World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

More protest letters against LTTE threats

தமிழீழ விடுலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக மேலும் கண்டனக் கடிதங்கள்

13 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

"ஐரோப்பாவில் சோ.ச.க. ஆதரவாளர்களுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் வன்முறைப் பிரச்சாரத்தை எதிர்த்திடுங்கள்!" என்ற தலைப்பில் மார்ச் 9 வெளியான அறிக்கையின் பிரதிபலனாக மேலும் பல கடிதங்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்கு கிடைத்துள்ளன. தமிழ் சமுதாயத்தின் மத்தியில் அரசியல் கலந்துரையாடல்களை நசுக்கும் முயற்சிகளை நிறுத்துமாறும் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிரான அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் உடனடியாக முடிவுகட்டுமாறும் கோரி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கண்டனக் கடிதங்களை அனுப்புமாறு நாம் எமது வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். (முன்னைய கடிதங்களை இங்கு காண முடியும்.)

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கும்

ஜேர்மனி தமிழர் கூட்டமைப்பு

பிரிட்டிஷ் தமிழர் பேரவைக்கும்

இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல் கூட்டுப் பிரச்சாரத்தை (அமெரிக்க) சன் டியோகோ மாநில பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பு கண்டனம் செய்கின்றது.

பொது நிகழ்வுகளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்த சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த சக்திகள் குண்டர்தனமாகவும் வன்முறையாகவும் நடந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கையை நாம் ஜனநாயக உரிமை மீறல் என நாம் கண்டிக்கின்றோம். ஆர்ப்பாட்டங்களில் துண்டுப் பிரசுரங்களை அபகரிப்பதும், சரீர அச்சுறுத்தல் விடுப்பதும் இனவாத வார்த்தைகளால் தூற்றுவதும், இத்தகைய நடவடிக்கைகளின் நேரடி இலக்கான சோ.ச.க. ஆதரவாளர்களின் மீதான தாக்குதல் மட்டுமன்றி, தொழிலாளர்களை பாதித்துள்ள அரசியல் பிரச்சினைகளை சாத்தியமானளவு விரிவாக கல்ந்துரையாடவும் ஆராயாவும் அவர்களுக்கு உள்ள ஜனநாயக உரிமைக்கும் எதிரான தாக்குதலாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றவை ஏதேச்சதிகாரமானதோ அல்லது சம்பவமோ அல்ல, மாறாக, அது புலிகளதும் மற்றும் அவர்களுக்கு சார்பான அமைப்புக்களினதும் நிச்சயமான அரசியல் தர்க்கத்தில் இருந்தே தோன்றியது என நாம் சந்தேகிக்கின்றோம். குறுகிய அதே போல் குற்றவியல் பேரினவாதத்தின் வன்முறை மற்றும் பயங்கரவாத வரலாறும், மற்றும் இலங்கையில் புலிகளால் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஒட்டு மொத்த வங்குரோத்தும், ஐரோப்பாவிலும் அதே போல் ஏனைய இடங்களிலும் புலிகளின் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளில் வெளிப்படுகின்றன. ஆகவே, ஜனநாயக உரிமைகள் பற்றிய நிலைப்பாட்டில் இருந்து உங்களது நடவடிக்கைகளை கண்டனம் செய்வதோடு மட்டுமன்றி, சோ.ச.க. மற்றும் இலங்கைப் பகுதி உட்பட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் எங்களது அரசியல் கூட்டுழைப்பை உறுதிப்படுத்தவும் நாம் இதை சந்தர்ப்பமாக்கிக் கொள்கிறோம்.

உண்மையுள்ள,

ஐ.எஸ்.எஸ்.ஈ., சான் டியோகோ மாநிலப் பல்கலைக்கழகம் (அமெரிக்கா)

* * *

அன்பின் ஐயா,

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக புலிகளாலும் மற்றும் ஐரோப்பாவில் உள்ள அவர்களது ஆதரவு அமைப்புக்களாலும் திட்டமிடப்பட்டுவரும் வன்முறைகளுக்கு எதிராக நான் எனது பலமான கண்டனத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

அண்மையில் பேர்லின், லண்டன் மற்றும் பாரிசிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களில், சோ.ச.க. உறுப்பினர்கள் துண்டுப் பிரசுரங்கள் வநியோகிக்க முடியாமல் தடுக்கப்பட்டு, வன்முறைகளுக்கும் ஆத்திரமூட்டல்களுக்கும் உள்ளானதோடு, இனவாத துஷ்பிரயோகத்திற்கும் உள்ளானார்கள்.

