்சிப்போக்கு சாராம்சத்தில் சர்வதேசரீதியானது என்றாலும், இதனுடைய வெளிப்பாட்டின் மேலாதிக்கம் செய்யும் வடிவம், வலிமை வாய்ந்த தேசிய தொழிற்துறை பொருளாதாரங்களின் வளர்ச்சி, மற்றும் சக்திமிக்க தேசிய தொழிலாளர் அமைப்புக்களின் தோற்றம் ஆக இருந்தது. உண்மையில் இரண்டாம் அகிலம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தின் முன்னோக்கை உயர்த்திப் பிடித்தது: ஆனால் அதன் பகுதிகளின் நடைமுறை வேலைகள், ஆழ்ந்த முறையில் தேசிய தொழிற்துறையின் அஸ்திவாரங்களில் பொதிந்திருந்தன இரண்டாம் அகிலம் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் நுழைந்த போது எந்த அளவில், ஏகாதிபத்திய இராணுவத்தின் பெருகி வரும் ஆபத்து, உலகப் பொருளாதார அழுத்தத்தின் கீழ் தேசியப் பொருளாதாரங்களின் இறைமை எவ்வாறு அழிக்கப்பட்டுவிட்டது என்பதைப் பிரதிபலித்து நின்றதை கவனிக்கத் தவறிவிட்டது.

முதலாம் உலகப் போரின் வெடிப்பு, இரண்டாம் அகிலத்தின் பொறிவு, மூன்றாம் அகிலத்தின் தோற்றம், அனைத்தும் இந்த அடிப்படை மாறுதலின் வெளிப்பாடுகளாக வந்தவையாகும். ட்ரொட்ஸ்கி விளக்கியதுபோல:

''1914 ஆகஸ்ட் 4ம் திகதி அனைத்துக் காலங்களுக்குமாக தேசிய வேலைத்திட்டங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி தற்போதைய சகாப்தத்திற்கு, முதலாளித்துவத்தின் அதியுயர்ந்த வளர்ச்சியும், வீழ்ச்சியும் கொண்ட சகாப்தத்தின் தன்மையுடன் தொடர்புடையதான ஒரு சர்வதேசிய வேலைத்திட்டம் என்பது ஒரு பொழுதும் தேசிய வேலைத் திட்டங்களின் ஒட்டுமொத்தமோ அல்லது அவற்றின் பொதுத்தோற்றங்களின் ஒருங்கிணைப்போ அல்ல. சர்வதேச வேலைத்திட்டம், உலகப் பொருளாதார உலக அரசியல் அமைப்பை முழுமையாகக் கொண்டதாகவும் நிலைமைகளின் போக்குகளின் அவற்றின் அனைத்து தொடர்புகளையும் முரண்பாடுகளையும் அதாவது அதன் தனிப் பகுதிகள் பரஸ்பர ரீதியாக பகைமையுடன் ஒன்றிலொன்று தங்கியுள்ள நிலைமைகள் பற்றிய ஆய்விலிருந்தே நேரடியாக ஆரம்பிக்க வேண்டும். தற்போதைய சகாப்தத்தில் கடந்த காலத்தைவிட மிக அதிக அளவில் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய அணுகுமுறை ஒரு உலக அணுகு முறையிலிருந்தே ஊற்றெடுக்க வேண்டும்; ஊற்றெடுக்க முடியும், எதிர்மாறாக அல்ல. இங்கேதான் கம்யூனிச சர்வதேசியத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான பிரதானமான வேறுபாடு இருக்கின்றது.'' (லெனினுக்குப் பின்னர் மூன்றாம் அகிலம் -The Third International After Lenin (London, 1974), pp.3-4).

