சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐக்கிய அமெரிக்கா

Nationalism or socialism in Latin America

A reply to a supporter of Chavez

இலத்தீன் அமெரிக்காவில் தேசியவாதம் அல்லது சோசலிசம்

ஷாவேஸின் ஆதரவாளர் ஒருவருக்கு ஒரு பதில்

By Bill Van Auken
14 March 2013

use this version to print | Send feedback

மார்ச் மாதம் 8 ஆம் திகதி, ஹ்யூகோ ஷாவேஸும் சோசலிசமும்’’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட முன்னோக்குக் கட்டுரைக்கு உலக சோசலிச வலைத் தளம் பல கடிதங்களை விடையிறுப்பாக பெற்றுள்ளது. இவைகளில் பல ஷாவேஸின் ஆட்சியை ஒரு மார்க்சிச பகுப்பாய்விற்கு உட்படுத்த முயன்றோம் என்பதற்கு அவர்களின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதை வர்க்க அடிப்படையில் ஒரு முதலாளித்துவ தேசியவாத ஆட்சி எனக்கூறி அதை இலத்தீன் அமெரிக்காவில் அத்தகைய முந்தைய ஆட்சிகளின் வரலாற்று உள்ளடக்கத்தில் இருத்தி ஒப்பிட்டதற்காக ஆத்திரமுற்றுள்ளனர்.

இக்கடிதங்களின் மாதிரி ஒன்று (கீழே காணவும்) பிரித்தானியாவில் LB இடமிருந்து வந்துள்ளது; அவர் கூறுவதாவது, இந்த முன்னோக்கினால் “அதிர்ச்சி” அடைந்துள்ளதாகவும், “ஏகாதிபத்திய செய்தி ஊடகம் பொலிவரிய புரட்சியை பற்றி அரைகுறை உண்மைகள், கருத்தியல்ரீதியாக இழிவாகக் காட்ட முற்பட்டிருக்கையில், WSWS உடைய Bill Van Auken அதே கற்பனைகளைப் பயன்படுத்தி அதன் மார்க்சிச எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு பதிலை கொடுக்கிறார்.”

இந்த அரைகுறை “உண்மைகள்”, “கற்பனைகள்”, யாவை? வெனிசுவேலாவானது ஷாவேஸின் கீழ் தீவிர வறுமைக் குறைப்பைக் கண்டுள்ளபோதும் நாட்டின் வறுமை விகிதம் இலத்தீன் அமெரிக்காவின் சராசரியைவிட இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது, அவருடைய 14 ஆண்டு ஆட்சிக் காலம் அடிப்படையில் வெனிசுவேலாவின் நிலையை ஒடுக்கப்பட்ட நாடு என்பதில் இருந்து மாற்றவில்லை, ஒரேயொரு பண்டமான எண்ணெய் ஏற்றுமதிக்காகவும், பெரும்பாலான மக்கள் நுகர்வு மற்றும் மூலதனப் பொருட்களுக்கு முக்கிய சக்திகளை நம்பியிருப்பதும் மாறவில்லை என நாம் சுட்டிக் காட்டியுள்ளதை கடிதம் எழுதியவர் எதிர்க்கிறார்.

இந்தப் புறநிலையான உண்மைகளை மறுப்பதற்கான அவசியம் ஏன்? வர்க்க யதார்த்தங்களை மறைத்து, வெனிசுவேலாவின் ஆட்சியை மிக அழகிய வர்ணத்தில் ஏன் வண்ணம் தீட்ட வேண்டும் என்னும் ஆர்வம்? இதற்கான விடையும் கடிதத்தில் ஒரு வரியில் உள்ளது. “பிரித்தானியா போன்ற நெருக்கடி நிறைந்த நாடுகளானது மோசமான முறையில் பொதுநலச் செலவுகளைக் குறைத்து, உழைக்கும் மக்களுடைய வீடுகளுக்கான உரிமையையும் தாக்குகையில், வெனிசுவேலியப் புரட்சி மார்க்சிஸ்ட்டுக்களை ஒரு மாற்றீடு உள்ளது எனக் காட்ட அனுமதிக்கிறது.”

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருக்கும் தொழிலாள வர்க்கமானது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒடுக்கப்பட்டுள்ள நாடான வெனிசுவேலாவிற்கு ஆதரவு கொடுப்பது தேவை என்றாலும், ஷாவேஸின் கீழுள்ள அரசியல், பொருளாதார கட்டமைப்பை அமெரிக்கா அல்லது பிரித்தானிய தொழிலாளர்களுக்கு மாற்றீடு என முன்வைப்பது கேலிக்கூத்தாகும். ஒரு “முற்போக்கான” தளபதி அவர்களுக்கு சோசலிசத்திற்கு வழிகாட்ட மேற்கு முனை அல்லது சாண்ட்ஹர்ஸ்ட் உருவாக்கும்வரை காத்திருப்பதைவிட அவர்களால் என்ன செய்யமுடியும்?