இத்தகைய தாக்குதல்கள் பிற்போக்கானவை மட்டுமன்றி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தமிழ் பிரஜைகள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும் சோ.ச.க. உறுப்பினர்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையை துஷ்பிரயோகம் செய்வதுமாகும்.

இலங்கையில் சோசலிச அரசியல் வேலைத் திட்டத்துக்காக போராடுவதில் சோ.ச.க. க்கு நீண்ட வரலாறு இருப்பதோடு தமிழ் வெகுஜனங்களின் உண்மையான ஜனநாயக அபிலாஷைகளை நீண்ட காலமாக கொள்கை ரீதியில் ஆதரிப்பதால் அது பரந்தளவில் மதிக்கப்படும் கட்சியாவும் உள்ளது.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அரசியல் கலந்துரையாடல் நடத்த புலிகளுக்கு பிரத்தியேக உரிமை கிடையாது. மற்றும் ஐரோப்பாவில் புலிகளின் செயற்பாடுகள் அதன் உச்ச கட்டத்தில் இறுமாப்பும் அதிகாரப் போக்கும் கொண்டதாகும்.

இத்தகைய ஒவ்வாத மற்றும் அரசியல் ரீதியில் அடக்குமுறையான செயற்பாடுகளில் மேலும் ஈடுபடாமல் புலிகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் பலமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

தங்கள் உண்மையுள்ள,

ஹர்லன்ட் கூப்ஸ்

ஹெக்கன்பேர்க் மற்றும் கூப்ஸ்

சட்டத்தரணிகள்

* * *

அன்பின் ஐயா,

ஐரோப்பாவில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிரான மற்றும் புலிகளை விமர்சிக்கும் ஏனைய அமைப்புக்களுக்கும் எதிரான புலி ஆதரவாளர்களின் ஜனநாயக விரோத தாக்குதல்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்.

கொழும்பு அரசாங்கத்தின் யுத்தம், அடக்குமுறை மற்றும் பாரபட்சங்களுக்கு எதிராக இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் அமைப்புக்களில் சோ.ச.கட்சியை தவிர எனக்கு வேறு அரசியல் அமைப்புக்களை தெரியாது. இந்தக் கட்சி இடைவிடாமல் யுத்தத்தை எதிர்ப்பதோடு தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கையின் ஆக்கிரமிப்புத் துருப்புக்களையும் திருப்பியழைக்குமாறும் கோரிவருகின்றது.

இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் போது சோ.ச.க. அரச படைகளதும் சிங்கள அதி தீவிரவாத கும்பல்களதும் பலிவாங்கல்களுக்கு உள்ளாகும் என்பது பற்றி நான் விழிப்புடன் உள்ளேன். தற்போது மேல் மாகாண சபைக்கான தேர்தலில் சோ.ச.க. மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் பிரதான அங்கமும் இதுவே என்பதை நான் புரிந்துக்கொண்டுள்ளேன்.

இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களே இந்த யுத்தத்துக்கும் வேறுபாடுகளுக்கும் பிரதான பிரதான பொறுப்பாளிகள். ஆனால் அதே சமயம், இன்று வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முகங்கொடுத்துள்ள மோசமான நிலைமைகளுக்கான பொறுப்பில் புலிகளுக்கும் பெரும் பங்கு உண்டு என நான் நினைக்கின்றேன். வன்முறைகளை மேற்கொள்வதன் மூலமும் பிரிவினைவாத பிரச்சாரத்தை பரப்புவதன் மூலமும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதில் புலிகள் கணிசமான பங்காற்றியுள்ளனர். சிங்கள ஆளும் கும்பலின் யுத்தம் மற்றும் அடக்குமுறையில் இருந்து விடுபடுவது எப்படி என்பது பற்றி ஏனைய இயக்கங்களில் இருந்து அறிந்துகொள்ள தமிழ் மக்களுக்கு உள்ள உரிமையை புலிகள் மீறியுள்ளனர்.

