World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European stock markets in freefall following Paris financial summit

ஐரோப்பா: ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பாரிஸ் நிதிய உச்சிமாநாட்டை எடுத்து பெரும் வீழ்ச்சியுற்றன

By Peter Schwarz
7 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

திங்களன்று ஐரோப்பா முழுவதும் பங்கு விலைகள் சரிந்தன. ஐரோப்பிய பங்குச் சந்தைகள், சனிக்கிழமை அன்று பாரிசில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு கொடுத்த விடையிறுப்பு இதைவிடத் தெளிவாக இருக்க முடியாது.

பிராங்பேர்ட்டின் Dax 7 சதவிகித மதிப்பை இழந்தது, TecDax 11 சதவிகிதம், FTSE 100 (லண்டன்) 8 சதவிகிதம் மற்றும் CAC (பாரிஸ்) 9 சதவிகிதம் என்று இழப்பைக் கண்டன. ஐஸ்லாந்தில் பங்குச் சந்தை வணிகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. நாட்டின் மூன்றாம் பெரிய வங்கி தேசியமயமாக்கப்பட்ட பின்னர் அரசாங்கமே திவால் நிலையை எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை காண்கிறது.

G8 ன் நான்கு ஐரோப்பிய உறுப்புநாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, கிரேட் பிரிட்டன் மற்றும் இத்தாலி நாடுகளின் அரசாங்க தலைவர்கள், சனிக்கிழமையன்று பாரிசில் கூடி நிதிய நெருக்கடி பற்றி சமாளிப்பதற்கான பொது நடவடிக்கையை விவாதிக்க கூடினர். உச்சிமாநாட்டின் விளைவுகள் அதிகம் ஏதும் இல்லை.

கூடியிருந்த தலைவர்கள், கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் சொற்களில், "ஒவ்வொரு நாடும் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்பதற்கு ஒப்புக் கொண்டனர். வாடியிருக்கும் வங்கிகளை அமெரிக்க போல்ஸன் திட்டத்தின் மாதிரியில் நலிவுற்றதை காப்பாற்றுவதற்கு ஒரு பொது நிதியை நிறுவுதல் என்ற திட்டம் ஜேர்மனியின் எதிர்ப்பை ஒட்டி உச்சிமாநாட்டு விவாதச் செயற்பட்டியலில் கூட இடம் பெறவில்லை.

வார இறுதியில் தொடர்ச்சியான நிகழ்வுகள் எந்த அளவிற்கு ஐரோப்பா, குறிப்பாக ஜேர்மனி, சர்வதேச நிதியக் கொந்தளிப்பால் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது என்பதை தெளிவாக்கியுள்ளன.

சனிக்கிழமையன்று ஜேர்மனிய அரசாங்கம் மற்றும் பல வங்கிகள் Hypo Real Estate (HRE) என்னும் ஜேர்மனியின் இரண்டாம் மிகப் பெரிய அடைமான கடன் கொடுக்கும் அமைப்பை காப்பாற்ற ஒரு வாரத்திற்கு முன் தயாரிக்கப்பட்ட ஒரு திட்டம் பொறிவுற்றது. ஜேர்மனியின் மத்திய வங்கி (Bundesbank) மற்றும் தனியார் வங்கிகள் HRE என்னும் ஒரு DAX நிறுவனத்திற்கு முண்டு கொடுக்க 35 பில்லியன் யூரோக்களை திரட்டி வைத்திருக்க திட்டமிட்டன; இதன் மொத்த சொத்துக்கள் 400 பில்லியன் ஆகும். தன்னுடைய பங்கிற்கு ஜேர்மனிய அரசாங்கம் உத்தரவாதக் கடன் என்று 26.5 பில்லியனை வரி செலுத்துவோர் பணத்தில் வழங்கியது.

