World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

US-Russian tensions in Caucasus erupt into war

காகசஸ் பகுதியில் அமெரிக்க-ரஷியா அழுத்தங்கள் போராக வெடிக்கின்றன

By Bill Van Auken

9 August 2008


Use this version to print | Send this link by email | Email the author

ரஷியாவிற்கும் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான ஜோர்ஜியாவிற்கும் இடையே நீண்ட காலமாக இருக்கும் அழுத்தங்கள் வெள்ளியன்று ஒரு முழு அளவுப் போராக வெடித்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்காகக் கூட இருக்கலாம், சாதாரண பொதுமக்கள் இறந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாகத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடி வருகின்றனர்.

தெற்கு ஓசேஷியாப் பகுதியை ஜோர்ஜியா இராணுவத்தைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்த முற்பட்டதுதான் போர் துவங்கியதற்கான உடனடி காரணம் ஆகும். கடந்த 16 ஆண்டுகளாக நடைமுறையில் இது ஒரு சுதந்திரப் பகுதியாக விளங்கி வருகிறது. ரஷியா இந்த ஆயுதக் குறுக்கீட்டுத் தாக்குதலை நிறுத்துவதற்கு தலையிடுகிறது.

ஆனால், இந்த இராணுவ மோதலின் அடித்தளத்தில் பரந்த பூசல்கள் உள்ளன. தெற்கு ஓசேஷியாவில் குருதி தோய்ந்த மோதலுக்கு இப்பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்கத்தை மத்திய ஆசியா, காகசஸ் பகுதியில் நிறுவ, அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்த விழையும் உந்துதலும் உள்ளது. தன்னுடைய பங்கிற்கு ரஷிய ஆளும் உயரடுக்கு 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்பு இரு நூற்றாண்டுகள் மாஸ்கோவினால் ஆளப்பட்ட பகுதியில் மீண்டும் அதன் பிடியை இறுக்கும் முயற்சியில் உள்ளது.

உலகின் இரு பெரும் அணுவாயுதங்களை உடைய சக்திகளான வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையேயான இந்தக் கடுமையான போட்டி காகசஸ் பகுதியில் நடக்கும் சண்டைக்கு குறிப்பிட்ட வகையில் வெடிப்புத்தன்மையையும் ஆபத்தையும் அளிக்கிறது. சமீப காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் அழுத்தங்கள் ஜோர்ஜியாவை நேட்டோ ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள நினைக்கும் புஷ் நிர்வாகத்தின் உந்துதலினால் அதிகமாகியுள்ளது. அத்தகைய நடவடிக்கை ரஷியாவை இராணுவ ரீதியாகச் சுற்றிவளைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மாஸ்கோ கருதுகிறது.

அமெரிக்க ஆதரவுடைய ஜனாதிபதி மிகெய்ல் சாகேஷ்விலியின் ஜோர்ஜிய ஆட்சி வியாழனற்று காலை தெற்கு ஓசேஷியாவிற்குள் இராணுவப் பிரிவுகளை அனுப்பி வைத்தது. இதற்குக் காரணம் தெற்கு ஓசேஷிய இராணுவப் படையினர் ஜோர்ஜிய கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தின என்று கூறப்பட்டது. டிபிலிசி அறிவித்திருக்கும் ஒருதலைப்பட்ச போர் ஒப்பந்த நிறுத்தத்தை இது மீறுவதாக உள்ளது என்றும் கூறப்பட்டது.

ஜோர்ஜிய ஆட்சி துவக்கத்தில் தான் "அளவிற்கு ஏற்ற பதிலடியை" நடத்தியதாகக் கூறினாலும், அது அப்பகுதியை வெற்றி கொள்ளும் நோக்கத்தைக் கொண்ட முழு இராணுவ தாக்குதலை தொடங்கியது என்பது விரைவில் தெளிவாயிற்று. பீரங்கிகள், டாங்குகள், பல்குழல் ராக்கெட்டுகள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தி ஜோர்ஜிய இராணுவம் தெற்கு ஓசேஷியத் தலைநகரான டிஷின்வலியை முற்றுகையிட்டது.

