wsws : Tamil : History
Download the Font

 

அத்தியாயம் 5

ஜூலை நாட்கள்; கோர்னிலோவ் நிகழ்வு: ஜனநாயக மாநாடும் நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பும்

Use this version to print | Send feedback

ஏப்ரல் மாநாட்டின் முடிவுகள் கட்சிக்கு சரியான, கொள்கை ரீதியான நோக்குநிலையை கொடுத்தது என்றாலும், அவை கட்சித் தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகளை அகற்றிவிடவில்லை. மாறாக, சம்பவங்கள் தொடர்ந்த முறையில், இக்கருத்து வேறுபாடுகள் இன்னும் கூடுதலான உறுதியான வடிவங்களை பெற்று, அக்டோபர் நாட்களில் புரட்சியின் மிக முக்கியமான முடிவெடுக்கும் கணங்களில் தீவிரமான வெளிப்பாட்டை அடைந்தன. ஜூன்10 அன்று (லெனினுடைய முன்முயற்சியில்) ஆர்ப்பாட்டம் அமைப்பதற்கான முயற்சி, ஏப்ரல் ஆர்ப்பாட்டத்தின் தன்மை பற்றி அதிருப்தி அடைந்திருந்த அதே தோழர்களால் தீரச் செயலுக்கு ஒப்பானது என்று கண்டிக்கப்பட்டது. ஜூன் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கவில்லை; ஏனெனில் சோவியத்துக்களின் காங்கிரஸ் அதைத் தடை செய்துவிட்டது. ஆனால் ஜூன் 18 அன்று கட்சி இதற்கு பழி தீர்த்துக் கொண்டது. பெட்ரோகிராடில் பொது ஆர்ப்பாட்டத்தினை சமரசவாதிகள் சற்று நிதானமற்ற முறையில் தொடக்கியபோது அது கிட்டத்தட்ட போல்ஷிவிக் கோஷங்களையே முற்றிலும் கொண்டிருந்தது. ஆயினும்கூட அரசாங்கம் தன்னுடைய இலக்கில் குறியாக இருந்தது. அது ஒரு தீர்மானகரமான தருணமாகும். நிதானம் தவறிய வகையில் செல்லக்கூடாது என்று கட்சிக்கு லெனின் எச்சரிக்கை செய்துகொண்டிருந்தார். ஜூன் 21ம் தேதி, அவர் பிராவ்தாவில் எழுதினார்: "தோழர்களே, இந்தச் சூழ்நிலையில் ஓர் ஆர்ப்பாட்டச் செயல் பொருத்தமாக இருக்காது. எமது புரட்சியில் முற்றிலும் ஒரு புதிய கட்டத்தில் வாழும்படி தள்ளப்பட்டுள்ளோம் செல்லுவதற்கு நாம் இப்பொழுது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம்." ஆனால் ஜூலை நாட்கள் தவிர்க்க முடியாமல் வந்து கொண்டிருந்தன -- இது புரட்சியின் பாதையிலும் அதேநேரத்தில், உட்கட்சி வேறுபாடுகளின் பாதையிலும் ஒரு முக்கியமான கட்டமாகும்.

ஜூலை இயக்கத்தில் தீர்மானகரமான கணம் பெட்ரோகிராட் மக்களின் தன்னியல்பான தாக்குதலில் வந்தது. ஆனால் ஜூலை மாதத்தில், லெனின் தன்னுடைய மனத்தில் கீழ்க்கண்ட வினாக்களை பரிசீலித்திருப்பார் என்பதிலோ ஐயமில்லை.