HRE இன் பணச் சிக்கல்கள் முதலில் கூறப்பட்டதைவிட மிக அதிகம் என்று வெளிப்பட்டதால், சனிக்கிழமையன்று, தனியார் வங்கிகள் பிணை எடுத்தல் திட்டத்தில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டன. வங்கியின் இழப்புக்கள் இப்பொழுது ஆண்டு ஒன்றிற்கு 50 முதல் 60 பில்லியன் யூரோக்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு 100 பில்லியன் யூரோக்களுக்கு உயரக்கூடும்.

வங்கிகள், ஜேர்மனிய அரசாங்கத்திடம் HRE யின் நிதியப் பிரச்சினைகள் பற்றி தெரிவிக்கவில்லை; இந்த பிணை எடுத்தல் முயற்சியில் இருந்து தாங்கள் விலகிக் கொள்ளும் விருப்பத்தையும் தெரிவிக்கவில்லை. கோபமுற்ற அரசாங்கத் தலைவர்கள் நிலைமையை HRE ஆல் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையில் இருந்துதான் முதலில் தெரிந்து கொண்டனர்.

HRE ஜேர்மனிய நிதி மந்திரி Peer Steinbrück (SPD- சமூக ஜனநாயக கட்சி ) ä தன்னுடைய புதிய பிரச்சினைகளுக்கு காரணம் என்று குறைகூற முற்பட்டது; ஏனெனில் Steinbrück வங்கி "திவால்" பற்றி பேசியிருந்தார். வங்கிகள், அரசாங்கத்தின்மீது தப்பிப் பிழைத்தலுக்கு அதிக பணங்களை கொடுக்குமாறு அழுத்தம் தர முயல்கின்றன.

ஞாயிறன்று நெருக்கடி பற்றிய கூடுதலான பேச்சுவார்த்தைகள் HRE ஐ பிணை எடுக்கும் புதிய பிணை எடுப்புத் திட்டத்தை இயற்றுவதற்கு நடைபெற்றன. அரசாங்கம் நிலைமையை அன்று பிற்பகலே தீவிரமாக எடுத்துக் கொண்டது. அதிபர் அங்கேலா மேர்க்கெல் (கிறித்தவ ஜனநாயக ஒன்றியம், CDU) மற்றும் நிதி மந்திரி Steinbrück இருவரும் கூட்டு செய்தியாளர் கூட்டம் போட்டு ஜேர்மனியில் இருக்கும் அனைத்து தனியார் சேமிப்புக்களுக்கும் அரசாங்க உத்தரவாதம் இருக்கும் என்று அறிவித்தனர். "சேமிப்பவர்களின் சேமிப்புக்கள் பாதுகாப்பாக உள்ளன, அரசாங்கம் அதற்கு உத்தரவாதம் தருகிறது" என்று மேர்க்கெல் அறிவித்தார்.

இந்த உத்தரவாத அறிவிப்பு இரு நோக்கங்களை கொண்டிருந்தது. வங்கிகளின் ஊக இழப்புக்களுக்கு பல பில்லியன் யூரோக்களை கொடுக்கும் அரசாங்க முடிவு பற்றிய பொது மக்களின் சீற்றத்தை தணிப்பது, அதுவும் சாதாரண சேமிப்பாளர்கள் தங்கள் சேமிப்புக்களை இழக்கும் ஆபத்தை கொண்டுள்ள நிலையில் என்பது ஒன்று; இரண்டாவது பீதியில் 1931ல் நடந்தது போல் வங்கிகளிடம் இருந்து பணத்தை திருப்பி எடுக்க மக்கள் அனைவரும் விரைந்து செல்வதை தடுத்தல் ஆகும்.

