Leon Trotsky - Culture and Socialism - 1927

WSWS : Tamil : நூலகம்

கலாச்சாரமும் சோசலிசமும் லியோன் ட்ரொட்ஸ்கி 1927
 
தொழில் நுட்பமும் கலாச்சாரமும்
 
ஆன்மீக கலாச்சாரத்தின் மரபியம்
 
நம் கலாச்சார முரண்பாடுகள்
 


 

ஜோர்ஜ் ஏலியட்ஸின் ஆதாம் பீட் புத்தகத்தின் 150-வது ஆண்டில் அதற்கான புகழாரம்
 
கலை பற்றிய கம்யூனிஸ்ட் கொள்கை (1923)
 

வர்க்கமும் கலையும்
சர்வாதிகாரத்தின் கீழ் கலாச்சாரம்

 

கலை இலக்கியம்

Technology and Culture

தொழில்நுட்பமும் கலாச்சாரமும்

Use this version to print | Send feedback

கலாச்சாரம் என்பது உள்நுழைய முடியாத காடுகள், தரிசு நிலங்கள் என்றிருந்ததற்கு மாறாக, அது நன்கு உழப்பட்ட விவசாய நிலமாக ஒருகாலத்தில் குறிப்பிடப்பட்டது என்பதை நாம் எல்லாவற்றிற்கும் முதலில் மீண்டும் நினைவிற் கொள்ள வேண்டும். கலாச்சாரம் இயற்கைக்கு அருகே வைத்துப் பார்க்கப்பட்டது, அதாவது மனித முயற்சியால் என்ன சாதிக்கப்பட்டதோ, அது இயற்கையின் கொடைகளிலிருந்து வேறுபடுத்தப்பட்டது. இவ்வாறு அருகருகே வைத்துப்பார்க்கும் தன்மையானது இன்றும் கூட அடிப்படையில் அதன் பெறுமதியை இழக்காமல் உள்ளது.
மனிதனே ஒரு விலங்கின உயிரினம் தான் என்ற அவனின் இயற்கையான வரலாறு உட்பட, இயற்கையால் வழங்கப்பட்டிருப்பதற்கு முற்றிலும் முரணாக, கலாச்சாரமானது, மனிதனால் அவனுடைய முழு வரலாற்றுக் காலத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது; கட்டமைக்கப்பட்டிருக்கிறது; உய்த்தறியப்பட்டிருக்கிறது; வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறது. விலங்கின பரிணாமத்தின் ஒரு விளைவாக மனிதனை ஆராயும் விஞ்ஞானம், மனித இன இயல் எனப்படும். ஆனால் விலங்குகளின் உலகிலிருந்து மனிதன் தன்னை வேறுபடுத்திக் கொண்ட கணத்தில் இருந்து - இது கிட்டத்தட்ட, கற்கள், தடிகள் போன்ற பண்டைக்கால கருவிகளை அவன் முதலாவதாக தன்னுடைய கரங்களினால் பற்றிக் கொண்டதிலிருந்தும் மற்றும் அவைகளை தன் உடலின் உறுப்புக்களுடன் ஆயுதங்களாகவும் தரித்துக் கொண்டதிலிருந்தும், அநேகமாக இது நடந்தது - கலாச்சாரத்தின் உருவாக்கமும், திரட்சியும் ஆரம்பமானது. அதாவது, இயற்கையை தன்னகப்படுத்திக் கொள்வதற்கு அல்லது போராடி வெற்றி கொள்வதற்கு தேவையான அனைத்துவித அறிவு, தகமை ஆகியவற்றைப் பெற்றதிலிருந்து ஆரம்பமானது.