உரிய நேரம் வந்துவிட்டதா? பரந்தமக்களுடைய உளப்பாங்கு சோவியத் என்னும் மேல˘கட˘டமைப்பையும் விஞ்சி வளர்ந்துவிட்டதா? சோவியத்தின் சட்டபூர்வ தன்மையால் அறிதுயில்நிலைக்கு ஆளாகிய (hypnotized) ஆபத்தை நாம் கொண்டிருக்கின்றோமா? மற்றும் அதையொட்டி மக்களின் மனப்பாங்கின் பின்னே பின்தங்கியுள்ளோமா, மற்றும் அவர்களிடம் இருந்து பிரிந்துவிடும் நிலையில் இருக்கிறோமா? ஜூலை நாட்களின் போது நிகழ்ந்த தன¤˘பட˘, முற்றிலும் இராணுவச் செயற்பாடுகள், லெனினின் நிலைமை பற்றிய மதிப்பீட்டில் இருந்து தாங்கள் விலகவில்லை என்று நேர்மையுடன் கருதிய தோழர்களால் நடத்தப்பட்டிருக்கக்கூடும். பின்னர் லெனின் கூறினார்: "ஜூலையில் பல முட்டாள்தனமான செயல்களை செய்தோம்." ஆனால் ஜூலை நாட்கள் நிகழ்வின் சுருக்கம், நாம் மற்றொரு, புதிய இன்னும் கூடுதலான, பரந்த முறையில், இயக்கத்தின் புதிய உயர்ந்த கட்டத்தை பற்றிய முன்னாய்வை மேற்கொண்டிருந்தோம் என்பதாகும். மிகக் கடுமையான சூழ்நிலையில் நாம் சற்று பின்வாங்க வேண்டியிருந்தது. எழுச்சிக்கும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் தயார் செய்து கொண்டிருந்தது என்ற அளவில், கட்சியும், லெனினை போலவே, ஜூலை ஆர்ப்பாட்டம் எமது வலிமையையும் எதிரியின் வலிமையையும் அறிவதற்கு நாம் கொடுக்க வேண்டிய உயர்ந்த விலை என்றுதான் எண்ணியது; ஆனால் இதற்காக எமது செயல்பாட்டின் முக்கிய வழிவகை மாற்றிக் கொள்ளப்படவில்லை. இதற்கு மாறாக, அதிகாரத்தை கைப்பற்றவேணடும் என்ற கொள்கையை எதிர்த்திருந்த தோழர்கள் ஜூலை நிகழ்வில் தீயவிளைவு தரும் தீரச்செயலைத்தான் கண்டனர். வலதுசாரி பிரிவுகள் கட்சிக்குள் அணிதிரண்டமை மிகத்தீவிரமாக நடந்தது; அவர்களுடைய விமர்சனம் இன்னும் கூடுதலான வெளிப்படை தன்மையை கொண்டிருந்தன. மறுதலிக்கும் குரலிலும் ஒரு தொடர்புபட்ட மாறுதல்கள் வரத்தான் செய்தது. லெனின் எழுதினார்: "இந்த முணுமுணுப்புக்கள், நாம் பங்கு பெற்றிருக்கக் கூடாது எனக்கூறும் வாதங்கள் (முற்றிலும் முறையான மக்கள் அதிருப்தி, இழிவுணர்வு இவற்றிற்கு "அமைதியான, அமைப்பான முறையில்" முயற்சியைக் கொடுத்தது!!) ஆகியவை போல்ஷிவிக்குகளில் இருந்து வந்தால் வெறும் கொள்கைகளை கைவிடல் என்றும், குட்டி முதலாளித்துவத்தின் வழக்கமான குழம்பிய மற்றும் அச்சுறுத்திப் பணியவைக்கும் நிலையின் எப்பொழுதும் அடக்கப்பட்டிருப்பவர்களின் வழக்கமான வெளிப்பாடு என்றும்தான் கொள்ளப்பட வேண்டும்." [CW Volf.25, "Consitutitional Illusion" (July 26, 1917), p.204]. "கொள்கைகளைக் கைவிடல்" என்ற சொற்றொடர் பிரயோகம் அந்நேரத்தில் கருத்து வேறுபாடுகளை பற்றிய சோகம் நிறைந்த நிலையை சுட்டிக் காட்டுகிறது. நிகழ்வுகள் விரிந்துகொண்டிருக்கையில் தீக்குறியை முன்காட்டும் இச் சொல் அடிக்கடி வெளிவந்தது.

