தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Corbyn opens door to Labour backing for British bombing of Syria சிரியாவில் பிரிட்டிஷ் குண்டுவீச்சுக்கு தொழிற் கட்சி ஆதரவளிப்பதற்கு கோர்பின் பச்சைக் கொடி காட்டுகிறார்Chris
Marsden Use this version to print| Send feedback சிரியாவில் குண்டுவீச்சு நடவடிக்கைகளில் ஐக்கிய இராச்சியம் (UK) பங்குபெறுவது குறித்த விடயத்தில் சுதந்திரமாக வாக்களிப்பதை அனுமதிக்க தொழிற் கட்சியின் தலைவரான ஜெர்ரெமி கோர்பின் முடிவு செய்துள்ளமையானது கட்சியின் வலது-சாரி, போர்-ஆதரவு சக்திகளிடமான அவரது முழுமையான சரணாகதியாகும். தொழிற் கட்சி எம்.பி.க்களின் ஆதரவு இல்லாமல் கன்சர்வேடிவ் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு பெரும்பான்மை இல்லை என்ற நிலையில், “கருத்தொற்றுமை” இருந்தால் மட்டுமே தான் வாக்கெடுப்பு வரை செல்லவிருப்பதாக அவர் கூறியிருக்கும் சமயத்தில், புதன்கிழமையன்று “வேண்டும்” வாக்குமுடிவை உறுதிசெய்வதற்கு அவசியமான அனைத்தையும் கோர்பின் செய்திருக்கிறார். ISIS ஐ தோற்கடிப்பதான சாக்கில் சிரியா மீதான குண்டுவீச்சினை நீட்டிப்பதற்கு குறைந்தபட்சம் 15 டோரி எம்.பி.க்களேனும் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. இப்போது, “கருத்தொற்றுமை”யாக கூறப்படக்கூடிய ஒன்றை கேமரூனுக்கு தட்டில் வைத்துக் கொடுத்திருக்கிறார் கோர்பின். தொழிற் கட்சித் தலைவர் கட்சியின் கட்டுப்பாட்டு உத்தரவை பிறப்பித்திருந்தார் என்றால், குண்டுவீச்சுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடிய எவரும் கட்சியை மறுதலித்துத் தான் அவ்வாறு செய்யும்படி ஆகியிருக்கும். அதற்கு மாறாய், இன்னும் அதிகமான எம்.பி.க்கள் - கண்டிக்கப்படுவதில் இருந்தான சுதந்திரத்துடன் - கேமரூனின் கொள்கைக்கு ஆதரவளிப்பதற்கு கோர்பின் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். தொழிற் கட்சியின் 100 எம்.பி.க்கள் வரை தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று டோரிக்கள் இப்போது தம்பட்டமடித்து வருகிறார்கள். கோர்பினது அறிவிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கை-எதிர்ப்பு மற்றும் போர்-எதிர்ப்பு நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செப்டம்பரில் ஒரு மிகப்பெரும் வெற்றியின் மூலமாக கட்சியின் தலைமைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக கட்சியில் 300,000 பேர் கையெழுத்திட்டதாக கூறப்பட்டது. ஆயினும், ஒவ்வொரு முக்கியமான திருப்பகாலத்தின் போதும், கோர்பின், நாடாளுமன்றத்தின் தொழிற் கட்சி உறுப்பினர்களிடையேயும் அதன் உள்ளூர் அரசாங்க எந்திரத்திலும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய இராணுவவாத, வணிக-ஆதரவு, தொழிலாளவர்க்க-விரோத சூழ்ச்சிக் கூட்டம் ஒன்றுடன் ஐக்கியத்தை பராமரிக்கிறதான பேரில், தனக்கு கிடைத்த வாக்குகளைக் காட்டிக் கொடுத்து வந்திருக்கிறார். சிக்கலான சந்தர்ப்பங்களில் அவர் செய்து வந்திருக்கக் கூடிய அவமானகரமான பின்வாங்கல்கள் அத்தனையிலும் இது மிக அடிப்படையானதாகும். மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் சிரியாவில் இராணுவ நடவடிக்கையை எதிர்க்கின்றனர். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் “தெளிவான மற்றும் குழப்பமற்ற” ஆதரவு இல்லாமல் சிரியாவிலான நடவடிக்கையை கட்சி ஆதரிக்கப் போவதில்லை என்று தொழிற் கட்சியின் வருடாந்திர மாநாடு கூறியது. திங்கட்கிழமைக்கு முன்பு வரையிலும், வான்வழித் தாக்குதல்களுக்கு ஐ.நா ஆதரவு இருப்பதாக கேமரூன் காட்டியிருக்கவில்லை என்பதால், எம்.பி.க்கள் கட்சியின் கொள்கைக்கு முரணாக வாக்களிப்பதை அனுமதிக்கக் கூடிய ஒரு சுதந்திரமான வாக்களிப்பை தான் எதிர்ப்பதாக, கோர்பின் கூறிவந்தார். சிரியாவில் குண்டுவீசுவதற்கு எதிராய் வாக்களிப்பதற்கு எம்.பி.க்களுக்கு உத்தரவிடுகின்ற மூன்று-நிலை கட்டுப்பாட்டு உத்தரவை தான் யோசித்து வருவதைக் குறிப்பிடும்விதமாய், ஞாயிறன்று தொலைக்காட்சியில் “தலைவரே முடிவுசெய்கிறார்” என்று அறிவித்தார். அதன்பின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 100,000 பேரிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்துவதற்கு அவர் ஏற்பாடு செய்தார். அதில் 75 சதவீதம் பேர் வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராகவும் வெறும் 13 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர். முயற்சி செய்து “போரை நிறுத்துவதற்கு” எம்.பி.க்கள் மற்றும் அடிமட்ட ஆதரவாளர்களிடம் இருந்தான போதுமான ஆதரவு தனக்கு இருக்கிறது என்று நம்புவதாக அவர் தனது கூட்டணியினரிடம் கூறியிருந்தார் என்று கார்டியன் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. தொழிற் கட்சியின் மிகப்பெரும் நிதிஆதரவு வளமான Unite சங்கத்தின் தலைவரான லென் மெக்கிளஸ்கி நிழல் கேபினட்டின் உறுப்பினர்களை, “வெஸ்ட்மினிஸ்டர் அரண்மணைக் கவிழ்ப்பு மூலமாக தொழிற் கட்சியின் தலைவரை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் Unite ஆல் எதிர்க்கப்படும் என்பதோடு அநேக கட்சி உறுப்பினர்கள் மற்றும் இணைந்த சங்கங்களாலும் எதிர்க்கப்படும் என்றும் நம்புகிறேன்” என்று எச்சரித்திருந்தார். எல்லாமே காட்சிக்குத் தான். திரைக்குப் பின்னால், கோர்பின் ஏற்கனவே துணைத் தலைவரான டோம் வாட்சன் மற்றும் நிழல் வெளியுறவுச் செயலரான ஹிலாரி பென் ஆகிய, தனது நிழல் கேபினட்டில் வான் தாக்குதல்களுக்கு ஆதரவான பெரும்பான்மையானோரில் இருவருடன் இரகசிய விவாதங்களை செய்து விட்டிருந்தார். குண்டுவீச்சை எதிர்ப்பதே “கட்சியின் கொள்கை” என்ற கட்டாயப்படுத்தாத, ஆகவே அர்த்தமற்ற, ஒரு அறிக்கைக்குப் பிரதிபலனாக சுதந்திர வாக்களிப்புக்கு அவர் உடன்பட்டார். இங்கிலாந்தின் பெருவணிக ஊடகங்களுக்கு வெளியில் கொஞ்சமும் மக்கள்-ஆதரவற்ற இரத்தவேட்கை கொண்ட அரசியல்ரீதியாய் மதிப்பிழந்து போன ஒரு சிறுகுழுவின் முன்பாக கோர்பின் பல்டியடித்திருக்கிறார். அவரும் அவரது நிழல் சான்சலரான ஜான் மெக்டோனெல்லும் ”ஜனநாயகம்” குறித்துப் பேசி எம்.பி.க்களை “மனச்சாட்சிப்படி” வாக்களிக்க அனுமதித்ததன் மூலம், அவர் இதனைச் செய்திருக்கிறார். சுதந்திரமான வாக்களிப்பு “மக்கள் ஒன்றுபட்டு நிற்பதை”க் குறிப்பதாகும் என்று மெக்டோனெல் கூறினார். "ஜனநாயகம்” என்பது இப்போது கட்சி உறுப்பினர்களை மறுதலிப்பதற்கும், தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பங்களை மறுதலிப்பதற்கும், டோரிக்களுடன் வெளிப்படையாக சேர்ந்து வேலை செய்வதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை அகற்றுவதற்கான சட்ட நடவடிக்கையைக் கொண்டு மிரட்டுவதற்குமான உரிமை என்றாகி விட்டது. “மனச்சாட்சிக்கேற்ப வாக்களிப்பது” என்பது அது இல்லாமல் வாக்களிப்பது என்று அர்த்தமாகி விட்டது. நேற்றைய நிழல் கேபினட்டின் கூட்டம் இந்த விஷமத்தனமான அடுக்கு ஏற்றத்தில் செயல்படக் கண்டது. குண்டுவீச்சை எதிர்ப்பது தான் கட்சியின் கொள்கை என்ற கோர்பினின் நிலைப்பாடு “அபத்தமானது” என்று அவரை நோக்கி அது கூச்சலிட்டது. மாலையில் ஒட்டுமொத்த நாடாளுமன்ற தொழிற் கட்சியின் கூட்டம் சற்று வித்தியாசப்பட்டிருந்தது. வாக்கெடுப்புக்கு முன்னதாக இரண்டுநாள் விவாதமொன்றை வலியுறுத்தி கேமரூனுக்கு ஒரு கடிதம் எழுதுவதற்கு அதிகமான எந்த ஒரு வழியும் கோர்பினுக்கு விட்டுவைக்கப்படவில்லை. ஆனால் சில மணி நேரங்களிலேயே இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்ட கேமரூன், அதற்குப் பதிலாக புதனன்றான விவாதம் இன்னும் சில மணி நேரங்கள் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார். தொழிற் கட்சி சார்பில் விவாதத்தை நிறைவு செய்யும் உரிமை பென்னுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கட்சி உறுப்பினர்களுக்கு குரல் வழங்கி ஜனநாயக விவாதத்தின் ஒரு “புதிய அரசியலுக்கு” வலியுறுத்துவதன் மூலமாக சிக்கன நடவடிக்கை மற்றும் போர் எதிர்ப்புக்கான கருவியாக அமையும் வகையில் தொழிற் கட்சியை தானும் தனது ஆதரவாளர்களும் மாற்றிவிட முடியும் என்ற கோர்பினின் கூற்றுகளுக்கான – தொழிற் கட்சியின் “பன்முகத்தன்மை”க்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் அது மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதாக அவர் கூறியிருந்தார் - ஒரு தகர்த்தெறியும் மறுப்பினை நிகழ்வுகள் மீண்டுமொருமுறை வழங்கியிருக்கின்றன. அதற்கு மாறாய், தொழிற் கட்சியானது சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கான ஒரு கட்சியாகவே தொடர்ந்தும் இருந்து வருகிறது. 2014 செப்டம்பர் தொடங்கி ஈராக்கில் ராயல் விமானப்படை போட்டிருக்கக் கூடிய நூற்றுக்கணக்கான குண்டுகளைப் போலவே சிரியாவில் மழையெனப் பொழியவிருக்கும் குண்டுகளும் தொழிற் கட்சியின் குண்டுகளாகவே இருக்கப் போகிறது என்பதையே கேமரூனுக்கு அக்கட்சியின் ஆதரவு அர்த்தப்படுத்துகிறது. ஒரு புதிய தலைவரை அமர்த்துவதன் மூலமாக தொழிற் கட்சியின் அரசியல் அல்லது வர்க்க இயல்பு ஒருபோதும் மாறிவிடப் போவதில்லை. அது கட்சியின் முதலாளித்துவ-ஆதரவு வேலைத்திட்டத்தினாலும் அந்நிய முதலாளித்துவ போட்டியாளர்களிடமிருந்து மட்டுமன்றி கீழிருந்து தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வந்திருந்த அச்சுறுத்தல்களில் இருந்தும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிப்படையான நலன்களைப் பாதுகாத்து நின்றிருந்த அதன் ஒரு நூற்றாண்டு கால வரலாற்றினாலும் தீர்மானிக்கப்படுவதாகும். கோர்பினின் சுற்றிவளைத்த சீர்திருத்தவாத வாய்வீச்சு, கட்சி வலதுசாரிக் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான ஒரு அரசியல் மாற்றினை ஒருபோதும் வழங்கவில்லை. மாறாக, அவரை பதவிக்குக் கொண்டுவந்த சிக்கன நடவடிக்கை, இராணுவவாதம் மற்றும் போர் ஆகியவற்றுக்கு எதிரான குரோதமானது தொழிற் கட்சியின் வெறுக்கப்படும் தலைமைக்கு எதிரான ஒரு அரசியல் கிளர்ச்சியின் வடிவத்தை