ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

යාපනය සරසවියේ සිසු ගැටුම යොදාගෙන වර්ගවාදය උසිගැන්වීම හෙලාදකිනු!

இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் மோதலைப் பயன்படுத்தி இனவாதத்தை தூண்டுவதை கண்டனம் செய்!

Statement of the Socialist Equality Party and International Youth and Students for Social Equality (Sri Lanka)
23 July 2016

இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விழா ஒன்றின் போது, இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஜூலை 16 அன்று நடந்த மோதலை மிகைப்படுத்தி, தமிழர்-விரோத இனவாத ஆத்திரமூட்டல்களை தூண்டி விடுவதற்கு, அரசாங்கத்தின் பகுதியினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை சூழ்ந்துகொண்டுள்ள இனவாத கும்பலும் மேற்கொள்ளும் முயற்சி பற்றி, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ.இ.) அமைப்பும், தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கின்றன. இந்த பிரச்சாரத்தின் குறிக்கோள், ஏகாதிபத்திய சார்பு கொழும்பு அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட மக்களை இனவாதத்தில் பிளவுபடுத்தி முதலாளித்துவ வர்க்க ஆட்சியை பாதுகாப்பதே ஆகும்.

“புதிய மாணவர்களை வரவேற்பதற்காக” ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலத்தில், சிங்கள கண்டிய நடனம் ஒன்றை உள்ளடக்குவதை எதிர்த்த தமிழ் மாணவர் குழுவுக்கும், சிங்கள மாணவர் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு, கலகம் வரை சென்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிங்கள மாணவர்கள் ஆறு பேர், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிங்கள மாணவர்கள் சிலரின் முறைப்பாட்டின் படி, பொலிசாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பீட மாணவர் சங்கத்தின் தலைவர், கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மாணவர் குழுவினரே தாக்குதல் நடத்தினர் என குற்றம் சாட்டிக்கொண்டு, சிங்கள இனவாத தட்டினரும் ஊடகங்களும் முன்னெடுக்கும் பிரச்சாரத்துக்கு முண்டு கொடுத்து, சட்டத்தை நடைமுறை மற்றும் ஒழுக்க விசாரணை என்ற பெயரில், அரசாங்கத்தின் பின்னணியுடன் மாணவர்கள் மீதான வேட்டையாடல் முன்னெடுக்கப்படுகின்றது.

கண்டிய நடனத்தை நுழைக்கும் முயற்சியானது, திட்டமிட்டு செய்யப்பட்ட ஆத்திரமூட்டலாகும். அது மாணவர்கள் மத்தியில் உடன்பாடு இல்லாத விடயமாக இருந்ததோடு, இராணுவச் சிப்பாய்களே அங்கு மத்தளம் கொட்ட பயன்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதும் அம்பலத்துக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவம், சிங்கள மாணவர் அமைப்புடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் இந்த மோதல் வெடித்தமை தற்செயலானதல்ல. இது, சிங்கள இனவாத கும்பல்களும் இராணுவமும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத பதட்டங்களை தூண்ட மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாகும். இது, யாழ்ப்பாணத்தில் இராணுவ-பொலிஸ் உளவுச் சேவைகள், ஆத்திரமூட்டல்களை கிளறிவிடுமளவுக்கு பின்னணியில் இருந்து செயற்படக் கூடியதாக இருப்பதையே காட்டுகின்றது. யாழ்ப்பாண பல்கலைக் கழகம் அவர்களது அவதானிப்பில் உள்ள இடமாகும்.

இனவாத பிரச்சாரத்துக்கு முண்டு கொடுத்து, கொழும்பு டெலிகிராப் இணையத் தளம் சில நாட்களுக்கு முன்னர், “யாழ்ப்பாண பல்கலைக்கழக சிங்கள சங்கம், ஒரு தொகை துயரங்களையும் அவர்களுக்கு எதிரான சிங்கள-விரோத தாக்குதல்களையும் அம்பலப்படுத்துகிறது” (Jaffna University Sinhala Society expose series grievances and anti-Sinhala attacks on them) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிங்கள சங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன. அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட பௌத்த வேலைத்திட்டங்களுடன் இந்த சங்கம் மேற்கொண்ட வெளிப்படையான ஒரு நடவடிக்கை, மே மாதம் இனவாத போரைக் கொண்டாடியதாகும். “எமது நாட்டின் உண்மையான வீரர்கள் –யுத்த வெற்றிக்கு இன்று 7 ஆண்டுகள்” என அதற்கு தலைப்பிடப்பட்டிருந்தது.