நிலைமையிலுள்ள தீவிரம் பற்றி ஆளும் வட்டங்களில் பரிசீலனை என்பது உள்துறை மந்திர Wolfgang Schäuble (CDU) இனால் கூறப்பட்ட கருத்துக்களில் பிரதிபலித்தது. Der Spiegel ஏட்டின் சமீபத்திய பதிப்பில் Schäuble 1920கள், 1930 களில் இருந்த பொருளாதார நெருக்கடிகளுடன் நேரடி ஒப்புமைகளை கொடுத்து எச்சரித்தார்: "அத்தகைய பொருளாதார நெருக்கடி சமூகத்தில் அனைவருக்கும் பெரும் அச்சுறுத்தலை நம்ப முடியாத அளவிற்குக் கொடுத்துவிடும். அந்த பெரு மந்த நிலையின் விளைவுகள்தான், அடால்ப் ஹிட்லர் மற்றும் மறைமுகமாக இரண்டாம் உலகப் போரும் அவுஸ்விற்ச்சும்."

நிலைமையை அமைதிப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் சேமிப்புக்களுக்கு உத்தரவாதம் தருவதாக உறுதியளித்தது நெருக்கடியின் அளவு பற்றிய அச்சத்தை உயர்த்திக் காட்டியது. ஜேர்மனிய அரசாங்கம் கிட்டத்தட்ட வரம்பில்லாத பணத்தை கொடுக்க உறுதியளித்துள்ளது. அரசாங்க தகவல்கள்படி, இந்த உறுதி தனியார் வங்கிகளின் சொத்துக்களின் மதிப்பான 568 பில்லியன் யூரோக்களையும் உள்ளடக்கும்; அதாவது கூட்டாட்சியின் ஆண்டு பட்ஜெட் தொகையை போல் இரு மடங்கு ஆகும். சில கணக்கின்படி பலவித சேமிப்புக்கள் 4.5 டிரில்லியன் என்று மொத்தமாக உள்ளன.

Spiegel Online கூறியது: "மேர்க்கெலும் குழுவும் சேமிப்பாளர்களுக்கு கொடுத்த உறுதியை விட சேர்ப்பதற்கு ஒன்றும் இல்லை. ஜேர்மனிய நிதிய முறை சரிந்தால், இருப்புக்கள் ஏதும் இல்லை... அரசு உண்மையில் குறிப்பிட்ட சட்டபூர்வ உத்தரவாதத் தொகையான 20,000 யூரோக்களுக்கு மேல் வைப்புத்தொகை இழப்பிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால், தனியார் வங்கிகளின் வைப்புத்தொகை உத்தரவாத நிதி என்பது அரசாங்கக் கடனை பல ஆண்டுகளுக்கு அதிகரிக்கும்; முதலீட்டு செலவுகள் வீழ்ச்சி அடையும், சமூக பொது நலத் திட்டங்கள் இன்னும் கூடுதலான சுமையாகும்."

ஜேர்மனிய அரசாங்கம் வெளியிட்ட உத்தரவாதம் மற்ற ஐரோப்பிய தலைநகரங்களில் இருந்து, குறிப்பாக லண்டனில் இருந்து, கடுமையான குறைகூறலுக்கு உட்பட்டது. பாரிஸ் உச்சிமாநாட்டில் அயர்லாந்து அரசாங்கம் இதே போன்ற உத்தரவாதங்களை அதன் ஆறு முக்கிய வங்கிகளுக்கு கொடுத்ததற்காக குறைகூறலுக்கு உட்பட்டது. இப்பொழுது ஜேர்மனிய அரசாங்கம் அதையே செய்துள்ளது.

டெளனிங் தெருவில் மேர்க்கெலின் நடவடிக்கைகள் குறித்து "கோபம்" ஏற்பட்டது பற்றி கார்டியன் விளக்கியுள்ளது. "பிரிட்டிஷ் அதிகாரிகள் மேர்க்கெலிடம் பெரும் சீற்றம் கொண்டனர். பொருளாதார நெருக்கடிக்கு ஒருங்கிணைந்த ஐரோப்பிய விடையிறுப்பு பற்றி சனிக்கிழமை பாரிஸில் நடந்த உச்சிமாநாட்டில் இது பற்றி எந்தக் குறிப்பையும் அவர் தெரிவிக்கவில்லை" என்று அவர்கள் கூறினர். "ஒரு ஐக்கிய ஐரோப்பாவில் ஒவ்வொரு மனிதனும் தனக்காக என்று உள்ளது" என்று கூறிய நிதிய வல்லுனர் ஒருவரை செய்தித்தாள் மேற்கோளிட்டது.