நகரத்தின் பல பகுதிகளும் வெள்ளியன்று தீப்பிடித்து எரிந்த வண்ணம் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அப்பகுதி பாராளுமன்றக் கட்டிடம் எரிந்தது, பல்கலைக்கழகம் தீயிடப்பட்டது, நகரத்தின் முக்கிய மருத்துவமனை குண்டுவீச்சுத் தாக்குதலால் செயலிழந்துபோனது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் காயமுற்றோரைக் கொண்டுவருவதற்கு அம்புலன்ஸ்களால் முடியவில்லை என்று அறிவித்துள்ளது.

"பல மணி நேரம் நடத்தப்பட்ட பெரும் பீரங்கித் தாக்குதல்களை அடுத்து, நகரம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது" என்று அப்பகுதியில் இருக்கும் ரஷிய சமாதானம் காப்போரின் கமாண்டர் Marat Kulakhmetov ரஷிய செய்தி அமைப்பான Interfax இடம் கூறினார்.

தெற்கு ஓசேஷியத் தலைவரான எட்வார்ட் கொக்கைட்டி ஜோர்ஜிய இராணுவத் தாக்குதலினால் 1,400க்கும் மேற்பட்ட சாதாரண பொதுமக்கள் மடிந்திருக்கக் கூடும் என்று மதிப்பிட்டுள்ளார்.

நகரத்தில் இருந்து ரஷிய எல்லைக்கு அருகே இருக்கும் ஒரு கிராமத்திற்கு தனது குடும்பத்துடன் தப்பி வந்த 50 வயதான Lyudmila Ostayeva அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறுகையில், "தெருக்களில் சடலங்கள் இருப்பதையும், அவை அழிக்கப்பட்ட கட்டிடங்கள், கார்களில் இருப்பதையும் நான் பார்த்தேன். அந்த எண்ணிக்கையை சரியாகக் கூறுவது கடினம். அநேகமாக ஒரு கட்டிடம் கூட தாக்குதலில் இருந்து தப்பவில்லை எனலாம்."

ரஷிய வெளியுறவு மந்திரி சேர்ஜ் லாவ்ரோவ், ஓசேஷிய மக்கள் ஒடிவிடும் கட்டாயத்திற்கு உட்படுத்தும் வகையில் பாரிய வன்முறையை கையாளுவதாக ஜோர்ஜியா மீது குற்றம் சாட்டினார். "தெற்கு ஓசேஷியாவில் இனவழிப்பு படுகொலை முயற்சிகள் நடப்பதாகவும், அகதிகள் எண்ணிக்கை அதிமாவதாகவும், எங்கும் பீதி கவ்வியிருப்பதாகவும் மக்கள் தங்களைக் காப்பாற்ற ஓடிக் கொண்டிருக்கின்றனர்" என்றும் அவர் கூறினார்.

மாஸ்கோவின் கூற்றின்படி, இறந்தவர்களில் ரஷிய சமாதானப் படையைச் சேர்ந்தவர்கள் 10 பேர் உள்ளனர் என்றும் இன்னும் 30 பேர் ஜோர்ஜிய படைகள் இவர்களுடைய முகாம்களைத் தாக்கியதில் காயமுற்றனர் என்றும் தெரிகிறது. இப்பகுதியில் மாஸ்கோ, டிபிலிசி மற்றும் தெற்கு ஓசேஷியா ஆகியவை போரை நிறுத்த கொண்டுவந்த உடன்பாட்டின்படி இந்த சமாதானப் படையினர் இருந்தனர். இது சோவியத் ஒன்றியம் சரிந்த பின் ஏற்பட்ட கலவர வெடிப்பை முடிப்பதற்கும் பின்னர் தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காஜியா இரண்டும் ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து செல்ல முற்பட்டபோதும் அமைக்கப்பட்டது. இரு பகுதிகளிலும் இருக்கும் மக்கள் புதிதாக சுதந்திரம் பெற்றுள்ள ஜோர்ஜிய ஆட்சி தங்கள் தன்னாட்சி அந்தஸ்த்தை அழித்துவிடும் என்று அஞ்சினர்.