அதிகாரம் மற்றும் போர் பிரச்சினையை பற்றிய சந்தர்ப்பவாத அணுகுமுறை அகிலத்தை பற்றிய அதேபோன்ற அணுகுமுறையைத்தான் நிர்ணயித்தன. சமூக தேசபக்தர்களின் ஸ்டொக்ஹோல்ம் மாநாட்டினுள் கட்சியை இழுத்துக் கொள்ளும் பணியில் வலதுகள் முயற்சி எடுத்துக் கொண்டனர். ஆகஸ்ட் 16ம் தேதி, லெனின் எழுதினார்: "ஆகஸ்ட் 6ம் தேதி, தோழர் காமெனேவ் ஸ்டொக்ஹோல்ம் மாநாட்டை பற்றிய மத்திய நிர்வாகக் குழுவில் நிகழ்த்திய உரை, தங்கள் கட்சிக்கும், கொள்கைகளுக்கும் விசுவாசமுடைய அனைத்து போல்ஷிவிக்குகளிடமும் கண்டனத்தைத்தான் பெறும்." இன்னும் சற்றுப் பின்னர் ஸ்டொக்ஹோல்மில் மிகப் பெரும் புட்சிப் பதாகை ஒன்று திறந்துவைக்கப்படுவது பற்றிய சில அறிக்கைகளை பற்றிக் குறிப்பிடுகையில், லெனின் கூறினார்: "ஷேர்நோவ் மற்றும் டெசெரெடெல்லியின் உணர்வின் வழியிலேயே இதுவும் ஒரு பொருளற்ற அறிவிப்பாகும். இது அப்பட்டமான பொய்யுரையாகும். உண்மையில், ஸ்டொக்ஹோல்மில் பறக்க இருப்பது ஒன்றும் புரட்சிப் பதாகையல்ல; அது இரகசிய செயற்பாடுகள், உடன்படிக்கைகள், சமூக ஏகாதிபத்தியவாதிகளுக்கு பொது மன்னிப்பு, வங்கியாளர்களுக்கு இடையே இணைக்கப்பட இருக்கும் பகுதிகளை பிரித்துக் கொள்ளுதல் பற்றிய பேச்சுவார்த்தைகள் என்பதேயாகும்."[ CW Vol.25, "Kamenev’s Speech in the Central Executive Committee on the Stockholm Conference" (August 16, 1917), pp.240—41]

உண்மையில், நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பில் பங்கேற்பது எவ்வாறு முதலாளித்துவ குடியரசிற்கான பாதைபோல ஆகுமோ, அவ்வாறே ஸ்டொக்ஹோல்மிற்கு செல்லும் பாதை இரண்டாம் அகிலத்திற்கு செல்லும் பாதையாகும். எவ்வாறு நாடாளுமன்றத்திற்கு முன்னோடியானதை புறக்கணிக்க வேண்டும் என்று விரும்பினாரோ, அதேபோல், ஸ்டொக்ஹோல்ம் மாநாடு புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை லெனின் கொண்டிருந்தார். இப்போராட்டத்தின் கடுமையான நிலையில்கூட, ஒருகணம்கூட அவர் புதிய கம்யூனிச அகிலத்தை உருவாக்கவேண்டிய கடமைகளை பற்றி மறந்துவிடவில்லை.

