சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

25 years since Keerthi Balasuriya’s death


South Asia’s foremost Marxist of the second half of the 20th century

கீர்த்தி பாலசூரிய மறைந்து 25 ஆண்டுகள்
20 ஆம் நூற்றாண்டின் பின் பாதியில் தெற்காசியாவின் முதன்மையான மார்க்சிசவாதி

பாகம் இரண்டு

By Wije Dias
28 December 2012

use this version to print | Send feedback

பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்துக்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய முன்னெடுத்த அரசியல் போராட்டம் பற்றிய இரு பகுதி கட்டுரையின் இரண்டாவது பகுதி இங்கு பிரசுரமாகிறது. முதலாவது பாகம் தமிழில் 08-02-13 இல் பிரசுரமானது.
 புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (பு...) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கை பகுதியாக 1968ல் நிறுவப்பட்டது. மூன்று ஆண்டுகளாவதற்கு முன்னரே, 1970ல் ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி-லங்கா சமசமாஜ கட்சி-கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக, குட்டி முதலாளித்துவ மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ) தொடங்கிய சிங்கள கிராமப்புற இளைஞர்களின் எழுச்சியினால் இலங்கை ஒரு ஆழமான அரசியல் நெருக்கடியில் மூழ்கியது.
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கான போராட்டத்தின் ஒரு பாகமாக, ஜே.வி.பீ. யின் சிங்கள ஜனரஞ்சக அரசியல் மற்றும் அது ஆயுத போராட்டத்தை பரிந்துரைக்கின்றமை தொடர்பாக கீர்த்தி ஒரு நீண்ட விமர்சனத்தை எழுதினார். அது பு... செய்தித்தாளான கம்கறு மாவத்தையில் (தொழிலாளர் பாதை) தொடராக வெளிவந்தது. ஜே.வி.பீ.யின் தோற்றமும், பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பல்வேறு தமிழ் பிரிவினைவாத குழுக்களின் தோற்றமும், பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்துக்கான போராட்டத்தை லங்கா சமசமாஜ கட்சி (....) கைவிட்டதன் விளைவே ஆகும்.
ஜே.வி.பீ. உடனான வேறுபாடுகளை பகிரங்கமாக அறிவித்திருந்தாலும், புரட்சி கம்யூனிஸ்ட் கழகமானது தொடர்ந்து வந்த அரச அடக்குமுறை அலைக்கு எதிராக கிராமப்புற இளைஞர்களை பாதுகாத்தது. கூட்டணி அரசாங்கம் புரட்சி கம்யூனிஸ்ட் கழக வெளியீடுகளை தடை செய்ததால், கட்சி மறைமுகமாக செயற்படத் தள்ளப்பட்டது. லக்ஷ்மன் வீரகோன், எல்.ஜி. குணதாச ஆகிய இரு கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் கொல்லப்பட்டனர். ஆயினும் ல.ச.ச.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனக் கோரியதன் மூலம் அந்தக் கட்சிகளை அம்பலப்படுத்த புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
முழு இந்திய துணைக் கண்டமும் கொந்தளிப்பாக இருந்தது. இப்போது பங்களாதேஷான கிழக்கு பாக்கிஸ்தானில், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக 1971ல் ஒரு விடுதலைப் போராட்டம் வெடித்தது. கீர்த்தி உடனடியாக வரைந்த ஒரு அறிக்கையில், உள்ளூர் முதலாளித்துவத்துடன் கூட்டாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தினால் 1940 களின் இறுதியில் நிறுவப்பட்ட நடைமுறைக்கு ஒவ்வாத மற்றும் பிற்போக்கான தேசிய-அரசு முறைமையின் ஒரு விளைவே இந்த நெருக்கடி என விளக்கினார். வங்காளம் ஒரு முஸ்லீம் கிழக்குப் பாக்கிஸ்தானாகவும், இன்னொரு பகுதி ஒரு இந்து மேற்கு வங்காளமாக இந்தியாவின் ஒரு பகுதியாகவும் இனவாத அடிப்படையில் பிளக்கப்பட்டது.
புரட்சி கம்யூனிஸ்ட் கழக அறிக்கை, இந்திரா காந்தியின் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்களாதேஷ் மீதான பிற்போக்கு இந்திய இராணுவத் தலையீட்டை எதிர்த்தது. "நாம், கிழக்கு வங்காளத்தை விடுவிப்பவர்கள் என்ற இந்திய முதலாளித்துவத்தின் கூற்றை நிராகரிக்குமாறு இந்திய தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்கிறோம். கிழக்கு வங்காளத்தில் இந்தியாவின் ஆயுதத் தலையீட்டிற்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே உள்ளது என ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அறிவிக்கின்றனர். அது, பங்களாதேஷுக்கான போராட்டம், வங்காளம் முழுவதும் ஒரு புரட்சிகர அடிப்படையிலான ஐக்கியத்துக்கான போராட்டமாக உருவாகுவதை தடுப்பதே ஆகும்," என அந்த அறிக்கை தெரிவித்தது.