எடுத்துவிடுவதைத் தடுத்து நிறுத்துவதே அவரது வகிபாத்திரமாக இருந்து வந்திருக்கிறது. சொல்லப் போனால், கட்சியில் இவரது ஆதரவு இல்லாமல் போயிருந்தால், இன்னும் அவர்களை இவர் தனது நிழல் கேபினட்டில் சேர்த்துக் கொள்ளாது இருந்திருந்தால், பலரும் தங்களது உள்ளூர் கட்சிகளாலேயே தெரிவுகளில் இருந்து நீக்கப்பட்டிருப்பார்கள். கோர்பின் அம்பலப்பட்டிருப்பதானது, அவரது தலைமையானது தொழிற் கட்சியின் சாத்தியவாய்ப்புகளில் ஒரு அடிப்படையான திருப்புமுனையைக் குறித்து நின்றதாகப் பிரகடனம் செய்த பிரிட்டனது அத்தனை போலி-இடது குழுக்களின் மீதான ஒரு உலுக்கும் குற்றப்பத்திரிகையாகவும் இருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பாக Left Unity – தொழிற் கட்சிக்கான ஒரு மாற்றாக சொல்லப்பட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பாகத் தான் உருவாக்கப்பட்டிருந்த ஒரு கட்சி - தனது மாநாட்டில்,ஜெர்ரெமி கோர்பின் தலைமையிலான கட்சிக்கு எதிராய் இனியும் அது வேட்பாளர்களை நிறுத்தாது என்று அறிவித்தது. சனிக்கிழமையன்று, போரை நிறுத்துங்கள் கூட்டணி (Stop the War Coalition) சிரியாவில் குண்டுவீசப்படுவதற்கு எதிராய் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில், தொழிற் கட்சி எம்.பி.க்களை “ஜெர்ரெமி கோர்பினுக்குப் பின்னால் நிற்குமாறு” வலியுறுத்துவது தான் இந்த அமைப்பின் தலைவரான ஆண்ட்ரூ முர்ரே விடுத்த மையமான செய்தியாக அமைந்திருந்தது. இந்த அத்தனை போக்குகளுமே தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்கி போருக்குப் பாதை திறந்து விடும் குற்றத்திற்குரியவை ஆகும். போருக்கு எதிரான போராட்டமானது தொழிற்கட்சியின் மூலமாகவும் கோர்பினது தலைமையின் கீழும் முன்னெடுக்கப்பட இயலாது. அவரால் தனது கட்சியின் வலதுசாரிகளுக்கு எதிராக செயல்பட முடியாது ஏனென்றால் அவர்களது முதலாளித்துவ-ஆதரவு வேலைத்திட்டத்தை அவரும் பகிர்ந்து கொள்கிறார். சிக்கன நடவடிக்கையும் போரும் இந்த கூர்மையான நெருக்கடியின் சமயத்தில் முதலாளித்துவ அமைப்புமுறையின் தவிர்க்கவியலாத விளைபொருட்களாக இருக்கின்ற வேளையில், அவர் அவை தொடர்பான கொள்கையை மாற்றிக் கொள்வதற்கு ஆளும் வர்க்கத்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார். முதலாளித்துவம் தனது ஆபாசமான செல்வத்தைப் பராமரிப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்துவதன் மீதும் மில்லியன் கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் சமூகநல உதவிகளை அழிப்பதன் மீதும் தங்கியிருக்கிறது என்ற காரணத்தால் தான் அதற்கு சிக்கனநடவடிக்கை அவசியமாய் இருக்கிறது. பெரும் செல்வந்தர்களின் சார்பாக எண்ணெய் மற்றும் பிற மதிப்புமிக்க மற்றும் அத்தியாவசிய ஆதாரவளங்களைக் கைப்பற்றுவதற்கு ஏகாதிபத்திய சக்திகள் செய்கின்ற முனைப்பின் விளைபொருளே போராகும். முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் சோசலிசத்துக்கு ஆதரவாகவும் பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முனைகின்ற ஒரு புதிய பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே அவசியமாய் இருப்பதாகும். இந்தப் போராட்டத்திற்குத் தலைமை கொடுக்க சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவது அதற்கு அவசியமாக இருக்கிறது. |
|
|