ஏப்ரல் 10ஐ ஒட்டியே, லெனின் கட்சியின் பெயரை மாற்றவேண்டும் என்ற ஒரு திட்டத்தை கொண்டுவந்தார். அப்புதிய பெயர் மாற்றத்திற்கு எதிரான கருத்துத் தடைகள் அனைத்தையும் அவர் இவ்வாறு விவரித்தார்: "இது வழக்கமான பல்லவி வாதம்தான், செயலற்ற நிலைப்பாட்டின் வாதம்தாம், தேக்க நிலையில் உள்ளவர்களின் வாதம்தான். ...பழைய, கறை படிந்த சட்டையை தூர எறிந்துவிட்டு, புதிய, சுத்தமான சட்டையை அணிந்து கொள்ளவேண்டிய காலம் வந்துவிட்டது." [CW, Vol.24, Tasks of the Proletariat in Our Revolution--a Draft Program for the Proletarian Party" (April 10,1917), p.88]. ஆயினும்கூட கட்சித் தலைவர்களின் எதிர்ப்பு கடுமையாக இருந்ததால், ஓராண்டு கடந்த பின்னர்தான் --இக் காலகட்டத்தில்தான் ரஷ்யா முதலாளித்துவ ஆதிக்கம் என்ற இழிந்த ஆடைகளைத் தூக்கி எறிந்தது-- புதிய பெயரை பற்றி முடிவெடுக்க கட்சி தயாராக இருந்து, மார்க்ஸ், ஏங்கல்சுடைய மரபுகளுக்கு திரும்பியது. இந்த கட்சிக்கு புதுப் பெயர் கொடுக்கும் நிகழ்வு, 1917ம் ஆண்டு முழுவதும் லெனின் கொண்டிருந்த பங்கிற்கு ஓர் அடையாள வெளிப்பாடுபோல் விளங்குகிறது: வரலாற்றின் மிகத் தீவிர திருப்புமுனைக்காலத்தில், வரவிருக்கும் நாளின் பெயரில் கடந்து விட்ட நாளைப் பற்றிய கட்சிக்குள்ளான ஆழ்ந்த போராட்டத்தை அவர் நடத்திக் கொண்டிருந்தார். "மரபு" என்ற பதாகையின் கீழ் அணிநடையிடும் கடந்துவிட்ட நாளைச் சேர்ந்த எதிர்ப்பு சில நேரங்களில் மிகத்தீவிர வடிவத்தை எடுத்தது.

திடீரென்று நமக்கு சாதகமான நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்திய கோர்னிலோவ் சம்பவங்கள், வேறுபாடுகளை தற்காலிகமாகவேனும் குறைப்பதற்கு உதவின; அவை தீவிரம் குறைக்கப்பட்டன ஆனால் அகற்றப்படவில்லை. அந்நாட்களில் புரட்சியை காக்க வேண்டும் என்பதற்காகவும், தந்தை நாட்டை காக்கவேண்டும் என்பதற்காகவும், வலதுசாரியில் சோவியத் பெரும்பான்மையின்பால் நெருக்கமாக ஈர்க்கப்படும் ஒரு போக்கு வெளிப்பட்டிருந்தது. இதுதொடர்பான லெனினது பதிலானது செப்டம்பர் மாத ஆரம்பத்தில் மத்திய குழுவிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டது. "கொள்கையற்று போகிறவர்கள் ....பாதுகாப்புவாதத்தினுள் விழுந்து விடுபவர்கள் அல்லது (மற்ற போல்ஷிவிக்குகளை போல்) சமூக புரட்சியாளர்கள் உடன் ஒரு முகாமாக சேர்ந்து கொண்டு தற்காலிக அரசாங்கத்தை ஆதரிப்பார்கள் என்பது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை. அவர்களுடைய அணுகும் போக்கு முற்றிலும் தவறானதும் கொள்கையற்ற தன்மையுடையதுமாகும். பாட்டாளி வர்க்கத்திற்கு அதிகாரம் வந்த பின்னர்தான் நாம் பாதுகாப்புவாதிகளாக மாறுவோம். ...இப்பொழுதும் கூட நாம் கெரென்ஸ்கியின் அரசாங்கத்திற்கு ஆதரவு தரக்கூடாது. இது கொள்கையற்ற தன்மை உடையதாகும். நாம் கேட்கப்படலாம்: கொர்னிலோவிற்கு எதிராக நாம் போராடப் போவதில்லையா? ஆம் கட்டாயமாக. ஆனால் இது அதேபோல் அல்ல; ஒரு எல்லைக் கோடு இங்கே உள்ளது; இதை சில போல்ஷிவிக்குகள் மீறி, சமரசவாத போக்கை ஏற்று, நிகழ்வுகளின் போக்கினால் தாம் எடுத்துச்செல்லப்பட அனுமதிக்கின்றனர்." [CW, Vol.25, "To the Central Committee of the R.S.D.L.P." (August 30, 1917), pp.285—86].