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவது, தான் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் அதே மக்களை புலிகள் அடிமைப்படுத்தும் வழிமுறையாகும். ஐரோப்பாவில் சோ.ச.க. உறுப்பினர்கள் மீதான புலிகள் அமைப்பின் அச்சுறுத்தலும் தாக்குதல்களும் வெளிப்படுத்துவது போல், அது அரசியல் விமர்சனங்களையும் கலந்துரையாடல்களையும் கண்டு தயங்குகிறது. சோ.ச.க. மீதான புலி ஆதரவாளர்களின் இத்தகைய தாக்குதல்கள், ஆளும் தட்டினதும் குறுகிய பேரினவாதத்தின் காவலர்களதும் கைகளில் நேரடியாக பயன்படுகிறது. தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் கொழும்பு மேலாதிக்கவாத ஆளும் தட்டுக்கு உதவவும் புலிகளின் பிரிவினைவாதம் வழியமைக்கின்றது.

யுத்தத்துக்கு முடிவுகட்டவும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தவும் ஒரே முன்னணிப் பாதை தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களை அவர்களது சர்வதேச சகோதரர்களுடன் ஐக்கியப்படுத்தும் சோ.ச.க. யின் கொள்கையே என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன். யுத்தத்துக்கும் வேறுபாடுகளுக்கும் எதிராகவும் சமத்துவத்துக்காவும் சோசலிச பதிலீட்டை அபிவிருத்தி செய்யும் கட்சி இதுவே.

சோசலிச அனைத்துலக வாதத்தின் அடிப்படையில் போராடும், உலக தொழிலாள வர்க்கத்தின் ஒரே புரட்சிகரக் கட்சி என நாம் புரிந்துகொண்டுள்ள சோ.ச.க. மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களுக்கு எதிரான சகல வன்முறைகளையும் நிறுத்துமாறு நாம் உங்களை பலமாகக் கேட்டுக்கொள்கிறோம்.

சன்ஜய வில்சன் ஜெயசேகர

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரவாத கவய அமைப்பின் உறுப்பினர்

கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மனித உரிமைகள் அமைப்பின் முன்நாள் தலைவர்.

* * *

பிரிட்டிஷ் தமிழர் பேரவைக்கும் விடுதலைப் புலிகளுக்கும்

ஐரோப்பாவில் உலக சோசலிச வலைத் தள வாசகர்கள், சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் மீது சரீர தாக்குதல் நடத்தி அச்சுறுத்தல் விடுக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் ஜனநாயகமற்ற நடவடிக்கைகளுக்கு எனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தவே நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். ஐரோப்பாவில் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிரான அடக்குமுறை, அச்சுறுத்தல் மற்றும் வன்முறைத் தாக்குதல்களை நிறுத்துமாறு ஐரோப்பாவில் உள்ள தமது முகவர்களுக்கு புலிகள் அறிவுறுத்த வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (CCT) மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட பலவித புலிகள சார்பு அமைப்புக்களின் கைக்கூலிகள், பெப்பிரவரி 4 பேர்லின், லண்டன் மற்றும் பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும், பெப்பிரவரி 7 ஸ்டுட்கார்ட்டில் நடந்த கூட்டத்திலும் சோ.ச.க. ஆதரவாளர்கள் துண்டுப் பிரசுரங்களக் விநியோகிப்பதை நிறுத்துமாறும் அங்கிருந்து வெளியேறுமாறும் கூறியுள்ளனர். சோ.ச.க. ஆதரவாளர்கள் சரீர வன்முறை, வன்முறை அச்சுறுத்தல் மற்றும் சிங்கள விரோத இனவாத தூற்றல்களுக்கும் ஆளாகியுள்ளனர். பொதுக் கூட்டமொன்றுக்காக பாரிஸ் லா சப்பலில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த சோ.ச.க. ஆதரவாளர்களின் துண்டுப் பிரசுரங்கள் CCT அமைபாளர்கள் மற்றும் ஆதரவாளரகளாலும் அபகரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளன. இலங்கையில் மோதல்களுககு முடிவுகட்டுவதற்கான ஒரு சோசலிச தீர்வை முன்வைப்பதன் பேரிலேயே பாரிசில் அந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. லா சப்பலில் வசிக்கும் தமிழர்களுடன் அரசியல் பேச தம்மிடம் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என CCT செயற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.