கடந்தகால தலைமுறையால் ஒன்று திரட்டப்பட்ட கலாச்சாரம் குறித்து நாம் பேசும்போது, முதன்மையாக கருவிகள், இயந்திரங்கள், கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் இவை போன்ற வடிவங்களில் அதன் பொருள்சார் வெற்றிகளில் தான் நாம் தவிர்க்கமுடியாமல் தங்கியிருக்கிறோம். இதுதான் கலாச்சாரமா? சந்தேகத்திற்கிடமின்றி, இதுதான் அல்லது அதன் பொருள் சார்ந்த இருப்புக்கள்தான் கலாச்சாரம் - பொருள்சார் கலாச்சாரம். இயற்கையின் அடித்தளங்களில், இது நம் வாழ்வின் அடிப்படையான சுற்றுப்புற சூழலை, நம் அன்றாட வாழ்வை மற்றும் நம் படைப்புத் திறனைத் தோற்றுவிக்கிறது. ஆனால் கலாச்சாரத்தின் பெருமதிப்புடைய பகுதி மனிதனுடைய நனவிலுள்ள அதன் சேமிப்புக்களில் தான் உள்ளது - அதாவது, நம்முடைய சாதனங்கள், பழக்கவழக்கங்கள், செயற்திறன்கள் மற்றும் முந்தைய அனைத்து பொருள்சார் கலாச்சாரத்திலிருந்து வளர்ந்திருந்த நம்முடைய திறமைகளில் தங்கியிருப்பதோடு, அவற்றை மீண்டும் கட்டமைக்கவும் தொடங்குகிறது. அப்படியானால், தோழர்களே, இது உறுதியாக நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்று கருதுவோம்: வாழ வேண்டும் என்ற இயல்புடன், வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவிப்பதற்காக, தன்னுடைய சக்தியை அதிகரிப்பதற்காக மனிதன் நடத்தும் போராட்டத்தில் இருந்து கலாச்சாரம் வளர்கிறது. ஆனால் இந்த அடிப்படையில் தான் வர்க்கங்களும் வளர்கின்றன. இயற்கைக்கு இணங்க நடந்து கொள்ளும் வழிவகையில், அதன் விரோத சக்திகளுடன் நடத்தும் போராட்டத்தில், மனித சமூகம் ஒரு சிக்கல் வாய்ந்த வர்க்க அமைப்பாக வளர்கிறது. சமூகத்தின் வர்க்க அமைப்பு முறை தான் மிக உறுதியாக மனித வரலாற்றின் உள்ளடக்கத்தையும், வடிவத்தையும் நிர்ணயிக்கிறது. அதாவது, அதன் பொருள் சார்ந்த உறவுகள் மற்றும் அவற்றின் கருத்தியல் பிரதிபலிப்புக்களும் தான் நிர்ணயிக்கின்றன. இவ்வாறு கூறுவதன் மூலம், நாம் வரலாற்று ரீதியான கலாச்சாரத்தில் ஒரு வர்க்கத் தன்மை உள்ளது என்றும் கூறுகிறோம்.

அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவ-பண்ணையடிமை மற்றும் பூர்ஷ்வா சமூகமும் தமக்கிசைவான கலாச்சாரத்தை உருவாக்குகின்றன: பல கட்டங்களில் இடைமருவு வடிவங்களுடன் ஒரு வேறுபட்ட கலாச்சாரமும் நிலவுகிறது. வரலாற்றுரீதியான சமூகம் மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பாக உள்ளது. சமூகத்தின் வர்க்க அமைப்பிற்கு கலாச்சாரம் உதவுகிறது. ஒரு சுரண்டும் சமூகம், இன்னொரு சுரண்டும் கலாச்சாரத்தை உருவாக்குகிறது. அப்படியானால், நாம் கடந்தகால அனைத்து கலாச்சாரத்திற்கும் விரோதமாக இருக்கிறோம் என்று இது அர்த்தப்படுத்துகிறதா?
உண்மையில், இங்கே நாம் ஓர் ஆழ்ந்த முரண்பாட்டில் வந்து நிற்கிறோம். மனிதனுடைய முயற்சிகள் மூலம் வெற்றி கொள்ளப்பட்ட, தோற்றுவிக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட ஒவ்வொன்றும், மற்றும் மனிதனின் சக்திகளை உயர்த்த உதவுகின்ற ஒவ்வொன்றும் - கலாச்சாரம் தான். ஆனால் தனிமனிதனை விட, நாம் சமூகத்தை பற்றி கையாளுவதால், அதனுடைய உண்மையான சாராம்சத்தில், கலாச்சாரம் ஒரு சமூக-வரலாற்று இயல்நிகழ்வாக உள்ளது; வரலாற்றுரீதியான சமூகமானது வர்க்க சமூகமாக இருந்ததுள்ளதுடன், அவ்வாறே தொடர்ந்துகொண்டு இருக்கின்றது என்ற நிலையில், கலாச்சாரம் என்பது வர்க்க அடக்குமுறையின் ஓர் ஆதாரக் கருவியாக வெளிப்படுகிறது. மார்க்ஸ் கூறினார்: ஒரு சகாப்தத்தின் மேலாதிக்கம் செலுத்தும் கருத்துக்கள், அந்த சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே ஆகும். இந்தக் கூற்று கலாச்சாரத்திற்கும் முழுமையாக பொருந்தும். ஆயினும், நீங்கள் கடந்த கால கலாச்சாரம் முழுவதையும் கற்றுத் தேர்ந்து இருக்க வேண்டும், இல்லாவிடில் உங்களால் சோசலிசத்தைக் கட்டமைக்க முடியாது என்றே நாங்கள் தொழிலாள வர்க்கத்திடம் கூறுகிறோம். இதை எப்படி விளங்கிக் கொள்ள முடியும்?

இந்த முரண்பாடு பற்றி பலர் தடுமாறியுள்ளனர், அவர்கள் அடிக்கடி தடுமாறுகின்றனர், ஏனெனில் இவர்கள் வர்க்க சமூகக் கருத்துருவை மேம்போக்காக, அரைகுறை சிந்தனையாக, அதன் அடித்தளமே உற்பத்தியின் களமாக இருக்கிறது என்பதை மறந்து, அணுகுகின்றனர். இயற்கையுடன் போராடுவதற்கு குறிப்பிட்ட வழிமுறைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு வர்க்க சமூகமும் வளர்ந்துள்ளது. இந்த வழிமுறைகள் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையைச் சார்ந்து மாறியுள்ளன. எது மேலும் அடிப்படையானது உள்ளது: ஒரு சமூகத்தின் வர்க்க அமைப்பா அல்லது அதன் உற்பத்தி சக்திகளா? சந்தேகத்திற்கு இடமில்லாமல், உற்பத்தி சக்திகள் தான். ஏனெனில் அவற்றில்தான், குறிப்பிட்ட வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் தான், வர்க்கங்கள் வளர்ச்சி அடைந்து, தம்மை மறு ஒழுங்கமைத்துக் கொள்கின்றன. மனிதனால் செயலாக்கம் பெற்ற பொருளாதாரச் செயற்திறனும், அவனுடைய சொந்த இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கான வரலாற்றுத் திறமையையும் உற்பத்தி சக்திகளின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த இயக்க அஸ்திவாரத்தில் தான் வர்க்கங்கள் வளர்கின்றன; அவற்றின் பரஸ்பர உறவுகளானது கலாச்சாரத்தின் தன்மையை நிர்ணயிக்கின்றன.

எனவே, எல்லாவற்றிற்கும் மேலாக தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, இது ஒரு வர்க்க அடக்குமுறையின் கருவி மட்டும்தானா? என்பது தான் எங்களை நாங்களே கேட்க வேண்டிய கேள்வியாக உள்ளது. இத்தகைய கேள்வியைக் கேட்பதே அதற்கு உடனடியாக விடை அளிப்பதற்குப் போதுமானதாகும்: இல்லை, தொழில்நுட்பம் மனித குலத்தின் ஓர் அடிப்படை வெற்றி; உண்மையில் இதுவரை அது சுரண்டுவதற்கு ஒரு கருவியாகப் பயன்பட்டுள்ள போதிலும், அதே நேரத்தில் சுரண்டப்படுபவரின் விடுதலைக்கான அடிப்படைத் தேவையாகவும் உள்ளது. இயந்திரம் கூலி-அடிமையை நெரிக்கிறது. ஆனால் கூலி-அடிமை இந்த இயந்திரத்தின் மூலம் தான் சுதந்திரம் அடைய முடியும்.இங்குதான் முழுப் பிரச்சினையின் வேரும் உள்ளது.