இருந்தபோதிலும், அன்று முதல் டிபிலிசி, ரஷியத் துருப்புக்கள் தெற்கு ஓசேஷிய படைகளுக்கு ஆதரவு தருவதாகக் கூற்றம் சாட்டியுள்ளது.

இத்துருப்புக்களின் இறப்பு மற்றும் பொது மக்களுடைய இறப்புக்களை பயன்படுத்தி ரஷியா தெற்கு ஓசேஷியாவிற்கு ஒரு டாங்க் படை, காலாட் பிரிவு ஆகியவற்றை அனுப்பவதற்கு நியாயப்படுத்தியது. அங்கு இவை டிஷன்வலியின் கட்டுப்பாட்டிற்காக ஜோர்ஜிய பிரிவுகளுடன் கடுமையாக சண்டையிடுகின்றன.

''அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சிச் சட்டத்தின்படி, ரஷியாவின் ஜனாதிபதி என்னும் முறையில் எங்கு ரஷிய குடிமக்கள் இருந்தாலும் அவர்களுடைய உயிரையும் கெளரவத்தையும் காப்பாற்ற நான் கடமைப்பட்டுள்ளேன்." என்று ரஷிய ஜனாதிபதி டிமிட்ரி மேட்வேடெவ் கிரெம்ளினில் தன்னுடைய பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கூறினார். "நம்முடைய மக்கள் இறக்கக் காரணமாய் உள்ளவர்கள் தண்டனைக்கு உட்படுத்தாமல் சென்றுவிட நாம் அனுமதியோம்."

இதற்கிடையில் ரஷிய போர் விமானங்கள் நாட்டின் இராணுவத் தளங்கள், விமானத் தளங்கள் மற்றும் முக்கிய கருங்கடல் துறைமுகமான போடியை வெள்ளி இரவும் சனிக்கிழமை அதிகாலையும் தாக்கின என்றும், அதில் பல பொதுமக்கள் இறந்துள்ளதாகவும் ஜோர்ஜிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தலைநகர் டிபிலிசி பகுதியில் குண்டுகள் விழுந்ததாகவும், பாகு-டிபிலிசி-சேஹென் எண்ணெய் குழாய்திட்ட பகுதியிலும் குண்டுகள் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

"இன்று முழுவதும் அவர்கள் ஜோர்ஜியா மீது பல போர் விமானங்களால் தாக்கிக் கொண்டிருக்கின்றனர், குறிப்பாக பொதுமக்கள் வாழும் பகுதியை இலக்கு வைத்துள்ளனர், ஏராளமான மக்கள் இங்கு காயமுற்றுள்ளனர், நாடெங்கிலும் பல மக்கள் இறந்துவிட்டனர் என்று அமெரிக்க செய்தி நிறுவனமான CNN இடம் சாகேஷ்விலி கூறினார்.

நாட்டின் ரிசர்வ் படைகளை அழைத்திருப்பதாக சாகேஷ்விலி அறிவித்து, அவர் இராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை அறிவிக்க உள்ளார் என்று ஜோர்ஜியாவில் இருந்து வரும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜோர்ஜியாவின் படையெடுப்பானது, உலக கவனம் முழுவதும் பெய்ஜிங்கில் குவிந்துள்ள தருணத்தில், ரஷிய பிரதமர் விளாடிமிர் புட்டின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் இருவரும் அங்கு இருக்கும் நேரத்தில் நடப்பது என்பது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல.