இங்கு கருதப்படும் மேலிருந்து சுமத்தப்படும் ஒருவகையான மாற்றீடு” என்பது, தொழிலாள வர்க்கமானது தன்னுடைய சொந்த அதிகாரத்திற்கான அமைப்பை நிறுவு முயற்சிக்கும் சுயாதீனமான அரசியல் இயக்கத்திலிருந்து எழுச்சிபெற்று வருவது அல்ல. ஷாவேஸைப் புகழ்வது அவ்வாறான இயக்கத்தை முற்றிலும் நிராகரிப்பதும், அதன் மீதான ஆழ்ந்த விரோதப் போக்கு ஆகியவற்றுடன்தான் பிணைந்துள்ளது.

இந்த தங்கள் மனச்சாட்சியை திருப்தி செய்ய விரும்புவர்களுடைய அரசியலானது, சில அரச தலைவர்கள் தொழிலாள வர்க்கத்திற்குக் “சோசலிசத்தை” கொண்டுவருவதற்காக அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதின் மூலம் மலிவாக தம்மை திருப்திப்பட்டுக்கொள்வோரின் அரசியலாகும். உண்மையில், இது தொழிலாளர்கள் தம்மைத்தாமே விடுதலைசெய்து கொள்வதற்கான போராட்டத்தின் ஊடாக மட்டுமே எழக்கூடிய சோசலிசத்தை முற்றிலும் பொய்மைப்படுத்துவதாகும்.

வர்க்க அடிப்படையைப் பொறுத்தவரை, இதேபோல் பாரக் ஒபாமா மீது நப்பாசைகளை வளர்த்த குட்டி முதலாளித்துவ தட்டுக்களிலிருந்து வந்தவர்களை விட ஷாவேஸுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் மாறுபட்டவர்கள் அல்ல. உண்மையில் கடந்த ஆண்டு வெனிசுவேலாவின் ஜனாதிபதியே அவர் அமெரிக்கக் குடிமகனாக இருந்தால் ஒபாமாவிற்கு வாக்களித்திருப்பேன் என்று கூறியதில் இருந்த கருத்ததாகும். ஒபாமா ஒரு வெனிசுவேலா நாட்டவராக இருந்திருந்தால் அவர் ஷாவேஸுக்கு ஆதரவு கொடுத்திருப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

ஷாவேஸ் ஒரு முதலாளித்துவ தேசியவாதி என்னும் வரையறை “தவறு மட்டும் இல்லை, முக்கிய புள்ளியையும் புறக்கணிக்கிறது” என்றும் கடிதம் எழுதியவர் கூறியுள்ளார். அவர் தொடர்வதாவது: “1914ல் லெனின் எழுதியபடி, ஒடுக்கப்பட்ட தேசத்தின் எந்த பூர்சுவா தேசியவாதமும் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு பொது ஜனநாயக உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதுடன், இந்த உள்ளடக்கத்திற்காகத்தான் நாம் நிபந்தனை இன்றி ஆதரவு கொடுக்க வேண்டும்.” சோசலிசத்திற்கான இயக்கம் வெனிசுவேலாவின் ஒடுக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்படுவதுடன், அதன் வெளிப்பாட்டை ஹ்யூகோ ஷாவேஸின் புரட்சிகரத் தலைமையில் காண்கிறது.”

இங்கு ஸ்ராலினிசத்திற்கும் குட்டி முதலாளித்துவ தீவிரக் கருத்துகளிலும் இருக்கும் அரை வேக்காட்டு முரண்பாட்டுக் கருத்துக்கள் சீரணிக்கப்படாத வகையில் லெனினின் மேற்கோளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருப்பதை காண்கிறோம்.

இக்கடிதம் எழுதியவர் ஷாவேஸை ஒரு முதலாளித்துவ தேசியவாதி என்று வரையறுப்பது ஓர் அவதூறு எனக் கூறுவதுபோல் தோன்றுகின்றது. அதாவது அப்படி அவர் இருந்தாலும், அவர் “வெனிசுவேலாவின் ஒடுக்கப்பட்ட மக்களின்” சோசலிசத்தை நோக்கிய இயக்கத்திற்கு வெளிப்பாடு கொடுத்து தலைமை தாங்குவதால் லெனின் ஆலோசனையின் அடித்தளத்தில் அவர் நிபந்தனையற்ற ஆதரவு பெறுவதற்கு தகுதியானவர் என அவர் கூறுகின்றார்.