இயற்கையின் சக்தியிலிருந்து மனிதனை விடுவிக்கும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தான் வரலாற்று நிகழ்வுப்போக்கின் உந்து சக்தி என்பதை நாம் மறக்காமல் இருந்தால், ஒற்றுமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில், வாழ்க்கையை மறுகட்டமைப்பு செய்வதன் மூலம் அதனை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்திற்காக, பாட்டாளி வர்க்கமானது மனித குலம் அதன் வரலாற்றுப் போக்கில் வளர்த்துள்ள அறிவு, செயற்திறன் ஆகியவைகளின் ஒன்று திரட்டப்பட்ட அறிவையும் பெற வேண்டும் என்று அப்பொழுது நாம் அறிந்து கொள்வோம்.

கலாச்சாரம் தொழில்நுட்பத்திற்கு உந்துதல் அளிக்கிறதா அல்லது தொழில்நுட்பம் கலாச்சாரத்தை உந்துகிறதா?- எனக்கு முன்னால் இருக்கும் குறிப்புக்களில் ஒன்று இந்த கேள்வியை எழுப்புகிறது. இது ஒரு கேள்வியைத் தவறான வகையில் எழுப்புவதாகும். தொழில்நுட்பம் கலாச்சாரத்திற்கு எதிராக நிறுத்தப்படக்கூடாது; அது கலாச்சாரத்தின் மூல காரணமாக இருக்கிறது. தொழில்நுட்பம் இல்லாமல் கலாச்சாரம் இல்லை. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கலாச்சாரத்தை முன்னோக்கி உந்திச் செல்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எழுச்சி பெறும் விஞ்ஞானமும், பொது கலாச்சாரமும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்குச் சக்தி வாய்ந்த ஊக்கத்தைக் அளிக்கின்றன. ஆகவே, இங்கே ஓர் இயங்கியல் இடைத் தொடர்பு உள்ளது.

தோழர்களே, தொழில்நுட்பத்திலேயே இயைந்திருக்கும் முரண்பாடு குறித்து ஒரு தெளிவான, எளிமையான உதாரணம் உங்களுக்குத் தேவையென்றால், இரயில்வேக்களை விட சிறந்த ஒன்றை உங்களால் காண முடியாது. ஐரோப்பிய பயணிகள் புகையிரதங்களை ஆராய்ந்தால், நீங்கள் அங்கே வேறுபட்ட வகுப்புக்கள் உள்ள புகையிரத பெட்டிகள் இருப்பதைக் காண்பீர்கள். இந்த வகுப்புக்கள் நமக்கு முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் வர்க்கங்களை நினைவுபடுத்துகிறது. முதல் வகுப்பு என்பது சலுகை பெற்ற மேற்தட்டிற்கு, இரண்டாம் வகுப்பு என்பது மத்தியதட்டு முதலாளிகளுக்கு, மூன்றாம் வகுப்பு என்பது குட்டி முதலாளித்துவத்தினருக்கு, நான்காவது பாட்டாளி வர்க்கத்திற்கு - இது முன்பு சரியான காரணத்திற்காகவே நான்காவது அதிகாரம் (fourth estate) என்று அழைக்கப்பட்டிருந்தது. முழுமையாகப் பார்த்தால், இரயில்வே அமைப்புமுறைகள் மனிதகுலத்தின் ஒரு மகத்தான, கலாச்சார மற்றும் தொழில்நுட்ப வெற்றியாகும்; இது ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள் பூமியின் தோற்றத்தையே பெரிதும் மாற்றிவிட்டது. ஆனால் சமூகத்தின் வர்க்க அமைப்பு முறையானது, போக்குவரத்து சாதனங்களின் அமைப்பு முறையிலும் ஆளுமை செலுத்துகிறது. நம்முடைய சோவியத் இரயில்வே அமைப்புமுறைகள் இன்றும் சமத்துவத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளன. ஏனென்றால், அவை கடந்த காலத்திலிருந்து வழிவழியாக பெற்ற பெட்டிகளைப் பயன்படுத்துகின்றன என்பதால் மட்டுமல்லாமல், புதிய பொருளாதாரக் கொள்கை (The New Economic Policy) சமத்துவத்திற்குத் தயாரிப்பு செய்கிறதே தவிர இன்னும் அதை உருவாக்கி விடவில்லை.