இது, தடைகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட அப்பாவித்தனமான செயலாகவே அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அவை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இனவாத பதட்டங்களை உக்கிரமாக்குவதற்காக, அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இராணுவத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளின் மத்தியில் அதன் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டவையாகும்.

அரசாங்கதின் கூட்டுக் கட்சியான சிங்கள பேரினவாத ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சவரை அமைச்சருமான பாடலி சம்பிக ரணவக, இந்த சம்பவம் தொடர்பாக ஆகவும் விஷமத்தனமான கருத்தை வெளியிட்டார். தாக்குதலில் சம்பந்தம்பட்ட தமிழ் மாணவர்கள் “குற்றவாளிகள்” என்றும் “இந்த சம்பவம் புதிதாக ஒரு பிரபாகரனை உருவாக்கும் வேலை திட்டத்தின் ஆரம்பமாக இருக்கலாம்” என்றும் கூறிய ரணவக, “இத்தகைய சக்திகளை உடனடியாக அழிக்க வேண்டும் என” கூச்சலிட்டார். தமிழ் மாணவர்களை ஒடுக்குவதற்கு அழைப்புவிடுத்த அவர், “பகிடி வதை சம்பவம் தொடர்பாக களனிப் பல்கலைக்கழக மாணவிகள் கூட கைது செய்யப்பட்டுள்ளார்களெனில், சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை?” என கேட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை தளர்த்தி, தீவிரவாதம் தலை தூக்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளதாக இராஜபக்ஷவைச் சூழ்ந்துள்ள சிங்கள இனவாத கும்பல் குற்றம் சாட்டியுள்ளது. அதில் ஒருவரான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஊடக மாநாடு ஒன்றில், “இது மிகவும் பயங்கரமான நிலைமை, அத்தகைய நிலைமைக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார். அரசாங்கம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை தளர்த்தியுள்ளது என அவர் கூறும் கதை முற்றிலும் பொய்யானதாகும்.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களினால் அவப்பேறு பெற்றுள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார, “மூட நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கின்ற நாட்டில், இந்தளவு பொறுமை காக்கும் இனமும் மதத் தலைவர்களும் உலகத்தில் வேறு எங்கும் கிடையாது. அந்த பொறுமையை மீண்டும் சோதிக்க வேண்டாம்,” என இன்னுமொரு ஆத்திரமூட்டலுக்கு தயாராவதாக அச்சுறுத்தியவாறே கூறியிருக்கின்றார்.

இராஜபக்ஷ தனது கையாட்களைக் கொண்டு முன்னெடுக்கும் இனவாத பிரச்சாரத்தின் மூலம், அரசாங்கத்திற்கு எதிராக சவால் விடுப்பதுடன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வலதுசாரி இயக்கமொன்றை உருவாக்குவதற்கே முயற்சிக்கின்றார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.), ஏனைய இனவாதிகளுடன் தோளோடு தோள் நிற்பதாக வெளிப்படுத்துவதற்கு உடனடியாக முன்வந்துள்ளது. அதன் தலைவர் அணுர குமார திசாநாயக்க, தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது, வடக்கில் தீவிரவாதிகள் மத்தியில் இனவாத உணர்வு உயர்ந்த மட்டத்தில் இருப்பதை வெளிப்படுத்துகிறது, என புதன் கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இனவாத மோதலுக்கு தூண்டி விடுபவர்கள், முதலில் தாக்குதல் தொடுத்தவர்கள் தமிழ் மாணவர்களே எனக் கூச்சலிடுகின்றனர். இது முற்றிலும் வஞ்சத்தனமான கதையாகும். இவர்கள் அனைவருமே, இலங்கையில் தமிழ் மக்களை நசுக்கி கொழும்பு அரசாங்கம் முன்னெடுத்த 26 ஆண்டுகால போரின் பங்காளிகளாவர்.