ஷாவைஸை ஒரு முதலாளித்துவ தேசியவாதி என விவரிக்கையில் அச்சொற்றொடர் ஒரு அடைமொழிச் சொல்லாக  பயன்படுத்தப்படவில்லை, மாறாக அவருடைய ஆட்சியின் குணவியல்பாக இருந்த வர்க்க நலன்கள் மற்றும் வழிமுறைகள் பற்றிய ஒரு அரசியல்ரீதியான துல்லியமான வரையறைப்பாகும். அவருடைய சமூக உதவித் திட்டங்கள் மற்றும் பகுதியான தேசியமயமாக்கல்கள் இருந்துபோதிலும், பொருளாதாரம் உறுதியாக முதலாளித்துவ தன்மையைக் கொண்டிருந்த ஒரு நாட்டின் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.

ஷாவேஸ் தலைமை தாங்கிய அரசு அவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும்போது இருந்த நிறுவனங்கள், அதிகார வர்க்கங்கள் ஆகியவற்றை இன்னும் அடித்தளமாகக் கொண்டிருந்தது. முதலிலும் முதன்மையானதுமாக ஆயுதப் படைகள் அரசாங்கம் செயற்படுவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன.

வெனிசுவேலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனியார் துறை 70 சதவிகிதத்திற்கும் மேலாகக் கொண்டுள்ளது. 1998ம் ஆண்டு முதலில் ஷாவேஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை விட இது கூடுதலான பங்கு ஆகும். இவ்வகையில் முதலாளிகள், தொழிலாளர்களுக்கு எதிராக அபகரித்த சொத்தின் பங்கு மிக அதிகமாக 48.8% என்பதை 2008ல் எட்டியது. இது அவர் அதிகாரத்திற்கு வந்த ஒரு தசாப்தத்தில் நடந்தது. வெனிசுவேலாவின் வங்கிகள் மிகவும் இலாபகரமானவை, அதன் பங்குச் சந்தை உலகில் அதிக செயலாற்றுத்திறன் உடையது, உண்மை ஊதியங்கள் சரிந்தநிலையில் பங்குகளின் விலைகள் 2012 ல் கிட்டத்தட்ட 300 சதவிகிதம் உயர்ந்தன.

இங்கு அவதூற்றின் நோக்கம் ஷாவேஸ் அல்ல, லெனின் ஆவார். மூர்க்கத்தனமான முறையில் அதனுடைய உள்ளடக்கத்திலிருந்து பிரிக்கப்பட்டு மேற்கோள் காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ரஷ்ய மார்க்சிச இயக்கத்திற்குள் நடந்த ஒரு விவாதமான அதனுடைய வேலைத்திட்டத்தில் லெனினால் “எதிர்மறைக் கோரிக்கை” எனக்கூறப்பட்ட ஜாரிசப் பேரரசின் ஒரு பகுதியான போலந்தின் சுய நிர்ணயத்திற்கான உரிமையை அங்கீகரிப்பதா என்பது இருந்தது.

 “எதிர்மறை” என்னும் சொற்றொடர் மார்க்சிஸ்ட்டுக்கள் பிரிவினையை வாதிடவில்லை, மாறாக இந்த உரிமையை அங்கீகரிப்பது தேசியப் பிளவுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த ஒரு வழிவகையாக உணர்ந்தனர் என்பதை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்பட்டது.

அதே கட்டுரை “தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ கொள்கைக்கு அடிபணியவைப்பதற்கு” எதிராக எச்சரிப்பதுடன், தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரையில் தேசியக் கோரிக்கைகள் “வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு கீழ்ப்பட்டவையே” என வலியுறுத்துகிறது. “தொழிலாளர் வர்க்கத்திற்கு முக்கியமான விடயம் அதனுடைய வர்க்க வளர்ச்சியை உறுதிப்படுத்துவது ஆகும். முதலாளித்துவத்திற்கு தன்னுடைய “சொந்த தேசம்” என்ற நோக்கினை தொழிலாள வர்க்கத்தின் நோக்கங்களுக்கு முன்னே தள்ளுவதற்காக இந்த வளர்ச்சியை தடை செய்வது முக்கியமாக உள்ளது.

மேலும், 1917ல் அக்டோபர் புரட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி தன்னுடைய நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் அபிவிருத்தி செய்திருந்த முன்னோக்கை லெனின் ஏற்றிருந்தார். அத் தத்துவம் காலம் கடந்த முதலாளித்துவ வளர்ச்சியடைந்த ரஷ்யா போன்ற நாடுகளில், முதலாளித்துவ புரட்சியுடன் வரலாற்றுரீதியாக பிணைந்திருந்த ஜனநாயக மற்றும் தேசியக் கடமைகள், தொழிலாள வர்க்கத்தின் தலைமையின்கீழ் அது அதிகாரத்தை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு சோசலிச நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம்தான் தீர்க்கப்படமுடியும் என நிரூபித்திருந்தது.

ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாட்டின் சாரம், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராடுவதும் மற்றும் அப்போராட்டத்தை தேசிய முதலாளித்துவத்தின் கொள்கைகள் எவ்வளவு “இடது” ஆக இருந்தாலும் அதற்கு அனிபணியச் செய்ய மறுத்தல் என்பதுமாகும்.

தன்னுடைய வாழ்வின் கடைசி ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கி இப்பிரச்சினை குறித்து, மெக்சிகோவின் ஜனாதிபதி லாசாரோ கார்டெனஸின் தேசியவாதக் கொள்கைகளைப் பொறுத்த வரை நேரடியாக ஆராய்ந்தார். கார்டெனஸின் அரசாங்கம் மட்டும்தான் மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கொலையாளிகளால் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்த ரஷ்யப் புரட்சியின் தலைவருக்கு உலகிலே அரசியல் அடைக்கலம் கொடுத்த நாடாகும்.

மார்ச் 1938ல் பெருகிய முறையில் மெக்சிக்கோ எண்ணெய் தொழிலாளர்களுக்கும் திமிர்பிடித்த அமெரிக்க, பிரித்தானிய எண்ணெய் பெருநிறுவனங்களுக்கும் எதிராக பெருகிய போர்க்குணமிக்க  போராட்டங்களை எதிர்கொண்ட கார்டினஸ் மெக்சிகோவின் எண்ணெய் தொழில்துறையை தேசியமயமாக்கி, நாட்டின் இரயில் பாதைகளையும் தேசியமயமாக்கி அவற்றை தொழிலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் இருத்தினார். இந்த நடவடிக்கைகள் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சக்தி வாய்ந்த நாடுகளை மீறிச் செய்யப்பட்டவையும் மற்றும் வெனிசுவேலாவில் ஷாவேஸ் அரசாங்கம் எடுத்த எந்த நடவடிக்கைகளையும் விட முற்போக்குத்தனமும் தீவிரமும் அதிகமாக இருந்தவையுமாகும்.

ஆனால் இந்த நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்கள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை விரித்துரைக்கும் வர்க்க அடிப்படைகளை வரையறுக்கையில் ட்ரொட்ஸ்கி விளக்கினார். அதாவது கார்டினஸ் அரசாங்கத்தின் நன்மதிப்பைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் அவருக்கு அக்கறை உண்டு. ஆனால் ஆழ்ந்த கொள்கையான பகுப்பாய்வை மேற்கொண்டார். இது ஏகாதிபத்திய சக்திகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்த அரசாங்கத்தை அவர் ஆதரிப்பதை ஒதுக்கிவிடவில்லை.

ட்ரொட்ஸ்கியின் மதிப்பீடு வெனிசுவேலாவில் ஷாவேஸ் உடையதைப் போன்ற ஆட்சிகளின் தன்மைகளின் தத்துவார்த்த அஸ்திவாரங்களை உறுதியாக அறிந்து கொள்ளுதல் அவர்கள் மீது மார்க்சிஸ்ட்டுக்கள் கடைபிடித்துத்கொள்ள வேண்டிய அணுகுமுறையை வழங்குகிறது.

தேசியமயமாக்கல்கள் நடந்து சில மாதங்களுக்குள் அவர் எழுதினார்: “தொழில்துறையில் பின்தங்கிய நாடுகளில் வெளிநாட்டு மூலதனம் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. எனவே தேசிய பூர்சுவாவானது  தேசிய பாட்டாளி வர்க்கத்துடன் கொண்டுள்ள உறவு ஒப்புமையில் வலுவற்ற தன்மையாக இருக்கிறது. இது அரச அதிகாரத்திற்கு சிறப்பு நிபந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. அரசாங்கம் வெளிநாட்டு, உள்நாட்டு மூலதனத்திற்கு இடையேயும் மற்றும் பலவீனமான தேசிய பூர்சுவாவிற்கும் ஒப்புமையில் சக்தி வாய்ந்த பாட்டாளி வர்க்கத்திற்கு இடையேயும் தள்ளாடுகிறது. இது அரசாங்கத்திற்கு ஒரு தனித்துவமான போனப்பாட்டிச தன்மையை அளிக்கிறது. இது வர்க்கங்களுக்கு மேலாக எழுகின்றது எனக்கூறும் தன்மையை உடையது. உண்மையில், அது தன்னை வெளிநாட்டு மூலதனத்தின் கருவியாக மாற்றிக் கொள்வதாலும்,  பாட்டாளி வர்க்கத்தை பொலிஸ் சர்வாதிகாரத்தின் சங்கிலிகளில் கட்டிவிடுவதால் அல்லது பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து திரித்தல் செய்வதால் அதற்குச் சலுகைகள் கொடுக்கும் நிலைக்கு சென்று  இதனால் வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து சற்று சுதந்திரம் பெறும் வாய்ப்பு உள்ளது. [மெக்சிக்கோ அரசாங்கத்தின்] தற்போதைய கொள்கை இரண்டாம் கட்டத்தில் உள்ளது. இதன் மிகப் பெரிய வெற்றிகள் இரயில் பாதைகள் மற்றும் எண்ணெய் தொழில்துறைகளை பறிமுதல் செய்து கொண்டது ஆகும்.