ஒரு "கோபமடைந்த பிரிட்டிஷ் அதிகாரி", "மேர்க்கெல் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறி, பின்னர் விமானத்தில் தன் நாட்டிற்கு பறந்து தான் விரும்பியவற்றை செய்துள்ளார்" என்று கூறியதாக Daily Mail குறிப்பிட்டுள்ளது.

ஞாயிறு மாலை ஜேர்மனிய அரசாங்கமும் வங்கிகளும் இறுதியாக HRE க்காக ஒரு புதிய மீட்பு பொதித் திட்டத்திற்கு உடன்பட்டன. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட 35 பில்லியன் யூரோக்கள் தவிர நிதியப் பிரிவு அது இன்னும் கூடுதலான 15 பில்லியன் யூரோக்களை எளிதில் பணமாக மாற்றக்கூடிய தன்மையைத் தரும் என்றும் அதற்காக கூட்டாட்சி உத்தரவாதம் அளித்த 26.5 பில்லியன் யூரோக்களை அதிகரிக்க வேண்டியதில்லை என்றும் தெரிகிறது.

இந்த மீட்புப் பொதியை நியாயப்படுத்தும் வகையில் அரசாங்கம் HRE சரிந்தால் விளையக்கூடிய "எதிர்பார்க்க முடியாத விளைவுகள்" பற்றிக் குறிப்பிட்டது. வரி செலுத்துவோர் பணத்தை வங்கியை மீட்க பயன்படுத்துவது தேவை என்றும், இல்லாவிடின் சேதம் "ஜேர்மனியை மட்டும் இல்லாமல் ஐரோப்பா முழுவதும் நிதியப் பணிகளில் உள்ள பலவற்றையும் பெரிதும் பாதிக்கும்" என்றும் கூறினார்.

புதிய பிணை எடுப்பு இருந்தபோதிலும்கூட HRE இன் பங்குகள் திங்களன்று 37 சதவிகிதம் மூழ்கின. வங்கிகள் இன்னும் கூடுதலான பொதுப் பணத்தைக் கோரின.

Deutsche Sparkassen மற்றும் Giroverband (Association of German Savings Banks and Clearing Houses) அரசாங்கத்திடம் "முழு வங்கித் தொழிலின் ஆபத்துக்களையும் காப்பாற்றும் வகையில் ஒரு குடை அமைக்குமாறு" கோரியது. Spiegel Online ஒரு வங்கியாளர் பிரச்சினையை சிறு சிறு தீர்வுகள் முழுமையாக தீர்க்க முடியாது என்று ஒரு வங்கியாளர் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. "இந்த அளவிற்கு பெரும் பள்ளத்தை நாங்கள் பார்த்ததில்லை" என்று அவர் கூறினார்.

HRE கிட்டத்தட்ட பொறிந்துள்ளது வரவிருக்கும் பாதிப்பின் நுணுகிக் காணத்தக்க சிறு பகுதி மட்டும்தான். அடைமானக் கடன் கொடுக்கும் அமைப்பு அதன் துணை நிறுவனமான Depfa இனால் நெருக்கடியில் ஆழ்த்தப்பட்டது; கடந்த ஆண்டுதான் அது 5.7 பில்லியன் யூரோவிற்கு வாங்கப்பட்டது. அந்த நேரத்தில் Depfa இன் தலைவரான Gerhard Bruckermann ஓய்வு பெறுவதற்கு பொன்னான வாய்ப்பு என்ற முறையில் 100 மில்லியன் பணம் கொடுக்கப்பட்டார்: இத்துறையை பொறுத்தவரை இது அசாதாரண எண்ணிக்கை அல்ல.