தெற்காசியாவில் முதலாளித்துவ ஆட்சியின் முந்தைய 25 ஆண்டுகளைப் பற்றிய ஒரு இருப்புநிலை அறிக்கையை வரைந்த புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் அறிவித்ததாவது: வரலாற்றுப் பணிகளின் எதிரில் அவர்களின் (இந்திய முதலாளித்துவத்தின்) வங்குரோத்தானது, "நசுக்கி ஒடுக்கப்படுகின்ற கிராமப்புற வறியவர்களையும் தம் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு, சோசலிசப் புரட்சியின் பணிகளின் ஒரு பகுதியாக தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும், என்ற ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சிக் கோட்பாட்டின் பிரதான முடிவையே நிரூபிக்கின்றது.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்குத் தெரியாமல், பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் (எஸ்.எல்.எல்.) தலைவர் எம். பண்டா இந்திய இராணுவ தலையீட்டை ஆதரித்து ஒரு அறிக்கையை எழுதியிருந்தார். எஸ்.எல்.எல். செய்திதாள் வேர்கர்ஸ் பிரெஸ் கொழும்புக்கு கிடைத்தபோது, உடனடியாக அந்த நிலைப்பாட்டை எதிர்த்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளர் கிளிஃப் சுலோட்டருக்கு கடிதம் எழுதிய கீர்த்தி, இந்திய தலையீடானது கிழக்கு மற்றும் மேற்கு வங்கத்தில் தொழிலாளர்களின் எந்தவொரு ஐக்கியப்பட்ட போராட்டத்தையும் நசுக்குவதற்கும் மற்றும் 1947-48ல் நிறுவப்பட்ட பிற்போக்கு அரச அமைப்பை நிலைநிறுத்துவதற்குமான முயற்சியாகும் என்று சுட்டிக்காட்டினார். எனினும், ஒரு பூரணமான சர்வதேசியவாதியான கீர்த்தி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு, புரட்சி கம்யூனிஸ்ட் கழக அறிக்கையை விலக்கிக்கொண்டார். "உலக கட்சிக்குள் விளக்கங்களே மிக முக்கியமான விஷயமாகும்," என்று அவர் எழுதினார். ஆனால், எஸ்.எல்.எல். இந்தப் பிரச்சினை குறித்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்வே இல்லை. இது, குறிப்பாக நிரந்தர புரட்சிக் கோட்பாட்டினை எஸ்.எல்.எல். கைவிட்டதில் வெளிப்படுத்தப்பட்ட அதன் அரசியல் பின்வாங்கலின் மற்றொரு அறிகுறியாகும்.
எஸ்.எல்.எல். இலங்கை தேசிய பிரச்சினை சம்பந்தமாகவும் கணிசமான அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. கூட்டணி அரசாங்கத்தின் தமிழர்-விரோத பாகுபாடு, தீவின் தமிழ் சிறுபான்மையினர் மத்தியில் பரந்த எதிர்ப்பை உருவாக்கியிருந்ததுடன் ஆயுதமேந்திய பிரிவினைவாத குழுக்களும் தோன்றின. 1972 ஆம் ஆண்டு கொழும்புக்கு கிளிஃப் சுலோட்டர் விஜயம் செய்திருந்த போது, புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். சுலோட்டரின் எதிர்ப்பு, சிங்களம் மற்றும் தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதன் தேவையில் இருந்து எழவில்லை, மாறாக, 1948ல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை அரசு ஒரு "முற்போக்கான பண்பைக் கொண்டுள்ளது என்ற தவறான நிலைப்பாட்டில் இருந்தே ஊற்றெடுத்தது. 1948ல், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் (BLPI) ட்ரொட்ஸ்கிஸ்டுகள், இந்தியா மற்றும் இலங்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ சுதந்திரத்தை போலியானது என எதிர்த்தனர்.
1970 களின் பிற்பகுதியில், சோசலிச தொழிலாளர் கழகத்துக்கு அடுத்ததாக அமைக்கப்பட்ட தொழிலாளர் புரட்சி கட்சி (WRP), வெளிப்படையாக முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் மற்றும் மத்திய கிழக்கில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) போன்ற குழுக்களுக்கும் அடிபணிந்தது. இலங்கையில், தொழிலாளர் புரட்சி கட்சி தலைமைத்துவம், 180 பாகை வளைந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் எந்தவித கலந்துரையாடலும் இன்றி, "தமிழ் விடுதலை போராட்டத்துக்கும்" மற்றும் புலிகளுக்கும் விமர்சனமற்ற ஆதரவு கொடுக்குமாறு புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்திற்கு உத்தரவிட்டது. சுலோட்டரின் முந்தைய நிலைப்பாட்டில் போல், தொழிலாளர் புரட்சி கட்சி முதலாளித்துவ சார்பு பிரிவுகளின் பக்கம் திசையமைவு கொண்டது.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதம் புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்திற்கு அரசியல் சிக்கல்களை உருவாக்கிவிட்ட போதிலும், கட்சியின் வேலைத் திட்டம் எப்போதும் தொழிலாள வர்க்கத்தை நோக்கி இயக்கப்பட்டது. புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் தைரியத்தோடு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறையை எதிர்த்ததுடன் 1983ல் வெடித்த உள்நாட்டுப் போரையும் எதிர்த்ததோடு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகவும் சோசலிச கொள்கைகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையாக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமா அணிதிரட்டுவதே ஒரே தீர்வாகும் என அது வலியுறுத்தியது.