“இந்த நடவடிக்கைகள் முற்றிலும் அரச முதலாளித்துவத்தின் வரையறைகளுக்கு உட்பட்டதாகும். ஆனால் ஒரு அரைக் காலனித்துவ நாட்டில், தனியார் வெளிநாட்டு மூலதனத்தினதும் அதனுடைய அரசாங்கங்கள் ஆகியவற்றின் பெரும் அழுத்தங்களின் கீழ் அரச முதலாளித்துவம் உள்ளது. இது தொழிலாளர்களின் தீவிர ஆதரவு இல்லாமல் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. எனவேதான் அது தன் கரங்களில் இருந்து உண்மையான அதிகாரம் தப்பிவிடாமல், தேசியமயமாக்கப்பட்ட தொழில்துறை பிரிவுகளில் உற்பத்தியை ஒழுங்கமைக்க கணிசமாக பங்கை தொழிலாளர்களுடைய அமைப்புக்களுக்கு கொடுத்துள்ளது.

 “இந்நிலையில் தொழிலாள வர்க்க கட்சியின் கொள்கை எப்படி இருக்க வேண்டும்? சோசலிசத்திற்கான பாதை, பாட்டாளி வர்க்கப் புரட்சி மூலம் இல்லாமல், பூர்சுவா அரசு தொழில்துறையின் பல்வேறுபட்ட பிரிவுகளை தேசியமயமாக்குவதின் மூலமும் அவற்றை தொழிலாளர்களின் அமைப்புக்களின் கைகளுக்கு மாற்றுவதின் மூலமும் இருக்கும் என வலியுறுத்துவது பேரழிவு தரும் தவறாகவும், ஓர் அப்பட்டமான ஏமாற்றுத்தனமும் ஆகிவிடும்.“ (வலியுறுத்தல் நமது) 

மேற்கூறிய வரிகளை ட்ரொட்ஸ்கி 75 ஆண்டுகளுக்கு முன் எழுதியதில் இருந்து பாலத்தின் கீழ் நிறைய நீர் (இரத்தத்தை பற்றி கூறத்தேவையில்லை) ஓடிவிட்டது. ஸ்ராலினிசத்தினாலும் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து முறித்துக் கொண்ட பப்லோவாத திருத்தல்வாதப் போக்குகளாலும் தாக்கப்பட்ட நிரந்தரப் புரட்சித் தத்துவம், மீண்டும் மீண்டும் எதிர்மறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் தொடர்ச்சி, முன்னாள் ஆபிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கில் புதிதாக நிறுவனப்பட்டுள்ள சுதந்திர அரசுகளிடம் இருந்து நிக்கராகுவாவில் சான்டினிஸ்டாக்கள், தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆகியவை சோசலிசத்தை அடைவது ஒருபுறம் இருக்கட்டும் ஏகாதிபத்தியத்தை தொடர்ந்து எதிர்க்கவோ, அடிப்படை ஜனநாயக, தேசியப் பிரச்சினைகளை தீர்க்கவோ இயலாது என்பதைத்தான் நிரூபித்துள்ளன.

LB ஐப் போன்றவர்கள், ஷாவேசை புனிதப்படுத்த விரும்புபவர்களுக்கு, இந்த வரலாறு இன்னும் குறிப்பாக இலத்தீன் அமெரிக்க வரலாறு பற்றிய  பொருட்படுத்தா தன்மையையே காட்டுகின்றது. மறைந்த வெனுசுவேலாவின் ஜனாதிபதி மீது அவர் குவிக்கும் பாராட்டுக்களும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை ஷாவேஸின் அரசியலுக்கு அடிபணியவைப்பதை எதிர்க்கும் மார்க்சிஸ்ட்டுக்களை அவர் கண்டிப்பதும் முந்தைய காலத்தில் குட்டி முதலாளித்துவத்தின் முழு அடுக்கினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டின் பிரதிபலிப்புத்தான். இக்கொள்கை இலத்தீன் அமெரிக்க தொழிலாளர்களுக்கு பேரழிவான விளைவுகளைத்தான் கொடுத்தது.