ஆனால், ரஷியாதான் தேதியைத் தேர்ந்து எடுத்தது என்று சாகேஷ்விலி கூறியுள்ளார்; "ஒரு சிறிய நாட்டைத் தாக்க இது சிறந்த கணம்" எனக் கருதப்பட்டிருக்க வேண்டும். ரஷிய இராணுவம் விரைந்து செயல்பட்டுள்ளதானது, இத்தகைய பதலடிக்கு மாஸ்கோ தயாரிப்புக்களைக் கொண்டிருந்ததை நிரூபித்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தன்னுடைய நாடு நம்பிக்கையுடன் அமெரிக்காவை எதிர்பார்க்கிறது என்று ஜோர்ஜிய ஜனாதிபதி அறிவித்துள்ளார். ரஷியாவுடனான ஆயுத மோதல், "ஜோர்ஜியாவுடன் இனி நின்றுவிடாது. இது அமெரிக்கா, அதன் மதிப்புக்கள் பற்றியதாகும்... சுதந்திரத்தை விரும்பும் நாடுகளுக்கு அமெரிக்கா உதவுகிறது, ஆதரிக்கிறது, அதுதான் அமெரிக்கா செய்வது எல்லாம்."

புஷ் நிர்வாகத்தின்கீழ் வாஷிங்டன் ஜோர்ஜியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பிணைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. குறிப்பாக அமெரிக்கா ஆதரவு பெற்ற "ரோஜா மலர் புரட்சிக்குப் பிறகு" அதுதான் சாகேஷ்விலி அதிகாரத்திற்கு வர வழிவகுத்தது.

ஜோர்ஜியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய அக்கறை காஸ்பியன் பகுதியில் இருக்கும் எண்ணெய், எரிவாயு வளங்களை ஒரு அமெரிக்க இருப்பாக ஆக்குவதும், அப்பகுதியில் இருந்து இந்த வளங்கள் ரஷியாவிற்கு செல்லாமல் போக்குவரத்து மூலோபாய பாதைகளை அமைப்பதும் ஆகும்.

ஜோர்ஜிய ஆட்சியுடன் உறவுகளை உறுதிபடுத்தும் வகையில் வாஷிங்டன் இராணுவ உதவிகளுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை அளித்துள்ளது. நாட்டில் பெருகிவரும் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி அளிக்க ஏராளமான அமெரிக்க இராணுவப் பயிற்சியாளர்களையும் அது அனுப்பி வைத்துள்ளது.

இதற்கிடையில் ஜோர்ஜியப் படைகள் ஈராக் ஆக்கிரமிப்பில் பங்கு கொண்டிருக்கும் மிகப் பெரிய படைகளுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு 2,000 துருப்புக்கள் உள்ளன. தெற்கு ஒசேஷியாப் போருக்கு உதவும் வகையில், வெள்ளியன்று டிபிலிசி இப்படையினரில் 1,000 பேர்களை திரும்பப்பெற அமெரிக்காவை நாடப்போவதாகத் தெரிவித்தது.

ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ் ஜோர்ஜியாவிற்கு அமெரிக்க இராணுவ ஆதரவைப் பற்றி குறிப்பிடுகையில், "இந்த ஆயுதங்களுக்கு ஒரு உபயோகத்தை ஜோர்ஜியா கண்டுபிடித்துள்ளதைக் காண்கிறோம். சர்வதேசப் பயிற்சியாளர்களிடம் சிறப்புப் படைகள் பெற்ற பயிற்சியின் பயனையும் காண்கிறோம். நம்முடைய ஐரோப்பிய, அமெரிக்க கூட்டாளிகள் என்ன நடக்கிறது என்பதை அறிய வேண்டும். இதே சரியான முடிவிற்குத்தான் அவர்களும் வருவர் என்று நான் நம்புகிறேன்."