Deutschen Pfandbriefanstalt (German Institute for Mortgage Bonds) ல் இருந்து வெளிப்பட்ட Depfa அதன் தலைமையகத்தை டப்ளினில் கொண்டுள்ளது; அங்கு அது ஜேர்மனியில் இருப்பதை விடக் குறைவான வரிச்சுமையைத்தான் கொண்டுள்ளது. இது பொதுப் பத்திரங்களுக்கு நிதியம் கொடுப்பதில் தேர்ச்சி அடைந்துள்ளது; அவை பொதுவாக ஆபத்து ஏதும் இல்லை எனக் கருதப்படுபவை ஆகும். இது நெருக்கடியில் விழுந்ததற்கு காரணம், வங்கிகளுக்கு இடையிலான சந்தையில் குறுகிய கால கடன்களை பெற்று நீண்டகாலக் கடன்களை கொடுத்து வந்தது.

லெஹ்மன் பிரதர்ஸ் பொறிவிற்குப்பின், வங்கிகளுக்கு இடையேயான சந்தை கிட்டத்தட்ட வறண்டு போய்விட்டது; ஏனெனில் வங்கிகள் ஒன்றுக்கொன்று கடன் கொடுக்கத் தயாராக இல்லை. Depfa குறுகிய கால கடனை சாதகமான நிபந்தனைகளில் பெற முடியவில்லை; HRE அதன் கைகளில் இருந்து இழந்த பில்லியன்களை ஈடு செய்ய வேண்டியுள்ளது.

HRE என்பது 900 பில்லியன் யூரோக்கள் இருக்கும் ஜேர்மனிய அடைமானப் பத்திர சந்தையில் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது; இது மற்ற வங்கிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கடன்களை கொடுக்கிறது. HRE திவால் ஆனால் அது அடைமானப் பத்திர சந்தை முழுவதிலும் பொறிவை ஏற்படுத்தி சங்கிலித் தொடர் போன்ற விளைவுகளை ஏற்படுத்தி ஓய்வூதிய நிதிகள், பரஸ்பர சங்கங்கள் ஆகியவற்றின் நிதிகளையும், அரசாங்கங்கள், முனிசிபாலிட்டிகள் ஆகியவற்றையும் தாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Depfa ஒன்றும் ஒரு தனிப்பட்ட செயற்பாடு அல்ல. Der Spiegel உடைய பகுப்பாய்வாளர் கருத்தின்படி, மற்ற ஜேர்மனிய வங்கிகள் இன்னும் அதிகமான நீண்ட கால கடன்களை கொடுத்துள்ளன; அவை குறுகியகாலக் கடன் பணத்தில் கொடுக்கப்பட்டவை. ஏட்டின்படி Landesank Baden Wurttemberg "டிசம்பர் 2009க்குள் 100 பில்லியன் யூரோக்களை மறுபடி நிதியமாக செலுத்த வேண்டும்; இது HRE ஐப் போல் இரு மடங்கு ஆகும். Nord/LB யில் இது 42 பில்லியன் யூரோக்கள் ஆகும்; WestLB மற்றும் Eurohypo வில் ஒவ்வொன்றிலும் இது கிட்டத்தட்ட 30 பில்லியன் யூரோக்கள் என்று உள்ளது; Landesbank Rhineland-Pfalz 10 பில்லியன் யூரோக்களை கட்டாயம் காண வேண்டும், Saxonia LB க்கு 3.5 பில்லியன் யூரோக்கள் தேவைப்படும்.

நிதிய உருகிவழிதல் என்பது அதன் மிக தாழ்ந்தநிலையை தொடுவதில் இருந்து இன்னமும் அதிக தூரத்தில்தான் உள்ளது. இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது போலி மூலதனத்தின் மகத்தான குமிழி வெடித்திருப்பதாகும், இது தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் அண்மைய தசாப்தங்களில் திரட்டப்பட்டிருந்தது.

See Also:

நிதிய நெருக்கடிக்கு பொது மூலோபாய உடன்பாடு காண்பதில் ஐரோப்பிய தலைவர்கள் தோல்வி