ஆர்ஜன்டினாவில் இப்பிரிவினர், தம்மை சோசலிஸ்ட்டுக்கள், ட்ரொட்ஸ்கிசவாதிகள் என்றுகூட அழைத்துக் கொள்ளுபவை கூட, தொழிலாளர் இயக்கத்தை 1946 முதல் 1955 வரை ஜனாதிபதியாகவும் தேசியவாத இராணுவ அதிகாரியுமான ஜுவான் பெரோனுக்கும் பின்னர் அவர் இறந்தபின் பதவிக்கு வந்த அவரின் விதவை மனைவிக்கு 1973 - 74 வரை அடிபணியவைப்பதை ஆதரித்தன. பொலிவியாவில் இவர்கள் குறுகிய காலத்திற்கு 1970-1971 இல் பதவி வகித்த இராணுவ ஜனாதிபதி ஜெனரல் ஜே.ஜே.டோரஸ் குறித்து போலித் தோற்றங்களை வளர்த்தனர். பெருவில் அவர்கள் ஜெனரல் ஜுவான் பிரான்ஸிஸ்கோ வெலஸ்கோ அல்வாரடோவிற்கு ஆதரவு கொடுத்தனர். இவர் 1968 முதல் 1975 வரை “புரட்சிகர அரசாங்கத்தின் ஜனாதிபதி” என்ற பட்டத்துடன் ஆட்சியை வகித்தார்.

ஷாவேஸூப் போலவே இவர்கள் அனைவரும் தேசியமயமாக்கலை செய்தவர்களும், இடது-தேசியவாத கொள்கைகளை வளர்த்தவர்களும் மற்றும் வறியவர்களுக்கு சமூக உதவி திட்டங்களை முன்னெடுத்தவர்களுமாகும். இந்த ஒவ்வொரு நிகழ்விலும் குட்டி முதலாளித்துவத்தின் கொள்கையான முதலாளித்துவ தேசியவாதத்தை “சோசலிசம்” என முன்வைத்தல், தொழிலாள வர்க்கத்தை முன்கூட்டியே இராணுவ ஆட்சிசதிகளின்போது நிராயுதபாணியாக்குவதாகும். இதனால் பல்லாயிரக்கணக்கானோர் தமது உயிர்களை இழந்துள்ளனர்.

இத்தோல்விகளுக்கான பாதையினூடாக காஸ்ட்ரோயிசம் மற்றும் குட்டி முதலாளித்துவ கெரில்லாப் போர்முறை ஆகியவை சோசலிசத்திற்கான புதிய பாதை என்று புகழ்ந்துரைக்கப்பட்டன. இந்த முன்னோக்கு தொழிலாளர்களிடமிருந்து புரட்சிகரப் பிரிவினரை தனிமைப்படுத்தத்தான் உதவியதுடன், அவர்களை சமநிலையற்ற ஆயுத மோதல்களில் அரசுடன் ஈடுபடச்செய்து புரட்சிகரத் தொழிலாள வர்க்கக் கட்சிகள் கட்டமைக்கப்படுவதை தடுத்தது. எந்த இடத்திலும் இத்தகைய ஆட்சிகளுக்கான அல்லது வழிமுறைகளுக்கான ஆதரவு சோசலிசத்திற்கு இட்டுச் சென்றுவிடவில்லை.

சோசலிசத்திற்கான சாத்தியம் அதனுடைய ட்ரொட்ஸ்கிசப் போக்கின் (ஏதோ இது ஒரு குறுங்குழுவாத ஏமாற்று என கருதி) கிளைகளை ஒவ்வொரு நாட்டிலும் நிறுவுவதின் மூலம்தான் என்று WSWS கருதுகிறது என LB குற்றம் சாட்டுகிறார். ஆனால் இலத்தீன் அமெரிக்க வரலாற்றின் கசப்பான படிப்பினை, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்திற்கு அடிபணியச் செய்ததுதான் தோல்விக்கு வழிவகுத்துள்ளது என்பதாகும். சோசலிசத்திற்கான போராட்டம்  தொழிலாள வர்க்கத்தின் முழு அரசியல் சுயாதீனத்தின் அடிப்படையிலும் மற்றும் புரட்சிகர மார்க்சிச தலைமையைக் கட்டயெழுப்புவதின் மூலமும்தான் முன்கொண்டு செல்லப்பட முடியும்.