மாறுபட்ட கருத்துக்களுடைய வளர்ச்சியின் அடுத்த கட்டம் (செப்டம்பர் 14ல் இருந்து 22வரை நடைபெற்ற) ஜனநாயக மாநாடு, மற்றும் அக்டோபர் 7ம் தேதி, அதைத் தொடர்ந்திருந்த நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பாகும். மென்ஷிவிக்குள் மற்றும் சமூகப் புரட்சியாளர்களின் பணி போல்ஷிவிக்குகளை எப்படியும் சோவியத்தின் சட்டபூர்வத்தன்மைக்குள் சிக்கவைத்துவிட்டு அதன்பிறகு பிந்தையதை கஷ்டமில்லாமல் முதலாளித்துவ நாடாளுமன்ற முறையில் சட்டபூர்வமாக்கிவிட வேண்டும் என்பதுதான். வலதுசாரிகள் இதை வரவேற்க தயாராக இருந்தார்கள். புரட்சியின் எதிர்காலத்தை எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்று அவர்கள் சித்தரித்திருந்த முறையை பற்றி நாம் ஏற்கனவே நன்கு அறிவோம்: சோவியத்துக்கள் மெல்ல மெல்ல தங்கள் செயற்பாடுகளை ஒத்த நிறுவன அமைப்புக்களான டுமாக்களிடம், ஜெம்ஸ்டோவ்களிடம், தொழிற்சங்கங்களிடம் என்றும் இறுதியாக அரசியலமைப்பு நிர்ணையசபையிடம் ஒப்புவித்துவிடும் மற்றும் இதன் பின்னர் காட்சியிலிருந்தே அவை மறைந்துவிடும் எனக் கருதினர். நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பு என்பதன் மூலம், பரந்தமக்களுடைய அரசியல் விழிப்புணர்வு சோவியத்துக்கள் "தற்காலிகமானவை", "இறந்து கொண்டிருக்கும் அமைப்புக்கள்" என்பதில் இருந்து ஜனநாயகப் புரட்சியின் உயரிய செயற்பாடாக அரசியற் சட்டசபைக்கு திசை திருப்பப்பட்டுவிடும். இதற்கிடையில், போல்ஷிவிக்குகள் பெட்ரோகிராட், மாஸ்கோ சோவியத்துக்களில் பெரும்பான்மையை பெற்றுவிட்டனர்; இராணுவத்தில் எமது செல்வாக்கு, ஒவ்வொரு நாளும் என்றில்லாமல் ஒவ்வொரு மணி நேரமும் பெருகிக் கொண்டிருந்தது. இன்றுள்ள கேள்வி என்னவரக்கூடும் என்பதோ எது சாத்தியமானது என்பதோ அல்ல, மறுநாள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் உள்ளவாறே பிரச்சினையாக இருந்தது.

ஜனநாயக மாநாட்டில் முற்றிலும் தளர்ந்துபோன சமரசக்கட்சிகளின் நடத்தை, அற்பத்தனமான இழிவின் மொத்த அவதாரம் போல் இருந்தது. ஆயினும்கூட, ஜனநாயக மாநாட்டை எடுத்துக்காட்டாக அதன் அழிவிற்கு போகட்டும் என்று கைவிட்டுவிடலாம் என்று நாங்கள் கூறிய கருத்து மேலிடத்தில் இன்னும் செல்வாக்கு செலுத்திய வலதுசாரிப் பிரிவுகளின் முயற்சியால் எதிர்ப்பிற்குள்ளாயிற்று. இப்பிரச்சனையை ஒட்டி எழுந்த பூசல்தான் பின்னர் நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பை புறக்கணிக்கவேண்டும் என்ற பிரச்சினைக்கு முன்னோடியாயிற்று. செப்டம்பர் 24ம் தேதி, அதாவது ஜனநாயக மாநாட்டிற்கு பின்னர், லெனின் எழுதினார்: "கூட்டத்தில் இருந்து போல்ஷிவிக்குகள் வெளிநடப்பு செய்திருக்கவேண்டும்; முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்ப முயன்றிருந்த மாநாடு என்ற பொறியில் அகப்பட்டுக் கொண்டிருக்க தங்களை அவர்கள் அனுமதித்திருக்கக்கூடாது." [CW, Vol.26, "Heroes of Fraud and the Mistakes of the Bolsheviks" (September 22, 1917), p.48].