முதலாளித்துவ கட்சிகளும் இனவாத கும்பல்களும், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட கறுப்பு ஜூலைக்கும் அதனுடன் தொடங்கிய யுத்தத்துக்கும் காரணம், 1983 ஜூலையில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவச் சிப்பாய்கள் 13 பேரை கன்ணி வெடிவைத்து கொலை செய்ததே, எனக் கூறினர். இது பொய்யாகும். 1948ல் தொடங்கி தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக முன்னெடுத்த ஒரு தொகை இனவாத பாரபட்சங்கள், ஆத்திரமூட்டல்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் ஊடாகவே முதலாளித்துவ வர்க்கம் யுத்தத்தை கிளறிவிட்டது.

விசேடமாக, தமிழ் பொது மக்கள் மீது அளவிட முடியா அழிவைத் திணித்ததன் மூலமே இனவாத யுத்தம் முடிவுக்கு வந்தது. 2009 மே மாதம் புலிகளைத் தோற்கடித்த பின்னர், வடக்கு-கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்தும் விரிவாக்கப்பட்டு வருகின்றது. இராணுவ மற்றும் பொலிஸ் உளவுச் சேவைகள் பொது மக்களை, குறிப்பாக இளைஞர்களை கண்காணித்து வருகின்றன. பிரதான சந்திகள் உட்பட பல இடங்களிலும் இராணுவம் பௌத்த சிலைகளை ஸ்தாபித்தல், அரச மரங்களை நாட்டுதல் மற்றும் பன்சலைகளை ஸ்தாபிப்பதும் இனவாத பதட்டங்களை உக்கிரமாக்கும் நடவடிக்கைகளின் பாகமாகும்.

சிறிசேன-விக்கிரமசிங் அரசாங்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் போர் குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான மக்களை ஆகவும் வறுமைக்குள் தள்ளியுள்ள நிலைமையின் கீழேயே இவை அனைத்தும் இடம்பெறுகின்றன. சிறிசேன “தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்” என்ற போலி பிரச்சாரத்தின் மூலம், தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த கொடூரமான நிலைமைகளை மூடி மறைக்கின்றார்.

சம்பவம் சம்பந்தமாக, தமிழ தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை, மக்கள் மத்தியில் “உண்மையான நல்லிணக்கத்துக்கு” தடங்களை ஏற்படுத்தும் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்க இடமளிக்க வேண்டாம் என மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிக்கை முற்றிலும் வஞ்சத்தனமானதாகும். தமிழ் கூட்டமைப்பின் முண்டுகோளுடனேயே அரசாங்கம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதை முன்னெடுக்கின்றது. அமெரிக்காவின் சீன-விரோத “ஆசியாவில் முன்னிலை” கொள்கைக்கு இலங்கையை பிணைத்து விட்டுள்ள கொழும்பு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், தமிழ் முதலாளித்துவ வர்க்கத்துக்கு வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வதே தமிழ் கூட்டமைப்பின் தரித்திரம் பிடித்த கொள்கையாகும்.

வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் சுயநிர்ணயத்தின் கீழ் தமிழர்களுக்கு தனி அரசுக்காக பிரச்சாரம் செய்யும் தமிழ் இனவாத கட்சிகள் செயற்படுகின்றன. அவை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள முயற்சிக்கின்றன. தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்வதற்காக ஏகாதிபத்தியத்தின் தயவை நாடும் வேலைத் திட்டத்தையே அவை முன்வைக்கின்றன. இந்த முதலாளித்துவ வேலைத் திட்டத்தின் வங்குரோத்தும் பிற்போக்குத்தனமும், புலிகளின் அரசியலிலும் அதன் தோல்வியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சிங்கள, தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்கு அவர்கள் கடும் எதிரிகளாவர்.