இந்தச் சொற்களை 1928ல் ட்ரொட்ஸ்கி எழுதியபோது, உலகப் பொருளாதார கருத்துருவை அடிப்படையாக கொண்டு ஒரு புரட்சிகர மூலோபாயம் கட்டாயம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்பது கம்யூனிஸ்ட் அகிலத்திற்குள்ளேயே தாக்குதலுக்குள்ளாகியிருந்தது. தனியொரு நாட்டில் சோசலிசம் என்ற ஸ்ராலினிச வேலைத்திட்டம், 1917 அக்டோபர் புரட்சியின்போது மூலோபாய அடிப்படையில் அதிகாரத்தை கைப்பற்றியிருந்த போல்ஷிவிக் கட்சியின் சர்வதேசியத்திற்கு மாறானதாகும். சோவியத் தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சி சோவியத் ஒன்றியத்திற்குள் (USSR) நடைபெறும் சோசலிச செயற்திட்டத்தின் வெற்றிக்கு உறுதியளிக்கும் காரணியாகவும், முக்கிய காரணியாகவும் இருக்கும் என்பது இரண்டாம் அகிலத்தில் நிலவியிருந்த தேசியப் பார்வைக்கு மீண்டும் செல்லுவதைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஸ்ராலினுடைய முன்னோக்கிற்கு கம்யூனிஸ்ட் அகிலத்தினுடைய பல பகுதிகளின் தலைமைகளிடையேயும் பதிலைக் கண்டது என்பதும், அது இவருடைய கருத்துருவான உடனடித் தேசிய நிலைமைகள் தொழிலாள வர்க்கத்தால் ஒவ்வொரு நாட்டிலும் எதிர்கொள்ளப்படவேண்டும் என்றும் அதுதான் நடைமுறைச் செயற்பாட்டின் உண்மையான ஆரம்பப்புள்ளியாக அமையும் என்பதும் வரவேற்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது ஆகும்.

ஸ்ராலினிச தேசிய நோக்குநிலையை ஏற்றுக் காத்ததுடன், அதை கொள்கையளவிலும், அரசியலளவிலும் நியாயப்படுத்த முயன்றவர்களில் அன்ரோனியோ கிராம்ஸ்சி (Antonio Gramsci) யும் ஒருவராவார். "உண்மையில், இத்தகைய வளர்ச்சி சர்வதேசியத்தை நோக்கிச் செல்லும், ஆனால் தொடக்கப் புள்ளி "தேசியத் தன்மையைக்" கொண்டிருக்கும்; அதாவது இந்த தொடக்க இடத்தில் இருந்து ஒருவர் ஆரம்பித்தாக வேண்டும்" என்று அவர் கூறினார். (Prison Notebooks (New York, 1971) p.240). முசோலினியின் ஆட்சி சரிந்த பின்னர் குட்டிமுதலாளித்துவத்தையும், இத்தாலிய முதலாளித்துவத்தையும் மீட்டு, ஒரு மிகச் சிறந்த இடது சீர்திருத்தவாதக் கட்சியை வளர்த்திருந்த, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பிந்தைய வரலாற்றைக் கருத்திற்கொள்ளும்போது, கிராம்ஸ்சியின் நிலைப்பாட்டில் காணப்படும் அரசியல் உட்குறிப்புகள் வெளிப்படையாகத்தான் உள்ளன. இத்தாலிய ஸ்ராலினிஸ்டுகள் கிராம்ஸ்சியின் நினைவை தழுவியதில் வியப்பு இல்லை; பாசிஸ்ட்டுக்கள் அவரை இழிவான முறையில் நடத்தியதால் 1930களில் இறந்து போனார்; இத்தாலிய ஸ்ராலினிஸ்டுகள் அவரைத் தங்களுடைய கோட்பாடுகளை ஊக்குவித்தவர் என்று பெருமைப்படுத்தியுள்ளனர்.

மூன்றாம் அகிலத்தின் ஸ்ராலினிச சீரழிவிற்கு விடையிறுக்கும் வகையில், 1938ம் ஆண்டு ட்ரொட்ஸ்கியால் நான்காம் அகிலம் தோற்றுவிக்கப்பட்டது. இரண்டாவது ஏகாதிபத்திய உலகப்போரின் வெடிப்பானது மிகுந்த துன்பம் தரும் வகையில் உலகப் பொருளாதாரம், உலக அரசியல் இவற்றின் தொடர்பை வெளிப்படுத்தியது. ஆனால் விந்தையான முறையில், போருக்குப் பின் முதலாளித்துவம், பிரெட்டன் வூட்ஸின் அடிப்படையில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு, தேசிய சீர்திருத்தவாத முன்னோக்கு சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் மீண்டும் உயிர்பெற வழிவகை செய்தது.