பிரச்சினையின் பரிமாணமே ஒப்புமையில் குறைவாக இருந்தாலும், நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பை புறக்கணிப்பது பற்றிய ஜனநாயக மாநாட்டில் போல்ஷிவிக் பிரிவினரிடையே விவாதம் அசாதாரணமான முக்கியத்துவத்தை கொண்டிருந்தது. உண்மையில், வலதுசாரிகள் கட்சியை "ஜனநாயகப் புரட்சி பாதையில்" முழுமை அடையச் செய்வதற்கான முறையில் மிகப் பரந்த முயற்சியாகவும், மேலெழுந்தவாரியாக பார்த்தால் மிகவும் வெற்றிகரமான முயற்சியாகவும் இருந்தது. இந்தக் கூட்டங்களின் நடவடிக்கை பற்றிய குறிப்புக்கள் எடுத்துக் கொள்ளப்படவில்லை; எப்படியிருந்தும் எந்த சான்றும் எஞ்சியிருக்கவில்லை; எனக்குத் தெரிந்தவரையில், செயலாளரின் குறிப்பு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நூல் தொகுப்பின் ஆசிரியர்கள் என்னுடைய குறிப்பு தாட்களுடன் சில ஆவணக்குறிப்புக்களை பார்த்துள்ளனர். தோழர் காமெனேவ் ஒருவித வாதத்தை முன்வைத்தார்; இது பின்னர் மிக விரிவாகவும், இன்னும் விளக்கமாகவும் அபிவிருத்தி செய்யப்பட்டது மற்றும் காமெனேவும் ஜினோவியேவும் கட்சிக்கு அனுப்பிய, நன்கு அறியப்பட்டுள்ள கடிதத்தில் (அக்டோபர் 11) பொதிந்திருந்தது. இப்பிரச்சினை பற்றிய மிகவும் கொள்கை ரீதியான ஓர் முறைப்படுத்தி கூறல் நோகின் (Nogin) ஆல் கூறப்பட்டது: நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பை புறக்கணிப்பது என்பது ஓர் எழுச்சிக்கு அழைப்பு விடுவதுபோல் ஆகும்: அதாவது, ஜூலை நாட்களுக்கு மீண்டும் செல்வதுபோல் ஆகும். மற்றைய தோழர்கள் தங்களுடைய கருத்துக்களை, சமூக ஜனநாயக பாராளுமன்ற தந்திரோபாயத்தின் பொதுக் கருதிப்பார்த்தல்களின் அடிப்படையில் அமைத்துக் கொண்டனர். எவரும் நாம் நாடாளுமன்றத்தை புறக்கணிக்கவேண்டும் என்று கூற தைரியமற்று இருந்தனர் - இப்படித்தான் திட்டத்தின் சாரம் இருந்தது; ஆயினும் கூட, அதேபோன்ற அமைப்பை அது நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பு என்று அழைக்கப்படுவதால், நாம் அதைப் புறக்கணிக்க வேண்டும் என முன்மொழிவு செய்யப்பட்டது.