தென் பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்களின் தலைமைத்துவத்தில் இருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் (அ.ப.மா.ஒ.) அதை இயக்கும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.) இனவாத பிரச்சாரத்துடன் ஒட்டிக்கொண்டு ஆத்திரமூட்டலுக்கான பொறுப்பை தமிழ் மாணவர்கள் மீதே சுமத்தியுள்ளன. யாழ்ப்பாண மோதல் பற்றி நிருபர்கள் மாநாடு ஒன்றை நடத்திய மு.சோ.க. தலைவர்களில் ஒருவரான துமிந்த நாகமுவ, மாணவர்களின் மோதலுக்குள் இனவாதம் இருப்பதாக மீண்டும் மீண்டும் கூறினார். இனவாதத்தின் விளைவுகள் பற்றியும் போரின் பின்னர் வடக்கில் பிரச்சினைகள் தீர்க்கப்படாததைப் பற்றியும் மோசடியாக விளக்கமளித்த அவர், இத்தகைய “இனவாத மோதல்களை தவிர்த்துக்கொள்வதற்காக, பெரும்பான்மை தமிழ் மாணவர்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கின்றது” என முடித்தார்.

அ.ப.மா.ஒ. மற்றும் மு.சோ.க.யும் பல்கலைக் கழகங்களுக்குள் பௌத்த மதம் உட்பட பிற்போக்கு சிந்தனைகளுடனும் அவற்றை வளர்த்தெடுக்கும் கும்பல்களுடனும் கூட்டாகச் செயற்படுகின்றது. மு.சோ.க. செயற்பாட்டாளர்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர், ஜே.வி.பீ. தலைவர்களாக இருந்து இனவாத போருக்கு முழு ஆதரவு கொடுத்தனர். யுத்தத்தின் முடிவில் கட்சி அதிருப்திக்கு உள்ளாகி நெருக்கடிக்குள் போன நிலைமையில், இடது முகமூடியைப் போட்டுக்கொண்டு இளைஞர்களை சுற்றி வளைக்கும் இன்னொரு பொறியை அமைப்பதற்கே அவர்கள் ஜே.வி.பீ.யில் இருந்து பிரிந்தனர். அ.ப.மா.ஒ. மற்றும் ஜே.வி.பீ.யும் பல்கலைக் கழகங்களுக்குள் இந்த இனவாத பிரச்சாரங்களை முன்னெடுத்தபோது மு.சோ.க. தலைவர்கள் அதில் முன்னிலை வகித்தனர்.

நெருக்கடியில் மூழ்கியுள்ள அரசாங்கம், இராஜபக்ஷ தலைமையிலான கட்சி கும்பல் முன்னெடுக்கும் இனவாத பிரச்சாரத்துக்கு எதிராக அணிதிரளுமாறு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட இளைஞர்களிடம் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் அழைப்பு விடுக்கின்றன. சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டங்களில் புதிய காலகட்டம் விரிவடைந்துள்ள நிலையில் இலங்கையிலும் தொழிலாளர்களதும் மாணவர்களதும் போராட்டங்கள் முன்னணிக்கு வந்துகொண்டிருக்கின்றன. நெருக்கடியின் விளைவுகளால் மாணவர்களும் இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி வெட்டு, வேலையின்மை மற்றும் இலாப உழைப்பு சூறையாடலும் இந்த தாக்குதல்களின் பாகமாகும். முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக போராடும் சோசலிச வேலைத் திட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவது இந்த நிலைமையின் கீழ் அத்தியாவசியமானதாகும்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சர்வதேசியவாத ஐக்கியத்தில் அணிதிரட்டி, சோசலிச வேலைத் திட்டத்திற்காகவும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்திற்காகவும், அதாவது ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுவதன் மூலமே, முதலாளித்து அரசாங்கத்தின் தாக்குதல்கள் மற்றும் இனவாத பிளவுபடுத்தல்களை தோற்கடிக்க முடியும். இது சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாகும். சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யில் இணைந்துகொண்டு இந்த வேலைத் திட்டத்துக்காக போராடுங்கள்.