சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

US steps up Pakistan drone murders amid crackdown over school attack

பள்ளிக்கூட தாக்குதல் மீதான ஒடுக்குமுறைக்கு இடையே, பாகிஸ்தான் டிரோன் படுகொலைகளை அமெரிக்கா அதிகரிக்கிறது

By Alex Lantier
27 December 2014

Use this version to printSend feedback

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் ஒரு தொலைதூர மற்றும் வறிய பகுதியான வடக்கு வஜிரிஸ்தானில் நடத்தப்பட்ட இரண்டு டிரொன் தாக்குதல்களில் நேற்று எட்டு பேர் உயிரிழந்தனர்.

அது, சர்வதேச சட்டத்தை மீறுவதால், உலகெங்கிலும் பாரியளவில் மக்களால் ஆழ்ந்த வஞ்சக நடவடிக்கையாக பார்க்கப்படுவதால் ஐக்கிய நாடுகள் சபையால் கண்டிக்கப்பட்டுள்ள போதினும், அமெரிக்க அதிகாரிகளோ வாஷிங்டனின் காட்டுமிராண்டித்தனமான டிரோன் படுகொலை திட்டத்தைக் குறித்து விவாதிக்கவே பெரிதும் மனமின்றி உள்ளனர். அமெரிக்க அதிகாரிகள் அவ்விரு தாக்குதல்கள் குறித்து கருத்துரைக்க மறுத்துவிட்டனர். இருப்பினும் பாகிஸ்தானிய உளவுத்துறை அதிகாரிகள் வடக்கு வஜிரிஸ்தானின் இரண்டு தாக்குதல்களுமே டிரோன் தாக்குதல்கள் என்பதை உறுதிப்படுத்தினர்.

பாகிஸ்தானிய தாலிபானுக்கு சேவை செய்துவருவதாக சந்தேகிக்கப்படும் ஒரு தளத்தின் சுற்றுச்சுவரை தாக்கிய ஒரு தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டனர், இந்த குழு தான் டிசம்பர் 6 அன்று 150 பேர் கொல்லப்பட்ட பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலை நடத்தி இருந்தது. அடுத்த தாக்குதல் அல் கொய்தா உடன் இணைப்பு கொண்ட உஜ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தை (IMU) சேர்ந்தவர்களாக குற்றஞ்சாட்டப்படும் மூன்று பேரைக் கொன்றது.

பாகிஸ்தானிய உளவுத்துறை, டிரோன் தாக்குதலில் பலியானவர்கள் அனைவரையும் இழிவார்ந்த விதத்தில் "பயங்கரவாதிகள்" என்று குறிப்பிடுகிறது, மேலும் தாக்குதலில் பலியானவர்கள் பாகிஸ்தான் தாலிபானையோ அல்லது IMUவையோ சேர்ந்தவர்கள் என்ற அவர்களின் கருத்துக்களை சுதந்திரமாக சரிபார்ப்பதும் சாத்தியமில்லை.

வாஷிங்டன் ஆப்கானிஸ்தானில் நேட்டோ ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பை நசுக்க முனைந்துள்ள நிலையில், வடக்கு வஜிரிஸ்தான் தீவிரமான டிரோன் போர்முறைகளின் இலக்காக இருந்து வருகிறது. பள்ளிக்கூடங்கள், பண்ணைவீடுகள், மரண ஊர்வலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மருத்துவ உதவி குழுக்கள் ஏனைய அமெரிக்க டிரோன் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு உதவ விரைந்துள்ளது.

2014இன் முதல் பாதியில், வாஷிங்டன் அதன் டிரோன் படுகொலை திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது, அத்திட்டத்தால் பாகிஸ்தானில் 2,200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன், அது அமெரிக்க போர் நடவடிக்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பையும், வாஷிங்டன் மற்றும் இஸ்லாமாபாத்திற்கு இடையே பிளவுகளையும் மற்றும் பாகிஸ்தானுக்குள் பாரிய போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதற்கு தூண்டுதலாக இருந்தது. எவ்வாறிருந்த போதினும், அமெரிக்க டிரோன் தாக்குதல்கள், வடக்கு வஜிரிஸ்தானில் தாலிபான் போராளிகளுக்கு எதிராக ஜூனில் பாகிஸ்தான் இராணுவம் அதன் ஜர்ப்--அஜ்ப் (Zarb-i-Azb) நடவடிக்கையைத் தொடங்கிய இருந்த நிலையில், மீண்டும் தொடங்கப்பட்டன. பாகிஸ்தான் இராணுவம் அப்பிராந்தியத்தில் தங்கி இருப்பவர்கள் எவரை வேண்டுமாயினும் பயங்கரவாதிகளாக கையாளுமென எச்சரித்த பின்னர், மக்கள்தொகையில் அறுபது சதவீதம் பேர், அதாவது, பல நூறு ஆயிரம் மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறினர்.