வலதுசாரிகளின் அடிப்படை எண்ணக்கரு கீழ்க்கண்ட முறையில் இருந்தது: புரட்சி தவிர்க்க முடியாமல் சோவியத்துக்களிடம் இருந்து முதலாளித்துவ நாடாளுமன்றவாதத்தை அமைப்பதற்கு செல்லவேண்டும்; "நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பு" என்பது இந்த வழிவகையில் ஓர் இயற்கையான தொடர்பாக உள்ளது; எனவே நாடாளுமன்றத்தில் இடதுபக்க வாங்குகளில் (பெஞ்சுகளில்) உட்கார நாம் தயாராக உள்ளோம் என்னும் நிலையில் நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பில் பங்கு பெற மறுப்பது மடத்தனமாகும். ஜனநாயகப் புரட்சியை முற்றுப்பெறச்செய்வதும் சோசலிச புரட்சிக்கு "தயாரிப்பு செய்தலும்" முக்கிய தேவையாகும். நாம் இதை எப்படித் தயாரிப்பது? முதலாளித்துவ நாடாளுமன்ற பள்ளியின் ஊடாக கடப்பதன் மூலம்தான் முடியும்: ஏனெனில் முன்னேறிய நாடு, பின்தங்கிய நாடுகளுக்கு தன்னுடைய எதிர்காலத்தின் தோற்றத்தை காட்டுகிறது. சார் மன்னர் முறையின் வீழ்ச்சி புரட்சிகரமானது என்று கருதப்பட்டது; "அது அப்படித்தான்; இருந்தாலும் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது, நாடாளுமன்ற முறையில் முற்றிலும் பூர்த்தியாக்கப்பட்ட ஜனநாயகத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. முதலாளித்துவ புரட்சிக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் இடையே நீண்டகாலம் ஒரு ஜனநாயக ஆட்சி இருக்க வேண்டும். நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பில் நாம் பங்கு பெறுவதற்கான போராட்டம், தொழிலாள வர்க்க இயக்கம் "ஐரோப்பிய மயம்" ஆக்கப்படுவதற்கான போராட்டம் ஆகும்; மேலும் இதை அதிகாரத்துக்கான ஜனநாயக போராட்டத்தின் வழியில் எவ்வளவு இயலுமோ அவ்வளவு விரைவில் இயக்க, அதாவது சமூக ஜனநாயகத்தின் வழிக்குள் செலுத்துதலாகும். ஜனநாயக மாநாட்டில் எமது பிரிவு நூறு உறுப்பினர்களுக்கும் மேலாக கொண்டிருந்தது; அக்காலத்தில் இது ஒன்றும் ஒரு கட்சி மாநாட்டில் காணப்படுவதைவிட பெரிய வேறுபாட்டை கொண்டிருக்கவில்லை. பிரிவில் பெரும்பான்மை நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பில் கலந்து கொள்வதற்கு ஆதரவை தெரிவித்தது. இந்த உண்மையே எச்சரிக்கை உணர்விற்கு போதுமானது; அந்தக் கணத்தில் இருந்து லெனின் எச்சரிக்கை மணியை இடைவிடாமல் அடித்து வந்தார்.