காரணங்கள் இன்றியே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும் இந்தத் தாக்குதல்கள் தனிமைப்பட்ட சம்பவங்கள் அல்ல. அவை கூட்டாக திட்டமிடப்பட்டவை. இவை ஜனநாயக உரிமைகள் மீதான வெளிப்படையான தாக்குதல்களாகும். சோ.ச.க. இலங்கையில் வாழ்நாள் பூராவும் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை உத்வேகத்துடன் காத்துவருகின்ற நிலையிலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல துருப்புக்களையும் நிபந்தனையின்றி திருப்பியழைக்க இடைவிடாது கோரிக்கைவிடுக்கும் நிலையிலும், அதன் மீதான இத்தகைய தாக்குதல்கள் குறிப்பாக வெட்கக்கேடானதாகும்.

அரசியல் கலந்துரையாடலை தடுக்கவோ அல்லது தமிழ் மக்களின் ஒரே அரசியல் பிரதிநிதிகள் என்ற நிலையில் பேசவோ புலிகளுக்கு அதிகாரம் கிடையாது. மாறாக, இத்தகைய நோக்கு தனது அரசியல் எதிரிகளை அடக்கும் மற்றும் படுகொலை செய்யும் வழிமுறையாக மட்டுமே இருக்க முடியும்.

தம்மால் அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாததாலும் வெளிநாட்டில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலும், அதே போல் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மத்தியிலும் தமது முதலாளித்துவ சார்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகின்றமையினால் ஏற்பட்ட பீதியாலும் புலிகள் வன்முறையை நாடுகின்றனர்.

புலிகள் சாதாரண தமிழ் உழைக்கும் மக்களை அன்றி, சிங்கள முதலாளித்துவத்தைப் போலவே, தமிழ் தொழிலாளர்களை சுரண்டுவதில் நிதி மூலதனத்திற்கு துணை கொந்தராத்துக்காரர்களாக விரும்பும் தமிழ் முதலாளித்துவத் தட்டையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்பதை இந்தத் தாக்குதல்கள் அம்பலப்படுத்துகின்றன. புலிகளுக்கு எப்போதாவது அதிகாரம் கிடைத்தால், இலங்கையில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் செய்வது போலவே, இரக்கமின்மை மற்றும் ஜனநாயக விரோத வழிமுறைகளின் மூலமே ஆட்சி செய்வர் என்பதில் கேள்வியில்லை. இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், அவர்களின் நடவடிக்கைகள் பீதியையும் சீற்றத்தையும் மற்றும் பகைமையையுமே உருவாக்குகின்றன, அரசியல் மதிப்பை அல்லது விசுவாசத்தை அல்ல.

இலங்கையில் மட்டுமன்றி உலகம் பூராவும், சமூக சமத்துவமின்மை, இனவாதம் மற்றும் யுத்தத்தில் இருந்து மீளவும் தமது துன்பங்களுக்கு ஒரு முற்போக்கான தீர்வை காணவும் போராடிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்கள் மத்தியில் இத்தகைய வழிமுறைகளுக்கு கொஞ்சமும் இடம் கிடையாது.

ஜீன் ஷோல்

பொதுத்துறை மதிப்பீட்டுப் பேராசிரியர்

மன்சஸ்டர் பல்கலைக்கழகம்

ஐக்கிய இராச்சியம்

* * *

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்துக்கு

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (CCT) உறுப்பினர்களுக்கு

இலங்கையின் நிலைமை பற்றியும் தமிழர்களையும் அவர்களின் அமைப்புக்களையும் அரசாங்கம் நடத்துகின்ற ஏற்றுக்கொள்ள முடியாத முறை பற்றியும் உலக சோசலிச வலைத் தளத்தின் மூலம் நாம் தெரிந்துகொண்டுள்ளோம். இந்த நிலைமை பற்றி பிரதான பிரான்ஸ் ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுவதில்லை.

பிரான்சில் தமிழ் மக்களை பரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் நீங்கள், WSWS ஆதரவாளர்களையும் அவர்களோடு தொடர்புகொள்ள விரும்பும் ஏனைய இடது அமைப்புக்களையும் அவமதித்து, அச்சுறுத்தியுள்ளதோடு வன்முறையிலும் ஈடுபட்டதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. புலிகளின் கருத்துக்களைத் தவிர வேறு கருத்துக்களை அனுக தமிழர்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையை அனுமதிக்காமல், போராடுவதற்கு அவர்களுக்கு உள்ள உரிமைக்கு கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், உங்களது சொந்த பிரஜைகள் தொடர்பாக நீங்கள் எந்தளவு குறைந்த அக்கறை காட்டுகின்றீர்கள் என்பதை நீங்கள் வெளிக்காட்டி விட்டீர்கள்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பொதுப் போராட்டத்தை WSWS பிரேரிக்கின்ற நிலையில், தமிழ் முதலாளித்துவம் தமிழ் தொழிலாள வர்க்கத்தை சுதந்திரமாக சுரண்டக்கூடிய ஒரு வரிச் சொர்க்கமாக ஒரு தனியரசை ஸ்தாபித்துக்கொள்ள விரும்பும் புலிகளின் அரசியல் முன்நோக்கும், முதலாளித்துவ கட்சிகளின் முன்நோக்கும் ஒன்றே என்பதை இந்த நடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