கீர்த்தியின் சர்வதேசியவாத நோக்கு, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாத தலைமைத்துவத்துடனான 1985-86 பிளவுடன் முன்னணிக்கு வந்தது. மத்திய கிழக்கில் முதலாளித்துவ ஆட்சிகள் தொடர்பான விடயத்தில், நிரந்தர புரட்சிக் கோட்பாட்டை அது கைவிட்டமை உட்பட, தொழிலாளர் புரட்சி கட்சியின் அரசியல் சம்பந்தமாக வேர்க்கர்ஸ் லீக்கின் (தொழிலாளர் கழகம்) தேசியச் செயலாளர் டேவிட் நோர்த் அபிவிருத்தி செய்த விமர்சனங்களுடன் கீர்த்தி உடனடியாக உடன்பட்டார். புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், பப்லோவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தில் உள்ளடங்குகிற கொள்கைகளை பாதுகாப்பதில், வேர்கர்ஸ் லீக்குடனும் அதேபோல் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் மற்றும் ஆஸ்திரேலிய பிரிவுகளுடனும் இணைந்து கொண்டது.
பிளவின் பின்னர், புதுவலிமை பெற்ற கீர்த்தி, தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியான ஒரு காலமாக அந்த காலத்தை விவரித்தார். அவரால் தனது சர்வதேச சக சிந்தனையாளர்களுடன் சுதந்திரமாக ஒத்துழைக்க முடிந்தது --அனைத்துலகக் குழுவில் தொழிலாளர் புரட்சிக் கட்சி ஆதிக்கம் செலுத்திய காலத்தில் அது முடியாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் அரசியல் ஆவணங்களை வரைவதில் டேவிட் நோர்த்துடன் நெருக்கமாக இயங்கினார். தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமாக தொழிலாளர் புரட்சிக் கட்சியின்  சந்தர்ப்பவாத திருப்பங்கள் மற்றும் வளைவுகள் பற்றியும் மற்றும் புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தை அழிக்கும் நோக்கிலான அதன் அரசியல் ஆத்திரமூட்டல்கள் பற்றியும் ஒரு விரிவான ஆய்வை அவர் எழுதினார்.