ஜனநாயக மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, லெனின் எழுதினார்: "ஜனநாயக மாநாட்டை ஒரு நாடாளுமன்றமாக நாம் கருதினால், அது தன்னை ஒரு நிரந்தரமான புரட்சியின் இறைமை பெற்ற நாடாளுமன்றம் என்று தன்னையே பிரகடனப்படுத்திக் கொண்டாலும் கூட, அது உண்மையில் எதையும் தீர்மானிக்க முடியாது என்பதினால், அது ஒரு பெரும் தவறாகிவிடும், எமது பங்கில் அது நாடாளுமன்ற அரைகுறை அறிவுமந்தமாகிவிடும் முடிவெடுக்கும் அதிகாரம் பெட்ரோகிராட் மற்றும் மாஸ்கோவின் தொழிலாள வர்க்க இருப்பிடங்களில்தான் உள்ளது." [CW, Vol.26 "Marxism and Insurrection—a Letter to the Central Committee of the R.S.D.L.P." (September 13 and 14, 1917), p.25). நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பில் கலந்து கொள்ளுவது அல்லது கொள்ளாதது பற்றிய முக்கியத்துவம் பற்றிய லெனினுடைய மதிப்பீடு அவருடைய பல அறிக்கைகளில் இருந்தும் குறிப்பாக அவர் செப்டம்பர் 29 அன்று எழுதிய கடிதத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்; இதில் "போல்ஷிவிக்குகளுடைய பளீரெனத் தெரியும் தவறுகள், நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பில் பங்கு பெறுவது என்ற அவமானகரமான முடிவு" என்று குறிப்பிட்டுள்ளார். CW, Vol.26, "The Crisis Has Matured" (September 29, 1917), p.84]. அவரைப் பொறுத்தவரையில் இந்த முடிவு தான் எதிர்த்துப் போராடி வந்திருந்த அதே ஜனநாயகப் பிரமைகள் மற்றும் குட்டி-முதலாளித்துவ ஊசலாட்டங்களின் வெளிப்பாடு என்றும், அத்தகைய போராட்டத்தை வளர்த்து முழுமையாக்கும் போக்கில்தான் அவருடைய பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய கருத்ததுரு வளர்ந்தது என்றும் கூறியுள்ளார். முதலாளித்துவ, தொழிலாள வர்க்கப் புரட்சிகளுக்கு இடையே பல ஆண்டுகள் கடக்கப்படவேண்டும் என்பது உண்மையல்ல என்று அவர் குறிப்பிட்டார். அதிகாரத்தை வென்று கைப்பற்றுவதற்கான கட்டாய பயிற்சிப் பள்ளியாகவோ, முக்கியமானதாகவோ அல்லது ஒரே ஒரு வழியாகவோதான் நாடாளுமன்றவாத பள்ளி உள்ளது என்பது உண்மை அல்ல; அதேபோல் அதிகாரத்தை பெறுவதற்கான பாதை முதலாளித்துவ ஜனநாயகத்தின் வழியாகத்தான் செல்கிறது என்பதும் உண்மையல்ல. இவை அனைத்தும் அப்பட்டமான கருத்து வடிவங்கள், கோட்பாட்டு வடிவமைப்புக்கள்; அவை ஒரே ஒரு அரசியல் பங்கை, சமூக ஜனநாயகம் என்ற பெயரில், பாட்டாளி வர்க்க முன்னணிப்படையின் கைகளையும், கால்களையும் "ஜனநாயக" அரசு இயந்திரத்திடம் கட்டிப்போட்டு, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ எதிர்க்கட்சி அரசியல் நிழலாக்கும். பாட்டாளி வர்க்கத்தின் கொள்கை, பள்ளி மாணவனின் பாணியில் வழிகாட்டப்பட வேண்டிய தேவை இல்லை; ஆனால் அவை வர்க்கப் போராட்டத்தின் உண்மையான போக்குகள் மூலம் வழிநடத்தப்பட வேண்டும். எமது பணி நாடாளுமன்றத்திற்கு முந்தைய நிலைக்கு செல்வது அல்ல; எழுச்சியை அமைத்து அதிகாரத்தை கைப்பற்றுதலே ஆகும். மற்றவை தானே தொடர்ந்து வரும். கட்சியின் அவசர மாநாட்டை கூட்டக்கூட லெனின் திட்டமிட்டிருந்து, அதை நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பை புறக்கணிக்க ஓர் அரங்காக பயன்படுத்த விரும்பினார். இதன் பின், அவருடைய கடிதங்கள், கட்டுரைகள் அனைத்திலும் ஒரே கருத்துத்தான் பெரிதும் வலியுறுத்தப்படுகிறது: சமரசவாதிகளின் "புரட்சிகர" வாலாக இயங்குவதற்கு நாம் நாடாளுமன்றத்திற்கு முந்தைய அமைப்புக்கு போகக்கூடாது மாறாக அதிகாரத்திற்கு போராடுவதற்காக நாம் தெருக்களுக்குள் செல்ல வேண்டும்!

 

 


Copyright 1998-2005
World Socialist Web Site
All rights reserved