கடந்த மாதம் அமெரிக்காவின் கொண்டலீசா ரைஸ் டிபிலிசிக்கு வருகை புரிந்து ஆத்திமூட்டும் வகையில் ரஷியாவைக் கண்டித்தும் ஜோர்ஜியாவை நேட்டோ உறுப்பு அந்தஸ்திற்கு அமெரிக்க ஆதரவைக் கொடுத்தும் பேசினார். ஆனால், மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் வாஷிங்டனின் நேட்டோ நட்பு நாடுகள் இத்திட்டத்தை ஆர்வமாகக் காணவில்லை. ரஷ்யாவின் எரிவாயு மற்றும் சக்தி தேவைகளில் தங்கியிருக்கும் இந்த நாடுகள் வேண்டும் என்று மேற்கொள்ளப்படும் ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றே இத் இட்டத்தை காண்கின்றனர்.

தெற்கு ஓசேஷியாவில் தலையிட வெளிப்படையாக பச்சைக் கொடியை ரைஸ் தனது பயணத்தின்போது காட்டினாரா அல்லது அமெரிக்கா கொடுக்கும் ஆதரவு, இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்கப்படும் என்ற வாஷிங்டனின் உத்தரவாதம் இருக்கும் என்று ஜோர்ஜிய ஆட்சி நம்பியதா என்பது சரியாகத் தெரியவில்லை.

வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலை அடுத்து, வாஷிங்டன் ஜோர்ஜியாவிற்கு வெளிப்படையாக ஆதரவு கொடுப்பதை நிறுத்தியுள்ளது. ஆனால் தன் வாடிக்கை நாடு காகசஸ் பகுதியில் கொண்டுள்ள நிலைப்பாட்டை ஆதரிப்பதாக தெளிவாக அது கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழு போரை நிறுத்த ரஷிய ஆதரவுடன் வந்த தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டது. ஏனெனில் அனைத்து தரப்புக்களும் "வலிமையைப் பயன்படுத்துவது கைவிடப்பட வேண்டும்" என்று உள்ள ஒரு விதியை வாஷிங்டன் எதிர்த்தது. இதன் தெளிவான உட்குறிப்பு அமெரிக்கா ஜோர்ஜியா இராணுவ நடவடிக்கை எடுக்கும் உரிமைக்கு ஆதரவு கொடுக்கிறது என்பதாகும்.

இதற்கிடையில் ரைஸ் ரஷியாவை கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள அதே நேரத்தில், ஜோர்ஜியாவின் தலையீட்டை நியாயப்படுத்தும் வகையிலும் அந்த அறிக்கை உள்ளது. "விமானம் மற்றும் ஏவுகணைகளால் ஜோர்ஜியா மீது தாக்குதல நடத்துவதை நிறுத்துமாறு ரஷியாவை கோருகிறோம். ஜோர்ஜியாவின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும். ஜோர்ஜிய மண்ணில் இருந்து போர்ப் படைகள் அகல வேண்டும். ஜோர்ஜியாவின் இறைமை, அதன் முழுமையான நிலப்பகுதி, சர்வதேச எல்லைகளுள் அங்கீகரிக்கப்பட்ட அதன் தன்மை ஆகியவற்றிற்கு சர்வதேச ஆதரவு இருப்பதை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம்."

காகசஸில் வெடித்த போரானது பாரிய முறையில் 17 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து வந்துள்ள ஆக்கிரோஷமான அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கை தொடரப்படுவதின் விளைபொருளாகும். இப்பகுதியில் தேசிய பூசல்களை முறையாக அமெரிக்கா திரித்து வளர்த்துள்ளதற்கு காரணம், அது தன்னுடைய பொருளாதார, இராணுவ மேலாதிக்கம் இப்பகுதியில் நிறுவப்பட வேண்டும் என்பதாகும். இது முன்னாள் யூகோஸ்லாவியப் போர்களில் இரத்தம் தோய்ந்த வகையில் துவங்கியது.