இலங்கையில், உள்நாட்டு போர் காரணமாக ஆழ்ந்த நெருக்கடியை எதிர்கொண்ட அரசாங்கம், உதவிக்காக இந்தியாவின் பக்கம் திரும்பியது. ஜூலை 1987ல் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம், "அமைதிப் படை" என்ற பெயரில் தீவின் வடக்கில் போர் நிறுத்தத்தை மேற்பார்வை செய்ய  இந்திய படைகள் நுழைவதற்கு வழிவகுத்தது. பங்களாதேஷ் பிரச்சினையைப் போலவே, தென் இந்தியாவில் அமைதியின்மையை தூண்ட அச்சுறுத்திய தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்கி, கொழும்பில் இந்திய செல்வாக்கை வலுப்படுத்துவதாகவே இந்திய தலையீட்டின் முயற்சி இருந்தது.
கீர்த்தி, நோர்த்துடன் இணைந்து பணியாற்றிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இறுதி அறிக்கை, தமிழ் மக்களின் போராட்டம் வெடிப்பதற்கு வழிவகுத்த மற்றும் அதன் பின்னால் இந்திய இராணுவத் தலையீட்டுக்கு களம் அமைத்த, முதலாளித்துவ ஆட்சியின் முன்கண்டிராத நெருக்கடியின் வரலாற்று வேர்களை விளக்கியது. அது தேசிய பிரச்சினையை தீர்ப்பது சம்பந்தமாக பாட்டாளி வர்க்க சர்வதேசியப் பாதையை விளக்கியதோடு, தெற்காசிய ஐக்கிய சோசலிச அரசுகளின் பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்தில் சிங்கள, தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தியது.
கீர்த்தி மரணமடைவதற்கு ஒரு மாதம் முன் எழுதப்பட்ட அறிக்கையிலும், ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு பரந்த ஐக்கியப்பட்ட போராட்டத்துக்கு மாறாக, மேலும் மேலும் தேசிய மற்றும் இனப் பிரிவினையை தங்கள் அடித்தளமாகக் கொள்ளும் பல்வேறு "தேசிய விடுதலை" அமைப்புக்களில், சர்வதேச அளவில் இடம்பெறும் மாற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த அறிக்கை, முன்பு இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காக மார்க்சிச இயக்கங்கள் அளித்த ஆதரவு பற்றி, அனைத்துலக குழுவினுள் ஒரு நிதானமான மறுபரிசீலனை இடம்பெறுவதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
கீர்த்தி பாலசூரியாவின் அகால மரணம் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும் ஒரு பெரும் அடியாக இருந்தாலும், அவரது மரபுரிமைகள் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு விலைமதிப்பற்றதாக இருந்து வருகின்றது. இப்போது மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் புதிய தலைமுறை போராட்டத்துக்கு வருகின்ற நிலையில், அவரது வாழ்க்கை மற்றும் பணிகள், திவாலான இலாப அமைப்பு முறைமையை தூக்கிவீசுவதற்காக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தில் கிரகித்துக்கொள்ளப்பட வேண்டிய மரபுரிமைகளின் பாகங்களாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, நிரந்தரப் புரட்சி தத்துவத்தை கீர்த்தி விட்டுக் கொடுக்காது பாதுகாத்தமை, அக்கறையுடைய புரட்சியாளர்கள் கிரகித்துக்கொள்ள வேண்டிய ஆழமான படிப்பினைகளை உள்ளடக்கிக்கொண்டுள்ளது