உலக வர்த்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட விரிவாக்கம், தேசிய முதலாளித்துவ பொருளாதாரங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, மற்றும் 1950, 1960களில் அசாதாரண முறையில் சோவியத் ஒன்றியத்தில் வாழ்க்கைத் தரங்களில் முன்னேற்றமும் கூட, ஸ்ராலினிச அமைப்புக்கள் உட்பட தேசிய சீர்திருத்தவாத கட்சிகளுக்கு ஒரு புதிய வாழ்வை கொடுத்தது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், இக்காலக்கட்டத்தில் வாழ்க்கை தரங்களும் எவ்வளவு உயர்ந்திருந்த போதிலும், சற்று கூடுதலாக நீடித்திருந்த தேசிய சீர்திருத்தவாதம் இந்தியக் கோடைக்காலம் போன்றுதான் இருந்தது என்பது தெரிய வேண்டும். பிரெட்டன் வூட்ஸ் அமைப்புமுறை நிலைமுறிந்ததும், பண வீக்கம், பொருளாதாரப் பின்னடைவு, உயரும் வேலையின்மை, அதிகரித்த இலாபச்சரிவு, முதலாளித்துவத்தில் மாற்றம், அதுவும் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகக் கடுமையான முறையில் நிகழ்த்தப்பட்ட எதிர்த் தாக்குதல்கள் அனைத்தும், தேசிய சீர்திருத்தவாதமானது நடைமுறைக்கு சாத்தியமான ஒரு கொள்கை என்ற நிலையில் இருந்து முழுமையான பொறிவிற்கு இட்டுச்சென்றது.

இந்த நிலைமைகளில்தான், 1987 கோடையில் அனைத்துலகக் குழு ஒரு புதிய முன்னோக்குடன் கூடிய தீர்மானத்தை வரைய முற்பட்டது. நான்காம் பிளீனத்தில் விவாதத்திற்கு எழுந்துள்ள பிரச்சினைக்கு விடையிறுக்கும் வகையில், அனைத்துலகக் குழு தன்னுடைய கவனத்தை புதிய வகையில், 1970 களிலும், 1980 களிலும், கணினி தொழில்நுட்பம் மற்றும் விரைவான, மற்றும் குறைவான செலவுடனான தொடர்பு முறைகளினாலும், போக்குவரத்து முறைகளினாலும் உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சி தோன்றியிருப்பதன்பால் ஆராய்வதற்கு தன் கவனத்தை செலுத்தியது. நாடுகடந்த நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டமை முதலாளித்துவ உற்பத்தி, நிதியம் இவற்றின் பண்பில் பெரும் மாற்றத்தை உலகந்தழுவிய முறையில் ஏற்பட்டுவிட்டதை பிரதிபலித்தது. இந்த வளர்ச்சி உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவம் வரலாற்று ரீதியாக வேரூன்றியுள்ள தேசிய-அரசு அமைப்பு முறைக்கும் இடையே உள்ள முரண்பாடுகளில் முன்னொருபோதுமில்லாத வகையில் பதட்டத்தின் மட்டத்திற்கு உயர்ந்தது.

இந்த நெருக்கடிக்கான ஒரு புரட்சிகர தீர்வு, சர்வதேசிய சோசலிச அடிப்படையில்தான் காணப்பட முடியும்: அதாவது சர்வதேச தொழிலாள வர்க்கம் அரசியலளவிலும், நடைமுறையிலும் ஐக்கியப்படுவதன் ஊடாக ஆகும். தற்போதுதுள்ள தேசிய ரீதியான நோக்குநிலை கொண்ட எந்தக் கட்சிகளும், தொழிலாளர்களின் அமைப்புக்களும், அவை ஸ்ராலினிசம் சார்ந்தவையோ, சமூக ஜனநாயகங்களோ அல்லது தொழிலாளர் சீர்திருத்தவாதிகளோ இந்த நெருக்கடியை தீர்க்க வல்லவை அல்ல. உண்மையில் அவை சமீப காலத்தின் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்துள்ளமை, சர்வதேச முதலாளித்துவ அமைப்பின் புதிய வடிவங்களை அவை எதிர்கொள்கையில் அவற்றின் திராணியற்ற தேசிய நோக்குநிலையிலிருந்து தவிர்க்க முடியாமல் விளைந்தவை ஆகும். அனைத்துலகக் குழுவின் சர்வதேசியவேலைத்திட்டம் ஒன்றுதான், உலகந்தழுவிய முறையில் முதலாளித்துவம் ஒருங்கிணைந்துள்ளதால் தொழிலாள வர்க்கத்தின் முன் வைக்கப்படும் சவாலை ஏற்க பொருத்தமுடையதாக இருக்கும்.

தொடரும்.......

Top of page