புகையிரத அமைப்பு முறைகள் வருவதற்கு முன்னர், நாகரிகம் கடல்களின் கரைகளிலும், பெரிய ஆறுகளின் கரைகளிலும் குவிந்திருந்தது. புகையிரத அமைப்பு முறைகள் முழுக் கண்டங்களையும் முதலாளித்துவ கலாச்சாரத்திற்கு அறிமுகப்படுத்தியது. ரஷ்ய கிராமத்தின் பிற்போக்குத்தனம் மற்றும் புறக்கணிப்புகளுக்கான மிக அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக  இல்லையென்றாலும் அடிப்படைக் காரணங்களில் ஒன்று, புகையிரத அமைப்பு முறைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து சாலைகள் இல்லாதது எனலாம். இவ்விதத்தில் நம்முடைய பெரும்பாலான கிராமங்கள் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட காலத்தில் உள்ளன. நாம் நம்முடைய மிகப் பெரிய நண்பனையும், அதே நேரத்தில் மிகப் பெரிய எதிரியுமான பாரிய தூரங்களையும் கடக்க வேண்டும். சோசலிசப் பொருளாதாரம் என்பது ஒரு திட்டமிட்ட பொருளாதாரம். எல்லாவற்றையும் விட, ஒரு திட்டமானது தகவல் தொடர்பை (Communication) கருத்தில் கொள்கிறது. போக்குவரத்து சாதனமானது தகவல் தொடர்பு முறைகளில் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு புதிய புகையிரத பாதையும் கலாச்சாரத்திற்கான ஒரு பாதையாக விளங்குகிறது, அதுவே நம்மைப் பொறுத்த வரையில் சோசலிசத்திற்கான ஒரு பாதையாகும். மீண்டும் ஒரு முறை, போக்குவரத்துச் சாதனங்களின் தொழில்நுட்பத்தின் மற்றும் நாட்டின் பொருளாதார செழிப்பின் வளர்ச்சியுடன், புகையிரத அமைப்பு முறையின் சமூகத் தோற்றமும் மாற்றம் பெறும். அதாவது வகுப்புக்களாக பிரித்தல் மறைந்து போகும். அக்காலத்தில் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய விமானங்களில் பயணிக்க விரும்புவதற்கு பதிலாக, மக்கள் இரயில் பெட்டிகளிலேயே பயணிக்க விரும்பினால்... ஒவ்வொருவரும் வசதியான பெட்டிகளிலேயே பயணிப்பர்.

மற்றொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம் - இராணுவவாதத்தின் கருவிகள், அதாவது அழிவின் கருவிகள். இத்துறையில் சமூகத்தின் வர்க்கத் தன்மை குறிப்பாக தெளிவாகவும், இழிவான வடிவங்களிலும் வெளிப்படுத்தப்படுகிறது. ஒரு வெடிக்கும் பொருளானாலும் அல்லது நச்சுப் பொருளாலும் சரி அழிவின் கருவி என்று ஒன்று கிடையாது. அதன் கண்டுபிடிப்பு இயல்பாகவே ஒரு மதிப்புடைய விஞ்ஞான அல்லது தொழில்நுட்ப சாதனையாக இருக்கமுடியாது. வெடிகுண்டுகள் அல்லது நச்சுப் பொருட்களை அழிவிற்கு மட்டும் அல்லாமல், ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தப்பட முடியும். அவை புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் தேடல்களில் புதிய வாய்ப்புக்களை திறந்துவிடுகின்றன.