வாஷிங்டன் பொஸ்னியா மற்றும் கொசோவாவிற்கு அது கொடுக்கும் ஆதரவை நியாயப்படுத்த உபயோகித்த வாதங்கள் மற்றும் சேர்பியாமீது 1990 களின் பால்கன் போரின்போது நடத்திய இராணுவ தாக்குதலுக்கான வாதங்கள் ஆகியவை அதே வகையில் ஜோர்ஜியாத் தலையீட்டை கண்டிக்கவும் தெற்கு ஓசேஷியாவைக் காக்கவும் பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் ரஷிய இராணுவத் தாக்குதலை எதிர்க்கவும் இது பயன்படுத்தப்படும்.

ஆனால், வாஷிங்டன் இங்கு ஜோர்ஜியாவில் "பிராந்திய இறையாண்மை என்பதை மோதலின் முக்கிய கொள்கையாக உயர்த்தி, ஜோர்ஜியாவின் இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்தியுள்ளது. அதே போல் ரஷியர்கள் மீதான ஜோர்ஜியாவின் தாக்குதலையும் அது ஆதரித்துள்ளது. மாஸ்கோ இதை ''இனச் சுத்திகரிப்பு'' என்று கூறியுள்ளது.

இப்படி இரு கொள்கைகளுக்கும் இடையே உள்ள வெளிப்படையான முரண்பாடு கோடிட்டுக்காட்டுவது என்னவென்றால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இனச் சுத்திகரிப்பு மற்றும் இனரீதியில் அடக்கப்படுவதற்கு காட்டும் எதிர்ப்பு என்பது, இது யார் எதை எங்கு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அமெரிக்க மூலோபாய நலன்களில் இருந்தும் வருகின்றது என்பதாகும்.

இந்தச் சமீபத்திய போருக்கும் பால்கனில் அமெரிக்கா நடத்திய போர்களுக்கும் இடையே நேரடியான தொடர்பு உள்ளது. பெப்ருவரியில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் கொசோவாவின் "சுதந்திரம்" என்பதை ஏற்றன. அதுவோ ஒருதலைப்பட்சமாக சேர்பியாவில் இருந்து பல ஐ.நா. தீர்மானங்களையும் நேரடியாக மீறிய வகையில் இருந்தது. அமெரிக்கா இந்த பிரிவினைக்கு ஆதரவு கொடுக்கும் நோக்கம் ---ஜோர்ஜியாவில் அதே போன்ற பிரிவினை கருத்துக்கள் அடக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு--- ரஷியாவை சுற்றிவளைக்கும் அதனது திட்டத்தை அதிகரிப்பதும் காஸ்பியன் பகுதியில் இருக்கும் பாதைகளை அடைவதும் ஆகும்.

கொசோவாவின் சுதந்திரத்திற்கான ஒருதலைப்பட்ச அறிவிப்புக்கு முன்பு, மாஸ்கோ பல முறை இத்தகைய நடவடிக்கை முன்னாள் சோவியத் பகுதிகளான அப்காஷியா, தெற்கு ஓசேஷியா குறிப்பாகப் பிந்தையதற்கு ஒரு முன்னோடிபோல் ஆகும் என்று எச்சரித்தது. அதைத் தொடர்ந்து ரஷியா இரு பகுதிகளிலும் தன்னுடைய ஆதரவை அதிகப்படுத்தியது.

இப்பொழுது தெற்கு ஓசேஷியாவில் போர் வெடித்துள்ளதானது, ஒரு பிராந்தியத்தில், உலகின் இரு பெரும் அணுவாயுத சக்திகளான அமெரிக்க மற்றும் ரஷியாவை நேரடி இராணுவ மோதலுக்குக் கொண்டுவரக்கூடும் என்ற அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது. இந்த மோதலானது, மனிதகுலத்திற்கு ஏற்படும் பாரிய ஆபத்துக்களையும் காட்டுகிறது.