பிரான்சில் தமிழ் சமுதாயத்தின் மத்தியில் ஜனநாயகபூர்வமான விவாத்தை நசுக்க எடுக்கும் முயற்சிகளையும் அச்சுறுத்தல்களையும் நிறுத்துமாறு கோரி எழுதும் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுடன் எங்களையும் இணைத்துக்கொள்கிறோம்.

ஒலிவியே லுவெர் (பட்டதாரி மாணவன்) மற்றும் மரிஸ் சொபெல் (கட்டிடக் கலைஞர்)

நான்சி, பிரான்ஸ்

* * *

அன்பின் தமிழர் பேரவைக்கு,

சோ.ச.க. மீதான உங்களது தாக்குதல் இரக்கமற்றதும் மடைத்தனமானதுமாகும். நீங்கள் பலவீனமானவர்கள் என்பதையும் சோ.ச.க. முன்வைக்கும் கனமான அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கும் இயலுமை உங்களுக்கு இல்லை என்பதையும் நீங்களாகவே உங்களது அச்சுறுத்தல் மற்றும் தணிக்கைகள் மூலம் அம்பலப்படுத்திவிட்டீர்கள். சோ.ச.க. எப்போதும் யுத்தத்துக்கு எதிராகவும், நீங்கள் வக்காலத்து வாங்கும் ஏகாதிபத்திய வன்முறைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பிவந்துள்ளது. அவர்களைத் தடுப்பதன் மூலம், விடுதலையாளர்கள் என நீங்கள் கூறிக்கொள்வதற்கு மாறாக, தமிழ் சமுதாயத்தை அடக்கும் ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டீர்கள்.

நீங்கள் ஏனைய அரசியல் கருத்துக்களை தடுத்தால், சிங்களவர்கள் மீது பகைமையை பரிந்துரைத்தால் மக்கள் உங்களை பாசிஸ்டுகளாக கணிப்பார்கள். சோ.ச.க. யை ஒரு இயக்கமாக ஏற்றுக்கொள்ளுங்கள், அல்லது தமிழ் சமுதாயத்துக்குக் கூட சுதந்திரத்தை அனுமதிக்காத இனவாத குண்டர்களாக நீங்களே உங்களை காட்டிக்கொள்ளுங்கள். இந்த அடிப்படையில் உங்களது தற்போதைய கொள்கை அனைவரையும் உங்களது அமைப்பில் இருந்து வெளியேற்றுவதற்கு மட்டுமே வழியமைக்கும், எனவே உங்களது நலனுக்காக சோ.ச.க. யை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஐசாக்

* * *

ஐரோப்பாவில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளரகளுக்கு எதிராக புலிகளின் ஆதரவாளரகள் அச்சுறுத்தல் விடுத்தனர் என்ற தொந்தரவுகொடுக்கும் செய்தியை WSWS ஊடகம் மூலம் அறிந்துகொண்டேன். தமிழ் மக்களின் துன்பங்கள் தொடர்பான தமது கருத்தை வெளிபடுத்துவதிலிருந்தும் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள தீர்வுக்காக பிரச்சாரம் செய்வதிலிருந்தும் சோ.ச.கட்சியை தடுப்பதை இலக்காகக் கொண்டதே இந்த கோழைத்தனமான செயல் என நான் நம்புகிறேன். இத்தகைய அச்சுறுத்தல்கள் சோ.ச.கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களது ஜனநாயக உரிமைகள் மட்டுமன்றி தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமையையும் மீறுவதாகும். மக்களின் அடிப்படை உரிமைகளை குறைந்தபட்சமேனும் மதிக்கும் எவரும் இத்தகைய அரசியல் அச்சுறுத்தல் நடவடிக்கையை கடுமையாக கண்டனம் செய்ய வேண்டும்.