பாட்டாளி வர்க்கமானது, வர்க்க ஆட்சியின் பழைய கருவியை உடைத்தெறிவதன் மூலமாக மட்டும் தான் அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். இந்தப் பணியை வரலாற்றில் இதுவரை செய்யப்படாத விதத்தில் நாம் உறுதியாகச் செய்துள்ளோம். ஆனால் ஒரு புதிய கருவியைக் கட்டமைப்பதில், பழைய அடிப்படைக் கூறுகளை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு அல்லது சிலவேளைகளில் கணிசமான அளவிற்குப் பயன்படுத்தும் கட்டாயத்திற்கும் நாம் உட்பட்டுள்ளோம் என்பதைக் கண்டுள்ளோம். அரசு அமைப்பின் மேலதிக சோசலிச மறுகட்டுமானம் என்பது தவிர்க்க முடியாமல் பொதுவான அரசியல், பொருளாதார, கலாச்சார பணிகளுடன் இணைந்துள்ளது.

நாம் தொழில்நுட்பத்தை உடைத்தெறிந்து சிதைக்கத் தேவையில்லை. முதலாளித்துவம் நிறுவியுள்ள தொழிற்சாலைகளின் பொறுப்பை தொழிலாள வர்க்கம் எடுத்து தனதாக்கிக் கொள்வதுடன், புரட்சிகர தூக்கிவீசல் நடந்ததுபோல் அதே வடிவத்தில் அதை செய்யும். பழைய சாதனம் நமக்கு இன்றளவும் பயன்பாடு உடையதாக உள்ளது. நாம் ஒன்றும் இந்த மரபியத்தை துறந்துவிடவில்லை என்ற உண்மையை அத்தகைய சூழல் தெளிவாகவும், நேரடியாகவும் எடுத்துக்காட்டுகிறது. வேறு எப்படி இது இருக்க முடியும்? இந்த மரபியத்தை கைப்பற்றத்தான் புரட்சியே துல்லியமாக நடத்தப்பட்டது. ஆனால் நாம் எடுத்துக் கொண்ட வடிவத்திலுள்ள பழைய தொழில்நுட்பம், சோசலிசத்திற்கு முற்றிலும் பொருந்தாத தன்மையைக் கொண்டுள்ளது. அது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கெட்டிப்படுத்தப்பட்ட ஒழுங்கற்ற நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. பல்வேறு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி, இலாபத்திற்கான உந்துதல்கள், பல வணிக பிரிவுகளின் சமச்சீரற்ற வளர்ச்சி, பல பிராந்தியங்களின் பிற்போக்குத்தனம், விவசாயத்தின் அளவு குறைந்த தன்மை, மனிதவளங்களை வீணடித்தல் - தொழில்நுட்பத்திலும், இரும்பு, தாமிரம் ஆகியவற்றிலும் இவை அனைத்தும் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. ஆனால் வர்க்க அடக்குமுறைக் கருவி ஒரு புரட்சிகரத் தாக்குதலில் நொருக்கப்பட்டுவிட முடியும் என்றால், ஒழுங்கற்ற முதலாளித்துவ நிலையின் உற்பத்திக் கருவிகள் படிப்படியாகத்தான் மறுகட்டமைக்கப்பட முடியும். பழைய கருவிகளின் அடிப்படையில் மீட்புக்காலத்தை முடிவுக்குக் கொண்டு வருவதென்பது, இந்த மகத்தான பணியின் கிட்டிய எல்லைக்கு மட்டும் தான் நம்மை இட்டுச் செல்லும். எப்படியும் நாம் அதை முடிவிற்குக் கொண்டு வந்துதான் ஆக வேண்டும்.

 
2. ஆன்மீக கலாச்சாரத்தின் மரபியம்
 
3. நம் கலாச்சார முரண்பாடுகள்