LB எதிர்க்கும் முன்னோக்கானது, குட்டி முதலாளித்துவ முன்னாள் தீவிரமயமானோரையும், போலி இடதுகளையும் ஷாவேஸை நோக்கி ஈர்ப்பதின் அடித்தளத்தில் இருந்த வர்க்க இயக்கவியல் மற்றும் நலன்களை பற்றி ஆராய்ந்தது. அது கூறுவதாவது: அவர்கள் ஷாவேஸின் 21ம் நூற்றாண்டு சோசலிசத்தால் ஈர்க்கப்படுகின்றனர். இதற்கு துல்லியமான காரணம் மார்க்சிச கருத்துருவான சோசலிச மாற்றம் என்பது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன, நனவான போராட்டத்தின் மூலம் முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அதிகாரத்தை தன் கைகளில் எடுத்துக் கொள்வதின் மூலம்தான் என்பதற்கு அவர்கள் கொண்டுள்ள விரோதப்போக்கினால்தான். இந்த குட்டி முதலாளித்துவ அரசியல் பிரிவுகள் மேலிருந்து கீழே வசீகரமான தளபதியால் சுமத்தப்படும் முதலாளித்துவத்தை புரட்சியிலிருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட கொள்கையினால் ஈர்க்கப்படுகின்றன.

இத்தகைய பிற்போக்குத்தன குட்டிமுதலாளித்துவ அரசியல் தட்டினரின் பிரதிநிதியான LB யின் கடிதத்தில் இந்த மதிப்பீட்டை முழுமையாகக் காணலாம்.

**

LB யிடம் இருந்து வந்துள்ள கடிதம்

உலக சோசலிச வலைத் தளத்தில் மார்ச் 8ம் திகதி “ஹ்யூகோ ஷாவேஸும் சோசலிசமும்” என்னும் கட்டுரையால் நான் அதிர்ச்சியுற்றேன். ஏகாதிபத்திய செய்தி ஊடகங்கள் பொலிவாரியன் புரட்சியை அரைகுறை உண்மைகள், சிந்தனைப் போக்கு எதிர்ப்பு ஆகியவற்றால் இழிவுபடுத்துகையில், WSWS உடைய  Bill Van Auken அதே கற்பனை அடிப்படையில் மார்க்சிச எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் மீண்டும் கூறியுள்ளார்.

இக்கட்டுரை “மறுக்க முடியாத, குறைந்த அளவு என்றாலும், சமூக நிலைமைகளில் நாட்டின் மிக வறிய தட்டுக்களுக்கு இவருடைய ஜனாதிபதிக் காலத்தில் முன்னேற்றம் இருந்ததற்கு மக்கள் ஆதரவு இருந்தது” என்பதை ஒப்புக் கொள்கிறது. இதில் வறுமை விகிதம் பாதியானதும் அடங்கும். இது இன்னமும் இலத்தீன் அமெரிக்காவின் சராசரியை விட அதிகமாகத்தான் உள்ளது.” உண்மையில் இலத்தீன் அமெரிக்காவிற்கான ஐ.நா. பொருளாதார ஆணையத்தின் கருத்துப்படி வெனிசுவேலா இப்பொழுது இலத்தீன் அமெரிக்காவில் மூன்றாவது மிகக் குறைந்த தரத்தில் உள்ளது. முதலில் 1998ல் ஷாவேஸ் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, வறுமை 50.4% என இருந்தது. 2011 ஐ ஒட்டி, அது 27.8% எனக் குறைந்துவிட்டது, தொடர்ந்து குறைந்து வருகிறது. கிட்டத்தட்ட 2.5 மில்லியன் வெனிசுவேலிய மக்கள் மிக அதிக வறுமை நிலையில் இருந்து உதவிபெற்று வெளியேறினர் இதே காலத்தில்; வெனிசுவேலா “இலத்தீன் அமெரிக்காவில் இணையற்ற முறையில்” (Brookings Insitution இன்படி) சமத்துவமற்ற நிலையில் குறைந்தது. ஒவ்வொரு ஆண்டும் 2% குறைந்து பிராந்தியத்திலேயே கியூபாவிற்குப் பின் மிகக் குறைந்த சமத்துவமற்ற நிலையைச் சாதித்தது.