சோ.ச.க. எப்போதும் யுத்தத்துக்கு எதிராக போராடுவதோடு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அரசாங்கத்தின் ஆயுதப் படைகளை திருப்பியழைக்கவும் கோருகிறது. தமிழர்களின் தேசியப் பிரச்சினை தொடர்பான அதன் கொள்கை நிலைப்பாட்டின் காரணமாக, அதன் உறுப்பினர்கள் அடிக்கடி அரசினதும் அதே போல் பேரினவாதிகளதும் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பான புலிகளின் வெறுப்பை மட்டும் தற்போதைய அச்சுறுத்தல்கள் நிரூபிக்கின்றன. இது கொழும்பு அரசாங்கத்தின் பேரினவாத யுத்த விஷமிகளுடன் நீங்கள் நிச்சயமாக பங்கிட்டுக்கொள்ளும் ஒரு உணர்வாகும்.

வரலாறு பூராவும் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க உறுதியாக ஆதரவு வழங்குவதில் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்நோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) பிரசித்தி பெற்றவையாகும். பேர்போன கறுப்பு ஜூலைக்கு சில மாதங்களுக்கு முன்னதாக, 1983ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது சில பேரினவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒரு உதாரணமாகும்.

சம்பவங்கள் நிறைந்த அந்த நாட்களில் நான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இருந்ததோடு அந்த நினைவுகள் இன்னமும் என் மனதில் புதிதாக இருப்பதோடு கண்முன் தெரிகின்றன. மாணவர்களின் பலம்வாய்ந்த எதிர்ப்பால் பேரினவாதிகள் தாக்குதல் தொடுக்கமுடியாமல் தடுக்கப்பட்டனர். தொடர்ந்து வந்த வாரங்களில், தமிழ் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரி பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்தும் போராடினார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியபோது, சுமார் 500 சிங்கள மாணவர்கள் (அந்த பீடத்தில் அப்போது இருந்த சிங்கள மாணவர்களின் எண்ணிக்கையில் இது 90 வீதமாகும்) வருகை தந்த ஒரு கூட்டத்தில் பொறியியல் பீட மாணவர்கள் சங்கமானது தமிழ் மாணவர்கள் திரும்பி வரும்வரை அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் ஒத்திவைக்க ஒருதலைப்பட்சமாக தீர்மானம் எடுத்தது. அடுத்த நாளே, பேராதனைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் அதே தீர்மானத்தை எடுத்தது.

இந்தப் போராட்டங்களுக்கு புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் தலைமை வகித்ததோடு அதன் பிரச்சாரம் மாணவர்களதும் ஆசிரியர்களதும் இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இனவாத வேறுபாடுகள் மற்றும் பேரினவாதத்துக்கு எதிரான வீரம் செறிந்த இயக்கத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பாத்திரத்தை அடையாளங் கண்டுகொண்ட, யாழ்ப்பாணத்தில் உள்ள இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களின் அமைப்பு, 1983 பிற்பகுதியில் கொழும்பில் நடந்த பு.க.க. ஆண்டு நிறைவுக் கூட்டத்துக்கு பிரதிநிதிகளை அனுப்பியிருந்தது.

எனது அறிவுக்கெட்டிய வகையில், சோ.ச.க. மற்றும் அதன் இணையமான WSWS உம், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் பிரச்சாரத்தை இடைவிடாது முன்னெடுக்கின்றன. உங்களுடைய தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் இத்தகைய பிரச்சாரம் மீதான உங்களது எதிர்ப்பையும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திலிருந்து தமிழ் மக்களை தனிமைப்படுத்தும் உங்களது விருப்பத்தையும் மட்டுமே நிரூபிக்கின்றன. ஏனையவர்களின் குறிக்கோளை வெளிப்படுத்துவதை தடுக்கும் இத்தகைய முயற்சிகள், அவர்களது நோக்கத்தை வெற்றிகரமாக எதிர்க்க உங்களால் முடியாது என்பதையே ஒப்புவிக்கின்றன. புலிகள் தமிழ் வெகுஜனங்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மற்றும் புலிகள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் எனக் கோரும் அதே தட்டுக்களான ஐரோப்பா, அமெரிக்கா இந்தியா மற்றும் ஜப்பானின் ஆளும் தட்டுக்களின் ஆதரவைப் பெறவே அவர்கள் முயற்சிக்கின்றனர்.

பி. குருப்பு

கொழும்பு