அப்போதிருந்து அங்கே சுமார் இரண்டு டஜன் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன, அத்துடன் பெஷாவரில் உள்ள இராணுவத்தால் நடத்தப்படும் ஒரு அரசுப்பள்ளிக்கூடத்தின் மீது டிசம்பர் 6இல் பாகிஸ்தானிய தாலிபானால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க டிரோன் படுகொலைகளின் வேகம் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த சனியன்று, வஜிரிஸ்தானின் தட்டா கெல் நகரில் நடந்த மற்றொரு டிரோன் தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டனர். வியாழனன்று நடத்தப்பட்ட மற்றொரு பிரத்யேக நடவடிக்கையில், பாகிஸ்தானிய இராணுவம் அவர்கள் "சதாம்" என்று அடையாளம் காணும் ஒருவரைக் கொன்றது, அவர் பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலைத் திட்டமிடுவதிலும் மற்றும் ஒருங்கிணைப்பதிலும் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமாக வேலை செய்து கொண்டு, பாகிஸ்தான் ஆட்சி, இராணுவ ஆட்சியைத் திணிக்க முற்றிலும் பெயரளவில் பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலைக் பற்றி வருகிறது. செவ்வாயன்று, ஆப்கானிஸ்தானின் நேட்டோ ஆக்கிரமிப்பு படைகளின் அமெரிக்க தளபதி ஜெனரல் ஜோன் எஃப். கேம்ப்பெல், நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஆப்கான் இராணுவ தலைமை தளபதி ஜெனரல் ஷெர் மொஹம்மது கரீமி உடன் இஸ்லாமாபாத்திற்கு வந்தார்.

அவர்கள் சென்றதற்குப் பின்னர், பெஷாவர் தாக்குதலுக்குப் பின்னர் கொண்டு வரப்பட்ட தேசிய செயல் திட்டத்தின் (National Action Plan) பாகமாக உடனடியாக அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்காக பல கடுமையான முறைமைகள் அறிவிக்கப்பட்டன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தானிய ஆளும் மேற்தட்டு வழங்கும் ஒத்துழைப்புக்கு எழும் அனைத்து எதிர்ப்புகளையும் மௌனமாக்க, ஓர் அடக்குமுறை ஆட்சியை நிறுவுவதே அவர்களது நோக்கமாக உள்ளது.

கடந்த புதனன்று, பாகிஸ்தானிய பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப் அவரது அரசாங்கத்தின் நாள் முழுவதுமான கூட்டமொன்றை நடத்திய பின்னர், அவர் பயங்கரவாத வழங்குகளை விசாரிக்க இராணுவ தீர்ப்பாயங்களை அமைத்தார். இது துல்லியமாக படைத்துறைசாரா நீதிவிசாரணை முறையை நிராகரிக்கிறது. படைத்துறைசாரா நீதிவிசாரணை முறையின் அதிகாரிகள் இராணுவம் மற்றும் அரசு நிர்வாகிகள் அமெரிக்க போர் நடவடிக்கைகளுடன் ஒத்துழைப்பதற்கு எதிரான போராட்டங்களில் சம்பந்தப்பட்டிருந்தனர்.

அதற்கடுத்த இரண்டு நாட்களில், அவர்கள் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களைக் கொண்டு பாகிஸ்தான் எங்கிலும் 6,500 மக்களை பாரியளவில் சுற்றி வளைப்பதற்குரிய மற்றும் பாகிஸ்தானிய சிறைச்சாலைகளில் உள்ள 500 பேருக்கு மொத்தமாக மரண தண்டனை விதிப்பதற்குரிய ஒரு திட்டத்தை அறிவித்தனர். அதுபோன்ற நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மத்திய பயங்கரவாத-எதிர்ப்பு படையால், பலம்வாய்ந்த பாகிஸ்தானிய இராணுவ உளவுத்துறை முகமை அத்துடன் மக்கள் காவல் படைகளுடன் சேர்ந்து வேலை செய்து நடத்தப்பட உள்ளது.