எழுத்தறிவற்ற நிலையை வெனிசுவேலா அகற்றிவிட்டது. சிறு குழந்தைகள் இறப்பு விகிதத்தை 1000க்கு 25 ல் இருந்து 13 உயிரோடு பிறக்கும் குழந்தைகள் என்ற நிலைக்கு கொண்டுவந்துள்ளது. அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி அளிக்கப்படுகிறது. சமூக வீடுகள் 700,000 அலகுகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கட்டியுள்ளது. நெருக்கடி நிறைந்த ஏகாதிபத்திய நாடுகளான பிரித்தானியா போன்றவை தீய முறையில் பொதுநல சேவைகளை வெட்டி, தொழிலாள வர்க்கத்தின் வீட்டுரிமையையும் தாக்குகையில், வெனிசுவேலாவின் புரட்சி ஒரு மாற்றீடு உள்ளது என்பதை மார்க்சிஸ்டுகளைக் காட்ட அனுமதிக்கிறது.

WSWS மார்க்சிசத்தை கைவிட்டு, இந்த உண்மைகளைப் புறக்கணித்து, அதன் பிற்போக்குத்தன நிலைப்பாடான பொலிவரியப் புரட்சி வெனிசுவேலாவின் அந்தஸ்த்தை ஏகாதிபத்தியத்தை நம்பியிருக்கும், அதனால் ஒடுக்கப்படும் நாடு என்பதை மாற்ற ஏதும் செய்யவில்லை என்று கூறுகிறது. வெனிசுவேலிய மக்களுக்கு இது ஒரு பொய் என்று நன்கு தெரியும். 20ம் நூற்றாண்டின் பெரும் பகுதியில் வெனிசுவேலா ஊழல்படிந்த உயரடுக்கினால், ஏகாதிபத்திய எண்ணெய் நலன்களுடன் இணைந்துள்ளதால் ஆளப்பட்டது. வெனிசுவேலா தேசிய விடுதலை மற்றும் சோசலிசத்திற்கு போராடும் ஒடுக்கப்பட்ட நாடு ஆகும்.

WSWS உடைய கூற்றான, ஷாவேஸ் ஒரு முதலாளித்துவ தேசியவாதி” என்பது தவறு மட்டுமின்றி, முக்கிய கருத்தைப் புறக்கணிப்பதும் ஆகும். 1914ல் லெனின் எழுதியது போல், “ஏதாவது ஒரு ஒடுக்குமுறைக்குள்ளான நாட்டின் பூர்சுவா தேசியவாதம் ஒடுக்குமுறைக்கு எதிராக இயக்கப்படுவதால் ஒரு பொது ஜனநாயக உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும். இந்த உள்ளடக்கத்திற்கு நாம் நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுக்க வேண்டும்.” சோசலிசத்தை நோக்கி செல்லும் இயக்கம் வெனிசுவேலிய ஒடுக்கப்பட்ட மக்களின் உந்துதலைக் கொண்டுள்ளது. அதன் வெளிப்பாடுதான் ஹ்யூகோ ஷாவேஸின் புரட்சிகரத் தலைமை. 

WSWS ஆனது ஷாவேஸுக்கு எங்கிருந்து ஆதரவு வருகிறது என்பதை அடையாளம் காணவில்லை. தொழிலாள வர்க்கம்தான் புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கினால் நேரடியாக தீவிரமயப்படுத்தப்பட்டு ஏகாதிபத்திய ஆதரவு உடைய ஆட்சி மாற்றத்தை 2002ல் தோற்கடித்து, கம்யூன்களின் வளர்ச்சி, சோசலிச ஜனநாயகத்தின் புதிய வடிவங்கள் வளர்ச்சி வரை செய்துள்ளது. WSWS, வெனிசுவேலாவில் வர்க்கப் போராட்டம், இலத்தீன் அமெரிக்கா முழுவதும் வர்க்கப் போராட்டம் உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஆழ்ந்த தன்மையினால் பாதிப்புடையும் என்று” கூறுவது சரிதான். ஆனால் சோசலிசத்திற்கான முன்னோக்கு தன்னுடைய ட்ரொட்ஸ்கிசப் போக்கின் உள்ளூர் கிளைகளை ஒவ்வொரு நாட்டிலும் நிறுவுவதின் மூலம்தான் என்று காண்கிறது. ஆனால் வெனிசுவேலிய மக்கள் யதார்த்தமான உலகில் போராடுகின்றனர். தங்கள் பெரும் தலைவரின் மடிவிற்குப் பின் போராட்டத்தை தொடர்கையில், அவர்களுக்கு சோசலிச கியூபா, இலத்தீன் அமெரிக்கா முழுவதுமுள்ள புரட்சிகர இயக்கங்களின் ஆதரவு உண்டு. பாலஸ்தீனத்தில் இருந்து கிரேக்கம் வரை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையுணர்வு இவர்களுக்கு உண்டு. வெனிசுவேலிலிய மக்களின் இச்சாதனைகளை தாக்குவதின் மூலம் WSWS சோசலிசத்தின் விரோதிகள் பக்கம்தான் சென்றடைகிறது.

LB