ஓர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி லால் மஸ்ஜித் மசூதியின் ஒரு மதகுரு, அப்துல் அஜீஜிற்கு பிணையளிப்பு இல்லாத பிடியாணை பிறப்பித்தார், அவர் பெஷாவர் பள்ளிக்கூட படுகொலைகளைக் கண்டிக்க மறுத்திருந்தார்.

ஷெரீப் அரசாங்கம் ஊடகம் மற்றும் நிதியியல் அமைப்புமுறையின் மீதும் கடுமையான பாரிய நடவடிக்கைகளை நடத்தி வருகிறது. “ஆத்திரத்தைத் தூண்டும் விடயங்களை" பிரசுரிப்பது தடுக்கப்படுமென்றும், சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதென்றும் அது அறிவித்தது. இதற்கிடையே பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதியளிப்பதில் சம்பந்தப்பட்டதாக கருதப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்க பாகிஸ்தானின் ஸ்டேட் பாங்கிற்கு அறிவுறுத்தப்பட்டது.

எதிலெல்லாம் உடன்பாடு ஏற்படுகிறதோ அதில் நாம் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அதை நாம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்று ஷெரீப் அறிவித்தார், அவர் இராணுவ நீதிமன்றங்களை அமைக்கும் முடிவை பாகிஸ்தானின் "வரலாற்று தருணம்" என்று பாராட்டினார்.

எதிர்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் இராணுவ தீர்ப்பாயங்களை அமைக்க கூறிவந்த எதிர்-ஆலோசனைகளை உடனடியாக கைவிட்டு, அது ஷெரீப்பின் நிலைப்பாட்டுடன் அணி சேர்ந்தது. மூத்த PPP நிர்வாகி அட்ஜாஜ் அஹ்சாஜ் கூறுகையில், “நாங்கள் பயங்கரவாதிகளை வேகமாக தண்டிப்பதற்காக செயல்படுகிறோம், மேலும் இராணுவ நீதிமன்றங்களுக்கான வரைவு சட்டமசோதா எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டால், எங்களால் ஓர் அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்புக்குள் ஒரு வழியைக் காண முடியும்,” என்றார்.

பலுசிஸ்தான் தேசிய கட்சியின் ஹாசில் பிஜென்ஜோவும் இராணுவ நீதிமன்றங்களுக்கான முனைவைப் பாராட்டினார், “அந்த மனோபாவத்திற்கு எதிராக நாம் சண்டையிட வேண்டும், இப்போதைய நிலையில் நாம் நின்று போனால் அது நிரந்தர தோல்வியில் போய் முடியும். நாம் தோற்றோமானால், அடுத்த ஆட்சியாளர்கள் தாலிபான்களாக தான் இருப்பார்கள்.”

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (காயிதே--அஜாம் குழு - Quaid-i-Azam group) செனட்டர் முஷாஹித் ஹூசன் அந்த முறைமைகளை வரவேற்றதுடன், வாஷிங்டனிடமிருந்து அவர் எதிர்பார்த்த ஆதரவையும் குறிப்பிட்டுக் காட்டினார். “நான் முழுமையாக இந்த நகர்வை ஆதரிக்கிறேன்; அமெரிக்காவும் கடந்த காலத்தில் இதையே தான் செய்துள்ளது,” என்று தெரிவித்த அவர், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் அன்னிய நாடுகளில் கைது செய்யப்பட்ட மக்கள் மீது வழக்குத் தொடுக்க வாஷிங்டன் இராணுவ தீர்ப்பாயங்களைப் பிரயோகித்ததை வெளிப்படையாக குறிப்பிட்டுக் காட்டினார்.

பாகிஸ்தான் இராணுவ ஆட்சியை நோக்கிய சாய்வதை நேட்டோ அதிகாரங்கள் ஊக்குவிப்பதும் மற்றும் அமெரிக்க டிரோன் படுகொலைகளும், ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கையின் பரந்த குற்றகரத்தன்மையை நிரூபிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் அவர்களின் நவ காலனித்துவ யுத்தத்திற்குப் பரந்த எதிர்ப்பை நசுக்கவும் மற்றும் பாகிஸ்தானில் அவர்களது நாடிதளர்ந்த வாடிக்கையாளர் அரசை ஆதரிக்கவும், அவை எந்தவிதமான நீதித்துறை நிகழ்முறையின் கட்டமைப்புக்குள்ளும் சிக்காதவாறு படுகொலை மற்றும் பயங்கரத்தைப் புகலிடமாக ஏற்று வருகின்றன.

குறிப்பாக ஒபாமா அவருக்கு முன்னர் இருந்த ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷின் குற்றகரமான கொள்கைகளை தொடர்ந்து கொண்டு, அவற்றைத் தீவிரப்படுத்தி உள்ளார். இந்த வாரம், அமெரிக்க மற்றும் உலக மக்களே சிஐஏ பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக குற்றஞ்சாட்டியவர்களுக்கு எதிராக அது பிரயோகித்திருந்த பரந்த சித்திரவதையை அமெரிக்க செனட் அறிக்கை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியதைக் கண்டது. அந்த அறிக்கை புஷ் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக குற்றகர குற்றச்சாட்டுக்களை கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டியது.

ஆனால் ஒபாமா நிர்வாகமோ பயங்கரவாதத்தின் கீழ் சந்தேகப்பட்டவர்களைக் கைது செய்வது மற்றும் விசாரணை செய்வதைத் தவிர்க்கும் முயற்சியாக, அவர்களை டிரோன் தாக்குதல்கள் மூலமாக, விசாரணையின்றி, ஒரேயடியாக படுகொலை செய்து வருவதன் மூலமாக, அதற்கு முன்னர் இருந்தவரின் குற்றகரத்தன்மையோடு சேர்ந்து கொண்டுள்ளது. ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவின் வான்வழி படுகொலை படைப்பிரிவுகளுக்கான "கொலை பட்டியல்கள்" வரைவதைத் தனிப்பட்டரீதியில் மேற்பார்வை செய்தார், வெள்ளை மாளிகையில் நடந்த அந்த கூட்டம் "பயங்கரவாத செவ்வாய்" என்று கூறப்பட்டது. கடந்த ஆண்டு அட்டார்னி ஜெனரல் ஹோல்டரே கூட, டிரோன் தாக்குதல்கள் அமெரிக்காவிற்குள் அமெரிக்க குடிமக்களை கூடுதல் அதிகாரத்தின் கீழ் கொல்வதற்கும் பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கி இருந்தார்.

ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை, இரகசியமாக மூடிமறைக்கப்பட்டிருந்தன அதுவே வெள்ளை மாளிகையில் தற்போது பதவியில் அமர்ந்திருப்பவருக்கு எதிராக குற்றகரமான குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வர கோருகிறது. எவ்வாறிருந்த போதினும் பகிரங்கமாக உள்ள குறைந்த தகவல்களே கூட கூடுதல் அதிகாரத்தின் கீழ் நடத்தப்பட்ட டிரோன் படுகொலைகள் பாரிய அப்பாவி மக்களின் இழப்புக்கு இட்டுச் சென்றுள்ளதைத் தெளிவுபடுத்துகின்றன.

நீங்கள் ஒருபோதும் இரண்டுமுறை சாவதில்லை: அமெரிக்க டிரோன் திட்டத்தில் பலமுறை கொல்லப்படுகிறார்கள்,” என்று தலைப்பிட்ட ஒரு சமீபத்திய அறிக்கையில், பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் கழகம் Reprieve, பாகிஸ்தான் மற்றும் யேமனில் பயங்கரவாதிகள் என்று சந்தேகத்திற்குரிய 41 பேரை இலக்கில் கொண்ட அமெரிக்க டிரோன் தாக்குதல்கள், 1,147 பேரின் இறப்புக்கு இட்டுச் சென்றுள்ளது. சந்தேகத்திற்குரிய ஒவ்வொருவரும் சராசரியாக மூன்று முறை "கொல்லப்பட்டனர்", அத்துடன் சந்தேகிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஏழு முறை டிரோன் படுகொலையின் இலக்கில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பீடு செய்தது.

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பின்னர் அல் கொய்தாவின் தலைமையை ஏற்றுள்ளதாக செய்திகளில் கூறப்பட்ட, அய்மன் அல் ஜவாஹிரிக்கு எதிரான சிஐஏ'இன் வெற்றிபெறாத தாக்குதல்கள், 76 குழந்தைகள் மற்றும் 29 பெரியர்கள் உட்பட குறைந்தபட்சம் 105 மக்களின் இறப்புக்கு இட்டுச் சென்றது. இத்தகைய தாக்குதல்கள் தோல்வி அடைந்ததுடன், ஜவாஹிரி இன்னமும் உயிருடன் தான் இருக்கிறார்.